Thursday, November 28, 2013


தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (4)

 

             உணர்ச்சிபூர்வ போதையின் அடித்தளங்கள்




தமிழரின் அடையாளக் கூறுகள் பற்றி தெளிவற்ற‌, உணர்ச்சிபூர்வ‌ போதை உணர்வுக்கு ஆட்பட்டு, 'தீக்குளிக்க, போராட', தயாராக உள்ள இளைஞர்கள் , பெரும்பாலும் கிராமப்புறம்/நகர்ப்புற அடித்தட்டு பின்னணியுடையவர்களாக, பெரும்பாலும் தமிழ் மட்டும் படித்தவர்களாக, கடுமையான தாழ்வு மனப்பான்மையை ( முன்னர் குறிப்பிட்ட உளவியல் ஆய்வின்படி ஈடுகட்டும் வகையிலான) முரட்டுத்தனமான உயர்வு மனப்பான்மையில் மறைத்து, கோபம், வெறுப்பு, பழிவாங்கல், வன்முறை போன்ற‌ எதிர் உணர்வு தீனிகளிலேயே வளரும்,  'வலியவராக' 'செயல்படுகின்றனர்'.

இத்தகைய போக்கானது, மீண்டும் மீண்டும், வெவ்வேறு வகையிலான, 'முள்ளி வாய்க்கால்' அழிவுகளையே, அப்பாவித் தமிழர்கள் குறிப்பிட்ட கால‌ இடைவெளிகளில் சந்திக்கும் அளவுக்கு, தற்கொலைச் சுற்றாக அமைந்து விடும்.

இத்தகைய உணர்ச்சிபூர்வ போதையில் சிக்கியவர்களுக்கு, அறிவுபூர்வமான பார்வை, அதன் விளைவாகவே மங்கிவிடும். தமது தமிழறிவை வளர்ப்பது, தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள‌ பிரச்சினைகளை ஆழமாக விளங்கிக் கொள்வது, அவற்றை அறிவுபூர்வமாக எவ்வாறு களைவது என்பது போன்ற‌ ஆக்கபூர்வமான வழிகளில் தம்மை வளர்த்துக் கொள்வதும், தமிழ், தமிழ்நாடு சம்பந்தப்பட்ட குறைகளைக் களைவதிலும் அவர்களால் ஈடுபடுவதற்கான ஆர்வமும், திறமையும், குறையத் தொடங்கும். சாகசம், வன்முறை, பழிவாங்கல் போன்ற எதிர்மறையான உணர்வு தீனிகளுக்காக ஏங்கும் மனநோயாளிகளாக, தம்மை அறியாமலேயே, அவர்கள் மாற்றம் பெறுவார்கள். (பலவருடங்களுக்கு முன் தி.மு.க சார்பில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த கலவரத்தின்போது, காவல்துறை கூட்டத்தைக் கலைக்க சுட்டதில் ஒரு இளைஞர் மரணமடைந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளிவந்தது. கலையுமாறு எச்சரித்த காவல்துறையினர் முன் குடிபோதையில் சென்று, தைரியமிருந்தால் தனது ஆண்குறியை நோக்கி சுடுமாறு சவால் விட, அவ்வாறே நடந்து அவர் பலியானதாக நான் கேள்விப்பட்ட செய்தி உண்மையாக இருக்கலாம். அந்த அளவுக்கு உணர்ச்சிபோதைப் பாதையில் தமிழ்நாடு பயணித்தது. ) 

              தமிழையே' விரயம் - waste' ஆகக் கருதும் அபாயம் 


தம்மையும், தமது குடும்பத்தையும் ( தமது குழந்தைகள் படித்தாலும், படிக்கா விட்டாலும்) நன்கு செட்டில் செய்து, தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்து, வெளியில் 'தமிழ் வழிக் கல்வி'க்காக போராடும், 'தமிழுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும்' வாழ்வதாக காட்டிக் கொள்ளும் தமிழ்/திராவிடக் கட்சித் தலைவர்களின்'போராட்டங்களுக்கு' 'விட்டில் பூச்சிகளாக' வீணாகும் திசையில் இவர்கள் பயணித்தார்கள்.  இவர்களில் சுயநலமும், குறுக்கு புத்தியும்(cunning)  உடையவர்கள், 'விவரமான' இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட 'குட்டி'த் தலைவர்களாக வளரும் போக்கில் உள்ளார்கள்.

தமிழ்நாட்டில் தற்போது இத்தகைய இரண்டாம் கட்ட, மூன்றாம்  கட்ட 'குட்டி'த் தலைவர்கள் புற்றீசல் போல் வளர்ந்து வருவதும்,  தம்மையும், தமது குடும்பத்தையும் அழித்துக் கொள்ளும் போக்கிலான 'விட்டில் பூச்சிகள் ' எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதும், 'தமிழ்' சம்பந்தப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், வெட்டவெளிச்சமாகி வருகிறது. தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் கேடாக விளங்கிய,  அறிவை அடகு வைத்த 'உணர்ச்சி பூர்வ‌ போதைப்' போக்கு வலிவிழந்து வருவதானது, இதனால் தெளிவாகிறது. 

அதே நேரத்தில், பொது மக்கள், குறிப்பாக நன்கு படித்து நேர்மையாகவும் உண்மையாகவும் வாழ்பவர்கள் ( மற்றும் அவர்கள் வழியில் தமது பிள்ளைகளை ஆங்கிலவழி நர்சரியில் சேர்த்து பயணிக்கும் கூலித் தொழிலாளர்கள்) மத்தியில், 'தமிழ், தமிழ்' என்று பேசுபவர்கள் பற்றிய இழிவான அபிப்பிராயமும், ஆங்கில வழிக் கல்வி மூலமாக வேர் பிடித்து வளர்ந்து வரும் திரிந்த மேற்கத்திய வாழ்வு முறை காரணமாக‌,  தமிழையே,  அவர்களில் பெரும்பாலானவர்களின் பார்வையில், ' விரயம் - waste' ஆகக் கருதும் அபாயமும் வளர்ந்து வருகிறது. ஏற்கனவே பார்த்த தமிழுக்கான ஆபத்துகளின் பின்னணியில், இது 'தமிழ் அழிவு சுனாமி' தொடக்கத்தின் முதல் அறிகுறியாகவும் இருக்கலாம். 

தமிழரின் அடையாளத்தோடு நெருக்கமான தொடர்புடைய பிரச்சினைகளின் கதி?


தமிழ்நாட்டில் தமிழ் உணர்வில் தீவிரமாக செயல்படும் மனிதர்களோ, கட்சிகளோ, தலைவர்களோ, தமிழரின் அடையாளத்தோடு நெருக்கமான தொடர்புடைய‌  கீழ்வரும் பிரச்சினைகளைப் பற்றி கவலைப்பட்டார்களா? கவலைப்பட்டு, அவற்றை களைய செயல்பட்டார்களா? என்பது, அவர்களின் மனசாட்சிக்குத் தான் தெரியும். இப்பிரச்சினைகள் பற்றி, அவர்களில் பலருக்கு ஏதும் தெரியாதிருந்தாலும், ஆச்சரியமில்லை. 


1.    ஒரு இனத்தின் அடையாளம் அழிவதற்கு முன், அதன் மொழியின் வீழ்ச்சியில் தான் அது தொடங்கும். மொழியின் வீழ்ச்சியானது, பயிற்று மொழி வலுவிழப்பில் ஆபத்தான கட்டத்தை அடையும்.1970 களுக்கு முன்,  உயர்நிலைப் பள்ளி வரை மிகவும் வலுவுடன் இருந்த தமிழ்வழிக் கல்வியானது, அதன்பின் ஆங்கிலவழிக் கல்வி புற்றீசல் வளர்ச்சியில் பாதிக்கப்பட்டு, இன்று தமிழ்வழி ஆரம்பப்பள்ளிகள் ஆயிரக்கணக்கில் மூடப்படும் அபாயத்தில், மரணப்படுக்கையில் இருக்கிறது . ( தமிழ்வழிக் கல்வி வீழ்ச்சியும், மீட்சியும்- http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html ) 


2.   பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளை விளங்கி, விவாதிக்க ஆர்வமும், புலமையும் வேகமாக வற்றும் அளவுக்கு, தமிழ் அறிவுப்பாலைவனமாக தமிழ்நாடு மாறிவருகிறது.( தமிழாராய்ச்சியில் நடைபெறும் தவறுகளும், தமிழுக்கான விடுதலையும்- http://tamilsdirection.blogspot.in/) 


3.  தமிழும் ஆங்கிலமும் கலந்த தமிங்கிலீஸின் அசுரவளர்ச்சி வேகத்தில், தமிழும் மரணப் படுக்கையில் உள்ளது. 


4.  வெள்ளைக்கார ஆட்சியில் அடையாளம் கண்டு, அச்சில் வெளியிடப்பட்ட  கல்வெட்டுகள் உள்ளிட்டு, தமிழரின் வரலாற்றுச் சான்றுகளான‌  பல கல்வெட்டுகள், கடந்த 30 வருடங்களில், நம்ப முடியாத அளவுக்கு, 'குவாரி'வியாபாரிகளின் லாபத்திற்காக, மலைகளில் அழிக்கப்பட்டு வருகின்றன. (உலகில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் இது நடந்திருந்தால், எந்தவித தூண்டுதலுமில்லாமல் தாமாகவே, மிகப் பெரிய போராட்டம் வெடித்திருக்கும். தமிழ்நாட்டிலோ, இது போன்ற வழிகளில்  'பணக்காரர்' ஆனவர்கள், தமக்கு ஒத்து வரும் 'தமிழ்க்' குழுக்களின் புரவலராக இருக்கும் போது, இது தமிழ்நாட்டில் ஒரு பிரச்சினையாகக் கூட வெளிப்படவில்லை.) 


5. குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் உள்ளிட்டு அனைவரும், 1960-கள் வரை விளையாடி வந்த, உள்ளும்(indoor) வெளியிலுமான(outdoor)  அறிவு வளர்ச்சியை உள்ளடக்கிய  விளையாட்டுகள், பெரும்பாலும் இன்று அழிந்து விட்டன.


சாகசம், வன்முறை, பழிவாங்கல் போன்ற எதிர்மறையான உணர்வு தீனிகளில் வளரும் 'தமிழ் இன உணர்வு' போதையில் இருப்பவர்களுக்கு, ஆக்கபூர்வமான உணர்வுகள் அடிப்படையில் விளங்கி களைய வேண்டிய மேலேக் குறிப்பிட்ட, தமிழரின் அடையாளம் சம்பந்தப்பட்ட‌ , பிரச்சினைகள், அவர்கள் பார்வைக்குப் படாததில் வியப்பில்லை.

                        ஆக்கபூர்வமான திசையில் பயணிப்பது

உலகம் முழுவதும் நன்கு படித்து , தொடர்ந்து தம்மை வளர்த்துக் கொள்ளும் போக்கிலான, மக்கள் அனைவரும் பெரும்பாலும் ஆக்கபூர்வமான திசையில் பயணிப்பதிலேயே ஆர்வமுள்ளவர்களாய் இருக்கிறர்கள். எதிர் உணர்வுகளின் ஆதிக்கத்தில் தொடர்ந்து வாழும் மனிதர்கள், பலவகையிலான உடல் சம்பந்தப் பட்ட நோய்களுக்கும், மனம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் உள்ளாவார்கள் என்பதையும், ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. 

இந்தப் பின்னணியில் ஓற்றுமையா? பிரிவினையா? என்ற கேள்விகளை அடுத்து ஆராய்வோம்.

                         ஐரோப்பிய ஒன்றியம் போல், சார்க் ஒன்றியம்


ஆங்கில வழிக் கல்வி ஆதிக்க சூழலில், தமிழ்நாட்டில் கிராமப்புற அளவில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்ப் படிப்பு மாணவர்கள் எண்ணிக்கையும், வெளிநாட்டில் வேலை பார்த்து விடுமுறைக்கு ஊருக்கு வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வேகத்தில், 'இந்தியர்' என்ற அடையாளமானது, தமிழ்நாட்டில் வலிமை பெற்று வருவதும், 'இந்தியர்' என்ற அடையாளத்தை மறுத்த, 'தமிழர்' என்ற அடையாளம் வலுவிழந்து வருவதும் பற்றி, ஏற்கனவே பார்த்தோம்.

தமிழ்வழி மீட்சி உள்ளிட்டு, தமிழரின் அடையாளக் கூறுகளை, அழிவிலிருந்து காப்பாற்ற, தமிழ்நாட்டில் வலிமை பெற்று வரும், 'இந்தியர்'என்ற அடையாளத்துக்கு இணக்கமாகவே 'தமிழர்' என்ற அடையாளம் பயணித்தாக வேண்டியது உண்மையா? இல்லையா? என்பதும் முக்கியமானதாகும். 

ஒற்றுமையா, பிரிவினையா என்ற கேள்வியை விட, ஆட்சியில் மக்கள் நலன்கள், எந்த அளவுக்கு நியாயமாக பாதுகாக்கப் படுகின்றன, என்பதே முக்கியமாகும். உலகமயமாக்கலில், மக்களின் நலன்களை, ஆட்சியாளர்கள் தமது சுயநலத்திற்காகக் காவு கொடுக்காமல் இருப்பது முக்கியமாகும். சர்வதேசச் சூழலில் சாத்தியமான, மக்களுக்கு பெருங்கேடு விளைவிக்காத முறையில், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயல்வதே புத்திசாலித்தனமாகும். பிரச்சினைகள் காரணமாக ஒரு இனத்தின் மீதோ, நாட்டின் மீதோ, சாதியின் மீதோ, மதத்தின் மீதோ வெறுப்பை வளர்ப்பது சுயநலப் பேய்களின் கொண்டாட்டத்திற்கே வழி வகுக்கும். 

ஒற்றுமையானாலும், பிரிவினையானாலும், மக்களின் நலன்களுக்கு கேடாகவும், சுயநலத் தலைவர்களுக்குச் சாதகமாகவும், அமைவது பாதகமானதே.

இன்றைய சர்வதேச சூழலில், தனி நாடுகளின் சாவரினிட்டியின் தனித் தன்மை மக்கள் நலனைப் பாதுகாப்பதில், அரசின் வலிமை பலகீனமாகி வருவதை உணர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய பாராளுமன்றம், யூரோ நாணயம் என்ற ஒற்றுமையை நோக்கி ஐரோப்பிய நாடுகள் பயணிக்கும் காலக் கட்டம் இது. ஐரோப்பிய மக்களுடன் ஒப்பிடும் போது, இந்திய துணை கண்டத்திலுள்ள, சார்க் நாடுகளிலுள்ள மக்களிடையே பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளில், வேற்றுமையில் ஒற்றுமைக்கான கூறுகள் அதிகம் உள்ளன. அக்கூறுகளை வ‌லிமைப்படுத்தும் வகையில், பொதுவாழ்வைப் பிழைப்பாகக் கொள்ளாத, மனிதாபிமானிகள் செயல்படத் தொடங்கினால், வேற்றுமையைப் பகையாக்கி, அப்பாவி பொதுமக்களையும், பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்திப் பிழைக்கும் மோசகாரக் கும்பலைத் தனிமைப் படுத்தி வலுவிழக்கச் செய்ய முடியும். பாரம்பரியம், பண்பாடு ஒற்றுமைகள் வலிவு பெறும் போது, அரசியல் ஒற்றுமை அதன் பின்னால் வந்தே தீரும். ஐரோப்பிய ஒன்றியம் போல் சார்க் ஒன்றியமும் மலர்வதில் தான், சார்க் நாடுகளிலுள்ள மக்களின் பிரச்சினைகள் பெருமளவில் தீர்ந்து, வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியும்.                                        


No comments:

Post a Comment