Wednesday, December 27, 2017


'அந்த'(?)  ஓட்டப்பந்தயத்தில் சிக்கிய 'முட்டாள்த் தமிழர்கள்' (3) ?

திராவிட அரசியலை முடித்து வைத்த 'பணத்துவா'




முந்தைய பதிவின் துவக்கத்தில் குறிப்பிட்ட நண்பர், ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்குப்பின் கீழ்வரும் கேள்வியை எழுப்பினார். 


'நடுத்தரப் பிரிவு மக்களும் வாக்குக்கு பணம் வாங்குவார்களா?"


அவருக்கு கீழ்வரும் பதிலை தெரிவித்தேன்.


"வாக்குக்கு சில நூறு ரூபாய்களாக இருந்தது வரை, ஈர்க்கப்படாத நடுத்தர மக்களை, திருமங்கலம் தேர்தல் ஃபார்முலாவில், வாக்குக்கு ஆயிரக்கணக்கில் விநியோகிக்கப்பட்டதானது, 5 வாக்குகள் உள்ள குடும்பத்துக்கு ரூ.25000 என்பது ஈர்த்ததில் வியப்பில்லை.


'பணமே தெய்வம்' என்று பயணிக்கும் படித்த, மேல்த்தட்டு குடும்பங்களும் அதிகரித்து வரும் தமிழ்நாட்டில்;


வாக்குக்கு 5 லட்சமாக உயர்ந்தால், இதுவரை எந்த தேர்தலிலும் வாக்களிக்காத வசதியான குடும்பங்களும், பல மணி நேரம் வரிசையில் நின்று வாக்களிப்பார்கள்".


ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், 'லேப்டாப்', 'ஸ்மார்ட் ஃபோன்' வாங்கும் அளவுக்கு விநியோகிக்கப்பட்ட  பணமானது, இளைஞர்களையும், மாணவர்களையும் பெரும் அளவில் வாக்களிக்க வைத்ததா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


ஏழை, நடுத்தர, வசதியான என்று தமிழ்நாட்டில் எல்லா மட்டங்களிலும், அவரவருக்கான 'விலை'யை கணித்து, தமது கொள்ளைக்குப் பயன்படுபவர்களுக்கு 'அந்தந்த' விலையைக் கொடுத்து, பெரிய எதிர்ப்பின்றி, தமிழ்நாட்டை கொள்ளையடிக்க முடியும்; தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க முடியும்; அதில் சற்று சொதப்பி மக்களின் கோப அலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், எதிரெதிர் அரசியல் கொள்ளைக் குடும்பங்களுக்கிடையில் 'உள்மறையான' (Latent) பரிமாற்ற பலன் உறவு மூலம் பாதிப்பின்றி கொள்ளையை தொடர முடியும்; என்று பயணித்த போக்கில்;


ஓ.பி.எஸ் முன்னெடுத்த 'புரட்சி'யானது ஏற்படுத்திய‌ சீர்குலைவினை பற்றிய புரிதலின்றி, அவரை கீழிறக்கி, ஈபிஎஸ்ஸை முன் நிறுத்திய‌ ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியான தி.மு.கவும் ஏமாந்த சூழலில்;

மத்திய அரசின் ஊழல் ஒழிப்பில் மெகா ஊழல் குற்றவாளிகள் எல்லாம் விடுதலை ஆகும் அளவுக்கு அரசு தரப்பு (Prosecution)  சொதப்பி வரும் சூழலில்;


'அந்த சந்துகளை' அதிபுத்திசாலித்தனமாக அடையாளம் கண்டு;

ஆட்சியில் இல்லாமலேயே, அந்த ‘ஃபார்முலா’வை சுருதி சுத்தமாக செயல்படுத்தி, தினகரன் வெற்றி பெற்ற தினத்தன்று;

தி.மு.க, அ.இ.அ.தி.மு.க தலைமை பீடங்கள் வெறிச்சோடி கிடந்தது, ஒரு முக்கியத்துவம் வாய்ந்த 'சிக்னல்' ஆகும்.


தமிழக மக்களைப் பொறுத்தமட்டில் சசிகலா குடும்பத்தின் இரண்டு முக்கிய முகங்கள் சசிகலாவும், நடாஜனும் ஆவர். தினகரன் துணைப்பொதுச்செயலாளர் பதவிக்கு வந்த உடனேயே, நடராஜனுக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று அறிவித்து, அந்த ஒரு முக வெறுப்பிலிருந்து ஓரளவு தப்பித்தார். ஆர்.கே.நகரில் 'ரத்தான' தேர்தலில் போட்டியிட்ட போதே, சசிகலாவின் படத்தையும், பெயரையும் தவிர்த்து, 'வள்ளலான' வேட்பாளராக வலம் வந்தார்.


நடந்து முடிந்த தேர்தலில் அந்த கட்சி சார்பின்றி, 'வள்ளலான' சுயேட்சை வேட்பாளராக, முதலில் குறிப்பிட்ட தேர்தல் கமிசன் குளறுபடிகள் மூலம் 'இரட்டை ஆதாயம்' பெற்று, 'இமாலய வெற்றியை' தினகரன் ஈட்டினாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது; மேலே குறிப்பிட்ட குளறுபடிகள் தொடர்பாக, தேர்தல் கமிசன் சார்பில், சரியான விளக்கமானது வெளிப்படும் வரை.


1996இலும் அதன் பின்னும் ஆட்சி மாற்றங்களுக்கு வழி வகுத்தது போன்ற கோப அலையானது, ஜெயலலிதாவின் 'மர்ம மரணம்' தொடர்பாக‌ வெளிப்படத் தொடங்கிய‌ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலானது ஒத்தி வைக்கப்பட்டது. அந்த தேர்தலில் மக்கள் பார்வையில் வில்லனாக தென்பட்டவர்கள், ஓ.பி.எஸ்ஸுடன் இணைந்து, இந்த முறை வலம் வந்த போக்கில், அந்த கோப அலையும் தேர்தல் களத்தில்  சுவடின்றி மறைந்தது. 


எம்.ஜி.ஆரின் வெற்றி முகத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட திண்டுக்கல் இடைத்தேர்தலில், காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாம் இடத்திற்கும், , தி.மு.க குடும்ப அரசியல் வெறுப்பு அலையில்,  தி.மு.கவானது டெபாசிட்டுடன் கூடிய மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.


அவ்வாறு ஓரங்கட்டப்பட்ட தி.மு.கவானது, 1996இல் சசிகலா குடும்ப புண்ணியத்தில் ஆட்சிக்கு வந்ததை  பார்த்தோம். தற்போது முடிந்துள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், 'பண அலையில்',   அதே சசிகலா குடும்ப தினகரன் புண்ணியத்தில், டெபாசீட் இழந்த மூன்றாம் இடத்திற்கு தி.மு.க இன்னும் மோசமாக ஓரங்கட்டப்பட்டுள்ளது.


1989இல் அ.இ.அ.தி.மு.க இரு அணிகளாக பிரிந்த போது ஆட்சியைப் பிடித்த தி.மு.க, இன்று அது போலவே, அ.இ.அ.தி.மு.க இரண்டு அணிகளாக பிளவு பட்டபோது, 'இந்துத்வா' எதிர்ப்பு கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஆதரித்த நிலையிலும், 'டெபாசீட்' இழக்கும் அளவுக்கு எப்படி பலகீனமானது?

தி.மு.க வாங்கிய வாக்குகளில், தி.மு.கவை ஆதரித்த கட்சிகளின் வாக்குகள் எவ்வளவு? என்று ஆராய்ந்தால், அந்த 'இந்துத்வா எதிர்ப்பு' கட்சிகளின் வாக்குக்களும், பா.ஜ.கவைப் போலவே, 'நோட்டா' வாக்குகளை விட குறைவாக இருந்தால் வியப்பில்லை.


'சர்க்காரியா கமிசன்' ஊழல் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருந்தால், அது தமிழ்நாட்டில் அரசியலில் ஊழல் செய்ய பயப்படும் விளைவினை ஏற்படுத்தியிருக்கும். அந்த ஊழல் குற்றவாளிகள் எல்லாம் தண்டிக்கப்பட்டிருந்தால், 1991இல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பலத்தில், 'சர்க்காரியா'  ஊழலானது அடுத்தக்கட்ட வளர்ச்சியாக. தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி பறிக்கும் அளவுக்கும், கிரானைட், தாது மணல், ஏரிகள், ஆறுகள் எல்லாம் ஊழலுக்கு இரையாகும் அளவுக்கும், வளர்ந்திருக்காது. அன்றைய பிரதமர் இந்திராவின் சுயநல அரசியல் காரணமாக, 'சர்க்காரியா' ஊழல் குற்றவாளிகள் எல்லாம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தனர். அந்த ஊழல் வளர்ச்சியின் விளைவாகவே 'பணத்துவா'அரங்கேறி, இன்று தி.மு.க டெபாசீட் இழந்தும், அ.இ.அ.தி.முக டெபாசீட் இழக்காமலும், தோல்விகளை சந்தித்துள்ளன.


திராவிட இயக்க தேர்தல் அரசியலை தொடங்கி வைத்தவர் அண்ணா என்றால், முடித்து வைப்பவர் சசிகலா என்று நான் கணித்திருந்தேன். 
(http://tamilsdirection.blogspot.com/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )


அ.இ.தி.மு.க இரு அணிகளாக பிளவுபட்டு சந்தித்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தி.மு.கவானது டெபாசீட் இழந்ததன் மூலமாகவும், ஆட்சிப் பொறுப்பில் இருந்த அ.இ.அ.தி.மு.க தோற்றதன் மூலமாகவும்,

திராவிட தேர்தல் அரசியலை, 'பண அரசியல்' மூலம் சசிகலாவின் ஆசியோடு தினகரன் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் ஆளுங்கட்சியினை ஏமாளியாக்கி, 'பணத்துவா' மூலம் தினகரன் வெற்றி பெற்ற பின், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அந்த 'கையாலாகாத திறனை', ஆக்ஸ்ஃபோர்ட் (Oxford) அகராதியில் உள்ளபடி குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகிய 'இம்பொடெண்ட்' (impotent) என்று குறிப்பிட்டார். அதை அரைகுறை ஆங்கில அறிவுள்ளவர்கள் தான், 'பிள்ளை பெற முடியாதவன்' என்று தவறாக புரிந்து கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் அமைச்சர் உட்பட ஆளுங்கட்சியில் இருப்பதும் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.


கொள்கையை காவு கொடுத்து, புலமையை ஓரங்கட்டி, 'பலவகை தரகு,  ரவுடித்தனம்' போன்றவற்றின் துணையுடன் ஊழலில் மூழ்கி, ஆதாய அரசியலில் தமிழ்நாட்டை அரசியல் நீக்கத்திற்கு (Depoliticize) உள்ளாக்கியதன் மூலம், தேசியக் கட்சிகளையும், கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஓரங்கட்டி வளர்ந்த‌,  திராவிட தேர்தல் அரசியலை, எதிர்பார்த்ததை விட இன்னும் விரைவாக முடித்து வைத்துள்ள பெருமையானது, தினகரனையே சாரும்; தேர்தல் கமிசனோ, நீதிமன்றமோ, இந்தியாவில் 'சட்டத்தின் ஆட்சி' (Rule of Law) இருப்பதாக காட்டிக் கொள்ள, தினகரன் பெற்ற வெற்றியானது, சட்டபூர்வமாக செல்லாது, என்று இனி முடிவு செய்தாலும்.


தி.க, கம்யூனிஸ்ட், உள்ளிட்டு அனைத்து 'இந்துத்வா'எதிர்ப்பு கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஆதரித்த தி.மு.க வேட்பாளர் 'டெபாசீட்'இழந்துள்ளார்.

இந்துத்வா ஆதரவு பா.ஜ.கவோ, நோட்டா வாக்குகளை விட குறைவாக பெற்றுள்ளது. நோட்டா வாக்குகளுக்கு நிச்சயமாக யாரும் பணம் கொடுத்திருக்க மாட்டார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜ.க கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை தெரிந்தால், அவர்களில் எத்தனை பேர் பா.ஜ.கவிற்கு வாக்களிக்கவில்லை, என்பதானது தெளிவாகும்.

தி.க ஆதரவோடு "ஆரிய திராவிட' கவசத்தை முன்னிறுத்திய நடராஜனை அவமானகரமாக ஓரங்கட்டி; 
(http://tamilsdirection.blogspot.in/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_12.html 

& http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_18.html   )


மோடி அரசின் 'அன்பை' வாய்ப்பு கிட்டும்போது ஈர்க்கும் திசையில், சுப்பிரமணிய சுவாமியின் ஆதரவுடன், தமிழ்நாட்டின் ஒரே சக்தியாக தம்மை நிரூபித்து, சசிகலா தினகரன் முன்னெடுத்த 'பணத்துவா' பெற்ற வெற்றியானது, தங்கள் அரசியல் வாழ்வில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி பெற்ற தேர்தல் வெற்றிகளை எல்லாம் விஞ்சி விட்டது.

திராவிட தேர்தல் அரசியலை, 'பண அரசியல்' மூலம் சசிகலாவின் ஆசியோடு தினகரன் முடிவுக்கு கொண்டு வந்துள்ள நிலையில்;

தமிழ்நாட்டில் சசிகலா குடும்ப அரசியலின் 'பணத்துவா' என்பதானது, 'இந்துத்வா ஆதரவு' மற்றும் எதிர்ப்புக் கட்சிகள் எல்லாவற்றையும் ஓரங்கட்டியதானது;

1944இல் தொடங்கப்பட்ட 'திராவிடர் கழகம்' சந்தித்து வரும்  இறுதி முடிவின் சிக்னலாகும்.


'இனம்' என்ற தமிழ்ச் சொல்லின் பொருளானது, காலனிய சூழ்ச்சியில் திரிந்து, 'தமிழ் அடையாள அழிப்பு' போக்கில், 'திராவிட அரசியல் ஊழல் பாதுகாப்பு கவசமாக' ப‌யணித்த போக்கில், சசிகலா குடும்ப ஊழல் பாதுகாப்பில் இறுதிக்கட்டத்தை அடைந்து, பயன் மதிப்பை இழந்து, நடராஜனுடன் சேர்ந்து ஓரங்கட்டப்பட்டு, சுப்பிரமணிய சுவாமியின் ஆதரவுடன், சசிகலா தினகரன் மூலம்  1944இல் தொடங்கியதானது முடிவுக்கு வருவதன் மூலம்;

ஆங்கில வழிக்கல்வி வியாபாரத்தின் முதுகெலும்பான 'திராவிட அரசியல் ஊழல்' ஒழிந்து, 'தமிழ் அடையாள மீட்சி'யானது சாத்தியமாகி வருகிறது.


'பண மதிப்பு நீக்கம்', 'கள்ளப்பணம் ஒழிப்பு' நடவடிக்கைகளில் மோடி அரசானது தமிழ்நாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாதது மட்டுமல்ல, தமிழக அரசியலையே 'பண அலையில்' சிக்க வைத்து விட்டதோ? என்ற கேள்வியை, ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் எழுப்பியுள்ளன.

எனவே தமிழக அரசியலானது 'பண அலையில்' சிக்கி, இனியும் பயணிக்குமானால், அதற்கான குற்றவாளியாக மோடியை, தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறையுள்ளவர்கள் கருதினால், வியப்பில்லை; தமிழ்நாட்டு 'மெகா' ஊழல் குற்றவாளிகள் எல்லாம் அடுத்து அடுத்து 'விடுதலை'ஆகி வரும் சூழலில். ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில், பா.ஜ.க‌ 'நோட்டா'வை விட குறைவான வாக்குகள் பெற்றது, அதற்கான 'எச்சரிக்கை சிக்னல்' ஆகும்.


மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில், அபார வெற்றி பெற்று பிரதமராக உதவிய முக்கிய காரணங்களில் ஒன்றாக 2ஜி ஊழலும் இருந்தது. அவர் பிரதமராகி, அந்த வழக்கில் அரசு தரப்பு வாதங்களில் இருந்த சொதப்பல் காரணமாக, குற்றவாளிகள் விடுதலை ஆகியுள்ள நிலையில்;

ஏற்கனவே தயாநிதி மாறனும் ‘'ஏர்செல் - மாக்சிஸ்' வழக்கில் (Aircel-Maxis case ) விடுதலை ஆகியுள்ள நிலையில்; (http://www.firstpost.com/politics/aircel-maxis-case-dayanidhi-marans-acquittal-is-major-setback-for-cbi-ed-but-will-it-resurrect-the-politician-3264434.html


சிதம்பரம் உள்ளிட்டு தமிழ்நாட்டு முக்கிய புள்ளிகளை மையமாகக் கொண்டு, மத்திய அரசின் வருமான வரித் துறை, சி.பி.அய் உள்ளிட்ட அமைப்புகளின் சோதனைகள் எல்லாம் , குற்றவாளிகளை சிறையில் தள்ளாமல், 2ஜி வழக்கப் போலவே அரசு தரப்பு சொதப்பல்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தி, உதவி வரும் சூழலில்;

அடுத்த பாராளுமன்ற தேர்தலில், பா.ஜ.க எதிர்பாராத தோல்வியைத் தழுவ, அதே 2ஜி வழக்கு தீர்ப்பும் முக்கிய காரணமாக அமைந்தால் வியப்பில்லை; (https://telecom.economictimes.indiatimes.com/news/2g-scam-case-narendra-modi-may-have-just-lost-his-most-used-political-weapon/62194674 ) குஜராத்தில் தட்டுத் த‌டுமாறி பெற்ற வெற்றியும், ஆர்.கே.நகர் 'நோட்டா' எச்சரிக்கை சிக்னலும், அதற்கான முன் அறிவிப்பாக.

எனவே தமிழ்நாட்டை 'பணத்துவா' நோயிலிருந்து மீட்பதற்கு மோடியை மட்டும் நம்பி பயணித்தால், தமிழ்நாடானது இன்னும் மோசமாக சீரழியும் என்பது எனது கணிப்பாகும்.


மோடி பிரதமரானாலும், மத்திய அரசில் முந்தைய ஆட்சியில் வலுவுடன் இருந்த ஊழல் ஆதரவு சக்திகளை மோடி இன்னும் வீழ்த்தவில்லை;

என்பதை மோடி ஆதரவாளர்களே பகிரங்கமாக வெளிப்படுத்தி வரும் காலம் இதுவாகும்.


திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் 'அரசியல் நீக்கம்' (Depoliticize) ஏற்பட்டு, ஆதாய அரசியலில் தமிழ்நாடு சிக்கியதன் உச்சக்கட்ட வெளிப்பாடே  ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றியாகும். அதில் பணத்துக்காக வாக்களித்த மக்களைப் போன்றவர்கள் தான், 'கோப அலையில்' திருமங்கலம் ஃபார்முலாவை அமுல்படுத்திய பின்னும், ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் வாக்களித்தவர்கள், என்பதையும் மறந்து விடக்கூடாது. எனவே ஊழலுக்கு எதிரான கோப அலை வெளிப்படும்போது, அதையே தான் அவர்கள் செய்வார்கள்.


'அரசியல் நீக்கத்தில்' (Depoliticize) பயணிக்கும் தமிழ்நாட்டில், ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்கு அரசியல் ரீதியில் முக்கியத்துவம் கிடையாது; ஊடகங்கள் உள்ளிட்ட ஜ‌னநாயகத் தூண்கள் எல்லாம் ஊழல் ஊடுருவலில் சிக்கியுள்ள சூழலில்.


தமிழ்நாட்டில், இந்தியாவுக்கே முன்னுதாரணமாக, அரசு வேடிக்கை பார்க்க, டாஸ்மாக் கடைகளை பெண்களே அடித்து நொறுக்கி, அரசு பயந்து அக்கடைகளை அகற்றுவதும், லஞ்சம் வாங்கும் போலீசாரை இளைஞர்கள், ஃபோனில் வீடியோ எடுத்து, 'வாட்ஸ் ஆஃபில்' பரப்பி, அந்த போலீசார் சஸ்பெண்ட் ஆகி வருவதும், அரசியல் கட்சிகளை ஓரங்கட்டி, தமிழ்நாட்டில் ஆங்காங்கே பெண்களே பொதுப் பிரச்சினைகளுக்காக சாலை மறியல் மூலம் தீர்வு கண்டு வருவதும்;


தமிழ்நாட்டு அரசியல் கொள்ளைக்காரர்களுக்கு நெருங்கி வரும் ஆபத்தின் அறிகுறிகள் ஆகும்.


எனவே தமிழ்நாட்டு அரசியலை 'பண அலையிலிருந்து' மீட்பது என்பதில் தமிழ்நாட்டின் நலன்கள் மீது, சுயலாப நோக்கற்ற அக்கறையுள்ளவர்கள் எல்லாம், தத்தம் கொள்கை, கட்சி வேறுபாடுகளை ஓரங்கட்டி, ஓரணியில் திரண்டால் மட்டுமே சாத்தியமாகும்.


தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிரான சமூக அழுத்தமானது பாரபட்சமின்றி வெளிப்பட்டால் தான்,


ஊழல் குற்றவாளிகளுக்கு உதவ, ஊழல் வலையில் சிக்கிய நீதிபதிகளும்  அஞ்சுவார்கள். ஊழலில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை எல்லாம், தமிழ்நாட்டில் பள்ளிகளை சீரமைத்தல், சாலைகளை சீரமைத்தல், குடிநீர் பற்றாக்குறையை ஒழித்தல் போன்ற பொது காரியங்களுக்கு செலவிட வேண்டிய நெருக்கடியை மத்திய, மாநில அரசுகளும் உணரும்; 
(http://tamilsdirection.blogspot.com/2017/11/cognitiveskills.html )

அந்த விளைவிற்கான 'ஊழல் எதிர்ப்பு கோப அலை'யானது உருவாகும் வரை, அறிவுஜீவிகள், பத்திரிக்கை அதிபர்கள் போன்றவர்கள் எல்லாம் ஊழல் திமிங்கலங்களுடன் 'நெருக்கமாகி', அவரவர் 'யோக்கியதைக்கு' ஏற்ற பலன்கள் அனுபவித்து வரும் சூழலில், அத்தகைய வாய்ப்புகள் சாதாரண மக்களுக்கு இல்லாத நிலையில்;

அரசியல் கொள்ளையர்களின் பணத்தை எல்லாம், கட்சிக் கூட்டங்களில் பங்கேற்க கட்டணம், வாக்குகள் விற்பனை, உள்ளிட்டு, தம்மால் முடிந்த வழிகளில் மக்கள் வசூலிப்பதை, தேர்தல் ஆணையமும், நீதி மன்றங்களும் தடுக்க முடியாது, என்பதையே ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு உணர்த்துகிறதா? என்பதும் விவாதத்திற்கு உரியதாகும்.    

No comments:

Post a Comment