Wednesday, April 29, 2015



'சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்பு’ க் கருத்தரங்கம் : 

விபுலானந்தர் படத்திறப்பு சரியா?


சென்னையில் கடந்த 25.04.2015 &  26.04.2015 தேதிகளில், 'சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்' நடந்துள்ளது. அதில் படத்திறப்புகளில் விபுலானந்த அடிகள் படம் இடம் பெற்றது என் கவனத்தை ஈர்த்தது. தமிழிசை தொடர்பான நிகழ்ச்சிகளில் அவர் படம் இடம் பெறுவதை என்னால் விளங்கிக் கொள்ள முடியும். ஏனெனில் இசை தொடர்பான இயற்பியல் விதிகள் அடிப்படையில், நரம்பு கருவிகளில் எழும் இசைச்சுர ஒலி அதிர்வு எண்ணை முதலில் கணக்கிட்டு காண்பித்தவர் அவர்; சிற்சில குறைபாடுகள் அக்கணக்கீட்டில் இருந்தாலும்.

ஆனால் தனது தமிழ் இசை ஆய்வுககுக்கு, பழந்தமிழ் ஆதாரங்களைப் புறக்கணித்து, வடமொழி நூல்கள் அடிப்படையில் தனது ஆய்வுகளை மேற்கொண்டவர் விபுலானந்த அடிகள் ஆவார். அதனை உரிய சான்றுகளுடன் எனது 'தமிழ் இசையின் இயற்பியல்' (Physics of Tamil Music)  என்ற தலைப்பிலான‌ முனைவர் பட்ட ஆய்வில் (1996) வெளிப்படுத்தியுள்ளேன். பின்னர் 'தமிழ் இசையியல் புதிய கண்டுபிடிப்புகள்' (2009; சேகர் பதிப்பகம், சென்னை) என்ற நூலிலும், அது வெளிவந்துள்ளது. 

‘ச, ரி, க, ம, ப , த, நி’ எனும் 7 இசைச்சுர எழுத்துக்கள், சமஸ்கிருதத்தில் 'ஷட்ஜம், ரிஷபம்,காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம்' என்ற சுரப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

‘ச, ரி, க, ம, ப , த, நி’ எனும் 7 இசைச்சுர எழுத்துக்கள், தமிழில் சுரப்பெயர்கள் 'குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்' என்று அழைக்கப்பட்டதற்கு, பழந்தமிழ் இலக்கியங்களில் பல சான்றுகள் உள்ளன. அதனை, தமிழ் இசை ஆய்வுகளில்  முன்னோடியான ஆபிரகாம் பண்டிதர்,  1917 இல் வெளிவந்த, தனது 'கருணாமிர்த சாகரம்' என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார். அதில் பிரமிக்க வைக்கும் வகையில்,  'ச, ரி, க, ம, ப, த, நி' தமிழ் இசைக்கே உரியவை என்று நிறுவி, மேலேக்குறிப்பிட்ட சமஸ்கிருத சுரப்பெயர்கள், சமஸ்கிருத இலக்கணப்படி, 7 சுர எழுத்துக்களை குறிக்காது என்பதற்கு, திருவையாறு சமஸ்கிருத பிராமண புலமையாளரிடமே அதற்கான சான்றினை பெற்று, அந்நூலில் வெளியிட்டுள்ளார். (பக்கம் 527, கருணாமிர்த சாகரம், ஆபிரகாம் பண்டிதர், 1917)

இதில் வியப்பென்னவென்றால், தனது தமிழ் இசை ஆய்வுகளை 'சமஸ்கிருத வல்லாண்மை எதிர்ப்பு' என்ற திசையில் அவர் மேற்கொள்ளவில்லை. உரிய சான்றுகளின் அடிப்படையில், ‘உண்மையை நிலைநாட்டல்’ என்ற திசையில் அவர் தமது ஆய்வுகளை மேற்கொண்டார். தமது ஆய்வுகளுக்கு ஆதரவளித்த பிராமணர்களையும், நன்றியுடன், தமது நூலில், அவர் நினைவுகூர்ந்துள்ளார். அந்த 'பாவத்திற்காக' மேலேக்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் அவர் படம் இடம் பெறவில்லையா? இல்லையா? என்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்.

கூடுதல் வியப்பு என்னவென்றால், 'சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்க' படத்திறப்புகளில் விபுலானந்த அடிகள் படம் இடம் பெற்றது தான்.

தமிழ் இசைச்சுர பெயர்கள் தொடர்பாக, விபுலானந்த அடிகள் பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள சான்றுகளைப் புறக்கணித்து, 'நாரத சிட்சை', 'சங்கீத ரத்னாகரம்' போன்ற சமஸ்கிருத நூல்களின் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, 'ச' என்ற இசைச்சுரம், தமிழ் இசையில் 'இளி' என்று அழைக்கப்பட்டது என்ற தவறான முடிவை, தனது 'யாழ்நூல்' மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் (வாதத்திற்காக‌) தமிழ் இசையை 'சமஸ்கிருத வல்லாண்மைக்கு' அடிமைப்படுத்தியவர் விபுலானந்த அடிகள் என்று சொன்னால், அது தவறாகுமா? மேலே குறிப்பிட்ட 'சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்' நிகழ்ச்சிகளில் தமிழ்/தமிழ் இசை புலமையாளர்கள் பலர் பங்கேற்றுள்ளதாக தெரிகிறது. (http://thiru2050.blogspot.in/2015/04/blog-post_82.html) அக்கருத்தரங்கில் விபுலானந்தர் படத்திறப்பு என்பது 'சுருதிபேதம்' என்பதை,  அவர்களில் எவரும் அறிந்தார்களா? அதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவித்தார்களா? அல்லது 'நமக்கேன் வம்பு?' என்று வாய்மூடிக் கொண்டார்களா? என்பதெல்லாம் அவரவர் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்.

உணர்ச்சிபூர்வமாக,‌  தவறான திசையில், தமிழ் இசை ஆர்வம் பயணிப்பதால், வரும் கேடுகள் பற்றி, நான் விளக்கியுள்ளதையும், தமிழ்நாட்டில் தமிழிசை புலமையாளர்கள், ஆர்வலர்கள் எவரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. ஒருவேளை, வெறுப்பு அரசியலுக்கு அது துணை செய்யாது, என்பதும் கூட காரணமாக இருக்கலாம்.

விபுலானந்த அடிகள் தனது 'யாழ் நூல்' (1947 )  என்ற புத்தகத்தில், சுமார் 30 வருடங்களுக்கு முன் வெளிவந்திருந்த‌, ஆபிரகாம் பண்டிதரின் 'கருணாமிர்த சாகரம்' ( 1917) என்ற நூலைப் பற்றி  ஏன் குறிப்பிடவில்லை? ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வுகளைக் கணக்கில் கொண்டிருந்தால், விபுலானந்தர் தமது ஆய்வுகளில் வெளிப்படுத்தியுள்ள குறைகளை தவிர்த்திருக்கலாம் என்பதையும் எனது முனைவர் பட்ட ஆய்வில் குறிப்பிட்டுள்ளேன். (பக்கம் 168, 'தமிழ் இசையியல் புதிய கண்டுபிடிப்புகள்' ‍ 2009)

'பிராமண எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு' போன்ற வெறுப்பு அரசியலில் சிக்காமல், ஆபிரகாம் பண்டிதர் உரிய சான்றுகளின் அடிப்படைகளில் உண்மையை நிலைநாட்டுதல் என்ற திசையில், பிராமணர்களிலும், பிராமணரல்லாதாரிலும் இருந்த புலமையாளர்களை தமது ஆய்வு வட்டமாகக் கொண்டு, தமது ஆய்வுகளை மேற்கொண்டார். அதனால் அறிவுபூர்வமான விமர்சனங்களின் ஊடே, அவரின் புலமையும், ஆய்வும் வளர்ந்தன.

அதற்கு மாறாக, வெறுப்பு அரசியலில், புகழ், பாராட்டு போன்றவைகளுக்கு ஏங்கி, உணர்ச்சிபூர்வமான பேச்சுகள் மற்றும் எழுத்துகள் மூலம் பயணிப்பவர்களின் புலமைக்கும், ஆய்வுக்கும் அதுவே கேடாக அமையும்.  

தமிழ்நாட்டில் உரிய புலமையின்றி, 'அறிவுஜீவி'யாக வெளிச்சம் போடும் நோயானது, பிராமணர்களிடமும், பிராமணரல்லாதாரிடமும் வெளிப்பட்டு வருவதை நான் அறிவேன். உணர்ச்சிபூர்வமாக வெறுப்பு அரசியலில் பயணிக்கும் தமிழ் இசை ஆர்வலர்களையும், தமிழ் இசையை இரண்டாம் தரமாக கருதி, கர்நாடக இசை உயர்வு போதையில் பயணிக்கும் பிராமணர்களையும், எனது சமூக வட்டதில் இருந்து அகற்றியே, நான் வாழ்கிறேன்'; 

'அறிவு ஜீவி' பொதுவாழ்வு விபச்சாரிகளையும் ஒதுக்கி வாழ்வது போலவே.  திராவிட மனநோயாளித்தன செயல்நுட்பத்தில் சிக்கி, பலிகடா ஆனதன் 'பலன்களை',  பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி, அனைத்து சாதி, மதத்தினரும் 'அனுபவித்து வருகின்றனர்." என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.( ‘திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:(Social Functional Checks) சமூக செயல்நெறி மதகுகள் (2); பலிகடாவின் 'பலன்கள்' : பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி’; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html ) தமிழ்நாட்டில் அறிவுப்புலத்திலும் அந்த -'அறிவுஜீவி'யாக வெளிச்சம் போடும் நோயாகிய‌-  பாதிப்பு உள்ளது.

வெறுப்பு அரசியலில் சிக்காமல், உரிய சான்றுகளின் அடிப்படைகளில் உண்மையை நிலைநாட்டுதல், ஆய்வு முடிவுகளின் மீது உடைமையுணர்வு பற்று(possessiveness)  இல்லாமல், அறிவுபூர்வமான விமர்சனத்தில் வெளிப்படும் தவறுகளை, பகிரங்கமாக நன்றியுடன் ஒத்துக்கொண்டு, உரிய திருத்தங்களுடன் நான் பயணிக்கிறேன். நம்மை மிகவும் மதிப்பவர்கள் என்பதற்காக, அவர்களிடம் வெளிப்படும் தவறுகளை 'வாழ்வியல் புத்திசாலித்தனத்துடன்' கண்டுகொள்ளாமல் இருக்கும் தவறுகளை, நான் செய்வதில்லை, என்பதை,  என்னிடம் பழகியவர்களும், பழகுப‌வர்களும் அறிவார்கள்.

ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள் ஆய்வுகளில் இருந்த குறைபாடுகளை உரிய சான்றுகளுடன் வெளிப்படுத்தி,  “1996இல் 'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music)  பல்துறை (interdisciplinary) முனைவர் பட்டம் பெற்றதும், எனது ஆய்வுமுடிவுகள் 'அதிர்ச்சி அலைகளை' ஏற்படுத்தி , ஒரு பெரிய விவாதத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தும் என எதிர்பார்த்தேன். ஆனால் கடந்த 20 வருடங்களாக அப்படிப்பட்ட விவாதமின்றி 'அமைதியாகத்’ தான் தமிழ்நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த 'அமைதியுடன்' தொடர்புடைய 'செயல்நுட்பத்திலேயே', ஆங்கில வழிப் பள்ளிகளின் புற்றீசல் வளர்ச்சியில் தமிழ்வழிக்கல்வியின்  (எனவே தமிழின்) மரணப்பயணம் தொடங்கியதா? கிரானைட், தாது மணல், ஏரி,குளம், காடுகள் உள்ளிட்ட கனிவளங்கள் சூறையாடப்பட்டதா? அந்த 'அமைதியில்' பங்கு பெற்ற தமிழ், தமிழ் உணர்வு புலமையாளர்களில், யார், யார் 'நமக்கேன் வம்பு?' என்று ஒதுங்கி வாழ்ந்தவர்கள்? அந்த 'கொள்ளைகளில்' 'வாய்க்கரிசி' பெற்று 'வாழ்வியல் புத்திசாலி நடை பிணங்களாக' வாழ்ந்தவர்கள் யார்? அந்த 20 வருடங்களில், தனிநபர்களை 'மிரட்டி, கொலை செய்து' சொத்துக்கள் வாங்கியதையும், அந்த கொள்ளைகளையும்,  அரசியல் செல்வாக்குள்ள கொலையாளிகள், அரசு சாட்சிகளை மிரட்டி, பிறழ்சாட்சிகளாக்கி, விடுதலைகள் பெற்றதையும் 'கண்டுகொள்ளாமல்', தமது செல்வம், செல்வாக்கில் வளர்ந்த 'மனித உரிமை' தலைவர்கள் யார், யார்? என்பது போன்ற 'ஆராய்ச்சிகள்' இனி 'சூடு' பிடிக்கும் என்றும், அந்த போக்கில், தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணம் தடுத்து நிறுத்தப்பட்டு, தமிழ்நாடு வீழ்ச்சியிலிருந்து மீளும் என்றும் நம்புகிறேன். அறிவுபூர்வ விவாதங்களுக்கு இடமின்றி, உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலில்,  தமிழ்நாடு பயணித்ததும், இதற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியது.  தமிழ்நாட்டின் அறிவுப்புலமானது(intellectual field) , 'கட்சி அரசியல்' மூலம், சமூக வண்ணக்குறைபாட்டில்(social colour blindness)  சிக்கி, சீரழிந்து வருவதன் விளைவும், இதற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியது. ('கறுப்பு வெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்';http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html ). எனது ஆய்வு முடிவுகளில் பல, 'உணர்ச்சிபூர்வ',  'திராவிட', 'இந்துத்வா' ஆதரவாளர்களுக்கு பிடிக்காமல் இருக்க வாய்ப்புண்டு.

ஆங்கில வழிக் கல்வி மூலம் 'ஆங்கில வல்லாண்மையில்', தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணம் தீவிரமடைந்துள்ளது. அந்த போக்கில், தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு (வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு வேறு வழியில்லை) ,  தமது குடும்பப்பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்துக்கொண்டு, அதற்கு வருத்தம் கூட தெரிவிக்காமல், 'சமற்கிருத வல்லாண்மையை' எதிர்ப்பது சரியா?

தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறை கோவில்களில் பக்தர்கள் விரும்பினால், தமிழில் வழிபட ஏற்பாடுகள் செய்கிறார்கள். ஏன் அதை பெரும்பாலான தமிழர்கள் பயன்படுத்திக் கொள்வதில்லை? அவை தவிர, சைவ மடங்களும், தமிழர்களாக உள்ள தனியார் வசத்திலும் பல கோவில்கள் உள்ளன?.அங்கெல்லாம் தமிழில் வழிபடுவதைத் தடுப்பது யார்? பெரும்பாலான தமிழர்களின் மூளைகளில் 'பக்தி' தொடர்பாக, என்னென்ன கருத்துகள் ஆதிக்கம் செலுத்துகின்றன?  'தமிழில் வழிபட்டால், வேண்டியதெல்லாம் கிடைக்கும்' என்று, ஒரு புரளியை வெற்றிகரமாக கிளப்பி விட்டால், தமிழர்களெல்லாம் தமிழில் வழிபட மாட்டார்களா? அப்படி தமிழில் வழிபட்டாலும், அதற்கு தமிழ் மீது உள்ள பற்று காரணமாகுமா? அல்லது 'அதிர்ஷ்டத்தின்' மீது உள்ள பற்று காரணமாகுமா?


ஆங்கிலத்தின் வல்லாண்மையையும், 'அதிர்ஷ்டத்தின்' வல்லாண்மையையும் தமது வாழ்வில் 'செயல்பூர்வமாக' எதிர்ப்பதே சரி; பேச்சுகளும், எழுத்துகளும் தமிழ்நாட்டில் தகவல் பரிமாற்ற வலிமையை இழந்துவரும் சூழலில். கீழ்வரும் வகையில், தமிழ் இசை வளர்ச்சிக்கு என்னால் இயன்ற பங்களிப்பை 'செயல்பூர்வமாக' பேசி வருகிறேன்.


விருப்பு, வெறுப்புகளைத் தாண்டி, புலமையை மதிக்கும் பிராமணர்கள், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்டு வட மாநில, வெளிநாட்டினர் பலர் எனது ஆய்வுகளை ஊக்குவித்தும், ஆதரவளித்தும் வந்துள்ளதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் உலகப்புகழ் பெற்ற அறிஞர்கள் எனது ஆய்வுகளைப் பாராட்டி ஊக்குவித்து எழுதியுள்ள‌ மடல்களில் சிலவற்றை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். ( 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்'; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_16.html

ஆனால் தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் உள்ள பேராசிரியர்களுக்கு மின்மடல் அனுப்பினாலும், கொரியர் மூலம் அனுப்பினாலும் கிடைத்தது என்று கூட தெரிவிப்பதில்லை. ஒரு பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் மட்டும்  தனக்கு இசை தெரியாது என்று ஆய்வுக் கட்டுரையைத் திருப்பி அனுப்பினார். அந்த கட்டுரையில் யாப்பிலக்கணத்தின் இசைப் பரிமாணம் பற்றிய தகவல்கள் இருந்தன. தற்போது கற்பிக்கப்படும் யாப்பிலக்கணத்தில், தொல்காப்பியத்தில் வரும் ‘இசை’ என்ற சொல்லை,  'ஒலி' எனத் தவறாகப் புரிந்து கற்பிக்கப்படுவது தொடர வேண்டும் என்பது தமிழின், தமிழ்நாட்டின் விதி என்பது எப்போது முடிவுக்கு வரும்?’ (’ உணர்ச்சிபூர்வ‌ 'இரைச்சலில்’ சிக்கிய 'தமிழ் இசை' ஆய்வுகள்’;http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

தற்போது ' tholkAppiam & Computational Musical Linguistics ' என்ற நூல் எழுதி வருகிறேன். அது தொடர்பான கணினி ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், பொறியியல் மாணவர்கள் 'இசை மொழியியல்' அடிப்படையில், ‘Natural Language Processing’ (NLP) related projects செய்வதற்கும், ஏற்ற வகையில், அந்நூலை co-author  ஆக எழுதி, முடிக்க, புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியில் மூத்த (senior professor)  பிராமண பேராசிரியர் தாமாகவே முன்வந்துள்ளார். எனவே ந்த வருடத்திற்குள் அப்பணி முடிந்து, அந்நூல் வெளிவர வாய்ப்புண்டு. ஒருவேளை, அதன்பின் தமிழ்நாட்டில் தமிழ்/தமிழ் இசை புலமையாளர்கள் முழித்துக் கொண்டு, யாப்பிலக்கண பாடங்களில் 'இசை'யை 'ஒலியாக' புரிந்து, கற்பித்தலில் உள்ள குறைபாடுகளை நீக்குவதற்கும் வாய்ப்பிருக்கிறது. தமிழிசையியல் அறிவின்றி யாப்பிலக்கணம் படிக்க முடியாது என்பதும், தமிழக பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் நடைமுறைக்கு வரவும் வாய்ப்புண்டு.

No comments:

Post a Comment