Friday, August 7, 2020


துக்ளக்கில் திராவிடப் பொய்கள்:


1971 தேர்தலில் ராமர் சிலையை இழிவுபடுத்தி விட்டு வெற்றி பெற்றதாக வீரமணி கூறுவது முழுப் பொய்யா?



கி.வீரமணி அறிக்கை கடந்த 22.7.2020 அன்று விடுதலை நாளிதழில் வெளி வந்துள்ளது.

1971- ஆம் ஆண்டு தேர்தலில் என்ன நடந்ததோ, அதே நிலைதான் 2021 தேர்தலில் நடக்கும்.

எப்படியும் தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி விட வேண்டும் என்று முயற்சி செய்து, 1971 பொதுத் தேர்தலில் தேர்தலுக்குச் சம்பந்தம் இல்லாமல், சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டு ஊர்வலத்தில் ராமர் பட விஷயத்தில், பழைய ஜன சங்கத்தினர் ஏற்படுத்திய நிகழ்வின் விளைவு எதிர் விளைவாக கடைசி நேர பிரசாரமாக ஊதிப் பெருக்கினார்கள். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. அதைப் போலவே வரும் தேர்தலும் அவர்களுக்குப் பாடம் புகட்டும். வெற்றியே நமது இலக்கு. அலட்சியப்படுத்த வேண்டியதை அலட்சியப்படுத்துவீர்" என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

1971 தேர்தலில் ராமர் சிலையை இழிவுபடுத்தி விட்டு வெற்றி பெற்றதாக வீரமணி கூறுவது முழுப் பொய். ஆனால் முதல் பொய் அல்ல. அதைப் போல மூவாயிரம் பொய்களை இவர்கள் பேசி இருக்கிறார்கள்,”- ‘திராவிடப் பொய்கள்  -  சுப்பு ; துக்ளக்(05-08-2020)

1967 தேர்தலில் தான் ராஜாஜியின் முயற்சியில் சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, உள்ளிட்ட கட்சிகள் தி..மு.க தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு 179 (மொத்த தொகுதிகள்:234) தொகுதிகளில் வெற்றி பெற்றனர். 174 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க 137 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்து அண்ணா முதல்வரானார். 

1969  இல் அண்ணா மறைய, கட்சியில் இருந்த மூத்தவர்களை பின் தள்ளி கருணாநிதி முதல்வரானார். 1971இல் காங்கிரசைப் பிளந்து, மன்னர் மான்ய ஒழிப்பு, வங்கிகள் தேசவுடைமை போன்றவற்றின் மூலமாக, மக்களிடம் செல்வாக்கு பெற்ற இந்திராகாந்தி, 1971இல் பாராளுமன்ற தேர்தலைச் சந்தித்தார். கருணாநிதி இந்திரா காங்கிரசுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலைச் சந்தித்தார். கருணாநிதி முதல்வரான பின் நடந்த அந்த தேர்தலில், தி.மு.க 184 தொகுதிகளில் வென்று, சரித்திரம் படைத்தது.

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், துக்ளக் இதழில் "1971 தேர்தலில் ராமர் சிலையை இழிவுபடுத்தி விட்டு வெற்றி பெற்றதாக வீரமணி கூறுவது முழுப் பொய்." என்று சுப்பு எழுதியது தவறாகும்.

ஆனால், சுப்பு முன்பு துக்ளக்கில் தி.கவை எதிர்த்து எழுதிய ஆதார பூர்வமான கட்டுரைகளையும், அதே பாணியில் அவர் எழுதிய புத்தகத்தையும் நான் படித்திருக்கிறேன்.

தமிழ் தொடர்பாக, ஈ.வெ.ராவின் 'தாய்ப்பால் பைத்தியம்' நிலைப்பாட்டில் இருந்து தி.மு.க தடம் புரண்டு, திரிந்து, உணர்ச்சிபூர்வ போக்கினை வளர்த்து, தமிழ்நாட்டை எவ்வாறு சீரழித்தது
(‘தமிழ் இலக்கியங்கள் தமிழர்களுக்குக் கேடானதா? தி.கவிற்கும், தி.மு.கவிற்கும் இடையே வேறுபாடுகள்?’; 
https://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_31.html)

என்ற ஆய்வுக்கு துணை புரியும் சான்றுகளை எல்லாம்அண்ணா தொடர்பான 'தீ பரவட்டும்' விவாதத்தில் சுப்பு வெளிப்படுத்தியுள்ளார். 

இந்துத்வா ஆதரவு முகாமாக இருந்தாலும், எதிர்ப்பு முகாமாக இருந்தாலும், தமது பங்களிப்பைக் காரணம் காட்டி பணம், பதவி, புகழ் பெறும் திசையில் பயணிப்பவர்களே  அதிகம். அதில் விதி விலக்காக பயணிப்பவர்களையே நான் மதிப்பவன். அவ்வாறு நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் சுப்பு ஆவார்.

எந்த அடிப்படையில் மேற்குறிப்பிட்டவாறு 'முழுப் பொய்' என்று சுப்பு எழுதினார்? என்பது எனக்கு விளங்கவில்லை. அவர் எழுதியது தொடர் கட்டுரையின் தொடக்கமே. இனி வரும் கட்டுரைகளில் அதற்கான விளக்கம் வரும் என்று எதிர்பார்க்கிறேன். அவ்வாறு விளக்கம் வருமானால், அதனையும் எனது ஆய்வுக்கு உட்படுத்துவேன்.

அதுவரை, "1971 தேர்தலில் ராமர் சிலையை இழிவுபடுத்தி விட்டு வெற்றி பெற்றதாக வீரமணி கூறுவது"  முழு உண்மை என்பதே எனது நிலைப்பாடு ஆகும்.

1971 பொதுத் தேர்தலில் தேர்தலுக்கு முன், சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டு ஊர்வலத்தில் இந்து கடவுள்கள் அவமதிக்கப்பட்டது தேர்தல் பிரச்சினையாக மக்கள் கருதவில்லை. முன்பு ராஜாஜி முதல்வராக இருந்த போது கும்பகோணத்தில் இந்து கடவுள்களை அடித்து  ஈவெரா ஊர்வலம் நடத்தினார். சட்டப்படி நடவடிக்கை எடுத்து பெரிதுபடுத்த விரும்பாததால், எந்த நடவடிக்கையும் வேண்டாம் என்று ராஜாஜி முடிவு செய்ததாக, ஈவெரா பேசி நான் கேட்டிருக்கிறேன்.

ஆனால் கி.வீரமணி தமது அறிக்கையில் 1971 தேர்தல் வெற்றியைக் குறிப்பிட்டு, "அதைப் போலவே வரும் தேர்தலும் அவர்களுக்குப் பாடம் புகட்டும். வெற்றியே நமது இலக்கு. அலட்சியப்படுத்த வேண்டியதை அலட்சியப்படுத்துவீர்" என்று எழுதியிருப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

அவ்வாறு அலட்சியப்படுத்தினால், கி.வீரமணியின் அடுத்த கட்டம் அவருக்கே எவ்வாறு ஆபத்தான விளைவில் முடியும் வாய்ப்பும் இருக்கிறது? என்பதையும் அடுத்து பார்ப்போம்.

ராஜாஜி ஆட்சியிலும், பின் 1971இல் சேலத்திலும் நடந்த சர்ச்சைகளில் இருந்து கந்த சஷ்டி கவசம்சர்ச்சையானது எவ்வாறு வேறுபட்டது? அது திகவின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கப் போகிறது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

தமிழ்நாட்டில் அரசியல் ஆர்வமுள்ளவர்களில், ஒப்பீட்டளவில், செயல்பூர்வமாக அதிக சமூக நேர்மையுடன் வாழ்பவர்கள் 'பெரியார்' ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இது எனது அறிவு மற்றும் அனுபவம் அடிப்படையிலான புரிதல் ஆகும்.

எனவே 'பெரியார்' முகாம்களில், உலகில் புதிதாக வெளிப்படும் ஆராய்ச்சிகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், அறிவுலகில் கோமாளியாகும் போக்கில் பயணிப்பவர்களிடமிருந்து;

உலகில் புதிதாக வெளிப்படும் ஆராய்ச்சிகளின் அடிப்படைகளில், தமது நிலைப்பாடுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தி வரும் 'பெரியார்' ஆதரவாளர்கள் பிரியும், சமூக தள விளைவு (Social Polarization) பிரிதல் என்பதானது, தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு பங்களிக்கும்;

என்பதும் எனது ஆய்வு முடிவாகும். கூடுதலாக, 'பெரியார்' சிறையில் இருந்து ஈ.வெ.ரா விடுதலை ஆகி, அதன் தொடர்விளைவாக, 'பெரியார்' முகமூடி பொதுவாழ்வு வியாபாரிகளின் ஆட்டங்களும் அடங்கும்.

அரைகுறை அறிவுடன் தம்மை அதிபுத்திசாலியாகக் கருதிகொண்டு, அபத்தமான வாதங்களை முன்வைத்தவர்களின் எழுத்துக்களும் பேச்சுக்களும் இணையத்தில் தடயங்களாக வலம் வருகின்றன. தமிழ்நாட்டில் சமூகப்புழுதிகள் அடங்கி, புலமை மீட்சி அரங்கேறிய பின்னர், முன்னெடுக்கப்படும் ஆய்வுகளுக்கு அந்த தடயங்கள் உதவும். 

கந்த சஷ்டி கவசம்மூலமாக 'பெரியார்' ஆதரவாளர்கள் எல்லாம் எவ்வாறு 'சமூகத் தளவிளைவுநெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

தமிழ் இலக்கியங்களிலும் புராணங்களிலும் இரைச்சலைத் தேடுபவர்கள் எல்லாம் எதிர்மறை சிந்தனையில் (Negative thinking) சிக்கியவர்கள் ஆவார்கள்.

Negative thinking is a thought process where people tend to find the worst in everything, or reduce their expectations by considering the worst possible scenarios.

எதிர்மறை சிந்தனையால் விளையும் கேடுகளில் இருந்து விடுபட கீழ்வரும் வழிமுறையை உளவியல் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

தாம் தவறு செய்துவிட்டதை மனமாற உணர்ந்து திருந்துவதே, எதிர்மறை சிந்தனையில் இருந்து விடுதலை பெற்று நேர்மறை சிந்தனையை நோக்கிப் பயணிப்பதன் தொடக்கமாகும்.

வைக்கம் போராட்ட வீரர் ஈ.வெ.ராவிற்கும், 1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கி பயணித்த ஈ.வெ.ராவிற்கும் இடையில் இருந்த வேறுபாடுகள் காரணமாக, ரசனையில் வீழ்ச்சியுடன் பொதுவாழ்வு வியாபாரிகளும் முளைவிட்டு வளர்ந்தார்கள்.

தாய்மொழித் தமிழ், இலக்கியங்கள், புராணங்கள் போன்ற சமூக ஆற்றல்களின் ஊற்றுக்கண்களில் இருந்து ஈ.வெ.ரா விலகத் தொடங்கியதே, அந்த வீழ்ச்சிகளுக்கு காரணமானது.

எனவே வைக்கம் ஈ.வெ.ரா பாணியில் பயணித்தால் மட்டுமே, இனி 'பெரியார்' கட்சிகள் தமிழ்நாட்டில் எடுபட முடியும். தவிர்த்தால் ஆத்தீகத் தமிழர்களின் எதிர்ப்பில் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவது நிச்சயமாகி விடும்.. அதுவே 'கந்த சஷ்டி கவசம்' உணர்த்தும் பாடமாகும். 


குறிப்பு:

எதிர்நிலைப்பாடுகளில் உள்ளவர்களையும் தனிப்பட்ட முறையில் இழிவு செய்து ஈ.வெ.ரா அவர்கள் விவாதித்த‌ போக்கானது, 1944க்கு முன் வெளிவந்த 'குடிஅரசு' இதழ்களில் வெளிப்படவில்லை. இன்று கல்லூரி மாணவர்களும், படித்த இளைஞர்களும் அந்த பாணியில் விவாதிப்பதை கேலிக்கு உட்படுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது. எனவே கி.வீரமணியும், விடுதலை இதழும் 1944க்கு முன் ஈ.வெ.ரா எழுதிய பாணியைப் பின்பற்றுவதே அவர்களுக்கும் நல்லது. தமிழ்நாட்டிற்கும் நல்லது. 

உணர்ச்சிபூர்வ இரைச்சலை தவிர்த்து, அறிவுபூர்வமாக பயணிப்பவர்கள் எல்லாம், அறிவுபூர்வ விவாதத்தின் ஊடே, வாய்ப்புள்ள பிரச்சினைகளில் ஒன்று சேர்ந்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும், மீட்க முடியும் என்பதும், எனது கணிப்பாகும். 
(https://tamilsdirection.blogspot.com/2017/09/1944.html)

'இந்து மதம் வேகமாக மறைந்து வருகிறது. மற்ற மதங்கள் எல்லாம் மக்கள் தொகையில் 5, 10, 15 சதவீதம் வளர்ந்து வருவதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்து மக்கள் தொகை 6 சதவீதம் குறைந்து விட்டது, கடந்த 10 ஆண்டுகளில். இது இந்துக்கள் கலியாணம் செய்து கொள்ளவில்லை, குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறதா? இந்துக்களில் ஒரு பகுதியினரை நடத்தும் மோசமான முறை அவர்களை மற்ற மதங்களில் சேரத் தூண்டுகிறது.இந்த நிலைமை நீடிக்குமானால் இந்துக்கள் இல்லாமல் போய்விடுவர்.'-  ஈ.வெ.ரா
(பக்கம் 94, வைக்கம் போராட்டம், பழ.அதியமான்)

1925இல் காங்கிரசில் இருந்து வெளியேறாமல் இருந்திருந்தால், அதே திசையில் தான் ஈ.வெ.ரா அவர்கள் பயணித்திருப்பார். தி.க, தி.மு.க போன்ற கட்சிகள் உருவாகியிருக்காது.

No comments:

Post a Comment