Saturday, April 11, 2015



தாலி அகற்றும் போராட்டம் : எதிரெதிர் அமைப்புகளின் தலைவர்களுக்கு உள்ள சமூகப் பொறுப்பு

 

பெரியார் ஈ.வெ.ரா தான் சாகும் வரை மேற்கொண்ட (சில வருடங்கள் சிறைத் தண்டனைகள் பெறும் அளவுக்கு கூட ) போராட்டங்கள் எல்லாம் பொதுமக்களுக்கு பாதிப்பின்றியும், பொதுச் சொத்துக்களுக்கு சேதமின்றியும் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். அவர் மறைந்த பின், பெரியார் அமைப்புகள் மேற்கொண்ட போராட்டங்கள் 'அந்த பெரியார் ஈ.வெ.ரா' வழியில் நடந்தனவா? அல்லது திசை மாறி, அவர் 'சண்டித்தனம்' என்று கண்டித்த வகைகளில் நடந்தனவா? என்பது ஆய்விற்குரியதாகும்.

“ ஏப்ரல் 14ஆம் தேதி திராவிடர் கழகம் சார்பில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், தாலி அகற்றும் போராட்டம் நடத்தப்படும் என கி.வீரமணி அறிவித்திருந்தார்.இந்த நிகழ்ச்சி, தேவையில்லாத பிரச்னைகளை ஏற்படுத்தும் என இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 10 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெறும் நாளான ஏப்ரல் 14ஆம் தேதி இந்து அமைப்புகளின் பெண்களை திரட்டி, நூதன முறையில் எதிர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ஆயிரக்கணக்கான பெண்களை திரட்டி,  பெரியார் திடல் முன்பு ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.”

மேலேக்குறிப்பிட்ட எதிரெதிர் போராட்டங்கள், பொதுமக்களுக்கு பாதிப்பின்றியும், பொதுச் சொத்துக்களுக்கு சேதமின்றியும் நடந்தால் நல்லது.

தமிழ்நாட்டில் உணர்வுபூர்வமான போராட்டங்கள் நடைபெறும்போது, மூடிய கடைகளை உடைத்து பொருட்களைத் திருடும் சம்பவங்கள் நடந்து வந்துள்ளன. அந்த திருடர்களை விட 'அதிக புத்திசாலியான' திருடர்கள், அப்போது நடக்கும் வன்முறைகளை, தமது 'அரசியல் மூலதனங்களாக' மாற்றி, 'பொதுவாழ்வு திருடர்களாக' வளரும் போக்கும் உச்சக்கட்டத்தில் இருக்கும் காலக்கட்டம் இது. அந்த இரண்டு வகை திருடர்களையும் ஊக்குவிக்கும் வகையில், மேலேக்குறிப்பிட்ட எதிரெதிர் போராட்டங்கள் அமைந்து விடாதவாறு பார்த்துக் கொள்வது என்பது, அந்த எதிரெதிர் அமைப்புகளின் தலைவர்களுக்கு உள்ள சமூகப் பொறுப்பு ஆகும்.

ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டு, அது தொடர்பாக உரிய விசாரணை நடந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதுடன், அது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறுவதைத் தடுக்க, இயற்கை வளங்களை இது வரை கொள்ளையடித்து வந்தவர்களை உரிய விசாரணைக்குட்படுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுக்க வேண்டிய, 'அசாதாரண சூழலில்', மேலேக் குறிப்பிட்ட தாலி அகற்றும் போராட்டம், வாபஸ் பெறப்படாமல், ஒத்தி வைப்பது சரியா? இல்லையா? என்ற கேள்வியை, அந்த போராட்டத்தை ஆதரிப்பவர்கள் பார்வைக்கு முன்வைக்கிறேன்.

" 'கால தேச வர்த்தமான' மாற்றத்திற்கு தம்மை 'சமூகப் பொறுப்புடன்' உட்படுத்தி, அறிவுபூர்வமாக பயணிக்காமல், உணர்வுபூர்வமாக பயணிப்பவர்கள் எல்லாம் கால ஓட்டத்தில் உதிர்ந்து போவார்கள் என்று 'தோழர் ஈ.வெ.ரா'  குறிப்பிட்டிருக்கிறார்." என்பதை ஏற்கனவே பார்த்தோம். (refer post dt. March 22, 2015;’ தேவநேய பாவாணர், பெரியார் ஈ.வெ.ரா போன்றவர்களை 'கேலிக்குள்ளாக்கும்' செயல்நுட்பம்?’ ) பெரியார் ஈ.வெ.ரா மறைவிற்குப்பின் வெளிவந்துள்ள அறிவியல் ஆய்வுகளை அறிந்து, அந்த வகையில் தாலி பற்றியும், பெண்ணடிமை பற்றியும், அவர்  வெளிப்படுத்திய கருத்துக்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியமில்லையா?
 
அத்தகைய ஆய்வுகள் பற்றி கவலைப்படாமல், 'அறிவுக்கண்களை' மூடி, உணர்வுமயமாக பயணிப்பது தற்கொலையாகாதா? 'இந்துத்வா' அரங்கில் உணர்வுபூர்வமான போக்குகளின் ஊடே, அறிவுபூர்வ விவாதங்கள், (குறிப்பாக புராணங்கள், இலக்கியங்கள் பற்றி பெரியார் ஈ.வெ.ரா வெளிப்படுத்திய கேள்விகள் உள்ளிட்டு,)  நடைபெற்று வருவதைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், 

ஆர்.எஸ்.எஸ்  அதிகாரபூர்வ இதழ் http://www.organiser.org/
இணையத்தில் ராஜிவ் மல்ஹோத்ரா http://rajivmalhotra.com/

மற்றும் கீழே குறிப்பிட்டுள்ளது போன்ற இந்துத்வா ஆதரவாளர்களின் கட்டுரைகளை படிக்கலாம்.

http://swarajyamag.com/politics/getting-rid-of-the-caste-disease/

மேலே குறிப்பிட்டவை தொடர்பாக, பெரியார் இயக்க ஏடுகளில் ஏதேனும் வெளிவந்திருந்தால், அதை எனது பார்வைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றியுடன் அவற்றை திறந்த மனதுடன் படித்து, எனது கருத்துக்களை நெறிப்படுத்திக் கொள்ள அவை உதவும்.

No comments:

Post a Comment