Thursday, January 28, 2016



ஈ.வெ.ராவின் 'மதுவிலக்கு எதிர்ப்பு'ம், 'பெரியாரின்' வரலாற்று மரணமும்


" கடந்த, 1963 ஜன., 21ல், மதுவுக்கு ஆதரவாக கும்பகோணத்தில், ஈ.வெ.ரா., மாநாடு நடத்தினார். அதே நாளான இன்று, மது விலக்கை அமல்படுத்த முடியாது என அமைச்சர், சட்டசபையில் அறிவித்துள்ளார். இதன்மூலம், ஈ.வெ.ரா., வழியில் நத்தம், எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளார். இந்த அறிவிப்பு மூலம், மது குடிப்போரின் ஒட்டு மொத்த ஆதரவை, அ.தி.மு.க.,வுக்கு அவர் பெற்று தந்துள்ளார்."

ஈ.வெ.ரா உள்ளிட்ட தலைவர்களின் நிலைப்பாடுகள் எல்லாம், எந்த காலக்கட்டத்தில், எந்த சமூக சூழலில் முன்வைக்கப்பட்டது? என்பதை விளக்காமல், இன்றுள்ள பிரச்சினைகளில், அந்த நிலைப்பாடுகளை முன்வைப்பதானது, சமூகத்திற்கு கேடாக முடிய வாய்ப்புள்ளது.

இந்திய விடுதலைக்கு முன், காங்கிரசில் இருந்தபோது, தமிழ்நாட்டில் மதுவிலக்கு பிரச்சாரத்தில், முக்கிய பங்கு வகித்து, காந்தியால் பாராட்டப்பட்டவர், காங்கிரசிலிருந்து வெளியேறியபின், அதில் தலைகீழ்மாற்றமானது ஏன்? தமிழ்நாட்டில் இரண்டு முறை முதல்வராயிருந்தபோதும், ராஜாஜி 'மதுவிலக்கை' காரணம் காட்டி, வருமான இழப்பை ஈடுகட்ட, ஆயிரக்கணக்கான பள்ளிகளை மூடியதால், ஈ.வெ.ரா மதுவிலக்கு எதிர்ப்பில் தீவிரமானாரா?

அவர் இன்று இருந்திருந்தால், அதே நிலைப்பாட்டில் தொடர்ந்திருப்பாரா? என்பது ஆய்விற்குரியதாகும்.

மதுவிலக்கு அமுலில்லாத மற்ற மாநிலங்களை விட, தமிழ்நாட்டில், மிக அதிகமாக, குடியால் சீரழியும் குடும்பங்களும், பள்ளி/கல்லூரி மாணவர்களும் அதிகரித்து,வருவது உண்மையா? உண்மையென்றால், அதற்கான காரணங்கள் யாவை? 

தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணிவேர்களை, 'நஞ்சாக' கருதி, அவர் பயணித்ததன் விளைவுகளையே, தமிழ்நாடு இன்று அனுபவிக்கிறது;

மக்களின் மொழியும், அவர்களின் அடையாளமும், நெருக்கமான தொடர்புள்ளவையாகும். 

தமது மொழி பயனற்றது, என்று கருதும் மக்கள், தமது அடையாளமும் பயனற்றது என்றே கருதுவார்கள். அதன் விளைவாக அச்சமூகத்தில் சமூக சீர்குலைவு (social disruption), மனத்தளர்ச்சி (depression), தற்கொலை (suicide) , போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug use)  போன்றவை அதிகரிக்கும். ‘ (http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm

எனவே தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணிவேர்களின் மீட்பும், 'டாஸ்மாக்' மது எதிர்ப்பும், ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகும்.

இந்திய சமூகத்தில், காலனியத்திற்கு முன் இருந்த நிலை என்ன? வெற்றி பெற்ற அரசர், தோற்ற அரசரின் மக்களை அடிமை படுத்தியது; உள்ளிட்ட பலவகை சமூக பிரிவினைகள் ஆனவை, காலனி ஆட்சியில், சுயநல நோக்கில்,  எவ்வளவு சிக்கலான சமூக செயல்நுட்பத்தில்(complex sociological mechanism), இன்றுள்ள உயர்வு/தாழ்வு/தீண்டாமை நோய்கள் கொண்ட சாதி முறையானது; இந்திய சமூக வரலாற்றில், 'புதிதாக' அரங்கேறியது? என்பது தொடர்பாக, 

வெளிவந்துகொண்டிருக்கும் ஆய்வுகளை பற்றிய கவலையின்றி;

1944இல் முளை விட்டு, தமிழில் இருந்த 'இனம்' என்ற சொல்லை,  'ரேஸ்' (Race)  என்ற ஆங்கிலச்சொல்லின் பொருளில் 'திரித்து', 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக் குழப்பங்களையும் உருவாக்கி;

அதில் வளர்ந்த 'பெரியார்' போதையில், என்னைப் போன்றவர்கள், கிழ்வரும் அறிவுரையை கடைபிடிக்காமல், 'திருச்சி பெரியார் மையம்'  மூலம் பலியாகி; (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

‘மனத்தால் மறு இலரேனும், தாம் சேர்ந்த
இனத்தால் இகழப்படுவர்; - புனத்து
வெறி கமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறிபுனம் தீப்பட்டக்கால்.’ -   நாலடியார் 18 நல் இனம் சேர்தல் 10;


அகத்தில் சீரழிந்த மனிதர்களை,   'தோழர்'களாக கருதி, புறத்தில்  'விமர்சனம், சுய விமர்சனம்' போன்றவைகளின் மீது 'நம்பிக்கை' வைத்து, அணுகுவது என்பதானது, எவ்வளவு ஆபத்தானது என்பதை, 'திருச்சி பெரியார் மையம்' அனுபவங்கள் அன்றி, வேறு வழியில் நான் கண்டுபிடித்திருக்க முடியுமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

புலமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமற்ற, உலகில் புதிதாக வெளிவரும் சான்றுகள் பற்றிய 'அறியாமையுடன்', தாம் கையாளும் சான்றுகளின் வரைஎல்லைகள்(limitations) பற்றிய புரிதலுமின்றி, சராசரி பொதுஅறிவின் அடிப்படையில்;

'உணர்ச்சிபூர்வ பகுத்தறிவு' பாதையில், முன்னெடுக்கப்பட்ட 'சாதி ஒழிப்பு' வழிகளில், பயணித்து;

இன்று, 1944க்கு முன் இருந்ததை விட, படித்தவர், படிக்காதவர், மாணவர்கள் உள்ளிட்ட எல்லா பிரிவுகளிலும்;

'சாதி வெறி' அதிகரிக்கும் விளைவில் முடிந்துள்ளதா?

'அகத்தில் சாதி வெறியுடனும்' (தமது சாதி தலைவர்களுடனும், அமைப்புகளுடனும், இதழ்களுடனும் -  தமது முற்போக்கு வட்டத்திற்கு தெரியாமல் -  உறவு கொண்டு), புறத்தில் 'சாதி ஒழிப்பு வீரர்களாகவும்', வலம் வரும் 'இரட்டைவேட' கூட்டம் உருவாகியுள்ளது, அதன் தொடர் விளைவா?

மேற்குறிப்பிட்ட ஆணி வேர்கள் மீட்பு முயற்சியில், ஈ.வெ.ராவின் (மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய) சாதி சிக்கலை, நுழைத்து, தடைகளை, உணர்ச்சிபூர்வமாக, 'பெரியார்' ஆதரவாளர்கள் ஏற்படுத்தி வருவது சரியா? 

இன்றைக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய, ஈ.வெ.ராவின் 'மதுவிலக்கு எதிர்ப்பு' நிலைப்பாட்டை முன்வைப்பது சரியா?

இது போன்ற முயற்சிகள் எல்லாம், தமிழின், தமிழரின் மீட்சிக்கு, 'பெரியாரின்' வரலாற்று மரணத்தை, முன்நிபந்தனையாக்கி விடாதா?

'உணர்ச்சிபூர்வ பகுத்தறிவு' போக்கில், 'சமுக கருத்து கறுப்பு - வெள்ளை நோயில்'  சிக்கி விட்டால்,  எதையும் சரியாகப் பார்க்கத் (‘கண் என்னாம்’ – குறள் 573) தெரியாமல் (ஆராயாமல்),  கருத்தை உருவாக்கிக் கொள்ளும் (‘தேரான் தெளிவும்’ – குறள் 510) நோய்க்கு (opinion sickness),  நாம் ஆளாக நேரிடும். ( http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html )

"வடநாட்டு வணிக முதலைகள், மேல்நாட்டு வணிக வேந்தர்களுக்குக் கங்காணிகளாகத் தென்னாட்டு மக்களைச் சுரண்டுவதற்கே, திட்டமிட்டு, வேலைசெய்யப்பட்டு, இதற்கு இந்திய தேசிய முலாம் பூசப்படுகிறது"
குடிஅரசு 27.12.1948

1948 தூத்துக்குடி மாநாட்டு உரையில், தமிழ்நாட்டின் கனிவளங்களை சூறையாடி, சமூக ஒழுக்கநெறிகளை சீர்குலைத்து, காவிரி, கச்சத்தீவு, முல்லை பெரியாறு உள்ளிட்ட உரிமைகளை காவு கொடுத்து, 'திராவிட வணிக முதலைகள்' தோன்றி, வளர இருக்கும் சமூக செயல்நுட்பம்(Social Mechanism)  பற்றிய அபாய அறிவிப்பை, ஈ.வெ.ரா வெளியிட்டது உண்மையா? பொய்யா?

இன்று ஈ.வெ.ரா உயிரோடிருந்தால்;

"திராவிட‌ வணிக முதலைகள், மேல்நாட்டு வணிக வேந்தர்களுக்குக் கங்காணிகளாகத் தமிழ்நாட்டு மக்களைச் சுரண்டுவதற்கே, திட்டமிட்டு, வேலைசெய்யப்பட்டு, இதற்கு 'பெரியார்' முலாம் பூசப்படுகிறது"
 
என்று ஈ.வெ.ரா எச்சரித்திருப்பாரா? மாட்டாரா?

எனவே ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய, தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணிவேர்களின் மீட்பு, 'டாஸ்மாக்' மது எதிர்ப்பு, ஊழல் ஒழிப்பு  போன்றவற்றில், 'பெரியார்' கட்சிகள் கவனம் செலுத்துவார்களா?

No comments:

Post a Comment