Saturday, May 23, 2020


'துப்பு' கெட்ட திசையில் தமிழ்நாடு பயணிக்கிறதா? (1)


தினமணி, தமிழ் இந்து உள்ளிட்ட தமிழ் இதழ்களின் பங்களிப்பால் தமிழிசை கேலிப்பொருளாகும் அபாயம்?



தமிழ்நாட்டில் தினந்தந்தி வாசகர்கள் பெரும்பாலும் 'சமஸ்கிருத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு' போன்ற போக்குகளில் சிக்காத அதிகம் படிக்காதவர்களே ஆவார்கள். தினமலர் வாசகர்களில் கணிசமானோர் தேசியப் போக்கினை ஆதரிப்பவர்களாகத் தெரிகிறது.

அரசுப்பள்ளிகளில் படிக்கிற மாணவர்களில் கணிசமானோர் தினமலர் மற்றும் தினத்தந்தி வெளியிடும் கல்வி தொடர்பான இணைப்புகளை மட்டுமே படிப்பதாகத் தெரிகிறது.

ஆனால் 1967க்கு முன் மாணவர்களில் பெரும்பாலோர் தமிழ் இதழ்களில் வெளிவரும் செய்திகளைப் படிப்பதில் ஆர்வமுடன் இருந்தார்கள். 1967-இல் தி.மு. ஆட்சியைப் பிடித்தற்கான காரணங்களில் அதுவும் ஒன்றாகும்.

1967க்குப் பின் 'அறிவியல் ஊழல்' வளர்ந்து, அதனை தமிழ் ஆர்வலர்கள்  எதிர்க்காமல்,  வாய்ப்புகள் கிட்டியதமிழ் ஆர்வலர்கள் வாலாக ஒட்டிப்பயணித்தார்கள்; தமிழ் ஆர்வலர்களுக்கும் மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்களுக்குமிடையே சமூகப்பிளவு  (Social disjoint) வளர்ந்ததற்கான காரணங்களில் அதுவும் ஒன்றாகும்.

தினமணி, தமிழ் இந்து போன்ற நாளிதழ்களின் வாசகர்களில் பெரும்பாலோர் 50 வயதைக் கடந்தவர்களாகவே தெரிகிறது.

தினமணி, தமிழ் இந்து போன்ற நாளிதழ்களின் வாசகர்களில்  பிராமணரல்லாத தமிழ் ஆர்வலர்களில் பெரும்பாலோர்  'சமஸ்கிருத எதிர்ப்பு' போக்கில் சிக்கியவர்கள் ஆவார்கள். அதிலிருந்து சற்று வேறுபட்டு, தமிழ் இந்து வாசகர்களில் கணிசமானோர், கூடுதலாக 'இந்துத்வா எதிர்ப்பு' போக்குள்ளவர்கள் ஆவார்கள்

தமிழ்ப்பற்றாளர்களில், 'சமஸ்கிருத எதிர்ப்பு' போக்கில் சிக்காதவர்கள் எவரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அத்தகையோரெல்லாம் தத்தம் மனசாட்சிக்குட்பட்டு கீழ்வரும் கேள்விகளுக்கு விடைகள் கண்டு, உரிய திருத்தங்களுடன் இனியாவது பயணிப்பார்களா?

உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலில் தமிழையும், தமிழ் இசையையும் சிக்க வைத்து, உலக அளவில் அவைக் கேலிப்பொருளாகி வந்துள்ளனவா
(http://tamilsdirection.blogspot.com/2019/09/blog-post_16.html)

அதன் தொடர்ச்சியாகவே, உலக அளவில் சமஸ்கிருதம் பெற்று வரும் முக்கியத்துவம் அளவுக்கு, தமிழும் பெறுவதற்கான வாய்ப்புகள் முடங்கியுள்ளனவா
(https://tamilsdirection.blogspot.com/2020/03/normal-0-false-false-false-en-us-x-none_4.html)

அவற்றைப் பற்றிய கவலையின்றி, தமிழ்நாட்டின் சமூகவெளியை, பிரச்சினைகள் மற்றும் அவை மூலம் ஈர்க்கப்பட்டவர்கள் மூலமாக கூறுபோட்டு எதிரெதிராக பயணிக்கும் கட்சிகள் எல்லாம், 'தமிழ்' என்று வெளியில் முழங்கிக்கொண்டு, தத்தம் குடும்பப்பிள்ளைகளை எல்லாம் விளையாட்டுப்பள்ளி முதலே ஆங்கில வழியில் படிக்க வைப்பதிலும்;

தமிழ்வழிக்கல்வியின் மரணத்திற்குக் காரணமாகி, தமிழ்நாட்டின் கனிவளங்களை சூறையாடிய ஊழல் சுனாமியின் பிதாக்களை எதிர்க்காமலும், வாய்ப்புகள் கிடைத்தால் நேசமாகி பயணிப்பதிலும் ஒன்றுபட்டிருக்கிறார்களா

சமஸ்கிருத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு' போக்கில், அறிவில் தடம் புரண்டு, உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலில் பயணிப்பதால், தமிழும், தமிழ் இசையும் கேலிப்பொருளாகும் அபாயம் வெளிப்பட்டுள்ளது

நிகழ்காலத்தில் நாகசாமி, ராஜிவ் மல்கோத்ரா போன்றவர்கள் தமிழ் தொடர்பான உண்மைகளை இருட்டடிப்புக்கு உள்ளாக்கி, 'சமற்கிருத வல்லாண்மை' எதிர்ப்புக்கு அடித்தளம் உருவாக்கியுள்ளார்கள்; காலனிய சூழ்ச்சியில் வெளிப்பட்டு, தமிழ் தொடர்பான ஆய்வுகள் மூலமாக அடங்கி வரும் 'அந்த' எதிர்ப்புக்கு புத்துயிர் கொடுத்து வருகிறார்கள்; என்பது எனது ஆய்வு முடிவாகும்
(http://tamilsdirection.blogspot.com/2019/11/rajiv-malhotra-prof.html?m=0)

அவர்களின் தமிழ் தொடர்பான ஆய்வு முடிவுகளை எல்லாம் அறிவுபூர்வமாக எதிர்ப்பதன் மூலமே, அவர்களால் இருட்டடிப்புக்குள்ளானவைகளை வெளிக்கொண்டு வர முடியும், என்பதும் எனது கருத்தாகும்.  

கருணாநிதி - நாகசாமி கூட்டணியால் தமிழுக்கு நேர்ந்த பாதிப்புகள்? மீட்சிக்கான வாய்ப்புகள்? பற்றியும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்

சமஸ்கிருத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு' போக்கில், அறிவில் தடம் புரண்டு எவ்வாறு பயணிக்க முடியும்? என்பதை இங்கு பார்ப்போம்.

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு..குழந்தை வேலன் அவர்கள் எழுதிய 'தமிழிய வாழ்வில் கல்லும் சொல்லும்'( 2000; பைந்தமிழ்ப் பாசறை,எண்ணூர், சென்னை‍ 600057) என்னை ஈர்த்த நூல்களில் ஒன்றாகும்.

மேலே குறிப்பிட்ட  நூலின் ஆசிரியர் . குழந்தைவேலன் அவர்கள், கீழ்வரும் தனது ஆய்வுமுடிவை, உரிய சான்றுகளுடன் என்னிடம் ஒரு முறை விளக்கினார்; 'திருவையாறு' தொடர்பான எனது இசை ஆய்வு முடிவினை, அவருடன் விவாதித்த போது. தமது ஆய்வு முடிவினை கட்டுரைகளாகவும், நூலாகவும் சுமார் 20 வருடங்களுக்கு முன்னரே, அவர் வெளியிட்டுள்ளார்.

'தமிழ்நாட்டில் தமிழில் இருந்த ஊரின் பெயர்களை பொருள் சிதைவின்றி, வடமொழிப் பெயர்களாக மாற்றியுள்ளனர். ஆனால் அந்த வடமொழிப் பெயர்களை, தமிழ்ப் பற்றாளர்கள் தமிழில் மீட்க மேற்கோண்ட முயற்சியில்,'பொருள் தெரியாமலே'யே, ஒலி மாற்றம் செய்து, சிதைத்து விட்டனர்' என்பதே அந்த ஆய்வு முடிவாகும்.

சம்பந்தர் தேவாரம் திருவையாறு பதிகத்தில் கீழ்வரும் பாடல் உள்ளது.

" பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண்ணாகவே
ஆடும் ஆறு வல்லானும் ஐயாறுடை ஐயனே"

ஐந்து வகை இசையும், ஆறாவதாக ஆடலும் அமைந்து;

வணங்குதற்குரிய  திரு - ஐந்து இசையும், ஆறாவதாக ஆடலும் அமைந்து, திரு +  + ஆறு என்பது திருவையாறு ஆனது.

திருவையாறு கோவில் கல்வெட்டில் சமஸ்கிருதத்தில் 'பஞ்ச நாதேஸ்வரர்' என்று உள்ளது. சமஸ்கிருதத்தில், 'நாதம்' என்பது இசையைக் குறிக்கும். அந்த பொருள் புரியாமல், 'நாதம்' என்பதை, 'நதி' என ஒலி மாற்றம் செய்து, பொருளைத் திரித்து, ஐந்து நதிகள் ஓடுவதால், திருவையாறு என்ற தவறான புரிதலானது, தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளது.

திருவையாறு பெயரின் காரணமாக சொல்லப்படும், (பக்கம் 39, தேவார திருப்பதிகங்கள், 2ஆம் திருமுறை, தருமபுரம் ஆதீனம்,1954) காவிரி, வெண்ணாறு, வடவாறு,வெட்டாறு, குடமுருட்டி என்ற ஐந்து ஆறுகளில், திருவையாறை ஒட்டி ஓடும் ஒரே ஆறாகியகாவிரி தவிர்த்து, மற்ற ஆறுகளில் எவை, எவை பிற்காலத்தில் உருவானவை? என்பது ஆய்விற்குரியதாகும்
(‘பொருள் தெரியாமலே மாற்றியது யார்? தமிழ்ப் பெயர்கள் சமஸ்கிருதமயமான போக்கிலா? சமஸ்கிருதமயத்திலிருந்து தமிழ்ச் சொற்களை மீட்ட போக்கிலா?’; 

1990களின் பிற்பகுதியில் தஞ்சையில் நடந்த 'தமிழ் மக்கள் இசை விழா' நிகழ்ச்சிகள்  ஒன்றில் மேற்குறிப்பிட்ட கண்டுபிடிப்பை வெளிப்படுத்தினேன். ... இதழ்களிலும், ஒலிப்பேழைகளிலும் அந்த தகவல் இடம் பெற்றிருக்க வாய்ப்புண்டு. ஆனால் தமிழ்நாட்டில் பிரபல தமிழ் இதழ்கள் எதிலும் அந்த கண்டுபிடிப்பானது, வெளிவந்ததாகத் தெரியவில்லை.

சமைத்த உணவின் 'துப்பை', அந்த உணவை நாவின் மூலமாகச் சுவைத்து உணரும் உப்பின் மூலம் ஆராய்ந்தறியலாம்.

அது போலவே, சமைத்த இசையின் துப்பாகிய 'நீரை' ('பாலை நிலை, பண்ணு நிலை, வண்ணக்கூறுபாடு, தாளக்கூறுபாடு' ஆகிய இசைக்கூறுகள் எந்த அளவுக்கு சரியாக சேர்ந்து 'இசை சமைத்தல்' நடந்துள்ளது?), செவியின் மூலமாக, இசைக்கூறுகளை உள்ளடக்கிய 'சீரை', ‍ நாவின் மூலமாக உணவின் உப்பைச் சுவைத்தது போல, செவியின் மூலமாக சீரைச் சுவைத்து ஆராய்ந்தறியலாம். மேலே குறிப்பிட்ட 'நீர்' தொடர்பான சான்றுகளை ஆராய்ந்து, தமிழ் இசையியல் இன்பமும் அனுபவிக்கலாம்; உரிய ஆர்வமும் உழைப்பும் இருந்தால்.

சுமார் 10 வருடங்களுக்கு முன், எதேச்சையாக தினமணி நாளிதழின் வார இதழில்;

தண்ணீரின் பெருமையை சிறப்பினை விளக்கும் பழமொழி என்று தவறாககருதி,

'உப்புல இருக்கு துப்பு, நீருல இருக்கு சீரு' என்று வெளியிட்டிருந்தார்கள்.

அந்த தவறினை உரிய சான்றுகளுடன் சுட்டிக்காட்டி நான் எழுதிய மடல் வெளிவரவில்லை. அதே இதழ் எந்த அளவுக்கு 'துப்பு' கெட்ட திசையில் பயணிக்கிறது? என்பதை கீழ்வரும் அனுபவம் மூலமாக நான் அறிந்தேன்.

‘'தமிழிசைக் கலைக்களஞ்சியம்' ஊடகங்களில் இருட்டடிப்புக்கு உள்ளாகி, நா.மம்மது தொகுக்கத் தொடங்கியதானது, 'அதீத' ஊடக வெளிச்சத்துடன் வெளிவந்தது.  அந்த 'ஊடக இருட்டடிப்பு' தொடங்கிய சமயத்தில், 2005‍இல், நான் மம்மதை தொலைபேசியில் தொடர்பு  கொண்டு, அந்த தவறினைச் சுட்டிக்காட்டினேன். தான் 'தமிழிசைக் கலைக்களஞ்சியம்' பற்றி தெரிவித்தாகவும், அதை விட்டு விட்டு ஊடகங்களில் வெளிவருவதாகவும், விளக்கம் தந்தார். உடனே ஊடகத்திற்கு திருத்த அறிக்கை அனுப்புமாறு அவரிடம் அறிவுறுத்தினேன். ஆனால் மம்மதுவின் 'தமிழிசைப் பேரகராதி' 2010 இல் வெளிவரும் வரை, அதே தவறு தொடர்ந்தது. அதிலும் முன்பு 1992இல், 'தமிழிசைக் கலைக்களஞ்சியம்' வெளிவரத் தொடங்கிய போது, அதனைப் பாராட்டி எழுதிய தினமணி இதழிலேயே, அதனை இருட்டடிப்பு செய்து, நா.மம்மது தான் முதன் முதலில் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கட்டுரை வெளிவந்தது. அந்த தவறினைச் சுட்டிக்காட்டி தினமணி இதழுக்கு நான் அனுப்பிய மடலும் 'அதே' இருட்டடிப்புக்கு உள்ளானது.’

அதன் பின், என் பார்வைக்கு வந்த கீழ்வரும் பேட்டியும், அதில் வெளிப்பட்ட தகவல்கள் எந்த அளவுக்கு தவறானவை? என்பது தெரியாமல் வெளியிட்ட தமிழ் இந்து இதழும், எந்த அளவுக்கு 'துப்பு' கெட்ட திசையில் தமிழ்நாடு பயணிக்கிறது? என்பதற்கான சான்றாகும்.

தமிழிசை ஆராய்ச்சி குறித்து இனி மம்மது பேசுவார். “25 ஆண்டுகாலம் கிராமியச் சூழலில் கட்டுண்டு கிடந்ததால் என்னைச் சுற்றி இசையும் இருந்தது. பூப்புச் சடங்கு, இறப்புச் சடங்கு, கோயில் கொடை அறுவடைப் பாட்டு, வில்லுப் பாட்டு, வண்டிக்காரன் பாட்டு என எங்காவது ஒரு மூளையில் இசை ஒலித் துக் கொண்டே இருக்கும். என்னைச் சுற்றி இருந்த நண்பர்களும் இசை ஆர்வலர்களாக இருந்ததால் அடிக்கடி இசை குறித்துப் பேசுவோம். எனது குருநாதர் சி.சு.மணி ஒருமுறை, ‘தமிழிசையைப் பற்றி மிகச் சிலர்தான் ஆய்வு செய்திருக்கிறார்கள். நீங்கள் கொஞ்சம் ஆழமாக ஆய்வு செய்யுங்களேன்என்றார்.

தமிழிசை பேரகராதி உருவாக அதுதான் எனக்கு உந்துதல்” (‘தமிழிசையின் பெருமை சொல்லும் பேரகராதி: இசை ஆர்வலர் மம்மதின் மகத்தான சாதனை’; 

ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள், அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சிலப்பதிகாரத்தின் இசை பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்று, உலகின் கவனத்தை சிலப்பதிகாரம் நோக்கி ஈர்க்கச் செய்த எஸ்.ராமநாதன், 'தமிழிசைக் கலைக் களஞ்சியம்'(4 தொகுதிகள்) தொகுத்த வீ..கா.சுந்தரம்,  'பூர்வீக சங்கீத உண்மை'' நூல் எழுதிய எம். கே. எம். பொன்னுச்சாமி, பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை சுந்தரேசனார், கு.கோதண்டபாணி பிள்ளை, பேராசிரியர். .வெள்ளை வாரணனார், பேராசிரியர். தனபாண்டியன், பேராசிரியர். சாம்பமூர்த்தி, பி.டி.ஆர்.கமலை தியாகராஜன், முனைவர்.சேலம். ஜெயலட்சுமி, முனைவர்.எஸ்.சீதா;  
(https://ta.wikipedia.org/wiki/ - தமிழிசை ஆய்வுகள் )

'தமிழன் கண்ட இசை', 'திராவிடர் இசை' நூல்கள் எழுதி, இணை சொல்ல முடியாத இழப்புகளைத் தமிழிசைப் பற்றின் காரணமாகவே சந்தித்து வாழ்ந்து மறைந்த பொறியாளர் தண்டபாணி
(http://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_22.html)

நிகழ்காலத்தில் என்.ராமநாதன், .அங்கையற்கண்ணி, மார்க்கெரேட், நான் உள்ளிட்டு இன்னும் பலர் தமிழ் இசை தொடர்பாக ஆய்வுநூல்கள் பல வெளியிட்டிருக்கும் நிலையில்;

அவற்றை எல்லாம் இருட்டடிப்புக்கு உள்ளாக்கி;

சி.சு.மணி ஒருமுறை, ‘தமிழிசையைப் பற்றி மிகச் சிலர்தான் ஆய்வு செய்திருக்கிறார்கள். நீங்கள் கொஞ்சம் ஆழமாக ஆய்வு செய்யுங்களேன்என்று சொன்னதும், அதனை மம்மது ஏற்றுக் கொண்டதும், அதனை ஒரு பிரபல இதழ் வெளியிட்டதும்,

மேலே குறிப்பிட்ட துப்பு கெட்ட திசையில் தமிழ்நாடு பயணித்து வந்திருப்பது சரியா? என்ற விவாதத்தினை துவங்க வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

தமிழ் இந்து இதழில் பிரபஞ்சன் வெளியிட்ட கீழ்வரும் கருத்தும், எனது கவனத்தினை ஈர்த்தது.

இசையில் (சுருதி, ஸ்ருதி) சுதி என்று கூறும் சொல்லுக்குத் தூய தமிழ்ச் சொற்கள் 22 உண்டு. ஆனால் அத்தனைச் சொற்களையும் வீழ்த்திஸ்ருதிஎன்பது வழக்குக்கு வந்துள்ளதே !’’

2018 மார்ச் 22ஆம் தேதி அவருக்கு கீழ்வரும் மின்மடலை அனுப்பினேன்.

தங்களின் கட்டுரையில்;

இசையில் (சுருதி, ஸ்ருதி) சுதி என்று கூறும் சொல்லுக்குத் தூய தமிழ்ச் சொற்கள் 22 உண்டு."

எனது கவனத்தை ஈர்த்தது.

'அந்த 22 சொற்கள்' யாவை?" என்பதை அனுப்பினால், அவை மம்மதுவின் 'தமிழிசைப் பேரகராதி' நூலில் சரியாக 'புரிந்து' பதிவாகி உள்ளனவா? என்றஎனது ஆய்வுக்கு உதவும்.”

இன்று வரை பதில் வரவில்லை. இனி வந்தாலும் வரவேற்பேன். பதில் தராமலேயே பிரபஞ்சன் மறைந்து விட்டதால், அதனைத் தெளிவுபடுத்த வேண்டியது மம்மதுவின் கடமையாகும்.
 (http://tamilsdirection.blogspot.com/2019/01/6-10.html)

தமிழிலும், பாடலுக்கான யாப்பிலும், புலமையின்றி, தமது மொழித்திறமைகளுடன் (Language Skills), சந்தைப்படுத்தும் திறனில் மிகுந்த தேர்ச்சியுடனும் முன்னணியில் வைரமுத்து பயணிக்கிறாரா?


என்ற ஐயமானது வெளிப்பட்டது;

அவரது திரைப்பட பாடல்களை, எனது இசை ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தியபோது.

'புதுக்கவிதை' என்ற பேரில் யாப்பறிந்தோரின் 'மணிகளும்', 'யாப்பறியா புழுதிகளும்' வேறுபாடின்றி, வளர்ந்த போக்கில்;

புலமையிலிருந்து உள்மறை(Latent) விவாகரத்துடன், வெறும் மொழித்திறமைகளுடனும் (Language Skills), 'அதீத' சந்தைப்படுத்தும் திறமைகளுடனும்(Marketing Skills), வைரமுத்து 'திரைப்படக் கவிஞராக' வளர்ந்த போக்கில்;

உற்றுக் கேட்டாலும் சொற்கள் விளங்காத பாடல்கள் திரைப்படங்களில் வளர்ந்ததா? என்ற ஆய்வுக்கான முன் தடய சான்றுகளை(Prima Face Evidences) எனது பதிவில் விளக்கியுள்ளேன்

‘தமிழ் இசையியல் - புதிய கண்டுபிடிப்புகள்' என்ற எனது நூலை, சுமார் 7 வருடங்களுக்கு முன், தினமணி ஆசிரியர் வைத்தியநாதனிடம் கொடுத்தேன். இன்று வரை அந்த கண்டுபிடிப்புகள் தொடர்பாக, தினமணியில் அவரோ, அல்லது அவரது தூண்டுதலில் பேரில் வேறு எழுத்தாளரோ எழுதி ஏதும் வெளிவரவில்லையென்றால், தமிழில் இளங்கலை/முதுகலை மாணவர்கள் எல்லாம், யாப்பிலக்கணத்தை தவறாக பயின்று வரும் போக்கிற்கு பங்களித்த குற்றச்சாட்டிற்கு அவர் உள்ளாக மாட்டாரா? வைரமுத்து அதை எழுதியிருந்தால், இவ்வாறு நடந்திருக்குமா
(http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_28.html)

ஆண்டாள் தொடர்பான அபத்தமான வாதங்களை முன்வைத்த வைரமுத்துவுக்கு வெளிச்சம் தந்த தினமணி, மேற்குறிப்பிட்ட ஆய்வினை இருட்டடிப்பு செய்துள்ளதா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து உண்மையை உணரலாம்

தமிழிசையில் இருந்து தான் இந்துஸ்தானி இசை பிறந்ததுஎன்பதற்கு 'கருணாமிர்த சாகரம்' நூலில் இருந்து ஆதாரம் காட்டுமாறு நான் கோரிய போது, 'ஆனந்த விகடன்' இதழில் அக்கருத்தை வெளிப்படுத்தியவரிடமிருந்து, கீழ்வரும் பதில் எனக்கு வந்தது.

'அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தர நான் கூகுள் இணைய தளம் அல்ல என்பதை பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன்.'

1996இல் 'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) பல்துறை (interdisciplinary) முனைவர் பட்டம் பெற்றது முதல், கடந்த சுமார் 25 வருடங்களாக;

மேற்கத்திய 'ஈக்வல் டெம்பெரமண்ட்' (Equal Temperament) முறையை வட்டப்பாலையாகக் கருதி ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வுகள் தவறான திசையில் முன்னேறி, அதன் தொடர்ச்சியாக ஆயப்பாலை, வட்டப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப்பாலை, ராகபுடமுறை உள்ளிட்ட அவரின் ஆராய்ச்சி முடிவுகள் எல்லாம் எவ்வாறு தவறானவை? என்பதை  கட்டுரைகள், புத்தகங்கள், சொற்பொழிவுகள் மற்றும் இணையப் பதிவுகள் மூலமாக நான் விளக்கி வந்துள்ளேன்

தினமணி, தமிழ் இந்து உள்ளிட்ட தமிழ் இதழ்களோ, தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புகளோ அதனை கண்டு கொள்ளாமல் இருட்டடிப்பு செய்து வருவது உண்மையா? அவர்கள் எல்லாம் ஆபிரகாம் பண்டிதரின் தமிழிசை ஆராய்ச்சிகள் தொடர்பாக வெளிப்படுத்திய பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் அதே இருட்டடிப்பு வெளிப்பட்டது உண்மையா? முட்டாள்த்தனமான வெறுப்பு அரசியலுடன் ஆபிரகாம் பண்டிதரை இணைத்து, எனது ஆய்வுகளை இருட்டில் தள்ளி பயணித்து வருவதானது, தமிழுக்கும் தமிழிசைக்கும் கேடாகி வருவதை அவர்கள் எல்லாம் இதுவரை உணர்ந்தார்களா? இனியாவது உணர்வார்களா?

..என். சிவராமன், ஐராவதம் மகாதேவன், கி. வா. ஜகந்நாதன் போன்ற இன்னும் பல மேதைகள் எல்லாம், தமிழ் இதழ்களின் ஆசிரியர்களாக இருந்த காலத்தில், மேற்குறிப்பிட்டது போன்ற தவறுகள் வெளிப்பட்டிருக்காது;

தப்பித்தவறி வெளிப்பட்டிருந்தாலும், தாமதமின்றி திருத்தங்கள் வெளிவந்து, தவறுகள் எல்லாம் சரி செய்யப்பட்டிருக்கும்; என்பதும் எனது கருத்தாகும்.

இந்தியாவில் பிற மாநிலங்களில் உள்ள இசைப் புலமையாளர்களுடனும், வெளிநாடுகளில் உள்ள இசைப் புலமையாளர்களுடனும், கடந்த சுமார் 20 வருடங்களாக நான் உரையாடிய சந்தர்ப்பங்களில் எல்லாம், தமிழ் இசை என்றாலே, அபத்தமான அரைகுறைச் சான்றுகள் அடிப்படையில் உணர்ச்சிபூர்வமாக மிகைப்படுத்துபவர்கள் என்ற கண்ணோட்டமே வெளிப்பட்டு வருகிறது

தமிழ் ஊடகங்கள் மேற்குறிப்பிட்ட குறைபாடுகளுடன் செயல்பட்டு வருவதும் அதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் தமிழுக்காக என்று தமிழ்ப்பல்கலைகழகம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழ்த்துறைகளில் எல்லாம் எவ்வளவு ஆசிரியர் பணியிடங்கள் நிதிப்பற்றாக்குறை காரணமாக நிரப்பப்படாமல் இருக்கின்றன? தமிழ் ஆய்வுக்கான நூலகங்களும், ஆய்வுத்திட்டங்களும் எந்த அளவுக்கு நிதிப்பற்றாக்குறை காரணமாக தேக்க நிலையில் உள்ளன

என்பதைப் பற்றி கவலைப்படாமல், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும் வெளிப்படாத,ஏமாளித்தனமான தாராளம் தமிழ்நாட்டில் வெளிப்பட்டதற்கு, மேற்குறிப்பிட்ட தமிழ் இதழ்கள் எந்த அளவுக்கு காரணம்? என்பதானது, அந்தந்த இதழ்களின் ஆசிரியர்களின் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத்திட்டங்களின் முடிவு தொடர்பான நேர்க்காணலில், ஆய்வு சம்பந்தப்பட்ட துறைகளின் நிபுணர்கள் இன்றி நேர்க்காணல் நடத்துவதானது, எவ்வளவு அபத்தம்? என்பதை பிரபல தமிழ் இதழ்கள் கண்டித்ததாகத் தெரியவில்லை

தமிழின் வளர்ச்சிக்கான 'சுற்றுச்சூழல் அமைப்பு' (ecosystem) என்பதில் தமிழ் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தமிழ்நாட்டில் சமூகப்புழுதிகளான மனிதர்கள் செல்வாக்குடன் வளர்ந்த வேகத்தில், 'சுற்றுச்சூழல் அமைப்பு' என்பதானது சீரழிந்தது. பிரபாகரன், ஜெயலலிதா, கருணாநிதி, சசிகலா, ஸ்டாலின் போன்றவர்களால் எவ்வாறு சமூகப்புழுதிகளான மனிதர்கள் ஊக்குவிக்கப்பட்டார்கள்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின் தான், சமூகப்புழுதிக்காற்று தமிழ்நாட்டில்  முளைவிட்டு, 1991இல் அது வீரியம் பெற்று வளர்ந்தது. அதனை நான் முன்கூட்டியே உணர்ந்து, சமூகப்புழுதிக்காற்று மண்டிலத்திலிருந்து விலகி, நல்ல சமூக சுவாசத்துடன் பயணித்தேன்
(‘சமூக மூச்சுத்திணறலும் (Social Suffocation), நல்ல சமூக சுவாசத்திற்கான  (social breathing) சமூகவெளியும்  (Social Space)’; http://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_31.html)

அவ்வாறு பயணித்ததன் மூலமாகஎனது ஆய்வுகளில் நானே எதிர்பார்க்காத அளவுக்கு வலிமை பெற்றேன். அந்த வலிமையின் மூலமாக, எனது செல்வத்தையும் செல்வாக்கையும் பெருக்கும் வாய்ப்புகள் நோக்கி, நான் திசை திரும்புவதானது, எனது பயணத்தில் இருந்து தடம் புரள்வதாகும். அவ்வாறு தடம் புரண்டால், எனது வலிமைக்குக் காரணமான ஊற்றுக்கண்களுடன் உள்ள  - நல்ல சமூக சுவாசத்திற்கான  - தொடர்புகளும் அறுந்து போகும்; என்பதையும் நான் அறிவேன்.

அந்த புரிதலுடன், இன்று சமூகப்புழுதிக்காற்றின் ஊற்றுக்கண்கள் எல்லாம் மறைந்ததையும் முன்கூட்டியே உணர்ந்து, தமிழும் தமிழ்நாட்டும் அதிலிருந்து விடுதலை பெறும் கால இடைவெளியை குறைக்கும் நோக்கில் பங்களித்து வருகிறேன்

.வெ.ராவின் 'சமரசமற்ற பார்ப்பன எதிர்ப்போடு பிணைந்த தனித்தமிழ்நாடு' நோக்கில் பயணித்து வந்த எனக்கு தமிழ்நாடானது பொதுவாழ்வு வியாபாரிகளின் ஆதிக்கத்தில் சிக்குண்டு பயணித்ததும், 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வெளியிட்ட அபாய எச்சரிக்கை வெளியீடுகளை புறக்கணித்து, 'அரசியல் தற்கொலைப் போக்கில்ஈழ விடுதலை பயணித்ததும்;

எனக்குள் ஏற்படுத்திய வெறுப்பின் காரணமாக, அதுவரை பொழுதுபோக்காக ஈடுபட்டிருந்த நான், இசை ஆய்வில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினேன்.

இசை இயற்பியல் (Physics of Music) ஆய்விற்கு பழந்தமிழ் இலக்கியங்களை உட்படுத்தினேன். தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations) பற்றிய தெளிவின்றி, .வெ.ரா அவர்கள் தாய்மொழி, தமிழ் இலக்கியங்கள், புராணங்கள் பற்றிய தவறான புரிதலில், 'தமிழ் அடையாள அழிப்பு' நோக்கி பயணித்தது எனக்கு தெளிவானது. 2005 முதல் இன்றுவரை அது தொடர்பாக முன்வைத்து வரும் கருத்துக்களுக்கு, கடந்த சில வருடங்களாக 'பெரியார்' ஆதரவாளர்களிடமிருந்து பின்னூட்டங்கள் வரத் தொடங்கியுள்ளதானது வரவேற்க வேண்டியதாகும்


தமிழின் வளர்ச்சிக்கான 'சுற்றுச்சூழல் அமைப்பு' சீரழிந்ததன் விளைவாக‌;

தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் 'இசையின் இயற்பியல்' (Physics of Music) ஆய்வுகள் மூலமாக, புதிய தொழில் வியாபார வாய்ப்புகளை உருவாக்க வல்ல;

அதன்மூலமாக, உலகப் பல்கலைக்கழகங்கள் பழந்தமிழ் இலக்கியங்களை நோக்கி ஆய்வுப்படையெடுப்பு நடத்தும் வாய்ப்புகள் உள்ள;

எனது கண்டுபிடிப்புகள் மூலமாக‌, சுமார் 20 வருடங்களுக்கு மேலாக, தமிழும், தமிழ்நாடும் பலன்கள் பெற வேண்டியது தாமதமாகி வருகிறது.

மனம் தளராமல், நான் முன்னேறி இன்று, தமிழ்நாட்டைத் தவிர்த்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட மேற்கத்தியநாடுகளின், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட கிழக்கு நாடுகளின் கவனத்தினை ஈர்த்து, புலமையாளர்களின் அங்கீகாரத்தினையும் பெற்றுள்ளேன். தமிழ் மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்களின் கவனத்தை சமூக வலைதளங்கள் மூலமாக ஈர்க்கத் தொடங்கியுள்ளேன்.

எனது ஆய்வுகளை இணையம் வழியாக அறிந்து, மலேசியாவில் வாழும் பேரா.சிவக்குமார் வற்புறுத்தலின் பேரில், பினாங்கில் 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' என்ற தலைப்பில் உரையாற்றினேன்.


Musical Linguistics in Tholkappiam’(in Tamil) by Dr.Vee (Website: http://drvee.in/)
on 28.07.2018 in Penang (Malaysia)

அது போல, சிங்கப்பூரில் வாழும் பேரா.அருண் மகிழ்நன் வற்புறுத்தலின் பேரில், சிங்கப்பூரில் ' 'The Origins of Tamil Classical Music’  என்ற தலைப்பில் உரையாற்றினேன்.

The Origins of Tamil Classical Music by Dr Vee



(‘நோவாம் சோம்ஸ்கியின் 'உலக மொழி இலக்கணம்'; எதிர்ப்புகளுக்கு விடையளிக்கும் சாத்தியம் தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணத்தில்?’; 

சீரழிந்த தமிழின் வளர்ச்சிக்கான 'சுற்றுச்சூழல் அமைப்பு' சீர் பெறும் காலமும் நெருங்கி விட்டது. இனியும் தாமதமின்றி, தமிழ் இதழ்களின் ஆசிரியர்கள் விழித்துக்கொண்டு, தமது பங்கை ஆற்றுவார்களா?

தமிழின் வளர்ச்சிக்கான 'சுற்றுச்சூழல் அமைப்பு' சீர் பெறும் போது தான், தமிழ் ஆர்வலர்களுக்கும் (தமிழ் இதழ்களுக்கும்) மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்களுக்குமிடையே நிலவி வரும் சமூகப்பிளவானது முடிவுக்கு வரும். தமிழுக்கான 'சுற்றுச்சூழல் அமைப்பு' சீரழிந்த காலத்தில் உருவான‌‌ தமிழ்ப்பொதுவாழ்வு வியாபாரிகளின் ஆட்டங்களும் அடங்கும். தேய்பிறையில் உள்ள தமிழ் இதழ்களின் வாசகர்களின் எண்ணிக்கை பிரமிக்கும் வகையில் உயரும்.

No comments:

Post a Comment