Thursday, November 6, 2014

Republishing the article on 21 Feb 2021


'குற்ற உணர்வின்றி' மன நிறைவுடன் மரணத்தைத்  தழுவ முடியுமா?


1944 -இல் திராவிடர் கழகம் உருவானதற்கு முன், பெரியாரின் சமூக வாழ்வில், அவர் சந்தித்த கருத்து வேறுபாடுகள் பற்றிய விவாதங்கள் அறிவுபூர்வ தளத்தில் நடைபெற்றதையும், திராவிடர் கழகம் உருவான பின் அவருக்கும் அண்ணாதுரைக்கும் இடையில் உருவான கருத்து வேறுபாடுகள் பற்றிய விவாதங்கள் உணர்ச்சிபூர்வ தளத்தில் நடைபெற்றதையும் 'தமிழ்நாட்டு ‘திராவிட’ அரசியலில் சிக்கிய 'ஐந்திறம்' ' என்ற முந்தையப் பதிவில் பார்த்தோம். அதில் "'ஈ.வெ.ரா' என்ற பெயர் மறைந்து, 'பெரியார்' என்ற பட்டமே பெயரானதும்,  அந்த 'உணர்வுபூர்ச்சி' போக்கின் விளைவா? இவ்வாறு பெயர் மறைந்து, 'பட்டமே' பெயரானது உலகில் வேறு எந்த தலைவருக்கும் நிகழ்ந்திருக்கிறதா?" என்ற கேள்விகளையும் பார்த்தோம். 


அதன் தொடர்ச்சியாகவே, பிற்காலத்தில் பாரதிதாசனுக்கும் அண்ணாதுரைக்கும், பாரதிதாசனுக்கும் ஜீவானந்தத்திற்கும் இடையே ‘மிகவும் மோசமான’ உணர்ச்சிபூர்வ விவாதங்கள் நடைபெற்றதற்கு, 'குயில்' இதழ்கள் சாட்சியாக உள்ளன. ஆக சமூகத்தில் 'உச்சத்தில்' இருக்கும் நல்லவைகளும், கெட்டவைகளும் அந்த சமூக வரலாற்றில் ‘விதை கொண்டு, உரமூட்டப்பட்டு’ வளராமல், 'திடீரென' வந்து விடாது.

இன்று தி.க தலைவர் ' கி. வீரமணி'யின் பெயர் மறைந்து, (விடுதலை) 'ஆசிரியர்' என்றும், 'மு.கருணாநிதி' மறைந்து,'கலைஞர் ' என்றும் அழைக்கப்படுவதைப் பார்க்கிறோம். ஈ.வெ.ரா, கி.வீரமணி, மு.கருணாநிதி என்று நமது பேச்சில், எழுத்தில் குறிப்பிட்டால், அவர்களை அப்பெயர்கள் மூலம் நாம் அவமதிக்கிறோமோ? என்று நமக்கு ஐயம் வரும் வகையில், அவர்கள் ஆதரவாளர்கள் நினைப்பது உண்மையா? பொய்யா? என்பதும் ஆய்விற்குரியதாகும். மதிப்பதற்கும் வழிபடுவதற்கும் இடையில் உள்ள வேறுபாடு தமிழ்நாட்டில் மறைந்து விட்டதா?  இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே இந்த போக்கு தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.


இன்று தமிழ்நாட்டில் அறிவுபூர்வ விவாதங்கள் உணர்ச்சிபூர்வ போக்குகளில் மூழ்கியுள்ளதும் அப்போக்குகளின் விளைவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

‍பெரியாருக்கு முன் தமிழ்நாட்டில் சமூகத்தளத்தில் நடைபெற்ற சீர்திருத்த முயற்சிகள் இருட்டில் போனதற்கும் அப்போக்குகள் காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

'இந்து' ஆங்கில நாளிதழ் நிறுவனர் ஜி. சுப்பிரமணிய ஐயர் தமது மகளுக்கு 'விதவைத் திருமணம்' செய்தபோது பெரியாருக்கு வயது 10. சென்னையில் குப்பத்தில் உள்ளவர்களுக்கு இரவுப் பள்ளிகள் நடத்திருக்கிறார். ( G.Subramania Iyer used the newspaper as a vehicle for the promotion of widow remarriage, the suppression of infant marriage, the abolition of caste distinctions, the upliftment of the untouchables, etc : Madras, Chennai: ‘A 400-year Record of the First City of Modern India, Volume 1’ edited by S. Muthiah). இன்று நெடுமாறன் கட்சியில் இருக்கும் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் புதுக்கோட்டை மதிவாண ன் கீழ்வரும் தகவலைத் தெரிவித்தார்.
 
அவர் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசுப் பள்ளியில் படித்த போது, அவரின் 'பிராமண' ஆசிரியர், மதிவாணனைப் போன்று கிராமங்களிலிருந்து தினமும் பள்ளிக்கு வந்து படிக்கும் மாணவர்களை, தேர்வு காலங்களில் இரவில் தன் வீட்டிலேயே தங்கி தேர்வுக்காகப் படிக்க வைப்பாராம். காலையில் அம்மாணவர்களுக்கு தனது வீட்டிலேயே பழைய சாதத்தைக் காலை உண்வாகக் கொடுத்து பள்ளிக்கு அழைத்து செல்வாராம்.

திரு.வி.க வாழ்க்கை வரலாற்றில் வெளிப்பட்ட ஒரு அரிய தகவல்: “ (வேலை நிறுத்த போராட்ட காலத்தில்) தொழிலாளர் பட்டினியைப் போக்கபலப்பல வழியில் உதவி நல்கியவர் எஸ்.சீனிவாச ஐயங்கார். வ.வே.சு ஐயர் முனிவரைப் போல தொழிலாளருடன் ஏகித் திருவல்லிக்கேணியில் அரிசி தண்டியதை இங்கே குறிப்பிடாமற் போக மனமெழவில்லை.  பக்கம் 497, திரு.வி.க. வாழ்க்கை குறிப்புகள் பாகம் 2

திரு.வி.க வாழ்க்கை வரலாற்றில் பிராமண‌ரல்லாத உயர்சாதியைச் சேர்ந்த அவரும், 'தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அயோத்திதாசப் பண்டிதரும் நண்பர்களாகப் பழகிய தகவல் உள்ளது.பிராமண‌ரல்லாத உயர்சாதியைச் சேர்ந்த வ.உ.சியின் வாழ்க்கையில்,  தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த ஒரு 'இந்து' சாமியாரை தனது வீட்டில் மிகவும் மரியாதையுடன் உபசரித்த தகவல் உள்ளது. ஆக பெரியாரின் 'சீர்திருத்ததிற்கு' முன்னேயே இது போன்று நிகழ்ந்தவை எல்லாம் 'இருட்டில்' உள்ளனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

இன்று நிலைமை எப்படி உள்ளது? சென்னையில் சில வருடங்களுக்கு முன் ஒரு குறிப்பிட்ட சாதி அமைப்பின் சார்பில் ஒரு விழா நடந்தது. அவ்விழாவில் 'அந்த சாதியை'ச் சேர்ந்த ' கம்யூனிஸ்ட், திராவிட, முற்போக்கு, ஆன்மீக'  புலமையாளர்களாக இருந்த, 'முற்போக்கு, பிற்போக்குகள்' எல்லாம் கெளரவிக்கப்பட்டார்கள். அந்த அளவுக்கு 'இரட்டை வேட' 'சீர்திருத்த' 'புலமையாளர்கள்' தமிழ்நாட்டில் செல்வாக்குடன் வளர்ந்து வருகிறர்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். வேறு (பெரும்பாலும் தம்மை விட மேலான) சாதியில் திருமணம் செய்து, நல்ல வசதி வாய்ப்புகளுடன் பேராசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் இருப்பவர்கள் தமக்கும், தமது பிள்ளைகளுக்கும் கல்வியில் வேலையில் இட ஒதுக்கீடு பலன்களை (தமது சாதியில் முதல் தலைமுறையாகப் படித்த குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளின் வாய்ப்புகளை அபகரித்து) அனுபவித்து வாழ்பவர்களில் பலர், 'சாதி ஒழிப்பு'  வீரர்களாகப் பாராட்டப்படும் நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் உண்டு.

1944 -இல் திராவிடர் கழகம் உருவானதற்கு முன்,  விவாதங்கள் அறிவுபூர்வ தளத்தில் நடைபெற்று வந்த போக்கு,, திராவிடர் கழகம் உருவானபின் மாறி,  உணர்ச்சிபூர்வ தளத்தில் நடைபெறத் துவங்கியதானது,  'ந‌ன்கு வளர்ந்து'(?), இன்று மேலேக் குறிப்பிட்ட‌  'இரட்டை வேட முற்போக்குகள்' செல்வாக்குடன் அறிவுப் புலத்திலும் ஆதிக்கம் செலுத்தும் விளைவை உண்டாக்கியதா? என்பதும் ஆய்விற்குரியது. 

சமூக நீதி அணுகு முறையில் அடி மட்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி, அவர்கள் கல்வியிலும், வாழ்விலும் உயர்த்தும் முயற்சிகள், வியப்பூட்டும் அளவுக்கு,இன்றும் இருட்டில் இருக்கும் அளவுக்கு சரியாகப் பதிவு செய்யப்படாமல் , 'திராவிடர் கழகம்' உருவாவதற்கு முன் தமிழ்நாட்டில் நடைபெற்றது பற்றி ஏற்கனவே பார்த்ததோம். இசையில் தீண்டாமையும், உயர்வு தாழ்வும் காலனியத்தின் நன்கொடை என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். தமிழ்நாட்டில் வெள்ளைக்காரர் வருகைக்கு முன் கல்வியில் அதிக சதவீதத்தினராக பிராமணர்களை விட, 'கம்மாளார்'(இன்றைய 'விஸ்வகர்மா' சாதிகள்) இருந்ததையும், காலனிய ஆட்சியிலேயே பிராமண‌ர்கள் கல்வியிலும் அரசுப் பணிகளிலும் அதிக சதவீதத்தினராக மாறியுள்ளார்கள் என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். "பழங்காலத்தில் பிராமணர்களைவிட அதிக எண்ணிக்கையில் படித்தது சூத்திரர்களும் தலித்துகளுமே!";
http://www.dinamani.com/junction/azhagiya-maram/

இன்றைய சாதி முறைக்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் இல்லை என்பதையும், விவசாயம், மீன் பிடித்தல் உள்ளிட்டு அனைத்து தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள், 'பறை' வகை இசைக் கருவிகளை இசைத்தார்கள் என்பது பற்றியும் பதிவு செய்துள்ளேன். 
( http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html  ) அரசும், சமூகமும் பின்னிப் பிணைந்திருந்த நிலையில், செயல்பாட்டு தர ஏணியாக (Functional hierarchy) இருந்த 'வருணம்' என்ற சமூக செயல் நுணுக்கம் (social Mechanism) , தமிழ்நாட்டில் எந்த காலத்தில், எந்த சமூகக் காரணங்கள் அடிப்படையில் ' சமூக உயர்வு, தாழ்வு, தீண்டாமை' உள்ளடக்கிய செயல் நுணுக்கமாக மாறியது என்பது ஆய்விற்குரியது.

பெரியார் கொள்கையை ஏற்று, 'மனித சமத்துவம்' என்ற அடிப்படையில் மனிதர்களின் 'தரா தரம்,குலம் கோத்திரம்' பற்றி கவலைப் படாமல், லாப நட்ட நோக்கின்றி சமூகப் பற்றுடன் பேராசிரியராகப் பணியாற்றிய எனது சமுக வட்டத்தில், அத்தகையோரை அனுமதித்த‌தால் விளைந்த பாதிப்புகள் இந்த Blog-இல் உள்ள பதிவுகளுக்கான மிகவும் மதிப்பு வாய்ந்த உள்ளிடுகளாக (inputs) அமைந்தன‌. (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

Quantum Mechanics- இல் ஒரு அணுவில் உள்ள எலெக்ட்ரான்களில் இயல்பின் அடிப்படையில் 'சமத்துவமாக' இரண்டு எலெக்ட்ரான்கள் இருக்க முடியாது. இது பவுலியின் 'தவிர்ப்புத் தத்துவம்' (Pauli’s Exclusion Principle)  என்று அழைக்கப்படுகிறது. அதே போல், உலகில் உள்ள மனிதர்களில் இயல்பின் அடிப்படையில் 'இரண்டு மனிதர்கள்' கூட 'சமத்துவமாக' இருக்க முடியாது. எல்லா மனிதர்களையும் , ‘இயல்பைப் புறக்கணித்து’ , குடும்பம், நட்பு உள்ளிட்ட நமது சமூக வட்டம் உள்ளிட்டு, நமது வாழ்வில், அவர்களைச் 'சமத்துவமாக' நடத்துவது எவ்வளவு முட்டாள்த்தனமானது, ஆபத்துகள் நிறைந்தது என்பது எனது வாழ்க்கையில், நான் கற்ற 'அசாதாரண' பாடமாகும். புலமையை வளர்ப்பதில் ஆர்வமின்றி,  யாரிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது, என்ற அடிப்படை நாகரீகம் கூட தெரியாத, 'சராசரி பொது அறிவின்' அடிப்படையில், கேள்விகள் கேட்டு, புலமையையும், புலமையாளர்களையும், 'கிண்டல்' செய்து மகிழும், 'சமூக கிருமிகள்', தமிழ்நாட்டில் வளர்ந்த 'பாவத்தில்' , எனது 'தொண்டுகளுக்கும்' பங்கு உண்டு.

உயிரணுவியல்(Genetics), உயிர் பன்முக வேறுபாடு (Bio-Diversity), etc போன்றவை தொடர்பாக வெளிவந்துள்ள ஆய்வுமுடிவுகள் எல்லாம்  உயிரணுக்கள்(Genes) ஒரு மனிதரின் தகுதி, திறமை, உடல் நலம், மனநலம் போன்றவற்றில் எவ்வளவு செல்வாக்கு செலுத்துகின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன. அந்த பின்னணியில் ஒவ்வொரு மனிதரும் தமக்குள்ள இயல்பின் அடிப்படையில் தகுதி திறமைகளை வளர்த்து, தமது இயல்போடு ஒன்றிய உள்ளார்ந்த ஈடுபாடுகளை(Passion)  அடையாளம் கண்டு,வளர்த்து வாழ்வதே உண்மையான 'வாழ்வியல் புத்திசாலித்தனம்' என்பதையும், அப்படி வாழும் போது, கிடைக்கும் பலன்கள் காரணமாக, நமது வாழ்வில் நாம் சந்திக்கும் பாதிப்புகளும், அவமானங்களும் கூட மதிப்பு மிக்க உள்ளீடாக அமையும் என்பதையும் இது போன்ற பதிவுகள் உணர்த்துகின்றன..

குடும்பமாகட்டும், கட்சியாகட்டும், அரசு அல்லது தனியார் நிறுவனமாகட்டும், அந்தந்த மனிதர்களின் இயல்புகள், தகுதி, திறமைகளைப் பொறுத்து செயல்பாட்டுக்கான தரஏணியில்  (Functional hierarchy) அவரவருக்கான பணியிடங்கள் சரியாக ஒதுக்கி செயல்பட்டால் தான், குடுமபமும், கட்சியும், நிறுவனங்களும் ஆக்கபூர்வமான திசையில் பயணிக்கும். இன்றும் மார்க்சிய‍ லெனினிய 'தீவிர வாத இயக்கமாகட்டும், இடது, வலது கம்யூனிஸ்ட் கட்சிகளாகட்டும், தி.க, தி.மு.க போன்ற திராவிடக் கட்சிகளாகட்டும், அந்தந்த கட்சித் தலைவர்களை யார் யார் எந்தெந்த அளவு விரைவாக, அல்லது தாமதமாகக் காத்திருந்து சந்திப்பது என்பதற்கு அந்தந்த கட்சிகளின், தலைவர்களின் 'இயல்புகளை'ப் பொறுத்து, ஒரு 'நவீன கால வருணாசிரம' முக்கியத்துவ தர வரிசையானது செயல்பாட்டில் உள்ளதா? இல்லையா?

இயல்புகள், தகுதி, திறமைகளுக்குப் பதிலாக, லஞ்சம், செல்வாக்கு, பலவகையான தரகுப் பணிகளில் திறமை, எந்த தவறுகளையும் 'அஞ்சாமல்' ( 'அச்சம் என்பது மடமையடா' என்ற போக்கில்) செய்யும் திறமை போன்றவற்றில் 'திறமைசாலிகளே', குடும்பம், கட்சி, நிறுவனம் உள்ளிட்டு சமுகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளிலும் முக்கிய இடங்களை ஆக்கிரமித்த பின், அந்த சமுகம் அழிவுபூர்வ திசையில் பயணிப்பதில் வியப்புண்டோ?

தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள கேடுகள் இத்தகைய காரணங்களால் விளைந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

'மனிதர்களின் மனங்களில் உள்ள தேவைகள் மற்றும் ஈடுபாடுகள் அடிப்படைகளில் வெளிப்படும் ஆற்றல்களில் (Energy) வெளிப்படும் விசைகள்(Forces) ஆனவை, வெவ்வெறு வகையிலான மனித உறவுகள் அடிப்படையிலான  சமூக இழைகளின் தோற்றங்கள் மற்றும் வளர்ச்சிகளின் ஊடே செயல்பட்டு, பலவகைப்பட்ட சமூகப் பிணைப்புகள்(Social Bonds)  மூலம் அந்த மனிதர்கள் சம்பந்தப்பட்ட வெவ்வேறு அமைப்புகளை (குடும்பம், நிறுவனம், அரசு, etc ) உருவாக்கி, அந்தந்த‌ அமைப்புகளின் செயல்படுகளுக்கான சமூக ரத்த ஓட்டம் நடைபெறுகிறது என்பதை  ஏற்கனவே பார்த்தோம்.  
( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )


'தவறான நபர்கள் சமூகத்தில் உள்ள (குடும்பம், கட்சி, etc ) அமைப்புகளின் செயல்பாட்டிற்கான அமைப்பின் தர ஏணி நிலையில் (socio-structural functional hierarchy)   முக்கிய பொறுப்புகளில் இடம் பெறும்போது, அமைப்பின் நோக்கங்களை தமது சுயநலத்திற்கு திசை திருப்பும் ஆபத்து நேரிட வாய்ப்புண்டு. அதில் அவர்கள் வெற்றி பெற, மற்ற முக்கிய பொறுப்பில் உள்ள நபர்களையும் படிப்படியாக, அமைப்பின் செயல்பாட்டின் ஊடே, தம்மைப் போன்றே சுயநலவாதிகளாக மாற்றும் தொத்து நோய்க் கிருமி மூலங்களாக செயல்படுவதும் நேரிடலாம்.அந்த போக்கில் அமைப்பில் உள்ள மனிதர்களின் ஆற்றல்கள் எல்லாம் அந்த அமைப்பை சீரழிவுப் பாதையில் பயணிக்கவே செலவாகும்.' என்பதையும் அந்தப் பதிவில் பார்த்தோம்.

திராவிடர் இயக்க வரலாற்றில் அறிவுபூர்வ போக்குகள் பலகீனமாகி, உணர்ச்சிபூர்வ போக்குகள் செல்வாக்குடன் வளர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நிலையை எப்போது, எப்படி அடைந்தது? தமிழ்நாட்டு சமூக அமைப்புகளின் (குடும்பம், கட்சி, etc  ) செயல்பட்டுக்கான சமூக ரத்த ஓட்டத்தில் (மனித உறவுகளில் லாப நட்டம் பார்க்கும்) 'கள்வர் பண்பு' ( திருக்குறள் 813  ) எப்போது, எப்படி நுழைந்து கெடுத்தது? என்பது போன்ற கேள்விகளைத் திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் ஆராய வேண்டிய கட்டத்தில் தமிழின்,தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்பு நோக்கிய முயற்சிகள் இருக்கின்றன‌. 

திராவிட இயக்க வரலாற்றில், சமூக ரத்த ஓட்டத்தில்,  லாப நட்டம் பார்க்கும், 'கள்வர் பண்பு' நுழைவதற்குக் காரணமான அந்த ' திராவிடத் திறமைசாலிகளின்' வளர்ச்சியானது, திரைப்படத் துறையில், குறிப்பாக, 'வேலைக்காரி', 'பராசக்தி' போன்ற திரைப்பட வெற்றிகளின் பலப் பின்னணியில் வளர்ந்ததா? தமிழக அரசியலில் திரை உலகச் செல்வாக்கும்,குடும்ப அரசியல் செல்வாக்கும், இந்தியாவிலோ, உலகிலோ, வேறு எங்கும் காண முடியாத அளவுக்கு, எவ்வாறு தோன்றி வளர்ந்தது? என்ற கேள்விகளை ஆராய வேண்டிய நேரம் வந்து விட்டது. 

'தரா தரம், தகுதி, திறமை, குலம், கோத்திரம்'  எல்லாம் 'பார்ப்பன சூழ்ச்சி' என்று சொல்லி, அந்த 'திறமைசாலிகள்' தமது உண்மை உருவங்களை மறைத்து, இன்னும் எவ்வளவு காலம் வாழ‌  முடியும்? ‘தேச விரோத சுயலாப வலைப் பின்னலில்’ (network) சிக்கியோ, அல்லது தொட்டால் 'ஷாக்'(Shock)  அடிக்கும் என்று வெளியில் தெரியாமல் பயந்து ஒதுங்கியோ, ராஜ‌பட்சேயை ஐ.நா உள்ளிட்ட உலக அரங்குகளில் காப்பாற்றி வரும் சீனாவைக் கண்டிக்காமலும், தமிழ்நாட்டில் சீனப் பொருட்கள் ( கடந்த பல வருடங்களில் உற்பத்தித் தொழிலைச் சிதைத்து, லட்சக்கணக்கானவர்கள் வாழ்வாதாரங்களை இழந்து வரும் நிலையிலும் கூட)  விற்கப்படுவதை எதிர்க்காமலும், 'தமிழ் உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு' என்று எவ்வளவு காலம் தான் ஏமாற்றி வாழ முடியும்? 

தமிழ்நாட்டில் 'தமிழ் உணர்வு' ஆனது, 'பொது வாழ்வு' வியாபாரிகளிடம் சிக்கி சீரழிகிறதா? அதே நேரத்தில், 'இந்தியர்' என்ற உணர்வு வலிவு பெற்று வருகிறதா? என்ற கேள்வியை, கீழ்வரும் செய்தி எழுப்புகிறது.


"டெல்லியில் உள்ள பட்டாசு கடைக் காரர்கள் தேச நலனுக்காக சீன பட்டாசுகளை புறக்கணித்துள்ளனர். இதனால் அங்கு சிவகாசி பட்டாசுகள் விற்பனை களைக்கட்டத் தொடங்கியுள்ளது. சீன வரவுகளால் இந்திய பட்டாசு தொழில்கள் நலிவடைந்து வருவதாலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாலும், இந்த ஆண்டு சீன பட்டாசு களை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் அண்மையில் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடங்கப்பட்டது. அதற்கு உரிய பலன் டெல்லி சதார் பஜாரில் தற்போது கிடைத்துள்ளது. “

'தீக்குளித்து, போராடி, தமது வாழ்வைக் கெடுத்துக் கொள்ளும் திறமையுள்ள' குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளின் எண்ணிக்கையும் வெகு வேகமாகக் குறைந்து வருகிறதா? இல்லையா? கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் 'ஆதாயத் தொண்டர்கள்' தவிர்த்து, மற்றவர்களெல்லாம்,அந்த 'திறமைசாலிகள்' பற்றி நன்றாக அறிந்து, அவர்களில் திரைத்துறைகளில் நுழைந்தவர்கள் , 'சூது கவ்வும்' 'ஜிகிர் தண்டா' போன்ற -வியாபார ரீதியிலும் வெற்றி பெற்ற, சமூக X Ray  - திரைப்படங்களை எடுத்து கலக்கி வருகிறார்கள்.எனவே  அந்த 'திராவிடத் திறமைசாலிகளின்' அழிவும் தொடங்கி விட்டது.


உணர்ச்சிபூர்வ போதையில் சிக்கி 'கள்வராக' இருப்பவர்களை, நாம் பெரியாரியல் 'தோழர்' என்று கருதி, 'தோழமையுடன்' பழகுவது மிகவும் ஆபத்தானது. அவர்கள் நம்மை 'ஏணியாக'ப் பயன்படுத்துவதோடு நின்று விடாமல், தமது சுய‌நலனுக்கு நம்மையேக் 'காவு கொடுக்க'த் 'தயங்காத'வர்கள். அத்தகைய அனுபவங்கள் மூலமே தமிழ்நாட்டில் 'வாழ்வியல் வெற்றியின் இரகசியத்தைக்' கண்டுபிடித்து, பதிவு செய்துள்ளேன். ( http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html ) 'தரா தரம், குலம், கோத்திரம்' 'பார்ப்பன சூழ்ச்சி' என்றும், 'தகுதி திறமை' மோசடி' என்றும் நினைத்து, இயல்பைப் புறக்கணித்து, 'மனித சமத்துவம்' கடைபிடிக்கும் போக்கு வளர்ந்த வேகத்தில், இத்தகைய 'கள்வர்கள்' வளர்ந்து, தமிழ்நாட்டில் 'செல்வாக்கு' பெற்றார்களா? என்பதும் ஆய்விற்குறியதாகும்.

   

பிறந்த போது எதையும் கொண்டு வராத நாம், இறக்கும் போதும், நல்ல/தீய வழிகளில் சம்பாதித்த சொத்து எதையும், எடுத்துச் செல்லப் போவதில்லை. நமது இயல்பை ஓட்டிய தகுதி, திறமைகளை வளர்த்து, உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்(Passions) வாழ்பவர்களே, மரணத்தை மன நிறைவுடன் தழுவ முடியும். நமது இயல்பைத் தொலைத்து, காலனி ஆட்சிப் பாதிப்பில் இன்றும் உழலும் மனநோயாளிகளாக வாழ்பவர்கள் எல்லாம், வாழும் போது,
( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html  )  இரவில் படுத்தவுடன் தூங்க முடியுமா? 'குற்ற உணர்வின்றி' மன நிறைவுடன் மரணத்தைத்  தழுவ முடியுமா?

Saturday, November 1, 2014


தமிழ்நாட்டு ‘திராவிட’ ‌அரசியலில் சிக்கிய 'ஐந்திறம்'



தொல்காப்பியம் பாயிரத்தில் 'ஐந்திர‌ம் நிறைந்த ' என்று உள்ளது. மறைந்து போன தமிழ் நூல்கள் வரிசையில் முக்கியமானதாக 'ஐந்திர‌ம்' கருதப் படுகிறது. அது தொடர்பான ஒரு 'சர்ச்சை' காரணமாக, அச்சிடப்பட்டு.வெளிவந்து, பின் 'சர்ச்சையில்' சிக்கி எரிக்கப்பட்டும், மீண்டும்  அச்சிட்டு வெளிவருவது தடுக்கப்பட்டதுமான சோதனைக்கு தமிழில் உள்ளான ஒரே நூல் 'ஐந்திறம்' ஆகும். அந்த 'சர்ச்சை' பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

“அண்ணாதுரையின் செல்வாக்கில் பெரியார் நீதிக்கட்சியை 1944இல் 'திராவிடர் கழகம்' என்று மாற்றினார். பிராமணர்களுக்கு திராவிடர் கழகத்தில் இடமில்லை என்பதோடு,  செல்வத்திலும் புலமையிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்திருந்த நீதிக்கட்சியில் இருந்த‌ பிராமணரல்லோதோரும் இல்லாமல், 'திராவிடர் கழகம்' பயணித்தது” என்பதை  ' இந்தியாவில் ‘வித்தியாசமான’ தமிழ்நாடு ' என்ற தலைப்பிலான‌  முந்தையப் பதிவில் பார்த்தோம்.

அதன் தொடர்விளைவாக தமிழ்நாட்டில் அறிவுபூர்வக் கூறுகள் பலகீனமாகி, உணர்ச்சிபூர்வ கூறுகள் வலுவடைந்ததா? என்பதும், அந்த போக்குகளில் சிக்கியதால், தமிழுக்கு பெரும் பாதிப்புகள் விளைந்ததா? என்பதும் ஆய்விற்குரியவையாகும். அந்த பாதகமானப் போக்குகளுக்கு விதி விலக்காக, இடையில் எம்.ஜி.ஆர் முதல்வரான பின்,  கி.ஆ.பெ.விஸ்வநாதன் போன்றோர் ஆலோசனைகளால், தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கி, அரசியல் தலையீடு, ஊழல் போன்றவற்றிற்கும், நிதிப் பற்றாக்குறைக்கும் இடமில்லாமல் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்து, பேரா.வி.அய்.சுப்பிரமணியத்தை முதல் துணை வேந்தராக அமர்த்தினார். தமிழ்ப் பல்கலைக் கழகக் கட்டிடங்கள்,  கண‌பதி ஸ்தபதி மேற்பார்வையில் பாராம்பரிய வடிவமைப்பில், ஊழலுக்கும், ‘க‌மிசனுக்கும்’ இடமின்றி உருவாகின.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் இது போன்றவை தமிழுக்கு எதிர்பாராமல் கிடைத்த நல்ல வாய்ப்பாகும்.ஆனால் அந்த பாதகமான போக்குகளில் எம்.ஜி.ஆரும் சிக்கி தோற்றதற்குச் சாட்சியாக, 'ஐந்திறம் சர்ச்சை' (ainthiRam controversy)  விளைந்தது. அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

உ.வெ.சா வழியில் தெய்வசிகாமணிக் கவுண்டர் பழம்சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து, மறைந்து போன தமிழ் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். மறைந்து போன தமிழ் நூல்களில் அவர் முயற்சியால் வெளிவந்த நூல் - சிலப்பதிகார உரையாசிரியர்கள் குறிப்பிட்ட - 'பஞ்ச மரபு' முக்கியமான இசை நூல் ஆகும்.

பின்னர் சென்னை Institute of Asian Studies   முயற்சியால் 'கூத்த நூல்' வெளிவந்தது. யோகியாரின் 'கூத்த நூல்' -உம் வெளிவந்தது.அந்த இரண்டு நூல்களுமே  சிலப்பதிகார உரையாசிரியர்கள் குறிப்பிட்ட 'கூத்த நூலாக' இருக்க முடியாது, என்பதைத் தகுந்த காரணங்களோடு நிறுவினார் இசை அறிஞர் வீ.பா.கா. சுந்தரம். ஆனாலும்  அந்த இரண்டு நூல்களின்  சிறப்புகளையும் அவர் வெளிப்படுத்தினார். இத்தகைய முயற்சிகள் எம்.ஜி.ஆர் சம்பந்தமில்லாமல் நடந்ததால், 'தி.மு.க ஆதரவு தமிழ்ப் புலமையாளர்கள்' அவற்றைக் கண்டு கொள்ளவில்லையா? என்ற கேள்வியையும் ஐந்திறம் சர்ச்சை எழுப்புகிறது.

இவ்வாறு மறைந்து போன நூல்கள்  controversy -சர்ச்சையுடன் வெளிவந்தாலும் , அவை ஒவ்வொன்றும் வெளிப்படுத்திய புதிய கருத்துக்களால் தமிழும் வளர்ந்தது. அந்த சர்ச்சைகள் காரணமாக அச்சிடப்பட்ட அந்நூல்கள் வினியோகிக்கப் படாமல் எரிக்கப்படவில்லை. அத்தகைய 'சர்ச்சை'யைப் பயன்படுத்தி அச்சிடபட்டு. எரிக்கப்பட்டும், மீண்டும்  அச்சிட்டு வெளிவருவது தடுக்கப்பட்டதுமான சோதனைக்கு தமிழில் உள்ளான ஒரே நூல் 'ஐந்திறம்' ஆகும்.

ஐந்திறம் பற்றிய   சர்ச்சை தமிழுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய,‌ அந்த‌ 'சர்ச்சை' என்ன? என்பது தெரிய வேண்டும்.

                                

 

                            ஐந்திறம் பற்றிய  ‘ சர்ச்சை’ 


தொல்காப்பியம் பாயிரம் குறிப்பிட்ட நூல் ‘ஐந்திரம்’. கணபதி ஸ்தபதி முயற்சியால் எம்.ஜி.ஆர் வெளியிட்ட நூல் ‘ஐந்திறம்’. Pre-Pallavan index (University of Madras)  குறிப்பிடும் நூல் ‘ஐந்திரம்’. அந்நூல் ஒரு சமஸ்கிருத இலக்கண நூல். தொல்காப்பியம் குறிப்பிட்ட நூல் சமஸ்கிருத இலக்கண நூல் அல்ல‌ என்றும் ,  அது ஐந்திறம் என்றும் , அது  'எழுத்து, சொல், பொருள், அணி, யாப்பு' ஆகிய ஐந்தினைக் குறிக்கும் என்றும் தமிழ் அறிஞர் கே. சுப்பிரமணியம் பிள்ளை வெளியிட்ட கருத்தும் அதில் பதிவாகியுள்ளது. சென்னை மகாபலிபுரம் 'அரசு கட்டிடவியல் மற்றும் சிறபக் கல்லூரி' (govt College of architecture & sculpture) முதல்வராக திரு.வி.கணபதி ஸ்தபதி பணியாற்றிய காலத்தில், புலவர் வீரபத்திரனார்  அவரிடம் கீழ்வரும் தகவலைத் தெரிவித்தார். சரஸ்வதி மஹால் நூலகத்தில் இருந்து, பின்னர் காணாமல் போன, ‌ ‘ஐந்திறம்’ சுவடியைத் தான் பார்த்ததாகவும், அதை முழுவதும் மனப்பாடம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.  உடனே திரு.வி.கணபதி ஸ்தபதி அதை ஒலிப்பதிவு செய்து,  ஆராய்ந்தார். அதில் 'மயன் ஐந்திற தொழில் நுட்பம்' இருப்பதை அறிந்து, தமிழக அரசு அதைப் புத்தகமாக வெளியிடலாம் எனக் கருதி, அன்றைய கல்வி அமைச்சர் அரங்கநாயகத்திடம் கொடுத்தார். அரங்கநாயகம் அதை முதல்வர் எம்.ஜி.அர் கவனத்திற்குக் கொண்டு சென்றார். அது தொடர்பாக பொள்ளாச்சி மகாலிங்கம் போன்றோரைக் கலந்தாலோசித்த பின், அவர் தமிழக அரசு சார்பில் ‘ஐந்திறம்’  நூலை வெளியிட்டார். உடனே ஓளவை நடராஜன் போன்ற 'தி.மு.க ஆதரவு தமிழ்ப் புலமையாளர்கள்' அதைக் கடுமையாக ஊடகங்கள் வாயிலாக எதிர்த்தனர். 'தினமணி' போன்ற இதழ்கள் அந்த எதிர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. அந்த எதிர்ப்பின் காரணமாக, அரங்கநாயகம் கல்வி அமைச்சர் என்ற பதவியை இழந்தார். தினமணி ஆசிரியராக இருந்த ஐராவதம்.மகாதேவன் அப்பொறுப்பிலிருந்து விலகினார். இவை யாவும் திரு.வி.கணபதி ஸ்தபதி என்னிடம் தெரிவித்த தகவல்களாகும்.

‘ஐந்திறம்’ நூலின் அறிமுக உரையில்,  ' ஓவியக் கலை, சிற்பக் கலை, கட்டிடக் கலை, இசைக் கலை, நாட்டியக் கலை ' ஆகிய ஐந்தினைக் குறிப்பிட்டு , இசைக் கலையில் இலக்கியக் கலை ஒன்றியது என்று சொல்லி, இந்த ஐந்து கலைக்குமான நூல் ஐந்திறம்  என்று கணபதி ஸ்தபதி விளக்கியுள்ளார். எம்.ஜி.ஆர் வெளியிட்ட 'ஐந்திறம்' ஆனது, தொல்காப்பியம் பாயிரம் குறிப்பிட்ட நூலா இல்லையா என்பது விவாதத்திற்கு உரியது.  சுவடிகளிலிருந்து படியெடுத்து அச்சிடப்பட்ட, பழந்தமிழ் இலக்கியங்களில் இருக்கும் பாட பேதங்கள் பற்றி நிறைய ஆய்வுகள் உள்ளன. அதே போல் சரஸ்வதி மஹால் நூலகத்தில் இருந்த சுவடியை  புலவர் வீரபத்திரனார்        பல‌ வருடங்களுக்கு முன்  மனப்பாடம் செய்து , வாய் மூலம் வெளிப்படுத்தி, படியெடுக்கப்பட்டு அச்சான 'ஐந்திறம்' நூலில் நிறைய பாட பேதங்கள் இருக்க வாய்ப்புண்டு. இவற்றையெல்லாம் முன்னுரையில் குறிப்பிட்டு, மீண்டும் வெளியிடுமாறு முந்தைய ஆட்சியில் முதல்வராக இருந்த தி.மு.க தலைவரை, கணபதி ஸ்தபதி பலமுறை வற்புறுத்தினார். அதில் வெற்றி பெறாமலேயே மனமுடைந்து அவர் மரணமடைந்தார்.


கணபதி ஸ்தபதி வற்புறுத்தலின் பேரில், கட்டிடக்கலையில் உறைந்துள்ள இசையை (Frozen Music) பிரித்தெடுக்கும் 'லாஜிக்' (Logic) தொடர்பான 'ஐந்திரம்' சூத்திரங்கள் அடங்கிய கட்டுரையினை சமர்ப்பித்து, கணபதி ஸ்தபதி உருவாக்கிய கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை இலச்சினையாகக் கொண்டகோவையில் நடந்த உலக தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் பங்கேற்றேன். அம்மாநாட்டில் கணபதி ஸ்தபதி, முதல்வர் கருணாநிதியை சந்திக்க முயன்று, இயலாமல் போனதை, என்னிடம் தெரிவித்து மிகவும் வருந்தினார்.


தஞ்சை பெரிய கோவில் 1000 ஆவது ஆண்டு விழாவினை, அன்றைய தமிழக முதல்வர் 'கலைஞர்' கருணாநிதி வெகு சிறப்பாக கொண்டாடினார். (http://www.brihadeeswarartemple.com/millennium-celebrations.htm ) அவ்விழாவில் பங்கேற்க தமக்கு அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து, கணபதி ஸ்தபதி, அக்கோவிலின் தொழில் நுட்பங்கள் பற்றி ஒரு சிறு நூல் எழுதி, என்னை வற்புறுத்தி, அதற்கு ஒரு முன்னுரையும் எழுதி வாங்கினார். ஆனால் அவருக்கு அழைப்பு வராத செய்தியை கண்கலங்கி என்னிடம் தெரிவித்த சில காலத்திற்குப்பின், அவர் மறைந்தார்.

அறிவுபூர்வமாக நடைபெற வேண்டிய விவாதத்தை , எம்.ஜி.ஆர் எதிர்ப்பு காரணமாக உணர்ச்சி பூர்வமாக்கியது கலைஞர் கருணாநிதியும், அவர் சார்பு தமிழறிஞர்களுமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.(தமிழ்நாட்டுதிராவிடஅரசியலில் சிக்கிய திருக்குறள் ஆய்வுகள்; http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html)


இந்த உணர்ச்சி பூர்வ விவாதத்தில், கீழ்வரும் முக்கியமான லாபத்தை தமிழ் உலகம் இன்று வரை இழந்துள்ளது என்பது வேதனைத் தருவதாகும்.


                      ஐந்திறம் சர்ச்சையால் ஏற்பட்ட இழப்பு



ஐந்திறம் நூலில் வெளிப்பட்ட‌ ஓவியக் கலை, சிற்பக் கலை, கட்டிடக் கலை, இசையுடன் கூடிய பாடல் கலை, நாட்டியக் கலை ஆகிய ஐந்து கலைகள் ஒன்றுடன் ஒன்று  தொழில் நுட்ப ஆற்றல் வழி சம்பந்தப்பட்டது என்பதும், அவை - தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள‌ - மயன் தொடர்புடையவை என்பதும், ஒரே சூத்திரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கலைகளின் தொழில் நுட்பத் தகவல்களைப் பெறமுடியும் என்பதும், அதனை செயல் விளக்கம் செய்து காட்ட முடியும் என்பதும் முக்கியமாகும்.

கணபதி ஸ்தபதியின் தூண்டுதலின் பேரில், 'ஐந்திறம்' நூலில் உள்ள சூத்திரங்களையும் பயன்படுத்தி , கட்டிடக் கலையில் உறைந்துள்ள இசையை(Frozen Music) எவ்வாறு பிரித்தெடுக்க முடியும் (decipher)  என்பதற்கான 'லாஜிக்'குகளையும்(Logic), இசையில் இயக்கமாக(Dynamic)  இருக்கும் கட்டிடக்கலையை ( Dynamic Architecture)  எவ்வாறு பிரித்தெடுக்க முடியும் (decipher) என்பதற்கான 'லாஜிக்'(Logic)குகளையும் நான் கண்டுபிடித்து, கணபதி ஸ்தபதியின் முன் விளக்கினேன். அதன் காரணமாகவே அவர் என் மீது சொற்களால் விளக்க முடியாத 'அன்பு வெள்ளத்தில்' என்னை மூழ்கடித்தார். அவரின் மரணத்திற்குப் பின், அவர் ஏற்படுத்தியிருந்த 'டிரஸ்டில்' (Trust) நானும் உறுப்பினர் என்பது எனக்குத் தெரிய வந்தது.

அவர் முன்னிலையில் 2008-இல் வெளிநாட்டு கட்டிட நிபுணர்களுக்கு சென்னையில் செயல் விளக்கம் செய்து காட்டினேன். அவர் வற்புறுத்தியதன் காரணமாகவே, கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கிலும் அதனை நிகழ்த்தினேன். அதன் மலரிலும் அக்கட்டுரை இடம் பெற்றது.இது தொடர்பான கணிணி வழி மென்பொருள் ( computer based application software) உருவாக்கும் ஆய்வில் நான் ஈடுபட்டுள்ளதையும் கணபதி ஸ்தபதி அறிவார்.

ஓவியக் கலை, சிற்பக் கலை, கட்டிடக் கலை, இசையுடன் கூடிய பாடல் கலை, நாட்டியக் கலை ஆகிய ஐந்து கலைகள் ஒன்றுடன் ஒன்று  தொழில் நுட்ப ஆற்றல் வழி சம்பந்தப்பட்டது என்ற அடிப்படையில், அவை தொடர்பான 'லாஜிக்கு'களைக் கண்டுபிடித்து, கணினிவழி பயன்பாட்டு மென்பொருட்கள்(Computer based Application Software)  உருவாக்குவது என்பது எவ்வளவு தொழில் வாய்ப்புகளையும், வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்பதை அறிவியல் தொழில்நுட்ப அறிவுள்ளவர்கள் அறிவார்கள். தமிழில் மட்டுமே புலமையுள்ளவர்களுக்கு அவை விளங்காததில் வியப்பில்லை.

சிற்பக்கலை வல்லுநராகிய கணபதி ஸ்தபதிக்கு புரிந்ததானது, தமிழில் மட்டுமே புலமையுள்ளவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை என்பதை கலைஞர் கருணநிதியும், அவர் சார்பு ஓளவை நடராசன் போன்ற 'தமிழ்ப் புலமையாளர்களும்' அறியவில்லையா? அல்லது எம்.ஜி.ஆர் எதிர்ப்பு அவர்க‌ள் கண்களை மறைத்ததா ? என்பது ஆய்விற்குரியது. 'கூத்த நூல்' எம்.ஜி.ஆரால் வெளியிப்பட்டவில்லை. எனவே அந்த கூத்த நூல் வெளிவந்ததை பற்றியோ , அது சிலப்பதிகார உரையில் குறிப்பிடப்பட்ட நூலா இல்லையா என்ற விவாதத்தைப் பற்றியோ, கலைஞர் கருணாநிதியோ ,அவர் சார்பு 'அறிஞர்களோ'  கண்டுகொள்ள‌வில்லை. ஆனால் எம்.ஜி.ஆர் வெளியிட்ட 'ஐந்திறம்' அவர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.  அச்சிடப்பட்ட நூல்கள் வினியோகிக்கப் படாமல் எரிக்கப் பட்டன என்பது தமிழ் உலகிற்கு எவ்வளவு பெரிய இழப்பு? கணபதி ஸ்தபதி அவற்றைப் பற்றி என்னிடம் விவரித்தபோது, கண் கலங்கியதை, என்னால் மறக்க முடியாது.

அவர்கள் எதிர்க்காமல் இருந்திருந்தால், எம்.ஜி.ஆர் ஆதரவுடன் என் போன்றோரின் ஆராய்ச்சிகள், அந்த ஐந்திற தொழில்நுட்ப அடிப்படைகளில் எவ்வளவு வியாபார வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்க முடியும்? அதன் மூலம் திராவிடக்கட்சி ஆட்சிகளில் உலகப் பல்கலைக் கழகங்களில் மூடப்பட்டு வந்த தமிழ்த் துறைகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்குமா? இல்லையா? உலக அளவில் பல்கலைக் கழகங்களிலும், தனியார் ஆராய்ச்சி மையங்களிலும் பழந்தமிழ் இலக்கியங்களை நோக்கி, புதிய தொழில் நுட்பங்களுக்கான ஆய்வு படையெடுப்புகள் தொடங்கியிருக்குமா? இல்லையா? என்பது போன்ற கேள்விகளுக்கு தெளிவான விடையளிக்கும் நோக்கில், எனது ஆய்வு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அவற்றில் மேலேக் குறிப்பிட்ட, திரு.கணபதி ஸ்தபதி வெகுவாகப் பாராட்டிய இசை‍ - கட்டிட தொடர்பு பற்றிய ஆய்வு, அவரின் மறைவிற்குப் பின், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்க் கல்வி நிறுவனத்தில், தற்போது  என்னைத் திட்ட ஆலோசகராகக் கொண்டு(Project Consultant to R & D ) ,   கட்டிடவியல் (architecture), கணினிவியல் (Computing Technology)  வல்லுநர்கள் கொண்ட ஆய்வுக்குழு மூலம் வளர்ந்து வருகிறது. அதே போல், தொல்காப்பியம் அடிப்படையில் இசை மொழியியல் (Musical Linguistics)  பற்றிய நூல் எழுதும் திட்டமும் வளர்ந்து வருகிறது. இது போன்ற எனது ஆய்வுகளுக்கு மேற்கத்திய நாடுகளில் உள்ள பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் வெளிப்படுத்தியுள்ள ஆதரவை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.(https://tamilsdirection.blogspot.com/2018/09/4-social-comparison-infection-passions.html )

அடுத்து, கடைசியாக‌, திராவிடர் கழகத்தின் தோற்றத்தில் உணர்ச்சி பூர்வ போக்குகளுக்கான விதை உருவாகி, அதன் 'விளைச்சலில்' 'ஐந்திறம் சர்ச்சை' வெளிப்பட்டதா? என்பதை அடுத்து பார்ப்போம்.

1944இல் தி.க உருவானதற்கு முன், பெரியாரோடு சேர்ந்து சமூகப் பணியாற்றிய ஜீவா, முத்துச்சாமி வல்லத்தரசு போன்றவர்கள் பெரியாரை 'அறிவுபூர்வமாக' விமரிசித்து எழுதிய மடல்களை, அப்படியே தன் 'குடி அரசு' இதழில் வெளியிட்டு, பெரியார் தனது நிலைப்பாடுகளையும் தெளிவுபடுத்தினார். அவர்களெல்லாம் பெரியாரை விட்டு விலகி, செல்வத்திலும் புலமையிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்திருந்த நீதிக்கட்சியில் இருந்த பிராமணரல்லோதோரும் விலகிய பின், அண்ணாதுரை செல்வாக்கில் தி.க உருவானது. அதன்பின் அண்ணாதுரைக்கும், பெரியாருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மேற்குறிப்பிட்ட 'அறிவு பூர்வ' திசையில் நடந்ததா? அல்லது உணர்ச்சிபூர்வ போக்குகள் தலை தூக்கியதா? 'ஈ.வெ.ரா' என்ற பெயர் மறைந்து, 'பெரியார்' என்ற பட்டமே பெயரானதும், அந்த 'உணர்ச்சிபூர்வ' போக்கின் விளைவா?  இவ்வாறு பெயர் மறைந்து, 'பட்டமே' பெயரானது உலகில் வேறு எந்த தலைவருக்கும் நிகழ்ந்திருக்கிறதா?அதன்பின் பாரதிதாசனுக்கும், அண்ணதுரைக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் பற்றியும், பாரதிதாசனுக்கும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவிற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் பற்றியும், பாரதிதாசனின் இதழ்களில் வெளிவந்துள்ளவை எல்லாம், அறிவுபூர்வமா?  உணர்ச்சிபூர்வமா? அதன்பின் தான், பொதுஅரங்கில் அரசியலில், எதிரெதிராக உள்ள‌ தலைவர்கள் மீது, 'ஆபாச உணர்ச்சிபூர்வ' பேச்சுக்களும், எழுத்துக்களும் செல்வாக்கு பெற்று, அதை 'ரசித்து மகிழும்' போக்கில்,  தமிழ்நாட்டுத் தமிழர்கள் சீரழிந்தார்களா?அந்த போக்கிலேயே, 'உணர்ச்சிபூர்வ' மற்றும் 'மனித உறவுகளில் சுயலாபநட்ட கணக்குகள்' போன்றவை, தமிழர்களில், இயல்பில் பலகீனமானவர்களிடையே, 'அகவயப்படுத்தலுக்கு' (internalize) உள்ளாகி, கொலை, தற்கொலை, வன்முறை, திருட்டு, ஊழல் எனும் பொது திருட்டு,  போன்றவையெல்லாம், தமிழ்நாட்டில் 'அதிவேகமாக' அதிகரித்து வருகின்றனவா?


1948 தூத்துக்குடி மாநாட்டில், பெரியார் அண்ணாதுரைக்கு எதிராக பேசிய பேச்சுக்கள் வெளிவந்துள்ளன. அதன்பின் அண்ணதுரையை 'சாரட்'டில் உட்காரவைத்து,  ஊர்வலத்தில் பெரியார் நடந்து சென்றதும், அண்ணாதுரையும் 'சாரட்'டில் உட்கார்ந்து ஊர்வலம் நடைபெற்றதும், எதை உணர்த்துகின்றன? பெரியாருக்கும் அண்ணாதுரைக்கும் இடையே ஏற்பட்ட அந்த 'சமரசம்' அறிவுபூர்வமானதா? உணர்ச்சிபூர்வமானதா? அல்லது லாப நட்ட கணக்கிலானதா? பெரியார் தன்னலம் இன்றி, இயக்க லாபத்தையே, தனது லாபமாக கருதியிருந்தாலும், இத்தகைய போக்கு சரியானதா? இன்று தமிழ்நாட்டில் கட்சிகளும், தனிமனிதர்களும் தமக்கான ‘லாப நட்ட’ கணக்கிலேயே 'அனைத்து' உறவுகளையும் அடிமைப்படுத்தி வாழும் போக்கிற்கு அது விதையானதா? அந்த 'சமரசம்' முறிந்து, 'தி.மு.க' உருவானது அறிவுபூர்வ போக்கிலானதா? உணர்ச்சிபூர்வ போக்கிலானதா? அல்லது லாப நட்ட கணக்கிலானதா?
(https://tamilsdirection.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html  ) 

 'அறிவு பூர்வமாக' நடந்திருக்க வேண்டிய 'ஐந்திரம்' விவாதம், 'உணர்ச்சி பூர்வ' சர்ச்சையாக திராவிடக் கட்சி ஆட்சியில் வடிவெடுப்பதற்கான விதை அப்போதே உருவானதா? அறிவு பூர்வமான போக்குகளை ஓரங்கட்டி, உணர்ச்சிபூர்வ போக்குகள் ஆதிக்கம் செய்ய இடமளித்ததே, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் வீழ்ச்சிக்கு வழி வகுத்ததா? பாரபட்சமற்ற முறையில் திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் இக்கேள்விகளைப் பரீசிலிப்பதன் மூலமே, தமிழ்நாட்டில் நடந்துள்ள ( இலங்கைப் பிரச்சினை உள்ளிட்டு)  தவறுகளையும், தீர்வுகளையும் அடையாளம் கண்டு திருத்தி, முன்னேற‌ வழி கிடைக்கும்.

எவ்வளவு விரைவில் தமிழ்நாடு உணர்ச்சிபூர்வ போதைகளிலிருந்து விலகி, அறிவுபூர்வ திசையில் பயணிக்கிறதோ, அந்த அளவுக்கு 'ஐந்திறம்' போன்ற 'சர்ச்சை'களில் சிக்காமல், தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்கும்.