Wednesday, March 6, 2019


தமிழ்நாட்டு ஆங்கிலவழி தனியார்ப் பள்ளிகளில்;

 

சிங்கப்பூரிலிருந்து மிழ் ஆசிரியர்கள்?

மரணப் படுக்கையில் தமிழ்ப் பண்பு; வடமொழி வரச் சரியான சமயமா?’




தமிழ்வழிக் கல்விக்குத் தமிழர் குடும்பங்கள் மாறுவதற்கு முன்  அவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கத் தமிழ்வழி ஆசியர்கள் தேவை அல்லவா  . நீங்கள் குறித்த கணக்குப்படி பார்த்தால் தற்சமயம் நாறபது வயதுக்கு உட்பட்ட ஆசிரியரில் பெரும்பாலோரின் தகுதி கேள்விக்குறியாகவில்லையா  ? குறுக்குவழிகளிலேயே பட்டம் பெறலாம் , வேலை பெறலாம் , அரசு ஒப்பந்தங்கள் பெறலாம் என்று அரசியலும் சமூகமும் அவலப்பட்டு இருக்கையில் தனி மனிதன் நேர்மை பலனளிக்குமா ? அதனால்தான் நேர்மை ஒரு முட்டாள்தனம் ஆகிறது . அம்மணங்களின் ஊரில் கோவணம் கட்டியவன் கோமாளி ஆகிறான்இதற்காக ஒரு இயக்கம் தோன்றினால் ................  அதில் இணைந்து தலைவனாகி ஆதாயம் அடைய அநேகர் வருவர, இயக்கம் ஏமாளி ஆகும் . மரணப் படுக்கையில் தமிழ்ப் பண்புவடமொழி வரச் சரியான சமயம்...?’ 


என்று எனக்கு வந்துள்ள பின்னூட்டம் தொடர்பாக, இந்த பதிவு வெளிந்துள்ளது.

1970களின் பிற்பகுதியில் தொடங்கிய ஆங்கிலவழிப் பள்ளிகளின் புற்றீசல் வளர்ச்சியானது, தமிழ் அறிவை விட, தமிழ்நாட்டில் ஆங்கில அறிவையே அதிகம் சீரழித்துள்ளது என்பது, பொது அரங்கில், இதுவரை விவாதத்திற்கு உட்படுத்தப்படாத ஒரு விளைவாகும்.

பல வருடங்களுக்கு முன் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய ஒருவரின் அனுபவம் பின்வருமாறு;

அவர் முதல்வர் பொறுப்பேற்ற சில நாட்களில், விடுப்பில் இருந்த ஒரு ஆங்கில விரிவுரையாளர் விடுப்பு மடலுடன் பணியில் சேர, முதல்வரைச் சந்தித்தார். ஆங்கிலத்தில் இருந்த அந்த விடுப்பு மடலில் அபத்தமான இலக்கணப் பிழைகள் இருந்தன. விரைவில் தனது ஆங்கில இலக்கண அறிவை வளர்த்துக் கொள்ளுமாறு,M.A (English), M.Phil (English) (High first class) கல்வித்தகுதிகள் கொண்டிருந்த அந்த ஆங்கில விரிவுரையாளருக்கு முதல்வர் அறிவுறுத்தினார். மறுநாள் அந்த விரிவுரையாளார் பதவி விலகல் மடல் கொடுத்து பதவி விலகினார். அதற்குப் பின் தனது கல்லூரிக்கு ஆங்கில விரிவுரையாளரைப் பணியமர்த்த முயற்சித்தபோது, முன்குறிப்பிட்ட அளவுக்கு ஆங்கில அறிவுள்ளவர்கள் தான் அதிக அளவில் M.A (English), M.Phil (English) முடித்தவர்களில் இருக்கிறார்கள் என்பது அந்த முதல்வருக்குத் தெரிந்தது.

தமிழ்நாட்டு கல்லூரிகளில் M.A (English), M.Phil (English) (High first class)   படித்து, கல்லூரியில் பணிபுரியும் ஆங்கில அசிரியர்களில் 30 வயதுக்கும் குறைவானவர்களில் பெரும்பாலோருக்கு, ஆங்கில இலக்கணம் சரியாக தெரியாதா? தாமாக ஆங்கிலத்தில் ஒரு பக்கம் பிழையின்றி எழுதவும் தெரியாதா? என்பது ஆய்விற்குரியதாகும். தமிழில் முதுநிலைப்பட்டம் பெற்றவர்களுக்கு, தமிழில் இருக்கும் அறிவை விட, ஆங்கிலத்தில் முதுநிலைப்பட்டம் பெற்றவர்களுக்கு, ஆங்கிலத்தில் இருக்கும் அறிவு குறைவானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (‘தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வியின் புற்றீசல் வளர்ச்சி: தமிழறிவை விட, ஆங்கில அறிவை அதிகம் சீரழித்ததா? கூடுதலாக சமூக அக்கறையையும் ஒழித்ததா?’; http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_20.html )

காசு வாங்கி, தேர்வுகளில் 'காப்பி' அடிக்க அனுமதித்தல், கணினியில் மதிப்பெண்களை திருத்துதல், முனைவர் பட்ட ஆய்வறிக்கையை காசுக்காக எழுதி கொடுப்பது, ஆய்வு மாணவரிடம் காசு வாங்கி, 'ஒத்து வரும்' தேர்வாளர்களுக்கு ஆய்வறிக்கையை அனுப்பி ஒப்புதல் பெறுவது, வாய்மொழி தேர்வையும் ஒத்திகை பார்த்த நாடகம் போல நடத்துவது, போன்றவை எல்லாம் யு.ஜி.சியால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களிலேயே அரங்கேறி, தப்பித்தவறி யு.ஜி.சியில் சிக்கும் பல்கலைக்கழகங்கள் எல்லாம், தமது அங்கீகாரத்தை இழந்து வரும் காலமும் இதுவாகும். தவறாக தொடங்கப்படும் பல்கலைக்கழகங்கள் எல்லாம், துவக்கத்திலேயே அந்த நோயில் எளிதில் சிக்கும் ஆபத்தும் இருக்கிறது. (http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_20.html )

தமிழ்நாட்டில் ஒரு மாவட்ட தலைநகரில் உள்ள 'தரமான'(?) (அதிக கட்டணம்) தனியார் ஆங்கிலவழிப் பள்ளியில் அடிப்படைக்கல்வி பயின்ற தமது பேத்தியின் ஆங்கில வீட்டுப்பாடங்களில் இருந்த தவறான விடைகளையும் 'சரி' என அந்த பள்ளியின் அங்கில ஆசிரியர் திருத்தி வந்த நோட்டுப் புத்தகங்கள் எல்லாம்;

எனது நண்பரின் கவனத்தை ஈர்த்தது. பல முறை அதே தவறு தொடர்ந்தது. பள்ளியில் புகார் செய்தால், தம்மை அந்த ஆசிரியர் பழிவாங்கி விடுவார்; என்று அந்த பேத்தி பயந்ததால், புகார் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் பெரும்பாலான தனியார்ப் பள்ளிகளில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கு, மேலே குறிப்பிட்ட கல்லூரி ஆங்கில ஆசிரியர்களைப் போலவே, சரியான ஆங்கில அறிவு இல்லாதிருந்தால் வியப்பில்லை. 

1970களின் பிற்பகுதியில் ஆங்கிலவழிப் பள்ளிகள் புற்றீசல் போல வளர்ந்த போக்கில், என்னைப் போல எதிர்நீச்சல் போக்கில் தமது பிள்ளைகளை தமிழ்வழிக்கல்வியில் படிக்க வைக்காமல் ஆரம்பப்பள்ளி முதலே ஆங்கிலவழிக்கல்வியில் படிக்க வைத்த‌ திராவிட/தமிழ் கட்சிகளின் தலைவர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் தரமான தமிழ்க்கல்வியைச் சீரழித்த 'தமிழ் வேர்க்கொல்லி குற்றவாளிகளாகவே' நான் கருதுகிறேன். 

தமிழ்நாட்டில் தமது குடும்பப் பிள்ளைகளை தமிழ்வழியில், குறைந்த பட்சம் ஆரம்பக் கல்வி வரையிலாவது படிக்க வைக்காமல், ஆங்கில வழிக்கல்வி ஊக்குவிப்பு சமூக கிருமிகளாக, பொது அரங்கில் வலம் வரும் இரட்டை வேடதிராவிட/தமிழ் கட்சிகளின் தலைவர்களை, 'தீண்டாமைக்கு' உட்படுத்தி, நான் பயணிக்கிறேன்; தமிழின் மீட்சிக்கு பங்களிப்பு என்று கருதி.

சிங்கப்பூரில் தவிர்க்க முடியாத குடும்ப சூழலில், எனது பேத்தியின் தாய்மொழியும் வீட்டு மொழியும் ஆங்கிலமாகும். ஆங்கிலவழிப்பள்ளியில் மலாய், சீன மொழிகளை இரண்டாவது பாட மொழியாக தேர்ந்தெடுக்காமல், தமிழைத் தேர்ந்தெடுத்து மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். பேச்சுத் தமிழ் தெரியாமல், எழுதுவது போலவே தமிழில் பேச முயற்சித்து தடுமாறுகிறாள். எனது மருமகளின் மிகுந்த ஒத்துழைப்புடன், தனிப்பயிற்சி (private tuition) உள்ளிட்டு பல வழிகளில் எனது மகனும் நானும் (சிங்கப்பூரில் இருக்கும் தருணங்களில்) போராடி வருவதும் வித்தியாசமான மகிழ்ச்சி தரும் அனுபவமாகும். தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் 'பெரியார்'/தமிழ் ஆதரவாளர்களின் குழந்தைகள் எல்லாம் சரளமாக தமிழில் எழுதவும், படிக்கவும் தெரியாமல் வளர்வதானது, மன்னிக்க முடியாத சமூக குற்றம், என்பதும் எனது கருத்தாகும்.

கடந்த வருடம் நான் சிங்கப்பூரில் இருந்த போது, அங்கு ஆங்கிலவழிப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் எனது பேத்தியின் தமிழ் வீட்டுப்பாடங்களை நான் சொல்லிக்கொடுத்தேன். தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படித்த 10 ஆம் வகுப்பு மாணவர்களில் பெரும்பாலோர் அந்த பாடப்புத்தகங்களில் உள்ள வினாக்களுக்கு விடையளிப்பார்களா? என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு மூளைக்கு வேலை கொடுத்து விடையளிக்கும் வகையில் பாடங்களும் கேள்விகளும் இருந்தன. ஒரு முறை வகுப்பு தேர்வு விடைத்தாளில் ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு மதிப்பெண் கொடுக்கவில்லை; என்பதை நான் கண்டுபிடித்து எனது மகனிடம் சொன்னேன். உடனே அந்த தகவல் அந்த பள்ளிக்கு அனுப்பப்பட்டது. அடுத்த சில நாட்களில் பள்ளிக்கு பெற்றோர்களை அழைத்து, பள்ளி முதல்வர்(Principal ; சிங்கப்பூரில் Headmaster கிடையாது ) அறையில் ஆசிரியை முன்னிலையில் விசாரணை நடந்து, தவறு நிரூபணமானதை ஏற்று, மதிப்பெண் வழங்கப்பட்டது. அடுத்து சில காலம் அந்த அசிரியை தற்காலிகப் பணி நீக்கத்திற்கு உள்ளாக நேர்ந்தது. அந்த அளவுக்கு தமிழ்க்கல்வியின் தரம் மிகவும் உன்னிப்பாக அங்கு கண்காணிக்கப்படுகிறது.

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு வரை, தமிழ்நாட்டிலில் இருந்து தமிழாசிரியர்கள் சிங்கப்பூர் பள்ளிகளில் பணியாற்ற அழைக்கப்பட்டார்கள். அந்த தமிழாசிரியர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் தமிழ்க்கல்வியின் தரம் நன்றாக இருந்த போது படித்தவர்கள் ஆவார்கள். ஆனால் இப்போது சிங்கப்பூரில் ஆசிரியர் பயிற்சி பட்டயம்(Diploma), பட்டம்(Graduate), முதுநிலை(Post-graduate), முனைவர்(Ph.D) ஆய்வு வரை சிங்கப்பூர் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சிங்கப்பூரர்களே படித்து வருகிறார்கள். எனவே சிங்கப்பூரில் தமிழ்க்கல்விக்கு தரமான ஆசிரியர்கள் அங்கேயே உருவாகி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்கள் மத்தியில், தங்கள் பிள்ளைகளின் தமிழ் ஆசிரியர்கள் கல்வித் தரத்தில் தாழ்ந்திருப்பது தொடர்பான முணுமுணுப்பு அதிகரிக்கும் போது, தமது கல்வி வியாபாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற அக்கறையில், தனியார் பள்ளிகள் சிங்கப்பூரில் இருந்து தமிழ் ஆசிரியர்களை வரவழைக்க நேரிடும்; குறைந்த பட்சமாக மாத சம்பளம் ரூ ஒன்றரை லட்சத்திற்கும் மேலாக.

அதன் அடுத்த கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள தனியார்ப் பள்ளிகளில் ஆங்கில அசிரியர்களும் சிங்கப்பூரில் இருந்து வரத் தொடங்கலாம். அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் விளம்பரங்களில், தமது பள்ளியில் சிங்கப்பூர் ஆசிரியர்கள் பணிபுரிவது முக்கியத்துவம் பெற்றாலும் வியப்பில்லை.

அடுத்து, மரணப் படுக்கையில் தமிழ்ப் பண்பு; வடமொழி வரச் சரியான சமயமா?’   என்ற பின்னூட்டம் தொடர்பாக பார்ப்போம்.

தமிழ்நாட்டில் நான் பணியாற்றிய இடங்களில் பூஜைகள் நடந்த போது, புரோகிதர் அருகில் நிற்கும் வாய்ப்புகள் கிட்டியிருக்கின்றன. அப்போது சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லும் புரோகிதர் கரங்களில் சிறு புத்தகம் இருப்பதையும் பார்த்ததுண்டு. அந்த புத்தகத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் தமிழ் எழுத்துக்களில் அச்சடிக்கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் பெரும்பாலான இளம் வயது புரோகிதர்கள் (மந்திரங்கள் சரளமாக மனப்பாடமாகும் வயது வரும் வரை) அவ்வாறு தமிழில் அச்சடிக்கப்பட்ட மந்திர புத்தகங்களின் துணையுடன் தமிழ்நாடெங்கும் பூஜை செய்து வருகிறார்களா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்


நானறிந்த ஒரு பிராமணரல்லாத பூசாரி, தமது நண்பரான பிராமண புரோகிதர் செய்யும் பெரிய அளவிலான பூஜைகளில் அவருக்கு உதவியாக பணி புரிவார்; (தமிழ் எழுத்துக்களின் மூலமாக மனப்பாடம் செய்த) சமஸ்கிருத மந்திரங்களை அவ்வப்போது உச்சரித்தவாறே.


காலனி ஆட்சிக்கு முன்னும் மனப்பாடமாக மந்திரம் பயின்ற காரணத்தால், எழுதப்படிக்கத் தெரிந்த கல்வியறிவில் பெரும்பாலோர் பிராமணரல்லாத 'கம்மாள' பிரிவினரே;

என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html)

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருத தேர்வுகளில் விடைகளை ஆங்கிலத்தில் எழுத அனுமதித்திருப்பது கண்டு வியந்திருக்கிறேன்.

தமிழ்நாட்டில் தமிழ் அறிவு, ஆங்கில அறிவு சீரழிந்து வரும் அதே போக்கிலேயே சமஸ்கிருத அறிவும் சீரழிந்து ருகிறதா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம். 

மரணப் படுக்கையில் தமிழ்ப் பண்பு இருப்பதன் காரணமாக, மானமும் அறிவும் இழந்து,காலில் விழுவது, காலை வாறுவது, பல வகை தரகு என்று 'எந்த'(?) குறுக்கு வழியிலாவது தமிழர்களில் 'அதிவேக பணக்காரராக' முயற்சிப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். (‘தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து வருகிறதா?’; http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html) 

தமிழ்நாட்டில் சமூகசெயல்நெறி மதகுகள் (Social Functional Checks) பலகீனமாவதற்கு காரணமானதிராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடாவின் 'பலன்களை',  பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி அனுபவித்து வருவதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

எனவே தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்டு புலமைச் சீரழிவில் சிக்கியுள்ள தமிழ்நாட்டை மீட்கும் ஒரே வழியாக தாய்மொழிவழிக்கல்வி மீட்சி முயற்சிகள் இருக்கின்றன;

என்பதும் எனது ஆய்வு முடிவாகும். (‘தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியும், சமூக நோய்கள் வளர்ச்சியும்(2);தமிழ்நாட்டில் 'புலமை எதிர்ப்பு' சமூக நோய்க்கு, இனி இடம் இருக்காது’; http://tamilsdirection.blogspot.com/2018/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html )

குழந்தைகள் பிற்காலத்தில் பெரிய அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், படைப்பாளர்களாகவும் வர வேண்டுமானால், குழந்தைப் பருவத்தில் புலன் உணர்வுகள் தொடர்புள்ள மூளை வளர்ச்சி நன்றாக நடைபெற வேண்டும். அதற்கு 10 வயது வரை அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருப்பது நல்லது என்று உணர்த்தியுள்ள உலக ஆய்வுகள் பற்றிய சான்றுகள் உள்ளன. 10 வயதிற்குப்பின் ஆங்கில வழியில் படிக்க வைத்தாலும் அந்த பலன்கள் உண்டு. மாறாக விளையாட்டுப் பள்ளி முதல் ஆங்கில வழியில் படிக்கும் குழந்தைகளுக்கு அந்த பலன்கள் கிடையாது.

இந்த ஆய்வுகளும், விவாதங்களும் தமிழ்நாட்டில் உள்ள படித்த புத்திசாலிப் பெற்றோர்களாக உள்ள பிராமணர்களின் பார்வைக்குச் செல்லுமானால், முதலில் அந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளவை சரியா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். உறுதிப்படுத்தியபின், தங்கள் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளைத் தாய்மொழி வழியில் படிக்க வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். பெற்றோர்கள் மத்தியில் அப்படிப்பட்ட ஆர்வம் வெளிப்பட்டுள்ளதை அறிந்தவுடன், சென்னையில் புகழ் பெற்ற 'பத்மா சேஷாத்திரி' போன்ற கல்விக் குழுமங்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழ்வழி, தெலுங்கு வழி, இந்தி வழி என்று 5ஆம் வகுப்பு வரை தாய்மொழிவழிக் கல்வியும், 6 ஆம் வகுப்பிலிருந்து ஆங்கில வழிக் கல்வியும் இருக்குமாறு வகுப்புகள் துவங்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள படித்த புத்திசாலிப் பெற்றோர்களாக உள்ள பிராமணர்களின் குடும்பப் பிள்ளைகள் அடிப்படைக் கல்வியைத் தமிழ்வழியில் படிக்க ஆரம்பித்தவுடன், அவர்கள் வழியில் பிராமணரல்லாத படித்த பெற்றோர்கள் தமது குடும்பப் பிள்ளைகளைப் படிக்க வைப்பார்கள். அதன்பின் 'தமிழ், தமிழுணர்வு, பகுத்தறிவு, திராவிட'க் கட்சித் தலைவர்களும் முக்கிய நபர்களும் தங்கள் குடும்பப் பிள்ளைகளையும் தமிழ்வழியில் படிக்க வைப்பார்கள். அந்த போக்கு கிராமங்களிலும் பரவ, தமிழ்நாட்டில் கடந்த பல வருடங்களில் படிக்க மாணவரின்றி மூடப்பட்ட/மூடப்பட்டு வரும் ஆயிரகணக்கான அரசுப் பள்ளிகள் ஒவ்வொன்றாக செயல்பட ஆரம்பிக்கும். தமிழின் மரணப்பயணம் தடுத்து நிறுத்தப்படும். (‘தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (8); தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள்’; http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_19.html


அரசியலும் சமூகமும் அவலப்பட்டு இருக்கையில் தனி மனிதன் நேர்மை பலனளிக்குமா? அதனால் தான் நேர்மை ஒரு முட்டாள்தனம் ஆகிறது. அம்மணங்களின் ஊரில் கோவணம் கட்டியவன் கோமாளி ஆகிறான் .  இதற்காக ஒரு இயக்கம் தோன்றினால் ................  அதில் இணைந்து தலைவனாகி ஆதாயம் அடைய அநேகர் வருவர், இயக்கம் ஏமாளி ஆகும்.’ என்ற பின்னூட்டம் தொடர்பாக அடுத்து பார்ப்போம்.
 

(வளரும்)

No comments:

Post a Comment