Thursday, September 24, 2020

தமிழிய அற உணர்வாளர்களும், மார்க்சிய நெறி உணர்வாளர்களும், பெரியாரியக் கருத்தாளர்களும், அம்பேத்கரியக் கருத்தாளர்களும் (2)


'சமூக காங்கிரின் நோயில்' தமிழ்நாட்டை சிக்க வைக்கும் 'சமூக வினையூக்கியாக’?

ராஜபட்சே பாணி சர்வாதிகார‌ ஆட்சியில் தமிழ்நாடு ?

 

1925 முதல் வெளி வந்த குடிஅரசு இதழ்களைப் படித்தவர்களுக்கு, அண்ணா மீது கோபம் வரவில்லை என்றால் தான் ஆச்சரியம். அந்தக் காலக்கட்டத்தில் அவரிடம் அந்த அளவுக்கு நம்ப முடியாத குறைகள் வெளிப்பட்டிருந்தன.‌

1967 முதல் சாகும் வரை பிரமிக்கும் வகையில் அண்ணா வாழ்ந்து மறைந்ததை, நான் 'பெரியார்' இயக்கத்தை விட்டு விலகிய பின் தான் அறிந்தேன். அந்த அளவுக்கு, வெறுப்பு அரசியலில் 'குருட்டுப் பகுத்தறிவாளராக',  நான் பயணித்திருந்ததும் தெளிவானது.

ஈ.வெ.ரா மறைந்த பின், எவ்வாறு நான் 'பெரியார்' கொள்கையாளராக மாறினேன்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

1970களின் பிற்பகுதியில் தஞ்சையில் பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில், ஈ.வெ.ரா அவர்களைப் பற்றி அதிகம் தெரியாமல், தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், (பிற்காலத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான) தஞ்சை இரத்தினகிரியைச் சந்தித்தேன். அவர் தந்த ஆனைமுத்துவின் 3 தொகுதிகளையும் ஆழ்ந்து படித்தேன். ஈ.வெ.ராவுக்கு நெருக்கமாக வாழ்ந்தவர்களுடன் உரையாடும் வாய்ப்புகளும் கிட்டின. 1925 முதல் வெளிவந்த குடிஅரசு இதழ்களையும், கோவை அய்யாமுத்து போன்ற ஈ.வெ.ராவுடன் பயணித்து பின் பிரிந்தவர்கள் எழுதிய நூல்களையும் படித்தேன்.

அந்த போக்கில் அண்ணாதுரை மீதும், தி.மு.க மீதும் கோபமும், வெறுப்பும் என்னுள் வளர்ந்தது. அந்த காலக்கட்டத்தில் நான் பழகிய 'பெரியார்' இயக்க அறிவுஜீவிகள் பலரும் அதே மனநிலையில் இருந்தார்கள்‌.

உதாரணமாக நான் சென்னை பெரியார் திடலில் நாட்குறிப்பு பணிக்காக தங்கியிருந்த போது, தி.மு.க தலைவர் கருணாநிதி இன்னும் சில நேரத்தில் அங்கு வரப் போகிறார் என்று அறிந்தவுடன்;

"ஆசிரியர் (கி.வீரமணி)  தப்பித்தவறி நம்மை அழைத்து, அவரிடம் அறிமுகப்படுத்தி விடுவாரோ?' என்று கருதி, அந்த 'சங்கடத்தில்' இருந்து விடுபட, நான் பெரியார் திடல் வளாகத்தை விட்டு வெளியேறி, அவர் பெரியார் திடலை விட்டு போன பின் தான், உள்ளே நுழைந்தேன்.

ஈ.வெ.ராவின் 1948 தூத்துக்குடி மாநாட்டு உரையில் சாராம்சத்தை அகவயப்படுத்தி, அண்ணாவையே இழிவான நபராக கருதி பயணித்த 'பெரியார் கொள்கையாளர்களில்' ஒருவராக நான் இருந்தேன். அப்படி பயணித்தவர்களில் பலர், தி.மு.க ஆட்சியில் 'தமக்கான பலன்களுக்காக' முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமாகி, 'முரசொலி'யில் 'துதிபாடி', 'அறிவாலயத்தில்' செல்வாக்குடன் வலம் வந்ததையும் நான் அறிவேன்.

'உலகத்தோடு ஒட்ட ஒழுகி' வாழ்ந்த 'அந்த வாழ்வியல் புத்திசாலிகளை'(?), நான் குறை சொல்லவில்லை; இன்றும் அவர்கள் எல்லாம் 'இந்துத்வா எதிர்ப்பு அலங்கார பொம்மைகளாக' பவனி வந்தாலும். (https://tamilsdirection.blogspot.com/2019/04/normal-0-false-false-false-en-us-x-none_19.html )

அவர்களில் பலர், எம்.ஜி.ஆர் மறைந்து கருணாநிதி முதல்வரான பின், அறிவாலயத்துக்கு நெருக்கமானார்கள். பின்னர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சங்கமனான கட்சிகளின் தலைவர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டார்கள்.

ஆனால் நான் (என்னைப் போன்ற இன்னும் சிலரும் இருக்கக்கூடும்) 'கருணாநிதி மற்றும் சசிகலா குடும்பங்களுடன் நெருங்கிப் பயணிப்பது தன்மானக்கேடான வாழ்க்கையாகி விடும்' என்ற புரிதலுடன், தன்மானத்துடன் வாழ்வதற்கான விலைகளைத் தயக்கமின்றி கொடுத்து வாழ்கிறோம்.

கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா சங்கமம் மூலமாக, தன்மானம் இழந்த தமிழர்கள் தமிழ்நாட்டில் எவ்வாறு வளர்ந்தார்கள் ? (https://tamilsdirection.blogspot.com/2020/09/1995.html )

ஒரு நாட்டில் ஊழல் என்பதானது நிர்வாகப் பிரச்சினை அல்ல.

ஊழல் மூலமாக கண்ணுக்கு தெரியும் அறிகுறிகளையும் தாண்டி,

ஒரு அரசின் சட்டபூர்வ நியாயத்துடனும் (legitimacy of the state), அரசியல் சக்தியானது வெளிப்படும் வடிவ அமைப்புடனும் (the patterns of political power), சிவில் சமூகத்தின் பங்களிப்பின் யோக்கியதையுடனும் (the engagement of civil society) தொடர்புகள் கொண்டதாக அரசியல் விஞ்ஞானிகள் அணுகுகின்றனர்.

தமிழ் வலிமையாக வாழ வேண்டுமானால், தமிழர்கள் வலிமையாக வாழ வேண்டும். தமிழர்களின் வலிமையானது அவர்களின் அகத்தின் வலிமையைப் பொறுத்ததாகும்.

தமிழ்நாடு ஊழலற்ற சட்டத்தின் ஆட்சியில் இருந்தால் தான், தமிழர்கள் அகத்தின் வலிமையில் புறத்திலும் வலிமையாக வளர முடியும்.

தமது அக வாழ்வில் உண்மையாகவும், நேர்மையாகவும், சமூக அக்கறையுடனும் இருப்பதை, விளம்பரமின்றி தமது புற வாழ்வில் வெளிப்படுத்துப‌வர்களின் பேச்சுக்கும், எழுத்துக்கும், நன்கு படித்த‌ இளைஞர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு நம்பமுடியாத அளவுக்கு வளர்ந்து வருவதை, பல‌ அனுபவங்கள் எனக்கு உணர்த்தி வருகின்றன. (https://tamilsdirection.blogspot.com/2020/09/2.html )

ஒரு தாய்மொழிநாடானது தனி தாய்நாடாக இருப்பதும், அல்லது ஒரே தாய்நாட்டில் உள்ள பல தாய்மொழி நாடுகளில் ஒன்றாக இருப்பதும்;

அந்த ஒற்றுமைக்கான வரலாற்று ரீதியிலான பாரம்பரிய, பண்பாட்டு கூறுகளையும், சர்வதேச அரசியல் தொடர்பான வரலாற்றுப் போக்குகளையும் பொறுத்த ஒன்றாகும்.

மேற்குறிப்பிட்டதன் அடிப்படையிலேயே, தாய் நாட்டிற்கும் தாய்மொழி நாட்டிற்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் இயக்கத்தன்மையில்(Dynamic), அந்தந்த காலக்கட்டத்தைப் பொறுத்து, நட்பாகவும் அல்லது பகையாகவும் இருக்கும்.

அந்த புரிதலின்றி, நிரந்தர பகையாகக் ‌கருதி, ஈ.வெ.ரா, பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட இன்னும் பலர் பயணித்ததாலேயே, தமிழ்நாடு ஆதாய அரசியலில் சிக்கி நோஞ்சான் தமிழர்கள் அதிகரித்து, இந்தியாவிலேயே பலகீனமான நோஞ்சான் தாய்மொழிநாடாக தமிழ்நாடு மாறி வருகிறது.

இதே போக்கு நீடிக்குமானால், இந்தியாவின் சவலைப்பிள்ளையாகி, ராஜபட்சே பாணி குடும்ப அரசியலில் நிரந்தரமாக சிக்கும் ஆபத்தும் இருக்கிறது. (https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post_21.html )

தமிழ்நாட்டில் 1969க்கு முன்னும் பின்னும் என்று ஒரு கட்டமாகவும், 1991க்கு முன்னும் பின்னும் என்று இரண்டாவது கட்டமாகவும், பிற மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் கைப்பற்றியுள்ள சொத்து மற்றும் தொழில் வியாபாரங்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் எல்லாம் அரசு வசம் உள்ள புள்ளி விபரங்களில் வெளிப்பட்ட வாய்ப்பில்லை. 

அந்த அளவுக்கு பினாமி மற்றும் அந்நிய செலாவணி மோசடி மூலமாக இந்தியாவிலும் வெளிநாட்டுகளிலும் சொத்துகள் வாங்கும் சமூக செயல்நுட்பம் அதிகரித்து விட்டது.‌ அது மட்டுமல்ல, இந்தியாவையே 'திராவிட' ஊழலுக்கு 'சலாம்' போட வைக்கும் வலிமையானது தமிழ்நாட்டிற்கு இருக்கிறது, என்பது மோடி ஆட்சியிலும் வெளிப்பட்டுள்ளது. (‘அரசியல் கொள்ளையர்களுக்கு எதிரான மத்திய அரசின் சோதனைகள்; தமிழ்நாட்டு மக்களிடையே, மோடி அரசுக்கு ஒரு நம்பிக்கை நெருக்கடி?’; https://tamilsdirection.blogspot.com/2017/11/panamapapers-2015.html )   

தமிழக மக்களின் நாடித்துடிப்புகளிடமிருந்து அந்நியமாகி, திராவிட ஊழல் தலைவர்களுக்கு நெருக்கமாகிப் பயணித்த, தமிழக பா.ஜ.கவின் தவறான வழிகாட்டுதலால், தமிழக மக்களின் அவநம்பிக்கைக்கு பிரதமர் மோடி உள்ளாகியுள்ளார். அதன் விளைவாக, அரசியல் நீக்கத்தில் ஆதாய அரசியலில் பயணித்து வரும் தமிழ்நாடானது 'சமூக காங்கிரின் நோயில்' (Social Gangrene) சிக்கும் ஆபத்தும் அதிகரித்துள்ளது. (https://tamilsdirection.blogspot.com/2020/07/2019.html)

பிரபாகரன் மற்றும் அவரின் விடுதலைப்புலி ஆதரவாளர்களின் மூலமாக, எதிரியே தனது வலிமையை 'தானம்' செய்து, தானாகவே தோற்கும், 'வித்தியாசமான அரசியல் ஜுஜுட்சு',  

இலங்கையில் எவ்வாறு அரங்கேறி, இலங்கையை 'சமூக காங்கிரின் நோயில்' (Social Gangrene) சிக்க வைத்து, ராஜபட்சே குடும்ப ஆட்சி அபரீதமான வெற்றியுடன் அரங்கேற வழி வகுத்தது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

முள்ளிவாய்க்கால் அழிவிற்குப் பின், விடுதலைப் புலிகளை எச்சரித்த 'திருச்சி பெரியார் மையம்' வெளியீடுகளை, 'பெரியார்' கட்சியின் தலைவர் ஒருவர் ஆழ்ந்து படித்தாகக் கேள்விப்பட்டேன்.

அதே ராஜபட்சே பாணி சர்வாதிகார‌ ஆட்சியில் தமிழ்நாடு  சிக்குவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. எனது அபாய எச்ச‌ரிக்கையை இனியும் புறக்கணித்து பயணித்தால்,  ராஜபட்சே பாணி சர்வாதிகார‌ ஆட்சியில் தமிழ்நாடு சிக்குவதைத் தவிர்க்க முடியாது.

ராஜபட்சே குடும்பத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இலங்கை சிக்கியது போலவே, தமிழ்நாடும் ஒரு குடும்பத்தின் முழுக்கட்டுப்பாட்டில் சிக்கும் ஆபத்தும் இருக்கிறதா? அவ்வாறு சிக்கிய பின், இலங்கையில் உள்ள தமிழர்களைப் போலவே, தமிழ்நாட்டுத் தமிழர்களும் சுப்பிரமணிய சுவாமியின் மூலமாகவே உதவிகள் பெறுவதும் தவிர்க்க இயலாததாகி விடும். அதற்கு அவர் மீது பழியைப் போட்டு தப்பிக்க முடியாது. (https://tamilsdirection.blogspot.com/2020/08/2.html )

'சமூக காங்கிரின் நோயானது' வெளிப்படுவதற்கு முன்னரே, பல முன் அறிகுறிகள் சமூகத்தில் வெளிப்படும். துல்லிய சமூக உணர்விகள் (Minute Social Sensors) மூலம், திருக்குறள் (573) வழியில், எனது ஆய்வில் வெளிப்பட்ட சமூக அறிகுறியையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

1949 முதல் 1967 வரை முரசொலியில் ஈ.வெ.ராவை இழிவுபடுத்திய பாணியானது, இந்துத்வா ஆதரவு முகாம்களில், அதே தி.மு.க பாணி துணிச்சலுடன் இன்று வெளிப்பட்டு வருவதும், 'சமூக காங்கிரின் நோய்' தொடர்பான சமூக அறிகுறியாகும்.

காமராஜரின் அரசியலானது, தி.மு.கவின் வெறுப்பு அரசியலிடம் தோற்றது போலவே, தமிழக பா.ஜ‌.கவிற்குள் எல்.முருகன் - அண்ணாமலை கூட்டணியின் அரசியலானது, பா.ஜ‌.கவிற்குள் தி.மு.க பாணி வெறுப்பு அரசியலில் பயணிப்பவர்களிடம் தோற்கும் வாய்ப்பும் இருக்கிறது.

சென்னையில் பல வருடங்களுக்கு முன், ஒரு குறிப்பிட்ட சாதி அமைப்பின் சார்பில் ஒரு விழா நடந்தது. அவ்விழாவில் 'அந்த சாதியை'ச் சேர்ந்த 'கம்யூனிஸ்ட், திராவிட, முற்போக்கு, ஆன்மீக'  புலமையாளர்களாக இருந்த, 'முற்போக்கு, பிற்போக்குகள்' எல்லாம் கெளரவிக்கப்பட்டார்கள்.

அந்த அளவுக்கு 'இரட்டை வேட' 'சீர்திருத்த' 'புலமையாளர்கள்' தமிழ்நாட்டில் செல்வாக்குடன் வளர்ந்து வருகிறர்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். வேறு (பெரும்பாலும் தம்மை விட மேலான) சாதியில் திருமணம் செய்து, நல்ல வசதி வாய்ப்புகளுடன் பேராசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் இருப்பவர்கள் தமக்கும், தமது பிள்ளைகளுக்கும் கல்வியில் வேலையில் இட ஒதுக்கீடு பலன்களை (தமது சாதியில் முதல் தலைமுறையாகப் படித்த குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளின் வாய்ப்புகளை அபகரித்து) அனுபவித்து வாழ்பவர்களில் பலர், 'சாதி ஒழிப்பு'  வீரர்களாகப் பாராட்டப்படும் நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் உண்டு.

1944 -இல் திராவிடர் கழகம் உருவானதற்கு முன், விவாதங்கள் அறிவுபூர்வ தளத்தில் நடைபெற்று வந்த போக்கு, திராவிடர் கழகம் உருவானபின் மாறி, உணர்ச்சிபூர்வ தளத்தில் நடைபெறத் துவங்கியதானது, 'ந‌ன்கு வளர்ந்து'(?), இன்று மேலேக் குறிப்பிட்ட‌ இரட்டை வேட முற்போக்குகள்' செல்வாக்குடன் அறிவுப் புலத்திலும் ஆதிக்கம் செலுத்தும் விளைவை உண்டாக்கியதா? என்பதும் ஆய்விற்குரியது.” (https://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html )

தமிழ்நாட்டில் ஊழல் ஒழிப்பு வெற்றி பெற வேண்டுமென்றால்,

அந்தந்த மாவட்டத்தில் உள்ள 'பார்ப்பன எதிர்ப்பு' பொதுவாழ்வு வியாபாரிகள் யார்? யார்? என்று அடையாளம் கண்டு,

அவர்கள் இடம் பெற்றுள்ள அரசியல் கொள்ளை வலைப்பின்னலையும்  (டிஜிட்டல்-Digital-யுகத்தில், அரசுக்கு மனமிருந்தால், எளிதில் சாத்தியமான‌) கண்காணித்து, பின் பாரபட்சமற்ற சட்டபூர்வ விசாரணை மூலம், அவர்களையும், அவர்களின் 'பார்ப்பன எதிர்ப்பு எடுபிடிகளையும்' தண்டனைக்குட்படுத்த வேண்டும்.

அத்தகைய பாரபட்சமற்ற விசாரணை வளையத்தில், 'பார்ப்பன எதிர்ப்பு' பொதுவாழ்வு வியாபாரிகளை எல்லாம், சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றிய, ஊழல் பாதுகாப்பு கவசமாக செயல்பட்ட பிராமணர்களும் சிக்குவார்கள்.‌ இந்துத்வா எதிர்ப்பு மற்றும் ஆதரவு தலைவர்கள் எல்லாம் சங்கமமான, திராவிட  ஊழல் வலைப்பின்னலையும் ஒழிக்க முடியும்.

தமிழ்நாட்டின் அரசியல் கொள்ளையர்களின் அடித்தளமானது, அதன் மூலம் நிர்மூலமாகும். தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் வீழ்ச்சியிலிருந்து மீள வழி கிடைக்கும்.

மோடி ஆட்சியில் அது சாத்தியமாவதற்கு உள்ள 'திராவிட தடைகள்' பற்றியும் ஏற்கனவே பார்த்தோம்.

கருணாநிதி மற்றும் சசிகலா குடும்பங்களின் அரசியலோடு ஒட்டிப் பயணித்து, இந்துத்வா எதிர்ப்பானது, சமூக சோளக்கொல்லை பொம்மையாகி வருகிறது. (https://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_17.html )

வேறு வழியின்றி, 'திராவிட தடைகளை' தமது எடுபிடிகளாக்கி, ராஜபட்சே பாணி சர்வாதிகார‌ ஆட்சியில் தமிழ்நாடு  சிக்க வைக்கும் முயற்சிகளின் தொடக்கமே ஜெயலலிதாவின் மர்ம மரணமா? என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

சுய பலமின்றி, கருணாநிதி அல்லது சசிகலா குடும்பங்களுடன் ஒட்டிப் பயணித்த கட்சிகள் எல்லாம், சமூக காங்கிரின் நோய்க்கு 'சமூக வினையூக்கியாக' (Social Catalyst) பங்களித்து, தமிழ்நாட்டை நோஞ்சான் நாடாக மாற்றியதன் வெளிப்பாடாகவே,

ராஜபட்சே பாணி சர்வாதிகாரத்தில் எளிதில் தமிழ்நாடு சிக்கும் தகுதியை வெளிப்படுத்தி, 

பிரதமர் மற்றும் ஆளுநரின் கண்களில் மண்ணைத் தூவி, ஊழல் திமிங்கிலங்களை சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகார பீடமாக அனுமதித்து, பல மாதங்கள் மர்மமான மருத்துவ சிகிச்சைக்கும் மரணத்திற்கும் மாநில முதல்வரையே பலியாக்கிய அவமானத்தைத் தமிழ்நாடு சந்திக்க நேர்ந்தது. (https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post_22.html)

சாதி, மத, கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, நாம் ஒவ்வொருவரும் 'தனிமனித இராணுவமாக', குடும்பம், நட்பு, பணி உள்ளிட்ட நமது சமூக வட்டத்தில் இருக்கும் சமூக கிருமிகளை எதிர்த்து, போராடுவதன் மூலம், தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான முன்னோட்ட படையானது ('sappers and miners')  உருவாக, வழி வகுப்போம்.

வ.உ.சி உள்ளிட்டு 'தேசிய' போக்கில் பயணித்த எண்ணற்றோரின் தியாகங்களுக்கும், நீடாமங்கலம் அ.ஆ உள்ளிட்டு 'திராவிடர்' போக்கில் பயணித்த எண்ணற்றோரின் தியாகங்களுக்கும்;

நமது வாழ்வில் செயல்பூர்வமாக வெளிப்படுத்தும் குறைந்த பட்ச மரியாதையே அதுவாகும்.

அதுவே தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் 'சமூக காங்கிரின் நோயில்' இருந்து, தமிழ்நாட்டை மீட்கும் சமூக மருந்தாகும்.

பிறந்த போது எதையும் கொண்டு வராத நாம், இறக்கும் போதும், நல்ல/தீய வழிகளில் சம்பாதித்த சொத்து எதையும், எடுத்துச் செல்லப் போவதில்லை. நமது இயல்பை ஓட்டிய தகுதி, திறமைகளை வளர்த்து, உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்(Passions) வாழ்பவர்களே, மரணத்தை மன நிறைவுடன் தழுவ முடியும்.

நமது இயல்பைத் தொலைத்து, காலனி ஆட்சிப் பாதிப்பில் இன்றும் உழலும் மனநோயாளிகளாக வாழ்பவர்கள் எல்லாம், வாழும் போது,

இரவில் படுத்தவுடன் தூங்க முடியுமா? 'குற்ற உணர்வின்றி' மன நிறைவுடன் மரணத்தைத்  தழுவ முடியுமா? (https://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html )

No comments:

Post a Comment