Monday, May 25, 2020


'துப்பு' கெட்ட திசையில் தமிழ்நாடு பயணிக்கிறதா? (2)


தமிழ்நாட்டின் ஊடக நேர்மைக்கு சவாலான கேள்விகள்? 


2000 சனவரி 3 அன்று, சென்னை 'அருங்காட்சியக அரங்கில்' (Museum Theater) கலாசேத்ரா தொடர்புள்ள இசைக்கலைஞர்களின் துணையுடன் 'Music of This Millennium- MOZART & MUSIC TRINITIES- FUSION 2000' நடத்தினேன்.

கீழ்வரும் காரணங்களால், அந்நிகழ்ச்சியானது தமிழ்நாட்டின் இசை வரலாற்றில் இடம் பெறத்தக்கதாகும்.

மொசார்ட் சிம்பொனி (K545) இசையில் உள்ள பொருத்தமான இசைச்சுரஅமைப்புகளை (musical notes structures) தனியே பிரித்தெடுத்தேன். மேற்குறிப்பிட்ட மொசார்ட்டின் இசையில் இருந்து பிரித்தெடுத்திருந்த இசைச்சுரஅமைப்புகளுக்குப் பொருத்தமான இசைச்சுரஅமைப்புகளை, கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவராகியமுத்துச்சாமி தீட்சதரின் புகழ்பெற்ற 'வாதாபி கணபதி' இசையிலிருந்து பிரித்தெடுத்தேன். பின் இரண்டையும் இசைக்கட்டிடம் (Musical Building) கட்டும் செயல்நுட்பம் மூலமாக இணைத்து ஒரு பல்லவியையும் ஒரு சரணத்தையும் உருவாக்கினேன். கணினியில் உள்ள 'மவுஸ்' (mouse) மூலம் மட்டுமே அவ்வாறு உருவாக்கி, அதை கணினியில் உள்ள ஒரு வயலின் போன்ற நரம்பிசைக்கருவியில் இசைக்கச் செய்தேன். பின் அதற்கேற்ற பிற கருவிகளின் இசைகளையும் அவ்வாறே கணினியின் மூலமே உருவாக்கி இசைக்கச் செய்தேன்
(Listen to Title: MOZARTHAMSA - http://muxel.sg/)

மேற்குறிப்பிட்ட முறையில், மொசார்ட்டின் இசையில் இருந்தும், கர்நாடக இசை மும்மூர்த்திகளின் இசைகளில் இருந்தும், கருவியிசை ஆல்பத்தை (instrumental music album) உருவாக்கினேன்.

பின் சென்னையில் ஒரு ஒலிப்பதிவு கூடத்தில் (Recording Theatre) அந்த இசைக்கோப்பின் (music file) துணையுடன் ஒலிப்பதிவு செய்து, சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் ''Let’s GO Green' என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டேன்.

மேற்குறிப்பிட்ட இசை ஆல்பம் மூலமாக கலாசேத்ரா தொடர்புள்ள இசைக்கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, மேற்குறிப்பிட்ட இசை நிகழ்ச்சியை நடத்தினேன்.

அன்றைய‌ (சென்னை V.S.N.L Sr.General Manager) N. பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். மறுநாள் தொலைபேசியில் கீழ்வரும் தகவலைத் தெரிவித்து என்னைப் பாராட்டினார்.

அந்த நிகழ்ச்சி எவ்வளவு நன்றாக இருந்தது? என்று அவர் விளக்கியவுடன், தன்னை ஏன் இசை நிகழ்ச்சிக்கு அழைத்துச்செல்லவில்லை? என்று அவரது மனைவி கோபப்பட்டாராம்.

நடனக்கலைஞர் அனிதா ரத்னம் முன்னிலை வகித்து, கலாசேத்ராவில் பணி ஓய்வு பெற்ற நட்டுவாங்க ஆசிரியை (எனது மகளுக்கு நட்டுவாங்கம் இசைப்பயிற்சியளித்த‌) கமலா ராணியைப் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் ஞானி, விடுதலை ராசேந்திரன் உள்ளிட்ட ஊடகத் துறையினர் சிலரும் கலந்து கொண்டனர்.

ஆனால் அந்த நிகழ்ச்சி எந்த ஊடகத்திலும் வெளிவரவில்லை. பத்திரிக்கையாளர்களுக்கு 'கவரில்' பணம் கொடுக்க வேண்டும், என்பதும் அப்போது எனக்கு தெரியாது. செய்திகளை 'நுகரும்' திறமையை விட (https://www.thoughtco.com/delope-a-nose-for-news-2073852); பணம் அல்லது பரிசுள்ள‌ 'கவரை' (money or gift in cover) நுகரும் திறமையே தமிழ்நாட்டு ஊடகங்களில்  செல்வாக்கு செலுத்துகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

பத்திரிக்கையாளர் ஞானி, விடுதலை ராசேந்திரன் உள்ளிட்ட ஊடகத் துறையினர் பொது அரங்கில் தமது கட்டுரைகள் மற்றும் பேச்சுக்கள் மூலமாக அது பற்றி ஏதும் பதிவு செய்தார்களா? இல்லையா? என்பதும் எனக்குத் தெரியாது.

பாதிரியார் ஜெகத் கஸ்பாரின் 'Mozart Meets India' (https://www.hindustantimes.com/india/mozart-meets-india-in-unique-musical-synthesis/story-wTHQgv4LhV8oRdbU2IYTAM.html ) இசையில் மொசர்ட் பெயருக்கான 'இசை நியாயம்’ (Music Justice) இருந்ததா? அது உண்மையிலேயே சிம்பொனி இசையா? (claimed that it would be India’s first symphony:Indo-Asian News Service - Chennai, March 20, 2006, New Indian Express, 19-3-2006) 'அந்த' ஆல்பத்திற்கு, தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு அதீதியான ஊடகக்குவியம் வெளிப்பட்டது?

'தாம் இசை அமைத்தது சிம்பொனி அல்ல, ஓரடோரியோ இவை வடிவம்' என்று 2005 சூன் முதல் வார 'ஆனந்த விகடனில்' பேட்டியளித்த இளையராஜாவை, பாதிரியார் ஜெகத் கஸ்பார் வெளியில் தெரியாத நெருக்கடிக்குள்ளாக்கி, 'திருவாசகம்சிம்பொனி ஆரடோரியோ' என்று மேற்கத்திய இசையில் இல்லாத ஓன்றில் அது வெளிவந்துள்ளதாக அறிவித்து, குடியரசு தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டு இந்தியாவையே முட்டாளாக்கி, உலக இசை அறிஞர்களின் பார்வையில் இந்தியாவை கேலிக்குள்ளாக்கியது சரியா

'ஊடக நேர்மையை' இழந்து ஊடகங்களில் செய்திகள் வெளிவருவது தொடர்பாக, மேற்கத்திய இசை ஆசிரியர் வெங்கடேசனும் நானும் 22 மார்ச் 2006-இல் சென்னை 'பிரஸ் கிளப்பில்' ஊடகத்துறையினரைச் சந்தித்து உரிய சான்றுகளுடன் விளக்கினோம். 'Mozart Meets India' தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுகள் எந்த ஊடகத்திலும் வெளிவரவில்லை. இளையராஜாவின் சிம்பொனி பற்றியவை மட்டுமே ஒரு சில இதழ்களில் சுருக்கமாக வந்தது. பின் அது தொடர்பாக, இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு நான் அனுப்பிய புகார் தொடர்பான மடலும் அதன் விளைவும் கீழ்வரும் இணைய தொடர்பில் உள்ளது.

மொசார்ட் பயன்படுத்திய சுர அமைப்புகளில் இருந்தும், கர்நாடக இசை மும்மூர்த்திகளில் இருந்தும் பிரித்தெடுத்து, பொருத்தமான முறையில் இசைக்கட்டிடம் (Musical Building) போல, நான் இசை அமைத்து வெளிவந்த 'Let’s GO Green' இசை ஆல்பமும், அதனை இசைத்த மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியும், ஏன் தமிழ்நாட்டில் ஊடக இருளில் சிக்கியது?

தமிழ்நாட்டில் வெளிப்பட்ட சாதனையானது ஊடக இருளில் சிக்க, பல வருடம் கழித்து, அதே தலைப்பில், மேற்கத்திய உலகில் இசை ஆல்பம் வெளிவர, ( https://music.apple.com/us/album/lets-go-green-kids/283803048);
 'அந்த' தமிழ்நாட்டு 'ஊடக இருளே' காரணமா? என்ற கேள்விகளை, மனசாட்சியுடன் நேர்மையாக பணியாற்றும் ஊடகத் துறையினர் சந்திக்க வேண்டிய நேரமும் வந்து விட்டதாகக் கருதுகிறேன்.

மேற்கத்திய செவ்விசை சுர அமைப்புகளைப் பிரித்தெடுத்து, அதன் அடிப்படையில் நாட்டுப்புற இசை அமைத்து, பறை, நாயன இசைக்கலைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்தேன். 'அந்த' மேற்கத்திய இசையை கீபோர்ட் மூலமும், அதன் பின் நான் இசை அமைத்த நாட்டுப்புற இசையை மேற்குறிப்பிட்ட இசைக்கலைஞர்கள் மூலமும், தஞ்சையில் ...  நடத்திய 'தமிழ் மக்கள் இசை விழா' நிகழ்ச்சியில் இசைத்ததானது, எனக்கு மறக்க முடியாத அனுபவமானது. அதன் ஒளிப்பேழையை அவர்கள் வெளியிட்டார்களா? இல்லையா? என்பதும் தெரியாது.

இசை அமைத்தல் என்பதானது கட்டிடம் கட்டுவதைப் போன்றதே, என்பதையும்;

இசை அழகியலில் உயர்ந்த சுர அமைப்புகளை எல்லாம் உலகில் உள்ள வெளிவந்த இசைகளில் இருந்தும், வெளிவாராமல் மேற்கத்திய குறியீடு, கர்நாடக இசைக் குறியீடு போன்று இசைக்குறியீட்டில் உலகில் பல மொழிகளில் அச்சிட்டு வெளிவந்துள்ள பல்லாயிரக்கணக்கான பாடல்களில் இருந்தும்;

பறவைகள், தேரைகள் மீன்கள் உள்ளிட்ட பல உயிரினங்கள், காற்று, இடி, மழை, அருவி, உள்ளிட்ட இயற்கை ஆகியவற்றில் இருந்து, பிரமிக்கும் வகையில் எண்ணற்ற சுர அமைப்புகளை எவ்வாறு அடையாளம் கண்டு பிரித்தெடுப்பது? என்பது தொடர்பாக சங்க இலக்கியங்களில் இருந்து நான் கண்டுபிடித்ததில் இருந்தும்,

எவ்வாறு இசை அமைப்பது? என்பதனை 1990-ள் முதல் நான் நிரூபித்து வருகிறேன்.

கவிஞர் மு.மேத்தா, டிராட்ஸ்கி மருது, .ராசேந்திரன் உள்ளிட்ட பலர் எனது இல்லத்திற்கு வந்து, அதனைக் கேட்டு பாராட்டி சென்றிருக்கிறார்கள்.

'இசை அமைத்தல்' (Music Composing) என்றஇசைக்கட்டிடம் (Musical Building) கட்டும் செயல் நுட்பத்தில், உலகில் எந்த வகை இசையையும், அல்லது புதிய ரசனைகளுக்கான புதிய வகை இசைகளையும் உருவாக்க முடியும்.

அதனை செயல்பூர்வமாக நிரூபிக்க, நான் உருவாக்கிய இசைகளில் ஒன்றையே, கம்போடியாவில் இசை ஆசிரியர் முன்னிலையில் நிகழ்த்தினேன்
(Listen ‘Angkor 2020’ in http://muxel.sg/ )

2018 சூலையில் கம்போடியா நாட்டில் உள்ள ஆங்கோர் வாட் கோவிலுக்கு சென்றிருந்தேன். அந்நாட்டு 'xylophone' இசைக்கருவியில் வாசிக்கக்கூடிய இசையை நான் உருவாக்கி, கணினியில் பதிவு செய்து கொண்டு சென்றேன்.

Heritage Hub, Cambodian Living Arts, Siem Reap என்ற மையத்தில் அந்த கருவியை வாசிக்கக்கற்று தரும் மூத்த இசை ஆசிரியர் மற்றும் அந்த மையத்தின் மேலாளர் முன்னிலையில், அந்த இசைக்கருவியில் வாசிப்பதற்காக நான் உருவாக்கிய இசையை, எனது மடிக்கணினியின் துணையுடன் இசைக்குறிப்புகளுடன் (Music Notes) இசைக்கச் செய்தேன். பிரமித்து என்னைப் பாராட்டிய அந்த இசை ஆசிரியரும், மேலாளரும், நான் இசை அமைத்த நுட்பத்தைக் கற்றுத்தருமாறு கோரினார்கள். எனக்கு வாய்ப்பு கிட்டும்போது, அங்கு சென்று சில வாரங்கள் தங்கி அதை சொல்லித் தரும் எண்ணமும் உள்ளது.

'கட்டிடமானது உறைந்த இசையாகும்' (Architecture is frozen music) என்ற அடிப்படையில், அந்த உறைந்த இசையைப் பிரித்தெடுக்கும் 'லாஜிக்கைக்' (Logic) கண்டுபிடிக்க, கி.முவில் வாழ்ந்த விட்ரிவியஸ் முதல், நவீன உலகத்தில் செனாக்ஸிஸ் உட்பட பலர் முயற்சித்தனர். அம்முயற்சிகளின் தொடர்ச்சியாக, நான் ஆலோசகராக செயல்பட்ட குழு மூலமாகக் கண்டுபிடித்து, காப்புரிமை (patent) பெற்று, ஆய்வு இதழிலும் வெளியிட்டுள்ளோம்.

The Logic of Defreezing the Music from the Building Architecture, started from Vitruvius (80 -15 BC), and pursued by  Iannis Xenakis, among many others in the modern era, was finally discovered by Dr.Vee, as the Project Consultant of the on-going R & D project at National Institute of Technology, Trichy, India, with patent and published in SCI journal ‘Multimedia Tools and Applications – Springer‘ 

கட்டிடக்கலைஞர்கள் (Architects) புதிய கட்டிடங்களை வடிவமைக்க, 'AutoCAD, Revit, CATIA' போன்ற இன்னும் பல கட்டிட வடிவமைப்பு மென்பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். மேற்குறிப்பிட்ட கண்டுபிடிப்புகள் மூலமாக உருவாகும் மென்பொருளைப் பயன்படுத்தி, கட்டிடக்கலைஞர்கள் தாம் விரும்பும் இசையை உள்ளீடாகக் (input) கொடுத்து, அந்த இசையில் உள்மறைந்துள்ளகட்டிட வடிவக்கூறுகளைப் பிரித்தெடுத்து உருவாகும் நூலகத்தையும் பயன்படுத்தி புதுமையான கட்டிடங்களை உருவாக்க முடியும்.

அது போலவே இசை அமைப்பாளர்கள் இசை அமைக்க பல இசை அமைக்கும் மென்பொருட்களை (music composing software) பயன்படுத்தி வருகிறார்கள். மேற்குறிப்பிட்ட கண்டுபிடிப்புகள் மூலமாக உருவாகும் மென்பொருளைப் பயன்படுத்தி, இசை அமைப்பாளர்கள் தாம் விரும்பும் கட்டிட வடிவை உள்ளீடாகக் கொடுத்து, அந்த கட்டிட வடிவில் உள்மறைந்துள்ள இசைக்கூறுகளைப் பிரித்தெடுத்து உருவாகும் நூலகத்தையும் பயன்படுத்தி புதுமையான இசையை உருவாக்க முடியும்.

'எழுத்து அசைத்து இசைக் கோடலின்' மூலமாக உருவாகும் அசையில் (syllable) தொடங்கி, எவ்வாறு ஒரு இசைக்கட்டிடத்தை உருவாக்க முடியும்? அது உலகில் எந்த மொழியின் இசைப்பாடலுக்குமான பொதுவான இலக்கணமாக எவ்வாறு இருக்க முடியும்? என்பது போன்றகேள்விகளுக்கான  விடைகள் எல்லாம், தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணத்தில் இருக்கின்றன.

நோவாம் சோம்ஸ்கியின் 'உலக மொழி இலக்கணம்' சந்தித்து வரும் எதிர்ப்புகளுக்கு விடையளிக்கும் சாத்தியம் எவ்வாறு தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணத்தில் இருக்கிறது?

என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளும் எனது ஆய்வுகளின் மூலமாக வெளிப்பட்டு வருகின்றன

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்த‌ கணபதி ஸ்தபதி (https://en.wikipedia.org/wiki/V._Ganapati_Sthapati) 'மயன் தொழில்நுட்பம்' என்று அறிவித்துள்ள 'ஐந்திறம்' என்பதானது, 'ஓவியக் கலை, சிற்பக் கலை, கட்டிடக் கலை, இசைக் கலை, நாட்டியக் கலை' ஆகிய ஐந்தினைக் குறிப்பிட்டு, 'இசைக் கலையில் இலக்கியக் கலை ஒன்றியது' என்றும் விளக்கியுள்ளார். அவை ஐந்துமே ஒன்றிலிருந்து பிறிதொன்றை வருவிக்கும் தொடர்புகள் மூலமாக ஓன்றானவையாகும்.

தொல்காப்பியத்தில் 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற எனது கண்டுபிடிப்பானது, 'இசைக் கலையில் இலக்கியக் கலை ஒன்றியது' என்பதையும் நிரூபித்துள்ளது.

கட்டிடக்கலைக்கும், இசைக்கலைக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பு பற்றிய‌ 'லாஜிக்கின்' தொடர்ச்சியாக, ஓவியக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பு தொடர்பான 'லாஜிக்கினை', என்னால் வெளிப்படுத்த முடியும். அது போலவே, நாட்டியக்கலைக்கும், இசைக்கலைக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பு பற்றிய 'லாஜிக்கினை, என்னால் வெளிப்படுத்த முடியும்.

கணபதி ஸ்தபதி 'மயன் தொழில்நுட்பம்' என்று அறிவித்துள்ள 'ஐந்திறம்' தொழில்நுட்பத்தினை, நான் கண்டுபிடித்துள்ளேன். எனது கண்டுபிடிப்புகளை முழுமையாக விளங்கி, 'எல்லையில்லா' மகிழ்ச்சி பெற முடியாமல், சில வருடங்களுக்கு முன் கணபதி ஸ்தபதி மறைந்ததானது, எனக்கு விவரிக்க முடியாத வருத்தத்தினை தந்துள்ளது. எனது 'ஐந்திறம்' தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் முழுப்பெருமையும், அதை நோக்கி நான் முயலுமாறு, என்னை ஊக்குவித்த கணபதி ஸ்தபதியையேச் சாரும்.

தமிழின் வளர்ச்சிக்கான 'சுற்றுச்சூழல் அமைப்பு'(ecosystem) என்பதில் தமிழ் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனது கண்டுபிடிப்புகள் மூலமாக தமிழும் தமிழ்நாடும் பெற வேண்டிய பலன்கள் எல்லாம், தமிழின் வளர்ச்சிக்கான 'சுற்றுச்சூழல் அமைப்பு' சீரழிந்ததன் விளைவாக, சுமார் 20 வருடங்களுக்கு மேலாக தாமதமாகியுள்ளது. சீரழிந்த தமிழின் வளர்ச்சிக்கான 'சுற்றுச்சூழல் அமைப்பு' சீர் பெறும் காலமும் நெருங்கி விட்டது. இனியும் தாமதமின்றி, தமிழ் இதழ்களின் ஆசிரியர்கள் விழித்துக்கொண்டு, தமது பங்கை ஆற்றுவார்களா? என்ற கேள்வியை ஏற்கனவே பார்த்தோம்

தமிழின் வளர்ச்சிக்கான 'சுற்றுச்சூழல் அமைப்பு' எந்த அளவுக்கு சீரழிந்தது? அவ்வாறு சீரழந்ததால், தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புகள் யாவை? என்ற ஆய்விற்கு மேற்குறிப்பிட்டவை எல்லாம் துணைபுரியலாம்.

சமஸ்கிருத ஆர்வலர்கள் எல்லாம் சமஸ்கிருதத்திற்கான 'சுற்றுச்சூழல் அமைப்பு' வலிமையுடன் வளர பங்களித்து வருகிறார்கள். அதன் காரணமாக உலக அளவில் சமஸ்கிருதம் பிரமிப்பூட்டும் வகையில் வளர்ச்சி பெற்றுள்ளது.

தமிழ் ஆர்வலர்கள் எல்லாம் தமிழுக்கான 'சுற்றுச்சூழல் அமைப்பு' எந்த அளவுக்கு சீரழிந்துள்ளது என்பதை அறிவார்களா? தமிழ் தொடர்பாக வெளிப்பட்டுள்ள பிரமிப்பூட்டும் மேற்குறிப்பிட்ட கண்டுபிடிப்புகள் எல்லாம் உரிய ஆதரவு இன்றி, அக்கண்டுபிடிப்புகள் மூலமாக தமிழ் பெற வேண்டிய வளர்ச்சியும் தாமதமாகி வருவதையும் அறிவார்களா?

பழந்தமிழ் இலக்கியங்களிலும், சமஸ்கிருத இலக்கியங்களிலும் புதைந்துள்ள அறிவியல் தொழில்நுட்பங்கள் எல்லாம் வெளிவரத் தொடங்கியுள்ளன. சமஸ்கிருத இலக்கியங்களில் இருந்து வெளிவரும் கண்டுபிடிப்புகள் எல்லாம் உலகின் கவனத்தை தாமதமின்றி ஈர்த்து வருகின்றன. தமிழ் இலக்கியங்களில் நான் கண்டுபிடித்தவை எல்லாம் சந்தித்து வரும் 'அபத்தமான' தடைகள் விரைவில் நீங்குவதானது, தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லதாகும்.

No comments:

Post a Comment