Sunday, December 28, 2014


'பெரியார்' ஈ.வெ.ரா வின்  'ஆன்மீக'ப் பெருந்தவறு


1944இல் அறிவுபூர்வ கூறுகள் பலகீனமாகி, உணர்ச்சிபூர்வ கூறுகள் அரங்கேறி வளர்ந்து, முற்றிய நிலையில், தமிழ்நாட்டின் கனிவளங்களையும், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நிலத்தடி நீர் ஆதாரங்களையும் (அரசர்கள், அதன்பின் காலனி ஆட்சி, அதன்பின் 1967வரை காங்கிரஸ் ஆட்சி வரை பாதுகாக்கப்பட்டு வந்ததை) சூறையாடி, காவிரி, கச்சத்தீவு, முல்லைப் பெரியார் சிக்கல்களை உருவாக்கி வளர்த்து, தமிழ்வழிக் கல்வியையும், மனிதருக்கான ஒழுக்க நெறிகளையும் சிதைத்து, 'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா' என்ற திசையில் 'திராவிட அரசியல் கொள்ளையர்கள்' பயணித்தார்கள் என்பது பற்றி ஏற்கனவே பார்த்தோம்.
( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html )

அதன் விளைவாக, அரசியல் கட்சிகளிடம் தொடர்பற்ற, சாதாரணத் தமிழர்களின் எண்ணிக்கை அபரீதமாக அதிகரித்து வருவது பற்றியும், கல்லூரி மாணவர்களிடையே 'இந்தியர்' என்ற அடையாளம் வலுவாகி வளர்ந்தாலும், 'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவை மிகவும் வருத்தப்படும் அளவுக்கு வீழ்ந்து வருவது பற்றியும், தமிழ்நாட்டில் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

இப்படிப்பட்ட மிகவும் கவலை தரும் விளைவிற்குக் காரணமான‌, 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்கள்  செய்த பெரும் தவறு பற்றி,  இந்தப் பதிவில் பார்ப்போம்.

'திராவிட' பற்றிய விவாதங்களும், இந்தியாவை 'ஆரிய தேசம்' என்று குறிப்பிட்டு நடக்கும் விவாதங்களிலும், தொல்பொருள், மற்றும் பிற‌ சான்றுகளின் அடிப்படையில், 'ஆரியர்கள்' அல்லது 'திராவிடர்கள்'  என்று அவரவர் நிலைப்பாட்டிற்கு ஏற்றவாறு, இன்றுள்ள ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை ஒரே தேசம் என்ற நிலைப்பாட்டில் ஒற்றுமை இருக்கிறது.
https://www.facebook.com/groups/1633520656906980/1637444939847885/ 

அந்த 'ஒற்றுமைக்கு' 'சுருதி பேதமாக', அண்ணாதுரையின் செல்வாக்கில் 'பெரியார்' ஈ.வெ.ரா 1944இல்  'திராவிடர் கழகம்' உருவாக்கி,  கோரிய(?) திராவிட நாடு (‘தஞ்சை மாவட்டம் வரை கிடைத்தால் கூட போதும்' என்று கருத்து தெரிவிக்கும் அளவுக்கு) இருந்தது. பின்னர் அந்த பெயரில் இருந்த 'ர்'-ஐ நீக்கி, அண்ணாதுரை 1949இல் 'திராவிட முன்னேற்ற கழகம்' உருவாக்கி, 'இன அடிப்படையில் இன்றி, நிலப்பரப்பின்' (geographical) அடிப்படையில்,  'திராவிட நாடு திராவிடருக்கே' என்று விளக்கி, அந்த 'சுருதி பேதத்தின்' குழப்பத்தைக் கூட்டினார். ஆனாலும் 'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா' என்ற 'உணர்ச்சிபூர்வ' திரைப்பாடல், திராவிடக் கட்சிகளின் பிரச்சாரத்தில் முக்கிய இடம் வகித்தது; 'பிரிவினைக் கோரிக்கையை' அண்ணாதுரை கைவிட்ட பின்னரும்.

'பெரியார்' ஈ.வெ.ராவின் உள்ளீடுகளை(inputs) இரண்டு வகையாகப் பிரித்துப் பார்ப்பது சாத்தியமே. அவரின் நேரடி அனுபவ உள்ளிடுகளை அவர் திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுட்னும் தனது அறிவு செயல்வினைக்கு( processing)  உட்படுத்திய முடிவுகள், இன்றும் 'மக்கள் நலத்தில்' உண்மையான அக்கறை கொண்ட கட்சிகளுக்கு அரிய பாடங்களாகும். (உதாரணத்திற்கு குறிப்பு 1) 

அதே நேரத்தில் அவருக்கிருந்த கல்வி வரை எல்லைகள்(limitations)  காரணமாக, அவரால் பழந்தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்டவற்றையும், இந்திய தொன்மை பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த ஆய்வுகளையும் படித்தறிய முடியாத நிலை இருந்தது. தமிழில் அவரால் படித்து விளங்கிக்கொள்ளக் கூடியவையும், ஆங்கிலத்தில் மற்றவர் படித்து, அவருக்கு விளங்கும் வகையில் தெரிவித்தவையுமே, அவருக்கான இரண்டாவது வகை-  நேரடியாக இன்றி மற்றவரைச் சார்ந்திருந்த-  உள்ளீடுகள் ஆகும். அந்த இரண்டாவது வகை உள்ளிடுகளின் அடிப்படையில்,அவர் வெளிப்படுத்திய கருத்துகளே 'தமிழ், பாரம்பரியம், பண்பாடு' போன்றவை தமிழர்க்குக் கேடேன்று, நோய் பிடித்த தாவரத்தின் நோய் மூலமாக அதன் ஆணி வேர்களையே அடையாளம் கண்டு சிதைத்த முயற்சிகளுக்கு வழி வகுத்தன. (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html )

எனது இசை ஆய்வுகளின் முலம், 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்கள் செய்த பெருந்தவறை நான் அடையாளம் கண்டேன். பெரியார் இயக்கத்தில் தமது பிழைப்பிற்காக இல்லாமல், உண்மையான சமுகப்பற்றுடனும், பெரியாரைப் போலவே அறிவு நேர்மையுடனும், திறந்த மனதுடனும் தமது தவறுகளை அடையாளம் கண்டவுடன் ஒத்துக் கொண்டு திருத்திக் கொள்ளும் இயல்புடையவர்கள் பார்வைக்காகவும், பின் தொடர் விவாதத்திற்காகவும், அவ்வாறு நான் அடையாளம் கண்டவை கட்டுரையாக, 2006 'தமிழர் கண்ணோட்டம்' பொங்கல் மலரில் வெளிவந்தது. 
( http://tamilsdirection.blogspot.in/search?updated-min=2013-01-01T00:00:00-08:00&updated-max=2014-01-01T00:00:00-08:00&max-results=32 )  இன்று வரை அதை ஏற்றோ,மறுத்தோ ஒரு கருத்தையும் நான் சந்திக்கவில்லை. நேரில் என்னைச் சந்தித்த 'பெரியார்' ஆதரவாளர்கள் அவை சரி என ஒத்துக் கொண்டார்கள். அவர்களும் அந்த விவாதத்தைத் தொடர்ந்தார்களா? இல்லையா? என்பதும் எனக்குத் தெரியாது.(குறிப்பு 2)

அறிவியல் அணுகுமுறையில் ‘ஆரியர் – திராவிடர்’ என்ற பிரிவினையில் அர்த்தமில்லை என்பதைப் 'பெரியார்' ஈ.வெ.ரா அறிந்திருந்தாலும், இலக்கியங்களிலும், புராணங்களிலும் 'மூட நம்பிக்கை' என்று அவருக்குப் பட்ட இரைச்சல்களுக்குள்(noises)  புதைந்திருந்த மதிப்பு மிக்க 'சிக்னல்கள்' (signals) அவருக்கு தெரியாததாலேயே, கீழ்வரும் கருத்தைத் தெரிவித்தார். 
( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html & http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html )

"இரத்தக் கலப்பு ஏற்பட்டு விட்டதே; ஏன் இன்னும் ஆரியர் திராவிடர் பிரச்சினை நாட்டில் நடமாட வேண்டும்? என்று நம்மை நையாண்டி செய்யும் தோழர்கள் பார்ப்பனர்களின் உயர்தன்மை கைவிடவும்,அவற்றுக்கு ஆதாரமான  சாஸ்திர புராணக் குப்பைகளைக் கொளுத்தி விடவும், அதற்குச் சின்னமான கடவுளைத் தகர்க்கவும் கேட்டுக் கொள்ளவும்;பிறகு வரட்டும் நம்மிடம்." 29.09.1948 சிதம்பரம் சொற்பொழிவு; விடுதலை 05.10.1948)

மேலேக் குறிப்பிட்ட இரண்டாவது வகை உள்ளீடுகள் காரணமாக, பெரியார் தெரிவித்துள்ள இந்த கருத்தின் பின்னணியில், 'பெரியார்' ஈ.வெ.ராவுக்கு இருந்த வரை எல்லைகள்(limitations)  இல்லாத‌,  பிரான்ஸ் நாட்டு நாத்தீகர் ஜீன் பெரி லேமன் - Jean-Pierre Lehmann  - 'இந்து மதம் 'பற்றி தெரிவித்துள்ள கீழ்வரும் கருத்தும் கவனிக்கத் தக்கதாகும்.

“உலகிற்கு ஒரு ஒழுக்க முறை, ஆன்மீகம்,நேர்மை வழிகாட்டி தேவைப்படுகிறது.இந்தியாவில் உள்ள மதம் மற்றும் தத்தவப் பாரம்பரியங்கள் அந்த மூன்றையும் நன்கு வழங்கக் கூடியவையாகும்.”( The planet needs a sense of moral order, spirituality and an ethical compass. The Indian religious and philosophical traditions can provide a great deal of all three.)

:‘The Dangers of Monotheism in the Age of Globalization’bBy Jean-Pierre Lehmann  (http://www.theglobalist.com/dangers-monotheism-age-globalization/) 

ஆன்மீகத்தையும் மதத்தையும் ஒன்றெனக் குழம்பி வாழ்பவர்களுக்கு மேற்குறிப்பிட்ட கட்டுரை விளங்குவது சிரமமே. கடந்த நூறு வருடங்களாக, மேற்கத்திய அறிஞர்களிடையே, மதத்திற்கு தொடர்பில்லாத தனி மனிதர் வளர்ச்சியுடன் தொடர்புடைய ஆன்மீகம் பற்றிய ஆய்வுகளும், விவாதங்களும் நூல்களாக வெளிவந்துள்ளன. மதமற்ற ஆன்மீகம்'’- "Spiritual but not religious" (SBNR)-, ‘ஆன்மீகத்துடன் சுதந்திரமாக'- "Spiritually Independent" - போன்ற அடையாளங்கள் வளர்ந்து வரும் காலக்கட்டம் இது.( http://en.wikipedia.org/wiki/Spiritual_but_not_religious)

இன்றைய சாதி முறைக்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் இல்லை என்பதையும், விவசாயம், மீன் பிடித்தல் உள்ளிட்டு அனைத்து தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள், 'பறை' வகை இசைக் கருவிகளை இசைத்தார்கள் என்பது பற்றியும் பதிவு செய்துள்ளேன். ('இசையில் தீண்டாமை காலனியத்தின் ‘நன்கொடை’யா?';
http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html ) "அரசும், சமூகமும் பின்னிப் பிணைந்திருந்த நிலையில், செயல்பாட்டு தர ஏணியாக (Functional hierarchy) இருந்த 'வருணம்' என்ற சமூக செயல் நுணுக்கம் (social Mechanism) , தமிழ்நாட்டில் எந்த காலத்தில், எந்த சமூகக் காரணங்கள் அடிப்படையில் ' சமூக உயர்வு, தாழ்வு, தீண்டாமை' உள்ளடக்கிய செயல் நுணுக்கமாக மாறியது என்பது ஆய்விற்குரியது." என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.('குற்ற உணர்வின்றி' மன நிறைவுடன் மரணத்தைத்  தழுவ முடியுமா?'
http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html )
தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா? ; http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html

எனவே உணர்ச்சிபூர்வ போக்குகளை ஒதுக்கி, அறிவுபுர்வமான விவாதங்களை ஊக்குவிக்க வேண்டிய காலக்க்கட்டம் இதுவாகும்.

'தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு' போன்ற ஆணிவேர்களுடன், மனிதரின் வளர்ச்சிக்கு அவசியமான ஆன்மீகத்தையும் சிதைத்ததே, கீழ்வரும் விளைவுகளுக்குக் காரணமா?  தமிழ்நாட்டின் கனிவளங்களையும், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நிலத்தடி நீர் ஆதாரங்களையும்  சூறையாடி, காவிரி, கச்சத்தீவு, முல்லைப் பெரியார் சிக்கல்களை உருவாக்கி வளர்த்து, தமிழ்வழிக் கல்வியையும், மனிதருக்கான ஒழுக்க நெறிகளையும் சிதைத்ததே, அதன் காரணமாக உருவாகி வளர்ந்த‌ , திராவிட அரசியல் கொள்ளையர்களிடம் தமிழும், தமிழரும்,தமிழ்நாடும் சிக்கி சீரழியக் காரணமா? என்ற ஆய்வு அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டது. அதைத் தவிர்ப்பது, தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழ்நாட்டிற்கும் தற்கொலையாக முடியும்.


குறிப்பு 1: தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாக இருந்தாலும், எப்படிப்பட்ட பொதுத் தொண்டர்கள் இனி பொது வாழ்வில் செல்வாக்கு பெற முடியும், என்பதற்கான 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்களின் கருத்து,  கீழ்வரும் மேற்கோளில் உள்ளது. 

"எந்த பொதுத் தொண்டனுக்காவது மனைவி இருக்கிறது; மக்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கும் குடும்பத்தில் வசதி இருக்க வேண்டும். அல்லது  அவர்களும் உணவு உடை தவிர மற்றெதையும் கருதாதப் பொதுத் தொண்டர்களாக இருக்க வேண்டும்.பொதுத் தொண்டு ஊதியத்தால் வாழ்கிறவர்கள், அவர்கள் குடும்பங்கள்  சராசரி வாழ்க்கைத் தரத்துக்கு மேல் வாழக் கூடாது; வாழவே கூடாது.

வாழ வேண்டி வந்தால், வாழ்ந்து கொள். ஆனால் 'நான் பொதுத் தொண்டன், கஷ்ட நஷ்டப்பட்டவன் ' என்று சொல்லாதே. சொல்வதற்கு வெட்கப்படு; உன் மனதிலும் நீ நினைத்துக் கொள்ளாதே. அப்படி நினைப்பாயேயானால், சொல்லுவாயேயானால், நீ 'மக்களை ஏமாற்றி வெற்றி பெறுவதாகக் கருதிக் கொண்டிருப்பவன்' என்று தான் சொல்ல வேண்டும்.

மற்றும் இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நீ பொதுத் தொண்டன் ஆகாமல், சுயநலத் தொண்டனாகி, உனக்கென்றே நீ பாடுபடுபவனாக ஆகி இருந்தால், இன்று உன் நிலை எப்படியாகி இருக்கும்? உன் தரம் அந்தஸ்து என்ன ஆகியிருக்கும் என்பதை உன் தரத்தைக் கொண்டு உண்மையாய் நினைத்துப் பார்த்து, உன் பொதுத் தொண்டு (வேஷம்) ஆனது உன்னைத் தியாகம் செய்ய செய்ததா?அல்லது உன் தகுதிக்கும்  மேற்பட்ட செலவத்தையும்,வாழ்க்கை வசதியையும், அந்தஸ்தையும் தேடிக் கொள்ளச் செய்ததா? என்று எண்ணிப் பார். " -  பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் 17.09.1962

( பெரியார் 84 ஆவது பிறந்த நாள் மலர் ) 

தனக்கு வருமானம் தரும் பணியிடத்தில், வாழுமிடத்தில் 'புத்திசாலித் தனமான, இழிவான' சமரசங்களுடனும், அந்த போக்கிலான, 'ஆதாயம் தரும் சமூக வலைப்பின்னலுடன்', தம்மையும், தமது குடும்பத்தையும் 'பாதுகாப்புடன்' வளர்த்துக் கொண்டு, ஊரான் விட்டுப்பிள்ளைகளைத் தூண்டி, 'காவு கொடுத்து', வாழும் 'முற்போக்கு' தமிழ்/திராவிடக் கட்சியினரை அடையாளம் காண உதவும் அளவுகோல் இதுவாகும்.

குறிப்பு 2 :தமது அளவில் 'அறிவு உழைப்பு'க்கு முயற்சியின்றி, தமது தகுதி,  திறமைப் பற்றிய புரிதலின்றி, புரிதலுக்கான தகுதி இல்லையென்றால், அதை அறிவு நாணயத்துடன் ஒத்துக் கொண்டு,  தமது புரிதல் அதிகரிப்பிற்கான 'தகுதி, திறமை'யை வளர்த்துக் கொள்ளாமல்,'தகுதி, திறமை மோசடி' என்ற போர்வையில் அதை மறைத்து, சராசரி பொது அறிவின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பும் 'வியாதியும்', அப்படி கேள்விகள் எழுப்பி தமது 'புலமைக் குறைவு' வெளிப்படுமானால், அதை ('பார்ப்பன எதிர்ப்பு, இனமானம்' போன்ற முகமூடிகள் மூலம் மறைத்துத் தப்பிக்கும் ) தவிர்க்கும் 'வியாதியும்', அல்லது விவாதப் பொருளை விட்டு விலகி, விவாதித்தவரையே இழிவு படுத்தும் வியாதியும்தமது அறிவுபலத்தில் தூண்டப்பட்ட அறிவுஜீவிகளாக வேடம் போடும் சில‌ ஆடுகள் இருப்பதில் மயங்கி, விவாத அரங்கில்  மற்றவர்களையும் மாற்றுக்கருத்துக்கு தகுதியற்ற ஆடுகளாக கருதி, விவாதிக்கும் 'மேய்ப்பர்' நோயும்; 1944இல் 'திராவிடர் கழகம்' உருவாகி, உணர்ச்சிபூர்வப் போக்கில் வளர்த்த நோயா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அந்நோயே, 'திராவிட அரசியல் கொள்ளையர்கள்' உருவாகி, தமிழ்நாட்டின் வளங்களைச் சூறையாடி, தமிழ் வழிக் கல்வியை மரணப்பயணத்திலும், தமிழர்களை 'கள்வர்' நோயிலும் சிக்க வைதததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். ('தமிழ்நாடு 'கள்வர் நாடு' என்ற திசையில் பயணிக்கிறதா?'; http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_17.html )

No comments:

Post a Comment