Wednesday, June 24, 2015


தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (6)



'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான;

நல்ல விதைகளும், நச்சு விதைகளும்


திறமைமிக்க விவசாயிகள் விதையையும், அதை விதைத்து பராமரிக்கும் முறையையும் வைத்தே, அறுவடை எப்படி இருக்கும்?  என்று கணித்து விடுவார்கள். 

அது போல சமூகத்தில் புதியவை முளைவிட்டு, வளரும் போக்கானது, அதற்கான 'அறுவடையில்' முடிவதைத் தடுக்க முடியாது. அந்த வகையில் 1944இல் முளைவிட்டு, 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளச் சிதைவானது, வளர்ந்து, எவ்வாறு அரசியல் நீக்கத்தை(depoliticize)  உருவாக்கி வளர்த்தது? என்பதை முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.

அந்த அரசியல் நீக்கமானது, பொதுவாழ்வில், எவ்வாறு கொள்கைகளை சருகாக்கி, தனிநபர் வழிபாட்டையும், மேற்கத்திய வழிபாட்டு போக்கிலான, 'சமூக ஒப்பீடு நோயையும்'(social comparison) , திராவிட மனநோயாளித்தனமாக வளர்த்தது?  அந்த போக்கிலேயே, தமிழ், தமிழர் பாரம்பரியம், பண்பாடு, கனி வளங்கள் உள்ளிட்டு அனைத்தையும் 'ஊழல் கோரப் பசியுடன்' சூறையாடி, அகத்தில் சீரழிவைத் தூண்டி, நம்பமுடியாத அளவுக்கு, இழிவான மனிதர்களை 'வளரச் செய்த' 'அறுவடையில்', இன்று மரணவாயிலில் உள்ளது?  என்பதையும் பார்த்தோம்.

இயற்கையில் 'அறுவடை' முடிந்தபின், அடுத்த விவசாயத்திற்கான விதைகள் தயாராகி விடும். மனிதர்கள் தொடர்பின்றி, வளரும் காடுகளிலும் முதிர்ந்த மரங்கள் மரணமடையும் போது, புதிய மரங்கள் வளர்ந்து காடுகளை அழியாமல் காக்கும் இயற்கையும் அப்படியே.

அப்படியென்றால், தமிழ்நாட்டில் முளை விட்டுக்கொண்டிருக்கும் 'புதிய விதைகள்' யாவை? அவற்றில் 'நல்ல விதைகள் யாவை? நச்சு விதைகள் யாவை? நச்சு விதைகளை அடையாளம் கண்டு, முளையிலேயே அகற்றாவிட்டால், தமிழ்நாடு மீண்டும் ஒரு நச்சு அறுவடையை சந்தித்தாக வேண்டும். அந்த அறுவடை நடைபெறும்போது, தமிழும், பாரம்பரியமும்,பண்பாடும் தமிழர்களிடையே மறைந்து, தமிழ் வேரற்ற தமிங்கீலிசர்கள் நாடாக தமிழ்நாடு மாறி விடும். தமிழ்நாட்டில் அறிவிலும், உழைப்பிலும், பிற மாநிலத்தவர் செல்வாக்குடன் வாழ, அவர்களை நத்தி பிழைக்கும் தரகர்களும், திருடர்களுமாக அந்த வேரற்ற தமிங்கீலிசர்கள் வாழ்வார்கள். ('காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (2)- தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து வருகிறதா?’; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html )

எனவே தமிழ், தமிழர், தமிழ்நாடு மீட்சிக்கான முளைவிடும் நல்ல  விதைகளாக, நாம் வளர முடியுமா? நச்சு விதைகளை அடையாளம் கண்டு, ஒதுக்கி, நல்ல விதைகளை ஊக்குவிக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கான விடைகளில் தான், தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் எதிர்காலம் நிர்ணயமாகும்.

"நம்மையும், நமது சமூக வட்டத்தையும் சீர் செய்து, பயணிக்கையில், 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான தெளிவான அறிகுறிகள் தெரிவதோடு, நமது உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு(passions)  இயைந்த, இயல்பான மகிழ்ச்சியோடு கூடிய வாழ்வு வாழ முடியும்." என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம். 

நமது சமூக வட்டத்தை சீர் செய்ய உதவும் செயல்நுட்பம் பற்றியும், அதில் வெற்றி பெற, 'நல்ல விதையாக' நாம் வளர,  நமது அகவாழ்வில் செய்ய வேண்டிய ஆக்கபூர்வ மாற்றங்கள் பற்றியும் இங்கு பார்ப்போம்.

“ நமது மூளை ஆனது,  கணினி செயலாற்றி (processor)  போன்றுள்ள ஒரு மனித செயலாற்றி ஆகும். நமது மூளை என்னும் செயலாற்றியானது,  உள்ளார்ந்த ஈடுபாடுகள்(passions) , அன்பு, லாபநட்ட நோக்கில்லாத சேவை போன்ற ஆக்கபூர்வ உணர்வுகளில் ( Positive feelings)  செயல்படும்போது, நாம் ஒரு ஆக்கபூர்வ அலையியற்றி  ( Positive Oscillator) போல் வாழ்வோம். மாறாக சமூக ஒப்பீடு நோயில் சிக்கி, அழுக்காறு, ஏமாற்றம்,கோபம், வெறுப்பு, வஞ்சம்,பழி வாங்கல், சுய அனுதாபம், போன்ற எதிர் உணர்வுகளில் செயல்படும்போது, நாம் ஒரு அழிவுபூர்வ அலையியற்றி  (Negative Oscillator) போல் வாழ்வோம். நேர் உணர்வுகள் (Positive Feelings)  செயல்பாட்டில் மூளை இருக்கும்போது,  நோய்கள் நம்மை அண்டாது. எதிர் உணர்வுகள் (Negative Feelings)  செயல்பாட்டில் மூளை இருக்கும்போது, நோய்கள் நம்மை தாக்கும். https://www.youtube.com/watch?v=W81CHn4l4AM

ஓரு அழிவுபூர்வ அலையியற்றியான நபர்,  தமது சமுக வட்டத்தில் ஒப்பீடு நோயைப் பரப்பும் நோய்க்கிருமியாகி விடுவார். அவரது சமூக வட்டத்தில் இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் வாழ்பவர்கள் எல்லாம்,  அவரை விட்டு விலகி விடுவார்கள். அதன் விளைவாக அவரது சமூக வட்டமே ஒப்பீடு நோயில் சிக்கிய, 'எந்த வழியிலும்' பணம் சம்பாதிக்க முயலும்  வட்டமாகி , சமூகத்திற்கே கேடாக அமையவும் வாய்ப்புண்டு.” என்பதையும்; ஏற்கனவே பார்த்தோம்.  (“இன்பத்தைத் திருடும் ஒப்பீடு" -  தியோடர் ரூஸ்வெல்ட்;  "Comparison is the thief of joy" Theodore Roosevelt; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html )

"தமிழ்நாட்டில்  ஒருவர் தனது குடும்பம், நட்பு உள்ளிட்ட‌  சமூக வட்டத்தில் இன்னொருவருடன் இயல்பாக உரையாடுவது, என்பது பெரும்பாலும் முடியாத காரியமாகி வருகிறது. தம்மை விட செல்வம் செல்வாக்கில் மேலான நபர் எனில், அவரிடம் குழைந்து, வாலாட்டி காரியம் சாதிக்கும் நோக்கில் பழகுவது; கீழான நபர் எனில் ஒதுக்குவது: சம அளவில் உள்ள நபர் எனில் இயன்ற அளவுக்கு தம்மை விட கீழ் என மட்டம் தட்டுவதிலேயே குறியாக இருப்பது; 

மேலேக் குறிப்பிட்ட மூன்று வகைகளில் ஒரு நபர் நம்மிடம் எந்த வகையில் பழகினாலும், அது ஒரு இயல்பான மனிதர் பழகுவதாக இல்லாமல் செயற்கையாகத் தானே இருக்கும்." என்பதையும்;

"நமது மனத்தின் விருப்பு வெறுப்பற்ற நிலையை சுழி நிலையாகவும், அன்பு,  கருணை, உதவுதல் போன்ற உணர்வுகளை நேர் (Positive) மதிப்புகளாகவும், கோபம், வெறுப்பு, பழி வாங்கல் போன்ற உணர்வுகளை, எதிர் (Negative)  மதிப்புகளாகவும் கொள்வோம்.

பொதுவாக, நமது வாழ்வு மேற்குறிப்பிட்ட நேர் மற்றும் எதிர் மதிப்புகளுக்கிடையில் ஊசலாடும், அலையைப்(wave)  போன்றே அமைந்திருக்கும். நமது மனதில் கீழ்வரும் மாற்றத்தை நாம் விரும்பி ஏற்படுத்தினால், நமது அக வாழ்வும் அதற்கேற்ற வகையில் மாறிவிடும்.

ஒரு மின்கடத்தியில் (Electrical conductor)  நேர் மின்னூட்டங்கள்(Positive charges)  இருக்கலாம். அல்லது எதிர் மின்னூட்டங்கள் (negative charges) இருக்கலாம்.நேர் மின்னூட்டங்களாக இருந்தாலும், எதிர் மின்னூட்டங்களாக இருந்தாலும், அந்த கடத்தி பூமியுடன் தொடர்பு கொண்டால் (Earthed) , அம்மின்னூட்டங்களை பூமி ஏற்றுக் கொள்ள, மின்கடத்தியில் உள்ள மின்னூட்டங்கள் வெளியேறிவிடும். நமது மனதுக்குள் நாம் அனுமதிக்கும் நேர் உணர்வுகளை, நேர் மின்னூடங்களாகவும், எதிர் உணர்வுகளை எதிர் மின்னூட்டங்களாகவும், கற்பனை செய்து கொள்ளலாம். நாம் நமக்கு எஜமானனாக வாழ்வது உண்மையானால், தனது விருப்பத்திற்க்கேற்றார்ப் போல் செயல்படும், வித்தியாசமான‌ மனித மின்கடத்தியாக ( Human conductor with options)   நமது வாழ்வை, நாம் மாற்றலாம். நமது மனதை, எதிர் உணர்வுகளுக்குள்ளாக்கும் மனிதர்களையும், மற்ற காரணங்களையும் , பூமியுடன் தொடர்பு கொள்வது போல், உலகில் உள்ள மற்ற மனிதர்களில், மற்றவற்றில் ஒன்றாக, மனதில் கருதி, பூமித் தொடர்பு அகற்றல் (Earthed)  மூலம், எதிர் உணர்வுகளை அகற்றலாம். 

நமது மனதை விருப்பப்படும்போது, 'பூமித் தொடர்பு' கொள்ளும் திறமையை வளர்த்துக் கொண்டால், எதிர் உணர்வுகளுக்கு இடம் இருக்காது. அவ்வாறு மாற்ற வேண்டுமானால், எதிர் உணர்வுகளின் மூலங்களாக செயல்படும் மனிதர்களையும், இடங்களையும், சூழலையும், நமது மனதளவில் உலகில் உள்ள, மற்ற மூன்றாம் மனிதர்களைப் போலக் கருதும் திறமை வேண்டும். அதாவது மனதளவில் அந்த உறவுகளிடமிருந்து விடுபட வேண்டும். அதை அவர்களுக்குத் தெரிவித்து புண்படுத்துவதும் எதிர் உணர்வுக்கு இடமளிப்பதே ஆகும். எனவே அவர்களுக்கு அதைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களிடம் அவர்கள் எதிர்பார்க்கும், உங்களால் இயன்ற பொருள் உதவிகள் வழங்குவதை, நீங்கள் நிறுத்தவில்லையென்றால், அதை அவர்கள் தெரிந்துகொள்ளப் போவதில்லை.அவ்வாறு விடுபடும்போது, அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளையும் விரும்பி ஏற்க வேண்டும்; நம்மிடம் உதவிகள் பெற்றுக் கொண்டே, நாம் கைவிட்டு விட்டதாக நம்மை இழிவுபடுத்தி, 'பிரச்சாரம்' செய்வது உள்ளிட்டு.

அதனால் 'லாப' மடையும்  அந்த நபர்கள் நம்மை முட்டாளாகக் கருதுவதைப் பற்றி கவலைப்படக் கூடாது." என்பதையும்; ஏற்கனவே பார்த்தோம். (refer post dt. September 14, 2014;’தமிழ்நாட்டில் சமூக மூச்சுத் திணறலின் முடிவும், திறந்த காற்றோட்டமும்( The end of the social suffocation in Tamilnadu & Free Ventilation';
http://tamilsdirection.blogspot.in/2014/09/v-behaviorurldefaultvmlo.html)   
'செல்வம், செல்வாக்கு, பாராட்டு'களுக்கு ஏங்கும் மனநோயாளிகளின் எதிர்ப்புகளை மலடாக்கி, மீட்சிக்கு பங்களிக்கும் செயல்நுட்பம் இதுவாகும்.

மேலே குறிப்பிட்ட செயல்முறைகளை பின்பற்றி, 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான,  நல்ல விதையாக நாம்  வளரமுடியும்; நச்சு விதைகளை அடையாளம் கண்டு ஒதுக்க முடியும். அரசியல் நீக்கம் மூலமாக, கொள்கைகள் சருகாகி, அரசியல்  அடித்தளம் இழந்து, 'ஆதாயத் தொண்டர்கள்/ஆதரவாளர்கள்' பலத்தில், வெளிச்சம் போடுபவர்களின் அரசியல் மரணம் நெருங்கியுள்ள சூழலில், தமிழ்நாடு உள்ளது. எனவே மீட்சிக்கான அடித்தளத்தினை, நம்பிக்கையுடன் உருவாக்க,  நம்மால் முடியும்.

(வளரும்)

No comments:

Post a Comment