Saturday, November 29, 2014



                               ஒரு மடலும், விளக்கமும்


திண்டுக்கல் திரு. முருகானந்தம் அவர்கள் எனது கட்டுரைகள் தொடர்பாக எழுதிய மடல் தொடர்பான  முன்னுரையும், பின்  அவரின் முழு மடலும், அதன் கீழ்,  எனது விளக்கத்தையும் பதிவு செய்துள்ளேன்.

முன்னுரை:1944க்கு முன் பெரியாருக்கும் முத்துச்சாமி வல்லத்தரசுக்கும், பெரியாருக்கும் ஜீவானந்தத்திற்கும் இடையே நடந்த அறிவுபூர்வமான விவாதங்கள் அந்த காலக்கட்ட 'குடி அரசு' இதழ்களில் வெளிவந்துள்ளன. அந்த இதழ்கள் சென்னை பெரியார் திடல் நூலகம் உள்ளிட்டு பல நூலகங்களில் இருக்கின்றன. 

1944க்குப் பின் பெரியாருக்கும் அண்ணாதுரைக்கும், பாரதிதாசனுக்கும் அண்ணாதுரைக்கும், பாரதிதாசனுக்கும், ஜீவானந்தத்திற்கும் இடையே நடந்த விவாதங்களைப் (பாரதிதாசன் வெளியிட்ட 'குயில்' இதழ்களில்) போல, அறிவுபூர்வ விவாதமானது உணர்வு பூர்வமாக தடம் புரளும்போது, விவாதப் பொருளின் எல்லையை விட்டு விலகி, விவாதத்தில் ஈடுபடுபவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதில் வெளிப்படும். திராவிடக் கட்சிகளில் அது வெளிப்படுவது என்பது, அந்த உணர்வுபூர்வ வரலாற்றுப் போக்கின் பாதிப்பகும்.

உதாரணமாக, கீழ்வரும்‌  மடலில், "பார்ப்பனர்களின் தனிப்பட்ட உறவுக்காக பெரியார் தொண்டர்கள்  பற்றி மிகைப்படுத்தி கருத்துக்கள் வெளியிடுவது சரியா?" என்று என்னை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளதானது, இந்த வகையைச் சாரும். அதிலும் சிலர் விவாதத்தின் ஊடே, தமது கருத்தை மறுப்பவர்களை 'தமிழின விரோதி', 'துரோகி' என்று கடவுளால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளைப் போல் 'தீர்ப்புகள்' வழங்குவதும் இந்த வகையைச் சாரும்.  

எனது செல்வம், செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ள, நான் "பார்ப்பனர்களின் தனிப்பட்ட உறவுக்காக" எனது கருத்துக்களை வெளியிடுவதாக வைத்துக் கொண்டாலும், 'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' (திருக்குறள் 423) என்ற வ‌கையில் விவாதிப்பதே பயனுள்ளதாகும்.

மாறாக, 'யார், யார்' என்பவர்கள் மீது கவனத்தைச் செலுத்தி, அவர்களின் 'யோக்கியதைகளை' கண்டுபிடிக்க முயன்று, திசை திரும்பினால், 'அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு'  என்பதை இழக்க நேரிடும். அதிலும் பேச்சில், எழுத்தில் 'தீவிரமான' முற்போக்குகளாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு, சொந்த வாழ்வில் இழிவாக வாழ்பவர்களைக் கண்டுபிடித்தால் கூட, அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்வது தான் தமிழ்நாட்டில் புத்திசாலித்தனமாகும். அந்த அளவுக்கு அவர்களுக்கு, மீடியா செல்வாக்கு உள்ளிட்ட 'சமூக பலம்' இருக்கிறது. விவாதங்கள் அறிவுபூர்வ தளத்திற்குள் நடைபெறுவதை ஊக்குவிப்பதன் மூலமே, அது போன்ற, சமூகத்திற்குக் கேடான 'சமூக பலங்களையும்' வெற்றி கொள்ள முடியும்.

திண்டுக்கல் திரு. முருகானந்தம் எழுதிய மடல்

பேரா.செ அ வீஅவர்களுக்கு,

வணக்கம்! தங்களது வலைப்பதிவில் படித்தவற்றில்  எனக்கு உள்ள மாற்றுக்கருத்துக்களைத் தங்களுடன் பகிர்ந்து  கொள்ளவிழைகிறேன்.

1. ”இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் ஒரு பெண் பருவமடைந்த பின் பாரம்பரிய முறையில் நடந்த சடங்குகள்(rituals)  ஆனவை, அந்த பெண்ணிற்கு உடலில் ஏற்படும் மாற்றங்களை வயதான பெண்கள் விளக்கி, மனவியல் நோக்கில் பக்குவப்படுத்தி, ஆக்கபூர்வமான வகையில் செயல்பட்டதை இன்று நவீன ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. (குறிப்புகீழே)அதுபோன்றசடங்குகளை 'மூடநம்பிக்கை' என்று 'பகுத்தறிவு' பிரச்சாரம்செய்ததுசரியா?”

.பூப்புனித நீராட்டுவிழா  தேவையா? அறிவுச்சுடர்  வெளியீடு  சிறுநூல் ஒன்று வெளிவந்துள்ளது. (தோழர்அரசெழிலன்- arasezhilanpr@gmail.com;   அவர்களைத் தொடர்பு கொண்டால் மேற்கண்ட நூல் கிடைக்கும்) அதில் மருத்துவர், பேராசிரியர்,  வழக்கறிஞர்  உள்ளிட்ட பெண்ணுரிமை ஆர்வலர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் அதில் உள்ளன. கட்டுரையாளர்கள் அனைவரும் பெண்களே. பெண்விடுதலைக்  கோணத்தில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அறிவியல்ரீதியான அணுகுமுறையைக்கையாளாமல் மரபு, பண்பாடு என கூறி ஆணாதிக்க மரபுகளைக் காப்பாற்றுவது சரியா? ஒடுக்கப்படும் (சாதி) மக்களுக்கான உரிமையை விட உயர்சாதிப் பார்ப்பனர்களுக்காக பரிந்து பேசுவது சரியா?.
ஃப்ளக்ஸ் வைப்பது காதணிவிழா,வசந்தவிழா, திருமணம் உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கும் நடைபெற்று வருகிறது. அதில் பூப்புனித நீராட்டு விழாவும்தான்.பகுத்தறிவாளர்கள் இதற்கு  விழா எடுப்பதும்  இல்லை., ஃளக்ஸ் வைப்பதும் இல்லை.

2.     ”தமிழ்நாட்டில் பாரம்பரியப் பண்பாடு மதிப்புகளைக் காவு கொடுத்து, அந்த 'தரகு நோயில்' ஒப்பீட்டளவில் பிராமணர்களை விட அதிகம் சிக்கியவர்கள் பிராமணரல்லாதோரே என்பதும், அதில் 'தீவிரமாகசிக்கியுள்ளதாக' நான் கண்டவர்கள் பெரும்பாலும் பெரியார்இயக்கத்தில்உள்ளவர்களாகவும், கிறித்துவர்களாகவும்  உள்ளார்கள் என்பதும்  என் அனுபவமாகும்.”

சாதி  ஒடுக்குமுறையைக் கண்டுகொள்ளாமல் மொழி.   மரபுகளை மட்டும் உயர்த்திப் பிடிப்பது சரியா?

பார்ப்பனர்களின் தனிப்பட்ட உறவுக்காக பெரியார் தொண்டர்கள் பற்றி மிகைப்படுத்தி கருத்துக்கள் வெளியிடுவது சரியா?. பெரியார்அமைப்புகளையும், திராவிட அரசியல் கட்சிகளையும் பிரித்துப் பார்க்காமல் கருத்துரைப்பது சரியா?

3.தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழ்வழிக் கல்வியைக் காப்பாற்றி, தமிழின் மரணப்பயணத்தைத் தடுத்துநிறுத்த வாய்ப்புள்ளது என்பது எனது ஆய்வுகளில் வெளிப்பட்டுள்ளது. அது தவறு  என்ற அறிவுபூர்வமாக நிரூபிப்பதை நான் வரவேற்கிறேன். தமிழ்நாட்ட ப் பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள் என்று எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ள வாய்ப்பானது, தமிழ்நாட்டிலிருந்து சென்னையை இழக்க பிராமணர்கள் விட மாட்டார்கள் என்ற  பெரியார்ஈ.வெ.ரா அவர்கள் வெளிப்படுத்திய நம்பிக்கையுடன் ஒப்பிடக்கூடியதாகும்”

.சமச்சீர்க்கல்வி, தாய்மொழிக்கல்வி நடைமுறைக்கு வர பார்ப்பனர்கள் போராடியதாக தகவல்உண்டா?தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி நடத்தி நட்டப்பட்ட பெரியார்தொண்டர்களை ஆதாரம் காட்ட முடியும்.தாய்த் தமிழ்ப்பள்ளிகளை வளர்த்தெடுப்பதை விடுத்து பார்ப்பனர்களை நம்பியிருப்பது சரியா? தாய்மொழிக்கல்விக்கு தடையாய் இருப்பவர்கள் ஊழலரசியல்வாதிகளும், தனியார்பள்ளி வியாபாரிகளும்தான். இவர்களுக்குஎதிராகப்போராடுகிறார்களாபார்ப்பனர்கள்?

தமிழ்வழிக்கல்விக்காக தோழர்பொழிலன் அமைப்பினர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் வெற்றி பெற உதவத்தயாரா?

வீரசாவர்க்கர் ‘எரிமலை’ நூல்  எந்தபதிப்பகம் வெளியிட்டுள்ளது. தகவல் கொடுக்க இயலுமா?

நீதிக்கட்சியில் செயல்பட்ட பார்ப்பனர்கள் பற்றிய குறிப்புகள் எந்த நூலில்  அல்லது இதழ்களில் கிடைக்கும்?

1944 க்கு  முன் நடைபெற்ற  அறிவுப்பூர்வவிவாதங்கள்  உள்ள செய்தித்தொகுப்புகள் கிடைக்குமா? அதற்குரிய   செலவுகளை  ஏற்றுக்கொள்ளத் தயாராய்   உள்ளேன்.

தங்களது இசை பற்றிய கட்டுரைகள் வெளிவந்துள்ள நூல் தமிழில் இருந்தால் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

தங்களது  “தமிழர்திசை”  வலைப்பதிவில்  உள்ள கட்டுரைகளைப் படித்து வருகிறேன். எனது நட்பு வட்டத்தில்  விவாதித்து   வருகிறேன்.

சிலமாதங்களுக்கு முன் நான் படித்த நூல் ஜெ.கயல்விழிதேவி எழுதிய “குடியரசுஇதழ்கவிதைகள்” எனும்  முனைவர் பட்ட  ஆய்வு. அதில் தான்  நீதிக்கட்சியில் பார்ப்பனர்களும் இருந்தார்கள் எனகுறிப்பு  இருந்தது.  விரிவான செய்திகள் இல்லை. விரிவான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள உதவும் நூல்கள், குறிப்புகளுக்கு வாய்ப்பு  இருந்தால் தெரியப்படுத்த முடியுமா?

தங்களது கட்டுரைகளில் விவாதத்திற்குரிய செய்திகள்  நிறைய  உள்ளன. தொடர்ந்து எனது கருத்துக்களைப் பதிவு செய்வேன். தங்களது வலைப்பதிவில் உள்ளவற்றை நூலாக்கினால் அது விரிவான வட்டத்தினைச் சென்றடைய ஏதுவாகும்.

முருகானந்தம்,
திண்டுக்கல்.

விளக்கம்: அடுத்து மடலில் எழுப்பப்பட்டுள்ளவைக்கான விளக்கங்கள் வருமாறு: 
1."பூப்புனிதநீராட்டுவிழாதேவையா?அறிவுச்சுடர்வெளியீடுசிறுநூல்ஒன்றுவெளிவந்துள்ளது"

 .அந்த வெளியீட்டில் உலக அளவில் நடந்துள்ள, நான் குறிப்பிட்டுள்ள ஆய்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதா? உலக அளவில் நடந்துள்ள, நான் குறிப்பிட்டுள்ள ஆய்வுகள் 'அறிவியல்ரீதியான அணுகுமுறையைக்' கையாளவில்லையா?( குறிப்பு கீழே) அதை விடுத்து, "அறிவியல்ரீதியான அணுகுமுறையைக் கையாளாமல், மரபு, பண்பாடு என கூறி ஆணாதிக்க மரபுகளைக்  காப்பாற்றுவது சரியா?" என்று கேள்வி எழுப்புவது சரியா? கூடுதலாக "ஒடுக்கப்படும் (சாதி) மக்களுக்கான உரிமையை விட, உயர்சாதிப் பார்ப்பனர்களுக்காக பரிந்து பேசுவது சரியா?" என்ற கேள்விக்கு இந்த விவாதப் பொருளில் இடம் இருக்கிறதா? காதணிவிழா, வசந்தவிழா, திருமணம், பூப்புனித நீராட்டுவிழா உள்ளிட்ட சடங்குகள் ஒவ்வொன்றும் சமூக வரலாற்றில் எந்தெந்த காலக்கட்டத்தில், எந்த சமூக சூழலில் உருவானது, அதன்பின் என்னென்ன காரணங்களால், என்னென்ன மாற்றங்கள் நடைபெற்று இன்றுள்ள நடைமுறைகளாகியுள்ளன, என்பது பற்றி உலக அளவில் என்ன ஆய்வுகள் நடந்து வந்துள்ளன என்பதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல்,அவை தொடர்பான விவாதத்தில்,அந்த கேள்வியை எழுப்புவது சரியா?  'ஆரியப் படையெடுப்பு' தொடர்பாக அண்மைக் காலங்களில் வெளிப்பட்டுள்ள ஆய்வுகளைக் கணக்கில் கொள்ளாமல், இன்னும் அதையே கிளிப்பிள்ளைப் போல் சொல்லும் அணுகுமுறையில் இது போன்ற கேள்விகள் எழுப்பப் படுகிறதா?

2 . “தமிழ்நாட்டில் பிராமணர், பிராமணரல்லாதோர் வேறுபாடுகளின்றி, பெரும்பாலான, குறிப்பாக வசதி வாய்ப்புகளில் உயர்ந்து வாழும் குடும்பங்களில், ஆங்கில வழி, மற்றும் திரிந்த மேற்கத்திய மோகத்தில், சமூக ஒப்பீடு நோயில் சிக்கியுள்ள‌ பெற்றோர்களின் கனவுகளுக்காக, ஒரு வகையிலான சமூகச் சிறைக் கூண்டுகளில் குழந்தைகள் வளர்வது சகிக்க முடியாத கொடுமையாகும்.” என்பதை முந்தையப் பதிவில் பார்த்தோம். அதே போல், “ செல்வாக்குள்ள ந‌பர்களிடம் நாய்போல் குழைந்து காரியம் சாதிக்கும் திறமைகளை வளர்ப்பதில் அறிவு உழைப்பைக் குவியப்படுத்தி(focused) , செயல்பட வைப்பது இந்த 'தரகு' நோயின் சிற‌ப்பம்சமாகும்.” என்பதையும் முந்தையப் பதிவில் பார்த்தோம். “(Dt. October 19, 2014 -தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (8) தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள்)

சமூக ஒப்பீடு நோய் பற்றியும், அதனுடன் தொடர்புள்ள 'தரகு' நோய் பற்றியும் உள்ள விவாதத்தில்," சாதிஒடுக்குமுறையைக்  கண்டு கொள்ளாமல் மொழி. மரபுகளை மட்டும் உயர்த்திப் பிடிப்பது சரியா?" என்ற கேள்விக்கு என்ன தொடர்பு உள்ளது? 'மொழி. மரபுகளை மட்டும் உயர்த்திப் பிடிப்பது' என்பது அந்நோய்கள் தொடர்பான விவாதத்தில் சம்பந்தமில்லாதது.  

பிராமணர், பிராமணரல்லாதோர் வேறுபாடுகளின்றி,  அந்நோய்களால் பாதிக்கப்பட்டதைக் குறிப்பிட  பின், " 'தீவிரமாக சிக்கியுள்ளதாக' நான் கண்டவர்கள் பெரும்பாலும் பெரியார் இயக்கத்தில் உள்ளவர்களாகவும், கிறித்துவர்களாகவும் உள்ளார்கள் என்பதும் என் அனுபவமாகும். விரிவான சமுக ஆய்வின் மூலம் இது சரியா/ அல்லது தவறா? என்பதும் வெளிப்படலாம்." என்ற‌ எனது அனுபவத்தை நான் வெளிப்படுத்தக் கூடாதா? அது சரியா? தவறா? என்று ஆராயப்பட வேண்டியது என்றும் தானே குறிப்பிட்டுள்ளேன்.

 அதன்பின்னும், "பார்ப்பனர்களின் தனிப்பட்ட உறவுக்காக பெரியார் தொண்டர்கள் பற்றி  மிகைப்படுத்திகருத்துக்கள் வெளியிடுவது சரியா?" என்று என் மீது தனிப்பட்ட முறையில், 1944க்குப் பின் உருவாகி வளர்ந்த 'உணர்வுபூர்வ போக்கில்', குற்றம் சுமத்துவது சரியா? 

கூடுதலாக‌.
"பெரியார்அமைப்புகளையும், திராவிட அரசியல் கட்சிகளையும் பிரித்துப் பார்க்காமல் கருத்துரைப்பது சரியா?" என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறதா?

3. இந்துத்வா ஆதரவு 'சுதேசி இயக்கம்' இந்தியாவில் தாய்மொழிக் கல்வியை ஆதரித்து செயல்படும் இயக்கமாகும். பல வருடங்களுக்கு முன், முதலில் தியாகு அவர்கள் 'தாய்த் தமிழ்ப் பள்ளி' தொடங்கியபோது, அதன் அழைப்பிதழில் 'புரவலர்களாக' இடம் பெற்றவர்களின் குடும்பப் பிள்ளைகளெல்லாம் ஆங்கில வழியில் படித்துக் கொண்டிருந்தவர்கள். தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கில வழியில் படித்து வைத்துக் கொண்டு,  தமிழ் வழியை ஆதரித்து எழுதும் , மேடையில் பேசும், போராட்டம் நடத்தும்  தமிழ்.திராவிடக் கட்சித் தலைவர்களின், தமிழ் அறிஞர்களின், பேராசிரியர்களின் 'இரட்டை வேட'ப் போக்கை எதிர்த்து, எவராவது, எந்த இயக்கமாவது, குறைந்த பட்சம் கண்டித்திருக்கிறார்களா? அத்தகையோரைப் புரவலராகக் கொண்டு, 'தாய்த் தமிழ்ப் பள்ளிகள்' தொடங்குவது சரியா? அரசுப் பள்ளிகளில் படிக்கும் குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகள் மட்டும் தமிழ் வழியில் படிக்க வேண்டுமா? அந்த 'தாய்த் தமிழ்ப் பள்ளி' புரவலர்களின் வழியில், குப்பனும் சுப்பனும் பயணிக்கத் தொடங்கி விட்டார்கள். தமிழ்வழி அரசுப் பள்ளிகள் படிக்க மாணவரின்றி மூடப்பட்டு வருகின்றன. தமிழ்வழி அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகள் மூடப்படுவதைத் தடுக்க, என்னால் இயன்ற முயற்சிகளை நான் மேற்கொண்டு வருகிறேன்.

சமச் சீர்க் கல்வியானது தமிழ் வழிக் கல்வித் திட்டம் அல்ல. அது தொடங்கிய பின், தமிழ்நாட்டில்  International schools   புற்றீசலாகத் தொடங்கப்பட்டு வருகின்றன. அந்த கல்வி வியாபாரத்திற்கு உதவவே, சமச் சீர்க் கல்வி தொடங்கப்பட்டுள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

வீர சவர்க்காரின் 'எரிமலை'      கிடைக்குமிடம்: ‘எரிமலை அல்லது முதலாவது இந்திய சுதந்தர யுத்தம்’ - வீர சாவர்க்கர் - அல்லையன்ஸ்

நீதிக்கட்சியில் செயல்பட்ட பார்ப்பனர்கள் பற்றிய குறிப்பு: “The party began to accept Brahmin members only in October 1934.” pp. 102–103; Irschick, Eugene F. (1986). Tamil revivalism in the 1930s. Madras: Cre-A.

‘தமிழ் இசையியல் - புதிய கண்டுபிடிப்புகள்’ -  செ. அ. வீரபாண்டியன் (2009)-  சேகர் பதிப்பகம், சென்னை‍ 78

எனது ஆய்வுக் கட்டுரைகளை (தமிழிலும் ஆங்கிலத்திலும்) படிக்க‌ : http://www.musicresearch.in/categorywise.php?flag=R&authid=13

எனது "கட்டுரைகளில் விவாதத்திற்குரிய செய்திகள் நிறைய உள்ளன" என்பது முற்றிலும் சரியே. உணர்வுபூர்வ போக்குகளைத் தவிர்த்து, விளிம்பு வழி(Tangential)  வெளியேறாமல், விவாத வட்டத்திற்குள் ஆழ்ந்து வெளிவரும் மறுப்புகளை வரவேற்கிறேன். அவற்றைப் பரிசீலித்து, தவறுகள் இருப்பது வெளிப்பட்டால், சிக்கல் இன்றி, பகிரங்கமாக அதை அறிவித்துத்  திருத்திக் கொள்வதில் எனக்கு தயக்கமில்லை.

"தங்களது வலைப்பதிவில் உள்ளவற்றை நூலாக்கினால் அது விரிவான வட்டத்தினைச் சென்றடைய ஏதுவாகும்." என்ற ஆலோசனைக்கு நன்றி. செயல்படுத்த வாய்ப்பு கிடைக்கும் போது, நிச்சயம் செய்கிறேன்.

குறிப்பு 1: 'மேற்கத்தியப் பகுத்தறிவு' அணுகுமுறையின் வரை எல்லைகள்(Limitations) பற்றிய புரிதலுடன் ( post Dt.November 16, 2014  'மேற்கத்தியப் பகுத்தறிவு' (Western Rationalist) அணுகுமுறையின் வரை எல்லைகள் (Limitations)') மேற்கொள்ளப்படும் 'அறிவியல் அணுகுமுறை'  தான்,பெரியார் ஆதரவாளர்கள் பின்பற்றும்  'அறிவியல் அணுகுமுறை' யா?என்பதும் ஆய்விற்குரியதாகும்.

குறிப்பு 2:மரபு, சடங்கு போன்றவைகள் சமூக வரலாற்றில் எந்தெந்த காலக்கட்டத்தில், எந்த சமூக சூழலில் உருவானது, அதன்பின் என்னென்ன காரணங்களால், என்னென்ன மாற்றங்கள் நடைபெற்று இன்றுள்ள நடைமுறைகளாகியுள்ளன, என்பது பற்றி உலக அளவில் நடைபெற்று வந்த ஆய்வுகளைக் கணக்கில் கொள்ளாமலேயே, பெரியார் மையம் உள்ளிட்ட 'பகுத்தறிவு' வெளியீடுகள் தமிழ்நாட்டில் வெளிவந்துள்ளன. அவற்றில் சேர்ந்துள்ள 'அழுக்குகளை' அகற்றி, அவற்றை , உலகில் நடந்து வரும் ஆய்வுகளின் அடிப்படையில் வளர்த்தெடுக்காமல் ஒழிக்க முயல்வது தவறு. தமிழை ஒழித்துவிட்டு, ஆங்கிலத்தை வீட்டு மொழியாக்கினால் உருப்படலாம் என்று பெரியார் வெளிப்படுத்திய கருத்தானது, அந்த வகை தவறே ஆகும்.

தமிழ்நாட்டில், வெள்ளைக்காரர் வருகைக்கு முன், 'அதிக' கல்வியறிவு பெற்றிருந்தவர்கள் 'கம்மாளர்கள்', பிராமணர்கள் அல்ல என்பது பற்றிய சான்றுகள் தெரியாமலேயே,பெரியார் மையம் உள்ளிட்ட 'பகுத்தறிவு' வெளியீடுகள் தமிழ்நாட்டில் வெளிவந்துள்ளன. இசையில் உயர்வு, தாழ்வு, தீண்டாமை போன்றவையெல்லாம் காலனியத்தின்' நன்கொடை' என்று எனது ஆய்வுகளின் அடிப்படையில் பதிவு செய்துள்ளேன்.

'பறை, பறையர்' தொடர்பாக நான் மேற்கொண்ட ஆய்வுகளில், தமிழ்நாட்டில் இன்றுள்ள சாதி அமைப்பு சங்க காலத்தில் இல்லை.  எனவே தமிழ்நாட்டில் சமூக செயல்தர  ஏணி (Social Functional Hierarchy ) ,   எந்த காலக் கட்டத்தில்  உயர்வு, தாழ்வு, தீண்டாமை போன்றவையாக வெளிப்பட்டன என்பது குறித்த ஆய்வுகளுக்கான அவசியம் எழுந்துள்ளது.

ஆரியர், திராவிடர் உள்ளிட்டு பெரியார் வெளிப்படுத்திய நிலைப்பாடுகள் தொடர்பாக, இன்று உலகில் என்னென்ன ஆய்வுகள் நடைபெற்று, என்னென்ன முடிவுகள் வெளியாகி வருகின்றன என்பது பற்றிய 'அறியாமையில்' உழன்று, 'உணர்வுபூர்வமாகவும், பெரியாரால் கண்டிக்கப்பட்ட போராட்ட வடிவங்களை 'உணர்வுபூர்வமாக'க் கையாண்டும், சாதாரண மக்களிடமிருந்தும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்தும் அந்நியமாகியும், அறிவுபூர்வ விமர்சனப் போக்கை இழந்து , 'உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்பவர்கள் விட்டில் பூச்சிகள் போல் அழிய,  சமூக ஒப்பீடு நோயிலும், தரகு நோயிலும் சிக்கிய 'கள்வர்கள்' ' ஆதிக்கத்தில், தமிழின், தமிழ் பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றின் மரணப் பயணம் தொடங்கி விட்டதா? த‌மிழ்நாட்டில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஆங்கிலோ இந்தியர்கள் போல், வேரற்ற 'தமிங்கிசர்களாக' தமிழர்கள் வரும் காலத்தில் மாறுவார்களா?  என்ற கவலை எனக்கு வந்துள்ளது. அது தவறானால், எனக்கு மகிழ்ச்சியே. 


Friday, November 28, 2014



தமிழ்நாட்டு ‘திராவிட’ அரசியலில் சிக்கிய 

திருக்குறள் ஆய்வுகள்


தமிழ்நாட்டில் நல்ல முறையில் வளர்ந்து வந்த அறிவுபூர்வ போக்குகள் 1944-இல் திராவிடர் கழகம் உருவான‌ பின் தடம் புரண்டு,  உணர்ச்சிபூர்வ திசையில் பயணம் செய்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.

1944 முதல் தமிழ் பற்றி வெளிவந்துள்ள தரமான‌ ஆய்வுகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பாக, காலத்தை  X-அச்சிலும்,  தரமான படைப்புகளை  Y- அச்சிலும் கொண்டு ஒரு வரைகோடு(graph)  வரைவது சாத்தியமே. அந்த வரைகோடு  எதிர்சரிவில் (negative slope)  1944இல் தொடங்கி, சரிவு வேகமானது 1944 - 1949 இல் அதிகரிக்கத் தொடங்கி, 1949 -1967 இன்னும் வேகமாகி , 1969 முதல் எதிர்சரிவு வேகம் அதிகரித்து, இன்று சிறும நிலையில் (Minima)  இருப்பதாக வெளிப்பட்டால் வியப்பில்லை. அதே வரைபடத்தில் (graph)  உணர்ச்சிபூர்வ தனிமனித வசை பாடும் படைப்புகள் பற்றிய வரை கோட்டையும் (graphical line)  வரைவதும் சாத்தியமே. அந்த வரைகோடு 1944-இல் சிறுமத்தில் தொடங்கி, இன்று உச்சத்தில் இருந்தாலும் வியப்பில்லை. இடையில் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் அந்த போக்கிலிருந்து , தற்காலிக 'விடுதலை'  கிடைத்த காரணத்தால், தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாகி, வளர்ந்து, பின் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின் நிதி நெருக்கடியிலும், மேலேக் குறிப்பிட்டப் போக்குகளிலும் சிக்கி, பயணிக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். இது தொடர்பாகக் கீழ்வரும் ஆய்வும் முக்கியமாகும். 

தமிழ் இலக்கியங்களைத் தமிழர்க்குக் கேடாகக் கருதிய பெரியாருக்குத் துணையாக அண்ணா 'கமபரசம்' போன்ற நூல்களை எழுதினார். அவரே 1967இல் முதல்வரான பின், அது பற்றி நினைவூட்டியபோது, 'நான் மறக்க விரும்புவதை, நினைவூட்ட வேண்டாம்' என்று கருத்துத் தெரிவித்த தகவலும் உண்டு. தமிழ் இலக்கியங்கள் தொடர்பாக பெரியார் தெரிவித்த கருத்துகளின் பின்னணியில், கடந்த சில வருடங்களில்,  'தொல்காப்பியரும், வள்ளுவரும், இளங்கோவும் நின்று கொண்டு, உட்கார்ந்த நிலையில் உள்ள‌  தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியை வாழ்த்தும் சுவரொட்டிகளும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மேடையில்  அதை நடித்துக் காட்டிய நிகழ்ச்சிகளும் ஆழ்ந்த ஆய்விற்குரியவையாகும். அதாவது அறிவுபூர்வ போக்கு பலகீனமாகி, உணர்ச்சிபூர்வ போக்குகள் வளர்ந்த காலக் கட்டத்தில்,  தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு, போன்ற தமிழரின் 'ஆணி வேர்கள்' தமிழர்க்குக் கேடானவை என்ற பிரச்சாரத்தை வலிமையுடன் பெரியார் மேற்கொண்டு வந்தார். 1949இல் தி.மு.க தோன்றி, 'இரட்டைக் குழல் துப்பாக்கி' என்று அறிவிப்புக்கு இணங்க, பெரியாரின் நிலைப்பாட்டை ஒட்டி, அந்தப் பிரச்சாரப் போக்கில் தி.மு.க பயணித்ததா? அதில் அண்ணாவின் நிலைப்பாட்டிற்கும், கலைஞர் கருணாநிதியின் நிலைப்பாட்டிற்கும் எப்போது வேறுபாடு முளைவிட்டு, வளர்ந்து, மேலேக் குறிப்பிட்ட விளைவில் இன்று உள்ளது என்பதும் ஆழ்ந்த ஆய்விற்குரியதாகும். 

மேலேக் குறிப்பிட்ட போக்குகள் தமிழை வளர்த்ததா? அல்லது வீழ்ச்சித் திசையில் பயணிக்கச் செய்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அதாவது தமிழைத் திராவிட அரசியலில் சுயநல நோக்குகளுக்குப் பயன்படுத்தி, வீழ்ச்சித் திசையில் பயணிக்கச் செய்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

'தமிழ்நாட்டு ‘திராவிட’ ‌அரசியலில் சிக்கிய 'ஐந்திறம்'' என்பது பற்றி ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2014_10_01_archive.html )

அந்தப் பதிவில் “ 'கூத்த நூல்' எம்.ஜி.ஆரால் வெளியிப்பட்டவில்லை. எனவே அந்த கூத்த நூல் வெளிவந்ததை பற்றியோ , அது சிலப்பதிகார உரையில் குறிப்பிடப்பட்ட நூலா இல்லையா என்ற விவாதத்தைப் பற்றியோ, கலைஞர் கருணாநிதியோ ,அவர் சார்பு 'அறிஞர்களோ'  கண்டுகொள்ள‌வில்லை. ஆனால் எம்.ஜி.ஆர் வெளியிட்ட 'ஐந்திறம்' அவர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.  அச்சிடப்பட்ட நூல்கள் வினியோகிக்கப் படாமல் எரிக்கப் பட்டன என்பது தமிழ் உலகிற்கு எவ்வளவு பெரிய இழப்பு? கணபதி ஸ்தபதி அவற்றைப் பற்றி என்னிடம் விவரித்தபோது கண் கலங்கியதை, என்னால் மறக்க முடியாது.

அவர்கள் எதிர்க்காமல் இருந்திருந்தால், எம்.ஜி.ஆர் ஆதரவுடன் என் போன்றோரின் ஆராய்ச்சிகள் அந்த ஐந்திற தொழில்நுட்ப அடிப்படைகளில் எவ்வளவு வியாபார வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்க முடியும்? அதன் மூலம் திராவிடக்கட்சி ஆட்சிகளில் உலகப் பல்கலைக் கழகங்களில் மூடப்பட்டு வந்த தமிழ்த் துறைகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்குமா? இல்லையா? உலக அளவில் பல்கலைக் கழகங்களிலும் தனியார் ஆராய்ச்சி மையங்களிலும் பழந்தமிழ் இலக்கியங்களை நோக்கி, புதிய தொழில் நுட்பங்களுக்கான ஆய்வு படையெடுப்புகள் தொடங்கியிருக்குமா? இல்லையா? என்பது போன்ற கேள்விகளுக்கு தெளிவான விடையளிக்கும் நோக்கில், எனது ஆய்வு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.” என்று, மேற்குறிப்பிட்ட பதிவில், விளக்கியிருந்தேன். 

தமிழைத் திராவிட அரசியலில் சுயநல நோக்குகளுக்குப் பயன்படுத்திய போக்குகளில் அதிகம் சிக்கி, சிறைபட்டு தவிப்பது திருக்குறள் தொடர்பான ஆய்வுகளா? என்ற கேள்வியை எழுப்பும் எனது அனுபவங்களை அடுத்து பார்ப்போம்.

மேலை நாட்டுப் பல்கலைக் கழகங்களில் உள்ள அறிஞர்களின் ஊக்கமூட்டும் ஆர்வத்தை ஈர்த்துள்ள, தொல்காப்பியத்தில் இசை மொழியியல் தொடர்பான எனது ஆய்வுகள் பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.(http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_16.html ). தொல்காப்பியத்தில் இசை மொழியியல் தொடர்பான எனது கண்டு பிடிப்புகளுக்கு 1996இல் நான் மேற்கொண்ட திருக்குறளில் தமிழ் இசையியல் தொடர்பான ஆய்வுகள் திறவுகோலாக (Key)அமைந்தன.

அதன்பின் நடந்த ஒரு சம்பவம் தான் திராவிட அரசியலில் திருக்குறள் சிறைபட்டிருக்கிறதோ? என்ற ஐயத்தை எனக்கு ஏற்படுத்தியது. அந்த காலக் கட்டத்தில் ஒரு திரைப்பட இயக்குநரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது. அவரிடம் எனது திருக்குறள் ( 821) ஆய்வில் உரையாசிரியர்கள் அனைவரின் உரைகளும் தவறு என்று வெளிப்பட்டிருப்பதைத் தெரிவித்தேன். உடனே அவர் தன் வீட்டில் இருந்த கலைஞர் கருணாநிதியின் திருக்குறள் ( 821) உரையை எடுத்துப் பார்த்தார். அவரது உரையும் தவறு என்று எனது ஆய்வில் வெளிப்பட்டது அவருக்கு ஏமாற்றமானது. ஆக கலைஞர் கருணாநிதியின் திருக்குறள் ( 821) உரையைத் தவறு என்று வெளிப்படுத்தும் ஆய்வு கலைஞர் கருணாநிதிக்கு எதிரான ஆய்வாக அணுகும் போக்கு தமிழ்நாட்டில் இருக்கிறதா? என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. நியூட்டனின் பல ஆய்வுமுடிவுகள் அவருக்குப் பின் வந்த விஞ்ஞானிகளின் ஆய்வுகளில் தவறு என்று வெளிப்பட்டது நியூட்டனுக்கு எதிரான ஆய்வாக அறிவியல் உலகில் கருதப்படவில்லை. மாறாக அது அறிவியல் வளர்ச்சியாகவேக் கருதப் பட்டது. ஆனால்  திராவிட அரசியலில் சிக்கிய தமிழ்நாட்டில் அது உணர்வுபூர்வமாக, சம்பந்தப்பட்ட தலைவருக்கு எதிராகக் கருதப்படும் நிலை உள்ளதா? இல்லையா? என்பது ஆய்விற்குரியதாகும்.  'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' என்ற நூல் வெளியிட்ட தமிழ் அறிஞர்,தான் சாகும் வரை, தமிழ் ஆர்வலர்களின் பாதுகாப்பில் வாழ்ந்தது ஏன்? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

அந்த ஆய்வுகள் பற்றி அறிந்து, என்னிடம் கேட்டு வாங்கிப் படித்த, கலைஞர் கருணாநிதியை துதி பாடி பிழைக்கும் தேவையில்லாத,  புரட்சிதாசன், அக்கட்டுரைகளை தனது 'இசைத் தமிழ்' இதழ்களில் 1997 - 1998 கால‌க் கட்டத்தில் வெளியிட்டார்.

அதன்பின்  கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறந்த போது, வெளிவந்த 'கோட்டம் முதல் குமரி வரை' (2000) மலரில் 'திருக்குறள் கூறும் இசைக்கலை நுட்பங்கள்' என்ற தலைப்பில் எனது திருக்குறள் ஆய்வுகள் தொடர்பான கட்டுரை வெளி வந்தது. அக்கட்டுரையில் திருக்குறள் (821) இல் வரும் 'பட்டடை' என்ற சொல் பற்றிய எனது ஆய்வு விளக்கங்கள் நீக்கப்பட்டு வெளிவந்தது எனக்கு அதிர்ச்சியானது. தொல்காப்பியத்தில் இசை மொழியியல் பற்றிய எனது கண்டுபிடிப்புக்குத் தொடக்க திறவுகோலாக‌(Key), அந்த 'பட்டடை' என்ற சொல் பற்றிய ஆய்வு விளக்கமே இருந்தது. எனவே அதை நீக்கியது எதற்காக என்பதும் ஆய்விற்குரியதாகும். 'பட்டடை' தொடர்பான ஆய்வு விளக்கத்திற்கு: 
http://musicresearchlibrary.net/omeka/items/show/2512

அதன்பின் அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, தமிழக அரசின் கவனத்திற்கு எனது திருக்குறள் ஆய்வு பற்றியும் அடுத்தக் கட்ட வளர்ச்சியின் முக்கியத்துவம் பற்றியும் மடல் அனுப்பினேன். அதற்கு ( தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக முனைவர்.ம.இராசேந்திரன் ‍- பின்னாள் தஞ்சை, தமிழ்ப்பல்கலைக்கழக துணை வேந்தரானவர் -  இருந்தபோது)  கீழ்வரும் பதில் கிடைத்தது.

"திருக்குறளுக்கு அறிஞர்கள் பலரால் இதுவரை ஏராளமான உரைகள் வெளியிடப்பட்டுள்ளன.வெளிவந்தும் கொண்டுமுள்ளன.இவற்றுள் பொருள்களும் கருத்துக்களும் ஒத்திருப்பதும் காணப்படுகிறது. மாறுபடும் நிலைமையும் காணப்படுகிறது. இது தவிர்க்க முடியாதது.எனவே இதன் மீது அரசு நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை இல்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்."         -- - தமிழ் வளர்ச்சித் துறை   ந.க.எண். நிதி3/1257/2003, நாள் 4.5. 2004

அடுத்து வந்த தி.மு.க ஆட்சியில், சுயநல அரசியலுக்காக, அவசர கதியில், உரிய விதிகளின்றி, துவக்கப்பட்ட, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில், எனது 'திருக்குறளில் தமிழ் இசையியல்' ஆய்வினை, விருப்பமின்றி, நிர்பந்தத்தால்,  'ஆய்வுத் திட்டமாக' நான் மேற்கொண்டு, மறக்க முடியாத அவமானத்திற்குள்ளானேன்.

நேர்க்காணல் குழு தலைவராக‌, அவர் ஐ.ஐ.டி(I.I.T) யில் பொறியியல் பேராசிரியர்; (https://inae.in/expert-search/index.php/s-mohan) எப்படி தமிழ் இசையியல் (Tamil Musicology)  தொடர்பான நேர்காணலில் பங்கேற்று, அபத்தமாக கேள்விகள் கேட்டார்? என்று வியந்தேன்.('திராவிட அரசியலில், சுயமரியாதைக்கு கேடான வகையில், சிறையுண்ட தமிழ் ?'; http://tamilsdirection.blogspot.com/2017/12/tamil-chair-2.html)

முறையான விசாரணை மூலம், அதன் பரிந்துரையில், உரிய விதிகளின்படி,  அந்நிறுவனம் செயல்படும் நாளை எதிர்பார்க்கிறேன். அதன்பின், சட்டபடியான முறையில், வாங்கிய நிதியைத் திருப்பிக் கொடுத்து, எனது ஆய்வுக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்கி, அந்நூலை வெளியிட எண்ணியுள்ளேன். அந்த 'செம்மொழி' அனுபவங்களை பதிவாக, அதன்பின் வெளியிடவும் எண்ணியுள்ளேன்.

1996இல் திருக்குறள் ஆய்வுகள் மூலம் கிடைத்த திறவுகோலின்(Key) அடிப்படையில், தொடங்கிய ஆய்வுகள், தமிழ்நாட்டில் பிழைப்பு வேத சுயநல அரசியலில் தமிழ் சிக்கியதால், சுமார் 18 வருடங்கள் தாமதமாகி,  'உலகப் பல்கலைக்கழகங்களில் 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறையை விரைவில் உருவாக்கவல்ல கண்டுபிடிப்புகள், தொல்காப்பியத்திலிருந்து 2014இல் வெளிப்படத் தொடங்கியுள்ள
 

குறிப்பு: 

மத்திய அரசின் செம்மொழி நிறுவனம் தொடர்பான கீழ்வரும் கேள்விகள் அடிப்படையில்,  பாரபட்சமற்ற முறையான விசாரணை நட‌த்தி, தவறு செய்தவர்களைத் தண்டித்து, விசாரணைக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் சரியான சட்டதிட்டங்கள் நெறிமுறைகளை உருவாக்கினால் தான்,  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படும்.
கடந்த ஆட்சியில் ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகளாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தது வரை, அக்கட்சிகளின் இலக்கிய அமைப்புகள் மூலமாக செம்மொழி நிறுவன நிதிகள் செலவிடப்பட்டனவா? அச்செலவுகள் எந்த அளவுக்கு நேர்மையாக செலவிடப்பட்டன? அவற்றால் தமிழுக்கு என்ன பலன்கள் ஏற்பட்டன? கூட்டணியிலிருந்து அக்கட்சிகள் விலகியவுடன், அந்த கட்சிகளின் இலக்கிய அமைப்புகள் மூலமாக செம்மொழி நிறுவன நிதிகள் செலவிடப்பட்டது நிறுத்தப்பட்டதா?

ஆய்வுத் திட்டங்கள் எந்தெந்த அடிப்படையில் யார் யாருக்கு அனுமதிக்கப்பட்டன? தி.மு.க தேர்தலில் தோற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின், அவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டதா?

ஆய்வு வளர்ச்சியை ஆய்வு செய்தவர்களுக்கு அத்துறைகளில் தகுதி இருந்ததா? தகுதி இல்லாதவர்கள் 'தலைமை' வகித்து அபத்தமான கேள்விகள் கேட்டார்களா? அதை அவமானமாகக் கருதிய ஆய்வாளர் எவரின் ஆய்வுத் திடடம் ஏதேனும் முடங்கியுள்ளதா?

செம்மொழித் தமிழுக்கான (classical Tamil)  நிறுவனம்,  சங்க இலக்கிய வரிகளை பாரம்பரிய முறையில் இசையாகப் பாடி (the traditional style of Musical rendering of Classical Tamil verses ) ஒலிப்பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். தேவாரம் போன்ற நூல்களில் உள்ள வரிகளை ஓதுவார்கள் பாரம்பரியமாக ஓதி வருவது பற்றிய சான்றுகள் உண்டு. ஓதுதல் (chanting) என்பது இசைத்தல் (musical rendering) என்பதிலிருந்து மாறுபட்டதாகும். பழந்தமிழ் இலக்கிய வரிகள் மரபு வழியாக பாரம்பரிய முறையில் இசையாக வெளிப்படுத்தியதற்கு சான்றுகள் உண்டா? உ.வெ.சா, வை.தாமோதரன் பிள்ளை போன்ற பலரின் முயற்சியால் சுமார் 80 வருடங்களுக்குள் வெளிவந்த பழந்தமிழ் இலக்கிய வரிகளை, அவரவர் திறமைக்கேற்ப இசையாக வெளிப்படுத்துதலுக்கு, 'பாரம்பரியம்' என்ற போர்வையை மாட்டுவது சரியா?                                                                

2008 ‍ கோடையில்  காரைக்குடியில் மத்திய அரசு நிதி உதவியில் , செம்மொழி நிறுவனம் சார்பாக , நடந்த உலக அளவிலான செம்மொழி இலக்கியம் தொடர்பான மாநாடு நடந்தது.கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி உயர்வுக்கு 'உலக அளவிலான' மாநாட்டு கட்டுரை சமர்ப்பிக்கும் நிபந்தனையான (condition) தேவையை நிறைவு செய்ய, பல கல்லூரி ஆசிரியர்கள் கருத்தரங்கில் கட்டுரை வாசிக்க அனுமதிக்கப்பட்டு,  ஒவ்வொருவருக்கும் சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டதா? இது போன்ற மாநாடுகள், பிற அமைப்புகளுடன்  சேர்ந்து நடத்திய நிகழ்ச்சிகளில் என்னென்ன அடிப்படையில் செலவுகள் செய்யப்பட்டன? அவற்றால் தமிழ்ச் செம்மொழி பெற்ற பலன்கள் யாவை?

மேலே குறிப்பிட்டுள்ள கேள்விகள் அடிப்படையில்,  பாரபட்சமற்ற முறையான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்களைத் தண்டித்து, விசாரணைக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில், சரியான சட்டதிட்டங்கள் நெறிமுறைகளை உருவாக்கினால் தான்,  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படும்.

மேலேக்குறிப்பிட்ட குறைபாடுகளைக் கண்டித்து இது வரை எந்த தமிழ்த்தலைவரும்/தமிழ் அமைப்பும் ஏதேனும் முயற்சித்திருக்கிறார்களா?

அரைகுறை சான்றுகளுடன் வெளிப்படும் ' பெருமைகள்'(?); தமிழும் தமிழ் இசையும் கேலிப்பொருளாகும் அபாயம்
http://tamilsdirection.blogspot.com/2019/09/blog-post_16.html 

Friday, November 21, 2014



இரண்டு புத்தகங்கள் வெளிப்படுத்திய 'சிக்னல்'கள்


முந்தையப் பதிவில் இரண்டு புத்தகங்களை நான் குறிப்பிட்டிருந்தேன்.

1.  ‘The Language of the Gods in the World of Men – Sanskrit, Culture and Power in Premodern India ’ by Sheldoon Pollock  (2007) 
                     

2. ‘M.G.Ramachandran in film and politics- The Image Trap’ by M.S.S pandian (1992)

'மணிப்பிரவாள காலத்திற்குப் பின்னர் தான்,சமஸ்கிருதத்தின் துணையுடன் தமிழில் இலக்கியங்களே வெளிவந்தன' என்பது உள்ளிட்ட தமிழைப் பற்றிய மிகவும் தவறான, உரிய சான்றுகளின் அடிப்படைகளில் எளிதில் மறுக்கக் கூடிய 'ஆய்வுத் தகவல்கள்' முதலில் குறிப்பிட்டுள்ள, உலக அர‌ங்கில் செல்வாக்குள்ள எழுத்தாளரான‌ ஷெல்டன் பொல்லாக் எழுதியுள்ள  நூலில் வெளிவந்துள்ளன. (‘The Pitfalls in the Study & Translation of the Ancient Tamil Texts (1),(2),(3); http://tamilsdirection.blogspot.com/2013/06/normal-0-false-false-false-en-us-x-none_7.html )

தமிழ்நாட்டில் அப்புத்தகம் வெளிவந்த பின்,  கடந்த 7 வருடங்களில், செல்வாக்குடன் பொது அரங்குகளிலும், மீடியாக்களிலும் வலம் வந்து கொண்டிருக்கும் எந்த தமிழ் அறிஞராவது,   அந்த அபத்தமான, தமிழைப் பற்றி இழிவுபடுத்தும்,  'ஆய்வுகள்' என்ற பெயரில் வெளிவந்துள்ள,  கருத்துகள் பற்றி கவலைப் பட்டிருக்கிறர்களா? கவலைப்பட்டு அதை மறுத்திருக்கிறார்களா?  இல்லையென்றால், அதற்கு என்ன காரணம்? அந்தப் புத்தகத்தைப் படித்து, அதில் தமிழைப் பற்றி வெளிப்பட்டுள்ள தவறானக் கருத்துக்களைப் புரிந்து கொள்ளும் ஆங்கில அறிவு அவர்களுக்கு இல்லையா? இல்லையென்பதை அகந்தையின்றி ஒப்புக் கொண்டு, அத்தகைய ஆங்கில அறிவுடையவர்கள் துணையுடன் அது போன்ற நூல்களைப் படித்து, அதில் தமிழைப் பற்றி இழிவுபடுத்தும் தவறானக் கருத்துக்களை மறுக்கும் சமூகப் பொறுப்பு அவர்களுக்கு இல்லையா? இல்லையென்றால், அது தமிழை வைத்து, அரசியல் செல்வாக்குடையவர்களிடம் 'நாய்கள்' போல் குழைந்து காரியம் சாதிப்பதில் மட்டும் அவர்கள் குறியாக உள்ளார்கள் என்ற ஐயம் எழுவது சரியா?


'தமிழ்நாட்டில், குறிப்பாக கிராமங்களில், ஆங்கிலத்தில் பேசுபவன் எல்லாம் 'அறிவாளி' என்ற கருத்து ஆழமாக வேர் பிடித்துள்ளது.'முட்டாள்த்தனமாக ஆங்கிலத்தில் உளற முடியும் என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டில், பல சொற்பொழிவாளர்கள், குறிப்பாக திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்,கிராமங்களில் பேசும்போது கூட,தமிழ்ப் பேச்சின் நடுவே அவ்வப்போது ஆங்கிலத்தில் பேசி,தம்மை 'அதி புத்திசாலி'யெனக் காண்பித்துக் கொள்வார்கள்.' என்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.(''காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்'; 
http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html ) திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த அந்த‌ 'அதி புத்திசாலி'களும் மேற்குறிப்பிட்ட, தமிழை இழிவு படுத்திய  புத்தகம் பற்றி கடந்த 7 வருடங்களாக ஏன் கண்டு கொள்ளவில்லை? அந்தப் புத்தகத்தைப் படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு ஆங்கில அறிவு இல்லையா? அல்லது இப்படிப்பட்ட கேள்விகளெல்லாம் தவறானவை என்று நிரூபிக்கும் வகையில் இனியாவது செயல்படுவார்களா?

இத்தகைய கேள்விகள் எழும் வகையில் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளிலுள்ள 'அறிவு ஜீவிகள்' வலம் வந்து கொண்டிருக்கிறர்களா? என்ற கேள்வியை மேலேக் குறிப்பிட்டுள்ள இரண்டவது புத்தகம்- ‘M.G.Ramachandran in film and politics- The Image Trap’ by M.S.S pandian - எழுப்பியுள்ளது?

எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியதிலிருந்து அவரோடு சேர்ந்து, அவர் கட்சியில் 'அறிவு ஜீவிகளாக'ப் பயணித்து வருபவர்களில் ஒருவரின் கவனத்திற்கு எம்.ஜி.ஆரை இழிவு படுத்திய அந்த புத்தகத்தைப் பற்றி நான் சொன்னபோது, அவர் தெரிவித்த பதில் எனக்கு , 'திராவிட இயக்க' அறிவுஜீவிகளைப் பற்றிய ஒரு மதிப்பு மிக்க உள்ளீடாக(input)  அமைந்தது. அந்த புத்தகத்தை எழுதிய M.S.S பாண்டியன் தனக்கு மிகவும் தெரிந்தவர் என்றும், அப்புத்தகம் எழுதத் தன்னிடமிருந்தும் குறிப்புகள் வாங்கியதாகப் பெருமையுடன் தெரிவித்தார். ஆங்கிலத்தில் எம்.ஜி.அரைப் பற்றி ஒரு புத்தகம் வர தான் உதவியது போல் பெருமையுடன் அதைத் தெரிவித்தார்.

ஷெல்டன் பொல்லாக் எழுதியுள்ள முதலில் குறிப்பிட்டுள்ள புத்தகத்தில்,தமிழைப் பற்றிய மிகவும் தவறான, உரிய சான்றுகளின் அடிப்படைகளில் எளிதில் மறுக்கக் கூடிய 'ஆய்வுத் தகவல்கள்' வெளிவந்துள்ளன. M.S.S பாண்டியன் எழுதியுள்ள இரண்டாவதாகக் குறிப்பிட்டுள்ள புத்தகத்தில்,எம்.ஜி.ஆரைப் பற்றிய மிகவும் தவறான, உரிய சான்றுகளின் அடிப்படைகளில் எளிதில் மறுக்கக் கூடிய 'ஆய்வுத் தகவல்கள்' வெளிவந்துள்ளன. இரண்டுப் புத்தகங்களுமே உலகத்தரம் வாய்ந்த ஆங்கில நடையில் இருப்பதும் இரண்டு புத்தகங்களுக்கிடையிலுள்ள‌ பொது அம்சமாகும். அந்த ஆங்கில நடையில் தமிழைப் பற்றியும், எம்.ஜி.ஆரைப் பற்றியும் மிகவும் தவறான, உரிய சான்றுகளின் அடிப்படைகளில் எளிதில் மறுக்கக் கூடிய 'ஆய்வுத் தகவல்கள்' வெளிவந்துள்ளதைப் படித்து புரிந்து கொள்ளும் ஆங்கில அறிவு இரண்டு திராவிடக் கட்சிகளின் 'அறிவு ஜீவிகளிடம்' இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விகள் எழுவது தவறா?

1944இல் திராவிடர் கழகம் தோன்றியது முதல் தமிழ் நாட்டில் பொது அரங்கில் செல்வாக்குடன் வலம் வரும் ‘திராவிட’ அறிவு ஜீவிகளின் 'ஆங்கில அறிவின்' புலமை அளவை ‘Y’ அச்சிலும், காலத்தை  ‘X’ அச்சிலும் தோராயமாகக் கணக்கிட்டு வரை கோடு (Graph)  வரைவதற்கு, அவர்கள் ஆங்கிலத்தில் வெளிவந்த‌ தமிழ், தமிழ்நாடு தொடர்பானப் புத்தக‌ங்களைப் படித்து, அதிலுள்ளவை தொடர்பாக‌ வெளியிட்டுள்ள கட்டுரைகளும் புத்தகங்களும் சான்றுகளாக உள்ளன.  அச்சான்றுகள் அடிப்படையில் உருவாகும் வரை கோட்டில் (Graph) ,  1944 முதல் எதிர்ச் சரிவில் (negative Slope)  தொடங்கும் வரைகோடு, 1967இல் எதிர்ச் சரிவு அதிகரிக்கத் தொடங்கியிருந்தால் வியப்பில்லை. அந்த எதிர்ச் சரிவு அதிகரிப்பு, 1970 களின் பிற்பகுதியில் ஆங்கில வழிக் கல்வி நோயும், ‘பொது வாழ்வுக் கள்வர் திறமை' நோயும் வளர்ந்த வேகத்தில் இன்னும் வேகமான எதிர்ச் சரிவுக்குள்ளாகி, கடந்த பல‌ வருடங்களில் சிறும நிலையை (minima)  அடைய வாய்ப்புள்ளவாறு, மேலேக் குறிப்பிட்ட இரண்டு புத்தகங்களைப் பற்றியும் இரண்டு திராவிடக் கட்சிகளில் உள்ள 'அறிவு ஜீவிகள் '  கவலைப் படாத போக்கு உணர்த்துகிறதா? அந்த சிறும நிலையுடன் (Minima) திராவிடக் கட்சிகளின் மரணம் நடைபெறப் போகிறதா? அல்லது சிறுமத்திலிருந்தும், ‘தமிழ், தமிழ் உணர்வு’ என்ற பெயரில் பிழைப்பு நடத்தும்,  ‘பொது வாழ்வுக் கள்வர் நோயி’லிருந்தும் மீண்டு, திராவிடக் கட்சிகள் வளரப் போகிறதா? என்பது தான் இனி வரும் வரலாறாக‌ அமையும்.