Thursday, November 28, 2013


தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (4)

 

             உணர்ச்சிபூர்வ போதையின் அடித்தளங்கள்




தமிழரின் அடையாளக் கூறுகள் பற்றி தெளிவற்ற‌, உணர்ச்சிபூர்வ‌ போதை உணர்வுக்கு ஆட்பட்டு, 'தீக்குளிக்க, போராட', தயாராக உள்ள இளைஞர்கள் , பெரும்பாலும் கிராமப்புறம்/நகர்ப்புற அடித்தட்டு பின்னணியுடையவர்களாக, பெரும்பாலும் தமிழ் மட்டும் படித்தவர்களாக, கடுமையான தாழ்வு மனப்பான்மையை ( முன்னர் குறிப்பிட்ட உளவியல் ஆய்வின்படி ஈடுகட்டும் வகையிலான) முரட்டுத்தனமான உயர்வு மனப்பான்மையில் மறைத்து, கோபம், வெறுப்பு, பழிவாங்கல், வன்முறை போன்ற‌ எதிர் உணர்வு தீனிகளிலேயே வளரும்,  'வலியவராக' 'செயல்படுகின்றனர்'.

இத்தகைய போக்கானது, மீண்டும் மீண்டும், வெவ்வேறு வகையிலான, 'முள்ளி வாய்க்கால்' அழிவுகளையே, அப்பாவித் தமிழர்கள் குறிப்பிட்ட கால‌ இடைவெளிகளில் சந்திக்கும் அளவுக்கு, தற்கொலைச் சுற்றாக அமைந்து விடும்.

இத்தகைய உணர்ச்சிபூர்வ போதையில் சிக்கியவர்களுக்கு, அறிவுபூர்வமான பார்வை, அதன் விளைவாகவே மங்கிவிடும். தமது தமிழறிவை வளர்ப்பது, தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள‌ பிரச்சினைகளை ஆழமாக விளங்கிக் கொள்வது, அவற்றை அறிவுபூர்வமாக எவ்வாறு களைவது என்பது போன்ற‌ ஆக்கபூர்வமான வழிகளில் தம்மை வளர்த்துக் கொள்வதும், தமிழ், தமிழ்நாடு சம்பந்தப்பட்ட குறைகளைக் களைவதிலும் அவர்களால் ஈடுபடுவதற்கான ஆர்வமும், திறமையும், குறையத் தொடங்கும். சாகசம், வன்முறை, பழிவாங்கல் போன்ற எதிர்மறையான உணர்வு தீனிகளுக்காக ஏங்கும் மனநோயாளிகளாக, தம்மை அறியாமலேயே, அவர்கள் மாற்றம் பெறுவார்கள். (பலவருடங்களுக்கு முன் தி.மு.க சார்பில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த கலவரத்தின்போது, காவல்துறை கூட்டத்தைக் கலைக்க சுட்டதில் ஒரு இளைஞர் மரணமடைந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளிவந்தது. கலையுமாறு எச்சரித்த காவல்துறையினர் முன் குடிபோதையில் சென்று, தைரியமிருந்தால் தனது ஆண்குறியை நோக்கி சுடுமாறு சவால் விட, அவ்வாறே நடந்து அவர் பலியானதாக நான் கேள்விப்பட்ட செய்தி உண்மையாக இருக்கலாம். அந்த அளவுக்கு உணர்ச்சிபோதைப் பாதையில் தமிழ்நாடு பயணித்தது. ) 

              தமிழையே' விரயம் - waste' ஆகக் கருதும் அபாயம் 


தம்மையும், தமது குடும்பத்தையும் ( தமது குழந்தைகள் படித்தாலும், படிக்கா விட்டாலும்) நன்கு செட்டில் செய்து, தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்து, வெளியில் 'தமிழ் வழிக் கல்வி'க்காக போராடும், 'தமிழுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும்' வாழ்வதாக காட்டிக் கொள்ளும் தமிழ்/திராவிடக் கட்சித் தலைவர்களின்'போராட்டங்களுக்கு' 'விட்டில் பூச்சிகளாக' வீணாகும் திசையில் இவர்கள் பயணித்தார்கள்.  இவர்களில் சுயநலமும், குறுக்கு புத்தியும்(cunning)  உடையவர்கள், 'விவரமான' இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட 'குட்டி'த் தலைவர்களாக வளரும் போக்கில் உள்ளார்கள்.

தமிழ்நாட்டில் தற்போது இத்தகைய இரண்டாம் கட்ட, மூன்றாம்  கட்ட 'குட்டி'த் தலைவர்கள் புற்றீசல் போல் வளர்ந்து வருவதும்,  தம்மையும், தமது குடும்பத்தையும் அழித்துக் கொள்ளும் போக்கிலான 'விட்டில் பூச்சிகள் ' எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதும், 'தமிழ்' சம்பந்தப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், வெட்டவெளிச்சமாகி வருகிறது. தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் கேடாக விளங்கிய,  அறிவை அடகு வைத்த 'உணர்ச்சி பூர்வ‌ போதைப்' போக்கு வலிவிழந்து வருவதானது, இதனால் தெளிவாகிறது. 

அதே நேரத்தில், பொது மக்கள், குறிப்பாக நன்கு படித்து நேர்மையாகவும் உண்மையாகவும் வாழ்பவர்கள் ( மற்றும் அவர்கள் வழியில் தமது பிள்ளைகளை ஆங்கிலவழி நர்சரியில் சேர்த்து பயணிக்கும் கூலித் தொழிலாளர்கள்) மத்தியில், 'தமிழ், தமிழ்' என்று பேசுபவர்கள் பற்றிய இழிவான அபிப்பிராயமும், ஆங்கில வழிக் கல்வி மூலமாக வேர் பிடித்து வளர்ந்து வரும் திரிந்த மேற்கத்திய வாழ்வு முறை காரணமாக‌,  தமிழையே,  அவர்களில் பெரும்பாலானவர்களின் பார்வையில், ' விரயம் - waste' ஆகக் கருதும் அபாயமும் வளர்ந்து வருகிறது. ஏற்கனவே பார்த்த தமிழுக்கான ஆபத்துகளின் பின்னணியில், இது 'தமிழ் அழிவு சுனாமி' தொடக்கத்தின் முதல் அறிகுறியாகவும் இருக்கலாம். 

தமிழரின் அடையாளத்தோடு நெருக்கமான தொடர்புடைய பிரச்சினைகளின் கதி?


தமிழ்நாட்டில் தமிழ் உணர்வில் தீவிரமாக செயல்படும் மனிதர்களோ, கட்சிகளோ, தலைவர்களோ, தமிழரின் அடையாளத்தோடு நெருக்கமான தொடர்புடைய‌  கீழ்வரும் பிரச்சினைகளைப் பற்றி கவலைப்பட்டார்களா? கவலைப்பட்டு, அவற்றை களைய செயல்பட்டார்களா? என்பது, அவர்களின் மனசாட்சிக்குத் தான் தெரியும். இப்பிரச்சினைகள் பற்றி, அவர்களில் பலருக்கு ஏதும் தெரியாதிருந்தாலும், ஆச்சரியமில்லை. 


1.    ஒரு இனத்தின் அடையாளம் அழிவதற்கு முன், அதன் மொழியின் வீழ்ச்சியில் தான் அது தொடங்கும். மொழியின் வீழ்ச்சியானது, பயிற்று மொழி வலுவிழப்பில் ஆபத்தான கட்டத்தை அடையும்.1970 களுக்கு முன்,  உயர்நிலைப் பள்ளி வரை மிகவும் வலுவுடன் இருந்த தமிழ்வழிக் கல்வியானது, அதன்பின் ஆங்கிலவழிக் கல்வி புற்றீசல் வளர்ச்சியில் பாதிக்கப்பட்டு, இன்று தமிழ்வழி ஆரம்பப்பள்ளிகள் ஆயிரக்கணக்கில் மூடப்படும் அபாயத்தில், மரணப்படுக்கையில் இருக்கிறது . ( தமிழ்வழிக் கல்வி வீழ்ச்சியும், மீட்சியும்- http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html ) 


2.   பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளை விளங்கி, விவாதிக்க ஆர்வமும், புலமையும் வேகமாக வற்றும் அளவுக்கு, தமிழ் அறிவுப்பாலைவனமாக தமிழ்நாடு மாறிவருகிறது.( தமிழாராய்ச்சியில் நடைபெறும் தவறுகளும், தமிழுக்கான விடுதலையும்- http://tamilsdirection.blogspot.in/) 


3.  தமிழும் ஆங்கிலமும் கலந்த தமிங்கிலீஸின் அசுரவளர்ச்சி வேகத்தில், தமிழும் மரணப் படுக்கையில் உள்ளது. 


4.  வெள்ளைக்கார ஆட்சியில் அடையாளம் கண்டு, அச்சில் வெளியிடப்பட்ட  கல்வெட்டுகள் உள்ளிட்டு, தமிழரின் வரலாற்றுச் சான்றுகளான‌  பல கல்வெட்டுகள், கடந்த 30 வருடங்களில், நம்ப முடியாத அளவுக்கு, 'குவாரி'வியாபாரிகளின் லாபத்திற்காக, மலைகளில் அழிக்கப்பட்டு வருகின்றன. (உலகில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் இது நடந்திருந்தால், எந்தவித தூண்டுதலுமில்லாமல் தாமாகவே, மிகப் பெரிய போராட்டம் வெடித்திருக்கும். தமிழ்நாட்டிலோ, இது போன்ற வழிகளில்  'பணக்காரர்' ஆனவர்கள், தமக்கு ஒத்து வரும் 'தமிழ்க்' குழுக்களின் புரவலராக இருக்கும் போது, இது தமிழ்நாட்டில் ஒரு பிரச்சினையாகக் கூட வெளிப்படவில்லை.) 


5. குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் உள்ளிட்டு அனைவரும், 1960-கள் வரை விளையாடி வந்த, உள்ளும்(indoor) வெளியிலுமான(outdoor)  அறிவு வளர்ச்சியை உள்ளடக்கிய  விளையாட்டுகள், பெரும்பாலும் இன்று அழிந்து விட்டன.


சாகசம், வன்முறை, பழிவாங்கல் போன்ற எதிர்மறையான உணர்வு தீனிகளில் வளரும் 'தமிழ் இன உணர்வு' போதையில் இருப்பவர்களுக்கு, ஆக்கபூர்வமான உணர்வுகள் அடிப்படையில் விளங்கி களைய வேண்டிய மேலேக் குறிப்பிட்ட, தமிழரின் அடையாளம் சம்பந்தப்பட்ட‌ , பிரச்சினைகள், அவர்கள் பார்வைக்குப் படாததில் வியப்பில்லை.

                        ஆக்கபூர்வமான திசையில் பயணிப்பது

உலகம் முழுவதும் நன்கு படித்து , தொடர்ந்து தம்மை வளர்த்துக் கொள்ளும் போக்கிலான, மக்கள் அனைவரும் பெரும்பாலும் ஆக்கபூர்வமான திசையில் பயணிப்பதிலேயே ஆர்வமுள்ளவர்களாய் இருக்கிறர்கள். எதிர் உணர்வுகளின் ஆதிக்கத்தில் தொடர்ந்து வாழும் மனிதர்கள், பலவகையிலான உடல் சம்பந்தப் பட்ட நோய்களுக்கும், மனம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் உள்ளாவார்கள் என்பதையும், ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. 

இந்தப் பின்னணியில் ஓற்றுமையா? பிரிவினையா? என்ற கேள்விகளை அடுத்து ஆராய்வோம்.

                         ஐரோப்பிய ஒன்றியம் போல், சார்க் ஒன்றியம்


ஆங்கில வழிக் கல்வி ஆதிக்க சூழலில், தமிழ்நாட்டில் கிராமப்புற அளவில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்ப் படிப்பு மாணவர்கள் எண்ணிக்கையும், வெளிநாட்டில் வேலை பார்த்து விடுமுறைக்கு ஊருக்கு வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வேகத்தில், 'இந்தியர்' என்ற அடையாளமானது, தமிழ்நாட்டில் வலிமை பெற்று வருவதும், 'இந்தியர்' என்ற அடையாளத்தை மறுத்த, 'தமிழர்' என்ற அடையாளம் வலுவிழந்து வருவதும் பற்றி, ஏற்கனவே பார்த்தோம்.

தமிழ்வழி மீட்சி உள்ளிட்டு, தமிழரின் அடையாளக் கூறுகளை, அழிவிலிருந்து காப்பாற்ற, தமிழ்நாட்டில் வலிமை பெற்று வரும், 'இந்தியர்'என்ற அடையாளத்துக்கு இணக்கமாகவே 'தமிழர்' என்ற அடையாளம் பயணித்தாக வேண்டியது உண்மையா? இல்லையா? என்பதும் முக்கியமானதாகும். 

ஒற்றுமையா, பிரிவினையா என்ற கேள்வியை விட, ஆட்சியில் மக்கள் நலன்கள், எந்த அளவுக்கு நியாயமாக பாதுகாக்கப் படுகின்றன, என்பதே முக்கியமாகும். உலகமயமாக்கலில், மக்களின் நலன்களை, ஆட்சியாளர்கள் தமது சுயநலத்திற்காகக் காவு கொடுக்காமல் இருப்பது முக்கியமாகும். சர்வதேசச் சூழலில் சாத்தியமான, மக்களுக்கு பெருங்கேடு விளைவிக்காத முறையில், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயல்வதே புத்திசாலித்தனமாகும். பிரச்சினைகள் காரணமாக ஒரு இனத்தின் மீதோ, நாட்டின் மீதோ, சாதியின் மீதோ, மதத்தின் மீதோ வெறுப்பை வளர்ப்பது சுயநலப் பேய்களின் கொண்டாட்டத்திற்கே வழி வகுக்கும். 

ஒற்றுமையானாலும், பிரிவினையானாலும், மக்களின் நலன்களுக்கு கேடாகவும், சுயநலத் தலைவர்களுக்குச் சாதகமாகவும், அமைவது பாதகமானதே.

இன்றைய சர்வதேச சூழலில், தனி நாடுகளின் சாவரினிட்டியின் தனித் தன்மை மக்கள் நலனைப் பாதுகாப்பதில், அரசின் வலிமை பலகீனமாகி வருவதை உணர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய பாராளுமன்றம், யூரோ நாணயம் என்ற ஒற்றுமையை நோக்கி ஐரோப்பிய நாடுகள் பயணிக்கும் காலக் கட்டம் இது. ஐரோப்பிய மக்களுடன் ஒப்பிடும் போது, இந்திய துணை கண்டத்திலுள்ள, சார்க் நாடுகளிலுள்ள மக்களிடையே பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளில், வேற்றுமையில் ஒற்றுமைக்கான கூறுகள் அதிகம் உள்ளன. அக்கூறுகளை வ‌லிமைப்படுத்தும் வகையில், பொதுவாழ்வைப் பிழைப்பாகக் கொள்ளாத, மனிதாபிமானிகள் செயல்படத் தொடங்கினால், வேற்றுமையைப் பகையாக்கி, அப்பாவி பொதுமக்களையும், பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்திப் பிழைக்கும் மோசகாரக் கும்பலைத் தனிமைப் படுத்தி வலுவிழக்கச் செய்ய முடியும். பாரம்பரியம், பண்பாடு ஒற்றுமைகள் வலிவு பெறும் போது, அரசியல் ஒற்றுமை அதன் பின்னால் வந்தே தீரும். ஐரோப்பிய ஒன்றியம் போல் சார்க் ஒன்றியமும் மலர்வதில் தான், சார்க் நாடுகளிலுள்ள மக்களின் பிரச்சினைகள் பெருமளவில் தீர்ந்து, வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியும்.                                        


Tuesday, November 26, 2013



தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (3)


          'தனி நாடு' உண்மையில் தனி நாடா?



ஒரு நாடு தனது முன்னேற்றத்திற்கு எந்த வெளி குறுக்கீடுமின்றி, தாமே முடிவெடுக்கும் அதிகாரம், இன்று தனிநாடுகளாக உள்ளவற்றிற்கு இருக்கிறதா? தமது நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை, தமது நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களில் பயன்படுத்தாமல், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யக் காரணம் என்ன? உள்நாட்டு உற்பத்தித் தொழில்கள் சிதையும் அளவுக்கு, சீனா போன்ற நாடுகளிலிருந்து, வெளிநாட்டு பொருட்களை, இறக்குமதி செய்ய வேண்டிய காரணம் என்ன? பொதுத் தேர்தல், போராட்டங்கள், அரசின் முக்கிய முடிவுகளில், உளவு/தொண்டு நிறுவனங்கள் மூலம், தீர்மானிக்கும் சக்திகளாக, அந்நிய சக்திகள் செயல்பட்டால், 'தனிநாட்டின் (‘sovereignty’) அதிகார ஆளுமை' என்பதற்கு, அர்த்தம் உண்டா? 

உலகமயமாக்கலுக்குப் பின்,  'தனிநாட்டின் அதிகார ஆளுமை' (‘sovereignty’) என்பது, பெற்று வரும் வேகமான மாற்றங்கள் குறித்து, பல ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

'உலகமயமாக்கலுக்குப் பின்சாவரினிட்டி (‘sovereignty’) என்பது கதையாகப் (fictional. ) போய்விட்டது', என்று ஜான் எச் ஜாக்சனும் (பக்கம் 784), கடந்த காலத் தடயமாக வரலாற்று நூலகத்திற்குச் செல்ல வேண்டியது என்று பேரா.என்கினும் (பக்கம் 789)சர்வ தேசச் சட்டங்கள் பற்றிய அமெரிக்க ஆய்வு நூலில் (The American Journal of International Law  ) கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

இப்போது தனிநாடுகளாக உள்ளவற்றின் 'சாவரினிட்டிக்கே', இந்த கதி என்பதை, பிரிவினை இயக்கங்கள் கருத்தில் கொண்டு செயல்படுகின்றனவா? 

உலக ஆதிக்க சக்திகளின் நலன்களுக்குக் கேடில்லாத வகையில் உருவான சர்வதேசச் சூழலில் கிழக்கு தைமூரிலும், தெற்கு சூடானிலும், ஐ.நா மேற்பார்வையில் 'கருத்து வாக்கெடுப்பு' மூலம், தனி நாடுகள் உருவானது. அதன் பின் அங்கு என்ன நடந்தது, நடக்கிறது, அவ்வப்போது அந்நிய துருப்புகள் உள்நுழைந்து அமைதி உருவாக்க வேண்டிய தேவை என்ன? தனிநாடு கோரிக்கையில்லாமலேயே, சீனர் பெரும்பான்மையாயுள்ள சிங்கப்பூரை, மலேசியா ஏன் தனிநாடாகத் துண்டித்தது? அப்போது மலேசிய நாணயத்தை விட, சிங்கப்பூர் டாலர் மதிப்பு குறைவாகவும், ஊழலில் மோசமாகவும் இருந்த சிங்கப்பூர், உலகே வியக்கும் அளவுக்கு எவ்வாறு முன்னேறியது? 

மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதில்களைத் தேடினால், கிடைக்கும் விடைகள் முக்கியமானவை. 

புறக்கணிப்பின் அடிப்படையில், துவக்கத்தில், நேர்மையான உரிமைப் போராட்டமாக துவங்கும் 'தனி நாடு' முயற்சிகள், ஆயுதப் போராட்ட வடிவமாக வளரும்போது, உலக ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சி வலையில் சிக்கும் ஆபத்தும் இருக்கிறது. தனிநாடு, மனித உரிமை, பெண்ணுரிமை, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு உள்ளிட்டு உலகில் நடைபெறும் பலவகையான அமைப்புகளையும், போராட்டங்களையும், 'பொம்மலாட்டமாக' மாற்றி, தமது வலையில், உலக ஆதிக்க சக்திகள், எவ்வாறு சிக்க வைக்கின்றன, என்ற செயல்நுட்பத்தை, விளக்கும் நாவல் The Aquitaine Progression by Robert Ludlum ( 1984). 

குறிப்பாக சட்டபூர்வமாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் ஆயுத உற்பத்தி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சுயநல சக்திகளுக்கு, அவர்களுடைய வியாபார நலன்களுக்காக, உலகில் பல இடங்களில் போரும், ஆயுதப் போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

குறிப்பாக கடும் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ள அமெரிக்கா போன்ற நாடுகள் ஆயுத உற்பத்தி வியாபாரத்தையே பெரிதும் நம்பியுள்ளன. 1998 - 2003 காலக் கட்டத்தில், உலக ஆயுத வியாபாரத்தில் பாதி அமெரிக்கா வசம் இருந்தது. அதில் 2/3 பங்கு வியாபாரம் வளரும் நாடுகளுக்கான ஆயுத விற்பனையாக இருந்தது. அன்றைய ஐ.நா பொதுச் செயலாளர் கோபி அன்னன் சட்டவிரோதமான ஆயுத வியாபரத்தைத் தடுக்க, வளர்ந்த நாடுகள் கூட்டு முயற்சி மேற்கோள்ளும் யோச‌னையை முன் வைத்தபோது, அமெரிக்கா அதை நிராகரித்தது.  ( Pages 97-98,  Identity and Violence – The Illusion of Destiny by Amartya Sen - 2006)

அதே நேரத்தில் உலக ஆயுத உற்பத்தியாளர்களின் பிழைப்பிற்கே ஆபத்தாகும் வகையில், உலகப் பொருளாதாரம் சீர்குலையாமலும், பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த சமநிலைக்குக் கட்டுப்பட்ட வகையிலேயே போரும், ஆயுதப் போராட்டங்களும் நடைபெறுவதற்காகவே, அச்சக்திகள் அவ்வப்போது சமாதான முயற்சிகளிலும், ஒத்து வராத அரசுகளை கவிழ்ப்பதிலும், தாமே, தமது சுயநலனுக்கு வளர்த்த, ஆயுதக் குழுக்களை, 'பயங்கரவாத எதிர்ப்பு' என்ற போர்வையில், அழிப்பதுமான, செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

திறந்த மனதுடனான, அறிவுபூர்வமான விமர்சனங்களைத் துரோகமாகக் கருதி ஒழித்து, உணர்ச்சிபூர்வ போதையில் பயணிக்கும் ஆயுதப் போராட்டங்கள், இந்த சூழ்ச்சி வலையிலிருந்து தப்புவது கடினமே.

உணர்ச்சிபூர்வ போதையின் அடித்தளங்கள் பற்றி அடுத்து பார்ப்போம்.
-------------------

Sunday, November 24, 2013



தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (2)


நீதிக் கட்சி திராவிடர் கழகமாக மாறிய பின் தான் ' திராவிடர்' என்ற அடையாளத்திலான தனிநாடு கோரிக்கை எழுந்தது. பின் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் ஆலோசனை பேரில் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று சொன்னார். ஆனாலும் பிராமண எதிர்ப்பை முன்னிலைப் படுத்திய 'திராவிடர்' என்ற அடையாளமே வலுப் பெற்றது. ' திராவிடர் ' என்ற இன ரீதியிலான சொல்லை விடுத்து, நிலப்பரப்பு ரீதியிலான ' திராவிட 'என்ற சொல்லை ஏற்று, திராவிட முன்னேற்ற கழகம் உருவாகி வளர்ந்த வேகத்தில்,' திராவிடர் ' என்ற சொல்லும் வலுவிழந்தது.

 'தமிழர்' என்ற அடையாளம் இன்று வரை குழப்பமாகவே சிதைந்துள்ளது. தமிழ்நாட்டில் வடமொழி தெரியாத,தமிழையேத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்களை 'தமிழர்' ‍ஆக ஏற்க மறுக்கின்ற போக்கும் உள்ளது. கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட பெரியாரையும், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட வை.கோ போன்றோரையும் 'தமிழர்' ‍ஆக ஏற்க மறுக்கின்ற போக்கும் உள்ளது. இக்குழப்பம் தீராமலேயே  இரு போக்கினருமே தனித் தமிழ்நாடு என்ற உணர்வுபூர்வமான போக்கை வளர்த்து வருகிறார்கள்.

  'இந்தியர்' என்ற அடையாளமும் மத்தியில் பொறுப்பில் உள்ள அமைச்சர்களின் தத்தம் வட்டார, சாதி, மதப் பற்றுகள் காரணமாக சிதைக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்களில்,  அகில இந்திய அரசியல் கட்சிகளின் குறுகிய நோக்கிலான சுயநல அரசியல் நிலைப்பாடுகள் இந்த சிதைவின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளன.

புறக்கணிப்பு என்ற ஆபத்தான விதை

தெற்கு ஆசியாவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தனிநாடு கோரி பல்வேறு வழிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களை சரி அல்லது தவறு என்று பார்ப்பது, இரண்டிற்கும் இடையே மறைந்துள்ள பல முக்கிய உண்மைகளைப் பார்க்கத் தவறுவதற்கு வழி வகுக்கும்.

'தாம் புறக்கணிக்கப்படுகிறோம்' என்ற உணர்வு தான் குடும்பத்திலும் சரி,நாட்டிலும் சரி பிரிவினை உணர்வுக்கு விதையாகி , சம்பந்தப்பட்ட நபரின் அடையாளக் கூறுகளில் பிரிவினை சம்பந்தப்பட்ட கூறுகளை வலிமையாக்குகிறது. புறக்கணிப்பு என்பது உண்மையானால் அதைக் களைகின்ற முயற்சி தாமதமின்றி ஒழுங்காக நடைபெற்றால், அவ்விதை முளையிலேயே அழிந்து விடும்.

கூட்டுக் குடும்பத்திலும் நாட்டிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் சுய‌நலத்திற்குப் பலியாகாமல் பொறுப்புடன் நடந்து கொண்டால், அது தான் நடக்கும்.

மாறாக புறக்கணிப்பு என்பது உண்மையாக இருந்து அது மேலும் தீவிரமானால், அவ்விதை வளர்வதற்கு அதுவே உரமாகிவிடும். குடும்பத்திலும் நாட்டிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் அவ்வளர்ச்சிக்கு காரணமாவார்கள்.

குடுமபத்தில் உள்ள பிரிவினையை வளர்த்து விடுவது தமக்கு ஆதாயம் எனக்கருதி வெளிநபர் அதை ஆதரிப்பதும், நாட்டில் உருவாகியுள்ள பிரிவினை முயற்சியை வளர்த்து விடுவது தமக்கு ஆதாயம் எனக்கருதி அன்னிய சக்திகள் அதை ஆதரிப்பதும், ஆபத்தான திசையில் பிரிவனை முயற்சியைப் பயணிக்கச் செய்யும். அதன் விளைவுகள் குடும்பத்தை விட நாட்டில் ஏற்படுத்தும் நாசங்கள் மிகவும் மோசமானவையாகும் தமது அடையாளக் கூறுகளைத் தொடர்ந்து அறிவுபூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தாமல் உணர்வுபூர்வ போதையில் பயணிப்பவர்களில் நேர்மையானவர்கள் விட்டில் பூச்சிகளாக வீணாக தம்மை அழித்துக் கொள்வார்கள்.குறுக்கு புத்தியுள்ள சுயநலவாதிகள் தமது செல்வ்த்தையும் செல்வாக்கையும் பெருக்கிக் கொள்வார்கள்.

பிரச்சினைக்குரிய பகுதியில் அமைதி வழிப் போராட்டங்கள் பலகீனமாகி வன்முறை தலைதூக்கும் போது, ஒன்றுக்கும் மேற்பட்ட ஆயுதக்குழுக்களிடம் பிரச்சினையே சிறைபட்டு விடுகிறது. பிரச்சினைக்குள்ளன மக்களும் இக்குழுக்களின் செல்வாக்கு போட்டியில் கூறுபோடப் படுகின்றனர். விமர்சனங்கள் துரோகங்களாக சிறைபிடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. உண்மை,நேர்மை, ஒழுக்கம்,திறந்த மனதுடன் விமர்சனம்,எளிமையான வாழ்வு என்ற கூறுகள் மறைந்து,தவறு என்று தெரிந்தும் சுய லாபத்திற்காக தலைமை துதிபாடி, தவறுகளுக்கு துணை போய்த் தமது நிலையை வளர்த்துக் கொள்ளும் போக்கு, அவ்வளர்ச்சிக்கு ஏற்றார்ப் போல் தமக்கும் தமது குடும்பத்துக்கும் சுக வாழ்வு போன்ற கூறுகள் அத்தகைய இயக்கங்களில் அகவயப் படுத்தப்படுகின்றன.

இத்தகைய போக்கிற்கு உடன்பட மறுக்கும் நபர்களின் அடையாளக் கூறுகளை அவர்கள் வெளிப்படுத்துவது ஆபத்தாகும் சூழல் கூட உருவாகிவிடும். அப்படிப்பட்ட வாய்ப்புகள் உள்ள அடையாளச் சிக்கலைக் கீழ்வரும் சான்று உணர்த்துகிறது.

 “ Our freedom to assert our personal identities can sometimes be extraordinarily limited in the eyes of others, no matter how we see ourselves” ( Page 6, Identity and Violence – The Illusion of Destiny by Amartya Sen - 2006)

அன்னிய சக்திகளின் ஆதரவுடன் தனிநபர் முக்கியத்துவம், சுயநலன் போன்றவைகள் பிரிவினை முயற்சியை முன்னெடுப்பவர்கள் மத்தியில் தோன்றுமானால், அவர்கள் பல குழுக்களாக பிரிந்து தமக்குள் சண்டையிட்டு ஒருவரையொருவர் அழிக்கும் மேலும் மோசமான பிரிவினை நோயை வளர்த்து விடுவார்கள்.அந்நோய் பிரிவினை முயற்சியை அன்னிய சக்திகளிடம் அடகு வைக்கவே துணை புரியும். விமர்சனத்திற்கும் துரோகத்திற்கும் இடைவெளி மறைந்து, தமது குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்களைக் கூட துரோகிகள் எனப் பட்டம் கட்டி அழிக்கும் அபாய திசையில் பிரிவனை முயற்சி பயணிக்கும்.

இந்திய துணை கண்டத்தில் நடைபெற்று வரும் பிரிவினை முயற்சிகள் அத்தகைய ஆபத்தில் சிக்கியுள்ளனவா, இல்லையா என்பதும், சிக்கியிருந்தால் அதன் பின்புலத்தில் பிரிவினையை பொம்மலாட்டமாக இயக்கும் சக்திகள் யாவை என்பதும் சம்பந்தப்பட்ட மக்களிடையே திறந்த மனதுடன் எந்த கட்டுப்பாடுமின்றி விவாதிப்பது தவறானப் பிரிவனைப் பயணத்தைத் தடுக்கத் துணைபுரியும். தத்தம் பக்கமுள்ள தவறுகளை நேர்மையாக ஒப்புக் கொள்வதை ஊக்குவிப்பது அதற்கு வலிவூட்டும். தனிநபர், குழு வழிபாட்டுப் போதைகள் இத்தகைய முயற்சிகளைக் கெடுக்கும்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் 'தனித் தமிழ்நாடு' என்பது தி.மு.க தலைவர் சி என். அண்ணதுரை ' தனிநாடு கோரிக்கையை கை விடுகிறேன். ஆனாலும் தனிநாடு கோரிக்கைக்கான பிரச்சினைகள் தொடர்கின்றன" என்று அறிவித்தது முதல், தமிழ்/திராவிட இயக்க அபிமானிகளிடம் அக்கோரிக்கை நீறு பூத்த நெருப்பாகவே தொடர்ந்தது. தி.மு.க ஆட்சிக் கலைப்புக்கு உட்படுத்தப்பட்ட நேரங்களில் அப்போது பதவியிலிருந்தே அமைச்சர்கள் சிலரே ' ஆட்சியைக் கலைத்தால், தனித் தமிழ்நாடு கோரிக்கையை கையிலெடுப்போம்" என்று மிரட்டினார்கள். ஆனால் ஆட்சியைக் கலைத்ததும், அவர்கள் அக்கோரிக்கை பற்றி பேசவில்லை.இப்போக்கு அக்கோரிக்கையையே பொதுமக்கள் பார்வையில் எள்ளி நகையாடும் கோரிக்கையாக்கி விட்டது. இந்த சூழலில் அக்கோரிக்கையை பகிரங்கமாக முன்வைத்தும், அவ்வாறு முன்வைககத் துணிவில்லாமல தமக்குள் மட்டும் முணகும் வகையிலும் செயல்பட்ட குழுக்கள் வேர் பிடிக்காமல் போனது. 

இந்த பின்னணியில் அடுத்தடுத்து வந்த இளைய தலைமுறையினரில் சில குறைந்த சதவீத கிராமப்புற முதல் தலைமுறையாகப் படித்தவர்களும், திராவிட/தமிழ் பற்றாளர்கள் குடும்ப இளைஞர்களில் சிலரும் 'இந்தியர்' என்ற அடையாளத்தை, நிராகரிக்கும் அளவுக்கு 'தமிழர்' என்ற அடையாளத்தை வலிமையாக அகவயப்படுத்தி வாழ்ந்தார்கள். ஆனாலும் அக்கோரிக்கையை முன்வைத்து மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று யாரும் போராடுவதாகத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் கிராமப்புற அளவில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்ப் படிப்பு மாணவர்கள் எண்ணிக்கையும், வெளிநாட்டில் வேலை பார்த்து விடுமுறைக்கு ஊருக்கு வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வேகத்தில் 'இந்தியர்' என்ற அடையாளம் தமிழ்நாட்டில் வலிமை பெற்று வருவதும், 'இந்தியர்' என்ற அடையாளத்தை மறுத்த 'தமிழர்' என்ற அடையாளம் வலுவிழந்து வருவதும் உண்மையா? இல்லையா? என்பது பற்றியும் விளங்கிக் கொண்டாக வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ' தனிநாட்டின் அதிகார ஆளுமை' (‘sovereignty’ )என்பது உலகமயமாக்கலுக்குப் பின் பெற்றுவரும் வேகமான மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாமல் இந்த அடையாளச் சிக்கலை விளங்கிக் கொள்வதும், தனி நாடு கோரிக்கைக்குப் போராடுவதும் முட்டாள்த் தனமாகவே முடியும். 

அதனை அடுத்து பார்ப்போம்.