Saturday, December 20, 2014



தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வியின் புற்றீசல் வளர்ச்சி:


தமிழறிவை விட, ஆங்கில அறிவை அதிகம் சீரழித்ததா? கூடுதலாக சமூக அக்கறையையும் ஒழித்ததா?


தமிழ்நாட்டில் 'தமிழ்வழியின் மரணப்பயணம் தொடங்கிவிட்டதா?' என்ற கேள்வியை எழுப்பிய பதிவுகளை ஏற்கனவே பார்த்தோம்.
( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_27.html  )

தமிழ்வழியின் மரணப்பயணப் போக்கில் , தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளிடம் தொடர்பற்று, வருடம் தோறும் எண்ணிகையில் அதிகரித்து வரும் மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் 'இந்தியர்' என்ற அடையாளம் அதிசயிக்கும் அளவுக்கு வேகமாக வளர்ந்து வருவதையும், 'தமிழ், தமிழ் உணர்வு' தொடர்பானவை வருத்தம் தரும் அளவுக்கு வீழ்ந்து வருவதையும் ஏற்கனவே பார்த்தோம். 
( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

1970களின் பிற்பகுதியில் தொடங்கிய ஆங்கிலவழிப் பள்ளிகளின் புற்றீசல் வளர்ச்சியானது, தமிழ் அறிவை விட, தமிழ்நாட்டில் ஆங்கில அறிவையே அதிகம் சீரழித்துள்ளது என்பது, பொது அரங்கில், இதுவரை விவாதத்திற்கு உட்படுத்தப்படாத ஒரு விளைவாகும்.

பல வருடங்களுக்கு முன் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய ஒருவரின் அனுபவம் பின்வருமாறு;

அவர் முதல்வர் பொறுப்பேற்ற சில நாட்களில், விடுப்பில் இருந்த ஒரு ஆங்கில விரிவுரையாளர் விடுப்பு மடலுடன் பணியில் சேர, முதல்வரைச் சந்தித்தார். ஆங்கிலத்தில் இருந்த அந்த விடுப்பு மடலில் அபத்தமான இலக்கணப் பிழைகள் இருந்தன. விரைவில் தனது ஆங்கில இலக்கண அறிவை வளர்த்துக் கொள்ளுமாறு,M.A (English), M.Phil (English) (High first class) கல்வித்தகுதிகள் கொண்டிருந்த அந்த ஆங்கில விரிவுரையாளருக்கு முதல்வர் அறிவுறுத்தினார். மறுநாள் அந்த விரிவுரையாளார் பதவி விலகல் மடல் கொடுத்து பதவி விலகினார். அதற்குப் பின் தனது கல்லூரிக்கு ஆங்கில விரிவுரையாளரைப் பணியமர்த்த முயற்சித்தபோது, முன்குறிப்பிட்ட அளவுக்கு ஆங்கில அறிவுள்ளவர்கள் தான் அதிக அளவில் M.A (English), M.Phil (English) முடித்தவர்களில் இருக்கிறார்கள் என்பது அந்த முதல்வருக்குத் தெரிந்தது.

தமிழ்நாட்டு கல்லூரிகளில்  M.A (English), M.Phil (English) (High first class)   படித்து, கல்லூரியில் பணிபுரியும் ஆங்கில அசிரியர்களில் 30 வயதுக்கும் குறைவானவர்களில் பெரும்பாலோருக்கு, ஆங்கில இலக்கணம் சரியாக தெரியாதா? தாமாக ஆங்கிலத்தில் ஒரு பக்கம் பிழையின்றி எழுதவும் தெரியாதா? என்பது ஆய்விற்குரியதாகும். தமிழில் முதுநிலைப்பட்டம் பெற்றவர்களுக்கு, தமிழில் இருக்கும் அறிவை விட, ஆங்கிலத்தில் முதுநிலைப்பட்டம் பெற்றவர்களுக்கு, ஆங்கிலத்தில் இருக்கும் அறிவு குறைவானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

1970 களின் பிற்பகுதியில் புற்றீசல் போல் வளர்ந்த ஆங்கில்வழிக் கல்வியானது, தமிழ்நாட்டில் தமிழ் அறிவை விட, ஆங்கில அறிவையே அதிகம் சீரழித்துள்ளது; மனப்பாட நோயை நம்பமுடியாத அளவுக்கு வளர்த்தவாறே. 

தமிழ்வழியின் வீழ்ச்சிக்குக் காரணமான ஆங்கிலவழிக்கல்வி என்பது ஆங்கில அறிவின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்துள்ளதை மேலே பார்த்தோம். அது மட்டுமின்றி, தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் பொதுப்பிரச்சினைகளில் ஆர்வமற்று,'தாமும் தமது குடும்பமும் வளர்ந்தால் போதும்' என்ற சமூக அக்கறையின்மையாகிய‌ சமூக நோயும், அந்த போக்கில் எவ்வாறு வளர்ந்தது என்பதை அடுத்து பார்ப்போம்.

ஒரு சமூகத்தில் தாய்மொழியாம் தமிழ்வழிக் கல்வி வீழ்ச்சிக்குள்ளாகி, திரிந்த மேற்கத்திய  பண்பாட்டுடன் கூடிய ஆங்கிலவழிக் கல்வியின் வளர்ச்சியால், குறிப்பாக நடுத்தட்டு, மற்றும் வசதியான தமிழர்களின் சமூக அக்கறைக் குறைந்து, 'எந்த வழியிலும் தாமும், தமது குடும்பமும் வளர்ந்தால் போதும்' என்ற சமூக நோய் தமிழ்நாட்டில் 'வீரியத்துடன்' வளர்ந்துள்ளதா? என்பது ஆய்விற்குரியதாகும்.

உயர்நிலைப்பள்ளி வரை வலுவான ஆங்கில இலக்கண அறிவுடன்  தமிழ்வழியிலும், பின் கல்லூரியில் ஆங்கிலவழியிலும் தமிழ்நாட்டின் கல்விநிலை இருந்தது. 1970களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் புற்றீசல் போல் மெட்ரிகுலேசன் பள்ளிகள் திறக்கப்பட்டன. சுமார் 15 வருடங்களுக்குப்பின் , 1990 துவங்கிய காலத்தில் தமிழ்நாட்டில் நடுத்தர, வசதியான குடும்பங்களின் பிள்ளைகளெல்லாம் ஆங்கில வழி மாணவர்களாக இருக்க, அதன்மூலம் திரிந்த மேற்கத்திய பண்பாட்டின் ஆதிக்கமும், அதனுடன் தொடர்புடைய சமூக ஒப்பீடு நோயும்(social Comparison) அக்குடும்பங்களில் வளர்ந்தது. 
( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html ) அந்த போக்கில் வளர்ந்த சமூக அக்கறையின்மையுடன் தொடர்புடைய, 'தாமும் தமது குடும்பமும் வளர்ந்தால் போதும்' என்பது, உரிய எதிர்ப்பின்றி கீழ்வரும் விளைவுகள் வளர இடமளித்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

1991 லிருந்து, மலைகள், மணல்கள் உள்ளிட்ட கனிவளங்கள், நிலத்தடி நீரின் ஆதாரங்களாகிய ஏரிகள், குளங்கள் போன்றவையெல்லாம் ஊழலின் கோரப்பசிக்கு இலக்காகத் தொடங்கின. அதுவும் போதாதென்று, தனியார்களின் கட்டிடங்களையும், நிலங்களையும், 'மிரட்டி, கொலை' செய்து அபகரிக்கும் நோயும் சமூகப் புற்று நோயாக வளர்ந்தது.

வசதியான மேல்நடுத்தர தமிழர்களெல்லாம் அந்த 'புதிய' பணக்கரர்களைக் கண்டு பயந்தும், அவர்களில் 'வாழ்வியல் புத்திசாலிகள்' அவர்களுக்கு நெருக்கமாகி, பலன்கள் பெற்றும் வந்தார்கள். 'தமிழ், தமிழ் உணர்வு, பகுத்தறிவு, மனித உரிமை' உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பெரும்பாலும் அந்த போக்குகளிலேயேப் பயணித்தன. ஆனால் நடுத்தர, ஏழை மக்களின் கோபமே, 1996இல் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணமானது.

அதன்பின் “தி.மு.க தலைவர் குடும்ப செல்வாக்கு மேல் மக்கள் கொண்ட அதிருப்திக்கும், அ.இ.அ.தி.மு.கவில் சசிகலா குடும்ப செல்வாக்கு மேல் மக்கள் கொண்ட அதிருப்திக்கும், ஏற்றவாறு இரண்டு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தன.” என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

காலனிய மனநோயாளித்தனத்தின் பின்பலத்தில் வளர்ந்த திராவிட மனநோயாளித்தனம், 1990கள் முதல்,  தமிழ்வழிக் கல்வியையும், தமிழ்நாட்டு கனி வளங்களையும் 'வீரியத்துடன்' சீரழித்து வளர்ந்த வேகத்தில், அந்த நோயில், தமிழ்நாட்டு தேசியக் கட்சிகளும், மற்ற கட்சிகளும் எந்த அளவுக்கு சிக்கி சீரழிந்தன? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வி மூலம் திரிந்த மேற்கத்தியப் பண்பாட்டு நோயில் சிக்கி, தாமும் தமது குடும்பமும் மட்டும் வளர்ந்தால் போதும்' என்ற சமூக நோய் வளர்ந்து, தமிழ்நாட்டை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதைக் கீழ்வரும் செய்தி உணர்த்துகிறது.

போலி ஆவணங்கள் மூலம் பல குவாரிகளுக்கு அனுமதி: மாயமான பஞ்சபாண்டவர் மலை- சகாயம் அதிர்ச்சி 

போலி ஆவணங்களை தயாரித்து, கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது சகாயம் ஆய்வில் அம்பலமானது. விதிகளை மீறி புராதன மலைகளை அறுத்தும், குவாரி கழிவுகளைக் கொட்டி கண்மாய்களை மேடாக்கியவர்கள் மீது அரசுத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை அறிந்த சகாயம் வேதனையை வெளிப்படுத்தினார்.”

“திருவாதவூர் மேலச்சுனைகுளம் அருகே அமைந்துள்ள 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை யான ஓவாமலை என்றழைக்கப் படும் சமணர் படுகையை அவர் பார்வையிட்டார். தமிழ் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் ராமசாமி, தொல்லியல் ஆர்வலர் கபிலன் உட்பட பலர் பாதிப்புகள் குறித்து சகாயத்திடம் தெரிவித்தனர். 2,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுதி, படித்ததை இங்குள்ள கல்வெட்டுகள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. மலைக்கு மேல் உள்ள சிவன் கோயிலுக்கு மாணிக்கவாசகர் வந்துசென்றுள்ளார். மலை குகையில் 10 சமணர் படுக்கைகள் உள்ளன. இவை அனைத்தும் குவாரி நடத்தியவர்களால் கடுமையாக சேதமாக்கப்பட்டுவிட்டன. மலையை ஆங்காங்கே வெட்டி சிதைத்திருந்தனர். இங்கு யாரும் நுழைந்துவிடாதபடி பாதையையே அடைத்துவிட்டனர் என்றனர்.

புராதன சின்னங்கள் அமைவிடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவு பாதுகாக்கப்பட்ட பகுதி என்கிறது சட்டம். ஆனால் இந்த மலையில் 125 முதல் 242 மீட்டருக்கு உட்பட்ட பகுதிகள் சிதைக்கப்பட்டுள்ளன. ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்ததை சகாயம் பதிவு செய்தார்.” http://tamil.thehindu.com/tamilnadu

1990களில் 'வீரியத்துடன்' வளர்ந்த 'ஆங்கிலவழிக் கல்வி,திரிந்த மேற்கத்தியப் பண்பாட்டு நோய், அதன் தொடர் விளைவாய் தாமும் தமது குடும்பமும் மட்டும் வள‌ர்ந்தால் போதும் என்ற நோய்' என்ற சமூக பின்பலத்தில், 'கோரப்பசியுடன்' தமிழ்நாட்டைச் சூறையாடிய 'திராவிட அரசியல்' கொள்ளையர்களை எதிர்த்து, 'தமிழ், தமிழ் உணர்வு, பகுத்தறிவு, மனித உரிமை, ஆன்மீகம், இந்துத்வா, இஸ்லாம், தலித்' உள்ளிட்ட அமைப்புகளில் யார் யார் போராடினார்கள்? யார் யார் அந்த கொள்ளையர்களுடன் உறவாடி, பலன்கள் பெற்றார்கள்? அந்தக் கொள்ளை தொடர்பாக, சகாயம் மேற்கொண்டுவரும் விசாரணைக்கு ஆதரவாகவும், அவர் உயிருக்கு மிரட்டல் விடுப்பதை எதிர்த்தும் 'மூச்சு விடாமல்' மற்ற பிரச்சினைகளில் 'உணர்வுபூர்வமாக' ஈடுபடுவதற்கு அந்த 'அனுபவித்த பலன்கள்' காரணமா? என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம்.அவ்வாறு அந்த கொள்ளையர்களுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் 'உறவாடி, பலன்கள்' அனுபவித்தவர்கள், 'அகத்தில்' எவ்வளவு மோசமான சீரழிவுக்குள்ளானார்கள் என்பதானது, 'திருச்சி பெரியார் மையம்' மூலம் எனக்குக் கிடைத்த, 'திராவிட மனநோயாளித்தனத்தை' நான் கண்டுபிடிக்க உதவிய, அரிய உள்ளீடாகும்(input). மனிதரின் அகவாழ்வும் புறவாழ்வும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகத் தொடர்புடையது. திராவிட மனநோயாளிகளின் அகத்தில் வளர்ந்த சீரழிவும் தான், புறத்தில் விளைந்த சீரழிவுகளுக்கும், அதன் தொடர் விளைவாய் புலமையில் ஏற்பட்ட சீரழிவுக்கும் காரணமாகும். 
( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html )

காலனிய மனநோயாளித்தனத்தின் பின்பலத்தில், 'தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு' போன்ற ஆணிவேர்களைச் சிதைத்து, வளர்ந்த திராவிட மனநோயாளித்தனமானது, தமிழ்நாட்டில் ஆங்கில வழி புற்றிசல் மூலம், குடும்பம்,நட்பு உள்ளிட்ட எல்லா தனிமனித உறவுகளையும் லாப நட்டம் பார்க்கும் 'கள்வர்' நோயில் (திருக்குறள் 813) எவ்வாறு சிக்க வைத்தது? 'கோரப்பசியுடன்' தமிழ்நாட்டைச் சூறையாடிய 'திராவிட அரசியல்' கொள்ளையர்கள் உருவாகி, வளர, என்ன பங்கு வகித்தது? என்பது போன்ற ஆய்வுகளை இனியும் தாமதப்படுத்துவது என்பது, தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் மிகவும் கேடாய் முடியும்.

கடந்த சுமார் 40 வருட ஆங்கில வழிக் கல்வியில் சிக்கி, சீரழிந்த, தமிழ்நாட்டில், இன்று என்ன நிலைமை தெரியுமா?

கல்லூரிகளில் ஆங்கிலவழி மாணவர்களும் (தமிழ்வழி மாணவர்களைப் போலவே) பல்கலைக் கழக தேர்வுகளை ஆங்கிலமும் தமிழும் கலந்து 'தமிங்கிலிசில்' எழுதி வருகிறார்கள்.ஆங்கில வழி மாணவர்கள் ஆங்கிலத்திலும், தமிழ்வழி மாணவர்கள் தமிழிலும் பல்கலைக் கழக தேர்வுகள் எழுத வேண்டும் என தமிழக அரசு ஆணையிட்டது. உடனே வை.கோ உள்ளிட்ட அனைத்து தமிழ்த் தலைவர்களும் 'தமிழுக்கு அநீதி'(?) என்று கொதித்தெழுந்தார்கள். உடனே அரசு அந்த ஆணையைத் திரும்பப் பெற்றது. இந்தியாவில் இது போல, வேறு எந்த மாநிலத்திலும், பல்கலைக்கழகத் தேர்வு விடைத்தாள்களில் ஆங்கிலத்தையும், அந்த மாநில மொழியையும், கலந்து எழுதுவதை, அரசும், பல்கலைக்கழகங்களும் அனுமதிக்கும் அளவுக்கு, உயர்க் கல்வியின் தரம் தாழ்ந்துள்ளதா? என்பது ஆய்விற்குரியதாகும். 

தமிழ்நாட்டில் ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்களில், ஆங்கிலத்தில் சரியாக எழுத, படிக்க தெரியாமல், ஆங்கிலோ-இந்தியர்களைப் (Anglo-Indians) போல, சரளமாக ஆங்கிலத்தில் பேசுபவர்களை நான் சந்தித்துள்ளேன். ஆங்கிலத்தில் எழுத, படிக்க தெரியாமல், சரளமாக ஆங்கிலம் பேசும்  ஆங்கிலோ-இந்தியர்களை, திருச்சியில் நான் சந்தித்துள்ளேன். எனவே ஆங்கிலவழிக் கல்வி மூலம், 'ஆங்கில அரை-தற்குறிகள்' –semi-illeterates- (கிராமங்களில் தமிழில் எழுத, படிக்க தெரியாமல், தமிழில் பேசும் 'தமிழ் தற்குறிகளைப் போல) தமிழ்நாட்டில் உருவாகி வருகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அடுத்து சாதாரணத் தமிழர்கள் எப்படி இருக்கிறர்கள்? என்று பார்ப்போம்.

தமது பிரச்சினை, தமது பகுதியின் பொதுப்பிரச்சினை என்ற அளவுக்கு, தமது பலத்தை மட்டுமே நம்பி, சாதாரண கீழ்நடுத்தர, ஏழைத் தமிழர்கள், குறிப்பாக பெண்கள், மாணவர்களாகிய தமது பிள்ளைகளைப் போராட்டத்தில் ஈடுபடுத்தாமல், தாமே போராடி வருகிறார்கள்.அத்தகையோரின் பிள்ளைகளே பெரும்பாலும் தமிழ்நாட்டில் தமிழ்வழி அரசுப்பள்ளிகளில் படித்து வருகிறார்கள். அவர்களிலும் பலர் ஆங்கில வழியை நாடும் வேகத்திற்கு ஏற்ப, படிக்க மாணவரின்றி தமிழ்வழி அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.

மேலேக் குறிப்பிட்ட போராட்டங்களில் முன்னுக்கு நிற்பவர்களில் 'வாழ்வியல் திறமைசாலிகள்' அரசியல் கட்சிகளின் தூண்டிலுக்கு இரையாகி வருகிறார்கள். அப்படி 'முன்னேறுபவர்கள்' வீட்டுப் பிள்ளைகளெல்லாம் தமிழ்வழியிலிருந்து ஆங்கிலவழிக்கு மாறி வருகிறார்கள். அதாவது ஏற்கனவே பார்த்த, 'தமிழ்நாட்டு வாழ்வியல் வெற்றியின் இரகசியம்'  
( http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html  ) பெறும் வளர்ச்சிக்கு ஏற்ப,  பொதுப்பிரச்சினைகளுக்கு, 'லாப நட்ட' நோக்கின்றி போராடும் தமிழர்களின் எண்ணிக்கையையும் வெகு வேகமாகக் குறைத்து வருகிறது. 

உடல் ரீதியாகவும்,உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட மக்களை நாம் அறிவோம். ஆனால் தாய்மொழிக் கல்வியற்ற, ஆங்கில வழிக் கல்வி மூலம் படைப்பாற்றல்(Creativity)/சுய உருவாக்கல் (originality) /நல்லொழுக்க மதிப்பீடுகள் (values) ரீதியில்,  பாதிக்கப்பட்ட மாணவர்கள்,  1970‍களிலிருந்து உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே,  தற்கொலை, கொலை, கொள்ளை,வன்முறை உள்ளிட்ட சமூகக் குற்றங்கள் அபரீதமாக அதிகரித்து வருகின்றன..

தமிழ்நாட்டில் குக்கிராமம் வரை 2வயது முடிந்த குழந்தைகளை ஆங்கில வழியில் விளையாட்டுப் பள்ளிகளில் சேர்க்கும் போக்கு புற்றீசல் போல் வளர்ந்து வருகிறது. கடந்த பல வருடங்களாக, படிக்க மாணவரின்றி, ஆயிரக்கணக்கான தமிழ்வழி அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், 'தமது குடும்பப் பிள்ளைகளுக்கு 'ஆங்கிலவழிக் கல்வி நீதி', மற்ற தமிழர்களின் குடும்பத்துக்குப் பிள்ளைகளுக்கு 'தமிழ்வழிக் கல்வி நீதி' என்ற வகையில், தமிழ்நாட்டில் 'தமிழ், தமிழ் உணர்வு' தலைவர்கள், 'செல்வாக்குடன்' வலம் வருவது, தமிழின் மரணப்பயணத்தை துரிதப் படுத்தாதா? 

எனவே, திரிந்த மேற்கத்திய பண்பாட்டு நோயில் சிக்காமல், ஆங்கில வழியில் படிக்க வைக்க வசதியிருந்தும், தமது குடும்பப் பிள்ளைகளைத் தமிழ் வழியில் படிக்க வைப்பவர்களே, தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவார்கள். அத்தகையோர் தமிழ்நாட்டின் பொதுப் பிரச்சினைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் போது தான், தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் விடிவு கிட்டும்.

No comments:

Post a Comment