Monday, December 21, 2020

(முன்னாள் 'ஆனந்த விகடன்')  ப.திருமாவேலனின் கட்டுரை;

உரிய சான்றுகள் இன்றி ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளைத் திரித்தது சரியா?

 

‘ஈ.வெ.ராவைப் பாராட்டுவது’ என்ற பெயரில், அவரின் கொள்கை பற்றிய தவறான தகவல்களை உரிய சான்றுகள் இன்றி எவ்வாறு பிரபலமான நபர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்? என்ற ஆய்வுக்கு கீழ்வரும் கட்டுரையானது உதவும். 

(22.9.2019 அன்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மேரிலாந்தில், அமெரிக்க மனிதநேயர் சங்கம் நடத்திய மாநாட்டில் ஊடகவியலாளர் ப.திருமாவேலன் ஆற்றிய உரை எழுத்து வடிவத்தில்):

https://minnambalam.com/k/2019/09/27/34

ஆரியம் என்பதற்கு எது எதிர் என்றால், திராவிடம்!

எனவே, பெரியார் அந்த சொல்லை இனச்சொல்லாகவோ அல்லது மொழிச் சொல்லாகவோ ‘திராவிடம்' என்கின்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. அதில் முதலில் நமக்கே ஒரு தெளிவு வேண்டும்.

‘திராவிட இனம்' என்று பெரியார் தன்னை அழைத்துக் கொள்ளவில்லை. திராவிட மொழிக் கூறுகளைச் சேர்ந்த நாம், திராவிட மொழி பேசுபவர்கள் என்பதற்காகவும் சொல்லவில்லை. திராவிடம் என்பதை நான் ஒரு அரசியல் சொல்லாகப் பயன்படுத்துகிறேன் என்று பெரியார் எழுதியிருக்கிறார்……….. 

 ‘‘ஆரியம் என்பதற்கு எது எதிர் என்றால், திராவிடம். அதனால், நான் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டுகிறேன்.

‘திராவிடர் கழகம்' என்று நான் பெயர் வைக்காமல் போயிருந்தால், வேறு என்ன பெயர் வைத்திருப்பேன் என்று சொன்னால், சூத்திரர் கழகம் என்று வைத் திருப்பேன்'' என்றார். இதுதான் தந்தை பெரியார்.” - மேற்குறிப்பிட்ட கட்டுரையில்

"ஆரியம் என்பதற்கு எது எதிர் என்றால், திராவிடம்!" என்று ஈ.வெ.ரா பயன்படுத்தியது உண்மையே.  ஆனால் "பெரியார் அந்த சொல்லை இனச்சொல்லாகவோ அல்லது மொழிச் சொல்லாகவோ ‘திராவிடம்' என்கின்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. அதில் முதலில் நமக்கே ஒரு தெளிவு வேண்டும். ‘திராவிட இனம்' என்று பெரியார் தன்னை அழைத்துக் கொள்ளவில்லை. திராவிட மொழிக் கூறுகளைச் சேர்ந்த நாம், திராவிட மொழி பேசுபவர்கள் என்பதற்காகவும் சொல்லவில்லை."

என்ற நிலைப்பாட்டிற்கு ஆதரவாக ப.திருமாவேலன் ஒரு சான்றினையும் காட்டவில்லை.

ஆனால் " "பெரியார் அந்த சொல்லை இனச்சொல்லாகவோ அல்லது மொழிச் சொல்லாகவோ ‘திராவிடம்' என்கின்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்" என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

உதாரணமாக, 

“தென்னாப்பிரிக்க வெள்ளையர் கொடுமையை விட அதிகமாக திராவிடர்களை ஆரியப்பார்ப்பனர் நடத்துகின்றனர்" தந்தை பெரியார்  பெரியார் ஆண்டு 107  - 108  நாட்குறிப்பு, பெரியார் திடல், சென்னை

“நாம் தமிழர்கள் திராவிடர்கள் -  ஆரியர் வேறு தமிழர் வேறு. இவ்விருவர்களுடைய நலனும் லக்ஷ்யமும் வேறு வேறு என்பதற்கும் ஆகவே இவற்றை இவ்வளவு வலியுறுத்திக் கூறுகிறேன்.”- ‘அறிவின் எல்லை  - பெரியாரின் எழுத்தும் பேச்சும்’;   குடி அரசு பதிப்பகம், ஈரோடு ;  ‘ திராவிடர் ஆரியர் உண்மை’ தலைப்பில் இருந்து.

“சில விஷயங்களில் மட்டும் நம்மைத் திராவிடர்கள் என்றும், திராவிடம் வேறு என்று சொல்லிக் கொண்டு வேறு அநேக விஷயங்களில் ஆரியத்திற்கு அடிமையாக நடந்து கொண்டால் இரண்டுங்கெட்ட இழிநிலையைத் தான் அடைகிறோமே ஒழிய வேறில்லை”   பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள், தொகுதி 5 தத்துவம் 2, பக்கம் 4128

'திராவிடர் கழகம்' என்ற பெயரில் இருந்த 'ர்' என்ற எழுத்தினை அகற்றி, 'திராவிட முன்னேற்ற கழகம்' என்ற பெயரிட்டதற்கான காரணத்தை அண்ணா விளக்கியுள்ளார். அதனை 'தி.மு.க வரலாறு' நூலில் படித்த ஞாபகம் இருக்கிறது. "பெரியார் குறுகிய இன அடிப்படையில் திராவிட நாடு பிரிவினைக் கேட்கிறார். தி.மு.க 'திராவிட' என்ற புவியியல் அடிப்படையில் திராவிட நாடு' கேட்கிறோம் என்ற வகையில் அண்ணா விளக்கியுள்ளார்.

எனவே அத்தகைய அண்ணாவின் கருத்தினை ஈ.வெ.ராவின் நிலைப்பாடாக,

"‘திராவிட இனம்' என்று பெரியார் தன்னை அழைத்துக் கொள்ளவில்லை. திராவிட மொழிக் கூறுகளைச் சேர்ந்த நாம், திராவிட மொழி பேசுபவர்கள் என்பதற்காகவும் சொல்லவில்லை. திராவிடம் என்பதை நான் ஒரு அரசியல் சொல்லாகப் பயன்படுத்துகிறேன்" என்று ஈ.வெ.ரா தெரிவித்தது போல, ப.திருமாவேலன் பதிவு செய்திருப்பது பெரும் தவறாகும். 

அடுத்து ப.திருமாவேலன் கீழ்வரும் கருத்தினையும் மேற்குறிப்பிட்ட கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

"திராவிடர் கழகத்திற்குத் திருக்குறள்தான் வழிகாட்டி, வேறு நூல் இல்லை'' என்று 1948 இல் சொன்னவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்"

கிழ்வரும் ஈ.வெ.ராவின் நிலைப்பாடு தெரியாமலேயே, மேற்குறிப்பிட்ட கருத்தினை ப.திருமாவேலன் பதிவு செய்துள்ளார்.

“வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய் விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடுஎன்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட் பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை (1.6.50)யில் பெரியார்

உரிய சான்றுகள் இன்றி, கீழ்வரும் கருத்தினையும் ப.திருமாவேலன் பதிவு செய்துள்ளார்.

"தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழி கலப்பால், இடது கை போல பிற்படுத்தப்பட்டு விட்டது. இந்நோய்க்குக் காரணம், மதச்சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழிலிருந்து சைவத்தையும், ஆரியத் தையும் போக்கிவிட்டால், நம்மை அறியாமலேயே நமக்குப் பழந்தமிழ் கிடைத்துவிடும் என்று சொல்லி, தனித்தமிழ் இயக்கத்தினுடைய சிந்தனையை தனது சிந்தனையாக சொன்னவர்தான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்"

கிழ்வரும் ஈ.வெ.ராவின் நிலைப்பாடு தெரியாமலேயே, மேற்குறிப்பிட்ட கருத்தினை ப.திருமாவேலன் பதிவு செய்துள்ளார்.

“தமிழ் தோன்றிய 3000 – 4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்த புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இது வரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.. தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்! தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது? இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன். இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.”                  'பெரியார்' ஈ.வெ.ரா-  “தாய்ப்பால் பைத்தியம் என்ற நூலிலிருந்து.

"நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்து இன்றைக்கு 20வது ஆண்டு நடக் கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, ‘இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ்வேண்டும்.’ இதுதானா? அய்யோ பைத்தியமே தமிழை (பிற மொழிகளிலிருந்து மொழி பெயர் க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல் களில் எதை எடுத்துக்கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந் த தமிழ் ‘சுவை அல்லாமல் அறிவு, பகுத்தறிவு, வாழ்க் கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டு பிடிக்க முடியுமா? கண்டு பிடித்துப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன். – தந்தை பெரியார்

தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக் கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக் காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்".- தந்தை பெரியார் ‘தமிழும், தமிழரும் நூலில்

காங்கிரசில் இருந்து வெளியேறும் முன், தமிழ் தொடர்பாக, கீழ்வரும் கருத்தினை ஈ.வெ.ரா வெளிப்படுத்தியுள்ளார்.

"ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும்.  மொழிப்பற்றிராதாரிடத்துத் தேசப்பற்றிராதென்பது நிச்சயம்........ தமிழ் மொழியின் பழமையையும், தமிழ் மக்கள் நாகரிகத்தையும் பழந்தமிழ் நூல்களிற் காணலாம்.தமிழரசர்கள் ய‌வன தேசம், ரோமாபுரி, பாலஸ்தீனம் முதலிய தேசங்களோடு வியாபாரம் செய்ததும், அவ்வியாபாரத்திற்கேற்ற தொழில்கள் நாட்டில் நிலைத்திருந்ததும் பிறவும் தமிழ்நாட்டின் முழுமுதற்றன்மையை விளங்கச் செய்யும். அத்தகைய தமிழ்நாடு இப்பொழுது  சீரும் சிறப்புமிழந்து அல்லலுறுகின்றது. தமிழ்நாட்டிற் பிறந்தவர்களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று சொல்கிறேன்." -  1924ஆம் ஆண்டு டிசம்பரில் திருவண்ணாமலையில் கூடிய 30வது காங்கிரஸ் மாநாட்டில் ஈ.வெ.ரா தலைமை தாங்கி முன்னுரையில் பேசியது. ( பக்கம் 135  136 ,தமிழர் தலைவர், சாமி.சிதம்பரனார் )

1925இல் காங்கிரசில் இருந்து வெளியேறும் வரையில்; 1925 முதல் 1939இல் நீதிக்கட்சியின் தலைவராகும் வரையில், 1939 முதல் 1944இல் திராவிடர் கழகம் துவங்கியது வரையில், 1944 முதல் 1949இல் தி.மு.க தொடங்கியது வரையில், 1949 முதல் 1967இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது வரையில், பொதுவாழ்வில் மனம் வெறுத்து முனிவராகி விட ஈ.வெ.ரா விரும்பி, அண்ணாவும் காமராஜரும் அவரின் மனதை மாற்றியது முதல் 1973இல் சாகும் வரையில்;

என்று 'தமிழ், திராவிடர், ஆரியர், இந்தி' தொடர்பாக, ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன என்பது பற்றிய அறியாமையில், உரிய சான்றுகள் இன்றி ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளைத் திரித்து எவ்வாறு கட்டுரை எழுத முடியும்? என்பதற்கான பாடப்புத்தகத்தில் இடம் பெறத் தகுதியுள்ள மேற்குறிப்பிட்ட கட்டுரையினை ப.திருமாவேலன் எழுதியுள்ளார்.

மேற்குறிப்பிட்ட ப.திருமாவேலனின் கட்டுரையில் உரிய சான்றுகள் இன்றி ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளைத் திரித்து வெளிவந்துள்ளதை, 'பெரியார்' கட்சிகள் இதுவரை மறுக்கவில்லையென்றால், அது இன்றைய வரலாற்றில் தவறாகவே இடம் பெறும். 

குறிப்பு:

'பெரியாரைப் புரியாத பெரியாரிஸ்ட்டுகளும்... தமிழ் தேசியவாதிகளும்...!’ என்ற தலைப்பில்  ப.திருமாவேலன்  எழுதிய கட்டுரையானது எனது கவனத்தை ஈர்த்தது.

'நவம்பர் 1 - தமிழ்நாடு உருவான நாள்'  தொடர்பான  விவாதங்களில், பெரியாரிஸ்டுகளும், தமிழ்த் தேசிய சிந்தனையாளர்ளும்,  மேற்கொண்ட நிலைப்பாடுகளில் உள்ள  குறைபாடுகளை, இக்கட்டுரை சரியாக வெளிப்படுத்தியுள்ளது, என்பது என் கருத்தாகும்.

ஆனால், தாய்மொழியான தமிழ், பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணிவேர்களையே  நோய்களாக கருதி, வெறுத்து, முன்வைத்த இந்த கோரிக்கையானது, எவ்வாறு பொதுவாழ்வில் சுயநலக் கள்வர்கள் வளர வழி வகுத்தது? என்பது தொடர்பாக, கீழ்வரும் தொடர் உள்ளிட்ட‌, எனது பதிவுகளில், உரிய சான்றுகளுடன் வெளிப்படுத்தியுள்ளேன்.

அவற்றை கணக்கில் கொள்ளாமல், ஈ.வெ.ராவை 'பெரியார்' என்ற பிம்ப‌ சிறையில் சிக்க வைக்கும் போக்கிலேயே,  இக்கட்டுரையானது  வெளிவந்துள்ளது.’ (https://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none_5.html)

No comments:

Post a Comment