Saturday, December 19, 2015



வெள்ள நிவாரணங்களும், நடிகர் தனுஷின் வெற்றிப்படங்களும் உணர்த்தும் 'சிக்னல்'?(2)

 

அடுத்த 'தமிழ் வேரழிப்பு'  வெள்ளம், 'தமிழ் வாசகர்களின்' எண்ணிக்கையை அழிக்குமா?

 

 கண் கெட்ட பின் 'சூரிய நமஸ்காரம்' செய்யப்போகிறோமா?


"உலக அளவில் இலக்கிய சாதனைகள் எல்லாம், சமூகத்துடனும், இயற்கையுடனும், 'சுயலாப நோக்கற்ற உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்'(Passions),'பாதுகாப்பு வளையச் சிறையில்' சிக்காமல், பயணித்தபோது வெளிப்பட்டவையே ஆகும்." என்பதுடன், "தமிழ் இலக்கியமானது, 'ஆமை' போல் ஏன் பின்தங்கியது?" என்ற கேள்வியையும் முந்தைய பதிவில் பார்த்தோம்.

தகவல் தொழில் நுட்பம், வியாபரம் உள்ளிட்டு 'அதிக வருமானம்' உள்ள துறைகளில் இருந்தவர்களும், 'அரசியல், தரகு, திருட்டு, ஊழல்' உள்ளிட்டு பல‌ 'குறுக்குவழி' பணக்காரர்களும் ஆகிய இரண்டு பிரிவினரும், சென்னையில் 'அதிவேகமாகும் வளரும் முதலீடு' என்று கணக்கிட்டு, சென்னையில் வீடுகள் வாங்கியவர்கள் எல்லாம், இன்று 'வெள்ள பாதிப்பு அதிர்ச்சியில்' உறைந்துள்ளார்கள். உலகை பாதித்துவரும் 'பருவ மாற்றங்களில்' வெள்ள அபாயாத்தில் மீண்டும், மீண்டும் சிக்க உள்ள நகரங்களில் சென்னையும் இடம் பெற்றுள்ளது.
' If climate change is indeed the culprit, then the Chennai floods should come as a severe warning to authorities since there could be many more such episodes in the near future across the country.'
'Southern India could continue to experience higher than normal rainfall and this could cause further flooding due to El Nino, a phenomena which sparks global weather extremes, according to a United Nations report.'

சென்னையில் இனி வீடுகள் வாங்கப்போகும் 'புத்திசாலிகளின்' எண்ணிக்கையானது, அதிவேகமாக குறைந்தால், வியப்பில்லை. ( Ganesan says, “No, not anywhere in Chennai..”; http://www.thehindubusinessline.com/portfolio/people/lessons-from-chennai-floods-why-home-buyers-should-know-geography/article7983497.ece )

மேற்குறிப்பிட்ட இரண்டு பிரிவினரில் யார்? யார்?, முந்தைய பதிவில் வெளிப்பட்டிருந்தவாறு , தனுஷ் நடித்த படங்களில் வெளிப்பட்ட செயல்நுட்பத்தில் ஒன்றுபட்டவர்கள்? என்பது ஆய்விற்குரியதாகும்.

சென்னையில் , குறிப்பாக கடந்த 10 வருடங்களில், வீடு வாங்கியவர்களில் யார்?யார்?
'உணவு, உடை, நாகரிகம், மொழி உள்ளிட்டு. நமது பாரம்பரியத்திடமிருந்தும், இயற்கையிலிருந்தும்  விலகி, 'சமூகம் எக்கேடு கெட்டால் என்ன?' என்று 'தெளிவாக', 'நாமும் நமது குடும்பமும் புத்திசாலித்தனமாக' வாழ்ந்து, 'பணம் சம்பாதித்து', வீடு வாங்கியவர்கள் ?
 
அத்தகைய குடிமக்கள் (citizens) 'அதிவேகமாக' அதிகரித்து வரும் , தமிழ்நாட்டில், ஊழலற்ற, நேர்மையான, சமூக அக்கறையுள்ள அரசு வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதில் நேர்மை இருக்கிறதா? அவ்வாறு வாழ்ந்து கொண்டு, சென்னை வெள்ள பாதிப்பிற்குப் பின்னும் திருந்த மறுக்கும் 'சமூக கிருமிகளை', நமது சமூக வட்டத்திலிருந்து வெறுத்து ஒதுக்காமல், 'அத்தகைய அரசு வேண்டும்' என்று நாமும் எதிர்பார்ப்பதில் நேர்மை இருக்கிறதா?

முந்தைய பதிவில் உள்ள,  'மாமா டிரவுசர் கழண்டுச்சு' ('சூது கவ்வும்') திரைப்படப்பாடலை செயல் மூலம் 'இசைக்கச்செய்த', இளம் நடிகர்களும், சாதி, மத பேதமின்றி சேவை செய்த இளைஞர்களும், மீட்சிக்கான திசையைக் காட்டி விட்டார்கள். நமக்கு வேண்டிய 'சமூக கிருமிகளை' விட்டு விலகி, நாம் பயணிக்க போகிறோமா? அல்லது மீண்டும், மீண்டும் வெவ்வேறு வகைகளிலான வெள்ள பாதிப்புகளில் சிக்க போகிறோமா?

 " தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து வருவதும், 'யாரை/எதை ஏணியாகப் பயன்படுத்தி , போட்டி போட்டு 'மேலான மேற்கத்திய நாகரிக' வாழ்வு வாழ்வதே வாழ்வின் முக்கிய நோக்கமாக" வாழ்பவர்கள் அதிகரிப்பதும்; (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html )
"தமிழ் இலக்கியமானது, 'ஆமை' போல் ஏன் பின்தங்கியது?" என்ற கேள்விக்கு பதிலாகாதா? அதாவது, வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்திய மூல காரணங்களே, இதற்கும் காரணம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியுமா?

'புலமையும், புலமையாளர்களும் விரயம் (waste) ' என்று ஒதுக்கி, 'பெரியார் தந்த புத்தியில்' 'சுயநலக்கள்வர்களாக' வளர்ந்து, நேர்மையாகவும், உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்(Passions) வாழ்ந்து வந்தவர்களையும், திசை திருப்பும் 'மோசமான‌ முன்மாதிரிகள்' (Bad Role Model) வளர்ந்து வரும் தமிழ்நாட்டில், புலமையானது ஆமை போல பின்தங்க, எஞ்சிய புலமையாளர்களில், வாய்ப்புள்ளவர்கள் பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் குடிபெயர மாட்டார்களா? அந்த 'மோசமான முன்மாதிரிகளை', தனிமைப்படுத்தி ஒதுக்காமல், தமிழ்நாட்டில் உள்ளார்ந்த ஈடுபாடுகளின்(Passions), புலமையின் வீழ்ச்சியைத் தடுக்க முடியுமா?

திருவனந்தபுரத்தில்,  மலையாள மொழிச் சூழலில் வளர்ந்து, தமிழ் இலக்கியத் துறையில் சாதித்த, எழுத்தாளர் ஆ.மாதவன், தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்தால், அந்த சாதனை வெளிப்பட்டிருக்குமா?

தமிழ்நாட்டில், மேற்குறிப்பிட்ட 'வாழ்வியல் நோயில்' கிராமங்களும் சிக்கி, 2வயது முதல் ஆங்கில வழி விளையாட்டுப்பள்ளியில் சேர்க்கும் நோயானது, நம்பமுடியாத 'அதி வேகத்தில்' வளர்ந்து வருகிறது. அதனால் 'மூடப்பட்டு வரும்' அரசு தமிழ்வழிப் பள்ளிகள் போக, எஞ்சியுள்ள பள்ளிகளிலும், தத்தம் அரசு வேலைகளைக் காப்பாற்றிக்கொள்ள, என்னென்ன 'தில்லுமுல்லு' வழிகளில், 'போலி மாணவர்கள்' படிக்கிறார்கள்? என்பது வியப்பூட்டும் ஆய்வாக அமையலாம். 

தமது குடும்பப்பிளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்த/வைக்கும் தமிழ் அமைப்புகளும், தமிழ் ஆர்வலர்களும் தமது மேடைப்பேச்சில், எழுத்தில் 'தமிழ்வழி' ஆதரவாளர்களாகவும், 'தாய்த்தமிழ்க்கல்வி' புரவலர்களாகவும், இருப்பதானது, அந்நோய் எதிர்ப்பு முயற்சிகளுக்கு கேடாக தொடர்கிறது; "ஓம்புள்ளை மட்டும் இங்கிலீஸ்ல படிச்சு உருப்படுணும். ஏம்புள்ளை  தமிழ்ல படிச்சு வீணாகுணுமா?" என்று கேட்பதால்.

தமிழ்நாட்டில் இன்று "ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள், தமிழையும் ஒரு பாடமாகப் படித்தாலும், தமிழ்ப் பத்திரிக்கைகளைப் படிக்கத் தெரியாது. பேருந்துகளில் உள்ள ஊர்ப்பெயர்கள் தமிழில் இருப்பதைப் படிக்க முடியும்.

ஆனால் இம்மாணவர்களில் பெரும்பாலோர் தமது கல்வி, தாம் பயன்படுத்தும் 'டிஜிட்டல்' கருவிகள்(digital devices), வேலைவாய்ப்பு, சினிமா, நடிகர்கள், கிரிக்கெட் போன்றவற்றில்  'லேடஸ்ட்'(latest)  தகவல்களை, நுனிவிரலில் வைத்து அசத்துகிறார்கள்.

தமிழ்வழிக் கல்வியை சிதைத்து, ஆங்கிலவழிக் கல்வி மூலம் 'திரிந்த மேற்கத்திய' பண்பாட்டில் 'அதிக எண்ணிக்கையில் அதிவேகமாக' வளரும் இது போன்ற மாணவர்களில், தமிழறிஞர்கள்/பேராசிரியர்கள்/தமிழ் ஆர்வலர்கள் குடும்பப் பிள்ளைகள் விதி விலக்காக இருப்பதும் அரிதாகி வருகிறது."

தமிழ்நாட்டில் தினசரி மற்றும் வார பத்திரிக்கைகளை கடைகளில் காசு கொடுத்து வாங்குபவர்கள் யார்? அப்பத்திரிக்கைகளை படிப்பவர்கள் யார்? 

விளையாட்டுப்பள்ளி முதல் தொடர்ந்து ஆங்கிலவழியிலேயே படிக்கும் மாணவர்களில், இன்று +2/கல்லூரி மாணவர்களில்,  தமிழில் படிக்க தெரிந்தவர்கள் எத்தனை பேர்?

கடந்த சில வருடங்களாக, இயன்ற வரையில், மிகுந்த கவலையுடன், மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகளை பெற்று, ஆராய்ந்து வருகிறேன்.

இன்று சுமார் 50 வயதைத் தாண்டியவர்கள் எல்லாம்,  காலஓட்டத்தில் , இந்த உலகை விட்டு மறையும் போது, தமிழ் வாசகர்களின் எண்ணிக்கை 'வேகமாக' குறைந்து;

இன்று +2/கல்லூரி படிக்கும் மாணவர்கள் எல்லாம், வேலைக்குப்போய், திருமணமாகி வாழ்வில் 'செட்டில்' ஆகும்போது;

இன்னும் சுமார் 10 முதல் 15 வருடங்களுக்குள், தமிழ்நாட்டில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையானது, 'அகல பாதாளத்தில்' வீழும்; தமிழ் வாசகர்களை வீழ்த்தும் 'வெள்ளமானது', 'சுனாமி' போல, தாக்கினால், வியப்பில்லை.

தமிழ்நாட்டில், இன்று ஆங்கிலத்தில் எழுத, படிக்க தெரியாமல், 'கொச்சை ஆங்கிலம்' பேசும் 'ஆங்கிலோ-இந்தியர்களை' நான் பார்க்கிறேன். அது போல, தமிழில் எழுத, படிக்க தெரியாத, தமிழும், ஆங்கிலமும் கலந்த 'கொச்சைத்தமிழில்‍ - 'தமிங்கிலீசில்' - மட்டுமே பேசத் தெரிந்த‌ மாணவர்கள், தமிழ்நாட்டில், நமது குடும்பங்களில் அதிவேகமாக வளர்ந்து வருகிறார்கள். 

அவர்களுக்கெல்லாம் 'தாய்மொழிவழி அடிப்படைக்கல்வி'யில்லாததால், 'புலன் திறன் மூளை வளர்ச்சியில்'(Cognitive Skills related brain development) குறைந்து, வளர்ந்து வருகிறார்கள்; தமது வாழ்வில் சாதிக்க வேண்டியதை விட, குறைவாகவே சாதித்து.

(தாய்மொழிவழிக்கல்வி  குறித்த உலகளாவிய ஆய்வுத்தகவல்கள் கொண்ட அரிய நூல்: 'மொழிச்சிக்கல்கள் குறித்த சர்வதேசக் கருத்துக்கள்: கல்வி, அறிவு, அறிவியல் மற்றும் ஆங்கிலம் பயிவதற்குத் தாய்மொழியே திறவுகோல்' ஆங்கிலத்தில் ஜோகாசிங்; தமிழில் கண.குறிஞ்சி (94433 07681) புதுமலர் பதிப்பகம், ஈரோடு )
 

சென்னையில் வெள்ளம் பாதித்தபின் தான், ஏன் வீடு வாங்கினோம்? என்று கவலைப்படுபவர்களை இன்று பார்க்கிறோம்? 'திரிந்த மேற்கத்திய' மோகத்தில், தமிழ் வேரற்ற,  நுகர்வெறி (Consumer thirst) மிருகங்களாக,  நமது குழந்தைகள் வளர்ந்து, அவர்களிடம் நாம் பெறப்போகும் 'பரிசுகள்', வெளியில் சொல்லமுடியாத, இழிவான துன்பங்களாக தாக்கப்போகிறது' என்ப‌தற்கான அறிகுறிகள், இப்போதே வெளிப்பட தொடங்கிவிட்டன. 'கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்' செய்யப்போகிறோமா? தமிழ் வேரற்ற (பிராமணர் - பிராமணரல்லாதோர் வேறுபாடுகளின்றி) தமிங்கிலீசர்கள் நாடாக, தமிழ்நாடாக வேண்டுமா? அந்த வெள்ள அபாயத்தைத் தவிர்க்க, தாய்மொழிவழிக்கல்விக்கு புத்துயிர் கொடுக்க ஆர்.எஸ்.எஸ் 'முனைப்புடன்' செயல்படத்துவங்கியுள்ளது.( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html ) இனியும் 'பெரியார்' ஆதரவாளர்கள் விழித்துக் கொள்ளவில்லையென்றால், 'பெரியார்' சமூக கிருமிகளோடு, பதர்களும், மணிகளும் வேறுபாடின்றி, அந்த 'தமிழ் வேரழிப்பு வெள்ளத்தில்' ஒன்றாக அடித்து செல்லப்படுவதை தவிர்க்க முடியுமா? தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகளோடு, புலமை விழ்ச்சியோடு தமிழ்வேரழிப்பு வெள்ள  பாதிப்புகளுக்கும், 'பெரியார்' மூலம் உருவான 'சமூக கிருமி'களின் பங்களிப்பால், வரலாற்றில் ஈ.வெ.ரா குற்றவாளியாகவே, அவரின் (அவர் வழியில் என் போன்ற எண்ணற்றவர்களின்) சுயநலம் பாரா உழைப்பும் தியாகமும் பயன்பட்டதாக, முடிய வேண்டுமா?
http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html

No comments:

Post a Comment