Wednesday, April 15, 2015



தாலி அகற்றும் போராட்டம்:

நடந்ததும், நடக்க வேண்டியதும்

தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை காவல் துறை பிறப்பித்திருந்த தடையை, உயர்நீதிமன்ற நீதிபதி தடை செய்து, நிகழ்ச்சிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு உத்திரவிட்டிருந்தார். நிகழ்ச்சியை முன்கூட்டியே நடத்தியபின், உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் தனி நீதிபதியின் முடிவுக்கு இடைக்காலத் தடை செய்ய‌, காவல் துறையின் தடைக்கு மீண்டும் உயிர் வந்தது. உடனே நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அமைதியாக கலைந்து சென்றார்கள். காவல்துறையின் தடையை நீக்கிய நீதியரசர் அரிபரந்தாமன் விசாரணையின்போது "இது ஜனநாயக நாடு. கோட்சேக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதற்கும் உரிமை இருக்கிறது" என்று கருத்து தெரிவிததாக இணையத்தில் தகவல் வெளிப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோட்சே எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு உரிய கருத்து இதுவாகும். 

அந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்பாக, இந்து மக்கள் கட்சியானது கோவில்களில் தாலி தொடர்பான சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்து, நிறைய பெண்கள் கலந்து கொண்ட காட்சியானது, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. எதிர்ப்பைக் காட்ட இது போன்ற வழிகள் பாராட்டுக்குரியவையே ஆகும்.

மாறாக  “இந்த தாலி அகற்றும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பூந்தமல்லியில் நள்ளிரவில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியினர் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கண்ணாடிகள் உடைந்தன. இந்த தாக்குதல் சம்வத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.”
(http://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-house-seized-against-thali-removal-festival-224693.html

இது போன்ற நிகழ்ச்சிகள் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியவையாகும். அதே போல், சென்னை பெரியார் திடலை நோக்கி, நாட்டு வெடிகுண்டுகளுடன் ஆட்டோவில் வந்த சிவசேனா கட்சியினர், அந்த வெடிகுண்டுகளைப் பயன்படுத்தும்முன்,  காவல்துறை கைது செய்தது பாராட்டுக்குரியதாகும். அவர்களின் 'மூளையாக' செயல்பட்டவர்களையும் கைது செய்வது அவசியமாகும்.

நகசலைட்டுகள், அதன்பின் தனித்தமிழ்நாடு குழுவினர் தொட்ங்கிய வெடிகுண்டு, வன்முறை கலாச்சாரத்திலிருந்து கடந்த பல வருடங்களாக தமிழ்நாடு விடுதலை பெற்று,  தற்போது முஸ்லீம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் சிக்கியுள்ளது. கூடுதலாக இந்துத்வா கட்சிகளிலும் வெடிகுண்டு கலாச்சாரம் முளைவிட்டிருப்பது அபாய எச்சரிக்கையாகும்.

கச்சத்தீவு, காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகளின் பின்புலத்தில் தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறும் அபாயம் இருப்பதை அது உணர்த்துகிறது.( “புறக்கணிப்பின் அடிப்படையில், துவக்கத்தில், நேர்மையான உரிமைப் போராட்டமாக துவங்கும் 'தனி நாடு' முயற்சிகள், ஆயுதப் போராட்ட வடிவமாக வளரும்போது, உலக ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சி வலையில் சிக்கும் ஆபத்தும் இருக்கிறது.”; refer post dt. November 26, 2013; ‘தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (3) 'தனி நாடு' உண்மையில் தனி நாடா?’; - சீனா,அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா,பாகிஸ்தான், ஈரான், லிபியா,போன்ற நாடுகளின் துணையுடன் இந்தியாவும் பங்களிப்பு வழங்கி, விடுதலைப் புலிகளின் 'தனிஈழ' முயற்சியானது சாண் ஏறி,  முழம் சறுக்கி, முள்ளிவாய்க்காலில் மரணமடைந்தது எவ்வாறு என்பதைத் தெரிந்து கொள்ள: ‘How Sri Lanka Won the War’- http://thediplomat.com/2015/04/how-sri-lanka-won-the-war/ )

தமிழ்நாட்டின் அமைதியையும், வளர்ச்சியையும் விரும்புபவர்கள் எல்லாம் சாதி, மத, கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, ஒன்றுபட்டு இந்த அபாயத்தை முறியடித்தாக வேண்டும்.

அடுத்து கீழ்வரும் செய்தி ஆய்வுக்குரியதாகும்.

" 10 மணிக்கு நிகழ்ச்சி நடத்துவதாக அறிவித்துவிட்டு, முன்கூட்டியே காலை 7 மணிக்கு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். திருட்டுத்தனமாக நடைபெறும் தாலிகட்டும் திருமணங்களைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், திருட்டுத்தனமாக தாலி அகற்றும் நிகழ்ச்சியை இப்போதுதான் கேள்விப்படுகிறோம். இந்த நிகழ்ச்சியை நடத்திய கி.வீரமணிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்" என்றார் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா. ( http://www.dhinasari.com/latest-news/)

உயர்நீதி மன்ற தனி நீதிபதி உத்திரவின்படி, காவல் துறை பாதுகாப்புடன் நடந்த நிகழ்ச்சியை 'திருட்டுத்தனமாக தாலி அகற்றும் நிகழ்ச்சி' என்று குறிப்பிடுவது சரியா? அறிவுபூர்வமாக எவ்வாறு சரி என்று விளக்கி தெரிவித்தால், அந்த விளக்கத்தை இங்கும் பதிவு செய்யலாம். அதுவரை, உணர்ச்சிபூர்வ போக்கில், அறிவுபூர்வ பார்வையை இழந்து வெளிப்படும் கருத்துக்கு, இது ஒரு உதாரணமாகவே இருக்கும்.

தாலி அகற்றும் நிகழ்ச்சிகளானது கடந்த பல வருடங்களாக தி.கவில் நடந்து வருவதாக, கீழ்வரும் செய்தியில் கி.வீரமணி தெரிவித்துள்ள தகவல் ரியே. கூடுதலாக அந்நிகழ்ச்சிக்கு வெளிப்பட்டுள்ள எதிர்ப்பானது, அத ற்கு ஊடக முக்கியத்துவம் (limelight) வழங்கியுள்ளது என்றும், அது தொடர்பான விரிவான விவாதத்திற்கு (threadbare discussion)  வழி வகுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளது வரவேற்க வேண்டிய ஒன்றாகும். Veeramani said thali-removal functions were being conducted by the DK for several years in  many places, but the protests by the opponents had brought the event to the limelight and paved way for a threadbare discussion on the issue, which by by itself was a victory for the DK. http://www.newindianexpress.com/cities/chennai/Opponents-Helped-Publicise-Events-DK/2015/04/14/article2763368.ece
இந்துத்வா ஆதரவாளர்களில் திறந்த மனதும், அறிவு நேர்மையும் உடையவர்கள் கி.வீரமணி முன்வைத்துள்ள விரிவான விவாதத்தில் ஈடுபடுவதே நல்லது. 


தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு தொடர்பான பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் கருத்துக்களை, அவர் மறைவிற்குப் பின் வெளிவந்துள்ள ஆய்வுமுடிவுகளின் அடிப்படையில் மறுஆய்வு செய்வதன் தொடக்கமாக, 'தாலி அகற்றும்' நிகழ்ச்சி தொடர்பான விவாதம் அமைய வேண்டும். 

பெரியார் காங்கிரஸ் காலம், காங்கிரசிலிருந்து 1925இல் வெளியேறி 1944இல் திராவிடர் கழகம் தொடங்குவதற்கு முந்தைய காலம், 1944 முதல் 1949இல் தி.மு.க தொடங்கப்பட்ட காலம், பெரியார் ஈ.வெ.ராவை அவமதித்து, ராஜாஜி ஆதரவுடன் 1965இல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம், 1967இல் தி.மு.க ஆட்சிடைப் பிடித்தது முதல் அவர் மரணமடைந்த காலம் என்று பிரித்து அணுகாமல், பின்புலம் பற்றிய தெளிவின்றி, பெரியார் ஈ.வெ.ராவின் பேச்சையும், எழுத்தையும் இந்துத்வா அதரவாளர்கள் 'உணர்ச்சிபூர்வமாக' கண்டிக்கும் போக்கிற்கும், 1949 முதல் 1967 வரை பெரியார் ஈ.வெ.ராவை தி.மு.க கடுமையாகக் கண்டித்த போக்கிற்கும்  உள்ள ஒற்றுமைகள் குறித்து ஏற்கனவே பார்த்தோம். காந்தி தென்னாப்பிரிக்காவில் துவக்க காலத்தில் 'கறுப்பர்களுக்கு'எதிராக வெளிப்படுத்திய கருத்துக்கள் காரணமாக, இன்று தென்னாப்பிரிக்காவில் காந்தி சிலையை சேதப்படுத்தும் செய்திகள் வெளிவந்துள்ளன. இத்தகைய உணர்ச்சிபூர்வ போக்குகளை ஆதரிக்காமல், அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிப்பதே தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் நல்லதாகும்.

இந்துத்வா ஆதரவு கல்லூரி மாணவர்களிடையே கி.வீரமணி போன்றோரும், பெரியார் ஆதரவு கல்லூரி மாணவர்களிடையே இராம.கோபாலன் போன்றோரும் 'பிறர் பார்வை'(Empathy) அணுகுமுறையில், அறிவுபூர்வமாக உரையாற்றி, விவாதிக்கும் நிகழ்ச்சிகள் தாமதமின்றி தமிழ்நாட்டில் நடைபெறுவது என்பது,  வன்முறைப் போக்குகளை செயலிழக்க வைக்கும். எனது ஆய்வுப்பணிகளின் ஊடே, அது போன்ற நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பாளராக(Moderator),  நான் செயல்படுவது பற்றியும் பரிசீலித்து வருகிறேன். இது தொடர்பாக, எனது சமூக வட்டத்தில் உள்ள பெரியார் ஆதரவாளர்களும், இந்துத்வா ஆதரவாளர்களும் உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

பொதுமக்களுக்கும், பொது சொத்துகளுக்கும் சேதம் விளைவிப்போரை 'நம்மாளு' என்று ஆதரிக்காமல், கண்டித்து ஒதுக்குவது நல்லது. அவ்வாறு ஒதுக்குபவர்களே தமிழ்நாட்டில் சாதாரண மக்களிடம் நன்மதிப்பு பெற முடியும். மக்களின் வெறுப்புக்கும், கோபத்திற்கும் உள்ளாகும் எந்த கட்சியும் மரணமடைவதை எவரும் தடுக்க முடியாது.

நேயர் மடல்:

ஐயன்மீர்! தாலி அகற்றும் விழா பற்றிய எனது சில ஐயங்கள் இவை.

அம்பேத்கர் அவர்கட்கும், 'தாலி'க்கும், மாட்டிறைச்சி விருந்திற்கும் என்ன தொடர்பு?
தாலி என்பது திருமண தினத்தன்று நடைபெறும் கணவன் மனைவிக்கிடையேயான ஒரு ஒப்பந்த நிகழ்வு. அதை அகற்றும்போது இருவரும் சேர்ந்து வர வேண்டாமோ? பெண்கள் மட்டும் மேடையில் வந்து தாலிகளை அகற்றுவது  நாடகமாகத் தோன்றுகிறதே. 
 மேடையில் அகற்றிவிட்டு வீட்டில் அணிந்து கொள்வார்களோ? 
 இந்தப் பெண்கள், தங்கள் கணவர்களுக்கும் தாலி கட்டியிருந்தால், அது ஆண் - பெண் சமத்துவத்தைக் காட்டுவதாக அமைந்திருக்குமல்லவா? (எனது மனைவியோ, மாமனாரோ வாங்கிக் கொடுத்தால் தாலி அணிந்துகொள்ள நான் தயார்)
இதற்குப் பல இந்து அமைப்புகள் எதிர்ப்புகளைத் தெரிவித்துவந்தனவாம். இந்தியாவின் வடக்கு, கிழக்கு, மேற்கு மாநில இந்துக்கள் தாலி கட்டிக்கொள்வதில்லையே.  அவர்களைத் தாலி கட்டிக்கொள்ளச் சொல்வார்களா இவர்கள்?
ஆனால், பெரும்பாலான தமிழ்க் கிறித்துவர்கள் கூடத் தாலி கட்டிக்கொள்கிறார்கள். ஆதலால், சங்கம் மருவிய காலந்தொட்டு தாலி என்பது தமிழ்ப் பண்பாட்டின் சின்னமாக விளங்கி வருகிறது எனலாம்.

அப்படியானால்,  திராவிடர்கள் தமிழ்ப் பண்பாட்டின்  எதிரிகளா?

தமிழ்ப் பண்பாட்டோடு, மாற்றுக் கருத்துக்களைத் தந்தீர்களானால் ஏற்றுக் கொள்கிறேன், ஐயந் தீர்த்துக் கொள்கிறேன்,

நன்றி, வணக்கம்
 அன்பன்
 மா. அருச்சுனமணி
சிட்னி, ஆத்திரேலியா.

No comments:

Post a Comment