Tuesday, January 10, 2017

பொருள் தெரியாமலே மாற்றியது யார்?


தமிழ்ப் பெயர்கள் சமஸ்கிருதமயமான போக்கிலா?
சமஸ்கிருதமயத்திலிருந்து தமிழ்ச் சொற்களை மீட்ட போக்கிலா?


கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு..குழந்தை வேலன் அவர்கள் எழுதிய 'தமிழிய வாழ்வில் கல்லும் சொல்லும்'( 2000; பைந்தமிழ்ப் பாசறை,எண்ணூர், சென்னை‍ 600057)  புத்தகத்தை, அண்மையில் மீண்டும் ஒரு முறை படித்தேன். அணிந்துரையில் முனைவர்.தமிழண்ணல் அவர்கள் வெளிப்படுத்தியுள்ள கீழ்வரும் கருத்தானது, எனது கவனத்தை ஈர்த்தது.

"நம்மில் நூற்றுக்கு தொண்ணூறு பேரை இருட்டில் வைத்துள்ளோம். அவர்களுக்கு தமிழைப் பற்றித் தெரியாது; தமிழினப் பண்பாடு பற்றியோ,எதுவுமே தெரியாது. 'சங்க காலம்'முதல் நாம் செய்து வரும் தவறு இது."

'சங்க காலம்'முதல் நாம் செய்து வரும் தவறு இது." என்று எந்த சான்றுகளின் அடிப்படைகளில் தமிழண்ணல் எழுதினார்?  என்பது எனக்கு விளங்கவில்லை. அவரது தமிழ்ப் புலமையின் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. அவர் எழுதியுள்ள நூல்களை முழுவதும் படிக்காமல், அது தொடர்பான விளக்கம் பெற முடியாது.

இன்று வரை நானறிந்த சான்றுகளின் அடிப்படையில், மேலே குறிப்பிட்ட கருத்து தவறாகும்.

தமிழ்நாட்டில் தமிழரல்லாத மன்னராட்சியானது கி.பி 1335இல் மதுரை சூல்தானின் ஆட்சியிலிருந்து தொடங்கியது. (https://en.wikipedia.org/wiki/Madurai_Sultanate ) அதன்பின் விஜயநகர மன்னர் ஆட்சி அரங்கேறியது. (https://www.google.co.in/?gfe_rd=cr&ei=UmF0WNHeCvLI8AfJ4qugBw#q=vijayanagar+empire+in+tamilnadu ) கி.பி 1675க்குப் பின் தஞ்சையானது மராத்திய மன்னரின் ஆட்சிக்குட்ப்பட்டது.( https://en.wikipedia.org/wiki/Thanjavur_Maratha_kingdom )

அதன்பின் காலனி ஆட்சிக்குட்பட்டிருந்த தமிழ்நாடானது, 1947 ஆகஸ்டு 15இல் இந்திய விடுதலை முதல் அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்டது. 1967 முதல் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இருந்து வந்துள்ளது; தமிழ்க்குடிமகன் உள்ளிட்டு தனித்தமிழ் கட்சிகளில் இருந்தவர்களும் சங்கமமாகி.

"நம்மில் நூற்றுக்கு தொண்ணூறு பேரை இருட்டில் வைத்துள்ளோம். அவர்களுக்கு தமிழைப் பற்றித் தெரியாது; தமிழினப் பண்பாடு பற்றியோ,எதுவுமே தெரியாது. 'சங்க காலம்'முதல் நாம் செய்து வரும் தவறு இது." என்று தமிழண்ணல் கூறியதானது;

காலனி ஆட்சிக்கு முன் இருந்த தமிழ்நாட்டிற்கு பொருந்துமா? இல்லையா? என்பது ஆய்விற்குரியதாக இருந்தாலும்;

இன்றைய தமிழ்நாட்டிற்குப் பொருந்தும்.

குக்கிராமங்கள் வரை, ஆங்கிலவழி விளையாட்டுப் பள்ளிகள் புற்றிசல் போல வளர்ந்து வரும் சூழலில், தமிழ்நாட்டின் இன்றைய நிலை பற்றி கீழ்வரும் பதிவில் வெளிப்படுத்தியுள்ளேன்.

'தமிழ், தமிழ் உணர்வு, தமிழ்வழிக்கல்வி' என்று எழுத்தில், பேச்சில் முழங்கிக் கொண்டு, தமிழ்நாட்டில் தமது குடும்பப்பிள்ளைகளை, ஆங்கில வழியில் படிக்க வைத்து (வெளிநாடுவாழ் தமிழருக்கு வேறு வழியில்லை), திரிந்த மேற்கத்திய பண்பாட்டில் சிக்க வைத்து, 'சோரம்' போய் சம்பாதித்த செல்வமும், செல்வாக்கும்நமது மரணத்திற்குப் பின் என்னாகும்? தமிழில் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரியாத, தமிழ் வேரழிந்த‌, நமது வாரிசுகளுக்கு, நாம் விட்டுச் செல்லும் களங்கமாக தொடராதா? குற்ற உணர்வுடன் தானேநமது மரணத்தை  நாம் சந்திக்க முடியும்? எனவே சோரம் போகாமல் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது,  'தமிழ், தமிழர், தமிழ்நாடுமீட்சிக்கான வாய்ப்புகளும் அதிகரிப்பது உறுதியாகும்”; ( ‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (9) அறிவும் ஆர்வமும் உள்ளவர்களின் பார்வைக்கு‍ -   'தமிழ் , தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கு வாய்ப்புகள்’; 
http://tamilsdirection.blogspot.com/2015/07/normal-0-false-false-false-en-us-x-none_9.html )

கி.பி 1335இல் தொடங்கி, 1967 வரை இருந்த நிலையை விட, மிகவும் மோசமான நிலையில், தமிழின் நிலையானது தமிழர்களிடம் சீரழிந்துள்ளதா? அது உண்மையென்றால், அந்த சீரழிவு போக்கானது 1944இல் விதை கொண்டு, வளர்ந்ததா? என்ற கேள்விகளை அறிவுபூர்வமாக ஆராய வேண்டிய நேரம் வந்து விட்டது; உணர்ச்சிபூர்வ போக்குகளை ஒதுக்கி வைத்து. 

'தீதும் நன்றும், பிறர் தர வாரா' (புறநானூறு; 192:  2) என்பதை மறந்து, 1944இல் தமிழில் 'இனம்' என்ற சொல்லானது, மேற்கத்திய 'ரேஸ்' (Race) என்ற பொருளில் திரிந்து, அரங்கேறிய 'உணர்ச்சிபூர்வ பார்ப்பன எதிர்ப்பு' போக்கில், தமிழ்நாடு பயணித்ததே, மேலே குறிப்பிட்ட விளைவுக்கு காரணமாகும். (‘தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?  'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படாமல்; பெரியார் கட்சிகள் மரணமடைந்து வருகின்றனவா?;
http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

அந்த 'உணர்ச்சிபூர்வ' போக்கில் தமிழண்ணலும் சிக்கியிருந்தாரா? என்ற கேள்வியை எழுப்பும் தகவலும் மேலே குறிப்பிட்ட, அணிந்துரையில் இடம் பெற்றுள்ளது.

" 'வடமொழிப் பெயர்ப்படுத்தல்' என்பது தனி வரலாறு. எந்த ஒரு தமிழ்ப் பெயரையும் வடமொழியாக மாற்றினர்; பொருள் தெரியாமலே (ஏ) மாற்றினர்;"

மேலே குறிப்பிட்ட அணிந்துரை இடம் பெற்றுள்ள நூலின் ஆசிரியர் க. குழந்தைவேலன் அவர்கள், கீழ்வரும் தனது ஆய்வுமுடிவை, உரிய சான்றுகளுடன் என்னிடம் ஒரு முறை விளக்கினார்; 'திருவையாறு' தொடர்பான எனது இசை ஆய்வு முடிவினை, அவருடன் விவாதித்த போது. தமது ஆய்வு முடிவினை கட்டுரைகளாகவும், நூலாகவும் சுமார் 20 வருடங்களுக்கு முன்னரே, அவர் வெளியிட்டுள்ளார்.

'தமிழ்நாட்டில் தமிழில் இருந்த ஊரின் பெயர்களை பொருள் சிதைவின்றி, வடமொழிப் பெயர்களாக மாற்றியுள்ளனர். ஆனால் அந்த வடமொழிப் பெயர்களை, தமிழ்ப் பற்றாளர்கள் தமிழில் மீட்க மேற்கோண்ட முயற்சியில்,'பொருள் தெரியாமலே'யே, ஒலி மாற்றம் செய்து, சிதைத்து விட்டனர்' என்பதே அந்த ஆய்வு முடிவாகும்.

மேற்குறிப்பிட்ட ஆய்வு முடிவினை, திரு. குழந்தை வேலன் தமிழண்ணலிடம் விளக்கினாரா?

தமது ஆய்வு முடிவுக்கு எதிரான கருத்தினை, தமது நூலின் அணிந்துரையில் தமிழண்ணல் குறிப்பிட்டுள்ளதை அவர் கவனிக்கவில்லையா? என்ற கேள்விகளுக்கான விளக்கத்தை, குழந்தைவேலன் மட்டுமே தர முடியும்.

சம்பந்தர் தேவாரம் திருவையாறு பதிகத்தில் கீழ்வரும் பாடல் உள்ளது.

" பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண்ணாகவே
ஆடும் ஆறு வல்லானும் ஐயாறுடை ஐயனே"

ஐந்து வகை இசையும், ஆறாவதாக ஆடலும் அமைந்து;

வணங்குதற்குரிய  திரு - ஐந்து இசையும், ஆறாவதாக ஆடலும் அமைந்து, திரு +  ஐ + ஆறு என்பது திருவையாறு ஆனது.

திருவையாறு கோவில் கல்வெட்டில் சமஸ்கிருதத்தில் 'பஞ்ச நாதேஸ்வரர்' என்று உள்ளது. சமஸ்கிருதத்தில், 'நாதம்' என்பது இசையைக் குறிக்கும். அந்த பொருள் புரியாமல், 'நாதம்' என்பதை, 'நதி' என ஒலி மாற்றம் செய்து, பொருளை திரித்து, ஐந்து நதிகள் ஓடுவதால், திருவையாறு என்ற தவறான புரிதலானது, தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளது. 

திருவையாறு பெயரின் காரணமாக சொல்லப்படும், (பக்கம் 39, தேவார திருப்பதிகங்கள், 2ஆம் திருமுறை, தருமபுரம் ஆதீனம்,1954) காவிரி, வெண்ணாறு, வடவாறு,வெட்டாறு, குடமுருட்டி என்ற ஐந்து ஆறுகளில், திருவையாறை ஒட்டி ஓடும் ஒரே ஆறாகிய‌ காவிரி தவிர்த்து, மற்ற ஆறுகளில் எவை, எவை பிற்காலத்தில் உருவானவை? என்பது ஆய்விற்குரியதாகும். 

அதே போல, தொல்காப்பியம் (சொல் 9: 5 – 6) 'ஒரீஇ' தொடர்பான சூத்திரமானது, பிறமொழிச் சொற்களை, தமிழில் இறக்குமதி செய்ய வழி காட்டும், எழுத்தொலி (Phonetic)  தொடர்பான சூத்திரம் என்பதையும், அச்சூத்திரத்தின் பொருளை தவறாக புரிந்து கொண்டு, குறிப்பாக அறிவியல் தொடர்பான பிற மொழிச் சொற்களை எல்லாம், 'பொருள் மொழிபெயர்ப்பு' (Semantic) செய்து, சீர் குலைத்து வரும் போக்கானது, வருடம் தோறும், பொறியியல் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரணமாகி வருவதையும், நான் சுட்டிக் காட்டியுள்ளேன். (http://musicresearchlibrary.net/omeka/items/show/2451 )

உணர்ச்சி பூர்வ' போக்கில்,  தமிழ்ப் பற்றாளர்கள், தமிழில் மீட்க மேற்கோண்ட முயற்சியில், 'பொருள் தெரியாமலே'யே, வடமொழிப் பெயர்களை ஒலி மாற்றம் செய்து, சிதைத்த போக்கிற்கும்;

உணர்ச்சிக் கவிஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும், பேச்சாளர்களாகவும் உள்ள தமிழ்ப் பற்றாளர்களில் பலர், தம்மை அரவணைக்கும், 'பொருள் உதவியாளர்களின்' பொருள் மூலங்கள் எல்லாம்;

அந்த 'உணர்ச்சி பூர்வ' போக்கினை, 'பாதுகாப்பு கவசங்கள்' ஆக்கி, பயணித்த/பயணிக்கும் 'திராவிட அரசியல் கொள்ளையர்கள்', தமிழ்நாட்டை கொள்ளை அடித்து வந்தவை என்று தெரியாமல், பயணித்து வரும் போக்கிற்கும்;

உள்ள தொடர்பும் ஆய்விற்குரியதாகும். 

இவ்வாறு 'அறிவுபூர்வமாக' பொருள் விளங்கும் புலமையை இழந்து, 'உணர்ச்சிபூர்வ' வெறுப்பு போக்கில், அறிவுக் கண்ணையும் இழந்து, தமது 'உணர்ச்சிபூர்வ' கவிதை, எழுத்து, பேச்சு ஆகியவற்றின் துணையுடன், 'வித்தியாசமான போதையில்', தமக்கு உதவும் 'புரவலர்களின்'(?) பொருள் மூலங்கள் பற்றிய அறிவின்றி, 'தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின்' இழிவுக்கு இலக்கணமாக நாம் வாழ்கிறோமா? அல்லது நமது குடும்பம், சுற்றம், நட்பு உள்ளிட்ட சமூக வட்டத்தில் அத்தகையோரை அனுமதித்து வாழ்கிறோமா? என்று நான் உள்ளிட்டு, நாம் ஒவ்வொருவரும், நமது மனசாட்சிக்குட்பட்டு விசாரணையைத் தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்.

'தீதும் நன்றும், பிறர் தர வாரா' (புறநானூறு; 192:  2) என்பதன் பொருளை அகவயப்படுத்தி, 'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' (சிலப்பதிகாரம் அரங்; 65) என்ற இயற்கை விதியின் படி, விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து, சுயலாப நோக்கின்றி, அறிவுபூர்வமாக, நாம் பயணிக்க, அதுவே முதற்படியாகும். அந்த பயணமானது வெற்றியில் முடிவதும் இயற்கை விதியாகும். அதற்கான திருப்பு முனையாக ஜெயலலிதாவின் மரணமானது;

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், முதல் முறையாக, எந்தவித முகமூடியுமின்றி, 'நிர்வாணமாக' ஆதாய அரசியல் தொடர்புள்ள சமூக ஆற்றல்கள் எல்லாம், 'சசிகலா நடராஜன்' என்ற நபரை நோக்கி, 'ஆதாய அரசியல் செயல்நுட்பம்' மூலமாக குவியத் தொடங்கியுள்ளன; தமிழ்நாட்டின் மீட்சிக்கான சமூக தளவினைத் (Social Polarization)  தூண்டி. (‘1948 தூத்துகுடி மாநாட்டில் ஈ.வெ.ரா விடுத்த அபாய எச்சரிக்கையின் இறுதி விளைவே; 2016 ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமா? ஜெயலலிதாவின் மரணத்திற்கு கிடைக்கும் நீதியே, தமிழ்நாட்டின் விடிவா?’; 
http://tamilsdirection.blogspot.com/2017/01/1948.html)

இன்று மேற்கத்திய மோகத்தில், தமிழில் உள்ள பல சொற்கள் எல்லாம், ஆங்கிலத்தின் செல்வாக்கில் திரிந்து, தமிழ் மொழியானது, தமிங்கிலீசாக மாறி வருவதற்கு, இன்று வாழும் ஆங்கிலேயர்களை குறை சொல்லிக் கொண்டிருந்தால், அது சரியா? அது போன்ற மோகமானது ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட எந்த மொழிகளின் மீது இருந்தாலும், அது சம்பந்தப்பட்ட தமிழர்களின் அகச்சீரழிவின் வெளிப்பாடாகாதா? அந்த அகச் சீரழிவிலிருந்து மீள்வது பற்றி, முயற்சிக்காமல், ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் மீது வெறுப்பு கொள்வது, முட்டாள்த்தனமாகாதா? அத்தகைய உணர்ச்சிபூர்வ வெறுப்பு நோயில் சிக்கிய தமிழர்களில் யார்? யார்? தமிழ் மட்டுமே தெரிந்த 'கிணற்றுத் தவளைகளாக' வாழ்வது  கூட தெரியாமல், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? அத்தகைய போக்கே, தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சிக்கும் வழி வகுத்ததா? ( ‘தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியும், சமூக நோய்கள் வளர்ச்சியும்’; 
http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html

அத்தகைய 'உணர்ச்சிபூர்வ சமஸ்கிருத எதிர்ப்பு', 'பார்ப்பன எதிர்ப்பு', 'இந்தி எதிர்ப்பு' போன்றவை எல்லாம், 'திராவிட அரசியல் கொள்ளையர்களின்' 'பாதுகாப்பு கவ‌சங்கள் ஆகி';

ஊழல் கல்வி வியாபாரத்தில், தமிழ்வழிக் கல்வியும் ( எனவே தமிழும்) மரணப்படுக்கையில் உள்ளனவா?

சகாயம் ஐ.ஏ.எஸ் அறிக்கையின்படி, தமிழ்நாட்டில்  1991 வரை சேதமின்றி இருந்த, கிரானைட், தாது மணல், காடுகள், ஏரிகள், ஆறுகள் எல்லாம், அதன்பின் ஊழலின் கோரப்பசிக்கு இரையாகி உள்ள சூழலில், அந்த 'பாதுகாப்பு கவசங்கள்' இன்னும் நீடிக்க வேண்டுமா? 

‘1925இல் காங்கிரசிலிருந்து வெளியேறி, 'சுயமரியாதை இயக்கம்' தொடங்கிய ஈ.வெ.ரா அவர்கள், 'தமிழர்களை மானமும் அறிவும் உள்ள மக்களாக்குவதே' தனது இலட்சியம் என்று சூளுரைத்தார்.........தமிழ்மொழியின், தமிழர்களின், தமிழ்நாட்டின் சீரழிவில் ஊழல் வகித்து வரும் பங்கினை அறியும் 'பகுத்தறிவின்றி', பெரியார் கொள்கையாளர்களில் யார்? யார்? பயணிக்கிறார்கள்? அல்லது அந்த சீரழிவில் 'திரிந்த பகுத்தறிவுடனும்', 'திரிந்த சமூக நீதியுடனும்', 'திரிந்த மனித சமூக கிருமிகளாக' யார்? யார்? பயணிக்கிறார்கள்?’ ( ‘1948 தூத்துகுடி மாநாட்டில் ஈ.வெ.ரா விடுத்த அபாய எச்சரிக்கையின் இறுதி விளைவே; 2016 ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமா? ஜெயலலிதாவின் மரணத்திற்கு கிடைக்கும் நீதியே, தமிழ்நாட்டின் விடிவா?; 
http://tamilsdirection.blogspot.com/2017/01/1948.html

மேற்கண்ட சீரழிவு 'உணர்ச்சிபூர்வ' போக்கில், தமிழ் இலக்கணமும் 'கால தேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படாமல், சருகாகி, உதிர்ந்து, நூலக அருங்காட்சியத்தை நோக்கி, பயணித்து வருவதை தடுக்க முடியுமா? (‘தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (3) - சமூகத்தின் சீரழிவும், இலக்கணத்தின் வீழ்ச்சியும்’; 
http://tamilsdirection.blogspot.com/2014_09_01_archive.html )

'உணர்ச்சிபூர்வ' போக்குகளுக்கு எதிராக போர் தொடுத்து, கட்சி, கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, அறிவுபூர்வ விவாதங்களை, ஊக்குவிப்பதன் மூலமே தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மீட்க முடியும். பொருள் தெரியாமல், தமிழை மீட்கும், பொருள் மூலம் தெரியாமல், அம்முயற்சிக்கு பொருள் உதவி பெறும், போக்குகளும் முடிவுக்கு வரும்.

No comments:

Post a Comment