Sunday, August 30, 2020


1967 முதல் வெளிப்பட்ட 'சமூக ஊமைக் காயங்கள்'(1);


குணமாக்கும் 'சமூக மருத்துவர்களாக' நாம்?



'ஒரு சமூகத்தில் வெளிப்படும் சமூக ஊமைக்காயங்களை முளையிலேயே கண்டறிந்து, உரிய 'சமூக மருத்துவ சிகிச்சை' மூலமாக குணமாக்காததன் விளைவாக‌, அது இன்னும் மோசமான சமூக ஊமைக்காயங்களைத் தூண்டி தமிழ்நாட்டின் முதல்வரையேக் காவு வாங்கியதா?' என்ற ஆராய்ச்சியின் மூலமே, 1967 முதல் சமூக ஊமைக்காயங்களின் பாதுகாவலர்களாகப் பயணித்த 'யோக்கியமான'(?) சமூகக்கிருமிகளை அடையாளம் காண முடியும். அவ்வாறு அவர்களை அடையாளம் கண்டால் தான், 1967 முதல் முளை விட்டு   வளர்ந்து, தமிழின் தமிழர்களின் எதிர்காலத்தையே சீரழித்து வரும் சமூகக் காயங்களை எல்லாம் உரிய சமூக மருத்துவம் மூலமாக குணமாக்கும் பணியையும் தொடங்க முடியும்.

த‌மது குடும்பப்பிள்ளைகள் எல்லாம் விளையாட்டுப்பள்ளி முதலே ஆங்கில வழியில் படிக்க வைத்த 'தமிழ் ஆதரவு அமைப்புகளின் யோக்கியர்கள்' எவருக்கும், இன்று அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி மூலம் ஏழைத்தமிழர்களும், அந்த 'புத்திசாலி' யோக்கியத்தமிழர்களைப் போலவே பலன் பெற அரசு எடுத்து வரும் முயற்சிகளைக் குறை கூற முடியுமா? தி.மு.கவைப் போல இரட்டை வேடப் போக்கில் சிக்காமல், ,,அ.தி.மு.க பயணித்து வருவதால் தான், இந்த நெருக்கடியானது, 'புத்திசாலி' யோக்கியத்தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியே தொடர்ந்திருந்தால், இது போன்ற ஏழைத்தமிழர்களையும் முன்னேற்றும் முயற்சிகள் இன்றி, 'புத்திசாலி' யோக்கியத்தமிழர்களின் ஆதரவுடன் தமிழ்வழியிலேயே அரசுப்பள்ளிகள் மூடப்பட்டு தமிழ்வழிக்கல்வியின் எனவே தமிழின் மரணம் நிச்சயமாகி இருக்கும்.

தமிழ் செய்த புண்ணியம் காரணமாக, அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி அறிமுகமாகி, கொரொனாவின் விளைவாக தனியார்ப்பள்ளிகளில் இருந்தும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அதன் மூலமாக, மேற்குறிப்பிட்ட நெருக்கடியானது, 'புத்திசாலி' யோக்கியத்தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது 

மேற்குறிப்பிட்ட நெருக்கடி மூலமான‌ சமூக மருத்துவம் மூலமாக, 1967-இல் முளை விட்டு இன்று தமிழக முதல்வரையே காவு வாங்கும் அளவுக்கு வளர்ந்து விட்ட சமூக ஊமைக் காயங்களை எல்லாம் குணமாக்கும் பணியைத் தொடங்க வேண்டும். இல்லையென்றால், இன்று தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரியாத மாணவர்களின் அதிவேக வளர்ச்சியின் முடிவாக, தமிழ் வேரழிந்த நாடாக தமிழ்நாடு மாறுவதற்கு அதிக காலம் ஆகாது.

1967இல் முளை விட்டு இன்று தமிழ் வேரழிந்த நாடாக தமிழ்நாட்டை மாற்றும் அளவுக்கு அச்சுறுத்தி வரும் சமூக ஊமைக்காயங்கள் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

ஊமைக்காயம் : முரட்டடியால் வெளியில் காயம் தெரியாது உண்டாகும் உள்வீக்கம்.

சமூக ஊமைக்காயம்: அதிகார பலத்தின் முரட்டடியால் சமூக வெளியில் காயம் தெரியாது உண்டாகும் சமூக உள்வீக்கம்

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டமானது ஏன் 1968 வரை நீடித்தது? காங்கிரஸ் ஆட்சியைப் போலின்றி, தி.மு.க ஆட்சியில் எவ்வாறு அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒடுக்கப்படது? என்பது தொடர்பான உண்மைகளே,1967இல் முளை விட்ட சமூக ஊமைக் காயத்தினை அடையாளம் காட்டும்.

'மாணவராக 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டது மட்டுமில்லாமல், 1968 வரை நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் (தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து, திருச்சியில் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஒரே மாணவர் தலைவர்) கலந்து கொண்டவன் நான்.
(‘நாட்டின் ஊழல் பற்றி சோகமடைவதற்கும், கோபப்படுவதற்கும் நமக்குள்ள‌ யோக்கியதை?’; 

1965க்குப்பின், 1966 முதல் 1967 வரை கல்லூரிகள் கோடை விடுமறைக்குப்பின் திறக்கப்பட்டதும், தமிழ்நாடெங்கும் ஆங்காங்கே கல்லூரிகளில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கும். பின் காலவரையறையின்றி கல்லூரிகள் மூடப்படும். பின் திறந்ததும் தேர்வுகளை மனதில் கொண்டு போராட்டம் தொடராது. அந்த சூழலில், 1968இல் கோடை விடுமறைக்குப்பின் திறக்கப்பட்டதும், திருச்சி மன்னார்புரத்தில் இருந்த சமால் முகம்மது கல்லூரி மாணவர்களுக்கான தனியார் மாணவர் விடுதியில் ('Bird’s Lodge’ எனது ஞாபத்தின்படி)  நானும் கலந்து கொண்ட அனைத்து கல்லூரி மாணவர் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது நான் St.Joseph’s College’-இல் B.Sc     மூன்றாம் ஆண்டு மாணவன்.

"ஒவ்வொரு வருடமும் கல்லூரி திறந்தவுடன் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்குகிறோம். காலவறையற்ற விடுமுறை. பின் கல்லூரி திறந்தவுடன் தேர்வுகளுக்காக போராட்டத்தை நிறுத்தி விடுகிறோம். தி.மு.க ஆட்சியில் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் இந்தித் திணிப்பை ஒழிக்காது. எனவே மத்திய அரசு நம் கோரிக்கையை ஏற்கும் வரையில், தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்து கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம். முடியாதெனில், இந்தியை ஏற்றுக்கொள்வோம்." என்று எனது கருத்தினை அந்த உரையாடலில் தெரிவித்தேன். அனைவரும் அதை ஏற்றுக்கொண்டு 'மத்திய அரசு நம் கோரிக்கையை ஏற்கும் வரையில் தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்து, கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம்.' என்று . முடிவு செய்தார்கள். "எனது கல்லூரியில் இருந்து மாணவர்கள் போராட வர மாட்டார்கள். நான் மட்டும் தான் கலந்து கொள்ள முடியும்" என்று தெரிவித்தேன். பின் மறுநாள் போராட்டத்தில் தீ வைத்து கொளுத்த இந்தி (வைக்கோல்) உருவ பொம்மையை உருவாக்க துணை புரிந்து விட்டு, இரவு 11 மணிக்கு மேல் வீடு திரும்பினேன். 

இரவு 12 மணியளவில்  St.Joseph’s College பணியாளர்கள் நான்கைந்து பேர் வந்து கதவைத் தட்டினார்கள். நான் திறந்தவுடன் அவர்களின் முகத்தில் அச்சம் கலந்த அதிர்ச்சி. என் தந்தையைப் பார்க்க வேண்டும் என்றார்கள். பின் அவரை எழுப்பியவுடன், அவரை தனியாக வரச்ச்சொல்லி அவரிடம் பேசினார்கள். அதே நேரத்தில் சுமார் 15 தி.மு.க அதரவு மாணவர்கள் சைக்கிளில் என் வீட்டிற்கு வந்தார்கள். நான் வெளியில் சென்று அவர்களுடன் உரையாடினேன். "கழக ஆட்சி வந்து விட்டது. அதற்கு கெடுதல் செய்யும் போராட்டத்தை நீ எவ்வாறு ஆதரிக்கலாம்?" என்று கேட்டார்கள். நான் எனது நிலைப்பாட்டினை விளக்கினேன். அப்போது சமால் முகம்மது கல்லூரியில் ஆணழகன் போட்டியில் வென்ற மாணவர் (காட்டூர் கோபால் எனது நினைவின் படி) "நண்பராக பழகி விட்டதால் யோசிக்கிறேன். இல்லையென்றால், வேறு மாதிரியாகியிருக்கும்' என்று அன்பு கலந்த எச்சரிக்கையுடன் பேசினார். அவரது கல்லூரி மாணவர்கள் போராடவில்லையென்றால், நான் மட்டும் தனித்து போராட முடியுமா?" என்றேன். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றார்கள். என் தந்தையைப் பார்க்க வந்தவர்களும் சென்று விட்டார்கள்.

பின் என் தந்தை என்னிடம் 'உனது தலைமையில் நாளை மாணவர்கள் போராடப் போவதாக போலீஸிலிருந்து உனது கல்லூரிக்கு தெரிவித்து உன்னை ஒரு வாரத்திற்கு வெளியூருக்கு அழைத்துச் செல்லுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார்கள்" என்று சொன்னார். நான் நடந்த உண்மைகளைத் தெரிவித்தேன். என் தந்தை என்னைக் கண்டிக்காதது எனக்கு வியப்பானது. "ஒரு வாரம் நீ கல்லூரிக்குப் போக வேண்டாம்" என்று மட்டும் கேட்டுக்கொண்டார். மறுநாள் போராட்டம் முளையிலேயே கிள்ளப்பட்டது. காலை சுமார் 11 மணியளவில், எனது கல்லூரி நண்பர் துரைப்பாண்டியன் எனது வீட்டிற்கு வந்தார். "உன்னை சஸ்பெண்ட் செய்து விட்டதாக கல்லூரியில் பேசுகிறார்கள். நான் கல்லூரி வாயிலில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்" என்று உணர்ச்சிகரமாகப் பேசினார். 'அதனால் ஏதும் பலன் வராது. நீ ஒழுங்காக கல்லூரிக்கு போ" என்று அறிவுறுத்தினேன். பின் என் தந்தை முதல்வரை சந்தித்து, "என் பையனை கல்லூரியில் அனுமதியுங்கள். இல்லை சஸ்பென்சன் ஆர்டர் கொடுங்கள்" என்று கேட்ட பின்னர், ஒரு வாரத்திற்குப் பின் நான் கல்லூரி சென்றேன்.

பள்ளியில் கல்லூரியில் தி.மு.க ஆதரவு மாணவராகப் பயணித்த எனக்கு ஏற்பட்ட சமூக ஊமைக்காயம் அதுவாகும். பின்னர் படிப்பு முடித்து, 1971 ஆகஸ்டில் பாளையங்கோட்டையில் St.Xavier College-இல் பணியில் சேர்ந்தேன். அந்த கல்லூரியின் முத்த பிராமணப் பேராசிரியரை அவர் வீட்டின் முன் ஒரு இன்ஸ்பெகடர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கினார். மறுநாள் கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் ஊர்வலமாக பாளையங்கோட்டை காவல் நிலையம் நோக்கி சென்றோம். அந்த இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே கோரிக்கை. சரியான வெயிலில் சாலையில் நின்றோம். எதிரே கோட்டையின் (FORT) காவல் நிலையம் இருந்தது. திடீரென கோட்டையில் இருந்து சரமாரி கற்கள் எங்கள் மீது விழ, அனைவரும் கலைந்து சென்றோம். 'அமைதியாக இருந்ததால் தான் எங்களைத் தாக்கினார்கள். எனவே நீங்கள் தனியாக போராடுங்கள்.நாங்கள் தனியாகப் போராடுகிறோம்' என்று சொல்லி, மாணவர்கள் முதலில் தாமிரவருணி பாலம் அருகே இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றர்கள்.

சுமார் 1 மணி நேரம் கழித்து ஆசிரியர்கள் ஊர்வலமாக சென்றோம். தாமிரவருணி பாலம் நெருங்கிய போது, வெறிச்சோடி கிடந்த சாலையின் நடுவில் ஒரு அரசுப் பேருந்தில் கண்ணடிகள் உடைக்கப்பட்டு அனாதையாக நின்றது. பாலத்தின் கீழே தண்ணீரில் சிலர் மூழ்கி எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நெருங்குவதற்குள், நனைந்த ஆடைகளுடன் சுமார் 15 மாணவர்கள்  மாணவர் சடலத்துடன் கோரமான அழுகுரலுடன் வந்தார்கள். அன்றில் இருந்து சுமார் 3 நாட்கள் காவலர்கள் ஊரில் நடமாட பயந்தார்கள். அந்த அளவுக்கு சாதி மத கட்சி வேறுபாடுகளைத் தாண்டிய அரசின் மீதும் போலீஸ் மீதும் கோபம் வெடித்தது. மூன்று நாட்கள் கழித்து, மார்க்கெட்டில் போலீஸ் வேன் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது. வேனில் இருந்து அவசரமாக காவலர்கள் இறங்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் தவறுதலாக குண்டடிப்பட்டு வயதான காவலர் இறந்தார். அதன்பின் தான் மேற்குறிப்பிட்ட கோபம் தணிந்தது. நான் அனுபவித்த இரண்டாவது சமூக ஊமைக்காயம் அது. 

அதே காலக்கட்டத்தில், திருச்சி தெப்பக்குளம் அருகே இருந்த St.Joseph’s College-இன்   கிளைவ் மாணவர் விடுதிக்குள் போலீஸ் புகுந்து காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்தியதில் பல மாணவர்களின் கை கால்கள் உடைந்தன. அந்த விடுதியில் இருந்து கல்லூரி செல்லும் வழியில் ஒரு ஆளுங்கட்சி முக்கிய புள்ளியின் துணைவி (?) குடும்பம் இருந்தது. அந்த வீட்டில் இருந்த ஒரு இளம்பெண்ணை மாணவர்கள் சிலர் கேலி கிண்டல் செய்ததால், அந்த முக்கிய புள்ளியின் தூண்டுதலால் அந்த தாக்குதல் நடந்ததாகக் கேள்விப்பட்டேன். நான் படித்த கல்லூரியின் மாணவர்கள் அவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டதானது நான் அனுபவித்த மூன்றாவது சமூக ஊமைக்காயம்.

அதே காலக்கட்டத்தில், முதல்வர் கருணாநிதி 'டாக்டர்' பட்டம் வாங்க, அநியாயமாக அண்ணாமலைப்பல்கலைக்கழக மாணவர் உதயகுமார் பலியாகி, 'இறந்தது என் மகனல்ல' என்று அவரின் தந்தையை நீதி மன்றத்தில் சொல்ல வைத்த அநியாயம் அரங்கேறியது. தமிழ்நாட்டில் நேர்மையாகவும் பிறரின் துயரை 'ஏம்பதைஸ்' (Empathise: understand and share the feelings of another) மூலமாக உணர்ந்தும் வாழ்பவர்கள் சமூகக் காயங்களை தொடர்ந்து அனுபவிக்கும் போக்கு வளரத் தொடங்கியது. ஆதாய அரசியலே திராவிட அரசியலாக வேகமாக வளர்ந்தது.

தி.மு.கவின் ஆதாய திராவிட அரசியலின் சமூக முதுகெலும்பாக பல 'யோக்கியத் தமிழர்கள்' (?) வளர்ந்தார்கள். 

இன்றுள்ள கல்வி முறையில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறும் மாண‌வர்கள் படிக்கும் போதோ, படித்த பின் பணியாற்றுகையிலோ, எந்த அநீதியையும் எதிர்க்காமல், மிகுந்த பாதுகாப்பு மண்டிலத்தில் சமூக முதுகெலும்பு முறிந்தவர்களாகவே இருக்கிறார்கள். எனவே இன்றைய கல்விமுறையில் உள்ள சமூக உளவியல் பாதிப்பும் ஆய்விற்குரியதாகும். அவ்வாறு மிகுந்த பாதுகாப்பு மண்டிலத்தில் சமூக முதுகெலும்பு முறிந்தவர்கள் திராவிட அரசியலின் ஆதரவாளர்களாகப் பயணித்ததும், தமிழின் தமிழ்நாட்டின் சீரழிவுக்கு சமூக வினையூக்கியாக (Social Catalyst)  வெளிப்பட்டுள்ளது.

எந்த சேதாரமும் இன்றி தமது குடும்பங்களை மட்டும் பாதுகாப்புடன் வளர்ந்துக் கொண்டு, சமூக ஊமைக்காயங்களை உணரமுடியாத சுயநல மனித மிருகங்களாக (insensitive selfish human animals) அத்தகையோர் அம்பலமாகாமல் இன்றுவரை வாழ்ந்து வருகிறார்கள். திராவிட ஊழல் பிதாக்களைப் புரவலர்களாகக் கொண்டு பயணித்து வரும் 'பெரியார்' மற்றும் 'தமிழ்த்தேசிய' கட்சிகளின் பாராட்டுதல்களும் அவர்களுக்கு போனசாகி வருகிறது.‌

ஒழுக்கக்கேடான (immoral) மற்றும் சட்டவிரோத (unlawful) வழிகளில் உருவான அதிவேகப் பணக்கார சமூகக்கிருமிகளுக்கு, மேற்குறிப்பிட்ட 'யோக்கியர்களின், அவர்களைப் பாராட்டிய கட்சிகளின் துணையுடனேயே, தமிழ்நாட்டில் (சாமான்யர்கள் கேலி பேசும்) 'மரியாதை பிம்பம்' ஏற்பட்டுள்ளது.

அனிதாவின் தற்கொலை, பேரறிவாளன் விடுதலைக்காக தீக்குளித்த செங்கொடி, வைகோ தி.மு.கவிலிருந்து வெளியேறியபோது நடந்த தீக்குளிப்புகள் போன்று, 1965 முதல் இன்று வரை நடந்துள்ள தற்கொலைகளை எல்லாம் ஆதரித்த யோக்கியத் தமிழர்களின்’(?) குடும்பங்களில் ஏன் அது போன்ற தற்கொலை இன்றுவரை நடக்கவில்லை
(‘தமிழ்நாட்டில் 'திராவிடர்/தமிழர் சமூக‌ நீல வேல் மீன் விளையாட்டு'    (Dravidar/Tamizhar Social Blue Whale Game) ?’; 
https://tamilsdirection.blogspot.com/2017/09/dravidartamizhar-social-blue-whale-game.html)

அனிதா, செங்கொடி போன்றோரின் தற்கொலைகளை எல்லாம்,  நான் மனசாட்சியுடன் ஆதரித்தால், அடுத்து தமிழ்நாட்டில் அது போல அரங்கேறும் தற்கொலைகள், எனது குடும்பத்தில் அரங்கேறுவதை நான் ஊக்குவிக்க வேண்டும். இல்லையென்றால், குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளைக் காவு கொடுத்து, 'வாழ்வியல் புத்திசாலியாக'(?) வாழும் சமூகக்கிருமிகளின் வரிசையில் நானும், எனது குடும்பமும் இடம் பெற தகுதி உடையவர்கள் ஆவோம்.
(‘தாய்மொழி அடையாளச் சிதைவுக்கும், 'அலெக்சிதிமிக்' (alexithymic) மனநோய் வளர்ச்சியால் விளைந்த தற்கொலைகளுக்கும், தொடர்பு இருக்கிறதா?’; 

ஆதாய அரசியல் ஒழியாதது வரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அநியாயமாக உயிரிழந்த உதயகுமார், திருச்சி கிளைவ் விடுதியில் காவல் துறைக் கண்மூடித் தாக்குதலில் கை, கால் உடைந்த மாணவர்கள், அச்சுறுத்தலுக்கும் கொலைக்கும் இலக்காகி சொத்தை இழந்த கங்கை அமரன், பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர், சத்யம் தியேட்டர்ஸ் உள்ளிட்ட இன்னும் பலர், நிர்மலாதேவியிடம் சிக்கிய மாணவிகள், பொள்ளாச்சி பாலியல் வன்முறை, போன்ற இன்னும் பல எண்ணிலடங்காத கொடுமைகளை நேற்றும், இன்றும், நாளையும் சந்திப்பதிலிருந்து தமிழ்நாடு தப்பிக்க முடியாது. 'தன்மானம்' என்ற கோமணம் இழந்து, ஊழலுடனும், ஆதாய அரசியலுடனும் ஒட்டிப் பயணித்தவர்களும், பயணிப்பவர்களும் மேற்குறிப்பிட்ட கொடுமைகளின் 'கூட்டுப்பங்காளி குற்றவாளிகள்' ஆவார்கள்.

கருணாநிதியின் குடும்ப அரசியல் நலன்களுக்காக வளர்ந்த சமூக ஊமைக்காயங்கள் எல்லை மீறி போகவே, இயற்கையின் போக்கில் எம்.ஜி.ஆர் மூலமாக அந்த குடும்ப அரசியல் வீழ்ந்தது. எம்.ஜி.ஆரின் மறைவிற்குப்பின் ஜெயலலிதாவின் பலகீனம் காரணமாக சசிகலா குடும்ப அரசியல் தோன்றியது. அது கருணாநிதியின் அறிவியல் ஊழலை விஞ்சியது. எனவே குடும்ப அரசியல் நலன்களுக்காக வளர்ந்த சமூக ஊமைக்காயங்கள் எல்லை மீறி முதல்வர் ஜெயலலிதாவையே காவு வாங்கியது. இனி இயற்கையின் போக்கில் சசிகலா குடும்ப அரசியல் வீழ்வதை எவரும் தடுக்க முடியாது;

சசிகலாவுக்கு நெருக்கமான சீமான், நல்லக்கண்ணு, நல்லக்கண்ணுக்கு நெருக்கமான ஊழல் ஒழிப்பில்(?) பிரபலமான சகாயம் ஐ.ஏ.எஸ் உள்ளிட்டு எவரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரித்தாலும். (குறிப்பு கீழே)

இரண்டு குடும்ப அரசியலின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத ஆட்சி இன்று நடக்கிறது.

ஊழலற்ற ஆட்சி தொடங்கிய எம்.ஜி.ஆரின் ஆட்சியும் கருணாநிதியின் குடும்ப அரசியல் நலன்களுக்காக கலைக்கப்பட்டது. அதனால் எதிர்க்கட்சியும் தமக்கான பங்கு பெற்ற, பகுதி ஊழலில்  சிக்கிய‌ எம்.ஜி.ஆர் ஆட்சியில் தமிழ்நாடு பயணிக்க நேரிட்டது. அது போலவே இன்று அ.இ.அ.தி.மு.க ஆட்சி பயணிக்கிறது. 

பிரதமர் மோடி பார‌பட்சமின்றி ஊழல் குற்றவாளிகளை தண்டிப்பதன் மூலமாகவே, இன்றுள்ள ஆட்சியும் எம்.ஜி.ஆர் தொடங்கிய ஊழலற்ற ஆட்சியாக மாற வேண்டிய நெருக்கடிக்குள்ளாகும். தமிழக பா.ஜ.கவில் திராவிட ஊழல் பாதுகாப்பு கவசங்களும் செல்லாக்காசாகும்.

ஆனால் எளிதாக செய்திருக்க வேண்டிய பணியை, தமிழக பா.ஜ.கவின் தவறான வழிகாட்டுதலால், எவ்வாறு பிரதமர் மோடி சிக்கலைக் கூட்டிக் கொண்டார்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

எனவே சுயலாப நோக்கற்று தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியை விரும்பும் தமிழர்கள் எவ்வாறு தனிமனித இராணுவமாக மேற்குறிப்பிட்ட இலக்கு நோக்கி பயணிக்க முடியும்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

1967 முதல் இன்று வரை அரங்கேறியுள்ள சமூக ஊமைக்காயங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் நமது குடும்பத்தினரே என்று 'ஏம்பதைஸ்' பண்ணுவதானது, அம்முயற்சிக்கான உத்வேகத்தைத் தரும், என்பதும் எனது அனுபவமாகும்.

மேற்குறிப்பிட்ட இரண்டு குடும்ப அரசியலின் ஆதரவாளர்கள் எவரும் நமது சமூக வட்டத்தில் இருந்தால், அவர்களை திருத்த வேண்டும். திருந்த மறுப்பவர்களை எல்லாம், இழப்புகளை விரும்பி ஏற்று, நமது சமூக வட்டத்தில் இருந்து அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றத் தொடங்கிய பின், எனது சமூக வலிமையானது அதிகரித்து வருவதும் நம்ப முடியாத அதிசயமாகும்.

மேலும் கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், நமது நோய் எதிர்ப்புத் திறனின் வலிமையைக் கூட்ட வேண்டும். அதற்கு நாம் தீய எண்ணங்களைத் தவிர்த்து நல்ல எண்ணங்களுடன் வாழ வேண்டும். தீய எண்ணங்களுடன் வாழ்பவர்களின் வாடையின்றி வாழ வேண்டும். அவ்வாறு வாழத் தொடங்கினால், நமது நோய் எதிர்ப்புத் திறனின் வலிமை கூடுவதுடன், நம்ப முடியாத அளவுக்கு சாதனைகளைப் படைக்கும் வாழ்க்கையில், திட்டமிடாமலேயே, இயற்கையின் போக்கில் நாம் பயணிப்போம். 
(https://tamilsdirection.blogspot.com/2020/07/immunity.html)

எனவே தமிழ்நாட்டில் மேற்குறிப்பிட்ட தனிமனித இராணுவங்கள் எல்லாம், கட்சி கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, மேற்குறிப்பிட்ட இலக்கு நோக்கி பயணிக்கும் போது, அவர்கள் ஒவ்வொருவரும் 'சமூக மருத்துவர்' ஆகி, 1967 முதல் இன்று வரை அச்சுறுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ள சமூக ஊமைக்காயங்களைக் குணமாக்கி, தமிழையும் தமிழ்நாட்டையும் மீட்க முடியும்.

தமிழத்துவாவைச் சரியாக உள்வாங்கிய இந்துத்வாவே, மேற்குறிப்பிட்ட சமூக ஊமைக்காயங்களைக் குணமாக்கும் 'சமூக மருந்தாக' எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. அதனை அறிவுபூர்வமாக விவாதிப்பதையும் நான் வரவேற்கிறேன்.

சமஸ்கிருதம் மட்டுமின்றி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளின் வளத்தை உள்ளடக்கிய இந்துத்வாவே இந்தியாவில் 'தேச கட்டுமானத்தை' (Nation Building) வலுவாக்கும் என்பதை உணர்த்தும் வகையில்;

வளர்த்தெடுப்பதே,  'இந்துத்வா'வுடன் இணக்கமான 'தமிழத்துவா' ஆகும். 
(https://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_17.html)

'கந்த சஷ்டி கவசம் சர்ச்சை' மூலமாக இந்துத்வா எதிர்ப்பு மற்றும் ஆதரவு முகாம்களில் உள்ள 'கறுப்பர் கூட்டம்' அம்பலமாகி வருகின்றன
(https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_27.html)

இரண்டு வகை கறுப்பர் கூட்டங்களும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சங்கமமானவையாகும். எஞ்சியவை கருணாநிதி குடும்ப அரசியலில் சங்கமம் ஆனவையாகும். மேற்குறிப்பிட்ட இலக்கில் பெறும் வெற்றியின் மூலமாக, அவை சமூகக் குப்பையாக ஒதுங்கப் போவதும் நிச்சயமாகி வருகிறது.

வெற்றி நமதே. வெற்றி வேல். வீர வேல்.



குறிப்பு:
நல்லக்கண்ணு தனிமனித அளவில் நேர்மையாளராக இருந்தாலும், சசிகலா குடும்பத்தின் அராஜகங்களை எதிர்க்காமல், அக்குடும்பத்திற்கு நெருக்கமாகி தமது சமூக நேர்மையைக் கேள்விக்குறியாக்கியவர் ஆவார். மக்கள் பாதை' அமைப்பு சார்பில் சகாயம் ஐ.ஏ.எஸ் நல்லக்கண்ணுக்கு விருது வழங்கி கவுரவித்தது ஊழல் ஒழிப்புக்கு சாதகமா? பாதகமா?

3 comments:

  1. //த‌மது குடும்பப்பிள்ளைகள் எல்லாம் விளையாட்டுப்பள்ளி முதலே ஆங்கில வழியில் படிக்க வைத்த 'தமிழ் ஆதரவு அமைப்புகளின் யோக்கியர்கள்' எவருக்கும், இன்று அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி மூலம் ஏழைத்தமிழர்களும், அந்த 'புத்திசாலி' யோக்கியத்தமிழர்களைப் போலவே பலன் பெற அரசு எடுத்து வரும் முயற்சிகளைக் குறை கூற முடியுமா? //
    மொழிப்பாடமாக மட்டும் தமிழை வைத்துவிட்டு ஆரம்பக் கல்வி முதல் ஆங்கிலவழியில் இலவசமாக அரசுப்பள்ளியில் கல்வி வழங்கினால் தனியார் பள்ளியில் வசதி உள்ளவர் பெறும் வாய்ப்பு எளியவர்க்கும் கிடைக்குமே. சமத்துவத்தை நிலைநாட்டிவிடலாமே. ஆந்திராவில் அப்படித்தான் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    தனியார் பள்ளிகளை அரசின் கொள்கையில் இருக்குமாறு கட்டுப்படுத்த வேண்டுமா? அல்லது தனியார் பள்ளிகளின் போக்கில் அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டுமா? மக்களுக்கான அரசு தனது கொள்கையை தனியார் பள்ளிகள் ஏற்குமாறு செய்ய வேண்டும். பொதுப் பட்டியலில் கல்வி இருப்பதால் மத்திய அரசின் பாடத்திட்டத்தில் மத்திய அரசு அனுமதியுடன் தனியார் பள்ளிகள் செயல்படுவதுடன் அதை நீதிமன்ற அனுமதியுடன் நடத்தும் நிலையும் உள்ளதே. அப்படி இருக்கும்போது மாநிலக் கட்சிகளை மட்டும் குறைகூற முடியாதே.
    கல்வி உரிமை மாநிலத்திற்கு வரும் வரை இதுபோன்ற குழப்பங்கள் தொடரும்.

    ReplyDelete
    Replies
    1. விளையாட்டுப்பள்ளி முதல் ஆரம்பப்பள்ளி வரை தாய்மொழி வழிக்கல்வியில் பயில்வதால் குழந்தைகளின் மூளையில் புலனறிதிறன் ஆற்றல் (Cognitive Skills)வளரும் என்பதை யுனெஸ்கோ உள்ளிட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. அதன்பின் ஆங்கிலவழிக்கல்வியில் பயில்பவர்கள் எல்லாம் விளையாட்டுப்பள்ளி முதல் ஆங்கிலவழிக்கல்வியில் பயில்பவர்களை விட சிறப்பாக பயில்வதையும் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
      சான்றுகளுக்கு: 'தமிழ்வழி வீழ்ச்சியும் மீட்சியும்' ; https://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html

      Delete
    2. குழந்தைகள் பிற்காலத்தில் பெரிய அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், படைப்பாளர்களாகவும் வர வேண்டுமானால், குழந்தைப் பருவத்தில் புலன் உணர்வுகள் தொடர்புள்ள மூளை வளர்ச்சி நன்றாக நடைபெற வேண்டும். அதற்கு 10 வயது வரை அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருப்பது நல்லது என்று உணர்த்தியுள்ள உலக ஆய்வுகள் பற்றிய சான்றுகள் அடிப்படையில் படித்த புத்திசாலி பெற்றோர்கள் பயணித்தால், கிராம மக்கள் உள்ளிட்டு பலரும் அதைப் பின்பற்றுவார்கள். அந்த சமூக மாற்றத்தை அரசாலும் நீதிமன்றத்தாலும் தடுக்க முடியாது. அரசாணை மூலம் அது சாத்தியமாகாது.

      Delete