Wednesday, August 12, 2020


அழுகிய கழகங்களால் அழுகும் தமிழக பா.ஜ.க (2)


'கந்த சஷ்டி கவசம்' சர்ச்சை பா.ஜ.கவுக்கு சாதகமா? பாதகமா?



அழுகிய கழகங்களால் அழுகும் திசையில் தமிழக பா.ஜ.க பயணிக்கத் தொடங்கி விட்டது.

அழுகிய கழகங்களில் இருந்து பா.ஜ.கவிற்கும், பா.ஜ.கவிலிருந்து அழுகிய கழகங்களுக்கும் இடையே 'போக்குவரத்து' தொடங்கி விட்டதால், பா.ஜ.கவும் அழுகல் இனக் கட்சிகளில் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியுமா

அவ்வாறு தவறான திசையில் பயணிப்பதன் காரணமாக, 'கந்த சஷ்டி கவசம்' சர்ச்சையை சாதகமாகப் பயன்படுத்தும் வாய்ப்பினைக் கெடுத்துக் கொண்டு, தமிழக பா.ஜ.கவானது எவ்வாறு பாதக திசையில் பயணிக்கிறது? என்பதை இங்கு பார்ப்போம்.

மறைந்த தி.க பேச்சாளர் துரை.சக்கரவர்த்தி நகைச்சுவை ததும்ப இந்து கடவுள்களை கேலி கிண்டல் செய்து பேசி புகழ் பெற்றவர் ஆவார். என்னிடம் ஒரு முறை கீழ்வரும் இரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் கிராமப்பகுதிகளில் பொதுக்கூட்டம் பேசுவதற்கு முன், அந்த கிராமத்தில் செல்வாக்கான சாதியில் உள்ள செல்வாக்கான மனிதர்களின் பெயர்களை விசாரித்துக் கொள்வார். பின் தனது பேச்சின் துவக்கத்திலேயே, தான் அந்த செல்வாக்கான நபருக்கு தூரத்து உறவினர் என்பதை தனது பேச்சின் போக்கில் வெளிப்படுத்தி விடுவார். அதன்பின் தனது பேச்சில், அந்த செல்வாக்கான சாதி உள்ளிட்டு எல்லா சாதிகளுமே இந்து மதத்தில் இழிவான சாதிகள் என்றும், இந்து கடவுள்களை கேலி கிண்டல் செய்து, கைத்தட்டல்கள் வாங்கி விடுவார்.

அந்த பொதுக்கூட்டத்தில் அந்த 'இரகசிய செயல்நுட்பத்தினை' கடைபிடிக்காமல், அன்று பேசிய தீவிரத்தை விட, குறைவாக பேசி இருந்தாலும், அந்த பொதுக்கூட்டமானது வன்முறையின்றி அமைதியாக நடந்திருக்காது.

அது போலவே, தமிழ்நாட்டில் 'பெரியார்' ஈ.வெ.ரா, அண்ணா மீது மதிப்பு கொண்டவர்களில், பெரும்பாலோர் இந்துமத பக்திமான்கள் ஆவார்கள். 

தமிழ்நாட்டில் அரசியல் நீக்கம் (Depoliticize) தொடரும் வரை, கொள்கைகளை விட, தலைவர்களுக்கே செல்வாக்கு அதிகமாகும்.

அது தெரியாமல், ஈ.வெ.ரா அண்ணா போன்ற‌ தலைவர்களை உணர்ச்சிபூர்வமாக இழிவு செய்து கண்டிக்கும் போக்கில் தமிழக பா.ஜ‌.க. பயணிக்கும் வரையில்,  'நோட்டா'வுடனும், 'டெபாசீட்டுடனும்' போட்டி போடும் நிலை தான் தொடரும். 

சமூகவியலில் உட்குழு(ingroup)வில் இருப்பவர்கள் எல்லாம், ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றும் குழு மனநிலையில் பயணிப்பவர்கள் ஆவார்கள்.

வெளிக்குழுவில் உள்ளவர்கள் உட்குழுவில் இருப்பவர்களை அவமதிப்பதை எதிர்ப்பார்கள்.

In sociology and social psychology, an in-group is a social group to which a person psychologically identifies as being a member. By contrast, an out-group is a social group with which an individual does not identify. 

தமிழக பா.ஜ.கவில் முன்பு மாநிலத்தலைவராக இருந்த தலித், பின்னர் பா.ஜ.கவில் இருந்து வெளியேறினார். அதன்பின் தமக்கு பா.ஜ.கவில் நிகழ்ந்த அவமானங்களை ஊடகங்களில் வெளிப்படுத்தினார். அவை உண்மையா? பொய்யா? மிகைப்படுத்தலா? என்ற கேள்விகளுக்கு விடைகள் கிடைக்காமல் போகலாம். ஆனால் தமிழக பா.ஜ.க ஒரு 'பிராமண சார்புக் கட்சியே' என்று ஏற்கனவே இருந்த பிம்பம் இன்னும் வலுவாகியிருக்கும் என்பதில் ஐயமில்லை. 

தற்போது தமிழக பா.ஜ.க தலைவராக இருக்கும் எல்.முருகன் எந்த அளவுக்கு தாம் வகிக்கும் பதவிக்கு உரிய அதிகாரத்துடனும் உரிய மரியாதையுடனும் செயல்பட மூத்த தலைவர்களால் அனுமதிக்கப்படுகிறார்? என்ற யோக்கியதையானது, அவரது பதவி காலம் முடியும் போது தான் தெரிய வரும். ‌

தமிழ்நாட்டில் தமிழக பா.ஜ.கவும், பிராமணர்களும், பெரும்பாலான பிராமணரல்லாதார் மத்தியில், குறிப்பாக படித்த பிராமணரல்லாதோர் மத்தியில் 'வெளிக்குழுவாகவே’ (Outgroup) ஏன் இன்னும் நீடிக்கிறார்கள்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

இன்று உணர்ச்சிபூர்வமாக இந்துத்வா எதிர்ப்பில் பேசி, எழுதி வரும் அறிவுஜீவிகளில் எவரும் அனுபவித்திராத எதிர்ப்புகளை, ஜி.சுப்பிரமணிய ஐயர், மதுரை வைத்தியநாத ஐயர் உள்ளிட்டு இன்னும் பல பிராமணர்கள் தமது சொந்த பந்தங்களிடமிருந்து அனுபவித்தனர். அவர்களின் முயற்சிகளை பெரும்பான்மையான பிராமணர்கள் ஆதரித்திருந்தால், 'திராவிடர் கழகம்' தோன்றியிருக்காது. தி.க வளர்ச்சியின் போக்கில், ஆத்தீகத் தமிழர்களை உள்ளடக்கிய தமிழ் அமைப்புகளும் 'பிராமண எதிர்ப்பு' திசையில் பயணித்திருக்க மாட்டார்கள்.

காங்கிரசில் இருந்த போது, ஈ.வெ.ரா பல முறை முன்னெடுத்த 'வகுப்புரிமை' தீர்மானத்தை, ராஜாஜி, சத்தியமூர்த்தி உள்ளிட்ட பிரபலமான பிராமண தலைவர்களில் யாராவது ஒருவர் ஆதரித்திருந்தாலும்,

இன்றைய ஆர்.எஸ்.எஸ் தேசிய நிலைப்பாட்டில், அந்த காலக்கட்டத்தில் பயணித்த ஈ.வெ.ரா, 1925இல் காங்கிரசை விட்டு வெளியேறியிருக்க மாட்டார். அதன் தொடர்விளைவாக, இன்று தமிழ்நாடு 'கறுப்பர் கூட்டம்' சிக்கலைச் சந்தித்திருக்காது. 
(‘'கறுப்பர் கூட்டம்' பிராமண எதிர்ப்பு அமைப்புகளுக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கும் முகவர்களான‌ (Recruiting agents) பிராமணர்கள்?’; 

மேற்குறிப்பிட்டவாறு தமிழக பா.ஜ.கவும், பா.ஜ.க ஆதரவாளர்களாக உள்ள பிராமணர்களும் தமிழ்நாட்டில் பெரும்பாலான பிராமணரல்லாதார் மத்தியில், குறிப்பாக படித்த பிராமணரல்லாதோர் மத்தியில் 'வெளிக்குழுவாகவேகருதப்படுகிறார்களா? இல்லையா? என்பதை ஆர்வமுள்ளவர்கள், தங்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான‌ படித்த பிராமணரல்லாதோரிடம் உரையாடி உண்மையை உணரலாம்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக, 'கந்த சஷ்டி கவசம்' சர்ச்சையில்,

இந்துத்வா ஆதரவு முகாமில் உள்ளவர்களால் கண்டிக்கப்பட்ட கறுப்பர் கூட்டத்தின் 'கந்த சஷ்டி கவசம்' அவமதிப்பினை, இந்துத்வா எதிர்ப்பு முகாமில் உள்ள ஆத்தீகத் தமிழர்களும் கண்டித்துள்ளனர்.

அந்த புதிய போக்கினை வரவேற்று வளர்க்கும் அறிவு இல்லாததன் காரணமாகவே,

அந்த சர்ச்சையை, ஆத்திகத் தமிழர் ஒற்றுமையைக் கெடுக்கும் வண்ணம், ஆத்திகத் தமிழர்களால் மதிக்கப்படும் ஈ.வெ.ராவை இழிவு செய்யும் போக்கில் பல இந்துத்வா ஆதரவாளர்கள் செயல்படுகிறார்கள். தி.மு.க எதிர்ப்புக்கும் அந்த சர்ச்சையைப் பயன்படுத்தி, தி.மு.க ஆதரவு ஆத்திகர்களின் வெறுப்பையும் ஈட்டி உள்ளார்கள்.

அதாவது அந்த புதிய போக்கினைப் பயன்படுத்தி தமிழக பா.ஜ.க 'வெளிக்குழு' என்ற சிக்கலில் இருந்து வெளியேறி, 'உட்குழுவில்' இடம் பெறும் வாய்ப்பினைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.

இன்று இந்துத்வா ஆதரவு முகாம்களில் ஈ.வெ.ராவையும் அண்ணாவையும் இழிவுபடுத்திக் கண்டித்து வருகிறார்கள். அது சரி என்றால், ராஜாஜியையும் அதே காரணங்களுக்காக ஏன் இழிவுபடுத்தி கண்டிக்கவில்லை?

அந்த பாரபட்ச அணுகுமுறையானது, தமிழக பா.ஜ.கவை 'வெளிக்குழு' என்ற சிறையில் நீட்டிக்க உதவாதா?

1920களில் வைக்கம் போராட்டத்தில் பங்கேற்ற ஈ.வெ.ரா அவர்கள் இன்றைய ஆர்.எஸ்.எஸ் பாணி தேசியவாதியாகவே பயணித்தவர் ஆவார்.

'இந்து மதம் வேகமாக மறைந்து வருகிறது. மற்ற மதங்கள் எல்லாம் மக்கள் தொகையில் 5, 10, 15 சதவீதம் வளர்ந்து வருவதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்து மக்கள் தொகை 6 சதவீதம் குறைந்து விட்டது, கடந்த 10 ஆண்டுகளில். இது இந்துக்கள் கலியாணம் செய்து கொள்ளவில்லை, குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறதா? இந்துக்களில் ஒரு பகுதியினரை நடத்தும் மோசமான முறை அவர்களை மற்ற மதங்களில் சேரத் தூண்டுகிறது.இந்த நிலைமை நீடிக்குமானால் இந்துக்கள் இல்லாமல் போய்விடுவர்.'-  ஈ.வெ.ரா
(பக்கம் 94, வைக்கம் போராட்டம், பழ.அதியமான்)

காங்கிரஸ் கட்சி மாநாடுகளில் ஈ.வெ.ரா கொண்டு வந்த வகுப்புரிமை தீர்மானத்தினை ராஜாஜி, சத்தியமூர்த்தி, திரு.வி.க உள்ளிட்ட இன்னும் பல பிரபல தேசியவாதிகளில் யாராவது ஒருவர் ஆதரித்திருந்தாலும், 1925இல் காங்கிரஸை விட்டு ஈ.வெ.ரா வெளியேறியிருக்க மாட்டார். தி.க மற்றும் தி.மு.க போன்ற கட்சிகள் தோன்றியிருக்காது.

1937இல் ராஜாஜி பள்ளிகளில் கட்டாய இந்தியை திணித்ததாலேயே, 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற பிரிவினைக் கோரிக்கை முதன் முதலாக தமிழ்நாட்டில் வெளிப்பட்டது.

அதே ராஜாஜி, இந்திய விடுதலைக்கு முன் 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையை பகிரங்கமாக ஆதரித்த்தார். 
(நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை’; 

பின், 1952 பொதுத்தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூவத்தூர் பாணிக்கு விதை போட்டு, ராஜாஜி முதல்வர் ஆனார்;

அந்த பதவி போன பின், அண்ணாவுடன் சேர்ந்து 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினைத் தூண்டினார்.

1967 தேர்தலில் கொள்கைகளைக் காவு கொடுத்த‌ கூட்டணியின் சாணக்கியராகி, தி.மு.க ஆட்சியைப் பிடிக்க உதவியது; பின் அண்ணா மரணமடைந்த பின், 1969இல் கருணாநிதி முதல்வராக உதவினார்;

போன்ற காரணங்களால், தமிழ்நாட்டின் இன்றைய சீரழிவிற்கு அதிகம் பங்களித்தது ராஜாஜியா? ஈ.வெ.ராவா? அண்ணாவா? என்று அவரவர் மனசாட்சிக்குட்பட்டு விடைகள் காணலாம். 
(ராஜாஜி, ஈ.வெ.ரா, அண்ணா மூன்று முக்கிய குற்றவாளிகள்’; 
https://tamilsdirection.blogspot.com/2019/04/normal-0-false-false-false-en-us-x-none_3.html)

'வெள்ளைக்காரன் நாட்டைவிட்டு வெளியெறிய போதே ஈ.வெ.ரா மற்றும் அண்ணா ஆகிய‌ இரண்டு பேரையும் சேர்த்து அடித்து துரத்தியிருக்க வேண்டும்.' என்று பேசியுள்ள  எச்.ராஜா (சென்னை 'வள்ளுவர்கோட்டத்தில், 'தாலி அகற்றல்' போராட்டம் நடத்திய‌ திராவிடர் கழகத்தைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் பேசியது 18 ஏப்ரல் 2015), ஈ.வெ.ராவின் 'திராவிடநாடு பிரிவினை' கோரிக்கையை ஆதரித்த ராஜாஜியையும் அவர் சார்பு பிராமணர்களையும், 'சேர்த்து அடித்து துரத்தியிருக்க வேண்டும்' என்று எச்.ராஜா கூறுவாரா? 

ஈ.வெ.ராவையும் அண்ணாவையும் இழிவுபடுத்திக் கண்டித்து வருவது போல, ராஜாஜியையும் அதே பாணியில் கண்டிக்காமல் விடுவது பாரபட்ச அணுகுமுறையாகாதா?

'இனம்' மற்றும் 'சாதி' ஆகிய தமிழ்ச்சொற்கள் காலனிய சூழ்ச்சியில் பொருள் திரிபுக்கு (semantic distortion) உள்ளானது. அதனால் 'திராவிடர்' என்ற சொல்லின் பொருளும் திரிந்து, 'பார்ப்பன எதிர்ப்பு' சொல்லானது. அதிகம் படிக்காத ஈ.வெ.ரா அந்த சூழ்ச்சியில் சிக்கி , 1944இல் தி.க தொடங்கிய பின், 'வெளிக்குழுவில்' பிராமணர்கள் சிக்கிய போக்கும் வலிமையானது. 

அதிகம் படித்த ராஜாஜி 1937இல் இந்தியைக் கட்டாயமாக்கி, பிரிவினை கோரிக்கை தமிழ்நாட்டில் வெளிப்பட வழி செய்தார். பின் இந்திய விடுதலைக்கு முன், அதே பிரிவினை கோரிக்கையை ராஜாஜி ஆதரித்தார். இன்னும் மோசமாக, 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மூலமாக, மாணவர்கள் பங்கேற்று பொதுச்சொத்துக்களுக்கும் பொதுமக்களுக்கும் சேதம் விளைவிக்கும் போக்கு முதன் முதலாக வெளிப்பட்டது. அதுவும் அண்ணாவுடன் சேர்ந்து ராஜாஜி தூண்டிய போராட்டமாகும். அதன் தொகுவிளைவாக, 'தமிழர்' உட்குழுவாக, 'இந்தியர்' வெளிக்குழுவாகவும் வெளிப்பட நேர்ந்தது.

இன்று இந்துத்வா ஆதரவாளர்கள் ஈ.வெ.ராவை இழிவுபடுத்தி கண்டிக்கும் பாணியில், ராஜாஜியைக் கண்டிக்காமல், 'இந்து' அடையாளத்தை முன்னிறுத்தி, மேற்குறிப்பிட்ட பிராமணரல்லாத தமிழர்களின் 'உட்குழு'வில் இடம் பெறுவது சாத்தியமா? அல்லது 'வெளிக்குழு'வில் நீடிப்பது இன்னும் வலிமையாகுமா? அவ்வாறு நீடித்துக்கொண்டு, 'கந்த சஷ்டி கவசம்' சர்ச்சையை தமிழக பா.ஜ.கவிற்குச் சாதகமாக்க முடியுமா? என்று அவரவர் அறிவு மற்றும் அனுபவ அடிப்படைகளில் ஆராய்ந்து தெளிவு பெறலாம்.‌

1971 தேர்தலுக்கு முன், சேலத்தில் தி.க ஊர்வலத்தில் இந்து கடவுள்களை அவமதித்தானது தேர்தல் பிரச்சனையாகவில்லை. அடுத்து வந்த தேர்தலில், தி.மு.க அமோக வெற்றி பெற்றது. அந்த வெற்றியைக் காரணமாகக் காட்டி, தமிழக மக்கள் சேலத்தில் இந்து கடவுள்களை அவமதித்தவர்களை ஆதரித்தார்கள்;

என்று முடிவு செய்வது முட்டாள்த்தனமாகும்.

அது போலவே, 'கந்த சஷ்டி கவசம்' சர்ச்சையானது தேர்தல் பிரச்சினை ஆகாது. அதனை தமிழக பா.ஜ.க தேர்தல் பிரச்சினையாக்குவது என்ற பெயரில், ஈ.வெ.ரா, அண்ணா போன்ற தலைவர்களை இழிவுபடுத்தி, ஜெயலலிதாவின் மர்ம மரணத்தைப் பற்றி மூச்சு விடாமல், சசிகலா குடும்ப அரசியலை எதிர்க்காமல், தி.மு.கவின் குடும்ப அரசியலை மட்டும் எதிர்ப்பதானது, அரசியல் தற்கொலையாகவே முடியும்.

கருணாநிதி குடும்ப ஆட்சியின் 'அறிவியல் ஊழலில்'  ஏரிகள், ஆறுகள், மலைகள், தாதுமணல், காடுகள் எல்லாம் தப்பித்திருந்தன. 1991 முதல் ஜெயலலிதாவை முன்னிறுத்திய‌ சசிகலா குடும்ப ஆட்சியில் தான்; அவையும், கொலை மற்றும் அச்சுறுத்தல் மூலம் தனியார்ச் சொத்துக்களும் ஊழலுக்கு தீனியாகின. தமிழக பா.ஜ.கவானது கருணாநிதி குடும்ப அரசியலை மட்டும் எதிர்ப்பதானது, சசிகலா குடும்ப அரசியலுக்கு உதவுவது ஆகாதா?

2014இல் பிராமணர்கள் சார்புள்ள கட்சி என்று கருதப்பட்டிருந்தாலும், திராவிடக்கட்சிகளைப் போலின்றி, நாகரீகமான நேர்மையான கட்சி என்ற பெயர் தமிழக பா.ஜ.கவிற்கு இருந்தது.

ஊழலை ஒழித்து வளர்ச்சி நோக்கிய ஆட்சியைத் தருவதாக 2014 தேர்தலில் மோடி செய்த பிரச்சாரத்திற்கு தமிழ்நாட்டிலும் கணிசமான வரவேற்பு இருந்தது. அதன் விளைவாகவே, 2014 பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆதரவின்றி போட்டியிட்ட பா.ஜ.க தலைமையிலான கூட்டணியானது 2 இடங்களில் வென்ற சாதனை வெளிப்பட்டது. பின் ஊழல் ஒழிப்பு மந்தமான போக்கில், அடுத்து வந்த சீரங்கம் இடைத்தேர்தலில் பா.ஜ.க டெபாசீட் இழந்தது. மத்திய அரசின் கண்களில் மண்ணைத்தூவி, மாதக்கணக்கில் மர்மமான முறையில் முதல்வர் ஜெயலலிதா மருத்துவ சிகிச்சையில் மரணித்தது, ஜெயலலிதாவின் இரத்த சொந்தங்களை ஒதுக்கி நடந்த நேரடி ஒளிபரப்பு இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, சசிகலாவையும் நடராஜனையும்  வணங்கியதுபின் 2ஜி குற்றவாளிகள் விடுதலையானது நடந்தது. அதன்பின் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க நோட்டாவிடம் தோற்றது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.கவுடன் கூட்டு சேர்ந்து, தி.மு.க எதிர்பாராத வெற்றி பெற பா.ஜ.க உதவியது.

அடுத்து வந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், பா.ஜ.கவை ஓரங்கட்டி, ஜெயலலிதா பாணியில் சாமான்ய வேட்பாளர்களை நிறுத்தி, அ.இ.அ.தி.மு.க ஜெஜெ பாணி வெற்றியை ஈட்டியது.

தமிழ்நாட்டில் 2014 தேர்தலில் ஏன் வெற்றி பெற்றோம்? என்பது தெரியாமல், மோடியின் தோளில் பயணித்து, இன்று தமிழ்நாட்டில் மோடியின் செல்வாக்கினையும் வீழ்த்தி, தமிழக பா.ஜ.க நோட்டாக் கட்சியாகி விட்டது.

மோடியின்  ஆட்சியில் 'கறுப்பு ஆடுகளை' வலிவுறச் செய்து, மெகா ஊழல் குற்றவாளிகள் விடுதலையாகி, மோடியின் ஊழல் ஒழிப்பானது, எவ்வாறு வடிவேலு பாணி காமெடியாகி வருகிறது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். 
(https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_25.html)

தமிழ்நாட்டில் மீடியாக்களில் 'சூடாக' விவாதிக்கப்படும் கட்சி அரசியல் தொடர்பான செய்திகள் எல்லாம்;

மீடியாவின் செல்வாக்கு வளையத்தில் சிக்காமல் பயணிக்கும் மாணவர்கள், இளைஞர்கள், கிராம மக்கள் மத்தியில் சிறு சலசலப்பை கூட ஏற்படுத்துவது கிடையாது.

மீடியாக்களில் 'சூடாக' வெளிப்படும் கட்சி அரசியல் செய்திகளை, பரிசோதனைக்காக, நான் அத்தகையோரிடம் தெரிவித்த போது, அவர்கள் எள்ளளவு ஆர்வம் கூட காட்டாதது, எனக்கு வியப்பை அளித்தது.

மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளில் தமக்குள்ள ஆர்வத்தை செயல்பூர்வமாக வெளிப்படுத்தும் தொடர் முயற்சியின்றி

மோடியின் செல்வாக்கு என்ற முதுகின் மேல், 'திராவிட' கட்சிகளின் பாணியில் ஆளுயர மாலை, மலர்க்கிரீடம், இந்துத்வாவை விட தமக்கான முக்கியத்துவத்தில் 'குவியமாகி', தமது 'விசுவாசிகள்' கூட்டத்தை பேணி பாதுகாத்து வரும் 'குழு'(?) தலைவர்கள் அரசியலில் சிக்கி பயணித்து வரும் தமிழக பா.ஜ.கவானது;

தமிழ்நாட்டில் ஆழமாக வேர் பிடித்து வரும் 'இந்துத்வா' மூலம் பலன் பெற வாய்ப்பில்லை. 
(https://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_17.html)

இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உள்ள ஊடக நபர்களில் கருணாநிதி - மாறன் குடும்ப செல்வாக்கு வளையத்திலோ, அல்லது சசிகலா நடராஜன் குடும்ப செல்வாக்கு வளையத்திலோ, சிக்காதவர்கள் எவரும் இல்லை. இருந்தால் தெரிவிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து ஆராய்வேன். அழுகிய கழகங்கள் மூலமாக அழுகும் சமூக செயல்நுட்பத்தில் தமிழக பா.ஜ.க பலியாகி வருவதற்கு, அதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

அழுகிய கழகங்களில் இருந்து பா.ஜ.கவிற்கு வந்தவர்களால் அக்கழகங்களின் வாக்கு வங்கிகளுக்கு சேதாரம் இல்லை. வாக்குகளுக்கு பணம் விநியோகித்து வாக்குகளைச் சேகரிக்கும் 'மேய்ப்பர்' திறமைசாலிகளே அவர்கள். 'வேலியில் போன ஓணானை, சட்டை மேலே விட்ட கதை'யானது, தமிழக பா.ஜ.கவில் அரங்கேறி வருகிறது.‌

"தி.மு.க., மூழ்குகின்ற கப்பல். சுயமரியாதை உள்ளவர்கள், கவுரவமானவர்கள் தி.மு.க.,வில் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உதயநிதிக்கு சலாம் போடுபவர்கள் தான் தி.மு.க.,வில் இருக்க முடியும். சுயமரியாதை உள்ளவர்கள் அந்த கட்சியில் இருக்காதீர்கள். சுயமரியாதையோடு, தேசபக்தியோடு வாருங்கள் ஒன்றிணைவோம் என்று அவர்களை அழைக்கிறேன்." - பா.ஜ.,தேசிய செயலர் எச்.ராஜா 
(https://www.dinamalar.com/news_detail.asp?id=2595826)

மு.க.அழகிரி, சசிகலா, ஸ்டாலின் உள்ளிட்ட  திராவிட செல்வாக்கு பீடங்களுடன், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நல்லுறவில் இருந்து கொண்டு, திராவிட ஊழல்களையும் அராஜகத்தையும் எதிர்ப்பதானது கேலிக்கூத்தாகாதா?

'கந்த சஷ்டி கவசம்' சர்ச்சை தொடர்பாக, முதல் முறையாக, இந்துத்வா எதிர்ப்பு முகாம்களில் ஆத்திகத் தமிழர்களிடம் வெளிப்பட்ட ஆதரவினை புத்திசாலித்தனமாகக் கையாண்டு, 'வெளிக்குழு' என்ற சிறையில் இருந்து விடுதலையாக, தமிழக பா.ஜ.க வி'ற்கு அரிய வாய்ப்பு கிடைத்தது. அதைக் கெடுத்துக் கொண்டு, தமிழக பா.ஜ.க எவ்வாறு அரசியல் தற்கொலைப் பாதையில் பயணிக்கிறது? என்று மேலே பார்த்தோம்.

ஜெஜெ மர்ம மரணத்திற்குப்பின் வெளிப்பட்டுள்ள 'அமாவாசைகளின் புரட்சி' காரணமாக, அழுகிய கழகங்கள் மூலமாக, பா.ஜ.க அழுகத் தொடங்கியுள்ளது. கொரோனாவால் ஒத்தி வைக்கப்படாமல், முறைப்படி அடுத்த சட்டசபை பொதுத்தேர்தல் நடந்தால், அதன் முடிவானது, தமிழக பா.ஜ.கவை எவரும் தீண்ட விரும்பாத 'தீண்டத்தகாத' கட்சியாக்கினாலும் வியப்பில்லை.

No comments:

Post a Comment