Wednesday, October 14, 2020

 

இந்துத்வா ஆதரவு கட்சிகளும், இந்துத்வா எதிர்ப்பு கட்சிகளிலும் ஒரே பாணியில் இரண்டு வகை தவறுகள்?


இரண்டு வகை தவறுகளால் விளைந்த சமூக மூச்சுத்திணறல் முடிவுக்கு வருகிறது

 

ஒரு தனி மனிதரை நாம் புகழ்வதும் இகழ்வதும் என்பதனாது, தனிமனித அளவில் அவர் எந்த அளவு உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்தார்? என்ற அடிப்படையிலாகும். நாம் போற்றும் கொள்கைகளை தமது பிம்ப கேடயமாக்கி, தனிமனித அளவில் இழிவுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்களை புகழும் சமூகமானது உருப்பட முடியாது.

தனிமனித அளவில் புகழத்தக்க வகையில் வாழ்ந்த தலைவர்களின் கொள்கைகள் எல்லாம், இன்றைக்கு எந்த அளவுக்கு சமூகத்திற்கு உதவும் அல்லது கேடாகும், என்று,

அக்கொள்கைகளை 'கால தேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்த மறுப்பது சமூகக் குற்றமாகும்.

அது போலவே, இன்றைக்கு சமூகத்திற்குக் கேடாகும் கொள்கைகளை விமர்சிக்கும் போது, தனி மனித அளவில் போற்றும் வகையில் வாழ்ந்த தலைவர்களை இழிவு செய்து கண்டிக்கும் நபர்களை அனுமதிக்கும் கட்சியும் சமூகமும் உருப்பட முடியாது.

மேற்குறிப்பிட்ட இரண்டு வகை தவறுகளிலும் சிக்காதவர்களே தமிழின் தமிழ்நாட்டின் மீட்சிக்கு பங்கு அளிக்க முடியும்.

படித்த காலத்தில், பணியாற்றிய/பணியாற்றும் காலத்தில், வாழ்ந்த/வாழும் இடத்தில், இழப்புகளுக்கு அஞ்சி, எந்த அநீதியை எதிர்த்தும் போராடாத 'யோக்கியர்கள்' எல்லாம், 'சமூக முதுகெலும்பு' முறிந்தவர்களாக வளர்ந்து, பின் வெளிப்படுத்தும் 'சமூக அக்கறையானதுl சமூகக் கிருமிகளின் வளர்ச்சிக்கே துணை புரிந்தது, என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

அத்தகையோர் இந்துத்வா ஆதரவு கட்சிகளும், இந்துத்வா எதிர்ப்பு கட்சிகளிலும் இருந்தாலும், மேற்குறிபிட்ட‌ ஒரே பாணியிலான‌ இரண்டு வகை தவறுகளையும் புரிவார்கள், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

பணக்கார மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில், அதிக மதிப்புள்ள சொத்துக்களும், தொழில் வியாபார வாய்ப்புகளும் பிறமாநில/வெளிநாட்டினர் வசம் சிக்கி வரும் போக்கில், அந்த போக்கின் 'ஆணிவேராக', தமிழர்களில் 'எல்லா வகை' தரகர்களும், திருடர்களும். 'ஊழல் அரசியல்' போக்கில் வளர்ந்தார்கள். 

1970களின் பிற்பகுதிகள் முதல், 'மம்மி, டாடி' நோயில்  தாய்மொழி தமிழின் ஆணிவேரை இழந்து, தமிழில் எழுதவும், படிக்கவும், பெரியவர்களை மதிக்கவும் தெரியாத, மாணவர்களை உருவாக்கி, 1990 முதல் அம்மாணவர்களில், வளரும் எண்ணிக்கையில் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற நோய்களில் சீரழியும் அளவுக்கும், அதை பயமின்றி செய்யும் அளவுக்கும், காவல்துறை நீதிமன்றங்களில் கறுப்பு ஆடுகளின் வளர்ச்சியும், சமூக மூச்சுத் திணறலை உச்சமாக்கும் அளவுக்கும் தமிழ்நாடு சீரழிந்தது.

கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் என்று தத்தம் விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில், ஒரு தனி நபரை மட்டுமே, அந்த சீரழிவிற்குக் காரணமாக முன் வைக்கும் முயற்சியானது,

இந்துத்வா ஆதரவு கட்சிகளும், இந்துத்வா எதிர்ப்பு கட்சிகளிலும் ஒரே பாணியில் இரண்டு வகை தவறுகள் புரிந்த நபர்களை எல்லாம்,

சமூக கண்டனத்தில் இருந்து தப்பிக்கவே துணை புரியும்; தமிழ்நாட்டின் மீட்சியையும் தாமதப்படுத்தி.

அதன் தொகுவிளைவாக,  சமூக மூச்சுத்திணறல் மிகுந்த சமூக வெளியில், வெளிப்படும் பேச்சுக்களும், எழுத்துக்களும், பெரும்பாலும் ஆதாயத்திற்கு வாலாட்டும்/கண்டிக்கும் நபர்களிடமிருந்து வெளிப்படும்.

பொது ஒழுக்க நெறியை 'நுகரும் திறன்' ஆனது, பொது அரங்கில் பலகீனமாகி, தமிழர்களின் தர அடையாளத்தை (benchmark) கீழிறக்கியதே,

இந்துத்வா ஆதரவு கட்சிகளும், இந்துத்வா எதிர்ப்பு கட்சிகளிலும் ஒரே பாணியில் இரண்டு வகை தவறுகள் புரிந்த நபர்களின்  சாதனையாகும்;

நல்ல ஆரோக்கியமான மனித வாழ்வுக்கு, திறந்த காற்றோட்டமான இடத்தில் (Free Ventilation)  வாழ்வது அவசியமாகும். அதே போல் நல்ல ஆரோக்கியமான மனதுடன் வாழ்வதற்கு, தாம் வாழுமிடம், பணியாற்றுமிடம், பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தமக்கான சமூக வெளியில் (social space), சமூக சுவாசத்திற்கான  (social breathing)  'திறந்த காற்றோட்டமும்' அவசியமாகும்.

சமூக சுவாசத்திற்கான (social breathing)  'திறந்த காற்றோட்டம்' இருக்கும் பொழுது தான், நமது மனதுக்கு சரி என்று பட்டதையும், தவறு என்று பட்டதையும் தடையின்றி வெளிப்படுத்த முடியும். நம்மிடம் உள்ள தவறுகளைப் பிறர் சுட்டிக் காட்ட முன் வருவார்கள். நாமும் அதை பரிசிலித்து, சரியெனில் நம்மை திருத்திக் கொள்ள முடியும். ஒருவர் துயரப்படும் போது, லாப நட்ட நோக்கமின்றி அடுத்தவர் உதவ முடியும்.  ந‌மது இயல்போடு ஒட்டிய‌ உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions) நாம் வாழவும், உண்மையான அன்புடன் நம்மை சுற்றியுள்ளவர்களையும், இயற்கையையும் நேசித்து வாழவும் முடியும்.

தமிழ்நாட்டில் இனி ஆதாயத்திற்கு வாலாட்டும், காலை வாறும், முதுகில் குத்தும் தமிழர்களே 'திராவிட அரசியலின்' - அதே போக்கில் பயணிக்கும் தேசியக் கட்சிகளின் -  ஆதரவாளர்கள் என்பதும் வெட்ட வெளிச்சமாகி விட்டது; தன்மானமுள்ள தமிழர்கள் எல்லாம் அப்போக்கிலிருந்து வெட்கப்பட்டு ஒதுங்கும் போக்கும் தொடங்கி விட்டது.

அவ்வாறு வெட்கப்பட்டு ஒதுங்கும் போக்கு என்பதே, அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் சமூக மூச்சுத்திணறலை (Social Suffocation) உணரத் தொடங்கியுள்ளதன் 'சிக்னல்' ஆகும்.     (https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_31.html)

No comments:

Post a Comment