Wednesday, December 31, 2014



           தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும்

                           ‘திராவிடச் சிக்கல்கள்’



இந்துத்வா கட்சிகளில் உயர்பதவிகளில் பிராமணரல்லாதோர் வரமுடியாது என்ற பிரச்சாரத்தை முறியடித்தவர், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மோடி.

மத்தியிலும் தனிமனித பலகீனங்கள் உள்ள அரசியல் வாதிகளின் செல்வாக்கில் வளர்ந்து, உச்சக்கட்டத்தை, லட்சக்கணக்கான கோடி ஊழல்களில் தொட்டு, அத்தகைய ஊழல் பெருச்சாளிகள் செல்வாக்கிலிருந்து பெருமளவில் விடுப்பட்டவர்களிடம் , மோடி தலைமையில், ‘புதிய' மத்திய ஆட்சி தொடங்கியுள்ளது.எம்.ஜே.அக்பர் போன்ற இந்துத்வா எதிர்ப்பு எழுத்தாளர்களும் மோடி  ஆதரவாளர்களாக மாற (http://www.youtube.com/watch?v=8KD8dSioiKU),  பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. வாஜ்பாய்  ஆட்சியானது, 'கூட்டணியில்' சிக்கி தவித்த ஆட்சியாகும். இந்திய விடுதலைக்குப் பின், முதன் முதலாக, தனிமனித பலகீனங்கள் செல்வாக்கு செலுத்த முடியாத, மத்திய ஆட்சியானது, இந்தியாவில் மோடியைப் பிரதமராகக் கொண்டு, வலுவான தனிப் பெரும்பான்மையுடன்  செயல்படத் தொடங்கியுள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் தர அடையாளம் உயரத் தொடங்கியுள்ளது என்பதை, உலக வர்த்தக அமைப்பு(WTO), மற்றும் உலக ஊழல் நாடுகள் தரவரிசைப் பற்றிய தகவல்களும் உணர்த்துகின்றன. 

30 வருட பொது வாழ்வில் ஊழல், வேண்டியவர்களுக்கு சலுகை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு கூட உள்ளாகாதவர் பிரதமர்  மோடி என்று இந்துத்வா எதிர்ப்பாளராகிய 'OUTLOOK' ஆசிரியர் வினோத் மேத்தா கருத்து தெரிவித்துள்ளார். (“He is dynamic, clean, keen to introduce change and in three decades he has been in public life, corruption or nepotism has not touched him. I could go on singing his praises and risk being expelled by the secular fraternity.”- Vinod Mehta on “Which Way Will He Turn?” http://www.outlookindia.com/)    (http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_11.html)

மோடி,  தமது தாய்மொழி குஜராத்தியின் நலன்களையும், தமது மாநில அடையாளமான குஜராத்தியர் நலன்களையும், குஜராத் மாநில நலன்களையும் பாதுகாத்து, வளர்த்து, இந்திய தேசியத்துடன் ஒத்திசைந்த(harmonious) உறவைப் பேண முடியும் என்று நிரூபித்துள்ளதானது,  தமிழ்நாட்டிற்கு மிகவும் முக்கியமான முன்னுதாரணமாகும்.

இந்திய தேசியத்தைப் பகையாய் கருதிய திராவிடர் கழகத்திலிருந்து தோன்றிய, திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்வழி மரணப் பயணத்திற்குள்ளானதோடு, தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்களாகிய ஏரிகளையும், குளங்களையும், மலைகள், மணல், தாது மணல் உள்ளிட்ட கனிம வளங்களையும் சூறையாடி, தனி மனித உறவுகளில் லாபநட்டம் பார்க்கும் கள்வர் (திருக்குறள் 813) நோயில் தமிழக மக்களைச் சிக்க வைத்து, குடும்பம்,நட்பு உள்ளிட்ட மனித உறவுகளை சிதைத்து வரும் பாதிப்புகளையும், தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியையும், அனுபவபூர்வமாக உணர்ந்து வருபவன் நான்.

குஜராத்தில் மோடி நிரூபித்துக் காட்டிய‌ வழியில் , தமிழ்வழிக் கல்வியை மரணப்பயணத்திலிருந்து மீட்டு, தமிழர் நலன்களையும், தமிழ்நாட்டின் நலன்களையும் மீட்க முடியும் என்ற நம்பிக்கைக்கு இடம் இருக்கிறது. கீழ்வரும் தகவல் அதற்கு வலிவூட்டுகிறது.

ஆர்.எஸ்.எஸ் ஆதரவு சிந்தனையாளர் குழு(Think Tank), வரும் கல்வி அண்டு முதல் அமுல்படுத்த, ஒரு புதிய கல்வித் திட்டத்தை உருவாக்கி வருகிறார்கள். அதில் இந்தியா முழுவதும் உள்ள குழந்தைகள்  எட்டாம் வகுப்பு வரை, தமது தாய்மொழியிலேயே படிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். ஊடகத்தில் வெளிவந்துள்ள அத்தகவலின்படி, மோடி ஆட்சியில், தமிழ்நாட்டில் மத்திய அரசு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் தாய்மொழித் தமிழ்வழிக்கல்வியில் தான், தமிழர் குடும்பப் பிள்ளைகள் படிப்பதற்கான சாத்தியம் உள்ளது. ஊழலற்ற, சாதி, மத அடிப்படைகளில் பாரபட்சமற்ற, குஜராத் மாதிரி ஆட்சியும்,  தாய்மொழிக் கல்வியும் உறுதியானால், தமிழ்நாட்டின் நலனுக்கு, பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பதே நல்லது என்பது என் கருத்து.('தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (8) தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள்';
http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_19.html) 

மோடிக்கு வெளிப்பகையை விட உட்பகையே இன்னும் வலிவாகத் தொடர்கிறதோ, என்ற கேள்வியைக் கீழ்வரும் தகவல் எழுப்புகிறது.

இந்துத்வா/மோடி எதிர்ப்பு இதழ் ‘Times of India’  நடத்திய 'சர்வே'யில், இந்தியாவில் 75% சதவீத மக்கள் மோடியின் ஆட்சியை நன்றாக உள்ளது எனவும்,2/3 தகவு மக்கள் அரசு நாட்டின் வளர்ச்சி மீதும், பொருளாதாரத்தின் மீதும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்கள். (Times of India Dt. 1st Jan, 2015 ‘Faith in Narendra Modi govt high, but Sangh hotheads a concern: TOI survey’) 


இந்தியாவில் மதத்தின் பேரில் 'சட்டம் ஒழுங்கு' பிரச்சினையை ஏற்படுத்தும் இந்து மத வேறியர்களும், 'பயங்கரவாதிகளை' ஆதரிக்கும் முஸ்லீம் மத வெறியர்களும், வெளிநாட்டு நிதி உதவியுடன் போலி மனித உரிமை, சமூக சேவை, முகமூடிகளுடன் சமூக ஒற்றுமையைச் சிதைக்கும் கிறித்துவ  NGOS-என்.ஜி.ஓக்களும்-  மோடியின் ஆட்சிக்கு எதிரிகள் என்பதை விட, இந்திய நாட்டின் நலன்களுக்கு எதிரிகள் என்று அடையாளம் காண்பதே சரியாகும். 

தமக்குக் கிடைத்த வெற்றியையும், செல்வாக்கையும், மற்ற தலைவர்களைப் போல 'தனிமனித வழிபாடு' போக்கிற்கு பயன்படுத்துவதை விட, மக்கள் பங்கேற்புடன் கூடிய மாற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில் மோடி செயல்படுவது கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும். நாடகத்திற்கு செய்ததாக வைத்துக் கொண்டாலும், 'அப்பா அம்பானி' செய்திருப்பாரா? என்ற கேள்வியை எழுப்பும் வகையில், 'மகன் அம்பானி' துடைப்பதைக் கையில் ஏந்தி கோவிலைச் சுத்தம் செய்திருக்கிறார். இந்திய விடுதலைக்குப் பின், முதல் முறையாக 'தூய்மை இந்தியா' திட்டம் மூலம், மக்களை ஜனநாயக முறைக்கு உட்படுத்தும் (inclusive process)  முயற்சியானது, பிரதமர் மோடியால் துவங்கப்பட்டுள்ளது. " civic participation is critical for democracies to function" - Robert D.Putnam  ' Making Democracy Work: Civic Traditions in Modern Italy'

'பெரியார்' காமராசரை ஆதரித்த திசையில், வட இந்தியாவில், இந்துத்வாவை எதிர்த்த நற்புகழுள்ள(highly reputed)  எழுத்தாளர்களும், முஸ்லீம் அறிஞர்களும் மோடியைப் பகிரங்கமாக ஆதரித்து வருகிறார்கள். நான் சந்திக்கும், 'சுயலாப நோக்கற்ற' 'பெரியார்' ஆதரவாளர்களும், அதே போல மோடியை ஆதரித்து என்னிடம் கருத்து தெரிவித்துள்ளார்கள்.


'சமூகத்தில் நடந்து வரும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து, தமது நிலைப்பாடுகளை மக்கள் நலன் நோக்கில்(உடல்.மனம் பிறர் சாரா போக்கில்- physically & mentally independent-  இருந்தது வரையில், 'பெரியார்' செய்தது போல) 'திருத்திக் கொள்ளாமல்' பழைய திசையிலேயே பயணிக்கும் 'பெரியார்' ஆதரவு கட்சிகளெல்லாம் உதிர்ந்து, தமிழ்நாட்டின் வரலாற்றில் 'இழிவான இடம்' பிடிக்க போட்டி போடும் நிலை வந்தால் வியப்பில்லை. 'பெரியாரின்' முழு பொதுவாழ்வையும், அவரின் தியாகங்களையும் கணக்கில் கொள்ளாமல், அவரைப் பற்றி 'இழிவாக', 'திராவிட உணர்ச்சிபூர்வ பாணியில்' பேசி/எழுதி வரும் 'இந்துத்வா' ஆதரவு பேச்சாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், 'பெரியார்' கட்சிகள் 'நன்றி' சொல்லவேண்டும். ஏனெனில் மேற்குறிப்பிட்ட தவறான திசையில் பயணிக்கும் 'பெரியார்' கட்சிகளுக்கு, 'ஆக்ஸிஜன்' வழங்கி,  'உயிருடன்' நீடிக்க உதவி வருபவர்களும் அவர்களே ஆவர்.

இத்தகைய சிக்கலான சூழலில்,  தமிழக பா.ஜ.க, மேற்குறிப்பிட்ட திசையில், தமிழ்நாடு மீள உதவும் திசையில் பயணிக்கிறதா? என்ற கேள்வியும் ஆய்விற்குரியதாகும். 

அந்த நோக்கில்,தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும் சிக்கல்கள் பற்றி அடுத்து பார்ப்போம்.  
        
"அரசியல் கட்சிகளிடம் தொடர்பற்ற சாதாரணத் தமிழர்களின் எண்ணிக்கை அபரீதமாக அதிகரித்து வருவது பற்றியும், கல்லூரி மாணவர்களிடையே 'இந்தியர்' என்ற அடையாளம் வலுவாகி வளர்ந்தாலும், 'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவை மிகவும் வருத்தப்படும் அளவுக்கு வீழ்ந்து வருவது பற்றியும், தமிழ்நாட்டில் கவலை இருப்பதாகத் தெரியவில்லை." என்பதை ஏற்கனவே பார்த்தோம்.( ‘இந்தியாவில் ‘வித்தியாசமான’ தமிழ்நாடு’ ;
http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_29.html  )

"தமிழ்நாட்டில் பா.ஜ.க உள்ளிட்டு அனைத்து கட்சிகளும் நடத்திய பொதுக் கூட்டங்களில் அதிக அளவில் பங்கேற்காத படித்த இளைஞர்கள்,  திருச்சியில் நடந்த மோடி பேசிய கூட்டத்தில் பணம் கொடுத்து நுழைவுச் சீட்டு பெற்று,  பங்கேற்றது ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய ஒன்றாகும்." என்பதையும் அதில் பார்த்தோம்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில், குடும்பக் கட்சிகளையும், தி.மு.கவுடன் ஏற்கனவே கூட்டணி வைத்திருந்த கட்சிகளையும் ஒதுக்கி, மற்ற சிறிய வட்டாரக் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைத்து,பா.ஜ.க களமிறங்கியிருந்தால், திருச்சி உள்ளிட்டு (அந்த அளவுக்கு மறைந்த திருச்சி எம்.பி மோகன் குமாரமங்கலத்தின் பேரில் இன்றும்  மதிப்பு குறையாமல் உள்ளது) கூடுதல் தொகுதிகளில் வென்று, வாக்கு சதவீதத்தையும் கூட்டியிருக்க முடியும் என்பது என் கணிப்பு ஆகும். கடந்த பாராளுமன்ற தேர்தலிலும், 14 தொகுதிகளில் போட்டியிட்டு, விஜயகாந்த கட்சி பெற்ற வாக்குகளை விட, கூடுதல் வாக்குகளை, 7 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட பா.ஜ.க பெற்றுள்ளதும் கவனிக்கத் தக்கதாகும்.

தமிழ்நாட்டில் மக்களிடம் அதிக செல்வாக்குள்ள ஒரே தலைவர் ஜெயலலிதா என்றாலும், அவரைத் தவிர்த்து, மற்றவரெல்லாம் ஒன்றுமில்லை எனும் அளவுக்கு அவரது கட்சியும், ஆட்சியும் உள்ளது. அவர் சிறை சென்ற போது, பொது மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்திய வன்முறைகளும், மீடியாக்களில் வரும்,  உள்ளூர் மக்கள் கேலி பேசும் அளவுக்கு பணம் கொடுத்து, கோவிலில் மொட்டை போடுதல் உள்ளிட்ட வழிபாடுகளுக்கு, (உண்மையாக செய்பவர்கள் இருந்தாலும்) எண்ணிக்கையைக் கூட்டிக்காட்டி வரும் நிகழ்ச்சிகளும், வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படி எதிரொலிக்கும் என்று சரியாகக் கணிக்க முடியாது.

"முள்ளி வாய்க்கால் போரின் போதும், அதற்குப் பின்னும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்களிடையே, அவை அவர்களின் உரையாடலில் கூட இடம் பெறவில்லை. அதே போல்,  ஜெயலலிதா சிறைக்கு சென்ற பின்னும், தமிழ்நாடெங்கும் போராட்டங்கள் நடந்த ஊடகச் செய்திகள் அவர்களின் உரையாடலில் கூட இடம் பெறவில்லை.அந்த அளவுக்கு தமது கல்வி, வேலைவாய்ப்பு, சினிமா. கிரிக்கெட், காதல், பலவகையான பொழுது போக்குகள் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி, 'அந்நியமாக' வாழ்வதும், குறைந்த அரசியல் காற்றழுத்தத் தாழ்வு மண்டிலத்தின் அறிகுறிகளா? என்பதும் ஆய்விற்குரியதாகும்." என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

மோடி பிரதமராகி, மத்தியில், லஞ்சத்திற்கு இடமில்லாத வகையிலும், உயர் அதிகாரிகள் உள்ளிட்டு அனைவரும் குறித்த நேரத்தில் அலுவலத்திற்கு வந்து பணியாற்றுவதும், கோப்புகள் தாமத்திற்குள்ளாகதவாறு கண்காணித்து, முடிவுகள் எடுக்கப்படுவதும், உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு கூடி வருவதும் மீடியாக்கள் மூலமாக மோடி அலையின் வலிமையைக் கூட்டி வருகிறது. அதன் விளைவாய், தமிழ்நாட்டில் உள்ளதைப் போல், மிகவும் மக்கள் செல்வாக்கு இல்லாத கட்சியாக இருந்த பா.ஜ.க, அரியானாவில் ஆட்சியைப் பிடித்தது. மகராஷ்ட்ர மாநிலத்திலும், செல்வாக்குடன் இருந்த சிவசேனாவைப் பின்னுக்குத் தள்ளி,  ஆட்சியைப் பிடித்தது. நம்பமுடியாத அளவுக்கு காஷ்மீரிலும் வலிமையான இடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்ததன் மூலம், தமிழ்நாட்டு ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதும் ஆய்விற்குரியது.

அது மட்டுமல்ல, வாக்காளர்களை விலைக்கு வாங்கி, அதீத வித்தியாசத்தில் வெற்றி ஈட்டிய 'திருமங்கலம் ஃபார்முலா'வை நம்பி, செயல்பட்ட தி.மு.க ஆட்சியை இழந்தது. அதன்பின் வந்த ஆட்சியில், மற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும், வேட்பாளர்களையும் விலை கொடுத்து வாங்கும் 'ஃபார்முலா'வாக  அது வளர்ந்துள்ளது என்பதை ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க அல்லது அ.இ.அ.தி.மு.க ஆட்சிகளில் 'பலன்' பெற்று அக்கட்சிகளின் 'செல்வாக்கு வளையத்தில்' 'சிக்காத' தலைவர்கள் பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளில் இருக்கிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அந்த 'செல்வாக்கு வளையத்தில்' கிறித்துவ என்.ஜி.ஓக்கள் எந்த அளவுக்கு ஊடுருவியுள்ளார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும். அதே போல் அடிமட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் வரை 'எந்தக் கட்சி' ஆட்சியில் இருந்தாலும், 'காண்டிராக்ட்' உள்ளிட்ட 'கூட்டுக் கொள்ளைகளில்' 'பங்கு' பெறாத கட்சியினர் யார் யார் என்று கண்டுபிடிப்பது, அந்ததந்த கட்சிகளின் தலைமைக்கே சவாலாக உள்ளது, என்பது உண்மையா? பொய்யா? பா.ஜ.க வில் மேலேக் குறிப்பிட்ட 'செல்வாக்கு வளையத்தில் சிக்கியவர்கள் இருந்தால், அது  மோடி அலை மூலம் வேரூன்றுவதற்கு சிக்கலாக மாறாதா?  

ஏற்கனவே மத்தியில் பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் அ.இ.அ.தி.மு.கவும், தி.மு.கவும் மாறி மாறி அங்கம் வகித்து, தமிழ்நாட்டில் பா.ஜ.க வை விரும்பி  'தீண்டத்தகும்' கட்சியாக தமிழகத்திற்கு அடையாளம் காட்டி விட்டனர். தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் பா.ஜ.கவில் சேர்ந்துள்ளார். இன்னொரு முன்னாள் அமைச்சர் மீது நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதால், அவர் விரும்பி முயற்சித்தும், சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆக திராவிடக் கட்சிகளில் இருந்தவர்கள்,  பா.ஜ.கவில் சேரும் படலம் தொடங்கி விட்டது. 

அவர்களெல்லாம் ஊழலற்ற ஆட்சி தமிழகத்திற்கு வர வேண்டும் என்று சேர்கிறார்களா? அல்லது தமது ஊழல் வாய்ப்புகளுக்கு 'அக்கரைப் பச்சை' என்று தாவுகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அநேகமாக‌ வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன், தமிழக பா.ஜ.க வானது, தமிழ்நாட்டில் 'திராவிட பா.ஜ.க'வாக தேர்தலைச் சந்தித்தாலும் வியப்பில்லை. திராவிடக் கட்சிகளானாலும், பா.ஜ.க உள்ளிட்ட தேசியக் கட்சிகளானாலும், 'உணர்ச்சிபூர்வ பேச்சாளர்கள்' இழிவான சுயநல சமரசப் போக்கில் 'ஒரே மாதிரியானவர்கள்' என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html)  தமிழ்நாட்டில் அந்த சிக்கலை மோடி அலை எதிர்கொண்டாக வேண்டிய நிலை உருவாகிறது.

தமிழ்நாட்டில் தினமும் ஆங்கங்கே அடிப்படை வசதிகளுக்காகவும், மோசடி பேர்வழிகளுக்கு எதிராகவும் மக்கள் தாமே போராடி வருவதிலிருந்து, ஒதுங்கி நின்று, 'குறுக்கு வழிகளில்', மற்ற கட்சிகளின் ' ஆதாயத் தலைவர்கள்/தொண்டர்களை' தம் பக்கம் இழுத்து, பயணித்து ஆட்சியைப் பிடிப்பது இனி நடக்க வாய்ப்பில்லை; பா.ஜ.கவாக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும், என்பதும் என் கணிப்பாகும்.

ஊழல் மூலம் சொத்து சேர்க்க அவசியமில்லாதவர்களும், ஊழல் பசியில்லாதவர்களும் பொது நலனில் உண்மையாக அக்கறை உள்ளவர்களும் அதிக அளவில் பா.ஜ.கவில் சேரும் போது, திராவிடக் கட்சித் தலைவர்கள் பாணியில் உணர்ச்சி பூர்வ பேச்சுக்கள் வெளிப்படுவதையும், ஆளுயர மாலை, மலர்க் கிரீடம் என்று திராவிடக் கட்சிகள் அறிமுகப்படுத்திய பொது அசிங்கங்களையும், தவிர்த்து, குஜராத்தில் குஜராத் மொழி, மாநில நலன்களை மோடி பேணிய வழியில், தமிழ் மொழி, தமிழ்நாட்டின் நலன்களுக்காக செயல்படும்போது, அரியானா வழியில் தமிழ்நாட்டிலும் பா.ஜ.க ஆட்சி அமைவது சாத்தியமே; 2021 அல்லது அதற்கு முன்னரே நடக்க இருக்கும் தமிழக சட்ட மன்ற தேர்தலில்.

வ.உ.சி தவிர்த்து, வேறு எந்த தலைவரும் இணை சொல்ல முடியாத அளவுக்கு, தியாகங்கள் புரிந்து வாழ்ந்த ஈ.வெ.ராவிற்கு, தனது அறிவு வரைஎல்லைகள் (limitations) பற்றிய புரிதல் இல்லாததன் காரணமாகவும், 'பெரியார்' என்று 'சிறை'பட்டதன் காரணமாகவும், 'ஊழல் பெரும் பசியாளர்களின்' ஆதிக்கத்தில் 'தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும்' சீரழிந்தது எவ்வாறு? என்பதை, எனது பதிவுகளை படித்து வருபவர்கள் அறிவர். ‘அதே சீரழிவில்’ தமிழக பா.ஜ.கவும் சிக்கியுள்ளதா? என்ற கேள்வியை கீழ்வரும் குறிப்பு எழுப்புகிறது.

குறிப்பு: 1.

கேள்வி: காங்கிரசுக்கு இணையாக தமிழக பி.ஜே.பியிலும் கோஷ்டி பூசல் உள்ளதே?


பதில்: சேச்சே‍, காங்கிரசோடு எப்படி பி.ஜே.பியை ஒப்பிட முடியும்? மொழிவாரி பிரிவுகளும், சாதிவாரி சிக்கல்களும், தமிழக காங்கிரசில் இருக்கிறதா என்ன?

நன்றி: தமிழக அரசியல் 21.10. 2015 


2.  'இந்த அவமானம் தேவையா? கோஷ்டி அவலத்தில் தமிழக பா.ஜ.,'
       http://www.dinamalar.com/news_detail.asp?id=1474411

'நடக்காது' என்று கன்னியாகுமரியில், 'விவேகானந்தர் நினைவக' திட்டத்தை தொடங்கியவர்களே கருதியிருந்த நிலையில்; 'அந்த தடைகளை'  எவ்வாறு முறியடித்து, ஏக்நாத் ரானடே (Eknath Ranade) சாதித்தார்? என்பதை, 'வாய்மையை' காவு கொடுக்காமல், அவரே பதிவு செய்துள்ளார்; ' The Story of the Vivekananda Rock Memorial’ என்ற நூலில். அதே போல், எந்த கொள்கையை பின்பற்றினாலும், பொதுவாழ்வில் எப்படி வாழ்ந்தால் சாதிக்க முடியும்? என்பது தொடர்பான 'அனுபவபூர்வமான வழிகாட்டும்' நூலையும் அவரே அழுதியுள்ளார். அந்த நூல் ‘ Sadhana of SERVICE’. (vkpt@vkendra.org) 

மேற்கண்ட குறிப்பில் உள்ள தமிழக பா.ஜ.க தலைவர்கள் எல்லாம், குற்ற உணர்வின்றி, ஏக்நாத் ரானடே பற்றி பேச முடியுமா? என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம். 

Monday, December 29, 2014


உணர்ச்சிபூர்வ போக்கில்  இளையராஜாவும் ‘பலி’யானாரா?
          
பொது அரங்கில் முக்கிய இடம் பிடித்துள்ள, தனிநபர்களை  ஒன்று பாராட்டுவது, அல்லது கண்டிப்பது என்ற நிலைப்பாடுகளில் 'சிறையுண்டவர்கள்’, இரண்டிற்கும் இடையே புதைந்திருக்கும் உண்மைகளைப் பார்க்கத் தெரியாத 'சமூக வண்ணக் குறைபாடு'(Social Colour Blindness)  என்னும் சமூக நோயில் சிக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. 
( http://tamilsdirection.blogspot.in/search?updated-min=2013-01-01T00:00:00-08:00&updated-max=2014-01-01T00:00:00-08:00&max-results=32  ) 

தாம் பாராட்டும் தலைவர்களிடம் உள்ள குறைபாடுகளையும், தாம் கண்டிக்கும் தலைவரின் நல்ல செயல்பாடுகளையும் சுட்டிக்காட்டி, 1925 முதல் 1944 வரை 'குடி அரசு' உள்ளிட்ட தனது இதழ்களில் எழுதியவர் ,நானறிந்த வரையில்,  பெரியார் ஈ.வெ.ரா. மட்டுமே. அவரிடம் வெளிப்பட்ட அந்த அபூர்வ போக்கும், 1944இல் 'திராவிடர்  கழகம்' உருவாகி, உணர்ச்சிபூர்வ போக்கு வளர்ச்சியின் ஊடே மிகவும் பலகீனமானதா?  அந்த போக்கை முற்றிலும் இழந்ததற்கு, அவர் தமது கடைசி காலத்தில் வெளியிட்ட பாராட்டுரைகள் சாட்சியங்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

முந்தையப் பதிவான, 'பெரியார் ஈ.வெ.ரா வின்  'ஆன்மீக'ப் பெருந்தவறு' உள்ளிட்டு, எனது பதிவுகளில், எனது அறிவு அனுபவத்தின் அடிப்படைகளில், பெரியார் ஈ.வெ.ராவின், அந்த முன்மாதிரியான ' அபூர்வப் போக்கை'ப் பின்பற்றி வருகிறேன்.

அந்த‌  உணர்ச்சிபூர்வ போக்கு வளர்ச்சியின் ஊடே , அறிவுபூர்வ விமரிசனங்களை ஓரங்கட்டி, தமிழினம் கடுமையான தாழ்வு மனப்பான்மையில் சிக்கி, அதை ஈடுகட்ட உலகில் யாருமே செய்திராத இழிவான முறையில்,  தாம் உயர்ந்தவர் என்று 'வெளிச்சம்' போடும் சமூக மன வியாதியில் தமிழினம் சிக்கியுள்ளதா என்பதும் ஆய்விற்குரியதாகும்.  
( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html )   அந்த நோயில் தெரிந்தோ,தெரியாமலோ சிக்கி விடும் ஆபத்திற்கு இளையராஜாவும் பலியானாரா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

திரை இசையில் இளையராஜா நிச்சயமாக ஒரு மைல் கல். அதன் காரணமாக அவரது தவறுகளைச் சுட்டிக் காட்டாமல், 'தமிழ் இன உணர்வு' அடிப்படையில் அத்தவறையே உலகளாவிய 'சாதனை'யாக பாராட்டுவது என்பது சரியா?

உலகில் இசை பற்றிய விபரமறிந்தவர்கள் பார்வையில், தமிழினம் என்பது,  தவறானவைகளைக் கூட 'சாதனைகளாக' தமக்குள்ளே பாராட்டிக் கொள்ளும் அளவுக்கு, மிகுந்த தாழ்வு மனப்பான்மையில் உழலும் இனம் என்ற கருத்து உருவாவதற்கு அது காரணமாகி விடாதா?

 'சிம்பொனி' என்று அறிவித்து, வெளிவராத, எந்த சிம்பொனி இசை நிபுணராலும் 'சிம்பொனி' என்று சான்றளிக்கப்ப‌டாத‌  'சாதனைக்கு', 'கெளரவ' டாக்டர் பட்டம் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகம் வழங்கியது,  தமிழருக்கு பெருமையா?, சிறுமையா? அதற்குப் பிறகாவது 'அந்த' இசையை வெளிப்படுத்தி, சிம்பொனி இசை நிபுணரால் அது பரிசீலிக்கப்படும் முயற்சியை இளையராஜாவும் மேற்கொள்ளவில்லை. 'தமிழ் இன உணர்வில்' அச்'சாதனையை' வரைமுறையில்லாமல் பாராட்டிய தமிழ்ப் பற்றாளர்களுக்கும், அந்த அறிவு இல்லாமல் போனது.

உலகில் இசை அறிஞர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலையின்றி, மீண்டும் 'திருவாசகம் சிம்பொனி' என்று ஒரு 'சாதனை' அறிவிக்கப்பட்டது. 'தமிழ் இன உணர்வு'த் தலைவர்களின் அழுத்ததிற்கு 'பயப்பட்டு', குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டு இந்திய அரசில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் எல்லாம் அச்'சாதனையைப்' பாராட்ட, உலகில் இசை அறிஞர்கள் பார்வையில் இந்தியாவே சிறுமைக்குள்ளானது. 

அதுவும் 2005 சூன் முதல் வார 'ஆனந்த விகடன்' பேட்டியில் 'தான் இசைத்தது சிம்பொனி(symphony) அல்ல, ஓரடோரியா (Oratorio) என்ற இசை வடிவம்' என்று இளையராஜா தெரிவித்த பின்னும், இக்கூத்து தொடர்ந்தது. 

அதன்பின்  அது 'சிம்பொனி ஓரடோரியா ' என்று - மேற்கத்திய இசையில் இல்லாத - ஒரு புதுப் பெயரில் ( 'எலிக் குதிரை' என்பது போல் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இரண்டு வெவ்வேறு இசை வடிவப் பெயர்களை ஒட்ட வைத்து) வெளியிடப்பட்டது. ஏன் இந்த தவறுக்கு இளையராஜா துணை போனார் என்பது அவரின் மனசாட்சிக்கே வெளிச்சம். இது தவறில்லையா என்று குரல் எழுப்பிய தமிழ்நாட்டு இசை நிபுணர்கள் மிரட்டப்பட்டு, 'மீடியா' பலத்துடன் அந்த குரல் வீழ்த்தப்பட்டது தமிழினத்திற்கு பெருமையா? சிறுமையா? அவர்கள் இது தொடர்பாக, இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு (Press Council) புகார் தெரிவித்து,  இப்பிரச்சினையில் தமது பங்களிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்துக் கொண்டார்கள். இவை தொடர்பான விவரங்களுக்கும், பிரஸ் கவுன்சிலுடன் நடத்திய கடித பரிமாற்றங்கள் பற்றிய விபரங்களுக்கும்: https://www.scribd.com/document/57563206/In-Praise-of-Shiva-priests-Invest-Rs-15-Million-float-Company-Worth-Rs-100-Crores

தமிழ்நாட்டில் செலவமும் செல்வாக்கும் உள்ள நபர்கள் எவ்வளவு அபத்தமாக புத்தகங்கள் வெளியிட்டாலும், 'சாதனைகள்' வெளியிட்டாலும், அவற்றைப் பாராட்டி தம்மை வளர்த்துக் கொள்ளும் தமிழ்  'அறிஞர்கள்' (?)  'தமிழின உணர்வாளர்கள்' மிகுந்து வரும் நாடாக‌ தமிழ்நாடு,  1970களிலிருந்து 'வளர்ந்து' வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html  ) இத்தகைய சூழலில் தவறு செய்தவர்களில் இளையராஜா முதல் நபருமல்ல; கடைசி நபருமல்ல; இச்சூழலை ஆதரித்து வளர்த்து வருபவர்களும் பகுதி குற்றவாளிகளே ஆவர்.

அறிவுபூர்வ விவாதத்திற்கு உள்ளாக வேண்டிய 'சாதனைகளையும், நிலைப்பாடுகளையும், உணர்ச்சிபூர்வமாக 'பார்ப்பன சூழ்ச்சி', தமிழ்த் துரோகி' என்று பயமுறுத்தி இருட்டில் தள்ளி, அந்த 'இரைச்சலில்' குறுக்கு வழிக் கொள்ளையர்கள் ஆதிக்கத்தில், தமிழ்நாடு சிக்கியதன் விளைவு பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன். 
( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html ) 'தமிழ், தமிழ் உணர்வு, பெரியார், இந்துத்வா, முஸ்லீம், தலித்' போர்வைகளில் உள்ள உணர்ச்சிபூர்வ போதையாளர்கள் எல்லாம் தமக்குப் பிடிக்காத, திரைப்படங்களையும், புத்தகங்களையும் தடை செய்வதில் 'ஒற்றுமையாக' உள்ளார்கள். அந்த அமைப்புகளில் உள்ள நேர்மையாளர்கள் எல்லாம் 'அறிவுபூர்வ விவாதத்தை' ஊக்குவிப்பதில் 'ஒற்றுமையாக' செயல்பட்டால் தான், தமிழ்நாடு அந்த 'குறுக்கு வழிக் கொள்ளையர்களிடமிருந்து' தப்பிக்க முடியும்.

எனக்கும் இளையராஜவுக்கும் இருந்த தொடர்பு பற்றி நன்கு அறிந்த லண்டனில், திருக்குறள் ( 788) இலக்கணமாக வாழும்,  எனது உயிர் நண்பர் தொல்காப்பியன், மேலேக் குறிப்பிட்ட 'சர்ச்சையில்' நான் ஈடுபட்டிருக்க வேண்டியதில்லை என்று அறிவுறுத்தினார். தொல்காப்பியன் உள்ளிட்டு எனக்கு நெருக்கமான எவரிடமும் வெளிப்படும் குறைகளை,  அவர்களிடமே சுட்டிக்காட்டுவது எனது இயல்பு என்பதையும் அவர் அறிவார். ஆனாலும் எனது 'வாழ்வியல்' நன்மைக்காகவே, அவர் அவ்வாறு அறிவுறுத்தினார் என்பதைக் கீழ்வருபவை தெளிவுபடுத்தும்.

நான் சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் சகப் பேராசிரியரான கவிஞர் மு.மேத்தா எனது இல்லத்திற்கு வந்து, இசைக்கருவிகள் துணையின்றி, கணினி மூலமே நான் இசையமைத்த பாடல்களை கேட்டு பாராட்டி சென்றார்.

அதன்பின் தனது வாழ்வில் இசையில் தான் விரும்பிய அளவுக்கு பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்றும், என்னுடன் சேர்ந்து ஒரு இசைத் திட்டம்(Music Project)  செய்ய வேண்டுமென இளையராஜா விரும்புவதாக இளையராஜாவுக்கு மிகவும் நெருக்கமான Dr. அமுதகுமார் தெரிவித்ததாக, இன்னொரு சக பேராசிரியர் எம். இளங்கோ தெரிவித்தார்.

அதன்பின் நான் இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோவில் அவருக்கான ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்தேன். மிகுந்த அன்புடனும், மரியாதையுடனும் என்னிடம் பழகினார். இந்திய இசை வளர்ச்சி பற்றிய வரலாறு ரீதியிலான ஒரு இசைத் திட்டம்(Music Project)  பற்றி கூறியபோது, மிகுந்த ஆர்வம் காட்டினார்.

பின் அவர் வீட்டிலும், ஒலிப்பதிவு கூடத்திலும், நான்கைந்து முறைகள் சந்தித்து பேசினேன். சேர்ந்து செயல்படுவதற்கான கூறு இன்றி, அவர் தமக்குள் ஒரு வகையிலான மனச்சிறையில்(mental prison)  சிக்கியிருப்பது போல், எனக்கு தெரிந்ததால், நான் அதிலிருந்து ஒதுங்கினேன். இடையில் முனைவர் வீ.ப.கா சுந்தரம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் அப்போது இசைத் துறை தலைவராகயிருந்த பேரா.என்.ராமநாதன் போன்ற இசை அறிஞர்களை இளையராஜாவைச் சந்திக்க வைத்து, உரையாட வைத்தது குறிப்பிடத் தக்கவையாகும்.

இளையராஜாவிடம் இருக்கும் கடின‌ உழைப்பு, சுய கட்டுப்பாடு(self discipline) ,புலனடக்கம் போன்றவை என்னை வியப்பில் ஆழ்த்தின. அவர் 'ஹார்மோனியத்தை' விட்டு , கணினி மவுசை(mouse)  'கையகப் படுத்தி’ ,இசை அமைத்தால், மீண்டும் ஒரு பெரிய அளவில், உலக அளவில் வலம்(round)  வரலாம். அதை அவரிடம் சொல்லி, ஒரு வாரத்தில் அவருக்கு நான் ‘பயிற்சி தருகிறேன்.' என்றும் சொன்னேன். சிரித்துக் கொண்டே 'அதெல்லாம் நமக்கு சரி வராது சார்' என்று என்னிடம் சொன்னார்.

என்னை மிகவும் மதித்து அன்பு செலுத்திய காரணத்தால், என்னுடன் பழகுபவர்கள் செய்யும் தவறை நான் கண்டிக்காமல் விட்டதில்லை. என்னுடன் பழகியவர்கள்/ பழகுபவர்கள் அதை அறிவார்கள். இளையராஜாவும் அதற்கு விதி விலக்கல்ல. "பிறந்த போது எதையும் கொண்டு வராத நாம் இறக்கும் போதும் எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை. நமது இயல்பை ஓட்டிய தகுதி, திறமைகளை வளர்த்து, உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்(Passions) வாழ்பவர்களே மரணத்தை மன நிறைவுடன் தழுவ முடியும்." என்பதை ஏற்கனவே நான் பதிவு செய்துள்ளேன். 
( http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html ) இடைப்பட்ட வாழ்க்கையில், மனித உறவுகளில், லாப நட்டம் பார்த்துப் பழகி, 'கள்வராகி' (திருக்குறள் 813) 'குவிக்கும்' செல்வமும், செல்வாக்கும், அதற்குத் தடையாகாதா?

Sunday, December 28, 2014


'பெரியார்' ஈ.வெ.ரா வின்  'ஆன்மீக'ப் பெருந்தவறு


1944இல் அறிவுபூர்வ கூறுகள் பலகீனமாகி, உணர்ச்சிபூர்வ கூறுகள் அரங்கேறி வளர்ந்து, முற்றிய நிலையில், தமிழ்நாட்டின் கனிவளங்களையும், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நிலத்தடி நீர் ஆதாரங்களையும் (அரசர்கள், அதன்பின் காலனி ஆட்சி, அதன்பின் 1967வரை காங்கிரஸ் ஆட்சி வரை பாதுகாக்கப்பட்டு வந்ததை) சூறையாடி, காவிரி, கச்சத்தீவு, முல்லைப் பெரியார் சிக்கல்களை உருவாக்கி வளர்த்து, தமிழ்வழிக் கல்வியையும், மனிதருக்கான ஒழுக்க நெறிகளையும் சிதைத்து, 'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா' என்ற திசையில் 'திராவிட அரசியல் கொள்ளையர்கள்' பயணித்தார்கள் என்பது பற்றி ஏற்கனவே பார்த்தோம்.
( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html )

அதன் விளைவாக, அரசியல் கட்சிகளிடம் தொடர்பற்ற, சாதாரணத் தமிழர்களின் எண்ணிக்கை அபரீதமாக அதிகரித்து வருவது பற்றியும், கல்லூரி மாணவர்களிடையே 'இந்தியர்' என்ற அடையாளம் வலுவாகி வளர்ந்தாலும், 'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவை மிகவும் வருத்தப்படும் அளவுக்கு வீழ்ந்து வருவது பற்றியும், தமிழ்நாட்டில் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

இப்படிப்பட்ட மிகவும் கவலை தரும் விளைவிற்குக் காரணமான‌, 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்கள்  செய்த பெரும் தவறு பற்றி,  இந்தப் பதிவில் பார்ப்போம்.

'திராவிட' பற்றிய விவாதங்களும், இந்தியாவை 'ஆரிய தேசம்' என்று குறிப்பிட்டு நடக்கும் விவாதங்களிலும், தொல்பொருள், மற்றும் பிற‌ சான்றுகளின் அடிப்படையில், 'ஆரியர்கள்' அல்லது 'திராவிடர்கள்'  என்று அவரவர் நிலைப்பாட்டிற்கு ஏற்றவாறு, இன்றுள்ள ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை ஒரே தேசம் என்ற நிலைப்பாட்டில் ஒற்றுமை இருக்கிறது.
https://www.facebook.com/groups/1633520656906980/1637444939847885/ 

அந்த 'ஒற்றுமைக்கு' 'சுருதி பேதமாக', அண்ணாதுரையின் செல்வாக்கில் 'பெரியார்' ஈ.வெ.ரா 1944இல்  'திராவிடர் கழகம்' உருவாக்கி,  கோரிய(?) திராவிட நாடு (‘தஞ்சை மாவட்டம் வரை கிடைத்தால் கூட போதும்' என்று கருத்து தெரிவிக்கும் அளவுக்கு) இருந்தது. பின்னர் அந்த பெயரில் இருந்த 'ர்'-ஐ நீக்கி, அண்ணாதுரை 1949இல் 'திராவிட முன்னேற்ற கழகம்' உருவாக்கி, 'இன அடிப்படையில் இன்றி, நிலப்பரப்பின்' (geographical) அடிப்படையில்,  'திராவிட நாடு திராவிடருக்கே' என்று விளக்கி, அந்த 'சுருதி பேதத்தின்' குழப்பத்தைக் கூட்டினார். ஆனாலும் 'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா' என்ற 'உணர்ச்சிபூர்வ' திரைப்பாடல், திராவிடக் கட்சிகளின் பிரச்சாரத்தில் முக்கிய இடம் வகித்தது; 'பிரிவினைக் கோரிக்கையை' அண்ணாதுரை கைவிட்ட பின்னரும்.

'பெரியார்' ஈ.வெ.ராவின் உள்ளீடுகளை(inputs) இரண்டு வகையாகப் பிரித்துப் பார்ப்பது சாத்தியமே. அவரின் நேரடி அனுபவ உள்ளிடுகளை அவர் திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுட்னும் தனது அறிவு செயல்வினைக்கு( processing)  உட்படுத்திய முடிவுகள், இன்றும் 'மக்கள் நலத்தில்' உண்மையான அக்கறை கொண்ட கட்சிகளுக்கு அரிய பாடங்களாகும். (உதாரணத்திற்கு குறிப்பு 1) 

அதே நேரத்தில் அவருக்கிருந்த கல்வி வரை எல்லைகள்(limitations)  காரணமாக, அவரால் பழந்தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்டவற்றையும், இந்திய தொன்மை பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த ஆய்வுகளையும் படித்தறிய முடியாத நிலை இருந்தது. தமிழில் அவரால் படித்து விளங்கிக்கொள்ளக் கூடியவையும், ஆங்கிலத்தில் மற்றவர் படித்து, அவருக்கு விளங்கும் வகையில் தெரிவித்தவையுமே, அவருக்கான இரண்டாவது வகை-  நேரடியாக இன்றி மற்றவரைச் சார்ந்திருந்த-  உள்ளீடுகள் ஆகும். அந்த இரண்டாவது வகை உள்ளிடுகளின் அடிப்படையில்,அவர் வெளிப்படுத்திய கருத்துகளே 'தமிழ், பாரம்பரியம், பண்பாடு' போன்றவை தமிழர்க்குக் கேடேன்று, நோய் பிடித்த தாவரத்தின் நோய் மூலமாக அதன் ஆணி வேர்களையே அடையாளம் கண்டு சிதைத்த முயற்சிகளுக்கு வழி வகுத்தன. (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html )

எனது இசை ஆய்வுகளின் முலம், 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்கள் செய்த பெருந்தவறை நான் அடையாளம் கண்டேன். பெரியார் இயக்கத்தில் தமது பிழைப்பிற்காக இல்லாமல், உண்மையான சமுகப்பற்றுடனும், பெரியாரைப் போலவே அறிவு நேர்மையுடனும், திறந்த மனதுடனும் தமது தவறுகளை அடையாளம் கண்டவுடன் ஒத்துக் கொண்டு திருத்திக் கொள்ளும் இயல்புடையவர்கள் பார்வைக்காகவும், பின் தொடர் விவாதத்திற்காகவும், அவ்வாறு நான் அடையாளம் கண்டவை கட்டுரையாக, 2006 'தமிழர் கண்ணோட்டம்' பொங்கல் மலரில் வெளிவந்தது. 
( http://tamilsdirection.blogspot.in/search?updated-min=2013-01-01T00:00:00-08:00&updated-max=2014-01-01T00:00:00-08:00&max-results=32 )  இன்று வரை அதை ஏற்றோ,மறுத்தோ ஒரு கருத்தையும் நான் சந்திக்கவில்லை. நேரில் என்னைச் சந்தித்த 'பெரியார்' ஆதரவாளர்கள் அவை சரி என ஒத்துக் கொண்டார்கள். அவர்களும் அந்த விவாதத்தைத் தொடர்ந்தார்களா? இல்லையா? என்பதும் எனக்குத் தெரியாது.(குறிப்பு 2)

அறிவியல் அணுகுமுறையில் ‘ஆரியர் – திராவிடர்’ என்ற பிரிவினையில் அர்த்தமில்லை என்பதைப் 'பெரியார்' ஈ.வெ.ரா அறிந்திருந்தாலும், இலக்கியங்களிலும், புராணங்களிலும் 'மூட நம்பிக்கை' என்று அவருக்குப் பட்ட இரைச்சல்களுக்குள்(noises)  புதைந்திருந்த மதிப்பு மிக்க 'சிக்னல்கள்' (signals) அவருக்கு தெரியாததாலேயே, கீழ்வரும் கருத்தைத் தெரிவித்தார். 
( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html & http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html )

"இரத்தக் கலப்பு ஏற்பட்டு விட்டதே; ஏன் இன்னும் ஆரியர் திராவிடர் பிரச்சினை நாட்டில் நடமாட வேண்டும்? என்று நம்மை நையாண்டி செய்யும் தோழர்கள் பார்ப்பனர்களின் உயர்தன்மை கைவிடவும்,அவற்றுக்கு ஆதாரமான  சாஸ்திர புராணக் குப்பைகளைக் கொளுத்தி விடவும், அதற்குச் சின்னமான கடவுளைத் தகர்க்கவும் கேட்டுக் கொள்ளவும்;பிறகு வரட்டும் நம்மிடம்." 29.09.1948 சிதம்பரம் சொற்பொழிவு; விடுதலை 05.10.1948)

மேலேக் குறிப்பிட்ட இரண்டாவது வகை உள்ளீடுகள் காரணமாக, பெரியார் தெரிவித்துள்ள இந்த கருத்தின் பின்னணியில், 'பெரியார்' ஈ.வெ.ராவுக்கு இருந்த வரை எல்லைகள்(limitations)  இல்லாத‌,  பிரான்ஸ் நாட்டு நாத்தீகர் ஜீன் பெரி லேமன் - Jean-Pierre Lehmann  - 'இந்து மதம் 'பற்றி தெரிவித்துள்ள கீழ்வரும் கருத்தும் கவனிக்கத் தக்கதாகும்.

“உலகிற்கு ஒரு ஒழுக்க முறை, ஆன்மீகம்,நேர்மை வழிகாட்டி தேவைப்படுகிறது.இந்தியாவில் உள்ள மதம் மற்றும் தத்தவப் பாரம்பரியங்கள் அந்த மூன்றையும் நன்கு வழங்கக் கூடியவையாகும்.”( The planet needs a sense of moral order, spirituality and an ethical compass. The Indian religious and philosophical traditions can provide a great deal of all three.)

:‘The Dangers of Monotheism in the Age of Globalization’bBy Jean-Pierre Lehmann  (http://www.theglobalist.com/dangers-monotheism-age-globalization/) 

ஆன்மீகத்தையும் மதத்தையும் ஒன்றெனக் குழம்பி வாழ்பவர்களுக்கு மேற்குறிப்பிட்ட கட்டுரை விளங்குவது சிரமமே. கடந்த நூறு வருடங்களாக, மேற்கத்திய அறிஞர்களிடையே, மதத்திற்கு தொடர்பில்லாத தனி மனிதர் வளர்ச்சியுடன் தொடர்புடைய ஆன்மீகம் பற்றிய ஆய்வுகளும், விவாதங்களும் நூல்களாக வெளிவந்துள்ளன. மதமற்ற ஆன்மீகம்'’- "Spiritual but not religious" (SBNR)-, ‘ஆன்மீகத்துடன் சுதந்திரமாக'- "Spiritually Independent" - போன்ற அடையாளங்கள் வளர்ந்து வரும் காலக்கட்டம் இது.( http://en.wikipedia.org/wiki/Spiritual_but_not_religious)

இன்றைய சாதி முறைக்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் இல்லை என்பதையும், விவசாயம், மீன் பிடித்தல் உள்ளிட்டு அனைத்து தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள், 'பறை' வகை இசைக் கருவிகளை இசைத்தார்கள் என்பது பற்றியும் பதிவு செய்துள்ளேன். ('இசையில் தீண்டாமை காலனியத்தின் ‘நன்கொடை’யா?';
http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html ) "அரசும், சமூகமும் பின்னிப் பிணைந்திருந்த நிலையில், செயல்பாட்டு தர ஏணியாக (Functional hierarchy) இருந்த 'வருணம்' என்ற சமூக செயல் நுணுக்கம் (social Mechanism) , தமிழ்நாட்டில் எந்த காலத்தில், எந்த சமூகக் காரணங்கள் அடிப்படையில் ' சமூக உயர்வு, தாழ்வு, தீண்டாமை' உள்ளடக்கிய செயல் நுணுக்கமாக மாறியது என்பது ஆய்விற்குரியது." என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.('குற்ற உணர்வின்றி' மன நிறைவுடன் மரணத்தைத்  தழுவ முடியுமா?'
http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html )
தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா? ; http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html

எனவே உணர்ச்சிபூர்வ போக்குகளை ஒதுக்கி, அறிவுபுர்வமான விவாதங்களை ஊக்குவிக்க வேண்டிய காலக்க்கட்டம் இதுவாகும்.

'தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு' போன்ற ஆணிவேர்களுடன், மனிதரின் வளர்ச்சிக்கு அவசியமான ஆன்மீகத்தையும் சிதைத்ததே, கீழ்வரும் விளைவுகளுக்குக் காரணமா?  தமிழ்நாட்டின் கனிவளங்களையும், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நிலத்தடி நீர் ஆதாரங்களையும்  சூறையாடி, காவிரி, கச்சத்தீவு, முல்லைப் பெரியார் சிக்கல்களை உருவாக்கி வளர்த்து, தமிழ்வழிக் கல்வியையும், மனிதருக்கான ஒழுக்க நெறிகளையும் சிதைத்ததே, அதன் காரணமாக உருவாகி வளர்ந்த‌ , திராவிட அரசியல் கொள்ளையர்களிடம் தமிழும், தமிழரும்,தமிழ்நாடும் சிக்கி சீரழியக் காரணமா? என்ற ஆய்வு அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டது. அதைத் தவிர்ப்பது, தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழ்நாட்டிற்கும் தற்கொலையாக முடியும்.


குறிப்பு 1: தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாக இருந்தாலும், எப்படிப்பட்ட பொதுத் தொண்டர்கள் இனி பொது வாழ்வில் செல்வாக்கு பெற முடியும், என்பதற்கான 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்களின் கருத்து,  கீழ்வரும் மேற்கோளில் உள்ளது. 

"எந்த பொதுத் தொண்டனுக்காவது மனைவி இருக்கிறது; மக்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கும் குடும்பத்தில் வசதி இருக்க வேண்டும். அல்லது  அவர்களும் உணவு உடை தவிர மற்றெதையும் கருதாதப் பொதுத் தொண்டர்களாக இருக்க வேண்டும்.பொதுத் தொண்டு ஊதியத்தால் வாழ்கிறவர்கள், அவர்கள் குடும்பங்கள்  சராசரி வாழ்க்கைத் தரத்துக்கு மேல் வாழக் கூடாது; வாழவே கூடாது.

வாழ வேண்டி வந்தால், வாழ்ந்து கொள். ஆனால் 'நான் பொதுத் தொண்டன், கஷ்ட நஷ்டப்பட்டவன் ' என்று சொல்லாதே. சொல்வதற்கு வெட்கப்படு; உன் மனதிலும் நீ நினைத்துக் கொள்ளாதே. அப்படி நினைப்பாயேயானால், சொல்லுவாயேயானால், நீ 'மக்களை ஏமாற்றி வெற்றி பெறுவதாகக் கருதிக் கொண்டிருப்பவன்' என்று தான் சொல்ல வேண்டும்.

மற்றும் இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நீ பொதுத் தொண்டன் ஆகாமல், சுயநலத் தொண்டனாகி, உனக்கென்றே நீ பாடுபடுபவனாக ஆகி இருந்தால், இன்று உன் நிலை எப்படியாகி இருக்கும்? உன் தரம் அந்தஸ்து என்ன ஆகியிருக்கும் என்பதை உன் தரத்தைக் கொண்டு உண்மையாய் நினைத்துப் பார்த்து, உன் பொதுத் தொண்டு (வேஷம்) ஆனது உன்னைத் தியாகம் செய்ய செய்ததா?அல்லது உன் தகுதிக்கும்  மேற்பட்ட செலவத்தையும்,வாழ்க்கை வசதியையும், அந்தஸ்தையும் தேடிக் கொள்ளச் செய்ததா? என்று எண்ணிப் பார். " -  பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் 17.09.1962

( பெரியார் 84 ஆவது பிறந்த நாள் மலர் ) 

தனக்கு வருமானம் தரும் பணியிடத்தில், வாழுமிடத்தில் 'புத்திசாலித் தனமான, இழிவான' சமரசங்களுடனும், அந்த போக்கிலான, 'ஆதாயம் தரும் சமூக வலைப்பின்னலுடன்', தம்மையும், தமது குடும்பத்தையும் 'பாதுகாப்புடன்' வளர்த்துக் கொண்டு, ஊரான் விட்டுப்பிள்ளைகளைத் தூண்டி, 'காவு கொடுத்து', வாழும் 'முற்போக்கு' தமிழ்/திராவிடக் கட்சியினரை அடையாளம் காண உதவும் அளவுகோல் இதுவாகும்.

குறிப்பு 2 :தமது அளவில் 'அறிவு உழைப்பு'க்கு முயற்சியின்றி, தமது தகுதி,  திறமைப் பற்றிய புரிதலின்றி, புரிதலுக்கான தகுதி இல்லையென்றால், அதை அறிவு நாணயத்துடன் ஒத்துக் கொண்டு,  தமது புரிதல் அதிகரிப்பிற்கான 'தகுதி, திறமை'யை வளர்த்துக் கொள்ளாமல்,'தகுதி, திறமை மோசடி' என்ற போர்வையில் அதை மறைத்து, சராசரி பொது அறிவின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பும் 'வியாதியும்', அப்படி கேள்விகள் எழுப்பி தமது 'புலமைக் குறைவு' வெளிப்படுமானால், அதை ('பார்ப்பன எதிர்ப்பு, இனமானம்' போன்ற முகமூடிகள் மூலம் மறைத்துத் தப்பிக்கும் ) தவிர்க்கும் 'வியாதியும்', அல்லது விவாதப் பொருளை விட்டு விலகி, விவாதித்தவரையே இழிவு படுத்தும் வியாதியும்தமது அறிவுபலத்தில் தூண்டப்பட்ட அறிவுஜீவிகளாக வேடம் போடும் சில‌ ஆடுகள் இருப்பதில் மயங்கி, விவாத அரங்கில்  மற்றவர்களையும் மாற்றுக்கருத்துக்கு தகுதியற்ற ஆடுகளாக கருதி, விவாதிக்கும் 'மேய்ப்பர்' நோயும்; 1944இல் 'திராவிடர் கழகம்' உருவாகி, உணர்ச்சிபூர்வப் போக்கில் வளர்த்த நோயா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அந்நோயே, 'திராவிட அரசியல் கொள்ளையர்கள்' உருவாகி, தமிழ்நாட்டின் வளங்களைச் சூறையாடி, தமிழ் வழிக் கல்வியை மரணப்பயணத்திலும், தமிழர்களை 'கள்வர்' நோயிலும் சிக்க வைதததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். ('தமிழ்நாடு 'கள்வர் நாடு' என்ற திசையில் பயணிக்கிறதா?'; http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_17.html )