Saturday, September 30, 2017

      மார்க்சியமும் பார்ப்பனீயமும்(1)


நிலபிரபுத்துவ எதிர்ப்பு என்பதானது, நிலபிரபுக்களை எதிர்ப்பதையும்;

முதலாளித்துவ எதிர்ப்பு என்பதானது, முதலாளிகளை எதிர்ப்பதையும்;

ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதானது, ஏகாதிபத்தியர்களை எதிர்ப்பதையும்;
உள்ளடக்கியதாகும்.

'பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம்; ஆனால் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை' என்ற வாதத்தை, முதலில், தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியது அண்ணாவாகும்; நானறிந்த வரையில்.

'பெரியார் குறுகிய இனவாத அடிப்படையில் பிராமணர்களை எதிர்க்கிறார். நாங்கள் 'திராவிடர்' என்ற இனரீதியிலான சொல்லை விடுத்து, புவியியல் அடிப்படையிலான 'திராவிட' என்ற சொல்லின் அடிப்படையில் 'திராவிட முன்னேற்ற கழகம்' என்று செயல்படுகிறோம்; எனவே பிராமணர்களை எதிர்க்காமல், பிராமணீயத்தை எதிர்க்கிறோம்' என்ற வகையில் அண்ணா விளக்கம் கொடுத்து, பிராமணர்களையும் கட்சியில் சேர்த்து, தி.மு.க தொடங்கினார்.

அந்த பின்னணியில், தி.மு.கவிலிருந்து பிரிந்து, எம்.ஜி.ஆர் அ.தி.மு.க தொடங்கியபோது, எம்.ஜி.ஆரை 'மலையாளி' என்ற வட்டத்தில் நிறுத்தி எதிர்த்ததும்;

பின் அக்கட்சியின் தலைவரான ஜெயலலிதாவை, 'பாப்பாத்தி' என்ற வட்டத்தில் நிறுத்தி எதிர்த்ததும், மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை. ‘

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், அக்கட்சியை கைப்பற்றும் போக்கில், சசிகலா சார்பில் கீழ்வரும் கருத்தும் வெளியானது.

"இது திராவிடர் கட்சி, ஆரியர்கள் கட்சி அல்ல." என்று சசிகலாவின் தம்பி திவாகரன் கருத்து தெரிவித்து உள்ளார். (‘துணிச்சலுடன் அறிவுபூர்வமாக விவாதிக்கும் நோக்கில்; சசிகலாவின் தம்பி திவாகரனும், கணவர் நடராஜனும், பொது அரங்கு விவாதத்திற்கு முன் வந்துள்ளதை வரவேற்கிறேன்’; http://tamilsdirection.blogspot.sg/2017/01/blog-post_17.html )

அண்ணா பெயரில் உள்ள கட்சியில், அண்ணாவால் கைவிடப்பட்ட 'திராவிடர்' புதிதாக சசிகலா குடும்ப அரசியல் போக்கில் நுழைந்துள்ளதானது பொது நலனுக்கா? குடும்ப அரசியல் சுயநலனுக்கா? என்ற கேள்வியின் விடையானது, 'திராவிட' அரசியலுக்கு முடிவு கட்டினாலும் வியப்பில்லை.

ஒபிஎஸ் - ஈபிஎஸ் என்ற கூட்டு தலைமையானது, திராவிட அரசியலில் புதிதாக அரங்கேறியுள்ளது, அது நடைமுறையில் வெற்றி பெற்றால், புதிய ஆக்கபூர்வமான திசையில், 'திராவிட' அரசியலானது முன்னேறினாலும் வியப்பில்லை.

அவ்வாறு 'பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம்; ஆனால் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை' என்ற அண்ணாவின் வாதமானது, 'திராவிட' அரசியலில் மேலே குறிப்பிட்ட குழப்பத்தில் சிக்கியிருந்தாலும்;

கம்யூனிஸ்ட் கட்சிகளில் அந்த வாதமானது, முன்வைக்கப்படுகிறது.

நிலபிரபுத்துவ எதிர்ப்பு என்பதானது, நிலபிரபுக்களை எதிர்ப்பதையும்;
முதலாளித்துவ எதிர்ப்பு என்பதானது, முதலாளிகளை எதிர்ப்பதையும்;
ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதானது, ஏகாதிபத்தியர்களை எதிர்ப்பதையும்;
உள்ளடக்கியதாகும்.

'பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம்; ஆனால் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை' என்ற வாதத்தினை மார்க்சிய அடிப்படையில் முன்வைக்க முடியுமா?

மார்க்சிய ஆதரவாளர்கள் 'நிலபிரபுத்துவம், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம்' போன்ற சொற்களை பயன்படுத்துவதற்கான 'மார்க்சிய நியாயம்' எனக்கு புரிகிறது. ஆனால் அவர்கள் 'பார்ப்பனீயம்' என்ற சொல்லை பயன்படுத்தும் போது, அதற்கான மார்க்சிய நியாயமானது எனக்கு விளங்கவில்லை. அதற்கான விளக்கத்தை நான் பெறும் நோக்கில், இந்த பதிவை எழுதினேன்.

மார்க்சிய அடிப்படையில், சமூகம் தொடர்பான ஒரு சொல்லை பயன்படுத்தும்போது, அச்சொல்லானது;

பொருள் உற்பத்திமுறை (Mode of ProductIon), உற்பத்தி விசைகள்(Production Forces), உற்பத்தி உறவுகள் (Production relations), அவற்றிற்கிடையிலான முரண்பாடுகள் (Contradictions), உபரி உற்பத்தி (Surplus Product), உபரி உற்பத்தி அபகரிப்பு (Appropriation of Surplus Product), உபரி மதிப்பு (Surplus Value), அடித்தளம் (Base), மேற்கட்டுமானம் (Superstructure);

போன்றவை தொடர்பான மார்க்சிய குறிப்பாயத்தில் (Marxian Paradigm), அந்த சொல் எங்கே, எவ்வாறு இடம் பெற்றுள்ளது என்ற தெளிவான புரிதல் இருக்க வேண்டும்.

மார்க்ஸ், ஏங்கல்ஸ் போன்ற மார்க்சிய பிதாக்களின் படைப்புகளிலிருந்தோ, அல்லது அவர்களுக்குப் பிறகு, மார்க்சியத்தை வளர்த்துள்ளவர்களின் படைப்புகளிலிருந்தோ, அதற்கான நியாயங்கள் இருப்பதையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தியாவைப் பற்றி எழுதியுள்ள கட்டுரைகளில், காரல் மார்க்ஸ் 'பிராமணர்களை எதிர்க்காத பிராமணியம்' பற்றி ஏதேனும் எழுதியுள்ளதாக, எனது பார்வையில் படவில்லை.

மார்க்சியத்தில் பொருள் உற்பத்தி முறை என்ற கருத்தாக்கமானது, 'ஒருசீரான பொருள் உற்பத்தி முறை' (Homogeneous Mode of Production) என்ற அடிப்படையில் இருப்பதால், அதனை ஒரு சீரற்ற பொருள் உற்பத்தி முறை (Heterogenous Mode of Production) என்ற மாற்றத்திற்கு உட்படுத்தியே, இந்திய சமூக அமைப்பை ஆராய முடியும்;

என்ற வாதத்தினை, 'பெரியார்' இயக்கத்தில் இருந்த காலத்தில், நான் முன் வைத்தேன். மார்க்சியவாதிகள் எவரும் கண்டு கொள்ளவில்லை. பின்னர் இசை ஆராய்ச்சியில் திசை திரும்பிய பின்னும், ஆர்வமுள்ளவர்கள் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட தூண்டும் நோக்கில், அது தொடர்பான பதிவையும் வெளியிட்டேன். (http://tamilsdirection.blogspot.sg/2013/12/normal-0-false-false-false-en-us-x-none.html )

இன்றுள்ள சாதி அமைப்பானது காலனியத்தின் சூழ்ச்சியில் அறிமுகமானது தொடர்பான சான்றுகளையும் பதிவு செய்துள்ளேன். (‘ தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது, 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?’ ;  http://tamilsdirection.blogspot.sg/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html ) எனவே 'பார்ப்பான்', ' பிராமணன்' என்ற அடையாளத்தில் இடம் பெற்றுள்ள சாதிகள் எல்லாம், காலனிய ஆட்சியின் விளைவுகளாகும்.

தமிழில் 'பிராமணர்' என்ற சொல்லும், காலனிய நுழைவுக்கு முன் இருந்ததற்கு சான்றுகள், எனக்கு கிடைக்கவில்லை. சங்க இலக்கியங்களில் 'பிராமணன்' என்ற சொல் இல்லை;

'பார்ப்பார்', 'பார்ப்பான்','ஐயர்', ‘ஆரியர்’, என்ற சொற்கள் இருக்கின்றன.

இவை தவிர, 'அந்தணர்',  என்ற சொல்லும் இருக்கிறது. 'பார்ப்பான்', 'பார்ப்பார்' என்ற சொற்களும், மரியாதைக்குரியவர்கள் வரிசையில் இடம் பெற்றிருந்தது,

பிராமணர்களை இழிவுபடுத்தும் சொல்லாக, 'பார்ப்பான்' என்ற சொல்லை, 'பெரியார்' கொள்கையாளர்கள் பயன்படுத்துவதும், அச்சொல்லை இழிவாக கருதி, பிராமணர்கள் அச்சொல்லை தவிர்ப்பதும்ஒரே காலனிய சூழ்ச்சியில் இரு சாராரும், சிக்கியதன் விளைவுகளா? என்பதும் ஆய்விற்குரியதாகும். ( ‘ 'திராவிடர் கழகமும்', 'பிராமணர் சங்கமும்'; ஒரே காலனிய சூழ்ச்சியில் சிக்கிய, நாணயத்தின் இரு பக்கங்களா?’; http://tamilsdirection.blogspot.sg/2016/06/normal-0-false-false-false-en-in-x-none_8.html )

எனவே 'பார்ப்பனீயம்', 'பிராமணீயம்' போன்ற சொற்களை மார்க்சிய ஆதரவாளர்கள், இன்று அந்த சொற்களின் அடையாளத்தின் கீழ் உள்ள சாதிகளை குறிப்பதாக கருதி, பயன்படுத்துவது சரியா? மார்க்சிய குறிப்பாயத்தில் (Marxian Paradigm) அந்த சொற்களின் பயன்பாட்டிற்கு இடம் உண்டா? என்ற விவாதம் அரங்கேற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருதுகிறேன்அந்த விவாதத்தினை தவிர்த்து, 'பார்ப்பனீயம்' என்ற சொல்லை, மார்க்சிஸ்டுகள் பயன்படுத்தினால்;


அது 'பெரியாரிஸ்டுகளின்' தொடர்பால் தூண்டுவிக்கப்பட்ட (Induction), மார்க்சிய நியாயமற்ற‌ 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' மன நோயாகாதா? (http://tamilsdirection.blogspot.sg/2017/09/blog-post_20.html )

Tuesday, September 26, 2017

தனித்தமிழ்நாடு கோரிக்கையும், பொதுவாழ்வு வியாபாரமும்


'அடைந்தால் திராவிட நாடு, இன்றேல் சுடுகாடு' என்று அறிவித்து பயணித்தது தி.மு.க.

1960களில் பிரிவினையை  தி.மு.க கைவிட்டபோது, அண்ணா  'பிரிவினைக்கான காரணங்கள்' தொடர்கின்றன' என்று அறிவித்து, பிரிவினைத் தீயானது, அணையாமல் இருக்க வழி செய்து கொண்டார்.

அந்த பிரிவினை சூடானது, சாகும் வரை 'பெரியார்' ஈ.வெ.ராவின் பேச்சுக்கள்/எழுத்துக்கள் மூலமாகவும், தி.கவில் இருந்த சிலராலும் பாதுகாக்கப்பட்டு வந்தது.

பின் நெருக்கடி காலத்தில், தி.க. தலைவர் கி.வீரமணி ஆதரவு போக்கில் பயணித்த‌,  கும்பகோணம் ஸ்டாலின், கோவை.இராமகிருட்டிணன், இரத்தினகிரி உள்ளிட்ட பலர்,  இந்திரா காந்தியின்  நெருக்கடி ஆட்சி காலத்தில், தனித்தமிழ்நாடு கோரிக்கைக்கு சில முயற்சிகள் செய்து, தி.மு.க தலைவர் கருணாநிதிக்கும் அழுத்தம் கொடுத்தனர்.

முதல்வராயிருந்த கருணாநிதி, 'அமெரிக்காவின் ஆதரவுடன் தனித்தமிழ்நாடு' அறிவிப்பதை பரீசிலித்து, விவாதித்து, 'வியட்நாமில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு', அமெரிக்காவின் இராணுவ உதவியானது, இது போன்ற முயற்சிக்கு கிடைக்காது ' என்று கருத்து தெரிவித்திருப்பதை, 'வீக்கிலீக்ஸ்' வெளிப்படுத்தியுள்ளது. (http://www.thehindu.com/news/national/dmks-rajaram-asked-diplomat-whether-us-would-back-tamil-nadu-secession/article4599541.ece )

அதன்பின், அந்த சூடு அணையாமல் பாதுகாத்ததில், எனது பங்களிப்பும் இருந்தது.

'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு', 'வஞ்சிக்கப்படும் விவசாயம்', இரண்டுமே எனது தலைமையில் தொகுக்கப்பட்டு, தி.க வெளியீடுகளாக வந்தவையாகும். 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' கண்காட்சியானது, கி.வீரமணி ஆதரவுடன், தி.க சார்பில் செலவு செய்து, இரத்தினகிரி, புலவர் இமயவரம்பன் ஒத்துழைப்புடன், திருச்சி பெரியார் மாளிகையில் ஒரு குழு 'அர்ப்பணிப்பு' உணர்வோடு பணியாற்றி உருவாக்கியதாகும். 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' கண்காட்சியில், மின் இணைப்புகள் கொண்ட ஒவ்வொரு 'போர்டும்' ( Card Board with small bulbs) , அதன் உள்ளடக்கமும் (content), எனது மேற்பார்வையில் உருவானவையாகும்;

அதனை தமிழ்நாடெங்கும் கண்காட்சியாக நடத்தியதில் கோவை.இராமகிருட்டிணன் முக்கிய பங்கு ஆற்றினார்.

அறிவுபூர்வபோக்கிற்கு உணர்ச்சிபூர்வ போதைகள் கட்டுப்பட்ட திசையில் பயணித்த அந்த சூடானது, பின்னர் தடம் புரண்டு, ஏமாந்தவர்களை காவு கொடுத்து, 'அதிவேக அதீத' பணம் சம்பாதித்த, புதுப்பணக்காரர்கள் பலர் உருவாக காரணமானது. ('நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை'; http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html )

'வாழ்வியல் புத்திசாலிகளாக'(?) தாம் வாழும் இடத்தில், பணியாற்றும் இடத்தில் வெளிப்படும் எந்த அநீதிகளுக்கும் எதிராக குரல் கொடுத்து, 'சிறிய' இழப்புகளை கூட சந்திக்காமலும்;

ஆட்சியில் இருப்பவர்களை 'பகுத்தறிவு, இனநலன்' காரணங்கள் கூறி பாராட்டி, இயன்றவரை நேசமாக பயணித்துக் கொண்டே, ஆட்சியாளர்கள் புரியும் தவறுகளை தமக்கு நெருக்கமான வட்டத்தில் 'முணகி யோக்கியராக காட்சி' தந்து வாழ்பவர்கள் எல்லாம், 'திராவிடர்/திராவிட பொதுவாழ்வு வியாபாரத்தின்' சமூக அடித்தளம் ஆவார்கள்.

அவர்கள் எல்லாம் தமது நேர்மை வழிகாட்டிகளை அவ்வப்போது திருத்தி(?), 'வாழ்வியல் புத்திசாலிகளாக'(?) சாகும் வரை தமது சொத்து, வசதி, வாய்ப்புகளுக்கு எந்த 'சேதாரமும்' இல்லாமல், வளர்ந்து வாழும் போக்கும்;
 

1944இல் திராவிடர் கழகம் தொடங்கி, அதன்  தொடர்விளைவாக, உணர்ச்சிபூர்வ போக்கில் 1965 முதல் இன்றுவரை தீக்குளித்து மாண்ட, படித்த காலத்தில் கல்வியை தொலைத்து, 'போராட்டங்கள்' மூலமாக தமது வாழ்வையும் கெடுத்துக் கொண்ட‌ இளைஞர்கள் எல்லாம், பெரும்பாலும் முதல் தலைமுறையாக படிக்கத் தொடங்கிய, கிராம/ஏழை,நடுத்தர  'கூறற்ற அப்பாவி' பெற்றோர்களின் குழந்தைகளாக‌ 'சீரழிந்த' போக்கும்;

'ஒரே திராவிடர்/திராவிட சீரழிவின்' இரண்டு பக்கங்களாகும்.

இந்த உண்மையை வெளிப்படுத்தி, 'கூறற்ற அப்பாவி' பெற்றோர்களின் எண்ணிக்கையானது, தமிழ்நாட்டில் குறையும் போது;

மேலே குறிப்பிட்ட 'வாழ்வியல் புத்திசாலிகள்"(?) வளர்ச்சிக்கான சமூக செயல்நுட்பமானது தகர்க்கப்படும். அது நடக்காத வரையில், 'தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் காவலர்களாக' (?) வலம் வரும் 'பொதுவாழ்வு வியாபாரிகளை' ஒழிக்க முடியாது.

ஊழலையும், ஊழல் குடும்ப ஆட்சியையும் அரங்கேற்றிய தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி, தனித் தமிழ்நாடு கோரிக்கைக்கு புரவலராக இருந்து பயணித்ததைப் போலவே;

ஜெயலலிதா ஆட்சியில், பிரிவினைக்கட்சிகளின் புரவலராக  (சசிகலா) நடராஜன் பயணித்தார் என்பதை கீழ்வரும் சான்றானது வெளிப்படுத்தியுள்ளது.

‘MN is known for his pro-Tamil chants and secret funding to pro-Tamil groups in the state.   During the agitations in 2008 and 2009 against the Srilankan army - LTTE war, MN was found hobnobbing with pro Eelam groups so much so that he even participated in hall meetings and public rallies organised by the Pro-Tamil groups.’ ; http://whispersintamilnadu.blogspot.in/2011/12/sasikalas-ouster-m-natarajans-game-plan.html  .

அதாவது தமிழ்நாட்டில் ஊழல் பேராசையில் கிரானைட், தாது மணல், ஆறுகள், ஏரிகள், காடுகள் எல்லாம் சூறையாடப்பட்டு, அச்சுறுத்தியும் கொலை செய்தும் தனியார் சொத்துக்களை அபகரித்து, ஊழல் சுனாமியில் ஆங்கிலவழி தனியார் பள்ளிகள் பெருகி, தமிழ்வழிக்கல்வியையும், தமிழையும் சீரழித்து, தமிழில் எழுதவும், படிக்கவும் தெரியாத மாணவர்கள் அதிகரித்து வரும் போக்குகளுக்கு காரணமான பிதாக்களே, தனித்தமிழ்நாடு கோரும் பிரிவினைக் கட்சிகளின் புரவலர்களாக இருந்திருக்கிறார்கள்;

என்பதையே மேலே குறிப்பிட்ட சான்றுகள் உணர்த்துகின்றன. இந்திய விடுதலையை துக்க தினமாக 'பெரியார்' ஈ.வெ.ரா அறிவிக்க காரணமாக இருந்த, 'வடநாட்டு வணிக முதலைகள், மேல்நாட்டு வணிக வேந்தர்கள்'(குடிஅரசு 27.12.1948) போன்றோரை மிரட்டி, தமது செல்வத்தையும், வியாபாரத்தையும் 'திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்கள்' பெருக்கி வந்துள்ளது தொடர்பான சான்றுகள், ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன. 
  
மேலே குறிப்பிட்ட விளைவுகளுக்காக‌, 1965 முதல் தீக்குளித்து, போராடி படிப்பையும், வாழ்வையும் தொலைத்துக் கொண்டவர்கள் எந்தெந்த ஊரில், யார்? யார்? என்ற ஆய்வும்;(‘'திராவிடர்/தமிழர் சமூக‌ நீல வேல் மீன் விளையாட்டு' ;  http://tamilsdirection.blogspot.sg/2017/09/dravidartamizhar-social-blue-whale-game.html )

அந்த போக்கில், பிழைத்த 'புதுப்பணக்காரகள்' யார்? யார்? என்ற ஆய்வுமே;

தமிழ், தமிழர், தமிழ்நாடு தொடர்புடைய பிரச்சினைகள் எல்லாம், எவ்வாறு பொதுவாழ்வு வியாபாரத்திற்கு முதலில்லாத மூலதனமாக (Capital without investment)  பயன்பட்டு வருகிறது? என்ற சமூக செயல்நுட்பத்தை தெளிவுபடுத்தும்.

வசதி வாய்ப்புகள் குறைவான பின்னணியில் வளர்ந்து, பணக்கார வாழ்க்கைக்கான ஏக்கத்துடன்அகத்தில் 'சுயலாபக் கணக்குகளுடன்', புறத்தில் 'முற்போக்கு, புரட்சி' வேடங்களுடன் பயணித்து, மேலே குறிப்பிட்ட சமூக செயல்நுட்பம் மூலம், கிருமிகளாக உருவான‌ புதுப்பணக்காரர்களை, நான் அடையாளம் கண்ட பின்னர், அத்தகையோரை, எனது சமூக வட்டத்தில் இருந்து அகற்றி, அதற்கான விலையையும் வருத்தமின்றி கொடுத்து, வாழ்ந்து வருகிறேன்; இது போன்ற பதிவுகள் மூலம் சமூகத்திற்கான அபாய எச்சரிக்கைகளையும் அறிவித்து.

தாய்மொழி, தாய்மொழி நாடு உள்ளிட்டு ஒரு மனிதரின் வாழ்வியல் அடையாளக் கூறுகளின் மீட்சிக்கும், வளர்ச்சிக்கும் மெனக்கெடும் முதல் முயற்சியானது, அந்த மனிதரின் அகத்தில் தொடங்கி, புறத்தில் வெளிப்படுவதே ஆக்கபூர்வமான வெற்றிக்கு வழி வகுக்கும். அதற்கு மாறாக, தாய்மொழிப்பற்றை 'தாய்ப்பால் பைத்தியம்' என்று கேலி பேசி, அந்த வழிமுறையை 'பெரியார்' ஈ.வெ.ரா சீரழித்த போக்கில், அகத்தில் சீரழியாத அவரையும், அவர் போன்றவர்களையும் ஓரங்கட்டி, அகத்தில் சீரழிந்தவர்களின் பிடியில், 'தனித்தமிழ்நாடு' கோரிக்கையானது சிக்கி, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சீரழித்து விட்டது என்பது எனது ஆய்வு முடிவாகும். மீட்சிக்கான முயற்சியை, ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் தத்தம் அகத்திலிருந்து துவங்கினால் தான், மீட்சிக்கும் வழி கிட்டும்.

1983 சூலைக்குப் பிறகு, தமிழ்நாட்டில் தனித்தமிழ்நாடு கோரிக்கையை ஆதரித்து பேசியவர்கள்/எழுதியவர்கள் எல்லாம், முதலில் இந்தியாவும், பின்னர் உலக ஆதிக்க சக்திகளும் பின்னிருந்து இயக்கிய 'ஈழ விடுதலை பொம்மலாட்டத்தில்' வெளிப்பட்ட 'தனித்தமிழ்நாடு நகைச்சுவை காட்சிகளில்,  புரிந்தும் புரியாமலும் இடம் பெற்றவர்கள் ஆவர்; நானாயிருந்தாலும், யாராயிருந்தாலும்.

அந்த பொம்மலாட்டம் பற்றியும், அந்த நகைச்சுவைகள் பற்றியும் அறிவுபூர்வமாக விவாதிக்காமல்;

உணர்ச்சிபூர்வ போதையில், பெரும்பாலும் முதல் தலைமுறையாக படித்த கிராம பின்னணியுள்ள இளைஞர்களில் சிலர் ;

பெரும்பாலும் 1990 களில் பிறந்தவர்கள்; 

இப்போது குக்கிராமங்களிலும் ஆங்கிலவழி விளையாட்டுப்பள்ளிகள் ஊடுருவி விட்டதால், பின்னர் பிறந்தவர்கள் அது போன்ற 'தனித்தமிழ்நாடு' உணர்ச்சிபூர்வ போதையில் சிக்கும் வாய்ப்புகள் குறைந்து விட்டது;

தனித்தமிழ்நாடு போதையில் பயணிப்பதானது, ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் வெளிப்பட்டது.

அத்தகையோரில் வெளிநாட்டு நிதி உதவி என்.ஜி.ஓக்கள் உதவியில் பொதுவாழ்வு வியாபாரிகளாக பயணிப்பவர்கள் பற்றி, நான் கவலைப்படவில்லை. ஆனால் நேர்மையை இழக்காமல், விட்டில்பூச்சிகளாக எவரும் பலியாகிவிடக்கூடாது, என்ற கவலையில்;

உணர்ச்சிபூர்வ இரைச்சலற்ற அறிவுபூர்வ விவாதங்களை எதிர்நோக்கி, இந்த பதிவை எழுதினேன்.

1970களின் பிற்பகுதி முதல் 1990களில் இசை ஆராய்ச்சி நோக்கி, நான் திசை திரும்பிய இடைப்பட்ட காலத்தில்;

'பெரியார்' ஈ.வெ.ராவை இழிவுப‌டுத்திக் கொண்டே, தனித்தமிழ்நாடு ஆதரவு போக்கினை ஊக்குவித்த பெங்களூர் குணாவை, 'பெரியார் கொள்கையாளராக' இருந்து கொண்டே ஆதரித்த தவறிலும் சிக்காமல்;

'அண்ணாவை' ஏற்றுக் கொள்ளாமல், கேலி பேசிக் கொண்டே, தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நெருக்கமாகி, பலன்கள் அனுபவித்த இழிவு திசையில் பயணிக்காமலும்;

'சமரசமற்ற பார்ப்பன எதிர்ப்போடு கூடிய தனித்தமிழ்நாடு' ஆதரவு போக்கில், செயலளவில் பங்களித்து பயணித்து வந்துள்ளேன்.

நெடுமாறனைத் த‌விர்த்த மற்ற விடுதலைப்புலி ஆதரவாளர்களாக இன்று உள்ளவர்களைப் போலின்றி, 1983 சூலை இனப்படு கொலைக்கு முன்னேயே;

புதுக்கோட்டையில் ஜாமீனில் தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு, தி.மு.க கட்சி அலுவலகத்தில் தங்கியிருந்த ராகவனுக்கு நெருக்கமாகி, 'இலங்கைக் கொடுமைகள், தமிழருக்குப் பாடங்கள்' என்ற தலைப்பில், 'ஈழநேசன்' என்ற பெயரில், 'இலங்கைக் கொடுமைகள்' பற்றிய பகுதியை ராகவன் எழுத, 'வஞ்சிக்கப்படும்  தமிழ்நாடு' பற்றி நான் எழுதி, புத்தகமாக வெளியிட்டோம்; மிகுந்த, எதிர்பாராத வரவேற்புடன்.

பின் ராகவன் மூலம் மதுரையில் பிரபாகரனையும் சந்தித்தேன்.

புதுக்கோட்டையில் ராகவனை தி.க தலைவர் கி.வீரமணிக்கு அறிமுகம் செய்தேன். 'விடுதலை' இதழில், 'ஆசிரியருக்கு மடல்' பகுதியில் ராகவனின் ஈழ விடுதலை ஆதரவு மடலை, விடுதலை ராசேந்திரன் துணையுடன் வெளியிடச் செய்தேன். 1983 சூலை இனப்படுகொலைக்குப் பின், விடுதலைப் புலிகள் ஆதரவு கண்காட்சி முதலில் புதுக்கோட்டையில் நடந்தது. அந்த கண்காட்சிக்காக‌, மருத்துவ‌ விடுப்பில், மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகம் சென்று குறிப்புகள் எடுத்தேன். புதுக்கோட்டைக்கு அடுத்து மதுரையில் அந்த கண்காட்சி தொடர்ந்தது. அப்போது லண்டனிலிருந்து வந்து, மதுரையில் ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த பாலசிங்கத்தையும் அவரது (ஆஸ்திரேலியா) மனைவியையும், (தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் காலூன்ற முக்கிய காரணமான) பேபி சுப்பிரமணியம் எனக்கு அறிமுகம் செய்தார். அன்று முதல் நானாகவே பிரியும் வரை, பாலசிங்கத்துக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தேன். (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )
அன்று தமிழ்நாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில்;

'தமிழ் ஈழம் தனித்து வாழ முடியுமா' என்ற கட்டுரை நான் எழுதி, முதலில், பகுத்தறிவாளர் நாட்குறிப்பில் வெளிவந்து, பின் தனி வெளியீடாக‌ விற்கப்பட்டது. 'இது தான் ஈழப் பிரச்சினை' என்ற தலைப்பில் நான் 'கேள்வி‍- பதில்' வடிவில் எழுதிய புத்தகம்,  தி.க சார்பில் வெளிவந்தது. தனிமனித முக்கியத்துவத்தை தவிர்க்கும் நோக்கில், இவை போன்ற வெளியிடுகளில், என் பெயர்கள் போடுவதை நான் விரும்பவில்லை. எனவே நான் தான் அவற்றை எழுதினேன் என்பது, அந்த காலக்கட்டத்தில், எனது சமூக வட்டத்தில் இல்லாதவர்களுக்கு, தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது எவ்வளவு பெரிய தவறு? என்பதை, பின்னர் 'திருச்சி பெரியார் மையம்' மூலம் அடையாளம் கண்ட 'பெரியார் சமூக கிருமிகளிடமிருந்து' பாடம் கற்றேன்.


எனது அறிவு, அனுபவ அடிப்படைகளில், நான் 'பெரியார் சமூக கிருமிகளாக' அடையாளம் கண்டவர்களில்;

1944இல் இளைஞர்களாயிருந்து, 1970களின் கடைசியில் நான் பெரியார் இயக்கத்தினுள் நுழைந்து, எனக்கு அறிமுகமானவர்களில் எவரும் கிடையாது. 1947க்குப் பின் வசதியான/வசதி குறைவான குடும்பங்களில் பிறந்து, ஒழுங்குடனும், பொறுப்புடனும் நன்கு படித்து, பெரியார் ஆதரவாளர்களாக, வளர்ந்தவர்களில் எவரும் கிடையாது. வசதி குறைவான குடும்பத்தில் பிறந்து, படிக்கிற காலத்தில் 'காலித்தனமாக' இருந்து கொண்டு, அல்லது 'காலிகளின் வால்கள் நண்பர்களாக' இருந்து கொண்டு, 'பெரியார்'' ஆதரவாளர்களாக, வாழ்வை 'அனுபவித்து', அதன் மூலம் பெற்ற‌ 'அறிவின்' துணையோடு, 'திராவிட அரசியல் கொள்ளைக் கும்பலுடன்' கூட்டு சேர்ந்து, 'குறுக்கு வழிகளில்', 'பெரியார் சமுக கிருமி' செயல்நுட்பத்தில், 'அதிவேக பணக்காரர்களாவதோடு, தமது சமூக வட்டத்தில், அந்த 'தனித்துவமான' கள்வர் நோயையும், அவர்கள் பரப்பி வருகிறார்கள்; சமூகத்தில் உள்ள அறிவுக்கு எதிரான உணர்ச்சிபூர்வ போக்குகளின் துணையோடும், ('ஊழல் எதிர்ப்பு அலையில்' மோடி பிரதமரான பின்னரும்) அரசின் ஊழல் ஒழிப்பில் உள்ள ஓட்டைகளின் துணையோடும் (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.html )

1983 முதல்  ராஜிவ் கொலைக்குப்பின்,  'ராஜிவ் கொலைகளும் சதிகளும்' நூல் வெளியிட்டு இசை ஆராய்ச்சி நோக்கி, முழுமையாக திசை திரும்பியது வரை, நான் சந்தித்த பொதுவாழ்வு அனுபவங்களை தொகுத்து எழுதவும் திட்டமிட்டுள்ளேன்; எனது அளவுக்கு தி.க, மனித உரிமை, ஈழவிடுதலை, நக்சலைட், போன்ற அமைப்புகளின் உயர்மட்டங்களில் அனுபவம் உள்ள நபர்கள் தமிழ்நாட்டில் இருப்பது அரிது என்ற காரணத்தினால்.

அந்த அடிப்படையிலேயே ஜல்லிக்கக்கட்டு ஆதரவு போராட்டம் தொடர்பாக, பின்வரும் பதிவையும் வெளியிட்டேன்.

‘'The Godfather'  ( https://en.wikipedia.org/wiki/The_Godfather_(novel) ) மற்றும் 'The Aquitaine Progression' (https://en.wikipedia.org/wiki/The_Aquitaine_Progression ) ஆங்கில நாவல்களை படித்தவர்களால், 'ஜல்லிக்கட்டு எதிர்ப்பு' போராட்டத்தில், முதல்வரையும், பிரதமரையும்,இழிவுபடுத்திய, போராட்டத்தில் 'ஊடுருவிய'  'சுயநல சக்திகள்' பற்றியும், 'பீட்டா' அமைப்பின் சர்வதேச சூழ்ச்சி பற்றியும் (http://www.nathanwinograd.com/?cat=10 ), அந்த 'சூழ்ச்சிகள்' தெரியாமல், அந்த 'உணர்ச்சிபூர்வ' போக்கில், 'ஜல்லிக்கட்டு எதிர்ப்பு' போராட்டத்தில்,  'நிதானம்' தவறி, 'உளறியவர்கள்' பற்றியும், விளங்கிக் கொள்ள முடியும். 10 வருடங்களுக்கு மேலாக போராடி வரும் போராட்டக் குழுவின் விளக்கத்தை ஏற்காமல் (https://www.youtube.com/watch?v=TpNSc32jLew ) ; வன்முறைகளுக்கு இடம் கொடுத்து, மறுநாள் 'நீதியரசர் ஹரி பரந்தாமன் ஜல்லிக்கட்டு சட்டம் பற்றி விளக்கிக் கூறியதை அடுத்து மாணவர்கள் மெரினா போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.'(http://tamil.thehindu.com/tamilnadu/) என்பதும் கவனிக்கத்தக்கதாகும்; 1965 திசை திருப்பல் முயற்சியானது, முளையிலேயே, நல்ல வேளையாக ஒரு நாளிலேயே முடிவுக்கு வந்ததும்.’ (1938  -  1965  -   2017’; http://tamilsdirection.blogspot.sg/2017/01/1938-1965.html )

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் தீர்வை விட, மத்திய மாநில அரசுகளை எதிர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்திய, 'தனித்தமிழ்நாடு' உணர்ச்சிபூர்வ போதையாளர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறையாக படித்த கிராம பின்னணியுள்ள இளைஞர்களில் சிலர் என்பது எனது கருத்தாகும். அவர்கள் பெரும்பாலும் 1990 களில் பிறந்தவர்கள்; இப்போது குக்கிராமங்களிலும் ஆங்கிலவழி விளையாட்டுப்பள்ளிகள் ஊடுருவி விட்டதால், பின்னர் பிறந்தவர்கள் அது போன்ற 'தனித்தமிழ்நாடுஉணர்ச்சிபூர்வ போதையில் சிக்கும் வாய்ப்புகள் குறைந்து விட்டது.

தீர்வை நோக்கிய குவியத்தை கெடுக்கும், இவை போன்ற கட்சிகளிடம் எச்சரிக்கையுடன் இல்லாத சமூகமானது, அதற்கான பாதக விளைவுகளிலிருந்து தப்ப முடியாது.   மூகத்தில் உணர்ச்சிபூர்வ பேச்சுகள் என்பவை மூலம், சமுகத்தில் சமூக எரிவாயுவை நிரப்பலாம். அதன்பின் எந்த பக்கத்திலிருந்தும்,  ‘வன்முறைஎன்ற  தீக்குச்சியைக் கொளுத்தி போட்டு, சாதி, மதக்கலவரங்களை உண்டாக்குவது எளிது. பின் எதிரெதிர் பக்கங்களில் சார்பு நோயில் சிக்கி, அதே பாதிப்புகள் அடுத்து அடுத்து சமூக எரிவாயுவை நிரப்பவும், தேவைப்படும் சமயங்களில் சாதி, மத கலவரங்களை தூண்டவும் பயன்படும். முதுகளத்தூர் கலவரத்தில் தொடங்கி, அடங்கிய அந்த சூழ்ச்சியானது, 1967 ஆட்சி மாற்றத்திற்குப் பின், கீழ்வெண்மணி தொடங்கி, இன்றுவரை வெவ்வேறு பகுதிகளில் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் தொடர்ந்து நிகழ்கின்றனபின்னிருந்து இயக்கி வரும் உள்நாட்டு/வெளிநாட்டு சுயநல சக்திகள் எல்லாம், இன்றுவரை பாரபட்சமற்ற அறிவுபூர்வ விவாதத்திற்குள்ளோ, விசாரணை வளையத்திலோ சிக்காமல்.( http://tamilsdirection.blogspot.sg/2016/06/blog-post_19.html )

சர்வதேச அரசியல் பொருளாதார சூழ்ச்சிகள் பற்றியும், தனிநாடு போராட்டங்கள் அந்த சூழ்ச்சி வலையில் சிக்கி பயணிப்பதில் உள்ள ஆபத்துகளும், தமிழ்நாட்டில் அறிவுபூர்வமாக விவாதிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்களில் பிரிவினைக் கட்சிகளில் பயணித்தவர்கள் எல்லாம், பா..கவில் சேர்ந்து வரும் போக்கும், அஸ்ஸாம் தேர்தலில் வெற்றி பெற்று இன்று முதல்வராக இருக்கும் போக்கும், ஏற்கனவே பா..கவில் இருந்தவர்களில் பலர், அத்தகையோருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றி முணகும் போக்கும்;

அந்த போக்குகள் எல்லாம் சுயநல போக்கா? அல்லது தத்தம் தாய்மொழி, தாய்மொழி நாடு போன்றவற்றை ஆக்கபூர்வமாக வளர்க்கும் போக்கா? என்ற கேள்விகளும், மேற்குறிப்பிட்ட ஆய்வுகளில் இடம் பெறும் நேரமும் வந்து விட்டது, என்பதும் எனது கருத்தாகும்

காலனி ஆட்சிக்கு முன், தமிழ்நாடானது பல மன்னர்களின் ஆட்சிகளில் இருந்தது. தாய்மொழி நாடான தமிழ்நாடானது, தமிழர்களுக்கு ஒரே தாய்நாடாக இல்லை.

காலனி ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பின், இன்று தமிழ்நாடானது, தமிழர்களின் ஒரே தாய்மொழி நாடாக இருப்பதும், அந்த தமிழ் தாய்மொழிநாடானது, இந்தியா என்ற தாய்நாட்டில் இருப்பதும், காலனி ஆட்சிக்கு எதிரான போக்கில், வெளிப்பட்ட ஒற்றுமையால், வரலாற்றில், சிற்சில குறைபாடுகளுடன், ஏற்பட்ட விளைவாகும்

தாய்மொழிநாடாகவும் தனி தாய்நாடாகவும் இருந்த சிக்கிம், சீனா வசம் சிக்கி திபெத்தைப் போல சீரழியாமல், 1970களில் இந்தியாவுடன் இணைந்து, இன்று உலகின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு நம்பமுடியாத அளவுக்கு முன்னேறி இருப்பதும், கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். (http://eco-friendly-india-solutions.com/sikkim-indias-first-organic-state/ )

ஒரு தாய்மொழிநாடானது தனி தாய்நாடாக இருப்பதும், அல்லது ஒரே தாய்நாட்டில் உள்ள பல தாய்மொழி நாடுகளில் ஒன்றாக இருப்பதும்;

அந்த ஒற்றுமைக்கான வரலாற்று ரீதியிலான பாரம்பரிய, பண்பாட்டு கூறுகளையும், சர்வதேச அரசியல் தொடர்பான வரலாற்றுப் போக்குகளையும் பொறுத்த ஒன்றாகும்.

'வந்தது வளர்த்து, வருவது ஒற்றி' என்ற சிலப்பதிகார (அரங்கேற்று காதை) வரிகள் உணர்த்தியபடியும்;

தனித்தமிழ்நாடு கோரிக்கையானது, தாய்மொழி நாடாகிய தமிழ்நாட்டை சீரழித்த அரசியல் தாதாக்களின் கருவியாக பயன்பட்டு வந்துள்ள பின்னணியில்;

அஸ்ஸாம் வழியில் தமிழ்நாடு பயணிப்பதே புத்திசாலித்தனமாகும்தமிழையும், தமிழ் உணர்வினையும் பிரிவினைக் கட்சிகளின் 'ஏகபோகமாக' கருதிக் கொண்டுதிராவிடர்/திராவிட/தமிழர் கட்சிகளில் சுயலாப நோக்கமின்றி பயணித்த தியாகிகளையும், பொதுவாழ்வு வியாபாரிகளாக பயணித்தவர்களையும் பிரித்து அணுகும் அறிவுபூர்வ பார்வையின்றி, ஒன்றாக கருதி கண்டிக்கும், இழிவுபடுத்தும் போக்கில், தமிழக பா..கவின் முக்கிய தலைவர்களே சிக்கி, பயணிப்பது மாறாத வரையில், அதற்கும் வாய்ப்பிருக்காது, என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

மேற்கத்திய வரலாற்றுப் பின்னணியில் உருவான 'நேஷன்' (Nation), மற்றும் 'நேஷ்னலிசம்' (Nationalism) போன்றவற்றை, தமிழில் 'தேசம்' மற்றும் 'தேசியம்' என்று இறக்குமதிகள் செய்து, அந்த கருத்தாக்கங்களின் அடிமைகளாகவும், இந்திய மொழிகளையும், பாரம்பரிய பண்பாடுகளையும் இழிவாகவும் கருதி, பயணிப்பவர்களுக்கு (‘Are the seculars & liberals in India, losing the hopes for social survival? The Semantic Trap of the ‘Western Paradigm Prison’ ; http://veepandi.blogspot.sg/2017/07/ );

இவை எல்லாம் புரியாத புதிர்களாக இருந்தால், வியப்பில்லை.

அனைத்து அரசியல் கட்சிகளும், மத்திய மாநில அரசுகளும் 'மெளன சாட்சிகளாக'  பயணித்த சூழலில்;


சட்டபூர்வ கண்காணிப்புகள், பாதுகாப்புகளை செல்லாக்காசாக்கி, 'மர்மமான' மரணத்திற்குள்ளான முதல்வர் ஜெயலலிதா புண்ணியத்தில்;

ஆதாய அரசியலின் குவியமான‌ 'சசிகலா குடும்ப அரசியல்' (action) எதிர்வினையாக (reaction);

சுயலாப நோக்கின்றி ஜெயலலிதா மீது பாசம் கொண்ட நடுத்தர, ஏழைகளாக இருந்த மக்களிடமிருந்தும், அடிமட்ட கட்சித் தொண்டர்களிடமிருந்தும், மீடியா வெளிச்சத்திற்கு வராத, 'சுயலாப நோக்கற்ற சுயமரியாதை மீட்சி அரசியல்' வெளிப்பட்டு வளர்ந்த‌ போக்கில்;

அரசியல் பரமபதத்தில் சசிகலாவும், ஸ்டாலினும் தற்கொலைப் போக்கில் விளையாடியதன் பலனாக; (http://tamilsdirection.blogspot.sg/2017/08/blog-post_27.html )

முள்ளைக் கொண்டே முள்ளை அகற்றும் செயல்நுட்பமானது உச்சக்கட்டத்தில் (climax) உள்ளது.

எனவே 'தனித்தமிழ்நாடு கோரிக்கை' உள்ளிட்ட பொதுவாழ்வு வியாபாரங்கள் முடிவுக்கு வரும் காலமும்,  அதிக தொலைவில் இல்லை. (http://tamilsdirection.blogspot.sg/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )


குறிப்பு :

மண்ணோடு பற்றற்ற ஐரோப்பிய கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் இலங்கை தமிழர்களிடையே உருவான போக்கிற்கு;

தமிழ்நாட்டில் இயற்கை கனி வளங்களை சூறையாடிய 'ஊழல்' கொள்ளையர்களை எதிர்க்காமல், 'மண்ணோடு பற்றற்ற தனித்தமிழ்நாடு’  கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் உருவான போக்கானது;

எந்த அளவுக்கு பங்களிப்பு வழங்கியுள்ளது? என்ற ஆய்விற்கு;

மேலே குறிப்பிட்ட, தமிழ்நாட்டில் முளை விட்டு ' தடம் புரண்ட‌' பிரிவினை போக்கும், இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக' 'பாதை மாறிய' பிரிவினைப் போக்கும்;


1980களில் சங்கமமான சமூக செயல்நுட்பத்தினை ஆராய்வதும் அவசியமாகி விட்டது.’; http://tamilsdirection.blogspot.sg/2017/02/blog-post_19.html