Sunday, June 4, 2017

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம்;
சரியான வாதத்தை முன்வைத்துள்ளார்களா? (2)


நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பதற்காக;

'தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும்' என்ற வாதத்தை முன்வைத்துள்ளவர்களில் எவராவது;

தமிழின் சீரழிவு எப்போது முளை விட்டு, எப்படி வளர்ந்து, இன்று உச்சக்கட்ட சீரழிவில் - தமிழில் எழுதவும் படிக்கவும் தெரியாத மாணவர்கள் இளைஞர்களின் எண்ணிக்கையானது, தமிழ்நாட்டிலேயே அதிவேகமாக அதிகரித்து வரும் போக்கில்-  உள்ளது? என்பது பற்றி கவலைப்பட்டு, தீர்வு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்களா?

'துக்ளக்'(30.05.2017) இதழ் அட்டையில் நின்று கொண்டிருக்கும் ரஜினியின் 'அரசியல் பயணம்'  பேருந்தின் முன்;

'நம்ம ரோடுலே கார் ஓட்ட, அந்த ஆளுக்கு என்ன உரிமை? வண்டி ஸ்டார்ட் ஆனதும், மறியல் செய்ய ரெடியாய் இருப்போம்' என்று, எறும்புகள் சில பேசும் கார்டூன் வெளிவந்துள்ளது.  (https://www.thuglak.com/thuglak/index_new.php?ver=0.01 )

மேலே குறிப்பிட்ட 'துக்ளக்' இதழில், ' ரஜினியின் 'வருகை'யும், தமிழக அரசியலும்' என்ற தலைப்பிலான தலையங்கம், எனது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில் 'யார் தமிழர்கள்?' என்ற உட்தலைப்பில் வெளிவந்துள்ள கருத்துக்கள் மிகவும் முக்கியமானவையாகும்.

அதில்  " '40 ஆண்டுகளாக நான் தமிழை காட்டுமிராண்டி பாஷை' என்றும், 'காட்டுமிராண்டிகள் தான் அதைப் பேசுகிறர்கள்'என்றும் கூறி வருகிறேன்." என்பது உள்ளிட்ட 'பெரியார்' ஈ.வெ.ராவின் மேற்கோள்கள் இடம் பெற்றுள்ளன.

மேலே குறிப்பிட்ட போக்கில், 'பெரியார்' ஈ.வெ.ராவும், அவர் வழியில் எண்ணற்ற தொண்டர்களும் பயணித்தன் விளைவுகளை, தமிழ்நாடு இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது: சாண் ஏறி முழம் சறுக்கின கதையாக.

சில வருடங்களுக்கு முன், கல்லூரி முதல்வர் பொறுப்பிலிருந்து விலகி, நான் விரும்பிய இசைத் தகவல் தொழில்நுட்பத் துறையில் (Music Information Technology) ஆய்வுகள் மேற்கொள்வதற்காக‌, சாஸ்திரா பல்கலைகழகத்தில் பேராசிரியராக சேரும் முன், 'நிர்வாக' மனப் போக்கிலிருந்து,  'ஆய்வுக்கான' மனப்போக்கிற்கு மாறும் நோக்கில், மதுரைக்கு அருகே இருந்த சிவானந்ததா ஆசிரமத்தில் சில நாட்கள் யோகா பயிற்சியில் இருந்தேன். (http://www.path2yoga.net/2016/01/the-sivananda-ashram-in-madurai-most-visit-ashram-india.html ) பயிற்சி முடிந்து, பேருந்தில் என்னை ஏற்றிவிட, அங்கு பணிபுரிந்த ஒரு கிராமப்புற பெண் (+2 முடித்தவர்) துணையாக வந்தார்.

அவரிடம் 'உன் வாழ்வின் இலட்சியம் என்ன?' என்று நான் கேட்டேன். 'ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும், பேசவும் வேண்டும்' என்றார்.

இன்று தமிழ்நாட்டு குக்கிராமங்களில் கூட, 'விளையாட்டுப் பள்ளிகள்' (Play Schools) புற்றீசல் போல் அதிகரிக்க, 'அம்மா, அப்பா' மறைந்து, 'மம்மி, டாடி' அரங்கேறி ‘வருகிறார்கள்’(?).

இன்று தமிழ்நாடானது, 'பெரியார்' ஈ.வெ.ரா அறிவுறுத்திய கீழ்வரும் போக்கில், 'அதிவேகமாக' பயணிக்கிறது.

“"உங்கள் வீட்டில் மனைவியுடனும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்;பேச பழகுங்கள்;பேச முயலுங்கள்;! தமிழ்ப் பைத்தியத்தை விட்டு ஒழியுங்கள்" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் ,இரண்டாம் தொகுதி , பப 988-89

தாய்மொழிவழிக்கல்வி மூலம் அடிப்படைக்கல்வி பயிலும் குழந்தைகள் எல்லாம்,  புலனறி மூளை வளர்ச்சி பெற்று (Cognitive Skills Development) , ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளிலும் எளிதில் புலமை அடைந்து, சாதனையாளர்களாக வளர்வார்கள், என்பதை உலக ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. (http://tamilsdirection.blogspot.sg/2016/06/blog-post.html )

மேலே குறிப்பிட்ட ஆய்வுகளை தேடி, கண்டுபிடித்து படிக்கும் அளவுக்கு, 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்களுக்கு கல்வி அறிவு இல்லை, என்றாலும், அவருக்கு துணையாக இருந்த பட்டதாரிகளான அண்ணா, குத்தூசி குருசாமி, டார்பிடோ ஜனார்த்தனம் உள்ளிட்ட இன்னும் பலர் ஏன் அதைச் செய்யவில்லை? என்பது ஆய்விற்குரியதாகும்.

அதே போல், 1967 ஆட்சி மாற்றத்தில் ஊழல் அரங்கேறியதற்கும்;

அதன் தொடர்ச்சியாக 1970களின் பிற்பகுதியில், 'கல்வி வியாபாரம்' வளர்ந்த வேகத்தில்,  தமிழ்வழிக்கல்வி சீரழிந்து, ஆங்கிலவழிக்கல்வி 'சுனாமியாக' வளர்ந்த போக்கிற்கும்;

பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளிலான‌ ஒழுக்க மதிப்பீடுகள் சீரழிந்ததற்கும்:

அவற்றின் தொகுவிளைவாக தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி அபகரித்தல், கிரானைட், தாது மணல், ஆற்று மணல், காடுகள் உள்ளிட்ட இயற்கை வள‌ங்களை ஊழல் பேராசையில் சூறையாடியதற்கும்;

இடையிலான தொடர்புகள் எல்லாம் ஆய்விற்குரியவையாகும்.

‘ஆங்கில வழிக் கல்வியின் காரணமாக குழந்தைகள் 10வயது வரை இயல்பாக தமது பாரம்பரிய பண்பாட்டு ஒழுக்கத்துடன் பெற வேண்டிய மூளை வளர்ச்சியைப் பெறுவது சிதைக்கப்பட்டது. அதனால் வாழ்க்கையில் அவர்கள் சாதிக்கக் கூடியவற்றை விட குறைவாகவே சாதிக்க நேரிடுகிறது………… ‘இயல்முறி குழந்தை வளர்ப்பின்காரணமாக, பாரம்பரிய பண்பாட்டு ஒழுக்க மதிப்புகள் முக்கியத்துவம் இழந்த சூழலில், வளர்ந்த குழந்தைகள் பெரியவர்கள் ஆவது கடந்த 40 வருடங்களில் அதிகரித்து வருகிறது. சமூகத்தில் குறுக்கு வழியில் பணம் செல்வாக்கு சம்பாதிக்க, அந்த பாரம்பரிய பண்பாட்டு ஒழுக்க மதிப்புகளைக் காவு கொடுத்து, சமூகத்தில் 'பெரிய மனிதர்கள்' ஆகும் போக்கும் அதிகரித்து வருகிறது. இம்முறையில் 'புத்திசாலித்தனமாக' பணம் சம்பாதிக்க தெரியாத/வழியில்லாத 'முட்டாள்களே', திருட்டு, கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் 'குற்றவாளிகளாக' காவல் துறையில் பிடிபட நேர்ந்தால், அவர்கள் அம்முறைகளில் 'சம்பாதித்த' பணத்தை கூலியாக/லஞ்சமாக பெற்று அவர்களைக் காப்பாற்றும் வழக்கறிஞர்களும்,  காவல் துறையிலும், நீதித் துறையிலும் உள்ள கறுப்பு ஆடுகளும்(black sheep) வளர்ந்து வரும் நிலையும் உள்ளது. இயல்முறி  வாழ்க்கை நோயில், தமிழ்நாடு சிக்கியதன் விளைவுகளே இவையாகும். ‘ (http://tamilsdirection.blogspot.sg/2015_01_01_archive.html )

மேலே குறிப்பிட்ட 'கறுப்பு ஆடுகள்' சமூக செயல்நுட்பத்தில், 'பெரியார்' முகமூடி எவ்வாறு 'அதிவேக பணக்காரராக' பயன்பட்டது? என்பதை 'திருச்சி பெரியார் மையம்' அனுபவங்கள் மூலம் கண்டுபிடித்தேன்.( http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.html ) அதன் தொடர்ச்சியான கண்டுபிடிப்பே, தமிழர்களை பாதித்துள்ள,‌ மேலே குறிப்பிட்ட 'இயல்முறி  வாழ்க்கை நோய்' ஆகும். அந்த 'இயல்முறி  வாழ்க்கை நோய்' கவசமாக,  'தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும்' என்ற வாதம் முன்வைக்கப்படுகிறதா? என்ற ஆய்விற்கு, 'பெரியார்' ஈ.வெ.ராவின் கீழ்வரும் எச்சரிக்கை துணை புரியும்.

ஈ.வெ.ராவின் 'பொதுத் தொண்டனுக்கானஅளவுகோலின்படி, நமது  'யோக்கியதை '  எப்படி? (http://tamilsdirection.blogspot.sg/2016/10/blog-post.html )

எனவே ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு எதிராக, 'தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும்' என்று முன்வைக்கப்பட்டுள்ள வாதமானது;

தமிழின் சீரழிவு எப்போது முளை விட்டு, எப்படி வளர்ந்து, இன்று உச்சக்கட்ட சீரழிவில் - தமிழில் எழுதவும் படிக்கவும் தெரியாத மாணவர்கள் இளைஞர்களின் எண்ணிக்கையானது அதிவேகமாக அதிகரித்து வரும் போக்கில்-  உள்ளது? என்பது பற்றிய அறிவுபூர்வ விவாதத்தை தூண்டி, தீர்வு நடவடிக்கைகளை நோக்கி, திரும்பினால்;

அது தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் நல்லதாகவே முடியும்.

No comments:

Post a Comment