Saturday, September 15, 2018

தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியும், சமூக நோய்கள் வளர்ச்சியும்


தமிழ்நாட்டில் 'புலமை எதிர்ப்பு' சமூக நோய்க்கு, இனி இடம் இருக்காது


"என் அனுபவத்தைப் பொறுத்தவரை ஓர் 50 ஆண்டுகட்கு முன்பிருந்த அறிஞர்கள் இன்று அதிகம் இல்லை, 19ஆம் நூற் றண்டில் இருந்த ஆழமான கல்வி அறிவும் இப்பொழுது இல்லை என்றே நினைகின்றேன். இன்றும் நான் அன்று பதிப்பாக்கிய நூற்களையே என் ஆய்விற்கு பயன்படுத்துகின்றேன்.

தமிழப் பண்பாட்டில் வீறு இல்லை ஆழம் இல்லை, நல்ல புதுமை இல்லை, மற்றும் அறிஞர்கள் நடுவே  புதுமைப் படைக்கும் ஆர்வமும் இல்லை ஆற்றலும் இல்லை, தப்பித் தவறி ஒரு சிலர் அவ்வாறிருக்க  அவர்கள் வெளிநாடுகள் சென்றறே புகழ் பெருமின்றனர்.

இந்த பண்பாட்டுச் சிதைவு கீழிறக்கம் உண்மை என்றால்,  ஏன் என்ற கேள்வியை எழுப்பி, எப்படி மக்கள் உள்ளத்தில் இத்தகைய கீழ் இறக்கங்கள் வருகின்றன?  இதற்கும் வர்ண பேதங்களை சாதி வேறுபாடுகளையும் இறுகப் பிடித்துக்கொண்டு சற்று அமைதி அடைவதற்கும் தொடர்பு உண்டா என்றும் சிந்திக்க வேண்டும் .” – உலகன்

(மலேசியாவில் வாழும் அறிஞர் உலகன் அவர்கள் சுமேரு மொழிக்கும் தொல் தமிழுக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகள் பற்றியும், சைவ சித்தாந்தம் பற்றியும் அரிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருபவர். அவரது ஆராய்ச்சிகளில் இசை தொடர்பானவற்றை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் இசையியலின் தொன்மைக் கூறுகள் பற்றி ஆராய்வது எனது எதிர்காலத் திட்டங்களில் இடம் பெற்றுள்ளது.

தமிழ்  நாட்டில்' ஏற்படுள்ள மோசமான புலமைக் குறைவிலிருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டும் என்று சுயலாப நோக்கற்ற அக்கறையுள்ளவர்கள் அனைவரும் உலகன் வெளிப்படுத்தியுள்ள மேலேக் குறிப்பிட்டுள்ள  கருத்துக்களையும் கேள்விகளையும் பரிசீலிக்க வேண்டும். அப்படிப்பட்ட முயற்சிகளே தீர்வுகளுக்கானத் திசையைக் காட்டும். அத்தகைய ஒரு முயற்சியே இந்த பதிவு ஆகும்.

புலமைக் குறைவு தொடர்பான செயல்நுட்பம் தமிழ்நாட்டில் எப்போது, தோன்றி, எப்படி வளர்ந்தது என்பதையும் , அந்த 'வளர்ச்சிப் போக்கில்' பிற சமூக நோய்களும் எப்படி வளர்ந்தன என்பதையும் விளக்குவதே இப்பதிவு ஆகும்.

தமிழ்நாட்டில் புலமை இன்று எந்த நிலையில் உள்ளது என்பதை முதலில் பார்ப்போம்.

ஒரு சமூகத்தில் உள்ள புலமையின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அச்சமூகத்தில் உள்ள கல்விச் சூழலைப் பொறுத்ததாகும். ஆரம்பப்பள்ளி முதல் கல்லூரி -  பல்கலைக் கழகங்கள் வரை கல்வி கற்பிப்பவர்களின் பணி நியமனங்களில்,  'தகுதி, திறமைக்கு' முன்னுரிமை கொடுத்தால், புலமை வளர்ச்சிக்கு அது துணை புரியும். அதற்கு மாறாக, 'லஞ்சம்' செல்வாக்கு' முன்னுரிமை பெற்றால் , புலமை வீழ்ச்சியுறுவதில் வியப்புண்டோ?

எந்த நாட்டிலும் உயர்க் கல்வித்துறையில் பேராசிரியர்களாகவும், மற்ற முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களாகவும் இருப்பவர்களில் பெரும்பாலோர் 'குறுக்கு வழிகளில்' பட்டங்கள் பெற்று, அதே வழிகளில் பதவிகள் பெறுவதிலும் 'திறமைசாலிகளாக' இருந்தால், அந்த நாடு புலமை வீழ்ச்சியை 'அனுபவிப்பதிலிருந்து' தப்ப முடியுமா? இந்தியாவில் வேறு எந்த மாநிலமும், அல்லது உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு மோசமாக இருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

சட்டத்தில் புலமையும் தொழிலில் நேர்மையும் உள்ளவர்கள் அரசு வக்கீல்களாக பணி நியமனங்கள் பெற்றால், சமூகத்தில் குற்றவாளிகள் உரிய தண்டனைகள் பெற்று, சமூகத்தில் குற்றங்களின் ,குற்றவாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறையும். அதற்கு மாறாக 'லஞ்சம், செல்வாக்கு' மூலம் அரசு வக்கீல்களாக பணி நியமனங்கள் பெற்றால், சமூகத்தில் குற்றவாளிகள் எளிதில் தப்பிப்பதற்கும், சமூகத்தில் குற்றங்களின் ,குற்றவாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பதற்கும் அது வழி வகுக்கும். அது மட்டுமல்ல, அக்குற்றவாளிகள் பெரும் பணக்காரர்கள் ஆகி, சமூகத்தில் செல்வாக்குடன் வலம் வரவும் அதுவே வழி வகுக்கும். நேர்மையுடன் வாழ்பவர்களை உற்றமும், சுற்றமும் 'வாழத் தெரியாத' முட்டாள்களாக ஒதுக்குவதற்கும் அது  வழி வகுக்கும். கூடுதலாக சட்டக் கல்வியில் கீழ்வரும் முறையில் புலமை வீழ்ச்சியையும் துரிதப் படுத்தும்.

புலமைக் குறைவு என்பது கல்வித்துறையில் நோயாக தொற்றியபின்,புலமை தொடர்புள்ள மற்ற துறைகளும் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதற்கு இதுவும் உதாரணமாகும்.. உதாரணமாக இன்று தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரிகளில் சட்ட நிபுணராக வேண்டும் என்ற நோக்கில் படிக்கும் மாணவர்களும் இருப்பார்கள். 'காப்பி அடித்து' அல்லது 'லஞ்சம் கொடுத்து' குறுக்கு வழிகளில் பட்டம் பெறும் மாணவர்களும் இருப்பார்கள். படிப்பு முடிந்த பின்,  வக்கீல் தொழிலில் அதிசயக்கத்தக்க அளவுக்கு மிகக் குறுகிய காலத்தில் 'பெரும்பணக்காரர்' ஆவது எப்படி என்பதை பின்னால் குறிப்பிட்ட மாணவர்கள் சாதிக்கும் சூழலே தமிழ்நாட்டில் உள்ளது. அந்த செயல் நுட்பம் வருமாறு:

'லஞ்சம், செல்வாக்கு' மூலம் பணி நியமனங்கள் பெற்றவர்கள் -  அரசு வக்கீல்களாக -குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக செயல்பபட வேண்டியவர்களில்  பலர், மேற்குறிப்பிட்ட 'குறுக்கு வழிகளில்' படித்து வக்கீலானவர்களைக் கொண்ட ஒரு வலைப்பின்னலைக்(network)  கொண்டு,'பலகீனமான' நீதிபதிகளுக்கும் 'தொண்டு' செய்து,விரைவில் பணக்காரர்கள் ஆவார்கள். அந்த போக்கில் அந்த வலைப்பின்னலில் இடம் பெறும் இளம் வக்கீலும் பணக்காரர் ஆவதோடு, அது போன்ற 'தரகு'த் தொண்டுகளிலும் நிபுணராகத் தேவைப்படும் அனுபவமும் கிட்டுகிறது. அந்த அனுபவம் அரசியல் கொள்ளையர்களுடன் கூட்டு சேர்ந்து 'அதிவேக'ப் பணக்காரராக வழி செய்கிறது.

ஆனால் மேலேக் குறிப்பிட்ட முதல் வகை 'நேர் வழி' மாணவர்கள், படிப்பு முடிந்து வக்கீலான பின், சட்டத்தில் உள்ள புலமையை விட, 'தரகு'த் தொண்டுகள் புலமையே அத்தொழிலில் முன்னேற துணைபுரிவதைப் பார்க்க நேரிடுகிறது. அத்தகையோர் வங்கிகள் போன்று, ஓரளவு நேர்மையாகப் பணியாற்றி, வாழக்கூடிய துறைகளுக்கு மாறிவிடுகிறர்கள். இந்த போக்கின் வளர்ச்சியில் தமிழ்நாட்டில் புலமை மிக்க வக்கீல்களின் சதவீதம் மிக வேகமாகக் குறைந்து , இன்று என்ன நிலையில் உள்ள‌து என்பதும் ஆய்விற்குரியதாகும். அத்தகைய ஆய்விற்கு 1967‍க்கு முன் தமிழ்நாட்டில் சட்டத்தில் புலமை மிக்க வக்கீல்கள் எவ்வளவு பேர் இருந்தனர்? இப்போது எவ்வளவு பேர் இருக்கின்றனர்? என்ற கேள்விகளுக்கான விடைகள் துணை புரியும்.

எனவே புலமை வீழ்ச்சி என்பது தமிழில் மட்டுமல்ல; சட்டம் உள்ளிட்ட பிற துறைகளிலும் அவ்வீழ்ச்சி உள்ளது.

அதன் தொடர் விளைவு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு, பொதுக் கூட்டங்களிலும் கருத்தரங்களிலும் 'உணர்ச்சிகரமான' பேச்சுக்கள் பல பெறும் 'கைத்தட்டல்கள்’ சாட்சிகளாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள புலமைக் குறைவின் விளைவாக, 'கருத்தில் குறைபாடும்' 'வாதத்தில் குறைபாடும்' 'உணர்ச்சிகர' பேச்சுகளில் 'காணாமல்' போக, அதைக் கண்டுபிடிக்கும் அறிவு இல்லாமல், உணர்ச்சிகரமாக கைத்தட்டுபவர்கள் அரங்கில் இருக்கும் காட்சிகள் தமிழ்நாட்டில் நிறைய உண்டு. அவற்றில் பல இணைய தளங்களில் இடம் பெற்று,  ஆய்வாளர்களுக்கு அரிய தடயங்களாக உள்ளன.

இதில் வியப்பென்னவென்றால், 'தமிழுணர்வு,சாதி/ சாதி எதிர்ப்பு உணர்வு, மத/ மத எதிர்ப்பு  உணர்வு' என்ற அடிப்படைகளில்  எதிரெதிராக செயல்படும் அமைப்புகளில் உள்ள பல பேச்சாளர்கள் இது போன்ற தவறுகள் புரிவதில் ஒன்றுபட்டுள்ளார்கள். அவர்கள் பேச்சுகளுக்கு கைதட்டும் எதிரெதிதிரான மனநிலையில் உள்ள அரங்கத்தினரும் இந்த வகையில் ஒன்றுபட்டுள்ளார்கள்.

இந்த பண்பாட்டுச் சிதைவு கீழிறக்கம் உண்மை என்றால்,  ஏன் என்ற கேள்வியை எழுப்பி, எப்படி மக்கள் உள்ளத்தில் இத்தகைய கீழ் இறக்கங்கள் வருகின்றன?  இதற்கும் வர்ண பேதங்களை சாதி வேறுபாடுகளையும் இறுகப் பிடித்துக்கொண்டு சற்று அமைதி அடைவதற்கும் தொடர்பு உண்டா?”  என்ற கேள்விகளும், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் பலரின் கரங்களில் 'சாதி அடையாள'க் கயிறுகளும், வளையங்களும் 'அறிமுகமாகி'வருவது ஏன்? என்ற (உலகன் ஏற்கனவே வெளிப்படுத்திய) கேள்வியும்,  எவ்வாறு புலமைக் குறைவுடன் தொடர்பு கொண்டுள்ளன என்பதற்கும் மேற்குறிப்பிட்ட விளக்கம் இடம் அளிக்கிறது.

அடுத்து இந்த புலமை வீழ்ச்சி எப்போது, எப்படித் தொடங்கியது என்று பார்ப்போம்.

மனிதரின் அகவாழ்வும் புறவாழ்வும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகத் தொடர்புடையது. ஒருவரின் அகத்தில் உள்ள தேவைகளும்,  அவை காரணமாக அவர் மனதில் தோன்றும் ஈடுபாடுகளுமே, புறத்தில் அவரின் செயல்பாடுகளுக்கான ஆற்றலை வழங்குகின்றன.

 புலமை வீழ்ச்சி என்பது அகத்தில் விதை கொண்டு வளரும் வேகத்தில், அதன் பிரதிபலிப்பாக‌, புறத்தில் அந்த நபர் வெளிப்படுத்தும் கருத்துக்களில்/படைப்புகளில் 'அறிவுபூர்வ'ப் பரிமாணம் பலகீனமாகி, அதை ஈடுகட்ட‌ உணர்வுபூர்வ பரிமாணம் ஆதிக்கம் செய்யும்.

 தமிழ்நாட்டில் புறத்தில் ஏற்பட்ட புலமை வீழ்ச்சியானது அகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் எவ்வாறு தொடர்பு கொண்டிருந்தது என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம். யாரேனும் விரும்பினால், அதனைத் தனி நூலாக வெளிப்படுத்தும் அளவுக்கு தமிழ் உணர்வு/ திராவிடர்/ திராவிட/பொதுவுடமை இயக்க வெளியீடுகள் அரிய தடயங்களாக உள்ளன. 
 
புலமை வீழ்ச்சி என்பது பாரம்பரிய, பண்பாட்டு அடிப்படைகளிலான ஒழுக்க நெறிமுறைகளுடன்  தொடர்புடைய‌ வீழ்ச்சியுடன் அகத்தில்  தொடர்பு கொண்டுள்ளது. அந்த 'வீழ்ச்சியே' புறத்திலும் அந்த நபரின் வாழ்வில் பிரதிபலிக்கிறது. அகத்தில் அந்த நபரின் மனதில் உள்ள ஆணவம், அகந்தை போன்றவை அவருக்கு இருக்கும் புலமையை மேலும் வளர்க்கத் தடைகளாக இருக்க வாய்ப்புண்டு. தமது ஆய்வுமுடிவுகள் நிலைப்பாடுகள் மீது உடமையுணர்வு இருப்பதும் அதனுடன் தொடர்புடையது. எனவே தான் அத்தகையோர் தமது ஆய்வுமுடிவுகள் நிலைப்பாடுகள் பற்றி வெளிப்படும் எதிர்க்கருத்துக்களை 'அறிவுபூர்வமாக' சந்திப்பதற்குப் பதிலாக, 'உணர்வுபூர்வமாக' எதிரி' போல் நினைத்து சந்திக்கிறார்கள். தமது ஆய்வுமுடிவுகள் நிலைப்பாடுகளில் ஒன்று தவறு என்று ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டாலும், அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் புறக்கணிக்கிறார்கள்.  இத்தகைய போக்கு 1944‍-இல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாறி, 'உணர்வுபூர்வ எதிர்ப்பு, கோபம், வெறுப்பு" என்ற திசையில் பயணிக்கத் தொடங்கியபின் 'வேகமாக' வளர்ந்ததா? என்ற கேள்விக்கு, 1944‍-க்கு முன்னும், பின்னும் வெளிவந்த இதழ்களையும், நூல்களையும் ஆராய்வது பயனளிக்கும்.

 உணர்வுபூர்வ போக்கில் புலமை வீழ்ச்சியில் பயணிப்பவர்களின் ,  'உணர்வுபூர்வ' பேச்சுக்களில், எழுத்துக்களில் 'கள்ளுண்ட வண்டு' போல் மயங்கியவர்கள் எல்லாம் 'தொண்டர்களாக', அவர்கள் தலைவர்களாகி, 'புலமையின் வீழ்ச்சிக்கு' முக்கிய காரணமாகி விடுகிறார்கள். அது பற்றிய தெளிவைப் பெற, கீழ்வரும் கேள்விகளுக்கான விடைகள் பலனளிக்கும்.
 ‘The History of the Decline and Fall of the Roman Empire’ (http://en.wikipedia.org/wiki/The_History_of_the_Decline_and_Fall_of_the_Roman_Empire )  என்ற ஆறு தொகுப்புகள் கொண்ட புத்தகத்தில் 'சில' பக்கங்களில் இருந்தவற்றை மட்டும்,  'ரோமாபுரி ராணிகள்' என்ற தலைப்பில் அண்ணாதுரை  இளைஞர்களின் பாலுணர்வு கவர்ச்சி தொடர்பான உண‌ர்ச்சியைத் தூண்டும் வகையில் புத்தகம் எழுதியது சரியா? அந்த ஆறு தொகுப்புகள் கொண்ட புத்தகத்தின் சாராம்சத்தை - பண்பாட்டு வீழ்ச்சி சமூக வீழ்ச்சிக்கு அடிகோலும் - என்ற கருத்தை அவர் ஏன் நூலாக வெளியிடவில்லை? 1967இல் முதல்வரான பின் அவர் எழுதிய 'கம்பரசம்' என்ற அதே போன்ற இன்னொரு நூலை ஒருவர் நினவூட்டியபோது, 'நான் மறக்க விரும்புவதை நினைவூட்ட வேண்டாம். ' என்று அவர் சொன்னது ஏன்? அதன் மூலம் 'குதிரைத் தப்பி ஓடிய பின் லாயத்தைப் பூட்டிய கதை' நினைவுக்கு வருவது தவறா?

1965 முதல் இன்றுவரை தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்காகத் தீக்குளித்தவர்கள் எல்லாம் முதல் தலைமுறையாகப் படித்த கிராமப்புற குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளே. அவர்களைத் தீக்குளிக்கத் தூண்டிய 'உணர்வுபூர்வ' பேச்சாளர்களோ, எழுத்தாளர்களோ, அவர்களின் குடும்பப் பிள்ளைகளோ 1965 முதல் இன்றுவரை எவரும் தீக்குளிக்கவில்லை. அது மட்டுமல்ல, அவ்வாறு தீக்குளித்தவர்களின் 'நன்கொடையாக',  அந்த 'உணர்வுபூர்வ' பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் தமது குடும்பத்தையும், பிள்ளைகளையும் - ஒழுங்காகப் படித்தாலும், படிக்காவிட்டாலும், - நல்லவகையில் 'செட்டில்' செய்யும் அளவுக்கு, தமது 'பொது வாழ்வில்' வெற்றியாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அத்தகையோரின் அகவாழ்வு எவ்வளவு இழிவானது என்பதை விளக்கத் தேவையில்லை. 

அதிலும் வியப்பென்னவென்றால், 'தமிழ் ஈழ'க் கோரிக்கைக்காக இதுவரை,இலங்கையில் யாரும் தீக்குளிக்கவில்லை; தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களோ, அகதிகளாக 'ஏழ்மையில்' தமிழ்நாட்டிற்கு வந்து, இன்று மிகுந்த வசதி வாய்ப்புகளுடன் வாழும் இலங்கைத் தமிழர்களோ திக்குளிக்காமல், தமிழ்நாட்டுத் தமிழர்கள் தீக்குளித்துக் கொண்டிருப்பது வினோதமில்லையா? புலமை வீழ்ச்சிக்கு வழி வகுத்த உணர்வுபோதைப் போக்குகள் இந்த வினோதத்திற்குக் காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழ்நாட்டை புலமை வீழ்ச்சியிலிருந்து மீட்க விரும்பும் ஒவ்வொருவரும், முதலில் தமது அகவாழ்வை ‍சுயபரிசோதனைக்குட்படுத்தியாக வேண்டும். தமது தேவைகளும், அவை காரணமாக மனதில் தோன்றும் ஈடுபாடுகளும் 'எந்த வழியிலும்' எவ்வாறு செல்வம், செல்வாக்கு, பாராட்டு, புகழ்' புற வாழ்வில் பெறுவது என்பதை,  தமது அகவாழ்வில் செல்வாக்கு செலுத்த நாம் அனுமதித்துள்ளோமா? அத்தகைய செல்வாக்கிற்கு இடமளிக்காமல், விரும்பி புறத்தில் இழப்புகளை ஏற்று, புலமையை வளர்ப்பதில் அகத்தில் ஆர்வம் கொண்டிருக்கிறோமா? மேற்கத்திய சிந்தனை முறைக்கு (Western Paradigm)  அடிமையாக இல்லாமல் , திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் தமிழ், தமிழர் தொடர்பான தொன்மை பற்றிய ஆய்வுகளை எதிர்கொள்கிறோமா?

மனசாட்சிக்குட்பட்டு மேற்குறிப்பிட்ட கேள்விகள் அடிப்படையில் நமது அகவாழ்வை நெறிப்படுத்தி வாழும் போது, தமிழரின் புலமை மீட்சிக்கு பங்களிப்பு வழங்கும் முறையில் நமது வாழ்வு அமையும். நமது சமூக வட்டத்தில் உள்ளவர்கள்  அகவாழ்வில் 'அழுக்குகளை' நீக்கி , ஆக்கபூர்வமான முறையில் வாழ, நமது வாழ்வு தூண்டுகோலாக அமையும்.நமது சமூக வட்டம், நம்முடன் தொடர்பில் உள்ள பிற சமூக வட்டங்களிலும் ஆக்கபூர்வமான விளைவுகளைத் தூண்டும்.

 'செல்வம், செல்வாக்கு, பாராட்டு, புகழ்' போன்றவற்றிற்கான 'ஏக்கங்கள்' எல்லாம், பிறர் நம்மை 'உயர்வாக' நினைக்க வேண்டும் என்பதற்காக வாழும் அடிமையாக நம்மை மாற்றி விடும். நமக்கு நாமே 'எஜமானனாக' வாழ வேண்டுமானால், அகவாழ்வில் அதற்கான மாற்றங்களைச் செய்தாக வேண்டும். அதற்காக புற வாழ்வில் ஏற்படும் இழப்புகளைப் பற்றி கவலைப்படக் கூடாத மனநிலையில் அகவாழ்வில் அதற்கான மாற்றங்களைச் செய்தாக வேண்டும். அப்படி வாழ்பவர்கள் தமிழ்நாட்டி லும், வெளிநாடுகளிலும் ' மீடியா வெளிச்சத்திற்கு' வராமல் பலர்  இருக்கிறார்கள். நாம் நமது அகவாழ்வை நெறிப்படுத்தி வாழும்போது, அத்தகையோர் தொடர் பானது, 'இறைவன் செயலோ' என்று அதிசயிக்கும் அளவுக்கு நமக்கு கிடைக்கும் என்பதும் என் அனுபவமாகும். 

புலமை வீழ்ச்சி இதற்கு மேலும் வீழமுடியாத உச்ச மதிப்பு வீழ்ச்சியிலிருந்து புலமை மீண்டு, வளர்ச்சி நோக்கிய   ஒரு திருப்பு முனையில் தமிழ்நாடு இருக்கிறது என்பது எனது அனுபவக்காட்சியாகும்(Observation). சமுகத்தில் 'ஆதிக்கம்' செலுத்தி வந்த 'அறிவு ஜீவிகளுக்கும்' சாதாரண மக்களுக்குமிடையே வியக்கத்தக்க வகையில் வெளிப்பட்டுவரும் சமூகப் பிளவு (Social Disjoint) அதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.

'செல்வம், செல்வாக்கு, பாராட்டு, புகழ்' போன்றவைத் தாமாகவே நம்மைத் தேடிவந்தாலும்,துணிச்சலுடன் சிக்கலுக்குள்ளாகாத (non-controversial)  புத்திசாலித்தனத்துடன் தவிர்த்து, அவற்றிற்கு ஏங்குபவர்களை விட்டு விலகி, நமது ஆய்வுகள், முடிவுகள் உள்ளிட்டு எதையும் அறிவுபூர்வமாக விமர்சிப்பதை ஊக்குவிப்போம். அதன்மூலம் தமிழ்நாட்டில் புலமை வளர்வதற்கு நம்மால் இயன்ற பங்களிப்பை நாம்  வழங்குவோம்.



தமிழ்நாட்டில் வழிபாட்டுப்புழுதிப்புயலானது வளர்ந்த போக்கில், அறிவுபூர்வ விமர்சனங்களின் வீழ்ச்சியும், தமிழில் புலமை வீழ்ச்சியும் எவ்வாறு விளைந்தன? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

‘இன்று தமிழ்நாட்டில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உள்ள தமிழ்ப் பாட புத்தகங்களிலேயே நிறைய இலக்கணப்பிழைகள் இருப்பதைத் தமிழ்ப்புலமையாளர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். தி.மு.க தலைவரின் 'தொல்காப்பியப் பூங்காவில்' இருந்த பிழைகளை வெளிப்படுத்திய தமிழ்ப்புலமையாளர் சாகும் வரை தன் நண்பர்களின் பாதுகாப்போடு வாழ வேண்டி நேரிட்டது. தமிழில் இத்தகைய இலக்கணப் பிழைக்கு வித்திட்டது பாரதியா என்பதும், பாரதி, அண்ணா உள்ளிட்டு பல தலைவர்களின் வழிபாட்டுப் புழுதியின் ஊடே தான், அந்த வித்து இன்று ‘செழித்து வளர்ந்து’  தமிழைச் சீரழித்து வருகிறதா என்பதும் ஆய்விற்குரியவைகளே.’ என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

விவாதத்தில் உள்ள பொருள் தொடர்பான புலமையை வளர்த்துக்கொள்ளாமல், தங்களுக்கு பிடித்த 'கொள்கைகளின்' அடிப்படையில்,எதிர்ப்பவர்கள் எல்லாம் 'புலமை எதிர்ப்பு' சமூக நோயில் சிக்கியவர்கள் ஆவார்கள். ( ‘They(Anti-intellectuals) also believe that they don't have to read anything about a field of knowledge before dismissing it with their own "theories" (https://rationalwiki.org/wiki/Anti-intellectualism )

'பெரியார்' கொள்கை புலமையாளராக(Theoritician)' நான் பயணித்த போக்கில், எனக்கு நெருக்கமானவர்களை விட்டு விலகி, இன்று இசை ஆய்வுகள் திசையில் பயணித்து வருகிறேன். நான் எனது ஆய்வுகளின் அடிப்படையில், ஈ.வெ.ரா அவர்கள் தொடர்பாக முன் வைக்கும் வாதங்களை ஏற்றுக் கொள்ளாமலும், மறுக்காமலும், 'பழைய' போக்கிலேயே, அவர்கள் எல்லாம் பயணித்தால், அதுவும் 'புலமை எதிர்ப்பு' சமூக நோய் அறிகுறிகள் ஆகாதா? என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளேன். 

அது போலவே,  " 'ஆங்கோர் வாட்' ஒரு தமிழ் அரசனால் கட்டப்பட்டது; தமிழ் மன்னர்கள் படையெடுத்த நாடுகளில் ஒன்று கம்போடியா; தமிழ் மரபில் வந்த சூர்யவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்ட கோவில் தான் 'ஆங்கோர் வாட்' " என்ற கருத்தானது தவறு என்பதனை உரிய சான்றுகளின் அடிப்படையில் நான் தெளிவுபடுத்தியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none.html) ஆனாலும் அதைத் திருத்திக் கொள்ளாமல், அதே நிலைப்பாட்டில் தொடர்வதானது அறிவுபூர்வமாகுமா?

'புலமை எதிர்ப்பு' சமூக நோய் என்பதானது, தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு ஆகும்.

தாம் சார்ந்துள்ள சாதி, மொழி, மதம், நாடு 'தாழ்வாக' இருப்பதாக முன்வைக்கப்படும் வாதத்தினை அறிவுபூர்வமாக எதிர்க்க விரும்புபவர்கள், அதற்கான சான்றுகளை தேடி, உழைக்க வேண்டும். 'பள்ளர்' சாதியில் பிறந்து, அவ்வாறு சான்றுகளை தமிழ்நாடு முழுவதும் தேடி சேகரித்து,  காலனி ஆட்சிக்கு முன் மன்னர்களாகவும், சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தவர்களாகவும் இருந்த சான்றுகளை எல்லாம் பிரமிப்பூட்டும் வகையில் நூலாக வெளியிட்டவர் மறைந்த‌ தேவ ஆசீர்வாதம் ஆவார். அவருடைய நண்பரான இரயிவே அதிகாரி மறைந்த விபீஷ்ணன் ('பெரியார்' ஆதரவாளர்) அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்; நான் 'பெரியார்' இயக்கத்தில் இருந்த காலத்தில். அவர் நூல் பற்றிய‌, எனது திறனாய்வு கட்டுரை 'விடுதலை'யில்  வெளிவந்தது. அவரது நூலில் வெளிப்படுத்திய சான்றுகளை அபத்தமாக மறுத்து, பேரா.கேசவன் 'பள்ளு இலக்கியம்' பற்றி ஒரு நூல் வெளியிட்டார். கேசவனின் வாதத்தில் இருந்த குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, நான் எழுதிய கட்டுரையும், 'விடுதலை'யில் வெளிவந்தது.

புலமை வீழ்ச்சிப் போக்கில் தமிழ்நாடு பயணித்ததால், தேவ ஆசீர்வாதத்தின் ஆய்வு நூல்கள் எல்லாம், தமிழ்நாட்டுப்பல்கலைக்கழகங்களின் கவனத்தை ஈர்த்து, அறிவுபூர்வ விவாதங்களுக்கு உட்படுத்தப்படவில்லை.

சமூக அளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கட்சிகள் எல்லாம், மேலே குறிப்பிட்ட 'புலமை எதிர்ப்பு' சமூக நோயில் சிக்கியதால், கீழ்வரும் போக்குகளும் தமிழ்நாட்டில் வெளிப்பட்டனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தாழ்வு மனப்பான்மையை தம் மனதில் அகவயப்படுத்திய(internalize) பின்னர், மேலே குறிப்பிட்ட‌ 'அந்த' 'புலமை எதிர்ப்பு' சமூக நோயில் சிக்கி, தாழ்வு மனப்பான்மையின்  அடிப்படையில்,  தாம் உயர்வாக கருதும் சாதி, மொழி, மதம், நாடு மீது வெறுப்பு கொண்டு, அதனையும் கிடைக்கும் வாய்ப்புகளில் இழிவு செய்து, அதன் மூலமாக தம்மை உயர்த்திக் கொண்டதாக 'கற்பனை இன்பம்' அடைவார்கள். அது போலவே, படிப்பறிவற்ற, அதிகம் படிக்காத, படித்திருந்தாலும் புலமை குறைவான மனிதர்கள் எல்லாம், கிடைக்கும் வாய்ப்புகளில் புலமையாளர்களை எல்லாம் இழிவு செய்து, அதன் மூலமாக தம்மை உயர்த்திக் கொண்டதாக 'கற்பனை இன்பம்' அடைவார்கள்.

காலனி ஆட்சியில் பிராமணர்கள் உள்ளிட்ட அனைத்து சாதி இந்தியர்களையும் தாழ்வாக காலனி ஆட்சியினர் நடத்தினர். அதன் விளைவாக, தாழ்வு மனப்பான்மையானது, இந்தியர் மனங்களை காலனிமயமாக்கல் நோயில் (colonization of the Indian mind) சிக்க வைத்தது. (‘'காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்’; http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html) அதில் சிக்கியவர்கள் தமது மொழி, பண்பாடு, பாரம்பரியம் பற்றி தாழ்வாக காலனி ஆட்சியில் முன்வைக்கப்பட்ட சான்றுகளில் ஏமாந்தார்கள். அந்த நோயில் சிக்காத விவேகானந்தர், தாகூர் உள்ளிட்ட பலர், அந்த சான்றுகளை அறிவுபூர்வ விமர்சனத்திற்கு உட்படுத்தி, அதில் வெற்றியும் கண்டார்கள். ஏமாந்தவர்கள் எல்லாம் புலமை வீழ்ச்சிக்கு ‘வினை ஊக்கி’(catalyst) ஆனார்கள்.

'அந்த' 'புலமை எதிர்ப்பு' சமூக நோயில், தமிழ் இலக்கியங்களும் சிக்கி இழிவுபடுத்தப்பட்டன. (http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html   )

1967இல் முதல்வரான பின் தான் எழுதிய 'கம்பரசம்' என்ற நூலை ஒருவர் நினவூட்டியபோது, 'நான் மறக்க விரும்புவதை நினைவூட்ட வேண்டாம். ' என்று முதல்வர் அண்ணா சொன்னதாக நான் கேள்விப்பட்டது உண்மையானால்; (‘  'காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (4); http://tamilsdirection.blogspot.com/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

அண்ணாவின் 'தீ பரவட்டும்' போன்ற சொற்பொழிவுகள், எழுத்துக்கள் எல்லாம், மேலே குறிப்பிட்ட தாழ்வு மனப்பான்மையில் உழன்றவர்களின், மேலே குறிப்பிட்ட தவறான போக்கிற்கு உரமூட்டி, தமிழ்நாட்டில் புலமையானது 'புலமை எதிர்ப்பு தீயில்' சிக்கி, சீரழிய காரணமானதா? என்ற விவாதத்திற்கும் நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்.

ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள், வீ.பா.க சுந்தரம், பாரதி, 'பெரியார்' ஈ.வெ.ரா, அண்ணா உள்ளிட்ட இன்னும் பலரை நான் அறிவுபூர்வ விமர்சனத்திற்கு உட்படுத்துவதை, தனிப்பட்ட முறையில் அவர்களை எல்லாம் இழிவு படுத்துவதாகவோ, கண்டிப்பதாகவோ கருதினால், அது புலமை வீழ்ச்சிக்கே வழி வகுக்கும். அறிவியல் துறையில் அத்தகையோர் 'அறிவிலிகளாகவே' வெளிப்படுவார்கள்.

அதற்கு மாறாக, எனது விமர்சனங்களை, அறிவுபூர்வ ஆய்வுக்கு உட்படுத்தி, அவற்றில் உள்ள நிறைகுறைகளை வெளிப்படுத்துவதே, தமிழ்நாட்டில் புலமை வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

அவ்வாறு செய்வதை வரவேற்காமல், எனது பதிவுகளில் உள்ள குறைகளை வெளிப்படுத்துபவர்கள் மீது, நான் கோபப்பட்டு வெறுத்தால், நான் எனது ய்வு முடிவுகளின் மீது உடமைப்பற்றுடன்(possessive) வாழ்வதன், அல்லது என்னை பிம்ப வழிபாட்டுக்கு உட்படுத்தி வாழ்வதன் 'சிக்னல்கள்' ஆகும்.

அதே நேரத்தில், எனது ஆய்வு முடிவுக்கு எதிராக முன்வைத்த வாதத்தினை, உரிய சான்றுகளின் அடிப்படையில் நான் மறுத்துள்ள நிலையில், அதனைப் புறக்கணிப்பது அறிவு நேர்மையாகாது. அவ்வாறு புறக்கணித்து, எனது ஆய்வினை 'your interpretations are logically flawed and philologically not justified.' என்று முடிவு செய்து அறிவித்ததானது, புலமையின் வளர்ச்சிக்கு வழி வகுக்குமா? வீழ்ச்சிக்கு வழி வகுக்குமா? (‘'ஆய்வுக்குழாயடி சண்டை' அனுபவமும் தொடங்கி விட்டது, மீட்சியின் 'சிக்னலாக'; http://tamilsdirection.blogspot.com/2018/06/normal-0-false-false-false-en-us-x-none.html & http://tamilsdirection.blogspot.com/2018/06/normal-0-false-false-false-en-us-x-none_7.html )

விவாதத்தில் முன்வைக்கப்படும் சான்றுகளை மறுக்காமல், விவாதத்தினை விரிவாக்கும் போக்கும், விவாத எல்லைக்குள் நிற்கும் அறிவு வலிமையின்றி, விவாதத்தில் ஈடுபட்டவர்கள் மீது, 'கடவுளால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள்' போல, 'தீர்ப்பு' வழங்குவதும்;

அறிவு நேர்மையற்ற விவாத அத்து மீறல் ஆகும். (http://tamilsdirection.blogspot.com/2015/10/ )

தமிழ்நாட்டில் அந்த போக்கானது, சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களிடமே பெரும்பாலும் வெளிப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள் எல்லாம், பெரும்பாலும் அந்த போக்கில் சிக்காமல் பயணிக்கிறார்கள்;

என்பதும் எனது அனுபவமாகும். எனவே தமிழ்நாடானது, 'புலமை எதிர்ப்பு' சமூக நோயிலிருந்து மீளும் காலம் துவங்கி விட்டது. தமிழ் இலக்கியங்களை கேலி, கிண்டல் செய்யும் போக்குகள் எல்லாம் சமூக சருகாகி உதிர்வதும் துவங்கி விட்டது. பழந்தமிழ் இலக்கியங்களின் வலிமையில், சந்தைப்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் எனது ஆய்வுகள் மூலம் வெளிச்சத்திற்கு வர தொடங்கியுள்ளன. (‘தமிழகப் பல்கலைக்கழகங்களின் 'மொழியியல்', 'இசை' துறைகள் 'வாலாக' பயணிக்கலாமா? மொழியும் இசையும் இணைந்ததே தொல்காப்பிய 'யாப்பிலக்கணம்'; http://tamilsdirection.blogspot.com/2018/09/4-social-comparison-infection-passions.html
 
தமது உள்மறை வேலைத்திட்டத்திற்கு(Hidden Agenda) ஒத்து வராத புலமையாளர்களை எல்லாம் ஒதுக்கி பயணிக்கும் உள்நாட்டு/வெளிநாட்டு தமிழ் அமைப்புகளும், தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சிக்கு காரணமாகி வருகின்றன;

என்பதும் எனது அனுபவமாகும். எனவே எனது ஆய்வுகளின் வெற்றிகள் மூலமாக, தமிழ்ப்புலமையும், 'அந்த' சிறைகளில் இருந்து விடுதலை ஆகும் காலமும் நெருங்கி வருகிறது.


எனவே ‘தமிழ் இசையியல்’ (Tamil Musicology) அறிவின்றி யாப்பிலக்கணம் பயிலும் தவறுகள் நீங்கும் காலமும், 'இசை மொழியியல்' (Musical Linguistics) மூலம் வியாபார வாய்ப்புள்ள ஆய்வுகளுக்காக, உலகில் உள்ள பல்கலைக்கழகங்கள் எல்லாம், தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்கள் நோக்கி, ஆய்வுப்படையெடுப்பு தொடங்கும் காலமும், நெருங்கி வருகின்றன.

No comments:

Post a Comment