Sunday, October 18, 2020

 

காரல் மார்க்ஸ்,   ஏங்கல்ஸ்,   லெனின்,   காந்தி,   நேரு,   பாரதி போன்ற பிரபலங்கள் தொடர்பான விமர்சனங்கள்,


சந்தித்திராத தனித்துவமான (unique) சிக்கலில் ஈ.வெ.ரா?

 

காரல் மார்க்ஸ்,   ஏங்கல்ஸ்,   லெனின்,   காந்தி,   நேரு,   பாரதி போன்ற பிரபலங்கள் தொடர்பான விமர்சனங்கள் சந்தித்திராத தனித்துவமான (unique) சிக்கல் ஈ.வெ.ராவிற்கு ஏற்பட்டிருக்கிறது;

என்பதை பேரா.தா.மணி முகநூல் விவாதத்தில் வெளிப்படுத்திய கீழ்வரும் கருத்தானது எனக்கு உணர்த்தியது.

ஈவெராவின் வரலாற்றில் அனைத்துச் context சூழலிலும் (சந்தர்ப்பங்களிலும்) சிறிதும் பிறழாமல்,

1தமிழ் மொழி

2.தமிழ்க்கல்வி

3தமிழிலக்கியம்

4பண்பாடு

5.தமிழர் மெய்யியல்

6தமிழர் இன அரசியல்,

இயக்கங்கள்

அமைப்புகள்

போராட்டங்கள்

இவற்றுக்கு எதிரான கருத்துக்களையே ஒளிவுமறைவின்றி, தடுமாற்றமின்றிப் பதிவிட்டுள்ளார்.

மேற்கண்ட எவற்றிலும் முரணின்றிப் பேசியதுதான் அவரின் துணிவு(நேர்மை எனலாம்)

தமிழக எல்லைப்பிரிப்பில்கூட அவர் தமிழத்தின் உரிமையைப் பேசவில்லை. மாறாக தெலுங்க, கேரள சார்பாகவே பேசியதை மறுக்கமுடியாது.

(1938இல்தமிழ்நாடு, பின்னர்1944இல் திராவிட நாடு,1956 இல் மீண்டும் தமிழ்நாடு, என மாறி மாறிப்பேசியது தனிக்கதை)

ஈ.வெ.ராவின் 'தமிழ் தமிழர்' தொடர்பான கருத்தினை பேரா.தா.மணி அதன் மூலத்தினை சரிபார்க்காமல் ("தேடிக்கொண்டிருக்கிறேன்." பேரா.தா.மணி) வெளியிட்டது தொடர்பான விவாதத்தின் போது மேற்குறிப்பிட்ட கருத்து முகநூலில் வெளிவந்துள்ளது.

முகநூல் பதிவில் ஈ.வெ.ராவை இழிவுபடுத்த பல பொய்யான தகவல்கள் வெளிவரும் காலம் இதுவாகும். (‘நேர்மையான இந்துத்வா ஆதரவாளர்களின் பார்வைக்கு; இந்துத்வா முகாம்களிலும் 'கறுப்பர் கூட்டம்'?; https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_27.html )

அவ்வாறு வெளிவருவதை சரியான தகவலா? என்று ஆராயாமல் பயன்படுத்துபவர்கள் எல்லாம் நானாயிருந்தாலும் யாராயிருந்தாலும் அவர்களின் புலமையின் தர அடையாளம் (benchmark) கேள்விக்குறிக்கு உள்ளாகும் அபாயம் இருக்கிறது.

பேரா.தா.மணி மட்டுமின்றி, தமிழ்த்தேசிய மற்றும் இந்துத்வா ஆதரவு முகாம்களில் இருந்து ஈ.வெ.ரா மீது முன்வைக்கும் விமர்சனங்களுக்கு முக்கிய மூலமாக (source) இருப்பது ,   வே.ஆனைமுத்து தலைமையில் ஒரு குழு தொகுத்த 'பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் 3 தொகுதிகள்' ஆகும். அதன் வரைஎல்லைகள் (limitations) வருமாறு:

1. ஈ.வெ.ரா காங்கிரசில் இருந்த காலம் 1919–1925. அந்த காலக்கட்டத்தில் ஈ.வெ.ரா வெளிப்படுத்தியவை இதுவரை தொகுக்கப்படவில்லை. மேற்குறிப்பிட்ட தொகுப்பிலும் இடம் பெறவில்லை.

 

2. குடி அரசு மற்றும் விடுதலை ஆகிய இதழ்களில் வெளிவந்தவை பெரும்பாலும் ஈ.வெ.ரா பொதுக்கூட்டங்களில் பேசிய பேச்சுக்களே ஆகும். ஆனால் காரல் மார்க்ஸ்,   ஏங்கல்ஸ்,   லெனின்,   காந்தி,   நேரு,   பாரதி போன்ற பிரபலங்கள் தொடர்பான தொகுப்புகள் எல்லாம் பெரும்பாலும் அவர்கள் எழுதிய கட்டுரைகள் ஆகும்.

 

3. ஈ.வெ.ராவின் வெளிவந்த பகுதிகளை முழுமையாக வெளியிடாமல் , தலைப்புகளுக்கு ஏற்றார்ப் போல சில பகுதிகள் மட்டுமே மேற்குறிப்பிட்ட தொகுப்பில் வெளிவந்துள்ளன. மேற்குறிப்பிட்ட தொகுப்பை மட்டுமே நம்பி ஈ.வெ.ராவை விமர்சிப்பதில் உள்ள வரைஎல்லைகளை தெரிந்து கொள்ள வேண்டுமானால் ,   குடிஅரசு மற்றும் விடுதலையில் வெளிவந்தவைகளை முழுமையாகப் படிக்க வேண்டும்.   

 

4. த‌ற்குறிகள் மற்றும் அரைகுறை எழுத்தறிவுள்ளவர்கள் நிறைந்த பொதுக்கூட்டங்களில் ஈ.வெ.ரா பேசிய பேச்சுக்களுக்கும்,   குடி அரசு விடுதலை போன்ற இதழ்களில் ஈ.வெ.ரா எழுதிய தலையங்கங்கள் கட்டுரைகள் அறிக்கைகள் போன்றவற்றிற்கும் வேறுபாடு உண்டு. அவரின் நிலைப்பாட்டினைச் சரியாக விளங்கிக் கொள்ள பிந்தையதை முக்கியமாகக் கருத வேண்டும். அவை தரும் வெளிச்சத்தில் பேச்சுக்களில் உள்ள உணர்ச்சிபூர்வ இரைச்சல்களை ஒதுக்கி ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளை ஆராய்ந்து அறியலாம்.

5. தாம் பயன்படுத்தும் சொல்லிற்கான பொருளை தாம் விரும்பியவாறு 'பொருள் திரிதலுக்கு' (Semantic distortion) உட்படுத்தி, ஈ.வெ.ரா அவர்கள் தமிழின், தமிழ்நாட்டின் சீரழிவிற்குக் காரணமான 'வரலாற்று குற்றவாளியாக' கருதுவற்கான‌ நியாயங்களுக்கு ஈ.வெ.ராவே கார‌ணமாகியுள்ளார். நானறிந்த வரையில் தம்மை தவறாக அவ்வாறு புரிந்து கொள்ளும் வகையில் பேசிய, எழுதிய தலைவர் உலக அளவில் ஈ.வெ.ரா மட்டுமே ஆவார். (https://tamilsdirection.blogspot.com/2019/08/blog-post.html)

6. ‘தமிழர் அடையாளத்தை விட திராவிடர் அடையாளம் சரி என்பதற்கு ஈ.வெ.ரா முன்வைத்த வாதங்களை யார் வேண்டுமானாலும் மறுக்கலாம். கி.ஆ.பெ.விஸ்வநாதன் போன்றவர்கள் ஈ.வெ.ராவின் அந்த வாதத்தினை மறுத்திருக்கிறார்கள். கி.ஆ.பெ.விஸ்வநாதன் போன்றவர்களின் வாதங்களை ஏன் தாம் ஏற்க முடியாது? என்பதையும் ஈ.வெ.ரா தெளிவுபடுத்தி இருக்கிறார். அந்த வாதத்தினை இன்று முன்னெடுப்பதும் சரியே ஆகும். ஆனால் ஈ.வெ.ராவின் அந்த கருத்தின் அடிப்படையில், அவரின் நோக்கத்திற்கே களங்கம் கற்பித்து, ஈ.வெ.ராவை தமிழர்க்கு எதிரி என புரிந்து கொள்வது அபத்தமாகும்.

"தமிழ் தோன்றிய 3000 – 4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்த புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இது வரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்" (தாய்ப் பால் பைத்தியம்என்ற நூலிலிருந்து) என்று ஈ.வெ.ரா முன்வைத்த வாதத்திற்கு அவர் வாழ்ந்த காலத்தில் எவராவது சரியான மறுப்பினை முன் வைத்தார்களா?

அவரின் சமூகநேர்மையை சந்தேகிப்பதானது அறியாமையா? அல்லது சுயலாப அடிப்படையிலான உள்மறைத்திட்டமா (hidden agenda)? என்ற கேள்விகளுக்கும் இடம் இருக்கிறது.

நானறிந்தது வரையில், உலகிலேயே தனது அறிவுக்கு 'தவறென' பட்டவைகளை, பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்டவர்  ஈ.வெ.ரா மட்டுமே ஆவார். (https://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_20.html )

கி.வீரமணி ஆதரவில் புலவர் இமயவரம்பன் அரவணைப்பில்  தஞ்சை இரத்தினகிரி மற்றும் மருதவாணன் மேற்பார்வையில் பேராசிரியர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் அரசு பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவின் மூலமாக,1983இல் திருச்சி பெரியார் மணியம்மை மேல்நிலைப்பள்ளி பள்ளி வளாகத்தில் ஈ.வெ.ராவின் எழுத்துக்களை ஆண்டுவாரியாக தொகுக்கும் முயற்சியானது மேற்கொள்ளப்பட்டது.

அம்முயற்சியிலும் குடிஅரசு விடுதலை ஆகிய இதழ்களில் புனைப்பெயரிலும் பெயரின்றி வெளிவந்தவைகளிலும் எவை எவை ஈ.வெ.ரா எழுதியதாக இருக்கக்கூடும்? என்பதை தஞ்சை இரத்தினகிரி மற்றும் மருதவாணன் ஆகிய இருவருமே முடிவு செய்தார்கள். அவ்வாறு தொகுக்கப்பட்டதில் விடுபட்டவைகளையும் தேடிக் கண்டுபிடித்து சேர்த்து கீழ்வரும் தொகுப்பினை கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளார்கள்.

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-17/9820-2010-07-02-06-13-51

'பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் 3 தொகுதிகள்' மூலமாக ஈ.வெ.ராவை விமர்சிக்க விரும்புபவர்கள் தமது வாதத்தில் வெளிப்படும் குறைகளைத் தவிர்க்க மேற்குறிப்பிட்ட தொகுப்பை படிக்க வேண்டியது அவசியமாகும்.

தவறான மற்றும் திரித்த தகவல்களின் தகவல்களின் அடிப்படையில், ஒரு தலைவரைப் பாராட்டுவதால், அவ்வாறு பாராட்டுபவருக்கும் அவர் வாழும் சமூகத்திற்கும் அதிக கேடு வராது.

ஆனால், எந்த ஒரு தலைவரையும் தவறான தகவல்கள் (உதாரணமாக, மணியம்மை ஈ.வெ.ராவின் வளர்ப்பு மகள்) மற்றும் திரித்த தகவல்களின் அடிப்படையில் கண்டிப்பதன் காரணமாக, அவ்வாறு கண்டிப்பவருக்கும் அவர் வாழும் சமூகத்திற்கும் கேடு விளைவதைத் தவிர்க்க முடியாது. அவ்வாறு கண்டிப்பவருக்கு அவர் வாழும் சமூகத்தில் எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு கேடு விளையும். (‘1949 முதல் 1967 வரை கருணாநிதியும் முரசொலியும் ஈ.வெ.ராவை இழிவு செய்த பாணியில், மாரிதாஸ் உள்ளிட்டு பல பா.ஜ.க ஆதரவாளர்கள்?’; https://tamilsdirection.blogspot.com/2020/10/1949-1967.html )

"'Harijan’ மற்றும் ‘Young India’ ஆகிய இரண்டும் காந்தி நடத்திய இதழ்களாகும். அவை ஆண்டு ரீதியாகத் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன. அது போலவே, ஈ.வெ.ரா 1925 முதல் வெளியிட்ட இதழ்களின் தொகுப்பு வெளிவர வேண்டும். ஈ.வெ.ராவையும், அவர் வாழ்ந்த தமிழ்நாட்டையும் விளங்கிக் கொள்ள அவை உதவும்..

ஈ.வெ.ரா பற்றியும் ஈ.வெ.ரா வாழ்ந்த தமிழ்நாட்டு சூழல் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுமானால், குறைந்த பட்சமாக‌  ஈ.வெ.ரா, ராஜாஜி, அண்ணா, சத்தியமூர்த்தி' ஆகிய நால்வரின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் ஆண்டு வாரியாக தொகுத்து, காந்திக்கு உள்ளதைப் போல, தொகுப்பு நூல்கள் வெளியிட வேண்டும்.

அது தொடர்பாக, நான் மேற்கொண்ட முயற்சியானது1996இல் நடந்த ஆட்சி மாற்றம் மூலமாக எவ்வாறு தோல்வியில் முடிந்தது? என்பதை கீழ்வரும் பகுதியில் விளக்கியுள்ளேன்.

1996 ஆட்சி மாற்றத்துக்கு முன், கல்வி அமைச்சராக இருந்த பேரா.பொன்னுசாமி, திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் பணி புரிந்த காலத்தில் எனக்கு நெருக்கமானவர். அப்போது 'பெரியார்' கொள்கையாளராக இருந்த எனது தலைமையில் தொகுக்கப்பட்டு, 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' மற்றும் 'வஞ்சிக்கப்படும் விவசாயம்' ஆகிய நூல்களை தி.க வெளியிட்டதை அவர் அறிவார். 1989‍ - 1991 காலத்தில் அவர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. ஒவ்வொரு சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு முதல் நாள், என்னை வீட்டில் சந்தித்து, பேச வேண்டிய குறிப்புகளை எடுத்துக் கொள்வார். முதல்வர் கருணாநிதியின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு, கச்சத்தீவு உள்ளிட்டு 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' தொடர்புடைய பிரச்சினைகளை சட்டசபையில் பதிவு செய்து, ஜெயலலிதாவின் பாராட்டைப் பெற்றார். எனவே 1991 அ.இ.அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.

தமிழ்நாட்டில் இந்துத்வா எதிர்ப்பு மற்றும் ஆதரவு முகாம்களில் அரைகுறை தகவல்களுடன் விவாதிக்கும் போக்கினை நீக்குவதற்காக, 'பெரியார்', ராஜாஜி, அண்ணா, சத்தியமூர்த்தி' ஆகிய நால்வரின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் ஆண்டு வாரியாக தொகுத்து, காந்திக்கு உள்ளதைப் போல, தொகுப்பு நூல்கள் வெளியிடுவதும், அந்த தேர்தல் அறிக்கையில் என்னால் இடம் பெற்றது.

1991-க்குப்பின் ஜெயலலிதா ஆட்சியில் அவர் கல்வி அமைச்சரானார். கல்வி அமைச்சராக இருந்த பேரா.பொன்னுசாமியிடம் மேற்குறிப்பிட்ட 1991 தேர்தல் அறிக்கையை நினைவூட்டினேன்.

முதலில் பெரியாரின் கூட்டுத்தொகை நூல்வரிசையை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மூலமாக வெளியிடலாம்; நிதியைக் காரணம் காட்டி அதை நிராகரித்தால், அரசு அனுமதியுடன் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் நன்கொடைகள் பெற்று அதனை வெளியிடலாம்; என்ற எனது ஆலோசனையை அவர் ஏற்றார். அத்தகவலை அந்நிறுவன இயக்குநர் இராமர்.இளங்கோவிடம் தெரிவித்தேன். அந்நிறுவனத்திற்கு கல்வி அமைச்சரே தலைவர். அடுத்து நடந்த அந்நிறுவனக் கூட்டத்தில், இராமர்.இளங்கோ மற்றும் பொன்னுசாமியின் பங்களிப்பால் அத்தீர்மானம் 1996இல் நிறைவேறியது. 1996இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அதன்பின் அமைச்சரான தமிழ்க்குடிமகனிடம் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை நினைவூட்டியபோது, உற்சாகமாக அதை வரவேற்று எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தார். அடுத்த முறை சந்தித்தபோது, அதை அரசு செய்வதை விட தனியார் செய்யலாம் என்று முதல்வர் கருணாநிதி கருதுவதாக தெரிவித்தார். 1996-இல் ஆட்சி மாற்றம் நடந்திருக்கவில்லை என்றால், பெரியார், ராஜாஜி, அண்ணா, சத்தியமூர்த்தி' ஆகிய நால்வரின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் ஆண்டு வாரியாக தொகுத்து, காந்திக்கு உள்ளதைப் போல, தொகுப்பு நூல்கள் ஜெயலலிதா ஆட்சியில் வெளிவந்திருக்கும். கருணாநிதி ஆட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பவை மட்டுமே வெளிவந்தது. அவரின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில், பெரியார், அண்ணா ஆகிய இருவரின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் ஆண்டு வாரியாக தொகுத்து, காந்திக்கு உள்ளதைப் போல, தொகுப்பு நூல்கள் வெளிவர, கருணாநிதியே தடையாக இருப்பார், என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். (‘கருணாநிதியின் சுயநல அரசியலானது, தமிழைச் சீரழித்த சமூக செயல்நுட்பம் ?’; https://tamilsdirection.blogspot.com/2020/10/1996.html)

காந்தியின் தொகுப்பு நூல்கள் மத்திய அரசின் உதவியுடனும், அம்பேத்கரின் தொகுப்பு நூல்கள் மகராட்டிர மாநில அரசின் துணையுடனும் வெளிவந்திருக்கின்றன.

மேற்குறிப்பிட்து போன்ற திருக்குறள் தொடர்பான‌ முயற்சிகளுக்கு தடைகளாக‌ தி.மு.க ஆட்சியில் கருணாநிதியும், ஜெயலலிதா ஆட்சியில் சசிகலா நடராஜனும் இருந்தார்கள் என்பது எனது அனுபவங்கள் ஆகும். (‘தமிழ்நாட்டு திராவிடஅரசியலில் சிக்கிய திருக்குறள் ஆய்வுகள்’; https://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

தற்போது கருணாநிதி நடரான் ஜெயலலிதா ஆகியோர் மறைந்து விட்டார்கள். சசிகலா தொடர்பாக 2017 சனவரியில் கீழ்வரும் கணிப்பினை வெளியிட்டேன்.

'திருக்குறள் (471) நெறி மறந்து, ஜானகி எம்.ஜி.ஆர் வழியில், அவர் சந்தித்ததை விட இன்னும் மோசமான விளைவுகளை சந்திக்க உள்ள திசையில், சசிகலாவின் அரசியல் பயணமானது, துவங்கி விட்டது.

ஜெயலலிதாவை முன்னிறுத்தி, பயணித்தது வரை, நீரில்  முதலையாக இருந்த சசிகலா, பொதுச் செயலாளர் பதவி மூலம், நீரை விட்டு 'அதிக தூரம்' தரைக்கு வந்த முதலையாகி விட்டாரா?' (https://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post.html )

இமாலய வெற்றி பெற்ற எம்.ஜி.ஆரின்  'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படத்துடன் ஒப்பிடும் நிலையில் தமிழ்நாடு இன்று பயணிக்கிறது. அந்தத் திரைப்பட துவக்க காட்சிகளில் வில்லன் நம்பியாருக்கு பயந்த கோழையாக இருந்த எம்.ஜி.ஆர் கிளைமாக்ஸ் காட்சிகளில் வீரத்துடன் வெளிப்பட்டு நம்பியாருக்கு உரிய பாடம் புகட்டுவார். அது போல கூவத்தூரில் சசிகலாவுக்குப் பயந்த கோழைகளாக இருந்தவர்களில் யார், யார், சசிகலா மீண்டும் வரும்போது, வீரமானவர்களாக வெளிப்படப் போகிறார்கள்? என்று நாம் ஆவலுடன் காத்திருப்போம்; வீரமான எம்.ஜி.ஆர்களைப் பாராட்டுவதற்காக.’ (https://tamilsdirection.blogspot.com/2020/03/normal-0-false-false-false-en-us-x-none_15.html )

கருணாநிதி நடராஜன் ஜெயலலிதா ஆகியோர் மறைந்து நிலையில் பெரியார், ராஜாஜி, அண்ணா, சத்தியமூர்த்தி' ஆகிய நால்வரின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் ஆண்டு வாரியாக தொகுத்து, காந்திக்கு உள்ளதைப் போல, தொகுப்பு நூல்கள் வெளிவருவதற்கும், திருக்குறள் தொல்காப்பியம் உள்ளிட்ட தமிழ் தொடர்பான எனது ஆய்வுகள் மூலமாக தமிழ் வளர்வதற்கும், மேற்குறிப்பிட்ட தடைகளை ஏற்படுத்தும் வலிமைக்கு இடமில்லாத அளவுக்கு சசிகலா அரசியல் செல்லாக்காசாகி விட்டார்.

எனவே,  தி.மு.க  அ.இ.அ.தி.மு.க பா.ஜ.க உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் 2021  தேர்தல் அறிக்கைகளில்,  பெரியார், ராஜாஜி, அண்ணா, சத்தியமூர்த்தி' ஆகிய நால்வரின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் ஆண்டு வாரியாக தொகுத்து, காந்திக்கு உள்ளதைப் போல, தொகுப்பு நூல்கள் வெளிவருவது இடம் பெற வேண்டும்.

ஈ.வெ.ராவை அறிவுபூர்வமாக‌ விமர்சிக்க விரும்பும் தமிழ்த்தேசிய மற்றும் இந்துத்வா ஆதரவாளர்களும்,  அந்த விமர்சனங்களை அறிவுபூர்வமாக சந்திக்க விரும்பும் 'பெரியார்' ஆதரவாளர்களும், முயற்சிகள் மேற்கொண்டால், அது சாத்தியமாகும். எந்த கட்சி ஆட்சியைப் பிடித்தாலும், அது செயல்வடிவம் பெறும்.

அதன்பின் தான்,  காரல் மார்க்ஸ்,   ஏங்கல்ஸ்,   லெனின்,   காந்தி,   நேரு,   பாரதி போன்ற பிரபலங்கள் தொடர்பான விமர்சனங்கள் சந்தித்திராத தனித்துவமான (unique) சிக்கலில் இருந்து,  ஈ.வெ.ரா விடுதலை பெறுவதும் சாத்தியமாகும்.


குறிப்பு:

ஈ.வெ.ராவின்  'தகவல் பரிமாற்ற குறைப்பாட்டில்' இருந்து, நான் பாடம் கற்று பின்பற்றி வருவது கீழ்வருமாறு;

உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்!

வள்ளலாரின் 'திருவருட்பா - (ஈ.வெ.ரா பின்பற்றியது)

 

சொல் ஒன்று சொல்லி பொருள் ஒன்று திரிந்து

புரிதல் திரியாமை வேண்டும்'- '

புதிய திருவருட்பா'- (ஈ.வெ.ரா பின்பற்றத் தவறியது)

https://tamilsdirection.blogspot.com/2019/08/blog-post.html

1 comment:

  1. //ஈ.வெ.ராவை அறிவுபூர்வமாக‌ விமர்சிக்க விரும்பும் தமிழ்த்தேசிய மற்றும் இந்துத்வா ஆதரவாளர்களும், அந்த விமர்சனங்களை அறிவுபூர்வமாக சந்திக்க விரும்பும் 'பெரியார்' ஆதரவாளர்களும், முயற்சிகள் மேற்கொண்டால், அது சாத்தியமாகும். எந்த கட்சி ஆட்சியைப் பிடித்தாலும், அது செயல்வடிவம் பெறும்.

    அதன்பின் தான், காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், காந்தி, நேரு, பாரதி போன்ற பிரபலங்கள் தொடர்பான விமர்சனங்கள் சந்தித்திராத தனித்துவமான (unique) சிக்கலில் இருந்து, ஈ.வெ.ரா விடுதலை பெறுவதும் சாத்தியமாகும்.//

    பெரியார் குறித்த தவறான புரிதல் தடுக்கப்பட பெரியார் அமைப்புகளே முன்முயற்சி எடுக்க வேண்டும். அரசையோ,மற்ரவர்களையோ குறைகூறிப் பயனில்லை.

    ReplyDelete