Friday, October 25, 2013


 தமிழ்வழி வீழ்ச்சியும் மீட்சியும்


அடிப்படைக் கல்வி என்பது மூளையின் புலன் உணர்வு வளர்ச்சியுடன் தொடர்புடையது என்பதும், தாய்மொழிக் கல்வியில் தான் மூளை வளர்ச்சி பெறும் என்பதும், தாய்மொழிப் பண்பாட்டுடன் அவ்வளர்ச்சி தொடர்புடையது என்பதும்,  அடிப்படைக் கல்வி தொடர்பான‌  ஆய்வுகள் மூலம் தெளிவாகியுள்ளன. பின்னர் பிறமொழிவழியில் கல்வியைத் தொடர்வது எளிதாகி, அதிக பலன் தரும்.உலகிலேயே இந்த பலனை தமிழ்நாடு மட்டுமே இழந்து வருகிறது.

விளையாட்டுப் பள்ளி முதல் 5ஆம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருந்தால் தான் குழந்தைகளின் புலன் உணர்வு அறிவு வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று உலக ஆய்வுகள் எல்லாம் உணர்த்துகின்றன.
சான்றுகளாக;

1. www.ccsenet.org/ass - Asian Social Science Vol. 7, No. 12; December 2011- Primary School Pupils’ Perception of the Efficacy of Mother Tongue Education in Ibadan Metropolis by Dr. David O. Fakeye;
2. The findings of a comprehensive research review carried out for the World Bank: Dutcher, N. in collaboration with Tucker, G.R. (1997):
The Use of First and Second Languages in Education: A Review of Educational Experience , Washington D.C., World Bank; 
3. Education for All: Policy Lessons From High-Achieving Countries:
UNICEF Staff Working Papers , Mehrotra, S. (1998), New York, Unicef;
4. Expanding Educational Opportunity in Linguistically Diverse Societies- Dutcher, N:
, Center for Applied Linguistics, Washington DC.(2001);
5.  Education in a multilingual world  - Published in 2003 by UNESCO

இது போல் எண்ணற்ற உலக ஆய்வுகள் அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டியதன் அவசியத்தை உறுதிப்படுத்தியுள்ளன.
(தாய்மொழிவழிக்கல்வி  குறித்த உலகளாவிய ஆய்வுத்தகவல்கள் கொண்ட அரிய நூல்: 'மொழிச்சிக்கல்கள் குறித்த சர்வதேசக் கருத்துக்கள்: கல்வி, அறிவு, அறிவியல் மற்றும் ஆங்கிலம் பயிவதற்குத் தாய்மொழியே திறவுகோல்' ஆங்கிலத்தில் ஜோகாசிங்; தமிழில் கண.குறிஞ்சி (94433 07681) புதுமலர் பதிப்பகம், ஈரோடு:  

திருப்பூர் அருகே சிங்கனூர் தாய்த்தமிழ் உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நேற்று நடந்தது. அதில் சிறப்பு விருந்தின ராக பங்கேற்ற மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: "நான் முதல் வகுப்பு படிக்கும் போது, மாட்டுக்கொட்டகையில் தான் படித்தேன். என்னை முழுக்க முழுக்க என் பெற்றோர் 11 ஆண்டுகளாக, தமிழில்தான் படிக்க வைத்தார்கள். அதனால் தான், இன்றைக்கு விஞ்ஞானியாக வளர்ந்துள்ளேன். என்னுடைய பலம் தாய் மொழியில் படித்தது தான்.

குழந்தைகள் தாய் மொழியில் படித்தால் முன்னேறாமல் இருப்பார்கள் என்கிற பெற்றோர் களின் எண்ணம் தவறானது. தமிழில் படிப்பதால், யாரும் சோடை போகப்போவதில்லை. முதல் 15 ஆண்டுகள் இயல்பான வர்களாக குழந்தைகள் இருக்க வேண்டும். அவர்களை இறுக்க மானவர்களாக மாற்றக்கூடாது. இஸ்ரோவில் பணிபுரியும் 90 சத வீதம் பேர் அவரவர் தாய் மொழியில் படித்தவர்கள்தான்" என்றார். http://tamil.thehindu.com/tamilnadu/ ;“நமது சிந்தனை தாய்மொழியில் தான் இருக்கும். எனவே, தமிழ்வழியில் தேர்வெழுத முடிவெடுத்தேன்.” அகில இந்திய அளவில் 117-வது ரேங்க்; சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழில் வெற்றிபெற்றிருக்கிறார்; சோழகன் குடிகாடு அரசு தொடக்கப் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்ற பின், பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தமிழ்வழியில் படித்த இளம்பகவத் என்ற 34 வயது இளைஞர். http://tamil.thehindu.com/tamilnadu/


1970-களின் தொடக்கம் வரை, தமிழ்நாட்டில் மேலே சொன்ன ஆய்வுகளுக்கு ஏற்ப, உயர்நிலைப் பள்ளி வரை ஏறத்தாழ அனைத்து மாணவர்களும் ( விதி விலக்காக ஒரு சில ஆங்கில வழிப் பள்ளிகள் -   ஆங்கிலோ இந்திய மற்றும் வட மாநிலக் குழந்தைகளுக்கான) தமிழ்வழியில் படித்து, பின் கல்லூரிகளில் ஆங்கில வழியில் படித்து, உலக அளவில் சாதனையாளர்கள் உருவானார்கள்.

தமிழ்நாட்டில் ஆங்கிலவழிப் பள்ளிகள் 1970களில் புற்றீசல் போல் தொடங்கப்பட்ட காலத்தில் ஆட்டு மந்தைகள் போல் ஏதோ நல்லவழி என்று நினைத்து அப்பள்ளிகளில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சேர்த்தார்கள். உலக ஆய்வுகள் பற்றி தெரிந்து தாய்மொழி வழிகாட்டிகளாக இருக்க வேண்டிய படித்தவர்கள் மட்டுமின்றி, தமிழ்/திராவிட  அறிஞர்களும் தலைவர்களும் பற்றாளர்களும் , அந்த ஆட்டு மந்தை போக்கிலேயே தமது பிள்ளைகளையும் ஆங்கில வழியில் படிக்க வைத்தது பெரும் கொடுமையாகும்.
 


புற்றீசல் போல் ஆங்கிலவழிப் பள்ளிகள் தொடங்கப் பட்ட காலத்தில், பெரும்பாலான தமிழ்/திராவிட இயக்க அறிஞர்கள்,பேராசிரியர்கள் எல்லாம் எதிர் நீச்சல் போடுவதற்குப் பதிலாக ,அந்த தமிழ்வழி வீழ்ச்சி ஓட்டத்திலேயே தங்கள் குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்ததும், குற்ற உணர்வின்றி அவர்களுக்கு 'தமிழறிஞர் கோட்டா'வில் எம்.பி.பி.எஸ்,பி.ஈ படிக்க வைத்ததும் சீரணிக்க முடியாத தவறுகள் ஆகும். அந்த காலக் கட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை தமிழ்வழியில் படிக்க வைத்து, 9000 வருமான வரம்பு ஆணையை எதிர்த்து போராடியது போல, தொடர் போராட்டங்கள் நடத்தியிருந்தால், அந்த ஆணையை நீக்கி இட ஒதுக்கீட்டை உயர்த்தியது போல, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் 'ஆங்கில வழி புற்றீசலை' ஒழித்திருப்பார். அந்த சமயத்தில் மொத்த மாணவர்களில் +2 தமிழ் வழியில் எத்தனை சதவீதமோ, அத்தனை சதவீதம் எம்.பி.பி.எஸ்,பி.ஈ படிப்புகளில் இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறைகளில் உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் அமைப்புகள் வலியுறுத்தவில்லை,- அவர்கள் பிள்ளைகள் ஆங்கில வழியில்.

இன்று ஏழைகளும் அவ்வழியில் செல்ல , ஆயிரக்கணக்கான தமிழ்வழி அரசுப் பள்ளிகள் படிக்க ஆளின்றி மூடப்பட்டு வரும் சவாலை தமிழ்நாடு சந்திக்க நேர்ந்தது. ('ஒரு பள்ளி, ஒரு மாணவன், இரு ஆசிரியர்கள் சேர்க்கைக்கு பெற்றோர்களிடம் கெஞ்சும் அவலம்'; http://www.dinamalar.com/news_detail.asp?id=1533588 ) அச்சவாலைச் சந்திக்க, அரசுப் பள்ளிகள் மூடப்படுவதைத் தவிர்க்க, அங்கு கூடுதலாக ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க தமிழக அரசு செய்துள்ள முடிவினாலும், அரசுப்பள்ளிகள் மூடப்படுவது குறையவில்லை. அதைவிட தமது பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்துக் கொண்டிருக்கும் 'தமிழ் வழி ஆதரவாளர்களின்' இரட்டை வேடமானது, அம்முடிவினால் அம்பலம் ஆனது, மிகப் பெரிய பலனாகும். இனி தமிழ் வழியின் நேர்மையான ஆதரவாளர்களின் குரலுக்கு பெற்றோர்கள் செவி மடுக்க வாய்ப்பு வந்துள்ளது.

ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் இயல்புக்கேற்ற வகையில் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு வளர்த்தெடுக்கவும் அடிப்படைக் கல்வி தாய்மொழியிலேயே இருக்க வேண்டும் என்பதும் ஆய்வுகளின் அறிவுரையாகும்.


மாறாக கர்ப்பமாக இருக்கும் போதே, எம்.பி.பி.எஸ், பி.ஈ போன்ற படிப்புகளைக் கனவு காணும் தாய், குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் முடியும் போதே விளையாட்டுப் பள்ளியில் சேர்த்து, தமது பிள்ளைகள் 'அப்பா, அம்மா' வைத் தெரிந்து கொள்ளாமல் 'டாடி, மம்மி' என்று அழைப்பதைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். பின் ஆங்கில நர்சரி பாடல்களை ( அதன் பொருள், பண்பாட்டுப் பின்னணி தெளிவின்றி) பாடுவதைக் கேட்டு மக்ழ்கிறார்கள். தாய்மொழி,நமது பண்பாடு உள்ளிட்ட ஆணிவேர்களின் தொடர்பற்று, தமது இயல்புக்கும், வாழும் மண்ணிற்கும், சம்பந்தமற்ற திரிந்த மேற்கத்திய பண்பாடு ஒழுக்க வாழ்வியல் திணிக்கப் பட்டு , அக்குழந்தைகள் குரங்காட்டியிடம் அகப்பட்டுக் கொண்ட குரங்கைப் போல வளர்கிறார்கள். தமது கனவுகளைக் குழந்தைகள் மீது திணித்து தாய்மார்கள் தம்மையுமறியாமல் குரங்காட்டிகளாக மாறும் போக்கும் கூடவே வளர்கிறது.

விடியற்காலை 5 மணிக்கே தூக்கக் கலக்கம் கூட கலையாத குழந்தைகளை எழுப்பி, குளிக்க வைத்து, சீருடை அணிவித்து வேனில் ஏற்றும் வரை அவர்கள் கடைபிடிக்கும் கட்டாயப்படுத்தல் போக்கும் சரி, பள்ளி திரும்பிய குழந்தைகளைப் பின் படிக்க வைக்கும் போக்கும் சரி, மதிப் பெண்கள் குறைந்தால் பெறும் கோபமும், பிள்ளைகளை அடிப்பதும் சரி, குரங்காட்டியையும் பெரும்பாலான தாய்மார்கள் விஞ்சி விடுவார்கள்.

அந்த காலத்தில் கல்லூரி மாணவர்கள் அனுபவித்திராத வசவுகளையும், தண்டனைகளையும், முதலாம் வகுப்பு சேரும் முன்னரே, இக்குழந்தைகள் அனுபவித்து விடுகின்றனர். அந்தக் கால கல்லூரி மாணவர்களை விட, தப்பிப்பதற்காக பொய் சொல்லுதல், புறங்கூறுதல், ஏமாற்றுதல் உள்ளிட்ட 'கலைகளில்', முதலாம் வகுப்பிலேயே அக்குழந்தைகள் நிபுணராகி விடுகிறார்கள்.


உடல் ரீதியாகவும்,உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட மக்களை நாம் அறிவோம். ஆனால் தாய்மொழி கல்வியற்ற ஆங்கில வழிக் கல்வி மூலம் படைப்பாற்றல்/சுய உருவாக்கல் (originality) /நல்லொழுக்க மதிப்பீடுகள் (values) ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 1970‍களிலிருந்து உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறு செயற்கையான கல்வி பயிலும் குழந்தைகள் மேல்நிலைக் கல்வியைத் தாண்டும்போது, வீட்டுக்குப் பழக்கப்பட்ட செல்லப் பிராணிகளாகவோ (domesticated animals ) அல்லது யாருக்கும் அடங்காத முரடர்களாகவோ (unruly disobedient thugs ) வெளிப்படுகிறார்கள். இரண்டு வகையினருமே படைப்பாற்றல்/சுய உருவாக்கல்/நல்லொழுக்க மதிப்பீடுகள் ரீதியில் பாதிக்கப்பட்ட  மாணவர்களாகவே சமூகத்தில் வாலிபர்களாக வளர்கிறார்கள்.

விளையாட்டுப் பள்ளி (play school) முதல் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை 'மதிப்பெண் ரோபோக்களாக' கட்டாயப்படுத்தி, அதன் விளைவாக அதிக அழுத்தமும், எரிச்சலும் அகவயப் பட்ட பெண்களாக மாறி , தங்கள் சொந்த மகிழ்ச்சியையும் இழந்து 'கனவுக்காக'வாழ்கிறார்கள். மிக ஆசையுடன் 'செல்லப் பிராணி' போல் வளர்த்த குழந்தைகள் வாலிப வயதில் தாய்மார்களின் கனவுகள் சிதையும் அளவுக்கு, பாரம்பரிய ஒழுக்கமின்றி திரிந்த மேற்கத்திய ஒழுக்கத்தில் வாழவது  அவர்களுக்கு அதிர்ச்சியாகிறது. அதனால் மனநோய் மருத்துவரின் ஆலோசனை தேவைப்படும் அளவுக்கு பல தாய்மார்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆங்கில வழிக் கல்வியின் காரணமாக குழந்தைகள் 10வயது வரை இயல்பாக தமது பாரம்பரிய பண்பாட்டு ஒழுக்கத்துடன் பெற வேண்டிய மூளை வளர்ச்சியைப் பெறுவது சிதைக்கப்பட்டது. அதனால் வாழ்க்கையில் அவர்கள் சாதிக்கக் கூடியவற்றை விட குறைவாகவே சாதிக்க நேரிடுகிறது. அதிலும் அவர்களின் இயல்புக்கேற்ற துறையை அடையாளம் கண்டு, அதற்கான திறமைகளை வளர்த்து சாதிப்பதும் தடை படுகிறது. பெற்றோர்களின் கனவுகளுக்காக அவர்களின் வாழ்வு ஒரு வகையிலான மனித ரோபோக்களாக அமைந்து விடுகிறது. இந்த போராட்டத்தில் 'தோல்வி'யானவர்கள் தற்கொலை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பயங்கரவாதம் போன்றவற்றில்  ஈடுபடுகிறார்கள்.

1970 -களுக்கு முன் தமிழ்நாடு முழுவதுமே பெரும்பாலான மாணவர்கள் உயர்நிலைக் கல்வி வரை தமிழ்வழியிலேயே படித்தார்கள். ஆங்கிலத்தில் வலுவான இலக்கணத்துடன் மொழி அறிவும் பெற்றார்கள். கலை, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து கல்லூரி படிப்புகள் முழுவதும் ஆங்கில வழியில் இருந்தும் , அவர்கள் அதிலும் நன்கு படித்தார்கள். வெகுசில ஆங்கில வழிப் பள்ளிகளே இருந்தன. அதில் படித்த ஆங்கில வழி மாணவர்களை விட பெரும்பாலும் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் ஆங்கில வழியில் கல்லூரியில் அதிக மதிப்பெண்கள் எடுத்து நல்ல வேலைகளில் அமர்ந்தார்கள். 1970களில் தான் இது மாறத் தொடங்கி இப்போது ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு கூட அன்று தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கிருந்த‌ ஆங்கில அறிவு இல்லாமல் உள்ளது. 

இன்று ஆங்கிலத்தில் சரளமாக பேசி, எழுதி, பேராசிரியர்களாக, விஞ்ஞானிகளாக, ம‌ருத்துவர்களாக, பொறியாளர்களாக பணிபுரியும்/பணி ஓய்வு பெற்ற சுமார் 50 வயதுக்கும் மேலான அனைவருமே  11ஆவது வரை தமிழ்வழியில் படித்து,  அதன்பின் பி.யு.சி முதல் ஆங்கிலவழியில் படித்தவர்கள் தான்.

தமிழ் மட்டும் கற்றுக்கொண்டு கிணற்றுத் தவளையாக   இருப்பதும் தவறு தான். இன்று டெல்லியிலும்,வடநாட்டிலும், சிறப்பாக பணியாற்றும் மூத்த விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் உயர்நிலைக் கல்வி வரை தாய்மொழியில் படித்து , தமது படைப்பாற்றலையும்(creativity),சுய உருவாக்கலையும் (originality) வளர்த்து, பின் ஆங்கில வழியில் கல்லூரியில் படித்து, கூடுதலாக இந்தியும் படித்து வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் ஆவர்.அதுவே புத்திசாலித்தனமான வழிமுறை இன்றைக்கும் கூட.

தமது பிள்ளைகள் சரியான புலன் உணர்வுகளுடன் கூடிய மூளை வளர்ச்சி பெற்று, அவர்களின் இயல்புகளுக்கேற்ற திறமைகளை வளர்த்து அவர்கள் நல்ல வாழ்வு வாழ வேண்டும் என்ற அக்கறையுள்ள பெற்றோர்கள் அடிப்படைக் கல்வியை தமிழ் வழியில் கொடுத்தால், அதன்பின் அவர்கள் எளிதில் ஆங்கில வழியில் உயர்நிலைக் கல்வியும், கல்லூரிக் கல்வியில் நன்கு படித்து வாழ்வில் வெற்றி பெறுவார்கள்.

கல்லூரிகளில் தமிழ் வழியில் இயற்பியல்(Physics)  30 வருடங்கள் பாடம் நடத்திய அனுபவம் எனக்கு உண்டு. எனக்கு தெரிந்த வரையில், தமிழ்/திராவிட இயக்கத் தலைவர்கள்,வசதியான தமிழர்கள் வீட்டுப் பிள்ளைகள் யாரும் தமிழ்வழியில் படித்தது கிடையாது. ஆங்கில வழியில் இடம் கிடைக்காதவர்கள் மட்டுமே தமிழ்வழியில் படித்தார்கள். குறிப்பிட்ட இடைவெளியில் மாறிவரும் பாடத்திட்டங்களுக்கு ஏற்ற வகையில் தமிழ்வழி பாடப் புத்தகங்கள் வெளிவருவது இல்லை, அறிவியல் சொற்கள் அகராதி அவ்வப்போது வெளிவராதது, மேலும் ஆழமாகப் படிக்க ஆங்கில் நூல்களே தேவை, பட்டமேற்படிப்புக்கும் வேலைவாய்ப்புக்கும் ஆங்கில வழியே சாத்தியமானது.  கல்லூரிகளில் தமிழ் வழி என்பது இந்த நிலையில் சரியல்ல.

தமிழ்ப் பற்றாளர்களும், தமிழ்/திராவிட கட்சிகளின் தலைவர்களும் தமது குடும்பப் பிள்ளைகளை விரும்பி சேர்க்கும் அளவுக்கு கல்லூரியில் தமிழ்வழி சிறப்புடன் அமையும் போது, மற்றவர்களும் அதனால் கிடைக்கும் பலன்களை அறிந்து அவர்கள் வழியில் பயணிப்பார்கள்.


விளையாட்டுப் பள்ளி முதல் 5ஆம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருந்தால் தான் குழந்தைகளின் புலன் உணர்வு அறிவு வளர்ச்சி நன்றாக இருக்கும் என்ற தெளிவுள்ள புத்திசாலிப் பெற்றோர்கள்,  தாமதமின்றி அவ்வழியில் தமது குடும்பப் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும்.


குறிப்பு: முதல்வர் எம்.ஜி.ஆரின் ரூ9000 வருமான வரம்பு ஆணை செயல்பட்ட காலத்தில்,  முன்பிருந்ததை விட அதிகமாக கிராமப்புற, ஏழை, முதல் தலை முறையாகத் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் பலன் பெற்றதை , அண்ணா பல்கலைக்கழக பி.ஈ மாணவர் சேர்க்கைப் புள்ளி விபரங்கள் தெரிவித்தன. அந்த ஆணையில் குறைகள் இருந்திருப்பின், அவற்றைக் களைவதற்குப் பதிலாக, அதை ரத்து செய்தது சமூக நீதியா? என்று மனசாட்சியுள்ள சமூகநீதிப் பற்றாளர்கள் சிந்திக்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------

3 comments:

  1. //முதல்வர் எம்.ஜி.ஆரின் ரூ9000 வருமான வரம்பு ஆணை செயல்பட்ட காலத்தில், முன்பிருந்ததை விட அதிகமாக கிராமப்புற, ஏழை, முதல் தலை முறையாகத் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் பலன் பெற்றதை , அண்ணா பல்கலைக்கழக பி.ஈ மாணவர் சேர்க்கைப் புள்ளி விபரங்கள் தெரிவித்தன. //

    If possible include the data in this article,thanking you sir.

    ReplyDelete
  2. //முதல்வர் எம்.ஜி.ஆரின் ரூ9000 வருமான வரம்பு ஆணை செயல்பட்ட காலத்தில், முன்பிருந்ததை விட அதிகமாக கிராமப்புற, ஏழை, முதல் தலை முறையாகத் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் பலன் பெற்றதை , அண்ணா பல்கலைக்கழக பி.ஈ மாணவர் சேர்க்கைப் புள்ளி விபரங்கள் தெரிவித்தன. //

    If possible include the data in this article,thanking you sir.

    ReplyDelete