Monday, February 20, 2017

தமிழ்நாட்டில் முளை விட்டு ' தடம் புரண்ட‌', பிரிவினை போக்கும்; இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக', 'பாதை மாறிய', பிரிவினைப் போக்கும்;


சங்கமமானதன் விளைவே, 'சசிகலா பினாமி' ஆட்சியா?


தமிழ்நாட்டில் 'மண்ணோடு பற்றற்ற தனித்தமிழ்நாடு’  கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகத்தையும், 'அரசியல் நீக்கத்தில்'  (Depoliticize), கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு, ஆதாய அரசியலில் கூட்டணி போக்கில் பயணித்து வந்த கட்சிகளையும் ஓரங்கட்டி;

மாணவர்களும் இளைஞர்களும் முன்னெடுத்து வெற்றி பெற்றுள்ள 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டமானது;

 'மண்ணோடு பற்றற்ற' போக்கிற்கும்;

தமிழ் மொழியும், பண்பாடும், பாரம்பரியமும் தமிழருக்கு கேடானவை என்று தவறான போக்கிற்கும் எதிராக புதிதாக;

திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில்,  'ஆதாய அரசியல்' மூலம் அரங்கேறியுள்ள‌, அரசியல் நீக்கத்தையும் தகர்க்க;

வெளிப்பட்டுள்ள 'நம்பிக்கையூட்டும் வெளிச்சமாகும்.’

தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations) பற்றிய புரிதலின்றி, ஈ.வெ.ரா அவர்கள், தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை கேடாக கருதி, அவற்றிற்கும், தமிழர்கள் வாழும் மண்ணிற்கும், உள்ள நெருக்கமான தொடர்புகள் பற்றிய புரிதலின்றி; 

தமிழ்நாட்டில் 'மண்ணோடு பற்றற்ற தனித்தமிழ்நாடு கனவுகளில் வாழுகின்ற, உதிரிகளின் கூட்டத்தை உருவாக்கிய போக்கின் உச்சக்கட்டமாக, தமிழ்நாடு இன்று 'சசிகலா பினாமி' ஆட்சியில் சிக்கியுள்ளதா? என்ற ஆய்வுக்கான நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்.

1967இல் ஆட்சிக்கு வந்த 'திராவிட' கட்சிகளின் பங்களிப்பால், தமிழ்நாட்டில் வளர்ந்து வந்த 'அரசியல் நீக்கமானது', 1980களில் அந்த கட்சிகளின் 'உதவிகளை' அதன் வரை எல்லைகள் (limitations)  பற்றிய புரிதலின்றி, பெற்று 'ஈழ விடுதலை' குழுக்கள் பயணித்த போக்கிலும், அந்த போக்கின் ஊடேயே மற்ற குழுக்களை அழித்து, விடுதலைப் புலிகள் பயணித்த போக்கிலும், அதன் தொகுவிளைவானது, எவ்வாறு தமிழ்நாட்டின்' அரசியல் நீக்கத்திற்கு' 'வினை ஊக்கி' ஆனது? என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html)

இலங்கையில் 'தனிநாடு' கோரிய பிரிவினை போராட்டமானது, வன்முறையற்ற பாதையிலிருந்து விலகி,  'ஆயுத போராட்டமாக' வளர்ந்து வந்த போக்கும்;

இந்தியாவில் தமிழ்நாட்டில் 'அடைந்தால் திராவிட நாடு, இன்றேல் சுடுகாடு' என்று 'தனிநாடு' கோரிய பிரிவினை போராட்டமானது, 'பிரிவினைத் தடைச் சட்டம்' வந்தவுடன்', 'பிரிவினையை கை விடுகிறேன். ஆனால் பிரிவினைக்கான காரணங்கள் தொடர்கின்றன' அன்று அறிவித்து, பயணித்து, 1967இல் திராவிடக் கட்சிகள் ஆட்சியைப் பிடித்து, ஊழலை அரங்கேற்றி தமிழ்நாட்டின் ஏரிகள், ஆறுகள், கிரானைட், தாது மணல், ஆற்று மணல், காடுகள் உள்ளிட்டு இன்னும் பல கனி வளங்களை கொள்ளை அடித்து, பயணித்து வந்த போக்கும்:

1980‍களில் சங்கமமானது.

'தமிழ்நாட்டில் எந்த பிரச்சினை வெளிப்பட்டாலும் ,அதை தமது எலும்புத் துண்டு வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு விழிப்புடன் இருப்பதும் அவசியமே. தமது ஊழல் குறுக்குவழி பணத்தின் ஒரு பகுதியை, 'முதலீடாக' 'நன்கொடை' வழங்கி, 'சாதி ஒழிப்பு, தமிழ் உணர்வு, ஆன்மீகம்' போன்ற, அமைப்புகளின் புரவலராக வலம் வரும் அந்த செயல்நுட்பத்தினை' ஏற்கனவே பார்த்தோம். (‘தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும்‍;வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்’;
http://tamilsdirection.blogspot.com/2013_10_01_archive.html )

இந்தியாவில், தமிழ்நாட்டில் சுயலாப‌ அரசியல் கணக்கு, அல்லது தனித்தமிழ்நாடு போதையில் உணர்ச்சிபூர்வ’ வன்முறை வழிபாட்டு போக்கு ஆகிய காரணங்களால் வெளிப்பட்ட‌ 'உதவிகளையும்' (பாவத்தில் பங்கையும்), 'கிடைத்த வரைக்கும் லாபம்' என்ற வகையில்;

அந்த சங்கமத்தின் பலத்தில், 'தனி ஈழ' போராட்டம் பயணித்த போக்கானது, எவ்வாறு முள்ளிவாய்க்கால் அழிவை நோக்கி, பயணித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

“முள்ளி வாய்க்கால் போர் தொடங்குவதற்கு முன்னும், போர் நடந்த போதும், அதற்குப் பின்னும் இன்று வரையிலும் சாதாரண பொது மக்கள் தத்தம் பிரச்சினைகளில் 'மூழ்கி', அந்தப் பிரச்சினைகளுக்காக 'மட்டுமே' தாமாகவே வீதியில் இறங்கி போராடி, வாழ்ந்து வருகிறார்கள். 1983 சூலை இனப்படுகொலைக்குப்பின் தாமாகவே கொந்தளித்து, நீண்ட காலம் நீடித்த தமிழ்நாட்டு மக்கள் ஆதரவாகப் பெருகிய 'சமூக ஆற்றலானது, எந்தெந்த வழிகளில் விரயமானது என்று ஆராய்ந்தால் தான், .(‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்   (Social Fibers & Social Bonds)’;

தமிழ் நாட்டு  சராசரி மக்கள், இன்று 'தமிழ் ஈழம்' மட்டுமல்ல, 'தமிழ் உணர்வு, இந்தி எதிர்ப்பு' போன்றவற்றிலிருந்தும் அந்நியப்பட்டு வாழ்வது ஏன் என்பது தெளிவாகும்.

மேலே குறிப்பிட்ட 'தமிழ் ஈழம்' ஆதரவு சமூக ஆற்றலானது, ஈழ விடுதலைக் குழுக்கள் தமக்குள் கூறு போட்டு 'பயன்படுத்திய' போக்கிலும், அதன்பின் ஒருவரையொருவர் அழித்த போக்கிலும், அதனூடே பணபலம் அதிகரித்த போக்கில், தமிழ்நாட்டு 'தனி ஈழம்' ஆதரவாளர்கள் பலரின் வசதி வாய்ப்புகள் வளர்ந்து, சராசரி வாழ்க்கையிலிருந்து 'மேல் தட்டு' வாழ்க்கைக்குத் தாவிய போக்கிலும், அந்த போக்கின் ஊடேயே, சராசரியாக வாழும் பொதுமக்களிடமிருந்து அந்நியமாகியும், 'திராவிட அரசியல் கொள்ளையர்களான 'புரவலர்களிடம்' நெருக்கமாகி வரும் போக்கிலும், அந்த ஆற்றல் விரயமாகி,  வற்றி வருகிறது.” 
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )

அதே போல, இலங்கையிலும் அந்த சங்கமமானது, வித்தியாசமான சமூக விளைவினை ஏற்படுத்தி வருகிறது.

எனது கவனத்தை ஈர்த்த , ‘ புலம்(ன்) பெயர் தமிழர்களின் கோடைக் கால‌ விடுமுறையும் பொய் முகங்களும் –‘  என்ற கட்டுரையானது கீழ்வரும் கருத்தை, உரிய சான்றுகளுடன் நன்கு விளக்கியுள்ளது.

“யார் இந்த புலம்பெயர் தமிழர்கள் என்பதை இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்.

1980களின் பின் யுத்தம் ஆரம்பித்த போது,  அதை சாட்டாக வைத்து,  மேற்குலக நாடுகளுக்கு பிழைப்புக்காக‌ வந்தவர்கள் தான் இவர்களில் பெரும்பாலானவர்கள். ( புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களில் 20 வீதமானவர்கள் மட்டுமே உயிராபத்தால்,  தமது சொந்த நாட்டை விட்டு வெளியேறியவர்கள்  . மிகுதி 80 வீதமானவர்கள் சொத்து சேர்ப்பதற்காக மேற்குலக நாடுகளை நாடி வந்தனர். )

இந்த புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழும் மேற்குலக நாடுகளில்   பொய் வாழ்க்கை வாழ்வது மட்டுமல்ல, விடுமுறை என்று தமது சொந்த ஊருக்கு சென்றும் அங்கும் பொய்யான பகட்டை காட்டி விட்டே வருகின்றனர்……………

துப்புரவுத் தொழிலாளியாக‌ புலம்பெயர் நாடுகளில் வேலை செய்யும் ஒருவர் இலங்கையில் காட்டும் 'கலரால்'  பிரமித்துப் போகும் உள்ளூர்வாசிகள் புலம்பெயர் நாடுகள் தொடர்பாகக் கனவுகளில் ஈடுபட ஆரம்பித்து விடுகின்றனர்.. மண்ணோடு பற்றற்ற ஐரோப்பிய கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் ஒன்று வடக்கிலும் கிழக்கிலும் உருவாகி விடுகின்றது.”

புலம் பெயர்ந்தவராக வாழும் 'தமிழ்த் தேசியம் பேசும் வீரமங்கை'களும் மேற்குறிப்பிட்ட உதிரிகள் சமூக செயல்நுட்ப வினை ஊக்கியாக செயல்படுவதும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழர் அமைப்புக்களும் சரி, சில தனிநப‌ர்களும் சரி இலங்கை மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்பட வேண்டும், 5ஆம் கட்ட‌ ஈழப்போர் மீண்டும் ஆரம்பமாக வேண்டும், என்றே விரும்புகின்றனர்.

இதன் மூலம் எஞ்சி இருக்கும் தங்களின் உறவினர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து கொள்ள முடியும் என்றும்  நம்புகின்றனர்.

இத்தகைய போலிகள் தான் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தங்களின் சொற்படி நடக்க வேண்டும் என சன்னதம் ஆடுகின்றனர்.

வெளிநாடுகளில் உள்ளவர்களின் இத்தகைய போலித்தன‌ங்கள் தாயகத்தில் உள்ள மக்களுக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் இடையில் பெரும் இடைவெளியை உருவாக்கியிருக்கிறது………..

புலம்பெயர்ந்தவர்கள் யாரைத் தோற்கடிக்க வேண்டும்  எனக் கோரினார்களோ, அவர்களை தாயகத்தில் உள்ள மக்கள் அமோக ஆதரவளித்து வெற்றி பெற வைத்திருக்கின்றனர்.”

மேலே குறிப்பிட்ட கட்டுரையில், "புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் என அழைக்கப்படும்  தமிழர் ஒருங்கிணைப்பு குழு, ஈழத்தமிழர் அவை, நாடு கட‌ந்த தமிழீழ அரசு போன்ற பல்வேறு அமைப்புக்களும் தங்களை சுற்றி ஒளிவட்டம் இருப்பதாக கற்பனை செய்து கொண்டிருந்தனர். இந்த ஒளிவட்டங்களை எல்லாம் கட‌ந்த பொதுத்தேர்தலில் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் முற்றாக தகர்த்தெறிந்து விட்டனர்." என்ற கருத்தானது கவனிக்கத் தக்கதாகும்.

மேலே குறிப்பிட்ட மேற்கத்திய நாடுகளில் உள்ள அமைப்புகளின் ஆதரவில், ஊக்குவிப்பில், தமிழ்நாட்டில் 'தனித்தமிழ்நாடு' கனவுகளுடன், 'தங்களை சுற்றி ஒளிவட்டம் இருப்பதாக கற்பனை செய்து கொண்டிருந்த' அமைப்புகள் எல்லாம் முள்ளிவாய்க்கால் போரின் போது, 'துரோகம்' இழைத்ததாக கூறி, 2009 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியை எதிர்த்தனர்; 

முள்ளி வாய்க்கால் போரின் போது, தி.மு.கவைப் போலவே, தி.மு.கவை 'துரோகம்' இழைத்ததாக கூறியவர்கள் எல்லாம், 'திலீபனை' போல சாகாமல், ‘சாகும் வரை’ உண்ணாவிரத நாடகம், 'சில மாதங்கள் கூட சிறை செல்ல விரும்பாத' 'போராட்ட நாடகம்' நடத்தி, 'விடுதலைப் புலிகளை' 'முட்டாள்களாக்கி', 'நோகாமல்' போராடியதையும், தமிழ்நாட்டில் சாதாரண மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், என்பது கூட தெரியாமல்.

தேர்தல் முடிவுகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றதோடு, 22 தொகுதிகளில் போட்டி போட்ட தி.மு.கவானது,18 தொகுதிகளில் வென்று சாதனை படைத்தது. அதாவது இலங்கையில் நடந்த பொதுத் தேர்தலில், ஒளிவட்டங்களை எல்லாம் முற்றாக தகர்த்தெறிந்தது போல, அந்த ஒளிவட்டங்களின் ஆதரவில், ஊக்குவிப்பில் செயல்பட்ட தமிழ்நாட்டு ஒளிவட்டங்களும், 2009 பாராளுமன்ற தேர்தலில் அதே முடிவை சந்தித்தன.

மேற்குறிப்பிட்ட கட்டுரையில், "மண்ணோடு பற்றற்ற ஐரோப்பிய கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் ஒன்று வடக்கிலும் கிழக்கிலும் உருவாகி விடுகின்றது." என்பது மிகவும் முக்கியமான கருத்தாகும்.

பிறந்த மண்ணும், தாய்மொழியும், பண்பாடும், பாரம்பரியமும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமான தொடர்புடையதாகும்.

தமிழ்நாட்டில் பிரிவினை கோரிக்கையை முன்னெடுத்த ஈ.வெ.ரா அவர்கள் அந்த நெருக்கமான தொடர்பு பற்றிய புரிதல் இல்லாமலும், தமிழ் மொழியும், பண்பாடும், பாரம்பரியமும் தமிழருக்கு கேடானவை என்று தவறாகவும், அன்றைய தஞ்சை மாவட்டம் அளவுக்கு தனிநாடு கிடைத்தாலே போதும் என்றும், 'திராவிட/தமிழ் நாடு' பிரிவினையை முன்னெடுத்ததானது, தமிழ்நாட்டில் 'மண்ணோடு பற்றற்ற தனித்தமிழ்நாடு கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் ஒன்று, தமிழ் மொழிக்கும், தமிழர் நலனுக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடாக வளர்ந்துள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

காடலான் (https://en.wikipedia.org/wiki/Catalan_independence_movement), குர்திஸ்தான் (https://www.channelnewsasia.com/news/world/after-failed-independence-bid--disillusioned-kurds-to-vote-in-iraqi-poll-10222636) உள்ளிட்டு நிகழ்கால விடுதலை முயற்சிகளில், சுய ஆட்சிக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தவற விட்டு, சர்வதேச அரசியல் பொருளாதார போக்குகள் பற்றிய புரிதலின்றி, சிறுவர்களையும், பெண்களையும் ஆயுதம் ஏந்திய போராளிகளாக்கி, சிவிலியன்களை மனித கேடயமாக்கி, எண்ணற்ற உயிரிழப்புகளையும், உடைமை இழப்புகளையும் ஏற்படுத்தி, தவற விட்ட சுயாட்சியுடன் கீழான அதிகார ஆட்சியில் முடிந்துள்ள, 'சாண் ஏறி, முழம் சறுக்கி சாதனை படைத்துள்ள'(?) விடுதலைப்புலிகளையும், பிரபாகரனையும், அறிவுபூர்வ விமர்சனத்திற்கு உட்படுத்தாமல், 'துதி' பாடும் போக்கு இனியும் தொடர்ந்தால், அது 'வின்னர் வடிவேலு பாணி காமெடி' ஆகி விடாதா?

மண்ணோடு பற்றற்ற ஐரோப்பிய கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் இலங்கை தமிழர்களிடையே உருவான போக்கிற்கு;

தமிழ்நாட்டில் இயற்கை கனி வளங்களை சூறையாடிய 'ஊழல்' கொள்ளையர்களை எதிர்க்காமல், 'மண்ணோடு பற்றற்ற தனித்தமிழ்நாடு  கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் உருவான போக்கானது;

எந்த அளவுக்கு பங்களிப்பு வழங்கியுள்ளது? என்ற ஆய்விற்கு;

மேலே குறிப்பிட்ட, தமிழ்நாட்டில் முளை விட்டு ' தடம் புரண்ட‌' பிரிவினை போக்கும், இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக' 'பாதை மாறிய' பிரிவினைப் போக்கும்;

1980களில் சங்கமமான சமூக செயல்நுட்பத்தினை ஆராய்வதும் அவசியமாகி விட்டது.

அந்த 'சங்கம' காலக்கட்டத்தில் செயல்பட்ட 'திருச்சி பெரியார் மையத்தை' ஏணியாக்கி, அதன் மூலம், 'சசிகலா குடும்ப ஊழல்' வலைப்பின்னலில் இடம் பெற்று, 'அதிவேக' பணக்காரராகி, அதன் மூலம் 'பெரியார்' எடுபிடிகள் துணையுடன், வெளிப்பட்ட 'பெரியார் சமூக கிருமிகள்' எல்லாம்;

எவ்வாறு 'தனித்துவமான(Unique) சமூகவியல் ஆய்வு சோதனைக்கான‌(Sociological Research Experiment), மனித ஆய்வுப் பொருட்களாக‌-human subjects'(https://www.uaf.edu/ori/responsible-conduct/human-research-subjects/) எனது ஆய்வுகளுக்கு உதவி, இந்த பதிவு உள்ளிட்ட ஆய்வுகள் நோக்கி, நான் கவனம் செலுத்தி, தமிழ்நாட்டின் மீட்சிக்கான‌, அரிய சமூகவியல் ஆய்வு முடிவுகள் பெற முடிந்தது?

தமிழ்நாட்டில் பிறந்த மண்ணோடும், தாய்மொழியோடும், பற்றில்லாமல், நேர்மையான சுயசம்பாத்திய வழியற்ற, 'பெரியார்' உதிரிகள் துணையுடன், 'திராவிட அரசியல்' வளர்ந்த போக்கில்;

ச‌மூக இழைகளிலும் (Social Fibers), பிணைப்புகளிலும் (Social Bonds) ஏற்பட்ட பண்பு மாற்றங்களால், குடும்பம், நட்பு உள்ளிட்டு 'அன்பின்' அடிப்படையில் இருந்த மனித உறவுகளெல்லாம் 'பணத்திற்கு' அடிமையான செல்வாக்கில், தமிழ்நாடு சிக்கியதன் விளைவாக; 
(http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

'திருச்சி பெரியார் மையத்தில்' இருந்து, பின்னர் மனித இழிவின் 'திராவிட' இலக்கணமாக‌'சசிகலா குடும்ப அரசியல்' எடுபிடிகளான, 'பெரியார் சமூக கிருமிகள்' போல;

ஜெயலலிதாவின் விசுவாசிகளாக இருந்து, ஜெயலலிதாவால் சதிக்குற்றம் சாட்டப்பவர்களின் 'எடுபிடிகளாக' இன்று வலம் வந்த போக்கில், 'சசிகலா பினாமி' ஆட்சியில், தமிழ்நாடு சிக்க நேர்ந்துள்ளதா?

என்பதை எல்லாம் எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன். 'தான் உழைக்காமல், உழைப்பின் மூலம் உயராமல், ஒரு தலைவரையே நம்பிப் பிழைப்பு நடத்தும் அரசியல் கலாச்சாரம்' ('துக்ளக்' 01 - 02 - 2017  கேள்வி - பதில்) உள்ள தமிழ்நாட்டில், அந்த பிழைப்பில் உள்ள தலைவர்களின் 'உதவியையும்' பெற்று பயணித்தது விடுதலைப் புலிகள் இயக்கமாகும். உதாரணமாக, ஜெயலலிதாவை 'பால்கனி பாவை' என்று இன்னும் ஆபாசமாக வர்ணித்து, பின் பிழைப்பிற்காக ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்த, (மரணம் அடைந்ததால், சிறைத் தண்டனையிலிருந்து தப்பித்துள்ள காளிமுத்துவும்; (http://www.thehindu.com/news/cities/chennai/Five-sent-to-jail-in-33-year-old-Robin-Mayne-case/article14028554.ece?homepage=true?w=alstates) அவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு உதவியவர்களில் ஒருவர் ஆவார். அதாவது தமிழ்நாட்டை ஊழல் மூலம் சூறையாடியவர்களின்,(சுயலாப அரசியல் கணக்கு, அல்லது தனித்தமிழ்நாடு போதையில் உணர்ச்சிபூர்வ வன்முறை வழிபாட்டு போக்கு காரணங்களால் வெளிப்பட்ட‌) 'உதவியையும்' (பாவத்தில் பங்கையும்), பெறுவதில் உள்ள பழியைப் பற்றிய புரிதலின்றி பயணித்தது விடுதலைப் புலிகள் இயக்கம்.' 
(http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_27.html) 

மேலே குறிப்பிட்ட இரு வேறு பிரிவினை போக்குகளின் சங்கமத்தில்,  எவ்வாறு,

தமிழ்நாட்டில் 'ஊழல் சுனாமி' அரங்கேறி, 'கல்வி வியாபாரம்' மூலமாக, தமிழ்வழிக் கல்வியையும் ( எனவே தமிழையும்) மரணப் படுக்கைக்கு உள்ளாக்கி, மலைகள், காடுகள், தாது மணல், ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட கனி வளங்கள் சூறையாடப்பட்டன? தனியார் சொத்துகள் அச்சுறுத்தல் மூலம் அபகரிக்கப்பட்டன? என்ற ஆய்வின் மூலமே;

அதன் மூலம் 'ஈட்டிய' பண பலத்தில், 'வன்முறை அச்சுறுத்தல்' பலத்தில்;

தமிழ்நாட்டிற்கு தலைக்குனிவான, 'சசிகலா பினாமி' ஆட்சி அரங்கேறியுள்ளதா?

'ஆதாய வமரியாதை அரசியல்' குவியமாகியுள்ள 'சசிகலா குடும்ப அரசியலுக்கும்', 'சுயலாப நோக்கற்ற சுயமரியாதை மீட்சி அரசியலுக்கும்', இடையே போர் துவங்கியுள்ளதா? திராவிட அரசியல் சுயநல போக்குகளிலிருந்து தப்பித்து, அந்த போரின் முடிவும், தமிழ்நாட்டின் விடிவாகுமா? அத்தகைய ஆக்கபூர்வ விடிவு நோக்கி, தமிழ்நாடு பயணிப்பதற்கு, சுயலாப நோக்கின்றி, நமது வரையறைகள் (limitations)  பற்றிய தெளிவுடன், நாம் எவ்வாறு பங்களிக்க முடியும்?

என்ற சமூக செயல்நுட்பத்தினை ஆராய்வதும்;

தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு வழி வகுக்கும். 

No comments:

Post a Comment