Saturday, September 12, 2020


பாரதி நுற்றாண்டு விழாவின் போது சமூக இரட்டை இலக்க சிறையில் ?


பாரதி நினைவு நூற்றாண்டு தொடங்கியுள்ள நிலையில் விடுதலை ?


பாரதிக்கு நினைவு நூற்றாண்டு தொடங்கி விட்டது.

தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமின்றி, உலக இலக்கிய ஆர்வலர்களாலும் கொண்டாடப்பட்ட பாரதி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவில் யானையின் கால்களால் காயமடைந்து, உடல் நலிவடைந்து, 1921ம் ஆண்டு செப்., 11ம் தேதி உலகைவிட்டு பிரிந்தார்.’ 

1982இல் பாரதி நூற்றாண்டு விழாக்கள் தொடங்கும் முன், 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்ற நூலை வெளியிட்டேன். அதன் விளைவாகஅந்த ஆண்டு முழுவதும் பாரதியை விமர்சித்து தி.க.சார்பில் பட்டி மன்றங்களும், வழக்காடு மன்றங்களும் நடந்தன.

'பாரதியின் பிம்பத்தை பாதிக்குமா? பாதிக்காதா? 'என்ற கவலையின்றி, பாரதியின் எழுத்துக்கள் எல்லாம் வெளிவந்துள்ளன. அவற்றை அடிப்படையாக கொண்டே, பாரதி நூற்றாண்டு விழா தொடக்கத்தில், நான் 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டேன்.

பணத்திற்கு பாரதிதாசன் கொடுத்த முக்கியத்துவத்தை, பாரதியார் கொடுக்கவில்லை.

'ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை' என்ற கண்ணதாசன் வரியானது, கண்ணதாசனுக்கும் பாரதிக்கும் பொருந்தும். ஆனால் பாரதிதாசனுக்கும் வைரமுத்துவுக்கும் பொருந்துமா? என்ற கேள்விக்கு இடம் இருக்கிறது. (‘திராவிட அரசியல் பின்பலமானது, திரைத்துறையில் வைரமுத்துவின் தவறுகளுக்கு பாதுகாப்பு அரண்களானதா?’; https://tamilsdirection.blogspot.com/2018/11/3-social-forces.html)

'அண்ணதுரையா எனக்கு பொற்கிழி கொடுத்தார்?' என்ற தலைப்பில், 'குயில்' இதழில் பாரதிதாசன் வெளியிட்ட தொடர் கட்டுரைகளை இன்று வெளியிட‌, பாரதிதாசன் பிரியர்களில் எவருக்காவது  துணிச்சல் இருக்கிறதா?

பாரதிதாசன் தொடர்பாக, அவரின் கட்டுரைகளுக்கு நீடித்து வரும்  இருட்டடிப்பானது, பாரதியார் படைப்புகளுக்கு நிகழவில்லை;

அறிவுநேர்மையில் பாரதிதாசன் பிரியர்களை விட, பாரதியின் பிரியர்கள் மேம்பட்டவர்களா? என்ற ஆய்வுக்கு வழி வகுத்து.

பாரதிதாசன் தொடர்பான 'அந்த' 'இருட்டடிப்பு சமூக செயல்நுட்பமானது' திராவிடர்/திராவிட இயக்க வளர்ச்சிப் போக்கில், நேர்மையான அறிவுபூர்வ விமர்சனங்களை பலகீனமாக்கி, 'வழிபாட்டுப் போதையிலான உணர்ச்சிபூர்வ' போக்கினை ஊக்குவித்ததால் வந்த விளைவு, என்பதும் எனது ஆய்வு முடிவாகும். (https://tamilsdirection.blogspot.com/2017/12/blog-post_20.html )

‘'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று, தமிழைப் பற்றி உயர்வாக கவிதைகளும், கட்டுரைகளும் எழுதிய பாரதிதாசன், 'தமிழைக் காட்டுமிராண்டி மொழி' என்று அறிவித்து, மேலே குறிப்பிட்ட 'தமிழ் அடையாள அழிப்பு' போக்கில் பயணித்த ஈ.வெ.ராவிற்கு, அவரின் நிலைப்பாடு தவறு என்று அறிவுபூர்வமாக விளக்கி, ஈ.வெ.ராவை நல்வழிப்படுத்த பாரதிதாசன் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்?

அவ்வாறு தமிழை இழிவுபடுத்தியவருடன் பாரதி நட்பாக இருந்திருப்பாரா? தமிழ்ப் பற்றில் பாரதிக்கு இருந்த நேர்மையானது, பாரதிதாசனிடம் இருந்ததா? பாரதி போற்றிய 'இந்திய தேசியத்தை' எதிர்க்காமல், 'திராவிட நாடு' பிரிவினையை ஆதரித்துக் கொண்டே, பாரதியை பாராட்டியது போலவே;

தமிழை இழிவு செய்த ஈ.வெ.ரா அவர்களை எதிர்க்காமல், பாரதிதாசன் ஈ.வெ.ரா புகழ் பாடினாரா? இது போன்ற போக்குகள் பாரதியிடம் வெளிப்பட்டதுண்டா? காந்தியின் நிலைப்பாடு தவறு என்று தெரிந்ததும், பாரதி காந்தியை கண்டித்து, துணிச்சலாக கருத்து வெளியிட்டவர் இல்லையா?

என்பது போன்ற அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்.

வைக்கம் போராட்டத்தில் எழுச்சி ஊட்ட, ஈ.வெ.ரா அவர்கள் பாரதியாரின் பாடல்களை பாடியதை, கோவை அய்யாமுத்து தனது எழுத்துக்களில் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அவ்வாறு எழுச்சியூட்ட பாரதிதாசன் பாடல்களை ஈ.வெ.ரா ஏன் பாடவில்லை? என்பதும் மேலே குறிப்பிட்ட விவாதத்தில் இடம் பெற வேண்டும்.’ (https://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_16.html)

மனித உரிமை, பெண்ணுரிமை போன்றவற்றினை மேற்கத்திய மோகத்தில் அணுகுவதில் உள்ள குறைபாடுகளை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

அந்த 'மேற்கத்திய முற்போக்கு மோகம்' பாரதிக்கும், பாரதிதாசனுக்கும் இருந்ததா? அதிலும் கூட நமது பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் விட்டுக் கொடுக்காமல் பாரதி பயணித்தது போலின்றி, 'தமிழ் அடையாள அழிப்பிற்கு' துணை புரியும் வகையில், 'பெரியார்' ஈ.வெ.ராவின் பாதிப்பில், பாரதிதாசன் 'விட்டுக் கொடுத்து' பயணித்தாரா? என்ற ஆய்வுக்கு, அவர்களின் படைப்புகளை உட்படுத்த வேண்டிய நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன்.

இலக்கண அறிவின்றி, செவி மூலம் உணரும் ஓசை அறிவின் அடிப்படையில் பேச்சில், எழுத்தில் எதுகை மோனையைப் பயன்படுத்தும் போக்கு வளர்ந்ததற்கு அண்ணாவே காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். உதாரணமாக; சிங்கம் குகை வாழ் மிருகமா? குகையாய் இருந்தாலும், வீடாய் இருந்தாலும் தொந்திரவற்ற சுவரில் சிலந்தி கூடு கட்டதா? சிங்கத்தைப் பார்த்தவுடன் மனிதர்கள் பயப்படுவதை போல, சிலந்தி, கொசு உள்ளிட்ட சிறிய பூச்சி வகைகள் பயப்படுமா? என்ற அறிவுபூர்வ ஆராய்ச்சியின்றி; 'சிங்கத்தின் குகைக்குள் சிலந்திகள் கூடு கட்டிவிடக்கூடாது' என்று தி.மு.கவினரின் எழுத்துக்களிலும், பேச்சுகளிலும் வெளிப்படுவதானது;

பாரதி பாணி உணர்ச்சிபூர்வ‌ போதையை அரசியலில் வளர்க்க, பேச்சில், எழுத்தில் எதுகை மோனையைப் பயன்படுத்தும் போக்கிற்கு மிகவும் உதவியது. பாரதியின் படைப்புகளைப் போல, அண்ணாவின் படைப்புகளில் இலக்கணப் பிழை உள்ளதா, இல்லையா என்பது பற்றி எவரும் ஆராய்ச்சி மேற்கொண்டதாக தகவல் இல்லை.

இன்று தமிழ்நாட்டில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உள்ள தமிழ்ப் பாட புத்தகங்களிலேயே நிறைய இலக்கணப்பிழைகள் இருப்பதைத் தமிழ்ப்புலமையாளர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். தி.மு.க தலைவர் கருணாநிதியின் 'தொல்காப்பியப் பூங்காவில்' இருந்த பிழைகளை வெளிப்படுத்திய தமிழ்ப்புலமையாளர் சாகும் வரை தன் நண்பர்களின் பாதுகாப்போடு வாழ வேண்டி நேரிட்டது. பாரதியின் நூல்களில் இருந்த இலக்கணப் பிழைகளை வெளிப்படுத்தி, 1950களில் வெளிவந்த நூல், இன்று தேடினாலும் கிடைக்காது. தமிழில் இத்தகைய இலக்கணப் பிழைக்கு வித்திட்டது பாரதியா என்பதும், பாரதி, அண்ணா உள்ளிட்டு பல தலைவர்களின் வழிபாட்டுப் புழுதியின் ஊடே தான், அந்த வித்து இன்று செழித்து வளர்ந்து’  தமிழைச் சீரழித்து வருகிறதா என்பதும் ஆய்விற்குரியவைகளே. 

நாம் சந்திக்கும் எந்த விஷயத்தையும் பிடிக்கும்அல்லது பிடிக்காதுஎன்ற வரையரைக்குள் அடக்குவது இயல்பாகி விட்டது. பிடிக்கும்அல்லது பிடிக்காதுஎன்று எல்லாவற்றையும் கறுப்பு அல்லது வெள்ளையாகப் (கம்யூனிஸ்டுகள் சிகப்பாக) பார்ப்பது வழக்கமாகி விட்டது. அதனால் சமூகத்தில் உள்ள வண்ணங்களைப் பார்க்கத் தவறும் குறைபாடு நம்மைப் பாதிக்கும் (அல்லது பாதித்திருக்கும்). கண் பார்வைக் கோளாறுகளில் வண்ணங்களைப் பார்க்க முடியாத குறைபாடும் ஒன்றாகும். மேற்சொன்ன குறைபாடு அதை விட அதிக பாதிப்புகளை நம் வாழ்வில் ஏற்படுத்த வல்லதாகும்.

சமூகத்தில் உள்ள வண்ணங்களை உள்ளதை உள்ளவாறு பார்த்து வாழும் போது தான் நம்மை யாரும் ஏமாற்ற முடியாத வாழ்வை நம்மால் வாழ முடியும். தலைவர்களின் சுயநல வாழ்வுக்கு நமது உழைப்பை வீணாக்காமல் சமூகத்திற்கும் ஆக்க பூர்வமான பங்களிப்பை வழங்க முடியும். இல்லையெனில் எதையும் சரியாகப் பார்க்கத் (கண் என்னாம்’ – குறள் 573) தெரியாமல் (ஆராயாமல்) கருத்தை உருவாக்கிக் கொள்ளும் (தேரான் தெளிவும்’ – குறள் 510) நோய்க்கு (opinion sickness) நாம் ஆளாக நேரிடும்.

நான் இசை ஆராய்ச்சிக்கு முன், 'பெரியார்' கொள்கையாளராகப் பயணித்த காலத்தில், பாரதிதானை வெள்ளையாகவும், பாரதியை கறுப்பாகவும் கருதிப் பயணித்தேன். அவ்வாறு பயணித்த போது தான், 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்ற நூலினை, பாரதி நூற்றாண்டு விழா தொடங்கிய காலக்கட்டத்தில் வெளியிட்டேன்.

'சமரசமற்ற பார்ப்பன எதிர்ப்போடு பிணைந்த தனித்தமிழ்நாடு' என்ற நிலைப்பாட்டில் பயணித்த எனது நிலைப்பாடுகளில் எனது இசை ஆய்வுகளுக்குப் பின் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

சமூகத்தில் எதையும் கறுப்பு வெள்ளையாகவே, அல்லது வெற்றி தோல்வியாகவே, இரட்டை இலக்க அணுகுமுறையில் (Binary) பார்ப்பதானது, நமது வாழ்க்கையையே அந்த சமூக இரட்டை இலக்க சிறையில் (Social Binary Prison) சிக்க வைத்துவிடும். (https://tamilsdirection.blogspot.com/2020/04/fixed-mindset-growth-mindset.html)

அவ்வாறு சிக்கிய பின், நமக்கு தெரியாமலேயே, சமூக ஒட்டுண்ணிகள் நமது சமூக வட்டத்தில் ஊடுருவி, சமூகத்தை சீரழிக்கும் சமூகக்கிருமிகளாக‌ வளர்ந்த 'சமுக ஆற்றல் உறிஞ்சி செயல்நுட்பம்' பற்றியும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். 
(https://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_77.html)

அந்த 'சமுக ஆற்றல் உறிஞ்சி' செயல்நுட்பத்தின் பாதுகாப்பு கவசமான, சமூக ஊமைக்காயங்களை உணர முடியாத, வசதியாக வாழும் யோக்கியத் தமிழர்களும்(?), சமூக இரட்டை இலக்க சிறையில் (Social Binary Prison) தமிழ்நாடு நீடிப்பதை ஊக்குவித்து வருகிறார்கள். 
(https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post.html)

பாரதிக்கு நினைவு நூற்றாண்டு தொடங்கியுள்ள இக்காலக்கட்டத்தில், கீழ்வரும் கண்டுபிடிப்பினை வெளிப்படுத்த விழைகிறேன்.

பாரதி, பாரதிதாசன், ஈ.வெ.ரா, அண்ணா, காந்தி, கோட்சே உள்ளிட்டு எவரையுமே சமூக இரட்டை இலக்க சிறையில் அணுகுவதானது, நம்மை அந்த சிறையில் சிக்க வைத்து, நமது வாழ்வை முடக்கி விடும். 

நாம் சரியென்று ஏற்றுக்கொண்டவைகள் தொடர்பாக, உலக அளவில் வெளிப்பட்டு வரும் ஆய்வுகளை எல்லாம் தேடி, அதன் வெளிச்சத்தில் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அந்த மறுபரிசீலனையின் மூலமே, உரிய திருத்தங்களுடன் சரியான திசையில் நாம் பயணிக்க முடியும்.

இறுக்கமான மனநிலையில் (Fixed Mindset) இருந்து வளர்ச்சி மனநிலைக்கு (growth mindset) மாறுவதை ஊக்குவிக்கும் சமூகசூழலும் கனிந்து வருகிறது. அதில் முந்திக்கொண்டு உரிய மாற்றங்களுடன் பயணிப்பவர்கள் எல்லாம், தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு தலைகளாவார்கள். தாமதிப்பவர்களும் அந்த மீட்சிக்கான வால்களாகப் பயணிக்க வேண்டிய நெருக்கடிகளும் கூடி வருகின்றன. கொரோனா நோய்த்தொற்று ஓய்ந்த பின்னர் வெளிப்படும் தமிழ்நாடு, நிச்சயமாக ஆக்கபூர்வ திசையில் பயணிக்கும் புதிய தமிழ்நாடாக வெளிப்படும். 

No comments:

Post a Comment