Saturday, March 4, 2017

'திராவிடர், திராவிட'  சிறையிலிருந்து;


              தமிழை எவ்வாறு மீட்க முடியும்?


தமிழ்நாட்டின் தலைக்குனிவாக‌, சசிகலாவின் பினாமி ஆட்சி அரங்கேறியிருப்பதானது;

தமிழையையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சிறைப்படுத்தி, சீரழித்து வரும் 'திராவிடர், திராவிட' நோயின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும்.

அந்த பினாமி ஆட்சியின் அரங்கேற்றத்திற்கு, 'இந்துத்வா எதிர்ப்பு, தமிழ் உணர்வு' என்ற அடிப்படைகளில் கிடைத்து வரும் ஆதரவும், அந்த ஆதரவு போக்கினை, ஒவ்வொரு வருடமும் தஞ்சையில் 'பொங்கல் விழா நிகழ்ச்சிகள்' மூலம் ( சசிகலா) நடராஜன் 'பேணி, பாதுகாத்து' வந்த போக்கும், எந்த வரலாற்றுப் பின்னணியில் உருவானவை? என்பது ஆய்விற்குரியதாகும்.

அறிவுபூர்வ அணுகுமுறையில், 'இந்துதவா' என்பது, இன்று இரண்டு கூடாரங்களாக பிரிந்து, அறிவுபூர்வ 'மோதலில்' பயணித்து வருவதை, தமிழ்நாட்டில் மீடியா வெளிச்சத்துடன் வலம் வரும், ('சசிகலா பினாமி ஆட்சி' அரங்கேற்றத்தை ஆதரித்து வரும்), பேரா.அ.மார்க்ஸ் உள்ளிட்ட இந்துத்வா எதிர்ப்பு எழுத்தாளர்கள் எல்லாம் கவனித்து, அந்த மோதல் தொடர்பான, தமது கருத்தை, அறிவுபூர்வமாக பதிவு செய்து வருகிறார்களா?

என்பது எனக்கு தெரியாது. எவராவது தெரிவித்தால், நன்றியுடன் அதனை பரிசீலிப்பேன்.

கீழே விளக்கியுள்ளபடி, 'பெரியாரின்' மேற்கத்திய குறிப்பாயத்தில் (Western Paradigm) 'தனித்தமிழ்நாடு போதையில்', பெங்களூர் குணாவின் 'ஈ.வெ.ரா எதிர்ப்பு' பற்றிய புரிதலின்றி, அவரின் ஆதரவாளர்களாக, 'பெரியார்' கொள்கையாளர்கள் பயணித்தது போல;

'வேதத்தையும், சமஸ்கிருதத்தையும் பாராட்டுகிறார்கள்' என்று பல மேற்கத்திய எழுத்தாளர்களின் ஆதரவாளர்களாக, 'இந்துத்வா'வில் ஒரு பிரிவினர் பயணித்து வருகிறார்கள்.

மேற்கத்திய சுயநலன்களுக்கு இந்தியாவை பலியாக்கும் சூழ்ச்சியானது, அந்த எழுத்தாளர்களின் படைப்புகளில் இருப்பதை, அறிவுபூர்வ விவாதங்கள் மூலம் அம்பலப்படுத்தும், இன்னொரு பிரிவினரும் 'இந்துத்வா'வில் இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் வாழும் ராஜிவ் மல்கோத்ரா 
(https://en.wikipedia.org/wiki/Rajiv_Malhotra ), 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி போன்று இன்னும் பலர், அந்த இரண்டாவது பிரிவில் இருக்கிறார்கள்.

“எனது ஆய்வுகளை, நமது ஆதரவாளர்கள் படித்து, விளங்கி, விவாதித்து, எதிர்வினையாற்ற வைப்பது என்பது எனக்குள்ள மிகப்பெரும் சவாலாகும். அவர்களில் 99% உணர்ச்சிபூர்வ‌ மடையர்களாக‌ இருப்பார்கள் என கருதுகிறேன். ஒரு மூடனான பின்பற்றுபவரை விட, புத்திசாலி எதிரி மதிக்கத்தக்கவராவார்.” ராஜிவ் மல்கோத்ரா; (‘'பெரியார்' ஆதரவாளர்கள் மத்தியிலும், இந்துத்வா ஆதரவாளர்கள் மத்தியிலும் உணர்ச்சிபூர்வ‌ மூடர்கள் (morons) யார்?யார்?; 
http://tamilsdirection.blogspot.com/2015/06/normal-0-false-false-false-en-us-x-none.html

ராஜிவ் மல்கோத்ராவை போலின்றி, 'தனி மனிதனாக', இன்னும் கடினமான முயற்சியில், நான் இறங்கியுள்ளேன்.

மார்க்சிய லெனினிய புலமையுடன், 'பெரியார்' கொள்கையாளராக பயணித்து வந்த நான், பின் 'இசையின் இயற்பியல்' (Physics of Music) நோக்கில், பழந்தமிழ் இலக்கியங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம்;

'இனம்', 'சாதி' தொடர்பான மேற்கத்திய சூழ்ச்சியில், ஈ.வெ.ரா அவர்கள் சிக்கி;

1944வரை அவரின் இணையற்ற தியாகத்தால் சேமித்திருந்த சமூக ஆற்றல்கள் எல்லாம்;

'திராவிடர், திராவிட' சிறை உருவாக்கத்திற்கு பயன்பட்டு, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சீரழித்து வருவதை கண்டு பிடித்தேன். 2005-இல் நான் தஞ்சை இரத்தினகிரியை சந்தித்த வேளையில், அதை தெரிவித்தேன். இன்றுவரை அதை மறுத்தோ அல்லது ஏற்றுக் கொண்டோ, அவர் எந்த விளக்கமும் தரவில்லை.

அது முதல், கடந்த சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக, 'தனி மனித இராணுவமாக' அந்த மேற்கத்திய சூழ்ச்சியிலிருந்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மீட்க, எனது வரையறைகளுக்குட்பட்டு (within my limitations) , பங்களித்து வந்துள்ளேன்.

அந்த போக்கில், மேலே குறிப்பிட்ட இந்துத்வாவின் இரண்டாவது பிரிவினரின் அறிவுபூர்வ விவாதங்களில் நானும் பங்கேற்று வந்துள்ளேன்; ('திருச்சி பெரியார் மையம்' மூலம் 'இந்திய, சர்வதேச அரசியல் பொருளாதார சூழ்ச்சிகள்' பற்றி 'தெரிந்து, வளர்ந்து', பின் 'பெரியார் சமூக கிருமிகளாக' சசிகலா குடும்ப அரசியல் வலைப்பின்னலில் இடம் பெற்று, 'அதிவேக பணக்காரரான' எடுபிடிகள் எல்லாம், எனது கடனுக்காக நான் 'பிராமண, பா.ஜ.க' சார்பாகி விட்டேன், என்று இழிவு படுத்தும் அளவுக்கு;
http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html)

அதே போக்கில், மேலே குறிப்பிட்ட இரண்டாவது பிரிவு 'இந்துத்வா' ஆதரவாளர்களிடம்;

அந்த அறிவுபூர்வ விவாதத்தில், சமஸ்கிருத நூல்களை மட்டுமே கணக்கில் கொள்ளும் தவறினை சுட்டிக்காட்டி, தமிழ் உள்ளிட்டு, இந்தியாவில் மற்ற மொழிகளில் உள்ள தொன்மை அறிவுச் செல்வத்தையும் பயன்படுத்தும் அவசியத்தையும் வலியுறுத்தி வருகிறேன். (‘Is Tamilology not a part of the Swadeshi Indology?’; 
http://tamilsdirection.blogspot.com/2017/03/tamilology-not-part-of-swadeshiindology.html)

மேற்கத்திய சூழ்ச்சியிலிருந்து விடுபடவில்லையென்றால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் எல்லாம் அருங்காட்சியத்திற்கு போக; தமிழ் வேரற்ற, தமிழில் எழுத, படிக்க தெரியாத, 'தமிங்கிலீசர்கள்' வாழும் நாடாக, தமிழ்நாடு மாறுவதை தடுக்க முடியுமா?
(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_3.html )

'பெரியார்' கொள்கையாளர்கள் உணர்ச்சிபூர்வ போதையில் ஒரு வகையிலான 'அறிவுபூர்வ மயக்கத்தில்' பயணித்து வருவதை, பெங்களூர் குணாவின் நூல்கள் மூலம் நான், 'பெரியார்' கொள்கையாளராக பயணித்தபோதே, கண்டுபிடித்தேன்.

'தனித் தமிழ்நாடு' போதையில், பெங்களூர் குணாவின் நூல்களில் 'ஈ.வெ.ரா எதிர்ப்பு' இருந்தது தெரியாமல், அவரின் நூல்களுக்கு நன்கொடை வழங்கி, ஆதரித்து, அவருடன் நெருக்கமாகி, பல 'பெரியார்' கொள்கையாளர்கள் பயணித்தார்கள்.

நான் 'திருச்சி பெரியார் மையம்' மூலம், குணாவின், 'ஈ.வெ.ரா எதிர்ப்பை', அறிவுபூர்வமாக எதிர்த்த போதும், மேற்குறிப்பிட்ட 'மயக்கத்தில்' பயணித்தவர்களில், யார்? யார்? தெளிவு பெற்றார்கள்? அதே மயக்கத்தில் தொடர்ந்தார்கள்? என்பது எனக்கு தெரியாது.

அதே போன்று, 'இந்துத்வா எதிர்ப்பு அறிவுபூர்வ மயக்கத்தில்', தமிழை இழிவு படுத்தினாலும், அதனை 'இந்துத்வா எதிர்ப்பு' உணர்ச்சிபூர்வ போதையில் கண்டு கொள்ளாமல், செல்டன் பொல்லோக் போன்ற மேற்கத்திய எழுத்தாளர்களின் 'தயவில்', 'இந்துத்வா எதிர்ப்பில்', 'அறிவுபூர்வ சப்பாணிகளாக', தமிழ்நாட்டில் யார்? யார்? பயணிக்கிறார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
(http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_4.html)

‘“'மணிப்பிரவாள காலத்திற்குப் பின்னர் தான்,சமஸ்கிருதத்தின் துணையுடன் தமிழில் இலக்கியங்களே வெளிவந்தன' என்பது உள்ளிட்ட தமிழைப் பற்றிய மிகவும் தவறான, உரிய சான்றுகளின் அடிப்படைகளில் எளிதில் மறுக்கக் கூடிய 'ஆய்வுத் தகவல்கள்', உலக அர‌ங்கில் செல்வாக்குள்ள எழுத்தாளரான‌ ஷெல்டன் பொல்லாக் எழுதியுள்ள  நூலில் ‘The Language of the Gods in the World of Men – Sanskrit, Culture and Power in Premodern India ’ by Sheldoon Pollock  (2007)  வெளிவந்துள்ளன.

தமிழ்நாட்டில் அப்புத்தகம் வெளிவந்த பின்,  கடந்த 9 வருடங்களில், செல்வாக்குடன் பொது அரங்குகளிலும், மீடியாக்களிலும் வலம் வந்து கொண்டிருக்கும் எந்த தமிழ் அறிஞராவது, அந்த அபத்தமான, தமிழைப் பற்றி இழிவுபடுத்தும்,  'ஆய்வுகள்' என்ற பெயரில் வெளிவந்துள்ள, கருத்துகள் பற்றி கவலைப் பட்டிருக்கிறர்களா? கவலைப்பட்டு அதை மறுத்திருக்கிறார்களா?  இல்லையென்றால், அதற்கு என்ன காரணம்? அந்தப் புத்தகத்தைப் படித்து, அதில் தமிழைப் பற்றி வெளிப்பட்டுள்ள தவறானக் கருத்துக்களைப் புரிந்து கொள்ளும் ஆங்கில அறிவு அவர்களுக்கு இல்லையா? இல்லையென்பதை அகந்தையின்றி ஒப்புக் கொண்டு, அத்தகைய ஆங்கில அறிவுடையவர்கள் துணையுடன் அது போன்ற நூல்களைப் படித்து, அதில் தமிழைப் பற்றி உலக அரங்கில் இழிவுபடுத்தும் தவறானக் கருத்துக்களை, மறுக்கும் சமூகப் பொறுப்பு அவர்களுக்கு இல்லையா? இல்லையென்றால், அது தமிழை வைத்து, அரசியல் செல்வாக்குடையவர்களிடம் 'நாய்கள்' போல் குழைந்து காரியம் சாதிப்பதில் மட்டும் அவர்கள் குறியாக உள்ளார்கள் என்ற ஐயம் எழுவது சரியா?” என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_20.html )

அண்மையில் மறைந்த பேரா. M.S.S பாண்டியன் பற்றிய புகழுரைகளில்,  அவர் சுமார் 20 வருடங்களுக்கு முன் எழுதி வெளிவந்த ‘M.G.Ramachandran in film and politics- The Image Trap’ by M.S.S pandian (1992)’ என்ற நூலை தமிழ்நாட்டு 'முற்போக்கு அறிவுஜீவிகள்' பாராட்டியது பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது. அந்த புத்தகத்தில், "எம்.ஜி.ஆரைப் பற்றிய மிகவும் தவறான, உரிய சான்றுகளின் அடிப்படைகளில் எளிதில் மறுக்கக் கூடிய 'ஆய்வுத் தகவல்கள்' வெளிவந்துள்ளன. இரண்டுப் புத்தகங்களுமே உலகத்தரம் வாய்ந்த ஆங்கில நடையில் இருப்பதும் இரண்டு புத்தகங்களுக்கிடையிலுள்ள‌ பொது அம்சமாகும். அந்த ஆங்கில நடையில் தமிழைப் பற்றியும், எம்.ஜி.ஆரைப் பற்றியும் மிகவும் தவறான, உரிய சான்றுகளின் அடிப்படைகளில் எளிதில் மறுக்கக் கூடிய 'ஆய்வுத் தகவல்கள்' வெளிவந்துள்ளதைப் படித்து புரிந்து கொள்ளும் ஆங்கில அறிவு இரண்டு திராவிடக் கட்சிகளின் 'அறிவு ஜீவிகளிடம்' இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விகள் எழுவது தவறா?" என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.”
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_20.html )

தமது அளவில் 'அறிவு உழைப்பு'க்கு முயற்சியின்றி, தமது தகுதி, திறமைப் பற்றிய புரிதலின்றி, புரிதலுக்கான தகுதி இல்லையென்றால், அதை அறிவு நாணயத்துடன் ஒத்துக் கொண்டு, தமது புரிதல் அதிகரிப்பிற்கான 'தகுதி, திறமை'யை வளர்த்துக் கொள்ளாமல், 'தகுதி, திறமை மோசடி' என்ற போர்வையில் அதை மறைத்து, சராசரி பொது அறிவின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பும் 'வியாதியும்', அப்படி கேள்விகள் எழுப்பி தமது 'புலமைக் குறைவு' வெளிப்படுமானால், அதைத் ('பார்ப்பன எதிர்ப்பு,இனமானம்' போன்ற முகமூடிகள் மூலம் மறைத்துத் தப்பிக்கும்) தவிர்க்கும் 'வியாதியும்', விவாதிப்பவரையே விவாதத்திற்குள் 'நுழைத்து', 'பார்ப்பன அடிவருடி' என்று இழிவுபடுத்தும் 'திராவிட' மனநோயும், மேலேக்குறிப்பிட்ட அறிவு ஒட்டுண்ணி சமூக நோய்க்கிருமிகளை, அடையாளம் காண உதவும் அறிகுறிகளாகும்.’

'திராவிடர், திராவிட' சிறையில், தமிழுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு, அண்ணாவின் பங்களிப்பும் ஆய்விற்குரியதாகும்.

‘'பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியர் தமக்கு தமிழ் இலக்கணத்தைக் கற்பிக்க மிகவும் முயற்சி செய்தும் வெற்றி பெறவில்லை' என்று அண்ணா வெளிப்படுத்திய தகவல், அவரின் வாழ்க்கை வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

“என் மதிப்பிற்குரிய இரண்டு தமிழாசிரியர்களான மணி திருநாவுக்கரசு, மோசூர் கந்தசாமி முதலியார் இருவரும் மிகவும் பாடுபட்டனர், எனக்கு இலக்கணம் கற்பிக்க! நான் தமிழின் இனிமை பற்றி மட்டுமே அறிந்து கொள்ள முடிந்தது. இலக்கணப் பயிற்சியில் என்னை வெற்றி பெறச் செய்வதிலே எனது இரு ஆசிரியர்களும் வெற்றி பெற முடியவில்லை." என்று கூறினார் அண்ணா.
பக்கம் 24; பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு, தமிழ் நிலையம் 2008

இலக்கண அறிவின்றி, செவி மூலம் உணரும் ஓசை அறிவின் அடிப்படையில் பேச்சில், எழுத்தில் எதுகை மோனையைப் பயன்படுத்தும் போக்கு வளர்ந்ததற்கு அண்ணாவே காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

பாரதி பாணி உணர்ச்சிபூர்வ‌ போதையை அரசியலில் வளர்க்க, பேச்சில், எழுத்தில் எதுகை மோனையைப் பயன்படுத்தும் போக்கு மிகவும் உதவியது.

பாரதியின் படைப்புகளைப் போல, அண்ணாவின் படைப்புகளில் இலக்கணப் பிழை உள்ளதா, இல்லையா என்பது பற்றி எவரும் ஆராய்ச்சி மேற்கொண்டதாக தகவல் இல்லை. 'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' நூல் (http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_60.html) வெளியிட்ட தமிழ் அறிஞர் அ.நக்கீரன் சாகும் வரை தன் நண்பர்கள் பாதுகாப்பில் வாழ்ந்தார். அவரைப் போன்ற துணிச்சலான ஆராய்ச்சியாளார்கள் தான், அந்த முயற்சியில் ஈடுபட முடியும்; அதற்கான அச்சுறுத்தல்கள் எல்லாம் இனி மாணவர்கள், படித்த இளைஞர்கள் உலகில் கேலிப்பொருளாகி வரும் சூழலில்.

இன்று தமிழ்நாட்டில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உள்ள தமிழ்ப் பாட புத்தகங்களிலேயே நிறைய இலக்கணப்பிழைகள் இருப்பதைத் தமிழ்ப்புலமையாளர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். தி.மு.க தலைவரின் 'தொல்காப்பியப் பூங்காவில்' இருந்த பிழைகளை வெளிப்படுத்திய தமிழ்ப்புலமையாளர் சாகும் வரை தன் நண்பர்களின் பாதுகாப்போடு வாழ வேண்டி நேரிட்டது. தமிழில் இத்தகைய இலக்கணப் பிழைக்கு வித்திட்டது பாரதியா என்பதும், பாரதி, அண்ணா உள்ளிட்டு பல தலைவர்களின் வழிபாட்டுப் புழுதியின் ஊடே தான், அந்த வித்து இன்று ‘செழித்து வளர்ந்து  தமிழைச் சீரழித்து வருகிறதா என்பதும் ஆய்விற்குரியவைகளே. ‘ 
(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

‘“‘The History of the Decline and Fall of the Roman Empire’ (http://en.wikipedia.org/wiki/The_History_of_the_Decline_and_Fall_of_the_Roman_Empire )  என்ற ஆறு தொகுப்புகள் கொண்ட புத்தகத்தில் 'சில' பக்கங்களில் இருந்தவற்றை மட்டும்,  'ரோமாபுரி ராணிகள்' என்ற தலைப்பில் அண்ணாதுரை  இளைஞர்களின் பாலுணர்வு கவர்ச்சி தொடர்பான உண‌ர்ச்சியைத் தூண்டும் வகையில் புத்தகம் எழுதியது சரியா? அந்த ஆறு தொகுப்புகள் கொண்ட புத்தகத்தின் சாராம்சத்தை - பண்பாட்டு வீழ்ச்சி சமூக வீழ்ச்சிக்கு அடிகோலும் - என்ற கருத்தை அவர் ஏன் நூலாக வெளியிடவில்லை? 1967இல் முதல்வரான பின் அவர் எழுதிய 'கம்பரசம்' என்ற அதே போன்ற இன்னொரு நூலை ஒருவர் நினவூட்டியபோது, 'நான் மறக்க விரும்புவதை நினைவூட்ட வேண்டாம். ' என்று அவர் சொன்னது ஏன்? அதன் மூலம் 'குதிரைத் தப்பி ஓடிய பின் லாயத்தைப் பூட்டிய கதை' நினைவுக்கு வருவது தவறா?”

நம்மைச் சுற்றி நடக்கும் நல்லவைகளிலும், தீயவைகளிலும் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. தீமைகள் புரிந்த குற்றவாளிகளுக்கும் நமக்கும் அளவில் மட்டுமே வேறுபாடு என்பதையும் நாம் மறக்கக் கூடாது.’
 (http://tamilsdirection.blogspot.com/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

தாய்மொழி, பண்பாடு, பாரம்பரியம் போன்ற ஆணி வேர்களை பலகீனப்படுத்தி, வளர்ந்த 'திராவிடர், திராவிட' சிறையானது செல்லரித்து மரணிக்கும் அளவுக்கு;

'பெரியார்' சேமித்திருந்த சமூக ஆற்றல்கள் எல்லாம் 'வற்றிய' நிலையில், 'பெரியார் யார்?' என்று கேட்கும், ஆங்கிலவழிக்கல்வி மாணவர்களும், இளைஞர்களும் 'வளர்ந்து' வருகிறார்கள்.
(http://tamilsdirection.blogspot.com/2015/02/12_17.html )

எனவே இயற்கை விதியின் படியே, அந்நோயின் வீழ்ச்சியும், தவிர்க்க முடியாத வகையில், அந்த 'அவமரியாதை, பொதுவாழ்வு வியாபார' சிறையிலிருந்து விடுவிக்கும், 'உண்மையான தன்மான' மீட்பு சுனாமியானது, அடிமட்டத்திலிருந்து தொடங்கி, வளர்ந்து வருகிறது;  

ஆதாய அரசியல் நோக்கில், சசிகலா பினாமி ஆட்சியை எதிர்த்து வருபவர்களையும் ஓரங்கட்டி, ஒதுக்கும் போக்கில்.

இன்று 'ஜல்லிக்கட்டு ஆதரவு', 'ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு', நேற்று 'மீத்தேன் திட்ட எதிர்ப்பு' என்று வெளிப்பட்டு, வெற்றியை நோக்கி, பயணிக்கும் போராட்டங்கள் எல்லாம்;

1991இல் தமிழ்நாட்டில் 'புதிதாக', முளைவிட்டு 'அதிவேகமாக' வளர்ந்த 'ஊழல் பேராசை' போக்கில்;

கங்கை அமரன், பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர் உள்ளிட்ட இன்னும் பல தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி, கொலை செய்து, தற்கொலைக்கு தூண்டி, 'அபகரித்த' போது:

'ஜல்லிக்கட்டு ஆதரவு' போன்ற போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்திருந்தால்;

மலைகள், காடுகள், தாது மணல், ஆற்று மணல், ஏரிகள் உள்ளிட்ட இயற்கை கனி வளங்கள் எல்லாம்;

அடுத்து அடுத்து வந்த ஆட்சிகளில் சூறையாடப்பட்டிருக்குமா?

மீத்தேன் எரிவாயு திட்டம், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை தொடங்கும் 'துணிச்சல்' வந்திருக்குமா? அந்த அரசியல் கொள்ளையர்களை புரவலராக கொண்டு, தமிழ் அமைப்புகளும், உணர்ச்சிமிகு கவிஞர்களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் 'பிழைக்கும்' துணிச்சலும் வந்திருக்குமா? மேலே குறிப்பிட்ட அபகரிப்பில் சொத்து, உயிர் இழந்தவர்களில் எவராவது, அவர்களின் குடும்பத்தினராக இருந்திருந்தால், அந்த 'தன்மான கேடான துணிச்சல்', அவர்களுக்கு வந்திருக்குமா?

'திருச்சி பெரியார் மையம்' மூலம் 'வளர்ந்து', 'சசிகலா குடும்ப அரசியல்' வலைப்பின்னலில் இடம் பெற்று, 'அதிவேக பணக்காரரான பெரியார் சமூக கிருமிகள்' எல்லாம், 'வாழ்வியல் முன் மாதிரி'(Role Model?) ஆக‌, என்னைப் போன்று, உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்வது 'முட்டாள்த்தனம்' என்று எனது குடும்பத்திலும், சுற்றத்திலும், தமிழ்நாட்டில் கணிசமான தமிழர்கள் மத்தியிலும் 'பலர்' மதி மயங்கி, பயணித்து வருவது, நடந்திருக்குமா? அந்த போக்கில் தமிழ்நாடு பயணித்து, தலை குனிவான 'சசிகலா பினாமி ஆட்சி'யானது அரங்கேறியிருக்குமா?

அந்த தலைமுறையின் 'திராவிடர்/திராவிட' மயக்கம் காரணமான,‌ தோல்வியால் ஏற்பட்ட 2015 டிசம்பர் வெள்ள பாதிப்புகளுக்கு; 'அந்த' மயக்கமற்ற இந்த தலைமுறையானது அரசையும், கட்சிகளையும் 'வால்களாக்கி', நிவாரணத்தின் தலைமையை செயல்பூர்வமாக வெளிப்படுத்தியது.

காலனி சூழ்ச்சியில் அரங்கேறிய‌, தமிழ்நாட்டில் உண்மைக்கும் நேர்மைக்கும் விளைந்த, 'திராவிடர், திராவிட' கெடுதலின் முடிவின் அறிகுறியே, சசிகலா உள்ளிட்ட‌, சசிகலா குடும்பத்தை சேர்ந்த மூவரின் சிறைவாசமாகும். அந்த திசையில், தமிழ்நாட்டின் வெறும் ஆட்சி மாற்றத்திற்கு மட்டுமின்றி, மீட்சி நோக்கிய மாற்ற திசையில், 'சசிகலா பினாமி' ஆட்சி ஒழிய, நாம் பங்களிப்பதே புத்திசாலித்தனமாகும்.

பொதுவாழ்வு வியாபாரிகளில் சசிகலாவைப் போல ஊழலுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் யார்? தண்டிக்கப்படாமல், இன்னும் உலவுபவர்கள் யார்? (https://tamilsdirection.blogspot.com/2020/03/blog-post.html)

அவர்களில் 'புரவலராக' செயல்படுபவர்களிடம் 'உதவிகள்' பெற்ற/பெறும் 'உணர்ச்சிபூர்வ' கவிஞர்கள்/எழுத்தாளர்கள்/பேச்சாளர்கள் எல்லாம், 'உதவிகள்' என்ற பெயரில், 'ஊழல்' பணத்தில், பங்கு பெற்றிருந்தாலும், இந்தியாவில் சட்டப்படி, 'அதற்காக' அவர்களை தண்டிக்க முடியுமா?

என்பவையெல்லாம் விவாதத்திற்குரியவை ஆகும்.

மீத்தேன் எரிவாயு எதிர்ப்பு போராட்டமானது பாதிக்கப்பட்ட பகுதிகளில், பாதிக்கப்பட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டத்தில், ஜல்லிக்கட்டையே பார்த்திராத மாணவர்களும், இளைஞர்களும் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தார்கள்.

அந்த புதிய போக்கின் தொடர்ச்சியாக, இன்று 'ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பும்', அந்த போக்கில் பயணிக்கிறது.

'திராவிடர், திராவிட' சிறையிலிருந்து,  'தமிழர் என்ற அடையாளம் மீண்டு, புத்துயிர் பெறும் போக்கானது, 'ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின்'  மூலம் வெளிப்பட்டுள்ளதா? 'தமிழர்' என்ற அடையாளத்தில், தாய்மொழியான தமிழை மீட்கும், தமிழ்வழிக் கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணத்தை தடுக்கும், வாய்ப்பும் வெற்றி பெறுமா?

குழந்தைகளின் மூளைகளில் புலன் அறிவு (Cognitive skills) முழுமையாக வளர்ந்து, அவர்கள் கல்வியிலும், வாழ்க்கையிலும் அதன் பலன்களை அனுபவிக்க, 10 வயது வரை தாய்மொழிவழிக்கல்வி பயில வேண்டும், என்ற உலக அளவிலான ஆய்வு முடிவுகள் எல்லாம், அந்த வெற்றிக்கு உதவுமா? (‘தமிழ்வழி வீழ்ச்சியும் மீட்சியும்’; 
http://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html )

கட்சி, கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, அந்த ஒரு குறிக்கோளில் மட்டுமாவது, ஆர்.எஸ்.எஸுடன் சேர்ந்து பணியாற்ற 'உணர்ச்சிபூர்வ இந்துத்வா எதிர்ப்பு போதையானது', தடையாக தொடரலாமா? ( ‘Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil?’; 
http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html)

சசிகலா பினாமி ஆட்சியின் மரணத்தோடு, அந்த ஆட்சியை ஆதரித்து வரும்  'உணர்ச்சிபூர்வ இந்துத்வா எதிர்ப்பு போதை'யும் மரணமடைந்தால்;

'திராவிடர், திராவிட' சிறையிலிருந்து, தமிழை மீட்கவும் அது வழி வகுக்கும்.


குறிப்பு: 2017 மார்ச்சில் வெளிவந்த இந்த‌ பதிவிற்கு, இதுவரை எந்த பின்னூட்டமும் (Feedback) வரவில்லை. இனி வந்தாலும் வரவேற்பேன். தமிழின் மீட்சி தொடர்பான இது போன்ற பதிவுகளை எதிர்த்து, 2018 சூனில், கீழ்வரும் பின்னூட்டம் (Feedback) வந்துள்ளது; 'பெரியார் போதை' எந்த அளவுக்கு ஆபத்தாக வளர்ந்துள்ளது? என்ற கேள்வியையும் எழுப்பி.


தங்கள் மாற்றம் தாய்மொழி, பராம்பரியம், மரபுகளைக் காப்பாற்றும் மீட்டெடுக்கும்  பழைமைப் போக்கில் உள்ளது (இதைப் பற்றியும் பெரியார் 'மலத்தில் அரிசி பொறுக்காதீர்கள்' என்று எச்சரித்துள்ளார். ஆனால் அதை நீங்கள் இப்போது ஏற்க மாட்டீர்கள் என்றே நினைக்கின்றேன்.)”
- 'பெரியார்' ஆதரவாளரிடமிருந்து வந்த மடலில்.;

தமிழ் இலக்கியங்களை எல்லாம் 'மலமாக' பார்த்த ஈ.வெ.ராவின் 'அறிவு மஞ்சள் காமாலை நோய்' என்பதானது, (திருக்குறள்  573-இன் படி), தமது அறிவு வரை எல்லைகள்  (intellectual limitations) தெரியாமல், தமிழ் இலக்கியங்கள் மட்டுமின்றி, 'எதைப் பார்த்தாலும்' அது போன்ற நோயில், எவரும் சிக்குவதில் இருந்து தப்பிக்க முடியாது; என்பதற்கு மேலே குறிப்பிட்டதானது, முக்கியத்துவம் பெற்ற சான்றானது. நேர்மையான சுயசம்பாத்தியமின்றி, 'பெரியார்' கொள்கையாளராக ஊழல் முதலைகளுக்கு நெருக்கமாகி, தமிழ்நாட்டை சீரழிப்பதற்கு, மேலே குறிப்பிட்ட 'அறிவு மஞ்சள் காமாலை நோய்' எந்த அளவுக்கு பங்களிக்கிறது? என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளேன். 


படிக்கவும்: 'காட்டுமிராண்டி' தமிழும், 'குருட்டு' பகுத்தறிவும்'
http://tamilsdirection.blogspot.com/2018/12/blog-post.html

No comments:

Post a Comment