Tuesday, August 22, 2017

ஏழைகள் இந்தி படிக்கும் வாய்ப்பு ஒழிய காரணமான, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம்;


சமூக சாபத்திலிருந்து (Social Curse), நான் விடுதலை பெறும் ‘பரிகார  வாய்ப்பு’


என்னால் இயன்றவரை, அவர்களின் வியக்கத்தக்க கூறுகளை அகவயப்படுத்தி (internalize) வாழ, நான் வாழ்வில் எனக்கு முன்மாதிரியாக (Role Model) கருதியுள்ளவர்களில் ஒருவர்,  திருச்சி அன்னை ஆசிரமத்தின் தலைவராக இருந்து மறைந்த காமாட்சி ஆவார். 

அன்னை ஆசிரமத்தை நிறுவிய வீரம்மாளையும், காமாட்சி அம்மாளையும், புகழ் போதையில் சிக்காமல், 60, 70, 80 வயதுகள் நிறைவடைந்த காலங்களிலும் பிறந்த நாட்களை கூட கொண்டாடாமல், சாதி, மத வேறுபாடுகள் அற்ற, பிரமிக்க வைக்கும் சாதனைகள் புரிந்தவர்களாக, நான் வியந்து பாராட்டுகிறேன்; அன்னை தெரசா பற்றிய கீழ்வரும் 'சர்ச்சைகளுக்கு' இடமின்றி, அவர்கள் பயணித்துள்ளதையும் கருத்தில் கொண்டு.

‘அன்னை தெரசாவுக்கு மத மாற்றம் நோக்கம் இருந்தது; என்பது மட்டுமல்ல, அந்த நோக்கத்திற்காக அவர் செய்தது உண்மையில் 'சேவையா'? அந்த 'சேவைக்காக' அவர் பெற்ற நிதிகளில் என்னென்ன முறைகேடுகள் நடந்தன? 'அவ்வாறு' நிதி சேகரிக்க, இந்திராகாந்தியின் 'நெருக்கடி கால' ஆட்சியை ஆதரித்தது  மட்டுமன்றி, உலக அளவில் 'சர்வாதிகாரிகளுடன்' அன்னை தெரசா எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தார்?’
(‘திருக்குறள் 'அறிவில்' 'அன்னை தெரசா' ; ஆர்.எஸ்.எஸ் தலைவர் கருத்து  சரியா?  தவறா?; http://tamilsdirection.blogspot.in/2015/02/blog-post.html ) 

குழந்தைகளுடன் கணவனால் கைவிடப்பட்டு, திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றிய வீரம்மாள், தொலை தொடர்பு துறையில் பணியாற்றி வந்த காமாட்சி, ஆகிய இரண்டு 'தலித்' பெண்கள் சேர்ந்து, சாதி, மத பேதமின்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அடைக்கலம் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டதே அன்னை ஆசிரமம் ஆகும்.

அவர்களின் பிரமிக்க வைக்கும் அர்ப்பணிப்பைப் பார்த்து, நம்ப முடியாத அளவுக்கு உதவிகள் செய்த அந்த வானொலி நிலைய இயக்குநர், திருமணமாகாமல் கல்லூரி பேராசிரியையாகவும், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியயையாகவும், அவை போன்ற பணிகளிலும் பணியாற்றி, பணி ஒய்வு பலன்களான பல லட்சம் ரூபாய்களையும், ஓய்வு ஊதியத்தையும் அன்னை ஆசிரமத்திற்கே வழங்கி, அங்கேயே தங்கி ஆசிரமப் பணிகளில் ஈடுபட்டுள்ள பிராமண, பிராமணரல்லாத மூத்த பெண்டிரும், எனக்கு வணங்கத் தகும் தெய்வங்களாகவே தெரிகிறார்கள். 

அதே திருச்சியில் அன்னை ஆசிரமத்திற்கு முன் ஈ.வெ.ரா அவர்கள் தொடங்கிய அது போன்ற அமைப்பானது, எவ்வாறு செயல்பட்டது? என்பதை 'பெரியார்' இயக்கத்தில் பயணித்த காலத்தில் அறிவேன். இன்று எப்படி இருக்கிறது? என்று தெரியாது. 


எனது அறிவு அனுபவ அடிப்படைகளில், ஈ.வெ.ரா அவர்கள் தோற்ற இடத்தில், வீரம்மாளும், காமாட்சி அம்மாளும் பிரமிக்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளார்கள்;


என்பது  ‘semi empirical hyphothesis  அரை 'எம்பிரிகல்' கருதுகோள்’   ஆகும்.

 
வெறுப்பு அரசியலில் இருந்து தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் 'விடுதலை' செய்து, சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பிலும் சுயலாப நோக்கின்றி வெளிப்படும் ஆதரவு சமூக ஆற்றல்களை ஒருங்கிணைத்து மீட்கும் திறவுகோல்களை;


நான் தேடுவதற்கான மிக முக்கிய மூலமாக (most significant source) திருச்சி அன்னை ஆசிரமம் உள்ளது. 


காமாட்சி அம்மாள் 
வாழ்ந்த போது, என்னிடம் முன் வைத்த கோரிக்கையை ஏற்று, ஒவ்வொரு ஞாயிறும், தஞ்சையிலிருந்து திருச்சி வந்து, அன்னை ஆசிரமம் அரசு உதவியின்றி நடத்தும், மேல் நிலைப் பள்ளியில், +2 தமிழ்வழி மாணவிகளுக்கு, இயற்பியல் (Physics) பாடங்கள் நடத்தினேன்.

காமாட்சி அம்மாளின் மறைவுக்குப் பின், அந்த ஆசிரம தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளவர்;

காமாட்சி அம்மாளைப் போலவே, திருமணம் செய்து கொள்ளாமல்;

சமூக தொண்டுகளில் ஈடுபட்டு, வங்கியில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற பூங்குழலி ஆவார்.

அவர் என்னிடம் முன் வைத்த கோரிக்கையை ஏற்று;

கடந்த வருடம் முதல், ஆசிரம காப்பகத்தில் உள்ள ஏழை/கைவிடப்பட்ட பெண் மாணவிகள், இந்தி பயில, உதவும் ஆசிரியர் ஊதிய செலவுக்காக, மாதம் ரூ 2000 கொடுத்து வருகிறேன். 

இன்று திராவிடர்/திராவிட கட்சிகளைச் சேர்ந்த குடும்பங்களில் உள்ள பிள்ளைகளில் பலர், ஆங்கிலவழிப் பள்ளிகளில் இந்தி பயில்வதோடு, இந்தியில் தனிப்பயிற்சியும் பெற்று, 'முன்னேறுகிறார்கள்'.

அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் தனியார் தமிழ்வழிப் பள்ளிகளிலும் படிக்கும், ஏழை மாணவர்களுக்கு மட்டுமே, தமிழ்நாட்டில் இந்தி படிக்க வாய்ப்பில்லை. 

1967 வரை, விருப்பமுள்ளவர்கள் (தேர்வில் ‘பாஸ்’ (pass) ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை) இந்தி பயிலும் வாய்ப்பானது, அப்பள்ளிகளில் இருந்ததை;

ஒழிக்கும் வினை ஊக்கியாக (catalyst) அமைந்து, தமிழ்நாட்டின் சீரழிவுக்கு வித்திட்டது. 1965 இந்தி எதிர்ப்பு போராட்டமாகும்.

அந்த போராட்டத்தின் போது, திருச்சி செயிண்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவனாக இருந்த நான், சுமார் 20  மாணவர்களை சேர்த்துக் கொண்டு, வகுப்புகளைப் புறக்கணித்து, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், தடியடி, கண்ணிர் புகைக்குண்டு, துப்பாக்கி சூடு நடைபெற்ற போராட்டங்களில், மறைந்திருந்து அந்த காவலர்களை நோக்கி, கற்களை வீசும் போராட்டத்தில், ' உற்சாகமாக' பங்கேற்றேன்; பின் தலைமை ஆசிரியர் என்னை வரவழைத்து, இரண்டு கைகளையும் நீட்டச் சொல்லி, பிரம்பால் அடிகள் கொடுத்தும், நான் திருந்தவில்லை.

அதைவி, இன்று நான் அவ்வப் போது நினைத்து வெட்கப்படும் வகையில்;

அர்ப்பணிப்போடு வகுப்பில் இந்தி சொல்லிக் கொடுத்த ஆசிரியர், பாடம் நடத்துகையில் மாணவர்களிடையே நடக்கும் போது, அவர் சட்டையின் முதுகு புறத்தில், மற்ற சில மாணவர்களைப் போல, நானும் பேனா இங்கினை தெளித்து, கறையாக்கி, மகிழ்ந்தேன், 

இந்தியை எதிர்த்ததாக நினைத்துக் கொண்டு.

இன்று அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் தனியார் தமிழ்வழிப் பள்ளிகளிலும் படிக்கும், ஏழை மாணவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில், இந்தி படிக்கும் வாய்ப்பை, 1967இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்து, ஒழிப்பதற்கு காரணமான, எண்ணற்ற 'சமூக பாவிகளில்' நானும் ஒருவனாக 'அறியாமையில்' இருந்திருந்தேன்;

என்பதை இப்போது உணர்ந்து, மிகவும் வருத்தப் படுகிறேன்;

ஒரு மொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கும் போக்கில்;

இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளை உணர்ச்சிபூர்வமாக வெறுப்பதானது, 'செனோபோபியா' (Xenophobia) என்ற மனநோயாகும் என்பதை இப்போது உணர்கிறேன்.

இன்று அன்னை ஆசிரமமானது, அரசு உதவியின்றி நடத்தும் மேல் நிலைப் பள்ளியில், தமிழ்வழியில் படிக்கும், காப்பகத்தில் உள்ள மாணவிகள், இந்தி தனிப்பயிற்சி பெற, நான் புரிந்து வரும் மேற்குறிப்பிட்ட உதவியை;

மேலே குறிப்பிட்ட, எனது வெட்கப்படும் செயல்கள் மூலம் நான் பெற்றுள்ள, சமூக சாபத்திலிருந்து (Social Curse) விடுதலை பெறும்;

இயற்கையின் போக்கில் ,எனக்கு கிடைத்த,  'பரிகார வாய்ப்பாக' கருதுகிறேன்.  

அரைகுறை ஆங்கில அறிவுடனும், தமிழிலும் ஆழ்ந்த புலமையின்றி, 'பாவம், புண்ணியம்' எல்லாம், ' மூட நம்பிக்கை' என்று ஆணவமாக அறிவித்து, 'குருட்டு பகுத்தறிவு' போக்கினை ஊக்குவித்து பயணித்ததன் பலன்களைத் தான், இன்று தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது; 

என்பது எனது ஆய்வு முடிவாகும். அந்த பாவத்தில் பங்கு பெற்ற நான், இனி வாழும் வாழ்க்கையை 'பரிகார வாய்ப்பாக' கருதி வாழ்கிறேன்;

உணர்ச்சிபூர்வ போக்கில் உள்ள நபர்களையும், பொதுவாழ்வு வியாபாரிகளையும் விட்டு விலகி, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவித்து.


குறிப்பு:

1944க்கு முன் எப்படி இருந்த தமிழ்நாடு, இன்று  எப்படி இருக்கிறது?                       

இந்தி எதிர்ப்புப் போராட்டம்:1938‍க்கும்  1965க்கும்   என்ன வேறுபாடு?
http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html


Also: ‘Is the Language Policy derailing the nation building process in India?’; http://tamilsdirection.blogspot.in/2017/06/is-language-policy-derailing-nation.html

‘Only with a hard headed population , a leader can be held accountable continuously and he/she cannot hold unhealthy psychological hold over people.’ – comment ; http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_10.html 

' செயல் சாத்திய எதார்த்தவாதிகளாக
மக்கள் இருக்கும் போது தான், ஒரு தலைவரை தொடர்ந்து பொறுப்பேற்புக்கு உட்படுத்த முடியும். அந்த தலைவர் மக்கள் மீது கேடான மனரீதியிலான செல்வாக்கு செலுத்துவதும் நடக்காது' - வன்பாக்கம் விஜயராகவன்

வாழும்போதே 'பெரியார்' பட்டம் ஏற்று, தமக்கு சிலையையும் அனுமதித்த போதே, மேலே குறிப்பிட்ட இலக்கணத்தில் ஈ.வெ.ரா அவர்கள் தோற்றார்.
 

No comments:

Post a Comment