Sunday, October 5, 2014

  வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்கிய தமிழ்நாடு


தெருவில் நடக்கும் போது, புழுதிக் காற்றில் சிக்கினால், முதலில் பாதிக்கப்படுவது கண்களே. உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறி, தண்ணீரில் முகத்தையும் கண்களையும் நன்கு கழுவிய பின் தான், ஒழுங்காகப் பார்க்க முடியும். மேலேக் குறிப்பிட்ட புழுதிக் காற்று என்பது கண் பார்வையைப் பாதிக்கும், கண்களைக் கழுவாத வரையில்.

தெருவில் நடப்பது போல், சமூகத்தில் நாம் பயணிக்கும் போது நம்மைச் சுற்றி நடப்பவைகளைப் பார்க்கிறோம். காதில் கேட்பது, கண்கள் மூலம் பார்ப்பது, படிப்பது உள்ளிட்டு நமது புலன்கள் தரும் உள்ளிடுகளை(inputs)  அடிப்படையாகக் கொண்டு, நமது அறிவு அனுபவத்தைக் கொண்டு பார்க்கின்ற பார்வை அதுவாகும். அவ்வாறு ஒழுங்காகப் பார்க்கத் தெரியாத கண்ணைப் பற்றியே கீழ்வரும் திருக்குறள் குறிப்பிடுகிறது.
 
‘பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்' திருக்குறள் 573

பாடற்கு ஒரு பண் இயைபு உள்ளதா, இல்லையா என்று வைரமுத்து போன்ற பாடலாசிரியர்களுக்கே தெரியுமா என்று கேள்வி எழும் நிலையில் தமிழ்நாடு உள்ளது. (‘பாடல் எழுத்தொலியின் சுருதி சுத்தம் (pitch accuracy of the letter’s sound in a song) வைர‌முத்துக்குத் தெரியாதா?’ ; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html  )

கண் பார்வைக் குறைபாடுகளில் வண்ணங்களைப் பார்க்க முடியாத குறைபாடு 'வண்ணக் குருடு' (Colour Blindness) என்று அழைக்கப்படும். அதே போல் சமூகத்தில் எதையும் சரியாகப் பார்க்கத் தெரியாதக் குறைபாட்டை ' சமூக‌ வண்ணக் குருடு' (Social Colour Blindness) என்று அழைக்கலாம். வழிபாட்டுப் புழுதிப் புயலில் 'பெரியார்' ஈ.வெ.ரா சிக்கியதை உதாரணமாகக் கொண்டு, சமூக வண்ணக் குறைபாட்டைப் பற்றிய விளக்கம் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளது.( http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html )

அந்த நோக்கில் சமூகத்தில் உள்ளவற்றை சரியாகப் பார்க்கும் கண் உள்ளவர்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வரும் நாடாக உள்ளதா என்று கேள்வி எழும் நிலையில் தமிழ்நாடு உள்ளது. அந்த கேள்வி எழக் காரணமான ‘வழிபாட்டுப் புழுதிப்  புயல்’ பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

மார்க்ஸ், லெனின், மாவோ, காந்தி, 'பெரியார்' ஈ.வெ.ரா, அம்பேத்கார் முதல் பாரதி, முத்துராமலிங்கத் தேவர் வரை அந்த வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்காதத் தலைவர்களே இல்லை எனும் அளவுக்கு தமிழ்நாடு உள்ளது. 
 
வழிபாட்டுப் புழுதியில் பாரதி சிக்கியதால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலில் பார்ப்போம்.

பாரதியின் கவிதைகளில் உள்ள இலக்கண அடிப்படையிலான குறைபாடுகள் பற்றி 1950களில் ஒரு புத்தகம் வெளிவந்து,  இன்று தேடினாலும் கிடைக்காத அளவுக்கு இருட்டில் உள்ளது. அவ்வாறு புத்தகம் எழுதியது தவறா? அல்லது அதை விவாதிக்காமல் , இருட்டில் சிக்க வைத்தது தவறா? பாரதியின் வழிபாட்டுப் புழுதியில், ஒரு அறிவுபூர்வமான விவாதத்திற்கு இடம் கிடையாதா? அந்த போக்கு தான் இன்றைய எழுத்தாளர்கள் இலக்கண விதிகளை மதிக்காமல் எழுதுவதற்கு ( திரு. முருகனின் 'மொழிப் பார்வைகள்') வித்திட்டதா?
தமிழில் இலக்கணக் குறைபாடுகளுடன் கவிதைகள் எழுதி, அக்குறைகளைக் கண்டு கொள்ளாமல் பாராட்டும் போக்கும் பாரதியில் தான் துவங்கியதா என்பது ஆராயப்பட வேண்டும். 

ஒரு 'தலித்'த்த்ற்கு 'பூணூல்' அணிவித்து, 'பிராமணனாகி விட்டாய்' என்று அறிவித்த பாரதி, தனது மகளுக்கு மாப்பிள்ளை தேடி, மணமுடித்த வேளையில், 'பொறுப்புள்ள பிராமண தந்தையாக' நடந்தது முரண்பாடில்லையா? என்பதும் ஆய்விற்குரியதாகும். பாரதியின் படைப்புகள் எந்த காலக் கட்டத்தில், எந்த‌ சமுக அரசியல் சூழலில் செல்வாக்கு பெற்று வளர்ந்தது, அதற்கு யார் யார் என்னென்ன காரணங்களுக்காக பங்களிப்பு வழங்கினார்கள் என்பதும் ஆய்விற்குரியதாகும்.

உணர்ச்சிபூர்வகாற்றிலேயே தான் வழிபாட்டுப் புழுதி வலிமை பெற்று வளர்கிறது என்பது பற்றி அடுத்து பார்ப்போம்.

"நாம் இப்படியே எவ்வளவு காலம் பேசிக் கொண்டிருக்கிறோம்? தனித்தமிழ்நாடுக்கு எப்போது முயற்சி செய்யப் போகிறோம்?" என்று, நான் 'பெரியார்' இயக்கத்தில் இருந்த சமயம், ஒரு 'தோழர்' அடிக்கடி – ‘தனித் தமிழ்நாடு’ உணர்ச்சிபூர்வ போதையில் - என்னிடம் கேட்பார். ராஜிவ் கொலைக்குப் பின், 'ராஜிவ் கொலையும், சதிகளும்' புத்தகம் வெளியிட்டு, மத்திய, மாநில உளவுத் துறையினர் 'அடிக்கடி' என்னையும், மற்ற 'திருச்சி பெரியார் மைய'த் தோழர்களையும் விசாரிக்க ஆரம்பித்த பின், அவர் பெரியார் இயக்கத்தை விட்டே ஒதுங்கி விட்டார். அந்த சமயத்தில் தஞ்சை வ‌ந்திருந்த ஜெயகாந்தனைச் சந்தித்து, அந்த புத்தகத்தை நான் கொடுத்தேன். தலைப்பைப் பார்த்து, அதை வாங்க மறுத்து விட்டார். மத்திய அரசு தொடர்பான‌ நெருக்கடி நிலை, தடா, பொடா உள்ளிட்டு எந்த அநீதியையும் எதிர்க்காத‌ 'புத்திசாலித்தனமான முற்போக்கு' எழுத்தாளர் அவர். தமிழ்நாட்டில் பாரதி வழிபாட்டு புழுதிப் புயலுக்கான, உணர்ச்சிபூர்வ போதைக் காற்றை உருவாக்கியவர்களில் முதலிடம் வகிப்பவர் அவர்.ஜெயகாந்தன் உள்ளிட்டு எந்த எழுத்தாளராவது தமிழின் மரணப் பயணத்தைக் குறித்து எழுதியிருக்கிறர்களா? தமது பிழைப்பிற்கான சமூக வட்டத்தில் உள்ளவர்களின் தவறுகளையும் இழிவுகளையும் பற்றி மெளனமாக இருந்து கொண்டு, உலகில் நடக்கும் 'கொடுமைகள்' பற்றி எழுதுவது, 'முதலைக் கண்ணீர்' ஆகாதா? அத்தகையோரே தமிழின் மரணப் பயணத்தைப் பற்றி இதுவரை எழுதாதவர்களா? என்ற கேள்விகளும் ஆய்விற்குரியதாகும். அடுத்து பாரதிக்கும், அண்ணாவுக்கும் உள்ள ஒரு ஒற்றுமையைப் பார்ப்போம். 

பிரிவினைத் தடைச் சட்டம் வரப் போகிறது என்று தெரிந்தவுடன், தி.மு.க பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்துக்கு எதிராக, 'பிரிவினையைக் கைவிடுகிறேன்; பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன' என்று அறிவித்தார் அண்ணா. (உணர்ச்சிபூர்வ போதையில் சிக்கிய‌ 'தனி நாடு' முயற்சிகள் பற்றிய விளக்கத்திற்கு:‘தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (3)-'தனி நாடு' உண்மையில் தனி நாடா?’;http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_26.html

காலனிய ஆட்சியை எதிர்த்து, இந்திய விடுதலைக்காக உணர்ச்சிபூர்வ வீரமாக பேசியும் எழுதியும் வந்த பாரதி, சென்னையில் 'தமிழரான உளவுத் துறை அதிகாரியின் 'உதவியில்'(?) கைதாகாமல் தப்பிக்க, புதுச்சேரி சென்றார்.(நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை -   ‘என் கதை’). பின் சில காலம் கழித்து, 'எதிர்ப்பைக் கை விடுகிறேன்' என்று புதுச்சேரியில் உளவுத் துறை அதிகாரியிடம் தெரிவித்துவிட்டு, கைது செய்ய மாட்டார்கள் என்று நம்பி, கடலூர் வந்து கைதுக்குள்ளானார். அதன்பின் சிறையில் இருந்து காலனிய அரசுக்கு ஒரு மடல் எழுதினார். அதில் " பிரிட்டிஷ் அரசுக்கு என்றும் விசுவாசமாகவும், சட்டத்திற்கு கட்டுப்பட்டவனாகவும் நான் இருப்பேன். எந்த வகையான அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டேன். இதனை மீண்டும் மாட்சிமை மிக்க அரசுக்கு உறுதி கூறுகிறேன். எனவே மாட்சிமைமிக்க அரசு உடனே என்னை விடுதலை செய்யுமாறு மன்றாடுகிறேன்." என்று முடித்துள்ளார். (I once again assure your Execellency that I have renounced every form of politics, I shall ever be loyal to british Government and law abiding. I therefore beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life. I beg to remain
Your Excellency’s most obedient servant.
C. Subramania Bharathi) (முழு மடல் கீழே)

பின் விடுதலையாகி ஊருக்குத் திரும்பிய பாரதி ரவுலட் சட்டத்தையும் எதிர்க்க வில்லை; ஜாலியன்வாலா பாத் படுகொலையையும் கண்டிக்கவில்லை. பாரதி 'அரசியல் துறவு பூண்டதால்' அது தவறல்ல என்றும், மேற்குறிப்பிட்ட மடலை 'மன்னிப்பு' என்பதும், 'நிபந்தனையற்ற சரண்' என்பதும் பாரதியைக் கொச்சைப் படுத்துவதாகும் என்றும் இன்றும் பாரதி அன்பர்கள் வாதிடுகிறர்கள்.

பாரதியின் இறுதி ஊர்வலத்தில் மிகக் குறைவானவர்கள் கலந்து கொண்டதற்கு  அவர் காலனிய அரசு எதிர்ப்பைக் கைவிட்டதும் ஒரு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதே ஆகும்.
ஆக அண்ணா 'பிரிவினை அரசியல் துறவு' மேற்கொண்டதற்கு முன்னோடியாக பாரதி இருந்துள்ளார். எனவே உணர்ச்சிபூர்வ வீரமாக பேசி விட்டு, எழுதி விட்டு, பின் நெருக்கடி வரும்போது பின் வாங்கும் திராவிட அரசியல் போக்கிற்கு முன்னுதாரணமாக பாரதி இருந்துள்ளார்.

1944இல் பொது அரங்கில் அறிவுபூர்வபோக்கு தடம்  புரண்டு, உணர்ச்சிபூர்வ போக்குகள் அரங்கேறிய பின், 'பெரியார்' ஈவெ.ரா அண்ணாதுரை மீதும், அண்ணாதுரை தவிர்த்த பிற தி.மு.க தலைவர்கள் 'பெரியார்' ஈ.வெ.ரா மீதும், எதிரெதிர் அணியினரை இழிவு படுத்தும் போகும் அரங்கேறியது. அதில் 'பெரியார்' ஈ.வெ.ரா சுயநல நோக்கில் ஈடுபட்டதாக, அவரின் கொள்கை எதிரிகளும் குற்றம் சாட்ட மாட்டார்கள். அந்த போக்கின் அடுத்த கட்ட தாழ்வாக, சொந்த கருத்து வேறுபாடுகளுக்காக, பாரதிதாசனுக்கும் அண்ணாதுரைக்கும், பாரதிதாசனுக்கும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவிற்கும் இடையே நடந்த 'உணர்ச்சிபூர்வ இழிவு படுத்தும் போக்கு அரங்கேறியது. பின்னர் அதன் தொடர் வீழ்ச்சியாக,   'அதில் ' 'சிறப்பு பேச்சாளர்கள்' கட்சிகளில் புற்றீசல் போல் வளர காரணமானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். தமிழின், தமிழரின் வீழ்ச்சிப் போக்கினை ஆராயும் நோக்கில், பாரதி, பாரதிதாசன் தொடர்பான, 'இருட்டில்' உள்ள, மேற்குறிப்பிட்டது போன்ற, அனைத்து சான்றுகளில் உள்ள தகவல்களை, வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, இழிவுபடுத்தும் நோக்கின்றி, அறிவுபூர்வ பாடங்கள் கற்கும் நோக்கில், விவாத்திற்குள்ளாக்க வேண்டிய நேரமும் வந்து விட்டதாக, கருதுகிறேன்.

உண்மையான துணிச்சலுடனும், தியாகத்துடனும் 'பெரியார்' ஈ.வெ.ரா மேற்கொண்ட முயற்சிகள் 'நோய் பிடித்த தாவரத்தின் நோய் மூலமாக அதன் ஆணி வேரை’க் - தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு - கருதி அகற்றிய வைத்தியமாகிவிட்டது. தமிழ் மொழி, பாரம்பரியம், மற்றும் பண்பாடு,  தமிழர்க்கு கேடேன்று கருதி, மேற்கொண்ட வைத்தியமாக அது அமைந்தது. மேலேக் குறிப்பிட்ட திராவிட அரசியல் போக்கில், 'பெரியார்' ஈ.வெ.ராவையே வீழ்த்தி, ராஜாஜி துணையுடன் தி.மு.க வளர்ந்து ஆட்சியைப் பிடிக்க அது சாதகமானது.அதன் விளைவாக 'கடவுள் வழிபாடு' கேலிக்கு உள்ளான போக்கில், 'அந்த' வழிபாட்டு முறைகள்' 'திராவிடக் கட்சிகளின் தலைவர்கள்' 'வழிபாட்டிற்கு' இடம் பெயர்ந்ததா? தமிழும் கேலிக்கு உள்ளாகி, ஆங்கில வழி போதையில் பெற்றோர்கள் சிக்கி, அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருந்தால் தான், குழந்தைகளின் புலன் உணர்வுகள் தொடர்பான மூளை வளர்ச்சிக்கு நல்லது என்ற உலக ஆய்வுகளைப் புறக்கணிக்க வழி வகுத்ததா? என்பதும் ஆய்விற்குறியவையே ஆகும்.

'பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியர் தமக்கு தமிழ் இலக்கணத்தைக் கற்பிக்க மிகவும் முயற்சி செய்தும் வெற்றிபெறவில்லை' என்று அண்ணா வெளிப்படுத்திய தகவல், அவரின் வாழ்க்கை வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. 

“ என் மதிப்பிற்குரிய இரண்டு தமிழாசிரியர்களான மணி திருநாவுக்கரசு, மோசூர் கந்தசாமி முதலியார் இருவரும் மிகவும் பாடுபட்டனர், எனக்கு இலக்கணம் கற்பிக்க! நான் தமிழின் இனிமை பற்றி மட்டுமே அறிந்து கொள்ள முடிந்தது. இலக்கணப் பயிற்சியில் என்னை வெற்றி பெறச் செய்வதிலே எனது இரு ஆசிரியர்களும் வெற்றி பெற முடியவில்லை." என்று கூறினார் அண்ணா.
பக்கம் 24; பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு, தமிழ் நிலையம் 2008

இலக்கண அறிவின்றி, செவி மூலம் உணரும் ஓசை அறிவின் அடிப்படையில் பேச்சில், எழுத்தில் எதுகை மோனையைப் பயன்படுத்தும் போக்கு வளர்ந்ததற்கு அண்ணாவே காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். உதாரணமாக; சிங்கம் குகை வாழ் மிருகமா? குகையாய் இருந்தாலும், வீடாய் இருந்தாலும் தொந்திரவற்ற சுவரில் சிலந்தி கூடு கட்டதா? சிங்கத்தைப் பார்த்தவுடன் மனிதர்கள் பயப்படுவதை போல, சிலந்தி, கொசு உள்ளிட்ட சிறிய பூச்சி வகைகள் பயப்படுமா? என்ற அறிவுபூர்வ ஆராய்ச்சியின்றி; 'சிங்கத்தின் குகைக்குள் சிலந்திகள் கூடு கட்டிவிடக்கூடாது' என்று தி.மு.கவினரின் எழுத்துக்களிலும், பேச்சுகளிலும் வெளிப்படுவதானது;

பாரதி பாணி உணர்ச்சிபூர்வ‌ போதையை அரசியலில் வளர்க்க, பேச்சில், எழுத்தில் எதுகை மோனையைப் பயன்படுத்தும் போக்கிற்கு மிகவும் உதவியது. பாரதியின் படைப்புகளைப் போல, அண்ணாவின் படைப்புகளில் இலக்கணப் பிழை உள்ளதா, இல்லையா என்பது பற்றி எவரும் ஆராய்ச்சி மேற்கொண்டதாக தகவல் இல்லை.

இன்று தமிழ்நாட்டில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உள்ள தமிழ்ப் பாட புத்தகங்களிலேயே நிறைய இலக்கணப்பிழைகள் இருப்பதைத் தமிழ்ப்புலமையாளர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். தி.மு.க தலைவரின் 'தொல்காப்பியப் பூங்காவில்' இருந்த பிழைகளை வெளிப்படுத்திய தமிழ்ப்புலமையாளர் சாகும் வரை தன் நண்பர்களின் பாதுகாப்போடு வாழ வேண்டி நேரிட்டது. தமிழில் இத்தகைய இலக்கணப் பிழைக்கு வித்திட்டது பாரதியா என்பதும், பாரதி, அண்ணா உள்ளிட்டு பல தலைவர்களின் வழிபாட்டுப் புழுதியின் ஊடே தான், அந்த வித்து இன்று ‘செழித்து வளர்ந்து’  தமிழைச் சீரழித்து வருகிறதா என்பதும் ஆய்விற்குரியவைகளே.  

வழிபாட்டுப் புழுதிப் புயலில், உணர்ச்சிபூர்வ‌ போதைக் காற்றைப் பயன்படுத்த, தேச,  சர்வதேசச் சதிகள் இருக்கலாம் என்ற ஐயத்தை எழுப்பும் வகையில், முத்துராமலிங்கத் தேவர் தொடர்பான வழிபாட்டுப் புழுதிப் புயல் உள்ளது. (தனிநாடு, ஆயுதப் போராட்டம், பெண்ணுரிமை, மனித உரிமை, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு போன்ற பல நோக்கங்களில் செயல்படும் இயக்கங்கள் எல்லாம் சர்வதேசச் சதியில் சிக்க வாய்ப்புள்ள பின்னணியில்  வெளிவந்துள்ள ஆங்கில நாவல் ‘The Aquitaine Progression’ by Robert Ludlum)   
.
இந்தியா விடுதலைக்கு முன் காலனி ஆட்சியில் உளவுப் பிரிவினர் செயல்பாடு பற்றிய இரகசியங்களும், அந்த செயல்பாடுகள் நேரு ஆட்சியில் எவ்வாறு தொடர்ந்தன என்பது பற்றிய இரகசியங்களும் 'இரகசிய நீக்கம்' (Declassify) செய்யப்பட்டு வெளிவரும் போது தான் உண்மைகள் வெளிப்படும்.மோடி ஆட்சியில் அக்கருத்துள்ளவர்கள் அமைச்சர்களாயிருப்பதால், அதற்கு சாத்தியமிருக்கிறது. 

விடுதலைக்குப் பின், பிரதமர் நேருவுக்குத் பாராளுமன்றத்தில் தலைவலியாக இருந்த பிரச்சினை,  நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் மறைவு(?) பற்றி முத்துராமலிங்கத் தேவர் பேசிய பேச்சுக்களே ஆகும். அவை பாராளுமன்ற நூலகத்தில் இன்றும் சாட்சி ஆவணமாக இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் அந்த காலத்தில் நேருவை எதிர்த்து துணிச்சலுடன் பொதுக்கூட்டங்களில் முத்துராமலிங்கத் தேவர் பேசியுள்ளார்.

தேவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் அவரை ஆன்மீகமும், தேசபக்தியும் மிகுந்த நேதாஜியின் சீடராகவே வெளிப்படுத்துகின்றன. காமராசர் ஆட்சியில் முதுகளத்தூர் கலவரத்தில் அவரை, 'இலாவகமாக'ச் சிக்க வைத்து, 'சாதித் தலைவராக' ஊதிப் பெருக்க வைத்து, பின் அவர் மரணமடைந்ததில், மேலேக் குறிப்பிட்ட 'தலைவலியிலிருந்து' நேரு விடுதலைப் பெற்றார். முதுகளத்தூர் உள்ளிட்டு தமிழ்நாட்டில் இன்று வரை நடந்து வரும் சாதிக் கலவரங்களில் 'வெளி சக்திகளின்' பங்கு பற்றிய ஆய்வு அவசியமாகும். திருச்சி பெரியார் மையத்தில் நான் பங்காற்றிய காலத்தில் தோட்டக்குறிச்சி, நெற்குப்பை, ராஜபாளையம், போடி, சாதிக் கலவரங்களை நேரில் சென்று, ஆய்வு செய்தோம். அந்த அறிக்கைகள் 'விடுதலை' இதழிலும், புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன. அது போன்று 'திறந்த மனதுடன், அறிவு நேர்மையுடன்' ஆய்வுகள் முதுகளத்தூர் முதல் இன்றுவரை நடந்துவரும் சாதிக் கலவரங்கள் வரை மேற்கொள்ளப்பட்டால், அந்த 'வெளி சக்திகள்' பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிப்பட வாய்ப்புண்டு. தமிழ்நாட்டில் வீசி வரும் வழிபாட்டுப் புழுதிப் புயலில், அதற்கெல்லாம் வாய்ப்பு உண்டா?

நேதாஜி தொடர்பாக முத்துராமலிங்கத் தேவர் பேசியுள்ள பேச்சுகளுக்கு வலிவு சேர்க்கும் சான்றுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.உதாரணம் கீழுள்ள தளங்கள்:
http://www.firstpost.com/blogs/secret-document-raises-questions-about-netajis-death-1259707.html
http://www.hindustantimes.com/news/specials/Netaji/netajihomepage.shtml


பல வருடங்களுக்கு முன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சென்னை 'ரவுடி' வீரமணி தொடர்பாக ஊடகங்களில் வந்த செய்திகளில்;  (http://www.frontline.in/static/html/fl2016/stories/20030815007913400.htmகீழ்வரும் முக்கிய தகவலானது, இடம் பெற்றதாக தெரியவில்லை.

சென்னை மாநிலக்கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில்,  'தலைமை விருந்தினராக' (Chief Guest) கலந்து கொள்ளும் அளவுக்கு, அந்த கல்லூரியின் மாணவர் தேர்தலில் முக்கிய பங்கு வகித்தவர் அந்த 'ரவுடி' வீரமணி ஆவார். அந்த செல்வாக்கில், அரசியலில் நுழைந்து அமைச்சராகும் அளவுக்கு, அவருக்கு 'கூறு' இல்லாததாலேயே, அவர் மரணமடைந்தார், என்பது எனது கருத்தாகும். அவ்வாறு அவர் அமைச்சராகியிருந்தால், அவர் காலில் விழுந்து, துணை வேந்தர் பதவி பெற, போட்டி போடும் பேராசிரியர்கள் வாழும் நாடாக தமிழ்நாடு உள்ளது. 'ரவுடி' வீரமணிக்கு 'இன்னும் அதிக கூறு' இருந்திருந்தால், தமிழ்நாட்டில் 'காசுக்காக' துதி பாடும், 'அறிவு விபச்சார' கவிஞர்களும், எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் புகழ் பாட, 'தமிழ்ப் புரவலராகவும்' வலம் வந்திருக்க முடியும். 

பேராசிரியர்களும், துணை வேந்தர்களும் கட்சித் தலைவர்கள், முதல்வர்கள் காலில் விழுந்து வணங்கும் நாடாக தமிழ்நாடு உள்ளது. ரசிகர்கள் நடிகர்களுக்கும், கட்சித் தொண்டர்கள் தலைவர்களுக்கும் கடவுளர்களாகக் ‘கட் அவுட்வைத்து பாலாபிசேகம் செய்வதைக் குறை சொல்ல முடியுமா?

வழிபாட்டுப் புழுதிப் புயலிலிருந்து தமிழ்நாடு மீண்டால் தான், ' சமூக‌ வண்ணக் குருடு' (Social Colour Blindness) நோயில் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்ற முடியும். வழிபாட்டுப் புழுதிப் புயலானது  உணர்ச்சிபூர்வ போதையின் காரணமாக வலிவு பெற்றுள்ளது. உணர்ச்சிபூர்வ போதையிலிருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டுமானால், எதிரெதிர் அணிகளில் உள்ளவர்கள், கருத்து வேறுபாடுகளை மதித்து அறிவுபூர்வமாக விவாதிப்பதை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு அவர்கள் 'மற்றவர் பார்வை அடிப்படையிலான உணர்வுகள்'(Empathy )  பற்றிய புரிதலைச் செயல்படுத்த வேண்டும். 

ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் மத்தியில் முஸ்லீம் மற்றும் பெரியாரியல் அறிஞர்களும், முஸ்லீம் மற்றும் பெரியார் அமைப்புகளின் ஆதரவாளர்கள் மத்தியில் இந்துத்வா அறிஞர்களும் தமிழ்நாட்டில் உரையாற்றி, அவரவர் நிலைப்பாடுகளை மதித்து விவாதிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். சாதி மோதல்களில் எதிரெதிர் அணிகளில் உள்ள அந்தந்த சாதிகளைச் சேர்ந்த அறிஞர்கள் சந்தித்து,  அந்த முறையில் விவாதிக்க வேண்டும்.  எந்த அமைப்பிலும் அடிமட்டத்திலுள்ள 'ஆதாயமற்ற' தொண்டர்கள் மத்தியில் இத்தகைய விவாதங்கள் நடைபெற சாத்தியம் இருக்கிறது. முயன்றால் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது. வன்முறை தீர்வாகாது.சாதி, மதக் கலவரங்கள் நடக்கும்போது, இரண்டு பக்கங்களிலும் பாதிக்கப்படுவது அடிமட்டத்தில் வாழ்பவர்களே. தலைவர்களும், அவர்களது குடும்பத்தினரும் இதுவரைப் பாதிக்கப்பட்டதில்லை. இனியும் பாதிக்கப்படப் போவதில்லை.

தமிழ் உணர்வு, பெரியார், இந்துத்வா ஆதரவாளர்களை உள்ளடக்கிய‌ எனது சமூக வட்டத்தில் கருத்து வேறுபாடுகளை மதித்து அறிவுபூர்வமாக விவாதிப்பதை ஊக்குவிக்கும் அந்த முயற்சியை நான் துவங்கி விட்டேன். நம்மோடு உடன்பட்டு இருப்பது போல் ஏமாற்றி, பலவகையிலான பலன்கள் அனுபவித்து, பின் 'செல்வாக்கான' தொடர்புகள் கிடைத்தவுடன் 'ஓடி விடும்', லாப நட்டம் பார்க்கும் 'கள்வர்'கள் நமது சமூக வட்டத்தில் இருக்கும்போது, அவர்களைக் கண்டுபிடிப்பது சற்று கடினமே என்பதும், 'திருச்சி பெரியார் மையம்' மூலம் பெற்ற‌ என் அனுபவமாகும். ( http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.html ) அப்படி ஏமாந்தாலும், அதன்பின் கூடுதல் எச்சரிக்கை உணர்வுடன், உள்நோக்கமோ. சுயநலமோ இல்லாமல்,  நமது சமூக வட்டத்தில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். அது போல ஒவ்வொருவரும் தமது சமூக வட்டத்தில் துவங்கினால், வழிபாட்டுப் புழுதிப் புயலிலிருந்து தமிழ்நாடு மீள வாய்ப்புள்ளது. அந்த மீட்சியில் தமிழும் தனது மரணப் பயணத்திலிருந்து மீளவும் வாய்ப்புள்ளது.முயல்வோம். வெற்றி பெறுவோம்; ‍ பாராட்டு, புகழ் போன்ற போதைகளில் சிக்காமல்.

குறிப்பு: பதிவுகளில் தவறுகளை உரிய சான்றுகளுடன் சுட்டிக் காட்டுவதை வரவேற்கிறேன்.அவற்றை அறிவு நேர்மையுடனும், திறந்த மனதுடனும் பரிசீலித்து, தவறு என வெளிப்பட்டால், பெரியாரைப் போல் பகிரங்கமாக தவறு என தெரிவித்து, திருத்திக் கொள்வேன்.

பாரதி கடலூர் சிறையில் இருந்து எழுதிய மடல்:
OM SAKTHI

District Jail, Cuddalore
28 November 1918.

To His Excellency Lord Pentland Governor, Fort St. George

The Humble petition of C. Subramania Bharathi.

May it please your excellency.

It has been more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicheery to Tinnevelly which is my native district. After many loyal assurances on my part as your Execellency may well remember the Dy. I. G. (CID) was sent by your Excellency’s Government a few months back to interview me at Pondicherry. The Dy. I G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned purely as a war measure in any two districts of the Madras Presidency during the war.. I could not consent to that proposal, because having absolutley renounced politics I see no reason why any restraint should be placed on my movement even while the war lasted.

Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be absolutely no difficulty whatsoever in the way of my settling in British India as a peaceful citizen.. Contrary to my expectations however I have been detained and placed in Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length BUT which are altogether diasgreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.

I once again assure your Execellency that I have renounced every form of politics, I shall ever be loyal to british Government and law abiding.

I therefore beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.

I beg to remain
Your Excellency’s most obedient servant.

C. Subramania Bharathi


NOTE: 'அறிவுபூர்வமாக விமர்சிப்பதில், பாரதிக்கு ஒரு நீதி? பாரதிதாசனுக்கு வேறு நீதியா?'; 
http://tamilsdirection.blogspot.com/2019/09/3_11.html

Saturday, October 4, 2014

தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (5)

தமிழின் மரணத்திற்குப் பின், தமிழ்நாட்டில் தமிழர்கள்?


'2100 ஆம் வருடத்திற்குள் உலக மொழிகளில் 90% மறைந்து விடும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது' என்ற தகவலின் அடிப்படையில்,"  ‘மொழி பலகீனமாதல்’ (Language attrition http://en.wikipedia.org/wiki/Language_attrition) என்ற போக்கு தமிழைப் பொறுத்தமட்டில் அதிவேகமாக உள்ளது,இந்திய மொழிகளில் இந்த போக்கில் தமிழ் முதலிடத்தில் இருந்தால் வியப்பில்லை. அது உண்மையென்றால் , 2100க்கு முன்னேயே இந்திய மொழிகளில் மரணமடைவதில் தமிழ் முதல் இடத்தைப் பிடித்தாலும் வியப்பில்லை." என்பதையும் இந்தத் தொடரின் முதல் பதிவில் பார்த்தோம். 
 
அவ்வாறு தமிழ் மரணமடைந்த பின், தமிழ்நாட்டில் தமிழர்கள் எப்படி இருப்பார்கள்?

இந்த கேள்விக்கான விடையைப் பெற, தமிழ்நாட்டில் வாழும் ஆங்கிலோ இந்தியர்கள் இருக்கிறார்கள்.அவர்களைப் போலவே, தமிழ் வேரற்ற, ‘திரிந்த மேற்கத்தியப் பண்பாட்டு நோயில் சிக்கிய‌'‌  'தமிங்கிலிசர்களாக' தமிழர்கள் தமிழ்நாட்டில்  வாழ வாய்ப்பிருக்கிறது.

அப்படிப்பட்ட வாழ்க்கைப் போக்குக்கான முளைகள் இப்போதே அரும்பத் தொடங்கி விட்டன. கிராமங்களில் கூட விளையாட்டுப்பள்ளி முதலே குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்க வைக்கும் போக்கு , அதிவேகமாக வளர்வதும், தங்கள் குழந்தைகள் பேசும் ஆங்கிலத்தைக் கேட்டு, அது புரியாவிட்டாலும், அதைப் பெருமையாகக் கருதி பெற்றோர்கள் மகிழ்வதும் தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிறது.  அது போலின்றி , 'வறுமையின் காரணமாக' அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்களும் தமிழ் வழியில் படிப்பதால் , தாழ்வு மனப்பான்மையில் உழல்வதும் அதிகரித்து வரும் நாடாகத் தமிழ்நாடு இருக்கிறது. 

பேச்சு, நடை,உடை, பாவனைகளில்  ‘திரிந்த மேற்கத்தியப் பண்பாட்டு நோய்' இப்போதே கிராமங்களில் வேகமாக வளரத் தொடங்கியுள்ளது. 'ஆங்கிலத்தில் பேசுவதே என் வாழ்க்கையின் இலட்சியக் குறிக்கோள்' என்று குக்கிராமத்தில் பள்ளி இறுதி வகுப்பு முடித்து, -  சில வருடங்களுக்கு முன், மதுரை அருகே சிவானந்த ஆசிரம சமையல் கூடத்தில் பணியாற்றிய பெண், பேருந்தில் என்னை ஏற்றி விட காத்திருந்த வேளையில்-   தெரிவித்தது,  என்னால் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

தமிழ்நாட்டில் உள்ள இந்த நோயானது, அமெரிக்காவில் தேனீக்கள் அழிவை ஏற்படுத்தி வரும்  ‘கூட்ட அழிவு நோய்’[ “colony collapse disorder” (CCD)] என்பதுடன் ஒப்பிடக்கூடிய அளவில் உள்ளது. அமெரிக்காவில் பல மாகாணங்களில் தேனீக் கூட்டங்களைச் சுவடின்றி அழித்த அந்த நோயைப் பற்றிய காணொளி கீழே:

உலக அளவில் கடந்த 15 வருடங்களாக  விஞ்ஞானிகளுக்குச் சவாலாக விளங்கிய அந்த நோயின் மூலக் காரணம் கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய தகவல் கீழே:

‘neonics’  என்ற பூச்சிக் கொல்லி மருத்து செடிகளின் வழியாக மலர்களில் உள்ள தேனில் கலந்து, அந்த தேனைப் பருகும் தேனியின் உடலில் நுழைகிறது. அதன் மூலம் நரம்பு நச்சுத் தன்மையால் பாதிக்கப்பட்டு, தேனீக்கள் கூட்டம் கூட்டமாக அழிந்தன.

மனித சமூக அமைப்பில் இரத்த நாளங்களாக சமூக பிணைப்புகளும், நுண்ணிய இரத்த நாளங்களாக சமூக இழைகளும் உள்ளன. சமூக ஆற்றல் செயல்பாடு என்ற இரத்த ஓட்டத்தில் லாப நட்டம் பார்க்கும் 'கள்வர்'என்ற நோய்க்கிருமி நுழைந்த பின், சமூக இரத்தமே அந்த நோயில் பண்புமாற்றம் அடைந்த பின், அந்த சமூகத்தில் மொழியும், மொழி சார்ந்த பாரம்பரியமும், பண்பாடும் அழிவதில் வியப்புண்டோ? அந்த நச்சு நோயின் விளைவாக திரிந்த மேற்கத்திய பண்பாட்டு நோயில் சிக்கி, ஆங்கிலத்தில் திரிந்த தமிழ் பேசும் நோயாளிகளாக தமிழர்கள் மாறுவதில் வியப்புண்டோ? தேனீக்கள் சுவடின்றி அழிந்தது போல, தமிழும், தமிழ்ப் பாரம்பரியமும் பண்பாடும் சுவடின்றி அழிவதில் வியப்புண்டோ? ‘தமிழ்க் கூட்ட அழிவு நோய்’ -  “ Tamil colony collapse disorder” (TCCD)”  என்று இந்த நோயை அடையாளப் படுத்தலாம். ‘கூட்ட அழிவு நோய்’[ “colony collapse disorder” (CCD)]  என்ற நோய் தேனீக்களைக் கூட்டம் கூட்டமாய் சுவடின்றி அழித்தது. ‘தமிழ்க் கூட்ட அழிவு நோய்’ -  “ Tamil colony collapse disorder” (TCCD)” என்ற நோய் தமிழையும், தமிழ்ப் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் சுவடின்றி அழிக்க உள்ளது.

தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், ‘தமிழ்க் கூட்ட அழிவு நோய்’ -  “ Tamil colony collapse disorder” (TCCD)” எதிர்ப்பு முயற்சிகளில் தாமதமின்றி ஈடுபட வேண்டும். அத்தகைய முயற்சிகளுக்குத் துணைபுரியக் கூடிய கருத்துக்களை முந்தையப் பதிவில் பார்த்தோம்.நீண்ட நெடிய பாரம்பரியமும், அறிவுச் செல்வங்களும் உள்ள  தமிழின் பலத்தை நம்பி மேற்கொள்ளப்படும் அம்முயற்சிகள் வெற்றி பெறும் என்று நம்புவோம்.

Wednesday, October 1, 2014



தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (4)

 

தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும்         சமூக ஆற்றலுக்கு தமிழ்நாட்டில் வழியுண்டா?



சமூகத்தில் அழிவைத் தடுக்க வேண்டுமானாலும் சரி, ஆக்கபூர்வமாக ஏதும் செய்ய வேண்டுமானாலும் சரி, அதற்கான சமூக ஆற்றலுக்கு வழி இருக்க வேண்டும். தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும் சமூக ஆற்றலுக்கு தமிழ்நாட்டில் வழியுண்டா? என்ற கேள்வியைச் சந்திக்க, கீழ்வரும் கேள்விகள் பற்றிய விளக்கம் முக்கியமாகும்.

சமூக ஆற்றல் என்றால் என்ன? தனி மனிதரின் ஆற்றல்கள் அமைப்பின் மூலமாக எவ்வாறு சமூக ஆற்றலாக வடிவெடுக்கின்றன என்பது போன்ற கேள்விகளுக்கான விளக்கம் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளது. ( ‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்’   (Social Fibers & Social Bonds); chttp://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவற்றில் சாதாரணத் தமிழர்களுக்கு எந்த அளவுக்கு ஈடுபாடுகள்(Interests) இருக்கின்றனவோ, அந்த அளவுக்கே  அவை தொடர்பான முயற்சிகளுக்கான சமூக ஆற்றலுக்கு வழி இருக்கும்.

தமிழ்நாட்டில் இன்று பத்து வயதுக்குட்பட்ட  'இந்து' குடும்பப்பிள்ளைகளின் பெயர்கள் பெரும்பாலும் 'மேற்கத்திய போக்கில் திரிந்த' சமஸ்கிருத பெயர்களாகவும்,'கிறித்துவ' குடும்பங்களில் தமிழ் கிறித்துவப் பெயர்கள் இருந்த நிலை மாறி,  'மேற்கத்திய கிறித்துவ'ப் பெயர்களாகவும் உள்ளன. முஸ்லிம் குடும்பங்கள் மட்டும் அந்த 'நோயில்' இதுவரை சிக்கியதாகத் தெரியவில்லை.

மத்திய அரசு 'இந்தி மட்டுமே மத்திய அரசின் ஆட்சி மொழி' என்று அறிவித்தாலும், தமிழ்நாட்டில் எந்த அமைப்பும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்த முடியுமா? நடத்தினால் பொதுமக்களின் கோபத்திற்கும் வெறுப்புக்கும் உள்ளாக நேரிடுமா? என்ற கேள்விகள் எழும் நிலையில் தமிழ்நாடு உள்ளது. அப்படி போராட்டம் நடத்தினாலும், " உங்கள் பிள்ளைகள் மட்டும் ஆங்கில வழியில் இந்தியும் படித்து உருப்பட வேண்டும். எங்க பிள்ளைகள் மட்டும் வீணாகப் போகணுமா?" என்ற கேள்விகளைச் சந்திக்க நேரிடதா?

இன்று தமிழ்நாட்டில் 'தமிழ், தமிழ் உணர்வு, இந்தி எதிர்ப்பு, தனி நாடு' என்று பேசுபவர்கள் அந்நியமாகியுள்ள‌ போக்கும், தமிழ்நாட்டு மக்கள் அது போன்ற பிரச்சினைகளிடமிருந்து அந்நியமாகியுள்ள போக்கும் வளர்ந்துள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.. அது போன்ற பிரச்சினைகளுக்கு தாமாக கூடிய மக்கள் கூட்டம் குறைவதும்,பல வகையான 'தூண்டில் மீன்களை'ப் பயன்படுத்தி ஆள் சேர்த்து பொதுக் கூட்டங்களும், அறைக் கூட்டங்களும் நடத்துவதும் அதிகரித்துள்ளதா? இதில் வியப்பென்னவென்றால், அந்த போக்கில், தமிழ் அமைப்புகளின் எண்ணிக்கையும்  அதிகரித்தது ஏன் என்பது ஆய்விற்குரியது.

தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் தோன்றுவதற்கு முன்னேயே 'தமிழ் உணர்வு, சமூக நீதி' போன்ற திசைகளில் பல முயற்சிகள் நடந்து,மக்கள் மனங்களில் அவை தொடர்பான ஈடுபாடுகளும்(Interests)  தோன்றி வளர்ந்ததற்கு சான்றுகள் உண்டு. சமூகத்தில் எந்த ஒரு பொதுப் பிரச்சினைக்கும் மக்கள் மனங்களில் தோன்றும் ‘ஈடுபாடுகள்'(interests) காரணமாக, அம்மனிதர்களின் ( மூளை உழைப்பு + உடலுழைப்பு + அவர் வசம் உள்ள பொருள் மூலம்) செயல்பாடுகளுக்கான  ஆற்றலை (Energy)  உருவாக்குகின்றன, 

இவ்வாறு 'தமிழ் உணர்வு, சமூக நீதி' போன்றவைகளுக்கு உருவான சமூக ஆற்றலானது, திராவிட இயக்க வரலாற்றில் என்னென்ன மாற்றங்களுக்கு உள்ளாகி, இன்று பொதுமக்களிடையே வற்றியுள்ளதா? அதன் காரணமாகவே மேலேக் குறிப்பிட்ட கேள்விகளின் தேவைகள் எழுந்துள்ளனவா? இதற்கும் தமிழ்நாட்டில் கட்சிகள், இயக்கங்கள், குடும்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் உள்ள பிணைப்புகளும்(Bonds) , அப்பிணைப்புகளின் அடியோட்டமாக அமைப்பிலுள்ள மனிதர்களுக்கிடையிலான சமூக இழைகளும் (social Threads)  என்ன பண்பு மாற்றத்திற்குள்ளாகியுள்ளன ? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

முள்ளி வாய்க்கால் போர் தொடங்குவதற்கு முன்னும், போர் நடந்த போதும், அதற்குப் பின்னும் இன்று வரையிலும் சாதாரண பொது மக்கள் தத்தம் பிரச்சினைகளில் 'மூழ்கி' வாழ்கிறார்கள். 1983 சூலை இனப்படுகொலைக்குப்பின் கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி, கொந்தளித்து, நீண்ட காலம் நீடித்த தமிழ்நாட்டு மக்கள் ஆதரவாகப் பெருகிய 'சமூக ஆற்றலானது’, எந்தெந்த வழிகளில் விரயமானது என்று ஆராய்ந்தால் தான், தமிழ் நாட்டு  சராசரித் தமிழ‌ர்கள் இன்று,  'தமிழ் ஈழம்' மட்டுமல்ல, 'தமிழ் உணர்வு, இந்தி எதிர்ப்பு' போன்றவற்றிலிருந்தும் அந்நியப்பட்டு வாழ்வது ஏன் என்பது தெளிவாகும். 

மனிதர்களின் மனங்களில் உள்ள 'தேவைகள்' (needs) , அத்தேவைகளின் அடிப்படைகளில் மனங்களில் தோன்றும் ‘ஈடுபாடுகள்'(interests)  ஆகியவை, அம்மனிதர்களின் ( மூளை உழைப்பு + உடலுழைப்பு + அவர் வசம் உள்ள பொருள் மூலம்) செயல்பாடுகளுக்கான  ஆற்றலை (Energy)  உருவாக்குகின்றன என்பதை முன்னர் பார்த்தோம். தனி மனிதர்களின் ஆற்றல்களே அவர்கள் சம்பந்தப்பட்ட சமூக அமைப்புகளின் (குடும்பம், இயக்கம், etc ) சம்ப‌ந்தப்பட்ட சமூக அமைப்பாற்றல் ஆகும். அவையே சமூக அமைப்பின் அமைப்பாற்றலின் (socio-structural energy) மூலங்களாகும் (sources).

இத்தகைய சமூக ஆற்றலினைப் பயன்படுத்தி, சமூகத்தில் உள்ள ஒரு அமைப்பானது, (குடும்பம், நிறுவனம், அரசு, etc ), அதன் நோக்கங்களை நிறைவேற்ற,  தரஏணி  நிலையிலான ( hierarchical status) செயல்பாடுகளைக் கொண்டிருக்கும்.அதன் காரணமாக அச்செயல்பாடுகளுக்கு பொறுப்பான மனிதர்களின் நிலையும்  தரஏணிநிலையில் மேலும் கீழுமாக இருக்கும்.

தவறான நபர்கள் அமைப்பின் தர ஏணி நிலையில் முக்கிய பொறுப்புகளில் இடம் பெறும்போது, அமைப்பின் நோக்கங்களை தமது சுயநலத்திற்கு திசை திருப்பும் ஆபத்து நேரிட வாய்ப்புண்டு. அதில் அவர்கள் வெற்றி பெற, மற்ற முக்கிய பொறுப்பில் உள்ள நபர்களையும் படிப்படியாக, அமைப்பின் செயல்பாட்டின் ஊடே, தம்மைப் போன்றே சுயநலவாதிகளாக மாற்றும் தொத்து நோய்க் கிருமி மூலங்களாக செயல்படுவதும் நேரிடலாம்.அந்த போக்கில் அமைப்பில் உள்ள மனிதர்களின் ஆற்றல்கள் எல்லாம் அந்த அமைப்பை சீரழிவுப் பாதையில் பய‌ணிக்கவே செலவாகும்.

அமைப்பின் நோக்கங்களும்,செயல்பாடுகளும் தவறாக அமையும் போது,அமைப்பில் உள்ள சமூக பிணைப்புகளும், அமைப்பிலுள்ள மனிதர்களுக்கிடையிலான சமுக இழைகளும் அந்த தவறானப் போக்கிற்கு பொருத்தமாக பண்பு மாற்றங்கள் பெறும்.பண்புமாற்றத்திற்குட்பட முடியாதவர்கள் அமைப்பினுள் இருந்து வெளியேற்றப்படல் அல்லது உள்ளிருந்து பலகீனமாகி மறைதல் ஆகிய விளைவுகளையேச் சந்திக்க நேரிடும். குடும்பம், நிறுவனம், அரசு, உள்ளிட்டு அந்த சமூகத்தில் உள்ள அமைப்புகளில் இது தான் நிகழும்.

சமூகத்தில் வாழும்  மனிதர்களுக்கிடையிலான தொடர்புகளாகிய சமூக இழைகள் எதிர்த் திசையில்  ( negative - குடும்பம், நட்பு உள்ளிட்ட அனைத்திலும் லாப நட்டம் பார்க்கும் 'கள்வர்' பண்புடைய - திருக்குறள் 813) பண்பு மாற்றத்திற்குள்ளாகும் போது, அப்படிப்பட்ட இழைகள் தொடர்புடைய அமைப்பின் பலவேறு பாகங்களின் தொடர்புடைய பிணைப்புகளும்(Bonds)  பண்பு மாற்றத்திற்குள்ளாகும். அதில் பாதிக்கப்பட்ட மனிதர்களின் மனங்களில் உருவாகும் தேவைகளும், ஈடுபாடுகளும் லாப நட்டம் பார்க்கும் பண்பு மாற்றத்திற்குள்ளாகும்.  எனவே  அப்படிப்பட்ட அமைப்புகளுக்கு ஏற்கனவே கிடைத்து வந்த சமூக ஆற்றலும் லாப நட்ட கணக்கிலான பண்பு மாற்றத்திற்குள்ளாகும். ஆக தமிழ்நாட்டில் குடும்பம், கட்சி, இயக்கம் உள்ளிட்டு அனைத்திலும் உள்ள சமூக ஆற்றல் லாப நட்ட கணக்கிலான பண்பு மாற்றத்திற்குள்ளான பின், தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும் சமூக ஆற்றலுக்கு வழியுண்டா?

லாப நட்ட கணக்கிலான பண்பு மாற்றத்திற்குள்ளானவர்களிடம் கீழ்வரும் போக்கு வெளிப்படுவதில் வியப்பில்லை.அத்தகைய நபர்களுடன் நாம் இயல்பாக உரையாடுவது பெரும்பாலும் முடியாத காரியமாகி வருகிறது. தம்மை விட செல்வம் செல்வாக்கில் மேலான நபர் எனில், அவரிடம் குழைந்து, வாலாட்டி காரியம் சாதிக்கும் நோக்கில் பழகுவது; கீழான நபர் எனில் ஒதுக்குவது: சம அளவில் உள்ள நபர் எனில் இயன்ற அளவுக்கு தம்மை விட கீழ் என மட்டம் தட்டுவதிலேயே குறியாக இருப்பது; என்பதே அத்தகைய நபர்களின் தனித்துவ வெளிப்பாடாக இருக்கிறது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால்,நமக்கு இயல்பாக நாட்டமுள்ள துறைகள் (Passions) மற்றும் ஆய்வுகள் (Research) பற்றி பேசினாலும், அதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமின்றி, அத்துறைகள் மூலம் ஏதும் செல்வம், செல்வாக்கு பெருக வாய்ப்புண்டா என்பதிலேயே அத்தகைய நபரின் கவனம் இருக்கும். நாயைப் போல குழைந்தவர், அறிவு பூர்வமான, கலை பூர்வமான எந்த துறைகள் பற்றியும் (செல்வம், செல்வாக்கைத்தவிர வேறு )எதையும் தெரிந்து கொள்ள விரும்பாத  - கற்பூர வாசனை தெரியாத கழுதையாகவும்-  தம்மை வெளிப்படுத்திக் கொள்வார். இப்படிப்பட்ட நபர்கள் தமது வாழ்க்கையில் செல்வம், செல்வாக்கு சம்பாதிக்கும் வெற்றியின் இரகசியம் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளது. (‘தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும்- வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்’;http://tamilsdirection.blogspot.sg/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html) தமிழ்நாட்டின் சமூக வரலாற்றில் இப்படிப்பட்ட 'வாழ்வியல் நிபுணர்கள்' தோன்றி வளர்ந்ததற்கும், திராவிட இயக்க வளர்ச்சி-வீழ்ச்சிப் போக்கிற்கும் இடையிலான தொடர்புகளும் ஆய்விற்குரியதாகும்.

'தமிழ், தமிழ் உணர்வு' அமைப்புகளில் அத்தகையோரை அடையாளம் கண்டு, அகற்றாத வரையில், தமிழின் மரணப் பயணத்தைத் தடுக்க முடியுமா?

தமிழ்நாட்டில் சமூக இழைகளும், பிணைப்புகளும் லாப நட்டம் பார்க்கும் 'கள்வர்' பண்புமாற்றத்திற்குள்ளான பின், ஒரு சமூகப் பிளவு(Social Disjoint)  ஏற்பட்டுள்ளதை அடுத்து பார்ப்போம்.

தமிழ்நாட்டில் தினமும் எங்காவது மக்கள், குறிப்பாக பெண்கள், வீதியில் இறங்கி, குடிநீர் பிரச்சினை, சாலை வசதியின்மை, நிதி நிறுவன மோசடி என்று அவர்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு தாமாகவே போராடிவரும் செய்திகள் ஊடகங்களில் வெளிப்படுகின்றன. தமிழ்நாட்டில் 'தமிழ் உணர்வு' என்ற அடிப்படையில் எண்ணிக்கையில் அதிகமாக வளர்ந்துவரும் அமைப்புகள் , இப்படி சாதாரணத்தமிழர்களை நேரடியாக பாதிக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி கவலைப்பட்டு என்ன பங்காற்றினார்கள்? அவர்கள் சம்பந்தமில்லாமல் பாதிக்கப்பட்ட சாதாரணத் தமிழர்கள் தாமாகவே போராடுகிறர்களா? அந்த 'தமிழ் உணர்வு' அமைப்புகளுக்கும் சாதாரணத்தமிழர்களுக்கும் சமூகப்பிளவு (Social Disjoint)  ஏற்பட்டுள்ளதா? அப்படிப்பட்ட அமைப்புகளுக்கு நிதி உள்ளிட்டு செயல்பாட்டிற்கான ஆற்றல் மூலங்கள் என்ன? ஏதாவது ஒரு வகை ஆதாயமின்றி செயல்படும் தொண்டர்கள் எவ்வளவு பேர் அந்த அமைப்புகளில் உள்ளார்கள்? அறிவுபூர்வ போக்குகள் வலிவிழந்து, உணர்வுபூர்வ போக்கில் தமிழ்நாடு சிக்கியது இதற்குக் காரணமா?
திராவிட இயக்க வரலாற்றில் உணர்வுபூர்வக் கூறுகள் வளரத்தொடங்கியது 1944‍க்கு பின்னர் தானா? என்ற கேள்விக்கு விடை காண, 1944‍க்கு முன்னும் பின்னும் வெளிவந்த 'குடி அரசு' இதழ்களை ஆராய்வது பலனளிக்கும். அந்த உணர்வுபூர்வ வளர்ச்சியின் முக்கிய கட்டத்தில் 1949-இல் தி.மு.க உருவானதா? என்பதும் ஆய்விற்குரியது. திராவிட இயக்க வரலாற்றில் 'பண பலம் அதிகரித்து பலரின் வசதி வாய்ப்புகள் வளர்ந்து, சராசரி வாழ்க்கையிலிருந்து 'மேல்த் தட்டு' வாழ்க்கைக்குத் தாவிய போக்கில் , மேலேக்குறிப்பிட்ட சமூகப் பிளவு தோன்றி வளர்ந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். சுயமாக முன்னேறக்கூடிய அறிவாற்றலோ, தொழில் வியாபாரத் திறமைகளோ இல்லாமல், உட‌லுழைப்பைத் தவிர்த்து 'முன்னேற' , தமக்கு இயல்பாக அமைந்த பல வகை 'தரகுத் தொண்டு புலமையின்' மூலம் 'அதிவேகப் பணக்காரர்கள்' உருவாக, அந்த போக்கு வழி வகுத்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். தமிழின் மரணப் பயணத்துடன் இந்த போக்கு எந்த அளவுக்கு தொடர்புடையது என்பதும் ஆய்விற்குரியதாகும்.

சாதாரணத் தமிழர்கள் அடிப்படை வசதிகளுக்கு தாமே போராடும் அளவுக்கு, 'தமிழ் உணர்வு' அமைப்புகளுக்கும், சாதாரணத் தமிழர்களுக்கும் இடையே சமூகப் பிளவு இருப்பது உண்மையா? இல்லையா? என்பதும் ஆய்விற்குரியது. தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும் சமூக ஆற்றலுக்கு தமிழ்நாட்டில் வழியேற்பட வேண்டுமானால், இந்த சமூகப்பிளவு நீக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அந்த சமூகப் பிளவு நீக்கப்படவேண்டுமானால்,  சமூக இழைகளும், சமூக பிணைப்புகளும் லாப நட்டம் பார்க்கும் பண்பிலிருந்து மாற வேண்டாமா? அம்மாற்றத்திற்குத் தடையாக, குடும்பம், நட்பு உள்ளிட்டு, நமது சமூக வட்டத்தில்  இருப்பவர்களை அடையாளம் கண்டு திருத்த வேண்டாமா? திருந்த மறுப்பவர்களை நமது சமூக வட்டத்திலிருந்து வெளியேற்ற வேண்டாமா? இதையெல்லாம் செய்யாமல், செய்யத் துணிவில்லாமல் நாம் இருந்தால், தமிழின் மரணப் பயணத்தைப் பற்றி கவலைப்படக் கூட நமக்கு அருகதை உண்டா? தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும் சமூக ஆற்றலுக்கு, தமிழ்நாட்டில் வழியுண்டாவதற்கு நாமே தடையாக இருப்பதா?

இது போன்ற கேள்விகளுக்கு செயலில் என்ன வகையான பதில்கள் இனி தமிழ்நாட்டில் வெளிப்படுமோ, அவற்றைப் பொறுத்தே, தமிழின் மரணப்பயணம் தடுத்து நிறுத்தப்படுமா? இல்லையா? என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கும்.