Thursday, January 22, 2015


தொல்காப்பியம் மூலம் புதிய வேலை வாய்ப்பு

கணினி இசை அமைப்பாளர்(Computer Music Composer)




தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் இசை இயற்பியல் (Physics of Music)  அடிப்படையில் நான் மேற்கொண்ட ஆய்வுகளானது, இசைத் தகவல் தொழில் நுட்பத் துறையில் (Music Information technology) புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பது நானே எதிர்பார்த்திராத‌ அதிசயம் ஆகும். அவற்றில் புதிய வேலை வாய்ப்புக்கான ஒரு துறை பற்றி இங்கு பதிவு செய்கிறேன். (http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_8.html)

ஒரு பாடலில் ஒலிக்கும் எழுத்தின் ஒலிக்கும்,இசைக்கும் உள்ள தொடர்பு பற்றிய இலக்கணத்தை நான் கண்டுபிடித்துள்ளேன். 

அதே போல ஆபிரகாம் பண்டிதரின் அரிய ஆய்வில் வெளிப்பட்டுள்ள 'ராக ஸ்புட முறை'யினை(Raga Sputa Method)  ஆய்வு செய்து, அதிலுள்ள குறைகளை அடையாளம் கண்டு, சரி செய்து, கணினி வழி இசை அமைப்பு மென்பொருள் உருவாக்கும் ஆய்வுத் திட்டத்திலும் ஈடுபட்டுள்ளேன்.

மேலேக் குறிப்பிட்ட ஆய்வுகளின் அடிப்படையில், இரண்டு புகழ் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் 'இசைத் தகவல் தொழில் நுட்பம்' (Music Information Technology ‘ (common elective to all discipline B.tech students) அறிமுகம் செய்து,  ஆய்வுகளிலும் ஈடுபட்டு வருகிறேன். அதில் வெளிப்பட்ட, என்னை வியப்பில் ஆழ்த்திய, முன்னேற்றம் வருமாறு;

இசை படித்திராத பொறியியல் மாணவர்களுக்கு, புதிய அணுகுமுறையில், ஒலியிலிருந்து துவங்கி, அது எவ்வாறு இசையாக மாறுகிறது என்று விளக்கினேன். அதன்பின் அவர்களால் எளிதில் மேற்கத்திய இசையின் மேஜர், மைனர், ஸ்கேல்களையும்,( Major & Minor scales)  கர்நாடக இசையின் மேளகர்த்த ராக முறையினையும் புரிந்து, மேற்கத்திய இசைக் குறியீட்டில் (score view- sheet music) உள்ள பாடலை , கர்நாடக இசைக் குறியிட்டு முறையில்.(Karnatic Notation) மாற்றவும், கர்நாடக இசைக் குறியீட்டிலுள்ள பாடலை மேற்கத்திய இசைக் குறியிட்டிலும் மாற்ற முடிந்தது. கணினி ‍துணையுடன், அவற்றை கணினியில் இசையாக ஒலிக்க வைக்கவும் முடிந்தது.

இதுவரை இன்றைய இசை அமைப்பாளர்கள் பயன்படுத்தாத எண்ணற்ற,  கர்நாடக இசை, மேற்கத்திய இசை உள்ளிட்டு, உலகில் உள்ள பல வகை இசைகள், புத்தகங்களில் இசைக் குறியிட்டு(Music Notation)  முறைகளில் உள்ளன. இதுவரை காதால் கேட்டிராத அப்பாடல்களை, கணினி மூலம் ஒலிக்க வைக்க என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களால் முடியும் என்பது எனக்கே வியப்பைத் தந்தது. எனது பயிற்சியின் மூலம் திரை இசை அமைப்பாளர்கள் உருவாக வாய்ப்புள்ளதை, அடுத்து பார்ப்போம்.

இசைக் கருவிகளின்றி கணினி மூலம் (1996 சமயம்) நான் உருவாக்கிய இசைக்குப் பொருத்தமான பாடல் வரிகளுடன், 2011இல் (இசை படித்திராத) ஒரு கல்லூரி மாணவருக்கு பயிற்சி கொடுத்து, அவர் படித்த‌  கல்லூரி  நிகழ்ச்சியில் பாட வைத்தேன். பின்னணி இசை கணினியிலிருந்து 'பெருக்கி'  (amplifier) மூலம் ஒலிக்க, 'மைக்' முன் அந்த மாணவர் பாடினார்.பாட்டு முடிந்தவுடன், அந்நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளர்-'பசங்க'  திரைப்பட இயக்குநர்-   பாண்டிராஜ் தாமாகவே மேடையில் ஏறி, மைக்கைப் பிடித்து, 'இந்த பாடல், இசைக்கருவிகளுடன் ரெக்கார்டிங் தியேட்டரில் ஒலிப்பதிவு செய்து கேட்டால், எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். 'சுப்பிரமணியபுரம்' படத்தில் 'ஹிட்' ஆன 'கண்கள் இர‌ண்டால்' என்ற பாட்டு அளவுக்கு 'ஹிட்' ஆகும். எனது அடுத்த படத்திற்கு இசை அமைப்பாளரை முடிவு செய்து விட்டேன். எனவே எனது அதற்கடுத்த படத்திற்கு,  என்னை இசை அமைப்பாளர்" என்று அறிவிக்க ஒரே கைதட்டல். நிக‌ழ்ச்சி முடிந்ததும், அவர் வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து , ‘திரைத் துறை எனக்கு சரி வராது, எனது இசை ஆய்வுகளே எனக்குப் போதும்' என்று சொல்லி, அதற்கு முற்றுப் புள்ளி வைத்தேன்.

Internet, mobiles, tablets etc பலவகையான  digital music gadgets   அறிமுகத்துடன் இசைக் கேட்போர் எண்ணிக்கையும், அவர்கள் உலக அளவிலான வெவ்வேறு இசைகளைக்  கேட்பதும் 'அதி வேகத்தில்' அதிகரிக்கிறது. அதற்கேற்ற வகையில் புதிய இசைகள் உருவாக்க இயலாமல், 'பழைய' இசைகளை 'புதிய வடிவில்' வெளியிடுவது அதிகரித்து வருகிறது. ( http://www.newindianexpress.com/magazine/Making-Music/2014/07/13/article2324072.ece )

இந்தியாவில் இந்தி, தமிழ் உள்ளிட்டு திரைப்படப்பாடல்களில் 'ஹிட்'(Hit) பாடல்கள் அபூர்வமாகி வரும் போக்கு எனது கவனத்தை ஈர்த்துள்ளது. நான் நுழைய விரும்பாத திரை இசைத் துறையில், ஆர்வமும், உழைப்பும், அடிப்படைக் கணினி அறிவும், உள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, கணினி இசைப் பயிற்சி கொடுத்து, திரை இசைத் துறையில் அறிமுகப்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனது ஆய்வுத் திட்டங்களின் ஊடே, அதற்கும் நேரம் ஒதுக்குவது பற்றியும் திட்டமிட்டு வருகிறேன். அது செயல் வடிவம் பெற்ற பின், அவர்களில் ஒரு பிரிவினர் இந்தியாவின் பெருநகரங்களில் கணினி இசைப் பயிற்சி மையங்களைத் தொடங்குவார்கள். இன்னொரு பிரிவினர், திரையில் பிரபலமான இசை அமைப்பாளர்களிடம் இதுவரை பயனில் வராத இசைகளைக் கணினி மூலம் தேடித் தரும் உதவி இசை அமைப்பாளர்களாக, திரை இசைத் துறையில் அடியெடுத்து வைப்பார்கள்.

அதிகபட்சம் 30 நாட்கள் (தினமும் ஒன்றரை மணி நேரம் மடிக் கணினியுடன்) என்னிடம் பயிற்சி பெற்றவர்களால், மேலேக் குறிப்பிட்ட புத்தகங்களில் உள்ள இசைகளை கணினி மூலம் இசையாக வெளிப்படுத்தவும், அவரவருக்குள்ள படைப்பாற்றலுக்கு ஏற்ற வகையில் புதிய இசைகளை உருவாக்கவும் முடியும்.

என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் முதலில் இந்திய அளவிலும், பின்னர் உலக அளவிலும் இசை அமைப்பாளர்களாக முக்கிய இடம் பெற வேண்டும். அவர்களுக்குத் தொடர்ந்து 'பின்பலமாக' நான் செயல்பட்டு, மின்வழி இசை ஆலோசனை (Online Music Composing Consultancy) என்ற புதிய தொழில் வியாபாரத் துறையை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் எண்ணியுள்ளேன்.

எனது முயற்சிகளில் நான் பெறும் வெற்றிகள் காரணமாக, உலகில் இசைத் தகவல் தொழில் நுட்பத்தையும்(Music Information technology) , கணினி இசை மொழியியலையும் (Computational Musical Linguistics)   பயன்படுத்தி, சந்தைப்படுத்தக் கூடிய பொருட்களை உருவாக்க, பழந்தமிழ் இலக்கியங்களை நோக்கி, ஆய்வுப் படையெடுப்பு தொடங்கும் காலம் அதிக தொலைவில் இல்லை.

No comments:

Post a Comment