Saturday, January 3, 2015




தமிழ், தமிழர், தமிழ்நாடு மீட்சி நம்பிக்கையானது நிஜமா? பகற்கனவா?



தான் வாழும் சமூகத்தில் உள்ள கட்சிகளிடம் இருக்கும் முரண்பாடுகளைச் சரியாக அடையாளம் கண்டு, தனது இமேஜைப் பற்றி கவலைப் படாமல், சமூக நலனைக் கருத்தில் கொண்டு, அந்த முரண்பாடுகளுக்குள் நுழைந்து,சமூக நலனுக்கு எதிரான விசைகளைப்(Forces)  பலகீனப்படுத்தும் போக்கில், தனக்குள்ள ஆற்றலை  physically & mentally independent- ஆக இருந்தது வரையில், செலவிட்டவர் 'பெரியார்' ஈ.வெ.ரா ஆவார்.. உலகில், அதில், அவரளவுக்கு வேறு முன்னுதாரணம் எனக்குத் தெரியவில்லை.
 
பிராமணர்களின் அதிக்கத்தை எதிர்த்த பெரியார் , தமது பிராமண நண்பர்களின் தோட்டங்களிலேயே தமது கட்சியின் பயிற்சி வகுப்புகள் நடத்தியிருக்கிறார்.பெரியாரும் ராஜாஜியும்; "இருவரும் சேர்ந்து முன்போல ஒத்துழைக்க முடியுமா என்கின்ற விஷயமாகவே பேசிப் பேசி ஒத்துழைக்கச் சந்தர்ப்பம் ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கை மீதே ஜெயிலில் பிரிந்தோம்." என்று பெரியார் தெரிவித்த கருத்து எதை உணர்த்துகிறது? (‘எனது நண்பர் ராஜாஜி ‘:- குற்றாலத்தில் ராஜாஜியைச் சந்தித்ததுகுறித்து தந்தை பெரியார் 1936 ஜூலை 14-ம் தேதி ‘குடிஅரசு’ இதழில் எழுதியதிலிருந்து… தொகுப்பு: சு. ஒளிச்செங்கோ, http://tamil.thehindu.com/opinion/columns/)

பெரியாரும் ராஜாஜியும் நட்பாக இருந்தது போல,தமிழ்நாட்டில் ஆங்காங்கே உண்மையான கொள்கைப்பற்றுடன் நேர்மையாக வாழ்ந்த பெரியார் தொண்டர்களுக்கும் தனிப்பட்ட முறையில், நேர்மையாகவும் மிகுந்த ஆச்சாரங்களுடன் வாழ்ந்த பிராமணர்கள், நண்பர்களாயிருந்தார்கள். ஒரு பிராமணப் பெண்ணை மணந்து, அசைவ உணவைத் தவிர்த்து,உண்மையான கொள்கைப்பற்றுடன் நேர்மையாக வாழ்ந்த பெரியார் தொண்டரையும் நான் சந்தித்திருக்கிறேன். 

காந்தி படம் எரித்தல், காந்தி பொம்மையை உடைத்தல், நேருவை எதிர்த்தல் உள்ளிட்ட காங்கிரஸ் எதிர்ப்புப் போக்கின் ஊடே, காமராசரை ஆதரித்து பெரியார் எப்படி செயல்பட்டார்? காங்கிரசுக்குள் காமராசர் எதிர்ப்பைப் பலகீனப்படுத்த, தம் கட்சியில் ஆர்வமிருந்தவர்களை காங்கிரசில் சேர ஏன் அவர் அனுமதித்தார்?

தான் வாழும் சமூகத்தில் உள்ள கட்சிகளிடம் இருக்கும் முரண்பாடுகளைச் சரியாக அடையாளம் கண்டு, சமூக நலனைக் கருத்தில் கொண்டு, அந்த முரண்பாடுகளுக்குள் நுழைந்து,சமூக நலனுக்கு எதிரான விசைகளைப்(Forces)  பலகீனப்படுத்தும் போக்கில், தனக்குள்ள ஆற்றலை  physically & mentally independent- ஆக இருந்தது வரையில், செலவிட்டவர் பெரியார் என்பதே மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடையாகும்.

இதில் வியப்பென்னவென்றால், இன்று உணர்வுபூர்வமாக பெரியாரை இழிவுபடுத்தி இந்துத்வா கூடாரங்களில் வெளிப்படும் போக்குகள், 1949 முதல் 1967 வரை அண்ணாவைத் தவிர்த்த மற்ற தி.மு.க தலைவர்களும், 'முரசொலி' உள்ளிட்ட இதழ்களும் வெளிப்படுத்திய உணர்வுபூர்வ போக்குகளுடன் ஒப்பிடத்தக்கன ஆகும்.  

கட்சிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகளைச் சரியாகக் கணித்து,சமூக நலனுக்கு எதிரான சுயநல விசைகளைப் பலகீனப்படுத்துவதற்குப் பதிலாக, எதிர் நிலைப்பாட்டில் உள்ள கட்சியில் உள்ள அனைவரையுமே எதிரிகள் போல் பாவித்து, உணர்வுபூர்வமாக இழிவுபடுத்தும் போக்கு தமிழ்நாட்டில் தி.மு.க, தி.க ஆகிய இரண்டு கட்சிகளிடையே மட்டுமே 1949 முதல் 1967 வரை வெளிப்பட்டது.

1944க்கு முன் இருந்த தமிழ்நாட்டில் பொதுவாழ்வில், குறிப்பாக படித்த்வர்கள் மத்தியில், எந்த சாதி,மதம்,கட்சியாக இருந்தாலும், அறிவுபூர்வ போக்குகளே மதிக்கப்பட்டன. இன்றுள்ளது போல, தாம் எதிர்க்கும் கட்சிகளின் தலைவர்களை இழிவுபடுத்தும் பேச்சுக்கும், எழுத்துக்கும் அன்று மதிப்பில்லாத நிலையே இருந்தது. 1944இல் திராவிடர் கழகம் உருவான பின் தான், பெரியாருக்கும் அண்ணதுரைக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் உணர்வுபூர்வ போக்கில் முளை விட்டன. 1949இல் தி.மு.க உருவானபின், எதிர் நிலைப்பாடுகளில் இருந்த தி.கவும், தி.மு.க.வும்  ஒருவரையொருவர்  இழிவு படுத்தும் பேச்சும், எழுத்தும் செல்வாக்குடன் வளர்ந்த,. அந்த பின்னணியில் பாரதிதாசனுக்கும் அண்ணாதுரைக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளும், பாரதிதாசனுக்கும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவிற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளும், அந்த செல்வாக்கில் சிக்கியே வெளிப்பட்டன.

அந்த உணர்வுபூர்வ நோயில் தி.மு.கவின் இடத்தை, இந்துத்வா கட்சிகள் பிடித்துள்ளதா? என்ற கேள்வி எழும் வகையில் சில தலைவர்கள் பேசியும் எழுதியும் வருகிறார்கள். அதாவது 1944இல் முளைவிட்டு வளர்ந்த உணர்வுபூர்வ போக்கில் பிராமணர்களும் சிக்கி பலியாகிக் கொண்டிருக்கிறார்களா? என்ற ஆய்வும் அவசியமாகிவிட்டது, என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

“சமூக செயல்நெறி மதகுகள்(Social Functional Checks) ஆனவை, திராவிட மனநோயாளித்தன செயல்நுட்பத்தில் சிக்கி, பலிகடா ஆனதன் 'பலன்களை' பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி, அனைத்து சாதி, மதத்தினரும் 'அனுபவித்து வருகின்றனர்.

உதாரணமாக, 1967க்கு முன், பிராமணக் குடும்பங்களில் 'தற்கொலைகள்', கூட்டுக் குடும்பம் சிதைவு, கணவன் மனைவிகளுக்கிடையே வன்முறை, விவாகரத்து, நீதிமன்ற வழக்கு போன்றவைகள் கேள்விப்பட்டதில்லை. இது போன்ற 'சமூக வியாதிகளில்' பிராமாணரல்லாதோர் மட்டுமே சிக்கி, அவதிப்படுவதாக, பெரியாரும், பெரியார் வழியை ஏற்று செயல்பட்ட, என்னைப் போன்றோரும் பிரச்சாரம் செய்தோம். இன்று இது போன்ற  'சமூக வியாதிகளில்' பிராமணக் குடும்பங்களும் சிக்கி சீரழிவதைக் கேள்விப்படுகிறோம்.” (’திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:(Social Functional Checks) சமூக‌ செயல்நெறி மதகுகள் (2)  : பலிகடாவின் 'பலன்கள்' : பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி’; http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html)

திராவிடர் கழக வரலாற்றில், 'விடுதலை' நாளிதழ் அசிரியராக கி.வீரமணி ஆன போது," ''இந்து' பத்திரிக்கை எந்தப் பிரச்சினையிலும் என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ, அதை எதிர்த்து 'விடுதலை'யில் எழுதினாலே போதும்' என்று 'பெரியார்' ஈ.வெ.ரா அறிவுரை வழங்கியதாக 'அடிக்கடி' வீரமணி தெரிவித்த சான்றுகள் ஒலிநாடாக்களாகவும், அந்த உரை வெளிவந்த 'விடுதலை' நாளிதழ்களிலும் உள்ளன. இன்று 'இந்துத்வா'வை எதிர்த்து 'இந்து' எழுதும்போது, இந்துத்வாவை ஆதரித்து 'விடுதலை' இதழில் வெளிவராதது ஏன்? பெரியாரின் ஆலோசனை தவறா? அல்லது கால ஓட்டத்தில் அது 'காலத்திற்கு ஒவ்வாத' (anachronistic) ஆலோசனை ஆகி விட்டதா? என்ற விவாதங்கள் இனியும் தாமதானால், 'பெரியார் கட்சிகளும்' நிகழ்காலத்திற்கு ஒவ்வாமல் உதிர்ந்து விடும் அபாயம் இருக்கிறது என்பது என் கருத்தாகும். பெரியார் கட்சிகளிலும், இந்துத்வா கட்சிகளிலும் உணர்வுபூர்வ போக்குகளும், அறிவுபூர்வ போக்குகளும், சுயநலக் கள்வர்களும், சமூக அக்கறையுள்ள நேர்மையாளர்களும் கலந்து, குழம்பிய நிலையில், திருப்பு முனைக் கட்டத்தில் தமிழ்நாடு இருக்கிறது என்பதும் என் கணிப்பாகும்.

தமிழ், தமிழர், தமிழ்நாடு மீட்சிக்கு வழிவகுக்கும் சமூக தளவிளவான(social polarization)  அந்த திருப்புமுனை முளைவிட்டு வளரத் தொடங்கியுள்ளதற்கான 'சிக்னல்கள்' (signals) ந்டுத்தர, கீழ்நடுத்தர, ஏழை மக்களிடம் ஒப்பீட்டளவில் அதிகமாகவும், அதற்கு மேல்மட்டங்களில் குறைவாகவும் வெளிப்பட்டுள்ளது என்பது எனது சமூகக்கள ' social field observation ' ஆகும். "தமிழ்நாடு நல்ல திசையில் பயணிக்க வாய்ப்புள்ளதற்கான அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன." என்பது பற்றியும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (’தமிழ்நாட்டு சமூக நோயும், தீர்வும்’; https://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_23.html)

உணர்வுபூர்வ பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் பிராமண்ராக இருந்தாலும், பிராமணரல்லாதோராக இருந்தாலும், அவர்களின் அறிவுப்புலமை மதிக்கத் தக்க வகையில் இருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.('தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியும், சமூக நோய்கள் வளர்ச்சியும்'; http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html)

எந்த மொழியையும் எவர் மீதும் திணிப்பது தவறு என்பது சரியே. சீனாவின் 'அதி வேக பொருளாதார வளர்ச்சி, ஆதிக்கம் காரணமாக, ஐரோப்பிய நாடுகளில்  விரும்பி சீன மொழியைப் படிப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.  தி.மு.க அங்கம் வகித்த மத்திய ஆட்சியில்,ஏற்கனவே இருந்த சமஸ்கிருத மொழியை எவராவது எதிர்த்தார்களா? அதை அகற்றி, அதன் இடத்தில் ஜெர்மன் மொழியைத் திணித்த போது, தமிழ்நாட்டில் எவராவது எதிர்த்தார்களா? இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, பி.கே திரைப்பட எதிர்ப்பு விசைகள்(Forces)  இந்துத்வா கூடாரத்தில் மோடி ஆதரவு விசைகளா? எதிர்ப்பு விசைகளா? 

1960களில் நான் உயர்நிலைப் பள்ளியில் படித்த போது இந்தி விருப்பப் பாடமாக இருந்தது. தேர்ச்சிக்கு அந்த மதிப்பெண்கள் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனாலும் அப்போதே (எனது 'டியூசன்' ஆசிரியர் காரணமாக) நான் தி.மு.க ஆதரவில் 'இந்தி எதிர்ப்பு உணர்வில்' இருந்ததால், இந்தி படிக்கவில்லை என்பதற்கு இப்போது வருத்தப்படுகிறேன். எனது இசை ஆய்வு தொடர்பாக, இப்போது  சமஸ்கிருதம் படிக்கத் தொடங்கியுள்ளேன். குறைந்தது அடிப்படைக் கல்வியை தாய்மொழியில் கற்று, இயன்ற வரை இந்தி, சமஸ்கிருதம் மற்றும் சீனம்,ஜப்பானிய உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளையும் படிக்க ஊக்குவிப்பது தான் தமிழ்நாட்டில் அறிவுப் புலமையை மீட்கும் வழி என்பது என் கருத்து. மாறாக 'இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு' போன்ற உணர்வுபோதையில் மாணவர்களைச் சிக்க வைத்து, தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் புலமையற்ற 'உணர்வுபூர்வ' கூட்டத்தை வளர்ப்பது,  அதற்கு எதிர்விளைவையே ஏற்படுத்தி, இன்று குக்கிராமத்திலும் 2 வயது முடிந்த குழந்தைகளை ஆங்கில வழி விளையாட்டுப் பள்ளியில் சேர்க்கும் நோய் அதி வேகமாக அதிகரித்துள்ளது. இந்த புரிதலுடன், விருப்பமாக படிப்பதைக் கெடுக்காமல், எந்த மொழித் திணிப்பையும் எதிர்க்கலாம் என்பதே என் கருத்து.

நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா சாதிகளிலும், மதங்களிலும், கட்சிகளிலும் இருப்பார்கள். ஒரு சமூகத்தின் தரத்தைப் பொறுத்தே, சுயநலக் கள்வர்களுக்கு அந்தந்த சாதியில், மதத்தில், கட்சியில் செல்வாக்கு இருக்கும்.
கட்சிகளில் உள்ள முரண்பாடுகளை சுயநல நோக்கிற்கு பயன்படுத்தவும் முடியும். அதாவது வெளியில் ஒரு கட்சி அல்லது கொள்கையாளராக தமது பேச்சில், எழுத்தில் வெளிப்படுத்திக் கொண்டு, வெளியில் தெரியாதவாறு தமது சுயநலனுக்காக வெளியில் தாம் எதிர்ப்பவர்கள் மூலம் இரகசிய பலன்கள் அனுபவிப்பவர்கள் அப்படிப்பட்டவர்களே. அத்தகையோர் 'முற்போக்கு, பிற்போக்கு' உள்ளிட்டு அனைத்து கட்சிகளிலும் இருப்பர். 

பொதுவாழ்வில் உணர்வுபூர்வ போக்குகள் ஆதிக்க நிலையில் இருப்பது, அவ்வாறு முரண்பாடுகளை சுயநல நோக்கில் பயன்படுத்துவதை எளிதாக்கும். எந்த ஒரு மனிதரையும், பிரச்சினையையும் திறந்த மனதோடு அணுகாமல், 'உணர்வு பூர்வமாக' அவர் சார்ந்த கட்சி அல்லது நிலைப்பாடு தமக்கு எதிராக இருப்பதால், வெறுப்புடனும், கோபத்துடனும் அணுகும் போக்கு உள்ளவரை, எந்தக் கட்சியிலும் உள்ள சுயநலக் கள்வர்களுக்குக் கொண்டாட்டம் தான்.

'பெரியார்' ஈ.வெ.ரா பிராமண அமைப்பில் உரையாற்றியது போல, எதிரெதிர் நிலைப்பாடுகளில் உள்ளவர்களிடையே அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிப்பது அந்த தவறைக் குறைக்கும். தமது நிலைப்பாட்டில் உணர்வுபூர்வ போதையில், கடவுளால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளைப் போல, தமது நிலைப்பாட்டிற்கு எதிரானவர்களை, 'தமிழ்த் துரோகி, தமிழ் இனத் துரோகி' என்று 'தீர்ப்புகள்' வழங்கும் போக்கு அந்த தவறை உரமூட்டி வளர்க்கும்.

அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிப்பது, தமிழ்நாட்டு கட்சிகளில் உள்ள முரண்பாடுகளில் நுழைந்து, சமூகத்திற்குக் கேடான சுயநல விசைகளைப் பலகீனப்படுத்துவது, மனித உறவுகளில் லாபநட்டம் பார்க்கும் சமுகக் கள்வர்கள் (திருக்குறள் 813) 'பெரியார், இந்துத்வா' உள்ளிட்டு எந்த கூடாரங்களில் இருந்தாலும் அவர்களை எனது சமூக வட்டத்தில் அனுமதிக்க மறுப்பது போன்ற வகையில், 'இமேஜ்' வளையத்தில் சிக்காமல் பயணிக்கிறேன். தாம் பணியாற்றுமிடத்தில், வாழுமிடத்தில் நேர்மையாகவும், இயன்றவரை தொண்டு செய்து வாழ்பவர்களைத் தேடி நட்பு கொள்கிறேன். அங்கெல்லாம் 'சுயநலவாதிகளாக' வாழ்ந்து கொண்டு, பொது வாழ்வில் 'சாதி ஒழிப்பு, மத ஒழிப்பு, ஆன்மீகம்' என்று 'செல்வாக்குடன்' வலம் வந்தாலும், அவர்களை, இயன்றவரை, ஒதுக்கி வாழ்கிறேன். நான் சந்திக்கும் மனிதர்களிடம், இயன்றவரையில், எனக்கு 'முன்மாதிரியாக' புலப்படும் நற்பண்புகளை , அகவயப்படுத்தி, அகந்தை, ஆணவம் போன்ற மலங்களிலிருந்து விடுபடும் இயக்கப்(dynamic)  போக்கில் வாழ்கிறேன்.

என்னையறிந்தவர்கள் என்மேல் பரிதாப உணர்வுக்கு உள்ளாகும் வகையிலான இழப்புகளை நான், சந்தித்திருந்தாலும், அவையெல்லாம் எனது வாழ்வுக்கு அரிய, மதிப்பு மிக்க ஆய்வு உள்ளீடுகளாக(inputs)  மாறி, நான் மனநிறைவுடன், ஆய்வுத் திட்டங்களுடனும்(R & D projects) ,  வாழ்வதும் அவர்களில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ், தமிழர், தமிழ்நாடு மீட்சி தொடர்பான எனது பங்களிப்புடன் கூடிய நம்பிக்கையானது நிஜமா? பகற்கனவா? என்பது வரும் வருடங்களில் தெரிந்து விடும்

No comments:

Post a Comment