Tuesday, November 26, 2013



தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (3)


          'தனி நாடு' உண்மையில் தனி நாடா?



ஒரு நாடு தனது முன்னேற்றத்திற்கு எந்த வெளி குறுக்கீடுமின்றி, தாமே முடிவெடுக்கும் அதிகாரம், இன்று தனிநாடுகளாக உள்ளவற்றிற்கு இருக்கிறதா? தமது நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை, தமது நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களில் பயன்படுத்தாமல், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யக் காரணம் என்ன? உள்நாட்டு உற்பத்தித் தொழில்கள் சிதையும் அளவுக்கு, சீனா போன்ற நாடுகளிலிருந்து, வெளிநாட்டு பொருட்களை, இறக்குமதி செய்ய வேண்டிய காரணம் என்ன? பொதுத் தேர்தல், போராட்டங்கள், அரசின் முக்கிய முடிவுகளில், உளவு/தொண்டு நிறுவனங்கள் மூலம், தீர்மானிக்கும் சக்திகளாக, அந்நிய சக்திகள் செயல்பட்டால், 'தனிநாட்டின் (‘sovereignty’) அதிகார ஆளுமை' என்பதற்கு, அர்த்தம் உண்டா? 

உலகமயமாக்கலுக்குப் பின்,  'தனிநாட்டின் அதிகார ஆளுமை' (‘sovereignty’) என்பது, பெற்று வரும் வேகமான மாற்றங்கள் குறித்து, பல ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

'உலகமயமாக்கலுக்குப் பின்சாவரினிட்டி (‘sovereignty’) என்பது கதையாகப் (fictional. ) போய்விட்டது', என்று ஜான் எச் ஜாக்சனும் (பக்கம் 784), கடந்த காலத் தடயமாக வரலாற்று நூலகத்திற்குச் செல்ல வேண்டியது என்று பேரா.என்கினும் (பக்கம் 789)சர்வ தேசச் சட்டங்கள் பற்றிய அமெரிக்க ஆய்வு நூலில் (The American Journal of International Law  ) கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

இப்போது தனிநாடுகளாக உள்ளவற்றின் 'சாவரினிட்டிக்கே', இந்த கதி என்பதை, பிரிவினை இயக்கங்கள் கருத்தில் கொண்டு செயல்படுகின்றனவா? 

உலக ஆதிக்க சக்திகளின் நலன்களுக்குக் கேடில்லாத வகையில் உருவான சர்வதேசச் சூழலில் கிழக்கு தைமூரிலும், தெற்கு சூடானிலும், ஐ.நா மேற்பார்வையில் 'கருத்து வாக்கெடுப்பு' மூலம், தனி நாடுகள் உருவானது. அதன் பின் அங்கு என்ன நடந்தது, நடக்கிறது, அவ்வப்போது அந்நிய துருப்புகள் உள்நுழைந்து அமைதி உருவாக்க வேண்டிய தேவை என்ன? தனிநாடு கோரிக்கையில்லாமலேயே, சீனர் பெரும்பான்மையாயுள்ள சிங்கப்பூரை, மலேசியா ஏன் தனிநாடாகத் துண்டித்தது? அப்போது மலேசிய நாணயத்தை விட, சிங்கப்பூர் டாலர் மதிப்பு குறைவாகவும், ஊழலில் மோசமாகவும் இருந்த சிங்கப்பூர், உலகே வியக்கும் அளவுக்கு எவ்வாறு முன்னேறியது? 

மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதில்களைத் தேடினால், கிடைக்கும் விடைகள் முக்கியமானவை. 

புறக்கணிப்பின் அடிப்படையில், துவக்கத்தில், நேர்மையான உரிமைப் போராட்டமாக துவங்கும் 'தனி நாடு' முயற்சிகள், ஆயுதப் போராட்ட வடிவமாக வளரும்போது, உலக ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சி வலையில் சிக்கும் ஆபத்தும் இருக்கிறது. தனிநாடு, மனித உரிமை, பெண்ணுரிமை, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு உள்ளிட்டு உலகில் நடைபெறும் பலவகையான அமைப்புகளையும், போராட்டங்களையும், 'பொம்மலாட்டமாக' மாற்றி, தமது வலையில், உலக ஆதிக்க சக்திகள், எவ்வாறு சிக்க வைக்கின்றன, என்ற செயல்நுட்பத்தை, விளக்கும் நாவல் The Aquitaine Progression by Robert Ludlum ( 1984). 

குறிப்பாக சட்டபூர்வமாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் ஆயுத உற்பத்தி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சுயநல சக்திகளுக்கு, அவர்களுடைய வியாபார நலன்களுக்காக, உலகில் பல இடங்களில் போரும், ஆயுதப் போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

குறிப்பாக கடும் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ள அமெரிக்கா போன்ற நாடுகள் ஆயுத உற்பத்தி வியாபாரத்தையே பெரிதும் நம்பியுள்ளன. 1998 - 2003 காலக் கட்டத்தில், உலக ஆயுத வியாபாரத்தில் பாதி அமெரிக்கா வசம் இருந்தது. அதில் 2/3 பங்கு வியாபாரம் வளரும் நாடுகளுக்கான ஆயுத விற்பனையாக இருந்தது. அன்றைய ஐ.நா பொதுச் செயலாளர் கோபி அன்னன் சட்டவிரோதமான ஆயுத வியாபரத்தைத் தடுக்க, வளர்ந்த நாடுகள் கூட்டு முயற்சி மேற்கோள்ளும் யோச‌னையை முன் வைத்தபோது, அமெரிக்கா அதை நிராகரித்தது.  ( Pages 97-98,  Identity and Violence – The Illusion of Destiny by Amartya Sen - 2006)

அதே நேரத்தில் உலக ஆயுத உற்பத்தியாளர்களின் பிழைப்பிற்கே ஆபத்தாகும் வகையில், உலகப் பொருளாதாரம் சீர்குலையாமலும், பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த சமநிலைக்குக் கட்டுப்பட்ட வகையிலேயே போரும், ஆயுதப் போராட்டங்களும் நடைபெறுவதற்காகவே, அச்சக்திகள் அவ்வப்போது சமாதான முயற்சிகளிலும், ஒத்து வராத அரசுகளை கவிழ்ப்பதிலும், தாமே, தமது சுயநலனுக்கு வளர்த்த, ஆயுதக் குழுக்களை, 'பயங்கரவாத எதிர்ப்பு' என்ற போர்வையில், அழிப்பதுமான, செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

திறந்த மனதுடனான, அறிவுபூர்வமான விமர்சனங்களைத் துரோகமாகக் கருதி ஒழித்து, உணர்ச்சிபூர்வ போதையில் பயணிக்கும் ஆயுதப் போராட்டங்கள், இந்த சூழ்ச்சி வலையிலிருந்து தப்புவது கடினமே.

உணர்ச்சிபூர்வ போதையின் அடித்தளங்கள் பற்றி அடுத்து பார்ப்போம்.
-------------------

Sunday, November 24, 2013



தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (2)


நீதிக் கட்சி திராவிடர் கழகமாக மாறிய பின் தான் ' திராவிடர்' என்ற அடையாளத்திலான தனிநாடு கோரிக்கை எழுந்தது. பின் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் ஆலோசனை பேரில் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று சொன்னார். ஆனாலும் பிராமண எதிர்ப்பை முன்னிலைப் படுத்திய 'திராவிடர்' என்ற அடையாளமே வலுப் பெற்றது. ' திராவிடர் ' என்ற இன ரீதியிலான சொல்லை விடுத்து, நிலப்பரப்பு ரீதியிலான ' திராவிட 'என்ற சொல்லை ஏற்று, திராவிட முன்னேற்ற கழகம் உருவாகி வளர்ந்த வேகத்தில்,' திராவிடர் ' என்ற சொல்லும் வலுவிழந்தது.

 'தமிழர்' என்ற அடையாளம் இன்று வரை குழப்பமாகவே சிதைந்துள்ளது. தமிழ்நாட்டில் வடமொழி தெரியாத,தமிழையேத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்களை 'தமிழர்' ‍ஆக ஏற்க மறுக்கின்ற போக்கும் உள்ளது. கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட பெரியாரையும், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட வை.கோ போன்றோரையும் 'தமிழர்' ‍ஆக ஏற்க மறுக்கின்ற போக்கும் உள்ளது. இக்குழப்பம் தீராமலேயே  இரு போக்கினருமே தனித் தமிழ்நாடு என்ற உணர்வுபூர்வமான போக்கை வளர்த்து வருகிறார்கள்.

  'இந்தியர்' என்ற அடையாளமும் மத்தியில் பொறுப்பில் உள்ள அமைச்சர்களின் தத்தம் வட்டார, சாதி, மதப் பற்றுகள் காரணமாக சிதைக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்களில்,  அகில இந்திய அரசியல் கட்சிகளின் குறுகிய நோக்கிலான சுயநல அரசியல் நிலைப்பாடுகள் இந்த சிதைவின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளன.

புறக்கணிப்பு என்ற ஆபத்தான விதை

தெற்கு ஆசியாவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தனிநாடு கோரி பல்வேறு வழிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களை சரி அல்லது தவறு என்று பார்ப்பது, இரண்டிற்கும் இடையே மறைந்துள்ள பல முக்கிய உண்மைகளைப் பார்க்கத் தவறுவதற்கு வழி வகுக்கும்.

'தாம் புறக்கணிக்கப்படுகிறோம்' என்ற உணர்வு தான் குடும்பத்திலும் சரி,நாட்டிலும் சரி பிரிவினை உணர்வுக்கு விதையாகி , சம்பந்தப்பட்ட நபரின் அடையாளக் கூறுகளில் பிரிவினை சம்பந்தப்பட்ட கூறுகளை வலிமையாக்குகிறது. புறக்கணிப்பு என்பது உண்மையானால் அதைக் களைகின்ற முயற்சி தாமதமின்றி ஒழுங்காக நடைபெற்றால், அவ்விதை முளையிலேயே அழிந்து விடும்.

கூட்டுக் குடும்பத்திலும் நாட்டிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் சுய‌நலத்திற்குப் பலியாகாமல் பொறுப்புடன் நடந்து கொண்டால், அது தான் நடக்கும்.

மாறாக புறக்கணிப்பு என்பது உண்மையாக இருந்து அது மேலும் தீவிரமானால், அவ்விதை வளர்வதற்கு அதுவே உரமாகிவிடும். குடும்பத்திலும் நாட்டிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் அவ்வளர்ச்சிக்கு காரணமாவார்கள்.

குடுமபத்தில் உள்ள பிரிவினையை வளர்த்து விடுவது தமக்கு ஆதாயம் எனக்கருதி வெளிநபர் அதை ஆதரிப்பதும், நாட்டில் உருவாகியுள்ள பிரிவினை முயற்சியை வளர்த்து விடுவது தமக்கு ஆதாயம் எனக்கருதி அன்னிய சக்திகள் அதை ஆதரிப்பதும், ஆபத்தான திசையில் பிரிவனை முயற்சியைப் பயணிக்கச் செய்யும். அதன் விளைவுகள் குடும்பத்தை விட நாட்டில் ஏற்படுத்தும் நாசங்கள் மிகவும் மோசமானவையாகும் தமது அடையாளக் கூறுகளைத் தொடர்ந்து அறிவுபூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தாமல் உணர்வுபூர்வ போதையில் பயணிப்பவர்களில் நேர்மையானவர்கள் விட்டில் பூச்சிகளாக வீணாக தம்மை அழித்துக் கொள்வார்கள்.குறுக்கு புத்தியுள்ள சுயநலவாதிகள் தமது செல்வ்த்தையும் செல்வாக்கையும் பெருக்கிக் கொள்வார்கள்.

பிரச்சினைக்குரிய பகுதியில் அமைதி வழிப் போராட்டங்கள் பலகீனமாகி வன்முறை தலைதூக்கும் போது, ஒன்றுக்கும் மேற்பட்ட ஆயுதக்குழுக்களிடம் பிரச்சினையே சிறைபட்டு விடுகிறது. பிரச்சினைக்குள்ளன மக்களும் இக்குழுக்களின் செல்வாக்கு போட்டியில் கூறுபோடப் படுகின்றனர். விமர்சனங்கள் துரோகங்களாக சிறைபிடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. உண்மை,நேர்மை, ஒழுக்கம்,திறந்த மனதுடன் விமர்சனம்,எளிமையான வாழ்வு என்ற கூறுகள் மறைந்து,தவறு என்று தெரிந்தும் சுய லாபத்திற்காக தலைமை துதிபாடி, தவறுகளுக்கு துணை போய்த் தமது நிலையை வளர்த்துக் கொள்ளும் போக்கு, அவ்வளர்ச்சிக்கு ஏற்றார்ப் போல் தமக்கும் தமது குடும்பத்துக்கும் சுக வாழ்வு போன்ற கூறுகள் அத்தகைய இயக்கங்களில் அகவயப் படுத்தப்படுகின்றன.

இத்தகைய போக்கிற்கு உடன்பட மறுக்கும் நபர்களின் அடையாளக் கூறுகளை அவர்கள் வெளிப்படுத்துவது ஆபத்தாகும் சூழல் கூட உருவாகிவிடும். அப்படிப்பட்ட வாய்ப்புகள் உள்ள அடையாளச் சிக்கலைக் கீழ்வரும் சான்று உணர்த்துகிறது.

 “ Our freedom to assert our personal identities can sometimes be extraordinarily limited in the eyes of others, no matter how we see ourselves” ( Page 6, Identity and Violence – The Illusion of Destiny by Amartya Sen - 2006)

அன்னிய சக்திகளின் ஆதரவுடன் தனிநபர் முக்கியத்துவம், சுயநலன் போன்றவைகள் பிரிவினை முயற்சியை முன்னெடுப்பவர்கள் மத்தியில் தோன்றுமானால், அவர்கள் பல குழுக்களாக பிரிந்து தமக்குள் சண்டையிட்டு ஒருவரையொருவர் அழிக்கும் மேலும் மோசமான பிரிவினை நோயை வளர்த்து விடுவார்கள்.அந்நோய் பிரிவினை முயற்சியை அன்னிய சக்திகளிடம் அடகு வைக்கவே துணை புரியும். விமர்சனத்திற்கும் துரோகத்திற்கும் இடைவெளி மறைந்து, தமது குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்களைக் கூட துரோகிகள் எனப் பட்டம் கட்டி அழிக்கும் அபாய திசையில் பிரிவனை முயற்சி பயணிக்கும்.

இந்திய துணை கண்டத்தில் நடைபெற்று வரும் பிரிவினை முயற்சிகள் அத்தகைய ஆபத்தில் சிக்கியுள்ளனவா, இல்லையா என்பதும், சிக்கியிருந்தால் அதன் பின்புலத்தில் பிரிவினையை பொம்மலாட்டமாக இயக்கும் சக்திகள் யாவை என்பதும் சம்பந்தப்பட்ட மக்களிடையே திறந்த மனதுடன் எந்த கட்டுப்பாடுமின்றி விவாதிப்பது தவறானப் பிரிவனைப் பயணத்தைத் தடுக்கத் துணைபுரியும். தத்தம் பக்கமுள்ள தவறுகளை நேர்மையாக ஒப்புக் கொள்வதை ஊக்குவிப்பது அதற்கு வலிவூட்டும். தனிநபர், குழு வழிபாட்டுப் போதைகள் இத்தகைய முயற்சிகளைக் கெடுக்கும்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் 'தனித் தமிழ்நாடு' என்பது தி.மு.க தலைவர் சி என். அண்ணதுரை ' தனிநாடு கோரிக்கையை கை விடுகிறேன். ஆனாலும் தனிநாடு கோரிக்கைக்கான பிரச்சினைகள் தொடர்கின்றன" என்று அறிவித்தது முதல், தமிழ்/திராவிட இயக்க அபிமானிகளிடம் அக்கோரிக்கை நீறு பூத்த நெருப்பாகவே தொடர்ந்தது. தி.மு.க ஆட்சிக் கலைப்புக்கு உட்படுத்தப்பட்ட நேரங்களில் அப்போது பதவியிலிருந்தே அமைச்சர்கள் சிலரே ' ஆட்சியைக் கலைத்தால், தனித் தமிழ்நாடு கோரிக்கையை கையிலெடுப்போம்" என்று மிரட்டினார்கள். ஆனால் ஆட்சியைக் கலைத்ததும், அவர்கள் அக்கோரிக்கை பற்றி பேசவில்லை.இப்போக்கு அக்கோரிக்கையையே பொதுமக்கள் பார்வையில் எள்ளி நகையாடும் கோரிக்கையாக்கி விட்டது. இந்த சூழலில் அக்கோரிக்கையை பகிரங்கமாக முன்வைத்தும், அவ்வாறு முன்வைககத் துணிவில்லாமல தமக்குள் மட்டும் முணகும் வகையிலும் செயல்பட்ட குழுக்கள் வேர் பிடிக்காமல் போனது. 

இந்த பின்னணியில் அடுத்தடுத்து வந்த இளைய தலைமுறையினரில் சில குறைந்த சதவீத கிராமப்புற முதல் தலைமுறையாகப் படித்தவர்களும், திராவிட/தமிழ் பற்றாளர்கள் குடும்ப இளைஞர்களில் சிலரும் 'இந்தியர்' என்ற அடையாளத்தை, நிராகரிக்கும் அளவுக்கு 'தமிழர்' என்ற அடையாளத்தை வலிமையாக அகவயப்படுத்தி வாழ்ந்தார்கள். ஆனாலும் அக்கோரிக்கையை முன்வைத்து மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று யாரும் போராடுவதாகத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் கிராமப்புற அளவில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்ப் படிப்பு மாணவர்கள் எண்ணிக்கையும், வெளிநாட்டில் வேலை பார்த்து விடுமுறைக்கு ஊருக்கு வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வேகத்தில் 'இந்தியர்' என்ற அடையாளம் தமிழ்நாட்டில் வலிமை பெற்று வருவதும், 'இந்தியர்' என்ற அடையாளத்தை மறுத்த 'தமிழர்' என்ற அடையாளம் வலுவிழந்து வருவதும் உண்மையா? இல்லையா? என்பது பற்றியும் விளங்கிக் கொண்டாக வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ' தனிநாட்டின் அதிகார ஆளுமை' (‘sovereignty’ )என்பது உலகமயமாக்கலுக்குப் பின் பெற்றுவரும் வேகமான மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாமல் இந்த அடையாளச் சிக்கலை விளங்கிக் கொள்வதும், தனி நாடு கோரிக்கைக்குப் போராடுவதும் முட்டாள்த் தனமாகவே முடியும். 

அதனை அடுத்து பார்ப்போம்.

Saturday, November 23, 2013



தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (1)


ஒரு மனிதரின் வாழ்க்கை நல்ல வழியில் பயணிப்பதும், கெட்ட வழியில் பயணிப்பதும் அவரின் வாழ்வியல் அடையாளத்தைப் பொறுத்தது. 

ஒரு மனிதர் எந்த நாட்டில், எந்த மொழி பேசும் எந்த  பகுதியில், எந்த மத/சாதி போன்ற குழுப் பிரிவில், பிறப்பதன் காரணமாக வரும் அடையாளக் கூறுகளுடன் அவரின் வாழ்க்கைப் பயணம் தொடங்குகிறது.

ஒருவரின் தாய்மொழி,நாடு, சாதி, மதம், இலக்கியம், இசை, ஓவியம் போன்ற நாட்டமுள்ள துறைகள்,போன்ற அவர் சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றும் அவரின் அடையாளக் கூறுகள் ஆகும். பிறந்து வளரத் தொடங்கியது முதல் சாகும் வரை, பிறப்பின் காரணமாக வந்த அடையாளக் கூறுகளுடன், அவரின் வளர்ச்சியில் பெரும் அறிவு, அனுபவ அடிப்படையில் பல கூறுகள் சேரலாம், சில கூறுகள் வலுவிழக்கலாம்.

படித்தவருக்கு அவரின் ஆர்வத்தைப் பொறுத்து அறிவை வளர்த்துக் கொள்ளவும், அதற்கேற்றார்ப்போல் தமது அடையாளக் கூறுகளை தமது நல்வாழ்விற்கு உதவ வளர்த்தெடுக்கவும் முடியும். அதிலும் தமிழ் மொழி மட்டுமே தெரிந்து கிணற்றுத்தவளை போல் வாழ்பவர்களை விட, ஆங்கிலமும் இன்னும் பிறமொழிகளும் தெரிந்தவர்களுக்கு தமது அடையாளக் கூறுகளை நன்கு வளர்த்தெடுக்க வாய்ப்புகள் அதிகம்.

புற செல்வாக்கிற்கு (External influence) அடையாளக்கூறுகள் உள்ளாவதற்கும் வாய்ப்புண்டு.

உதாரணமாக வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆளத் தொடங்கியதும், இந்தியாவின் பாரம்பரியத்தை இந்தியர்களே கீழாக நினைக்கும் வகையில் பல காரியங்களைச் செய்தார்கள்.( அவர்களை விட உயர்ந்த தொழில் நுட்பமும், கல்விமுறையும் இந்தியாவில் இருந்ததை எப்படி சிதைத்தார்கள் என்பதை அரிய சான்றுகளுடன் வெளிப்படுத்திய புத்தகம் DHARAMPAL • COLLECTED WRITINGS Volume I  Claude Alvares முன்னுரையுடன்)

வெள்ளையர்கள் தம்மைவிட நாகரிகத்தில் கீழானவர்களாக இந்தியர்களை நடத்தி, இந்தியர்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மையை (Inferiority Complex) வெற்றிகரமாக விதைத்தார்கள். இந்தியரின் அடையாளக் கூறுகளில் இது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இத்தாழ்வு மனப்பான்மையின் பாதிப்பின் அளவைப் பொறுத்து,பாதிப்புக்குள்ளான நபரின் உள்ளத்தில்,  அதன் தொடர்விளைவாக ஒரு 'உயர்வு' மனப்பான்மை (superiority complex) வெளிப்படும். தமது குடும்பப் பாரம்பரியம், சாதி, மதம், மொழி போன்ற அவரின் அடையாளக் கூறுகள் மற்றவர்களுடையதைவிட உயர்ந்தது என்ற உணர்வு பூர்வமான நிலைப்பாட்டிற்கு அந்த நபர் அடிமையாவார் என்பதைக் கீழ்வரும் ஆய்வு உணர்த்துகிறது.

"We should not be astonished if in the cases where we see an inferiority [feeling] complex we find a superiority complex more or less hidden. On the other hand, if we inquire into a superiority complex and study its continuity, we can always find a more or less hidden inferiority [feeling] complex."- Ansbacher, Heinz L., and Ansbacher, Rowena R., ed. The Individual Psychology of Alfred Adler - A Systematic Presentation in Selections from his Writings. New York: Basic Books Inc., 1956 (page 259).

மறந்த பிரதமர் நேரு உள்ளிட்டு, இந்தியாவில் மன்னர்கள் உள்ளிட்டு பல முக்கிய நபர்கள் வெள்ளைக்கார பெண்களை நண்பர்களாக, மனைவியாக கொண்டதற்கு மேலே குறிப்பிட்டது காரணமாக இருக்கலாம். தமிழ்நாட்டில் பல முற்போக்கு இயக்கங்களில் ஆழ்ந்த அறிவில்லாமல், மேலோட்டமாக தெரிந்தவைகளை சாதாரண மக்களிடம் வெளிப்படுத்தி,  தம்மை உயர்ந்தவராக காட்டிக் கொள்பவர்கள் பலர் இருப்பதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம்.

மேலே குறிப்பிட்ட பின்னணியில் தான் தமிழருக்குள்ள அடையாளச் சிக்கலை விளங்கிக் கொள்ள முடியும்.

வெள்ளைக்காரன் வருவதற்கு முன் தமிழ்நாடு முழுவதும் ஒரே மன்னரின் ஆட்சியில் இருந்தது கிடையாது. சங்க இலக்கியங்களில் 'தமிழ்' என்ற சொல் இருக்கிறது. 'தமிழன்' என்ற சொல் கிடையாது. பல தமிழறிஞர்கள் பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து உருவாக்கிய தமிழ் லெக்சிகனில் 'தமிழர்' என்ற சொல்லுக்கு 'விளிம்பில்லாத தீர்த்த பாத்திரம்' என்ற பொருள் தான் உள்ளது. ஆன்மீகத் தமிழுக்கு முக்கியத்துவம் தந்த பக்தி இலக்கியமான தேவாரத்தில் 'தமிழன்' என்ற சொல் இடம் பெற்றுள்ளது.மொழி அடிப்படையிலான அச்சொல் நாட்டின் அடிப்படையில் குறிப்பிடப்படவில்லை.

தாம் குடியிருந்த பகுதியின் அரசர் சார்பான ( சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் போன்ற பல) அரசியல்  அடையாளங்கள் அடிப்படையில் அரசியல் அடையாளம் இருந்தது. தமிழ்நாட்டில் இந்திய விடுதலைக்குப் பின்னும் புதுக்கோட்டை, இராமநாதபுரம் போன்ற சமஸ்தானங்களில் கணிசமான மக்களிடம் தமிழர்/இந்தியர் போன்ற அரசியல் அடையாளங்களை விட, 'இராஜ விசுவாசம்' என்ற அடையாளமே வலுவாக இருந்தது. சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்னும், அதை எதிர்த்து பொராட்டங்களும் சில காலம் நடந்து ஓய்ந்த.

ஒரு மனிதருக்குள்ள அடையாளக் கூறுகள் இயக்கத்தன்மையில் செயல்படுவதாகும். அவர் பிறந்தது முதல் சாகும் வரை அவரைச் சுற்றி குடும்பத்திற்குள்ளும், சமூக வரலாற்றிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் அந்த இயக்கத் தன்மை மீது செல்வாக்கு செலுத்தும். 'தமிழர்' என்ற அடையாளம் நவீன வரலாற்றில் (Modern history) , அதன் தோற்றத்திலேயே சிக்கலுடன் தொடங்கியதை அடுத்து பார்ப்போம்.

----------------------------------------------