Sunday, October 11, 2020

 

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில்  விஜய் சேதுபதி?

           ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

 

முத்தையா முரளிதரன் பயோபிக் - விஜய் சேதுபதி:

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க உள்ளதைத் தவிர்க்குமாறு,  விஜய் சேதுபதிக்கு, இயக்குநர் சீனு ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்    (https://tamil.news18.com/news/entertainment/cinema-muthaiah-muralitharan-biopic-director-seenu-ramasamy-request-to-vijay-sethupathi-san-356009.html )   

தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்கள் எல்லாம் விஜய் சேதுபதி மேற்குறிப்பிட்ட படத்தில் நடிப்பதை எதிர்க்கத் தொடங்கி விட்டார்கள்.

தோழன் என்பவருக்கு இலக்கணமே குறைகளை அவ்வப்போது தயக்கமின்றி சுட்டிக்காட்டி நெறிப்படுத்துதல் ஆகும். 1980களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் 'விடுதலைப் புலிகளின் தோழமைக் கழகம்' துவக்கப்பட்டது. அது 'விடுதலைப் புலிகளின் ரசிகர் மன்றம்' போல செயல்பட‌த்தொடங்கியதும், அதை விட்டு விலகினேன். ஆனாலும் 1990‍களில் இசை ஆய்வுக்கு நோக்கி, முழுமையாகத் திரும்பும் வரையில், தோழனாக ஆதரித்துக் கொண்டே, விடுதலைப்புலிகளின் குறைகளைச் சுட்டிக்காட்டினேன். 1988 மார்ச்சில், 'விடுதலைப் புலிகள் மீண்டும் ஏமாறப் போகிறார்களா?' புத்தகம் வெளிவந்த பின், பேபி சுப்பிரமணியன் என்னை நேரில் சந்திக்கும் போதெல்லாம், சிறுபிள்ளை போல முகத்தைத் திருப்பி ஒதுங்கி போய்விடுவார். அதன்பின் 'எம்.ஜி.ஆர் மறைவும் இலங்கைப் பிரச்சினையும்' புத்தகம் வெளிவந்த பின், சேலம் தி.க மாநாட்டில் புத்தகம் விற்கப்பட்ட இடத்தில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாங்கி சென்றார். பின் 1991இல் 'ராஜிவ் கொலையும் சதிகளும்' புத்தகம் வெளியிட்ட பின், இசை ஆய்வுகள் நோக்கி முழுமையாகத் திரும்பினேன்.

மீண்டும் சகிக்க முடியாத வகையில், ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுஎன்ற பழமொழிக்கிணங்க, இலங்கையில் வாழும் தமிழர்களின் இன்னல்களைக் கூட்டும் வகையில், தமிழ்நாட்டில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் புரியும் தவறைச் சுட்டிக் காட்டவே இதை எழுதினேன்.‌

ஈழவிடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தினைத் தூண்டும் வகையில், 1974-இல் யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடானது, இலங்கை அரசின் அடக்குமுறைக்கு உள்ளானது. காவல்துறை நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 50 பேர்கள் காயமுற்றனர்.

மேற்குறிப்பிட்ட மாநாட்டை எதிர்த்து இலங்கை அரசின் நிலைப்பாட்டினை ஆதரித்தவர் புகழ் பெற்ற தமிழ்ப்புலமையாளர் கார்த்திகேசு சிவத்தம்பி. எனவே ஈழ விடுதலைக்கு எதிரான துரோகிகளின் பட்டியலில் முதல் இடம் பெறும் தகுதி அவருக்கு உண்டு.

ஆனால் பிரபாகரன் சாகும் வரை, பிரபாகரனால் மிகவும் மதிக்கப்பட்டு, தமிழ்நாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்களின் அரவணைப்பில் காலத்தைக் கழித்தவர் ‌கார்த்திகேசு சிவத்தம்பி. அவ்வாறு 'வாழ்வியல் புத்திசாலியாக' அவர் வாழ்ந்த சமூக செயல்நுட்பத்தினை எவ்வாறு நான் கண்டுபிடித்தேன்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.    

பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலி இயக்கத்தை உருவாக்கிய 'பொடியன்களுக்கு' தமது இல்லத்தில் இரகசியமாகப் பதுங்க அவ்வப்போது அடைக்கலம் கொடுத்து, ஈழவிடுதலைப் போராட்டத்தினை ஆதரித்தவர்கள் பேரா.நித்தியானந்தமும் பேரா.நிர்மலா நித்தியானந்தமும் ஆவார்கள்.

ஆனால் கார்த்திகேசு சிவத்தம்பியைப் போல 'வாழ்வியல் புத்திசாலியாக' வாழத் தெரியாதவர்கள் அவர்கள். அதன் காரணமாக, அவர்களுக்கு பிரபாகரன் புரிந்த 'செய்நன்றிக் கடனை' ஏற்கனவே விளக்கியுள்ளேன்.  (‘எதிரியாக தம‌து வலிமையை தமது எதிரிக்குத் 'தானம்' செய்து, தாமாகவே தோற்ற 'ஜுஜுட்சு'வாக பிரபாகரனும் விடுதலைப்புலி ஆதரவாளர்களும்’; https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post_8.html )

இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலுக்குப் பின், ராஜபட்சே குடும்பத்தின் முழுக்கட்டுப்பாட்டில் ஆளுங்கட்சியும் ஆட்சியும் வந்து விட்டது. அதிபர்: கோத்தபய ராஜபட்சே (மூன்றாமவர்); பிரதமர்: மகிந்தா ராஜபட்சே (இரண்டாமவர்); அமைச்சர்: சமால் ராஜபட்சே (மூத்தவர்); அமைச்சர்: நமல்  ராஜபட்சே (மகிந்தா ராஜபட்சேயின் மகன்)

இலங்கை தேர்தலுக்கு முன், கீழ்வரும் அறிவுரையை வெளியிட்டேன்.

'தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பாகும். இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லாம் வரும் தேர்தலில் ராஜபட்சேயை ஆதரிப்பதே அவர்களுக்கு நல்லது என்றும், அவ்வாறு ஆதரிப்பதாக முடிவு எடுத்தால், அவர்கள் உரிய பலன்கள் பெற தாம் துணை புரியலாம் என்றும் சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

சீமானுக்கு நெருக்கமான சசிகலா தமிழ்நாட்டின் முதல்வராக சுப்பிரமணிய சுவாமியின் உதவியை நாடியதற்காக, சசிகலாவை சீமான் கண்டிக்கவில்லை. அது போல, முள்ளி வாய்க்கால் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் லெனின் வழியில் ராஜபட்சேயுடன் சமரசமாக சுப்பிரமணிய சுவாமியின் உதவியை நாடுவதை, சீமான் உள்ளிட்ட தமிழ்நாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பதில் நியாயம் இருக்க வாய்ப்பில்லை.

'கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை' என்று பயணிப்பதானது, தோல்வியில் உரிய பாடம் கற்க மறுத்துப் பயணிக்கும் முட்டாள்த்தனமாகும்.'  (https://tamilsdirection.blogspot.com/2020/08/2.html )

தமிழ் ஈழம் பகுதிகளிலும் ராஜபட்சே ஆதரவுக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. (https://thediplomat.com/2020/08/sri-lanka-elections-tamils-have-not-abandoned-human-rights-for-economic-development/ ) 

ஈ.வெ.ரா மற்றும் லெனின் வழியில் ராஜபட்சேயுடன் சமரசமாவதே, ஈழத்தமிழர்களுக்குள்ள புத்திசாலித்தனமான ஒரே வழியாகும் . (https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_11.html )

வேறு வழியின்றி, தமது பலகீன நிலையை மோசமாக்கிக் கொள்ள விரும்பாமல், மேற்குறிப்பிட்ட ஈ.வெ.ரா மற்றும் லெனின் வழியில் தமிழ் ஈழம் பகுதிகளில் வாழும் தமிழர்கள் பயணிக்கத் தொடங்கி விட்டார்கள்.

ராஜபட்சே குடும்பத்திற்கு நெருக்கமான, ஏழைகளுக்கு நிறைய உதவிகள் புரிந்து வரும், கிரிக்கெட் மூலமாக உலகப் புகழ் பெற்ற முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில்  விஜய் சேதுபதி நடிப்பதன் விளைவானது,

மேற்குறிப்பிட்ட தமிழ் ஈழம் பகுதிகளில் வாழும் தமிழர்கள் பயணத்திற்கு வலிவு சேர்த்து, அவர்களின் துன்பங்களைக் குறைக்கவே உதவும். (‘நான் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல: முத்தையா முரளிதரன் விளக்கம்’; https://www.dinamalar.com/news_detail.asp?id=2634313

தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்கள் அதனை எதிர்ப்பதானது,

வடிவேல் நகைச்சுவை பாணியில், உதவி செய்வதாகக் கூறி உபத்திரவத்தைக் கூட்டவே உதவும்.

பொய்கள் மற்றும் திரிந்த தகவல்களின் அடிப்படையில், ஈ.வெ.ராவை இன்று பல தமிழ்நாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்கள் இழிவுபடுத்தி வருகிறார்கள். பிரபாகரன் பற்றிய உண்மைகள் வெளிவந்தால், அவர் அரசியல் தன்னலத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியுடன் போட்டி போடக்கூடியவர், என்பது வெட்ட வெளிச்சமாகி விடும். (https://tamilsdirection.blogspot.com/2017/02/blog-post_19.html )

எல்லாவற்றையும் விட, இந்தியாவிலேயே நோஞ்சான் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை நான் சுட்டிக்காட்டியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post_29.html )

அது போலவே, இந்தியாவில் 'நோஞ்சான் தமிழர்கள்' வளரும் போக்கில்‌ தமிழ்நாடு இருப்பதானது,தமிழ்நாட்டிற்கும் கேடாகும்; இந்தியாவிற்கும் கேடாகும். (https://tamilsdirection.blogspot.com/2020/06/depoliticize.html )

தமிழ்நாட்டில் உள்ள நோஞ்சான் தமிழர்களை எவ்வாறு வலிமையாக்குவது? தமிழ்நாடு நோஞ்சான் நோயில் இருந்து விடுதலை பெற்று, கர்நாடகம், மகராட்டிரம், பஞ்சாப், கோவா போன்ற வலிமையான மாநிலங்களின் வரிசையில் எவ்வாறு இடம் பெற வைப்பது? என்பதில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் கவனம் செலுத்துவதே புத்திசாலித்தனமாகும்.             

No comments:

Post a Comment