Monday, December 12, 2016



தேவையே இல்லாமல், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில், சமூக வலை தளங்களில்: 

'ஆரிய - திராவிட' மோதல் கொள்கையை கேலிக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாக்க வேண்டுமா?


இன்று நாம் வாழும் தமிழ்நாடானது, ஒரு காலத்தில், தலைவர்களிடம் அவர்களின் நிலைப்பாடுகளை விமர்சித்து, நேரடியாக கேள்விகள் எழுப்பி, விளக்கங்கள் பெறும் அறிவுபூர்வ திசையில் பயணித்தா? என்ற வியப்பும், இன்பமும் தரும் ஆய்வில் ஈடுபட விரும்புபவர்கள் எல்லாம், 1925 முதல் 1944 வரை வெளிவந்த 'குடிஅரசு' உள்ளிட்டு, ஈ.வெ.ரா அவர்கள் வெளியிட்ட இதழ்களை படிக்கலாம்.

பெரியார் இயக்கத்தில் இருந்த காலத்தில் அவற்றை அனுபவித்த என்னை விட, அவற்றில் ஆழ்ந்த புலமை உள்ளவர் தஞ்சை மருதவாணன் அவர்கள் ஆவார்.(குறிப்பு கீழே) அவர், தமது ஆய்வின் மூலம் வெளிப்படுத்திய கீழ்வரும் 'புலன் அறி தகவல்'(Observation) எனக்கும் வியப்பானது.

‘ஒருவரை மேடையில் வைத்துக் கொண்டு, 'அய்யா' (ஈ.வெ.ரா) 'அதீதமாக' புகழ்ந்து பேசினால், அந்த நபர் புகழுக்கு மயங்குபவர் என்றும், அதைப் பயன்படுத்தி, சமூகத்திற்கு நன்மை செய்ய அய்யா முயல்கிறார்' என்றும் அர்த்தம். திராவிடர்/திராவிட கட்சிகளில், 'அந்த பலகீனங்கள்' இருந்த தலைவர்கள் யார்? யார்? மேற்கண்ட செயல்நுட்பத்தில் ஈ.வெ.ரா பெற்ற வெற்றி, தோல்விகள் யாவை? அவற்றால் தமிழ்நாட்டிற்கு விளைந்த சாதக, பாதகங்கள் யாவை? என்ற ஆய்விற்கான நேரமும் வந்துவிட்டதாக கருதுகிறேன்.

எனவே ஈ.வெ.ரா அவர்கள் எதையும், யாரையும் புகழ்வதும், கண்டிப்பதும் அவரது சமூக பயணத்தில் இடம் பெற்ற தனித்துவமான செயல்நுட்பம்(mechanism) ஆகும். காந்தியை அவரின் மரணத்திற்கு முன் கடுமையாக கண்டித்ததும், மரணமடைந்த காந்தியை வானளாவ புகழ்ந்ததும், அதன்பின் அவர் படத்தை எரித்தல், காந்தி பொம்மையை உடைத்தல் போன்ற போராட்டங்களை முன்னெடுத்ததும் முரண்பாடல்ல, என்பது அந்த செயல்நுட்பத்தை அறிந்தவர்களுக்கு மட்டுமே விளங்கும். 

அந்த புரிதல் அந்த கால பிராமணர்களுக்கும் இருந்தது. எனவே தான், இந்திய விடுதலைக்கு முன், 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கைக்கு, ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களின் ஆதரவினை ஈ.வெ.ரா அவர்கள் பகிரங்கமாக கோரி, அவரகள் ஆதரவையும் பெற முடிந்தது. அந்த புரிதலானது, இந்த கால 'பெரியார்' கொள்கையாளர்களுக்கும், பிராமணர்களுக்கும்  இருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

நானறிந்தது வரையில், உலகில், வேறு எந்த தலைவரும் அந்த செயல்நுட்பத்தை விளங்கி, பயன்படுத்தவில்லை. எனவே மேற்கத்திய குறிப்பாய(Western Paradigm) அடிப்படையில், ஈ.வெ.ராவை ஆய்வு செய்பவர்கள் எல்லாம், அதை முரண்பாடாகவே கருதுவதில் வியப்பில்லை.

'பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு' உள்ளிட்டு, எதையும் ஈ.வெ,ரா தனது சுயலாபத்திற்காக செய்தார், பேசினார் என்று, அவரை கடுமையாக எதிர்த்தவர்கள் கூட, அவர் மீது குற்றம் சுமத்தியதில்லை.

ஈ.வெ.ரா அவர்கள் உள்ளிட்டு எவர் தொடர்பாகவும்,  எனது பதிவுகளில் எழுப்பப்படும் கேள்விகளும், பாராட்டுகளும், கண்டனங்களும் மேற்குறிப்பிட்ட வகையிலானவையாகும், எனது பதிவுகள் தொடர்பாகவும், அதே வகையில் கேள்விகளையும், பாராட்டுகளையும், கண்டனங்களையும் வரவேற்கிறேன்.

அண்ணாவின் 'தீ பரவட்டும்' நூலைப் படித்தவர்கள் மனதில், அவர் 1967இல் முதல்வரான பின், அவரது ஆட்சியில் சென்னை மெரினாவில் கம்பருக்கு சிலை வைத்தது சரியா? என்ற கேள்வி எழாமல் இருந்தால் தான் வியப்பாகும்.

1949-இல் தி.மு.க தோன்றிய பின், 'தி.கவும், தி.மு.கவும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் போல செயல்படும்' என்ற அறிவிப்பை அறிந்தவர்களுக்கும், அந்த‌ கேள்வி எழாமல் இருந்தால் தான் வியப்பாகும்.

“'திராவிட கவர்ச்சி அரசியலில்' தமிழர்களின்  தாய்மொழி,பாரம்பரியம்,பண்பாடு போன்ற ஆணிவேர்கள், தி.மு.க வளர்ந்த வேகத்தில், எந்த அளவுக்கு சிதைந்தன‌? என்பதும் ஆய்விற்குரியாகும்.

பெரியார் ஈ.வெ.ரா அவர்களுக்கிருந்த தவிர்க்க முடியாத வரை எல்லைகள் (limitations) காரணமாக, தமக்கிருந்த அறிவு நேர்மையுடனும், சமூக பொறுப்புடனும் அவர் மேற்குறிப்பிட்ட ஆணிவேர்கள் தமிழர்க்கு கேடானவை என்று அறிவித்தார்.  தி.மு.க, 'இரட்டைக்குழல்' துப்பாக்கியாக, பெரியாரின் அந்த நிலைப்பாடுகளை ஏற்று செயல்பட்டார்களா?  பெரியாருக்கிருந்த‌ வரை எல்லைகள் இல்லாத அண்ணதுரைக்கு, பெரியாரின் அந்த நிலைப்பாடுகள் தவறு என்று தெரியவில்லையா? தெரிந்து பெரியாருக்கு அதை தெளிவுபடுத்த என்ன முயற்சிகள் மேற்கொண்டார்? அதை செய்யாமல், சேர, சோழ, பாண்டிய அரசர்களையும், சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களையும் 'கவர்ச்சி தமிழ், கவர்ச்சி தமிழ் உணர்வு' என்று சிறைபிடித்து, தமிழர்களின் ஆணிவேர்களை சிதைத்ததில், தி.கவை விஞ்சி, தி.மு.க சாதனை படைத்ததா? அந்த சாதனையின் அடித்தளத்திலேயே, திராவிடக்கட்சி ஆட்சிகளில் தமிழ்வழிக் கல்வி சீரழிந்து, ஆங்கிலவழிக்கல்வி 'சமூக புற்று நோய்' போல் அதிவேகமாக பரவியதா? அந்த புற்றுநோயில் சிக்கி, தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்த/வைக்கும் தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் எல்லாம், குற்ற உணர்வே இல்லாமல், மேடைப்பேச்சில், எழுத்தில், 'தமிழ்வழிக்கல்வி' ஆதரவாளர்களாகவும், புரவலர்களாகவும் வெளிச்சம் போடும் 'தமிழ்வேர்க்கொல்லிகள்' போல், தமது சுயநல 'தமிழுணர்வு கணக்குகளில்' தமிழைச் சிறைபிடித்து, வளர்ந்தார்களா? என்பவையெல்லாம் ஆய்விற்குரியவையாகும்.” (http://tamilsdirection.blogspot.in/2015/06/depoliticize-4.html )

சங்க காலம் முதல் அரசர்கள், பின் காலனி, அதன்பின் காங்கிரஸ் ஆட்சிகள் வரை, தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்களாகிய ஏரிகள், குளங்கள், விவசாய நிலங்கள் ஆகியவற்றிற்கு ‘சட்டபூர்வ பாதுகாப்பு’ அமுலில் இருந்தது. பின் 'திராவிட' ஆட்சிகளில், அந்த சட்டபூர்வ பாதுகாப்பானது,   ஊழல் அரசியல் கொள்ளைக்காக, (சுயசம்பாத்திய தகுதி, திமைகள் இல்லாதவர்களால்) நீக்கப்பட்டு, ஊழலின் கோரப்பசிக்கு இரையாகும் போக்கானது, 1967இல் முளைவிடத் தொடங்கியதை உணர்ந்த, வருந்திய‌ அன்றைய முதல்வர் அண்ணா;

“1967 ஆட்சி மாற்றத்தின் போது, அந்த (முளையிலேயே கிள்ளும்) வலிமை தமக்கில்லை என்பதை அன்றைய முதல்வர் அண்ணா உணர்ந்து, மருத்துவமனையில் தம்மை சந்தித்த, கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் பி.ராமமூர்த்தியிடம், தாம் விரைவில் மரணமடைய விரும்புவதாக தெரிவித்த செய்தியை, அவர் தமது நூலில் வெளிப்படுத்தியுள்ளார். அதே காலக்கட்டத்தில், பொதுவாழ்வில் மனம் வெறுத்து, தாம் முனிவராக விரும்புவதாக அண்ணாவிடம், ஈ.வெ.ரா அவர்கள் தெரிவித்து, அதை அண்ணா தடுத்திருக்கிறார். அதாவது அரசமைப்பிலும், பொது வாழ்விலும், தவறுகளை தடுக்கக் கூடிய வெளிப்படையும் (Transparency), பொறுப்பேற்பும் (Accountability) பலகீனமாகிவிட்டதை அந்த இரு தலைவர்களும் அந்த காலக் கட்டத்திலேயே உணர்ந்ததன் விளைவுகளாலேயே, முதல்வர் பொறுப்பில் இருந்தவரும், அவரை உருவாக்கிய கட்சியின் தலைவராக இருந்தவரும் மனம் வெறுத்து, மேற்குறிப்பிட்ட உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்களா? என்பது ஆய்விற்குரியதாகும்.” (http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html )

அண்ணாவும், ஈ.வெ.ரா அவர்களும் ஏன் பொதுவாழ்வில் மனம் வெறுத்து ஒதுங்க விரும்பினார்கள்? என்ற ஆய்வினை, அவர்களின் விசுவாசிகள் இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தினார்களா? இல்லையென்றால், அதே காரணங்களால் தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும், தமிழுக்கும் ஏற்பட்ட சீரழிவிற்கு, அவர்களும் பகுதி பொறுப்பாளிகள் ஆக மாட்டார்களா? என்ற கேள்விகளை, அவர்களில் சுயலாப நோக்கற்ற சமூக பற்றாளர்கள், இன்றாவது பரிசீலிப்பார்களா?

மேலே குறிப்பிட்ட முளையானது வீரியமாக வளர்ந்து வெளிப்பட்டுள்ள பல ஊழல்களில் ஒன்று 2G ஊழலாகும். ஊழல் உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் சிக்கிய பெரும் அரசியல்வாதிகள் எல்லாம் பெரும்பாலும், போதுமான சாட்சிகள் இல்லை, பிறழ் சாட்சிகள் போன்ற காரணங்களால் தண்டனைக்குள்ளாகாமல், 'விடுதலை'யாகி, தப்பிக்கும் காட்சிகள் எல்லாம் ஊடகங்களில் அரங்கேறி வருகின்றன. ஆனால் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களுக்கு, கொள்கை போராட்டம் அடிப்படையில், 'தலித்' மற்றும் 'ஆரிய‍ திராவிட' மோதல் கவசத்தில், பாதுகாக்கும் முயற்சியானது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே நடந்துள்ளது; தி.க. தலைவர் கி.வீரமணி அவர்களின் பங்கேற்புடன்  (http://mediavigil.blogspot.in/2010_11_01_archive.html?view=classic )

முதல்வர் ஜெயலலிதா மறைவதற்கு முன், தமிழ்நாட்டில் ஜனநாயத்தை பாதுகாக்க வேண்டிய தூண்கள் எல்லாம், எவ்வாறு சிதைந்துள்ளன? என்பதை, கீழ்வரும் பேச்சில், தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவ்வாறு ஆட்சி நடத்திய முதல்வருக்கு உறுதுணையாக இருந்த, சசிகலாவை ஆதரித்து, அதே கொள்கை போராட்டம் அடிப்படையில், 'ஆரிய திராவிட' மோதல் கவசத்தில், பாதுகாக்கும் முயற்சியிலும் கி.வீரமணி அவர்கள் ஈடுபட்டுள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

“ பிளவை உருவாக்கும் ஆரிய சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க அதிமுகவுக்கு வீரமணி அட்வைஸ் !’

பார்ப்பனத் தலைமையிலான ஆட்சி வரும் வாய்ப்பு இப்படிப் பறிபோய்விட்டதே என்பதால், ஜெயலலிதாவின் நிழலாக இறுதிவரை இருந்து, மெய்க்காப்பாளராக, சேவகியாக, சிறந்த பாசம் காட்டிய தங்கையாகவே வாழ்ந்து, அந்த அம்மையாரின் கஷ்டங்கள், சிறைவாசங்களில் பங்கேற்ற சசிகலாவைப் பற்றி தேவையில்லாமல் பெரும் ஆய்வே நடத்தி, அரசியல் ஆவர்த்தனம் செய்கிறார்கள்.”

"சசிகலா இதுவரை கேடயமாய்ப் பயன்பட்டவர். இனி வாளும்-கேடயமாய் நின்று அதிமுகவுக்குப் பயன்படுவார் என்பது நம் இனமானக் கண்ணோட்டமாகும். போகப்போக இது மற்றவர்களுக்குப் புரியும். வாய்ப்பே தராமல் எவரையும் மதிப்பிடலாமா? நமக்கு தனிப்பட்ட எந்த அபிமானமும் இல்லை. இந்தக் காலகட்டத்தில் தாய்க்கழகம் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றியுள்ளது'' என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்."; http://tamil.thehindu.com/tamilnadu

முதல்வர் ஜெயலலிதா பெங்களுரில் சிறையில் இருந்த காலத்தில், குக்கிராமத்திலிருந்து வந்து கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவி, தனது கிராமத்தில், 'சசிகலா செய்த தவறுக்காக தான், அம்மா (ஜெயலலிதா) சிறைக்கு போக நேரிட்டது' என்று, தமது கிராமத்தில் உள்ள பெண்கள் எல்லாம் பேசிக் கொள்வதாக‌, தெரிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக சதி செய்ததாக, சசிகலாவை போயஸ்கார்டனிலிருந்து துரத்திய செய்தியானது, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் வெளிவந்தன.பின அச்சதியில் தனக்கு பங்கில்லை என்றும், அச்சதிகாரர்கள் முகத்தில் இனி முழிப்பத்தில்லை என்றும் சத்தியம் செய்தபின், மீண்டும் சசிகலா போயஸ்கார்டனில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோவில் எப்படி அந்த சதிகாரர்களை மட்டும் சசிகலா அனுமதித்தார்? அமைச்சர்களையும், கவர்னரையும் கூட ஏன் அனுமதிக்கவில்லை? 74 நாட்கள் ஜெயலலிதா முகத்தை புகைப்படம்/வீடியோ மூலமாக கூட காட்டவில்லை? எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது கூட, அவர் சிகிச்சை பெறும் வீடியோ வெளிவரவில்லையா? இவை எல்லாம் ஊடகங்களில் வெளிவந்து, குக்கிராமங்கள் வரை ஊடுருவி விட்டன. இப்போது சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களைப் பற்றியும், அதை ஆதரிக்கும் வைகோ, கி.வீரமணி போன்ற பிற கட்சிகளின் தலைவர்களைப் பற்றியும், மக்கள் என்ன நினைப்பார்கள்?   
(http://tamilsdirection.blogspot.in/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_5.html

தமிழ்நாட்டில் ஆதாயத்தொண்டர்களின் வலைப்பின்னலையே 'பலமாகக்' கொண்டு, மற்ற கட்சிகள் பயணிக்க, கூடுதலாக மக்கள் செல்வாக்குள்ள ஒரே தலைவராக மறைந்த முதல்வர் ஜெயலலிதா பயணித்து, எம்.ஜி.ஆரையும் விஞ்சி தேர்தலில் சாதனைகள் படைத்தார். இப்போது சசிகலாவை முன்னிறுத்துவதன் மூலம், அந்த வலைப்பின்னலானது, அந்த 'மக்கள் செல்வாக்குடன்' மோதல் போக்கில், பயணித்து, சசிகலாவும், அவரது ஆதரவாளர்களும், வைகோ, விஜயகாந்த் போல, வீழ்ச்சியைச் சந்திப்பார்களா? அல்லது வெற்றி பெற்று, தி.மு.கவை 'அந்த வீழ்ச்சியைச்' சந்திக்க வைப்பார்களா?  என்பது அடுத்து வரும் தேர்தலில் வெட்ட வெளிச்சமாகி விடும். 

ஜெயலலிதாவின் 'தனிமனித மக்கள் செல்வாக்கிற்கும்', அவரது கட்சியின் 'சுயலாப ஆதாய வலைப்பின்னலுக்கும்' இடையே, தமிழ்நாட்டில்  வெவ்வேறு ஊர்களில் இருந்த வெவ்வேறு விதமான பிணைப்புகள்(Bonds) எல்லாம் ;

எந்த அளவுக்கு, எப்படி தாக்குப்பிடிக்கப் போகிறது? என்பதைப் பொறுத்தும்;

இந்திய அரசியல் சட்டப்படி, கவர்னரின் கண்காணிப்பில் முதல்வராக பணியாற்றும் தகுதி உள்ள வரையில் மட்டுமே, ஒருவர் முதல்வராக இருக்க முடியும், என்ற நிலையிலும், தமிழக கவர்னர், தமிழ்நாடு முதலமைச்சரைப் பார்க்க, அப்போல்லா மருத்துவமனை சென்று, முதல்வரை பார்க்க முடியாமல் திரும்பியது யார் குற்றம்? என்ற கேள்விக்கு விடை கண்டு, உச்ச நீதி மன்றம் தனது மானத்தைக் காப்பாற்றுவதை, அதில் தவறுவதைப் பொறுத்தும்;

சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்களின் 'தலை எழுத்தும்' நிர்ணயமாகும்.

தமிழில் மனிதர்களின் பண்புகள் அடிப்படையில் வழங்கி வந்த 'இனம்' என்ற சொல்லை, ஆங்கிலத்தில் உள்ள 'ரேஸ்'(Race)  என்ற பொருளில் திரித்து, 'ஆரியர் -திராவிடர்'  என்ற இனச்சிக்கலை காலனிய நலன்களுக்காக உருவாக்கிய சூழ்ச்சிகள் பற்றிய சான்றுகளும் வெளிவரத் தொடங்கியுள்ளது பற்றியும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (‘தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?’; http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

ஏற்கனவே 'பெரியார் யார்?' என்று கேட்கும் மாணவர்கள் அதிகரித்து வரும் சூழலில் (http://tamilsdirection.blogspot.in/2015/02/12_17.html   );

ஜெயலலிதா மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எல்லாம், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில், சமூக வலை தளங்களில், கேலிக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாகி வரும் சூழலில்,

2G ஊழல் வழக்கில் சிக்கிய குற்றவாளிகளை பாதுகாக்கவும், சசிகலாவை பாதுகாக்கவும்;

தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள், அத்தகையோருக்கு உதவ முற்படுவதும், அதன் விளைவுகளை சந்திப்பதும் அவரின் உரிமையே என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் அந்த முயற்சியில், கொள்கை போராட்டம் அடிப்படையில், 'ஆரிய திராவிட' மோதல் கவசத்தை கையாளுவதானது, அறிவுபூர்வ விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டிய 'ஆரிய - திராவிட' மோதல் கொள்கையை;

தேவையே இல்லாமல், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில், சமூக வலை தளங்களில், கேலிக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாக்க வேண்டுமா? அதிலும் பணம் சம்பாதிக்க, எவர் காலிலும், எப்போதும் விழ போட்டி போடும், அவமரியாதை தமிழர்கள் எல்லாம் எண்ணிக்கையில் வளர, 'அந்த கவசம்' பயன்படலாமா? 

குறிப்பு :

பாரதிதாசனின் 'குயில்' இதழில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. திருவள்ளுவரின் உருவம் என்று ஓவியமாகவும், சிலையாகவும் வெளிப்படுத்தியுள்ளவை எல்லாம், அடிப்படையிலேயே தவறானவை, என்று உரிய சான்றுகளுடன், அவர் என்னிடம் ஒருமுறை விளக்கி, என்னை வியப்பில் ஆழ்த்தினார். அது சரி என்றால், என்ன அரசியல் லாபங்களுக்காக, ஓவியமாகவும், சிலையாகவும் 'திருவள்ளுவர்' முன்னிறுத்தப்பட்டார்? அதன் மூலம்,  உணர்ச்சிபூர்வ வழிபாட்டுப் போக்கில், திருக்குறளும் பலியாகியுள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்
. (தமிழ்நாட்டு ‘திராவிட’ அரசியலில் சிக்கிய திருக்குறள் ஆய்வுகள்''; http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

No comments:

Post a Comment