Tuesday, October 6, 2015


இடையிடு 3: Interlude 3:

                          தமிழ்நாட்டின் செருப்பு அரசியல்?


மனிதர்கள் இன்றி ஒரு சமூகம் என்பது கிடையாது. ஒரு சமூகத்தில் உள்ள மனிதர்களுக்கு இடையிலான உறவு என்ற சமூக இழைகள், அவற்றின் அடிப்படையிலான பிணைப்புகள், மற்றும் குடும்பம், கட்சி, நிறுவனம் உள்ளிட்ட பலவகை அமைப்புகள் மூலம் சமூகம் செயல்படுவது பற்றி ஏற்கனவே பார்த்தோம்.

அந்த சமூக செயல்பாட்டுக்கான சமூக ஆற்றல் ரத்த ஓட்டம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும், அதில் பார்த்தோம்.

அந்த சமூக ஆற்றல் ரத்த ஓட்டம் ஆக்கபூர்வ திசையில் அல்லது அழிவுபூர்வ திசையில், அல்லது இரண்டும் கெட்டான் திசையில் நடைபெறுகிறதா? என்ற ஆய்வுக்கு, அந்த சமூக செயல்பாட்டின் விளைவாக வெளிப்படும் சிக்னல்களை (signals)  ஆராய்வது பலனளிக்கும். நமது விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து, திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுடனும் ஆராய்ந்தால் மட்டுமே, அந்த சமூகம் பற்றிய அரிய உண்மைகள் வெளிப்படும்.

அந்த வகையில் முகப்புத்தகத்தில் - பா.ஜ.க.வின் தேசியச் செயலாளரான எச்.ராஜா தொடர்பான‌-  வெளிப்பட்ட, கீழ்வரும் சிக்னல் எனது கவனத்தை ஈர்த்தது.

பொதுவாக தகவல் பரிமாற்றத்தில் சிக்னலும் இரைச்சலும் கலந்தே இருக்கும். இரைச்சலை நீக்கி, சிக்னலை  பிரிக்கும் திறனே, தகவல் ஏற்பியின் (Receiver) திறமையாகும். அந்த வகையில் கீழ்வரும் சிகனலிலிருந்து, இரைச்சலை நீக்கி, சிக்னலை  பிரிக்கும் முயற்சி இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

'ராமசாமியை செருப்பால் அடிக்க வேண்டும் என்று எதற்காக சொல்கிறேன் என்றால்? இதற்காகத் தான்... ' என்ற த‌லைப்பில், 24.09.2015இல் மெக்காவில் நெரிசலில் இற‌ந்தவர்கள் தொடர்பாக, திராவிடர் கழக தலைவர் திரு.கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையும், அதன் கீழ் திருப்பதி கபில தீர்த்தத்தில் மூழ்கி 4 இளைஞர்கள் மரணம் அடைந்ததை 'மூடபக்தி' என்று, தி.க நாளிதழான, 'விடுதலை'யில் வந்த செய்தியும் பிரசுரமாகியுள்ளன.

அதற்கும் கீழே, " ராமசாமியை செருப்பால் அடிப்பேன் என்ற எனது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும், வாபஸ் வாங்க வேண்டும் என்றவர்களும் இதற்கு பதிலளியுங்கள். உயிர் எங்கு மாண்டாலும் வருந்த வேண்டிய விசயமே. இதில் கூட மதக்கலப்பு செய்து,இந்து மதத்திற்கு மட்டுமே எதிராக செயல்படும் இந்த இழிபிறவிகளை என்ன செய்ய வேண்டும் என்று மக்கள்  மன்றத்திலேயே விடுகிறேன்' என்று திரு.எச்.ராஜா அறிவித்துள்ளார். இது தொடர்பாக, திராவிடர் கழகம் சார்பில் என்ன விளக்கம் வந்தது, வரவில்லை என்பது பற்றி, இதுவரை, எனது பார்வையில் படவில்லை.

'உயிர் எங்கு மாண்டாலும் வருந்த வேண்டிய விசயமே.' என்றும், அதில் மத அடிப்படையில் வேறுபாடு கடைபிடித்து, பாரபட்ச போக்கில் இரங்கல் தெரிவிப்பது என்பது 'இழிசெயல்' என்று திரு.எச்.ராஜா அறிவித்திருப்பதானது, மிகவும் வரவேற்க வேண்டிய சிக்னல் ஆகும். அது போல, அவர் திரு.கி.வீரமணியின் இரங்கல் அறிக்கையை முழுமையாக வெளியிட்டிருப்பதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

அந்த இரங்கல் அறிக்கையில், " இறந்தவர்கள் எம்மதத்தவராயினும், அவர்கள் மனிதர்கள். பலியானவை மனித உயிர்கள் என்பதால்,கும்பகோணம் மகாமகம், வடக்கே கும்பமேளா திருவிழாவில் பலியானோர் அனைவருக்குமே பகுத்தறிவாளர்களாகிய நாம் இரங்கல் தெரிவித்ததும் மனிதநேயத்தின் பாற்பட்டதேயாகும்." என்று திரு.கி.வீரமணி தெளிவுபடுத்தியுள்ளார். இதுவும் மிகவும் வரவேற்க வேண்டிய சிக்னல் ஆகும்.

மேற்குறிப்பிட்ட திரு.கி.வீரமணியின் கருத்துக்கு முரணாக,'விடுதலை' நாளிதழில்,திருப்பதி ஏழுமலை கபில தீர்த்தத்தில்,முழுகி 4 இளைஞர்கள் மரணமடைந்த தகவலை, " குழவிக்கல் ஏழுமலையானுக்கு சக்தி இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.மாறாக மோட்சம் போனதாக கதை விடுவார்கள்" என்று வெளிவந்துள்ளது.

திரு.கி.வீரமணியின் நிலைப்பாட்டிற்கு முரணாக, 'விடுதலை' நாளிதழில் எவ்வாறு மேற்குறிப்பிட்ட செய்தி வெளிவந்தது? அல்லது கும்பகோணம் மகாமகம், வடக்கே கும்பமேளா திருவிழாவில் பலியானோர் அனைவருக்குமே திரு.கி.வீரமணி வெளியிட்ட இரங்கல் அறிக்கையிலும் அது போன்ற கேலி தொனி இருந்ததா?

என்று ஆராயாமல், திரு.எச்.ராஜா "ராமசாமியை செருப்பால் அடிப்பேன் என்ற எனது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும், வாபஸ் வாங்க வேண்டும் என்றவர்களும் இதற்கு பதிலளியுங்கள்." என்று கருத்து தெரிவித்தது சரியா? 

கடவுள் சக்தி என்று வரும்போது, பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் இந்து கடவுளுக்கும், முஸ்லீம் கடவுளுக்கும் வேறுபாடு கற்பித்ததற்கு ஆதாரம் உண்டா? மாறாக ' கடவுள் இல்லை' என்ற வாசகத்தை அவர் வெளியிட்ட போது,  இந்து, முஸ்லீம், கிறித்துவ மதப்பெரியவர்கள் திருச்சி பெரியார் மாளிகையில் அவரைச் சந்தித்து, தங்கள் மத உணர்வுகளை அந்த வாசகம் புண்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்கள். அதற்கு அவர், 'நீங்கள் ஒவ்வொருவரும், மற்ற மதத்தின் கடவுளை இல்லை என்று சொல்லும்போது புண்படாத மனம், எனது வாசகத்தால் மட்டும் புண்படுகிறது என்று சொல்வது சரியா?" என்று தெளிவுபடுத்தினார்.

மேற்குப்பிட்ட பின்னணியில், திரு.எச்.ராஜா "ராமசாமியை செருப்பால் அடிக்க வேண்டும்" என்று, இதில் ஏன் செருப்பை நுழைத்தார்? என்பதும் ஆய்விற்குரியது. ஒருவேளை இந்து கடவுள் 'இராமர்' படத்தை, பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் செருப்பால் அடித்து ஊர்வலம் நடத்திய 'வரலாறு' தெரிந்து, அது தொடர்பாக  கோபப்பட்டு, திரு.எச்.ராஜா செருப்பை நுழைத்தாரா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் புராணஙகள் பற்றியும், தமிழ் பற்றியும் தெரிவித்த கருத்துக்களை நான் ஏற்று பிரச்சாரம் செய்தவன் என்பதையும், அதன்பின் எனது இசை தொடர்பான ஆராய்ச்சிகளின் ஊடே, அவை தவறு என்று கண்டுபிடித்து, பெரியார் ஈ.வெ.ரா ஆதரவாளர்கள் மத்தியில் விவாதத்தைத் தூண்டி வருகிறேன் என்பதையும், எனது பதிவுகளைப் படித்தவர்கள் அறிவார்கள்.

இந்து கடவுள்களில் சிவன் படத்தை எரிக்காமல், இராமர் பட‌த்தை எரித்தல், கோவில் வழிபாட்டிற்கு இடைஞ்சல் இன்றி, சொந்த காசில் கடையில் விற்கும் விநாயகர் பொம்மைகளை வாங்கி, பொது இடங்களில் உடைத்தல், காந்தி பட‌த்தை எரித்தல் உள்ளிட்டு, தான் நடத்திய போராட்டங்களுக்கு முன், தமிழ்நாடெங்கும் அது தொடர்பாக பிரச்சாரம் செய்த போது, அதை எதிர்த்து கேள்விகள் கேட்பதை வரவேற்றவர் அவர்.அந்த காலக்கட்டத்தில் அக்கேள்விகளுக்கு 'அறிவுபூர்வமாக' யாரும் பதில் சொன்னார்களா? என்று ஆராய்ந்தால், பெரியார் ஈ.வெ.ரா 'உணர்ச்சிபூர்வமாக' அப்போராட்டங்களை நடத்தவில்லை, அறிவுபூர்வமாகவே நடத்தினார், என்பது தெளிவாகும். 'நமக்கேன் வம்பு?' என்று புலமையாளர்கள் ஒதுங்கியதும், அதற்கு  காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

எனவே தான், அவரால் பிராமணர்கள் அமைப்பில் உரையாற்ற முடிந்தது. 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பிராமணர்களும் பங்கேற்றார்கள். 
http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html 1947 இந்திய விடுதலைக்கு முன், தனது 'திராவிட நாடு' பிரிவினை கோரிக்கைக்கு ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களின் ஆதரவை 'பகிரங்கமாக' பெற்று, அறிவிக்க முடிந்தது.

" ஒருவரின் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும் அறிவுபூர்வமாக எதிர்ப்பது என்பது வேறு;  உணர்ச்சிபூர்வமாக கோபத்தையும் வெறுப்பையும் உமிழ்ந்து எதிர்ப்பது என்பது வேறு; இரண்டும் கலந்து, இரண்டும் கெட்டானாக எதிர்ப்பது என்பது வேறு; பெரியார் ஈ.வெ.ராவின் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும் எதிர்ப்பதில்,  பா.ஜ.கவின் எச்.ராஜாவும், மற்றும் அவரைப் போன்று, பெரியார் ஈ.வெ.ராவை இழிவுபடுத்தி பேசுபவர்களும், எழுதுபவர்களும், எந்த வகை? என்ற ஆராய்ச்சியை, மனசாட்சியும், அறிவுநேர்மையும் உள்ள இந்துத்வா ஆதரவாளர்களுக்கு விட்டு விடலாம்.

நானும் பெரியார் ஈ.வெ.ராவின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும், இந்துத்வா கட்சிகளிலும்,  எனது பார்வையில் எதிர்க்கப்பட வேண்டியவைகளை எதிர்த்து, இந்த பிளாக்கில்(Blog) பல பதிவுகள் எழுதியுள்ளேன். அது எந்த வகை என்பதை முடிவு செய்ய வேண்டியது படிப்பவர்கள் தான்.

பெரியார் ஈ.வெ.ரா, கோட்சே, வாஞ்சிநாதன், சத்தியமூர்த்தி உள்ளிட்டு  பொதுவாழ்வில் இடம் பெற்ற மனிதர்களைப் பற்றி எதிர்த்து எழுதும்போதும், அறிவுபூர்வமாகவும் எழுதலாம்; உணர்ச்சிபூர்வமாகவும் எழுதலாம். ஆனால் நாம் எதிர்க்கின்ற நபர் பொதுவாழ்வில் சுயநலமின்றி, பல தியாகங்கள் புரிந்து வாழ்ந்திருந்தால், அதை மதிக்கின்ற அறிவை இழந்து, உணர்ச்சிபூர்வமாக அவரை இழிவுபடுத்துவது தவறு."

இந்தி எதிர்ப்பு போராட்டம், திராவிட நாடு பிரிவினை போன்ற தமது நிலைப்பாடுகளுக்கு பிராமணர்களின் ஆதரவை பெறும் அளவுக்கு, பிராமணர் அமைப்பில் பெரியார் ஈ.வெ.ரா உரையாற்றும் அளவுக்கு, தமிழ்நாட்டின் அறிவுபூர்வ போக்குகளுக்கு உணர்ச்சிபூர்வ  இரைச்சல் அடங்கியிருந்தது. பெரியார் ஈ.வெ.ரா அவர்களுக்கும் தி.மு.க தலைவர்களுக்கும் இடையில் மட்டுமே 1967 வரை உணர்ச்சிபூர்வ இரைச்சல் ஆதிக்கம் செலுத்தியது என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். 1967க்குப் பின்னர் அந்த உணர்ச்சிபூர்வ இரைச்சல் வளர்ந்து, இன்று இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு தலைவர்களிடமும் 'பற்றியிருந்தால்' அது சமூகத்திற்கு கேடாகவே முடியும். திரு.எச்.ராஜா போன்ற இந்துத்வா தலைவர்கள் பெரியார் அமைப்புகள் மற்றும் முஸ்லீம் அமைப்புகளில் உரையாற்றுவதும், இந்துத்வா அமைப்புகளில் திரு.கி.வீரமணி போன்ற பெரியார் இயக்க‌ தலைவர்களும், மற்றும் முஸ்லீம் தலைவர்களும், உரையாற்றுவதும் துவங்கினால் தான், தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் அழிவுப்பாதையிலிருந்து மீளமுடியும். 

அதற்கு 'பிறர் பார்வை அறிதல்'  (Empathy) போக்கினை,

'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
 மெய்ப்பொருள் காண்பது அறிவு' (திருக்குறள் 423)

என்ற வழியில் செயல்படுத்த, மனமிருந்தால் மார்க்கம் உண்டு. 'உணர்ச்சிபூர்வ' இரைச்சலுக்கு 'அஞ்சி', புலமையாளர்கள் ஒதுங்கும் போக்கானது, அதற்கு ஊறு விளைவிப்பதாகும். தமிழைத் தவிர, பிறமொழி அறியாத, தமிழிலும் ஆழ்ந்த புலமையற்ற, 'உணர்ச்சிபூர்வ மேதாவிகள்' புற்றீசல் போல் வளர்ந்ததற்கும், அதுவே காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அம்மேதாவிகளில் பலர் விவாதப் பொருளின் வரை எல்லையைத் (limit) தாண்டி, விவாதத்தில் ஈடுபடுவோர் மீது திசை திரும்பி, விவாதத்தில், உணர்ச்சிபூர்வ இரைச்சலைத் தூண்டுபவர்களை, 'நம்மாளு' என்று நாம் ஊக்குவிப்பதைத் தவிர்ப்பதும், சமூக வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

குறிப்பு 1 :
" தாய் மொழிப்பற்றை 'தாய்ப்பால் பைத்தியம்' என்று கேலி செய்து. 'தமிழ் காட்டுமிராண்டி மொழி' என அறிவித்து, 'தமிழ்ப் பாரம்பரியமும் பண்பாடும் தமிழர்க்குக் கேடானவை' என்று, தமக்குக் கிடைத்த சான்றுகளைக் கொண்டு, பெரியார் ஈ.வெ.ரா அவர்கள்,   தமது அறிவு அனுபவ அடிப்படையில், பிரச்சாரம் செய்தார். தமது நிலைப்பாட்டிற்கு எதிரான சான்றுகள் வெளிப்பட்டு, தமக்கும் அது சரியெனப்பட்டால், தமது நிலைப்பாடு தவறு என்று பகிரங்மாக அறிவித்து, தனது நிலைப்பாட்டை, அவர் மாற்றிக் கொண்டதற்கு பல சான்றுகள் உண்டு. உலகிலேயே வெட்கப்படாமல், அது போன்று தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்து மாற்றிக் கொண்டவர் பெரியார் ஈ.வெ.ரா  மட்டுமே, எனக்கு தெரிந்த வரையில்.ஒரு மொழியானது அம்மொழி பேசும் மக்களின் அடையாளத்துடனும், அச்சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களினுடனும், எவ்வளவு நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளது, என்பது பற்றி உலக அளவில் வெளிப்பட்டுள்ள‌ சான்றுகளின் அடிப்படையிலும், பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி வெளிவந்துள்ள எனது ஆய்வுகளின் அடிப்படையிலும், பெரியார் ஈ.வெ.ரா இன்று உயிரோடு இருந்தால், தமிழைப் பற்றிய மேற்குறிப்பிட்ட  தனது நிலைப்பாடுகள் தவறு என்று அறிவித்து, தனது நிலைப்பாட்டைத் திருத்திக் கொண்டிருப்பார், என்பதை எவராலும் மறுக்க முடியுமா?"
http://tamilsdirection.blogspot.in/2014_09_01_archive.html 

2. பொது அரங்கில் தமிழ்நாட்டில் 'தோழர்' என்ற சொல்லை, பிரபலப்படுத்தியவர் பெரியார் ஈ.வெ.ரா ஆவார்.

'தோழர்' ஈ.வெ.ராவை 'உணர்ச்சிகர' அணுகுமுறையில் குறை சொல்பவர்களும், 'தந்தை பெரியார்' என்ற பிம்பத்தில் 'சிறை'படுத்தி வாழ்பவர்களும், தமது 'யோக்கியதையை' சுயபரிசோதனைக்குட்படுத்துவார்களா?


தாம் வாழும் இடத்தில், பணியாற்றுகிற இடத்தில், 'பொது நீதிக்காக' என்ன மெனக்கெட்டார்கள்? அங்கு 'செல்வாக்கான' நபர்களின், 'தவறுகளை' தட்டிக்கேட்காமல், அவர்களுக்கு 'நெருக்கமாகி' பலன்கள் அனுபவிப்பதில் குறியாக இருந்தார்களா?


தமிழ்நாட்டில் கிரானைட், தாது மணல் கொள்ளை உள்ளிட்ட இன்னும் பல 'ஊழல் வழிகளில்' 'செல்வாக்கானவர்களை' , வெறுத்து ஒதுக்கினார்களா? அல்லது அவர்களுக்கு 'நெருக்கமாகி', பலன்கள் அனுபவிப்பதில் குறியாக இருந்தார்களா?


தமது குழந்தைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்துக் கொண்டு, வெளியில் 'தமிழ்வழிக்கல்வி' ஆதரவாளர்களாக வேடம் போட்டார்களா?

தாம் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக, சொந்த வாழ்வில், 'இழப்புகளை' சந்தித்த,   ஈ.வெ.ரா, கோட்சே, வாஞ்சிநாதன், போன்ற இன்னும் பல தியாகிகள்  போன்று, மேலேக்குறிப்பிட்ட இரு பிரிவினரில், எவராவது வாழ்கிறார்களா? சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றுபவர்கள் சந்திக்கும் இழப்புகள் எல்லாம், சமூகம் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்; பொது அரங்கில் சமூகக் கள்வர்கள் அதை 'அபகரிக்க' வழியில்லையென்றால். வழியிருந்தால், அந்த 'இழப்புகளையே, கவிதை, கட்டுரை, மேடைப்பேச்சு, etc மூலமாக  மூலதனமாக்கி', ' சமூக நீதி, இந்துத்வா , etc'  'உணர்ச்சிகர வழிபாடு' போக்கை ஊக்குவித்து, அக்கள்வர்கள் 'குறுக்கு வழி, ஊழல்' மூலம் பெறும், 'செல்வம், செல்வாக்கு' வளர்ச்சிகள் என்பவை, சமூகத்தின் வீழ்ச்சியில் முடியும். 'அந்த வழிகளை'  அடையாளம் கண்டு அழிக்காமல், மீட்சி கிடையாது. உணர்ச்சிபூர்வ போக்குகளை ஒழிப்பதானது, மீட்சிக்கு முதல்படியாகும். 'அந்த வழிகளில்', தமிழ்நாட்டில், அகத்தில் சீரழிந்த சிற்றினமானது, 'இழிவான குறுக்கு வழிகளில்',  செல்வம், செல்வாக்கு ஈட்டி, தீயினமாக வலிமை பெற, பெரியாரின் கொள்கைகளும், நிலைப்பாடுகளும் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன?  என்ற‌ ஆய்வும், அதற்கு துணை புரியும்.
http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html

 

No comments:

Post a Comment