Friday, July 31, 2020

அமிதாப் பச்சனின் அரிய விளக்கம்:


சொற்களின் பொருள், 'தர்ம்', 'தர்மம்', 'பிராண்ட்' ? 


தமிழ் மொழியின் 'பிராண்ட்' (Brand)  மதிப்பு ?




சொற்களின் பொருள் பற்றிய முக்கியத்துவத்தை இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கீழ்வரும் காணொளியில் விளக்கியுள்ளார்.


கூடுதலாக, இந்திய மொழிகளில் உள்ள சில சொற்களை மொழிபெயர்ப்பதால் ஏற்படும் தவறுகள் பற்றியும் விளக்கியுள்ளார். சமஸ்கிருதத்தில் உள்ள 'தர்ம்' மற்றும் 'தர்மம்' என்ற இரண்டு சொற்களின் பொருளில் உள்ள வேறுபாட்டையும் விளக்கியுள்ளார். தனி மனிதரின் 'தர்ம்', ஒரு வியாபார நிறுவனத்தின் 'தர்ம், ஒரு நாட்டின் 'தர்ம்' பற்றியும் விளக்கியுள்ளார். 'தர்ம்' என்பதானது எவ்வாறு 'பிராண்ட்' (Brand) என்பதுடன் தொடர்பு கொண்டுள்ளது? என்பதையும் விளக்கியுள்ளார்.

தோராயமாக, 'தர்ம்' என்பதை தமிழில் 'அறம்' என்றும், அதன் அடிப்படையில் உருவான நெறிமுறையான 'தர்மம்' என்பதை 'அறநெறி' என்ற வகையிலும், நான் புரிந்து கொள்கிறேன். அடுத்த முறை ஒரு சமஸ்கிருதப் புலமையாளரைச் சந்திக்கும் போது, எனது புரிதலை இன்னும் சரியாக வளர்த்துக் கொள்வேன்.

மேற்கண்டவாறு அமிதாப் பச்சன் விளக்கியுள்ளபடி,  பிற மொழிகளில் தனித்துவமான பொருளில் உள்ள சொற்களை எல்லாம் தமிழ் மொழியில் இறக்குமதி செய்யும் போது, மொழிமாற்றம் (Translation) செய்யாமல், எழுத்தோசைச்சிதைவுடன் இறக்குமதி செய்யும் விதியையே தொல்காப்பியத்தில் உள்ள 'ஒரீஇ' தொடர்பான சூத்திரம் விளக்கியுள்ளது.

தமிழ் எழுத்துக்களின் ஓசை வடிவத்தில் இருந்து வேறுபட்ட ஓசை வடிவம் கொண்ட எழுத்துக்கள் சமஸ்கிருதம் உள்ளிட்ட வடமொழிகளிலும், பிற மொழிகளிலும் உள்ளன.

அவ்வாறு ஓசை வடிவமானது தமிழ் எழுத்துக்களில் இருந்து வேறுபட்ட எழுத்துக்களும், வேறுபடாத எழுத்துக்களும் கொண்ட ஒரு வட சொல்லினைத் தமிழில் இறக்குமதி செய்யும் போது, அந்த வேறுபட்ட சொல்லின் ஓசை வடிவம் சிதையும் வகையில் தமிழ் எழுத்தை உருவாக்கும் செயல் முறையே ஒரீஇ ஆகும்.( orIi referred to the acoustic-phonetic- distortion of the letters of the non-Tamil words,) அந்த செயல்முறை மூலமாக உருவாக்கிய எழுத்தோடு, ஓசை வடிவம் வேறுபடாத தமிழ் எழுத்துக்கள் புணர்ந்தே தமிழில் வடசொல் இறக்குமதியை தொல்காப்பியம் அனுமதித்துள்ளது. 'ஸூத்ரா' என்ற சமஸ்கிருதச் சொல்லினை 'சூத்திரம்' என்று இறக்குமதி செய்த சான்றானது தொல்காப்பியத்திலேயே உள்ளது. 
(‘'ஒரீஇ' தந்த வெளிச்சம் (1); தனித்தமிழ் அறிவின் 'கறுப்பு - வெள்ளை நோய்'; 

பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள சொற்களின் பொருளை விளங்கிக் கொள்வதற்கும், சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களை ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் மொழிபெயர்க்கவும் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ் லெக்சிகன் தொகுதிகள் பெரிதும் உதவி வருகின்றன.
  
தமிழ் லெக்சிகனில் உள்ள குறைபாடுகளை எல்லாம், 1996 முதல் நான் வெளியிட்டு வந்துள்ளேன். வயதான தமிழ்ப்புலமையாளர்களில் யார்? யார்? அதனை ஆய்வுக்கு உட்படுத்தி, என்னென்ன தீர்வு முயற்சிகளை மேற்கொண்டார்கள்? எனபது அவரவர் மனசாட்சிகளுக்கே வெளிச்சம். 

தமிழ்ப்பேராசிரியாக உள்ள எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'மாதொரு பாகன்' நாவல் பெரும் சர்ச்சைக்குள்ளானது. 
('எழுத்தாணி' எழுப்பிய இக்கட்டான கேள்விகள்’; 

ஆனால் பெருமாள் முருகன் உள்ளிட்ட தமிழ்ப்பேராசிரியார்களான எழுத்தாளர்கள் தமிழ் லெக்சிகனில் உள்ள குறைபாடுகள் பற்றி கவலை கொண்டு ஒரு சர்ச்சையைக் கிளப்பி இருந்தால்,

கடந்த சுமார் 20 வருடங்களில் பழந்தமிழ் இலக்கியங்களில் முனைவர் ஆராய்ச்சி மேற்கொண்ட மாணவர்களுக்கும்

திருக்குறள், புறநானூறு உள்ளிட்டு பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை நம்பி ஆராய்ச்சிகள் செய்து நூல்கள் வெளியிட்டவர்களுக்கும், எவ்வளவு பிரயோசனமாக இருந்திருக்கும்?

மேற்குறிப்பிட்ட காணொளியில் அமிதாப் பச்சன் 'தர்ம்' என்பதானது எவ்வாறு 'பிராண்ட்' என்பதுடன் தொடர்பு கொண்டுள்ளது? என்பதையும் விளக்கியுள்ளார்.

செல்டன் பொல்லாக் உள்ளிட்ட உலக அளவில் செல்வாக்குடன் வலம் வரும் புலமையாளர்களின் பார்வையில், தமிழ் மொழியின் 'பிராண்ட்' எந்த அளவுக்கு மட்டமாக உள்ளது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். 
(‘'நோஞ்சான் நோயில்' சிக்கிய தமிழ்ப்புலமை?’; 

அவ்வாறு தமிழ் மொழியின் 'பிராண்ட்' மதிப்பானது மட்டமாக இருப்பதற்கு, ஊடக வெளிச்சத்துடன் வலம் வரும் பெருமாள் முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் பின்பற்றும் அறமான 'தர்ம்' என்பதன் யோக்கியதையானது, தமிழ் மொழியின் 'பிராண்ட்' மதிப்பானது மட்டமாக எந்த அளவுக்கு பங்களித்தது? என்று விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கருதுகிறேன்.

'மாதொரு பாகன்' பிரச்சினையில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்கள் எல்லாம், கீழ்வரும் பிரச்சினையில் மெளனம் சாதித்ததானது, எந்த 'தர்ம்' அடிப்படையில்? என்பதையும் விவாதிக்க வேண்டும்.

'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' நூல் (http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_60.html) வெளியிட்ட தமிழ் அறிஞர் அ.நக்கீரன் சாகும் வரை தன் நண்பர்கள் பாதுகாப்பில் வாழ்ந்தார். 
(https://tamilsdirection.blogspot.com/2017/03/blog-post.html)

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் தொடர்பான திட்டத்தில், சமஸ்கிருதத்திற்கு ஏற்படப்போகும் ஆபத்துகளை சுட்டிக்காட்டி உலகம் முழுவதும் உள்ள சம‌ஸ்கிருத ஆதரவு புலமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதையும் கணக்கில் கொண்டால்;

அதே போல, ஹார்வார்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை மூலமாக தமிழுக்கு ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதா? என்ற கவலையை; 'மாதொரு பாகன்' பிரச்சினையில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களும்,தமிழ் அமைப்புகளும், தமிழ்ப் பாரம்பரியம் தொடர்பான அமைப்புகளும் வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை. 
(‘சமஸ்கிருத ஆதரவு புலமையாளர்களிடமிருந்து கற்க வேண்டிய பாடம்?’; 

தனிமனிதராக இருந்தாலும், சமூகமாக இருந்தாலும், குறைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டி திருத்தும் செயல்நுட்பத்திற்கு உள்ளாகவில்லை என்றால், தரத்தில் வீழ்ச்சி என்பது தவிர்க்க இயலாததாகும்.

என்னிடம் உள்ள குறைகளை எனது சமூக வட்டத்தில் உள்ளவர்கள் எந்த தயக்கமும் இன்றி சுட்டிக்காட்ட வேண்டும்; எனது ஆய்வுகளில் உள்ள குறைகளை, எனது ஆய்வு வட்டத்தில் உள்ளவர்கள் எந்த தயக்கமும் இன்றி சுட்டிக்காட்ட வேண்டும்; என்ற திசையிலேயே இன்றும் பயணித்து வருகிறேன். அரங்கில் (வகுப்பறையாக இருந்தாலும்) இருப்பவர்களை விட, நாம் அதி புத்திசாலி என்ற தோரணையில் நான் என்றுமே பேசியதில்லை.

தமிழ்நாட்டில் நம்மிடம் உள்ள குறைகளை வெளிப்படுத்தி வெற்றிகொள்வதற்குப் பதிலாக, ஏன் மறைக்க வேண்டும்?  (Why hide deficiencies instead of overcoming them?)”;

என்ற திசையில் பயணிப்பவர்களின் கூட்டு முயற்சியில், தமிழ் மொழியின் 'பிராண்ட்' மதிப்பை உயர்த்துவதானது நிச்சயமாக சாத்தியமாகும். 

தமது ஆட்சியின் மீது புலமையாளர்கள் குறை சொன்னால், அதனை எவ்வாறு ஆக்கபூர்வ திசையில் அணுகுவது? என்பதற்கு இலக்கணமான முதல்வராக எம்.ஜி.ஆர் ஆட்சி செய்தார். 
(‘எம்.ஜி.ஆர்  "ச, ரி, , , , , நி, தமிழா?" என்று கேட்டதை, இருளில் இருந்து மீட்போம்’; 
https://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_25.html)

எம்.ஜி.ஆரின் 'தர்ம்' அடிப்படையில், தமிழ் மொழியின் 'பிராண்ட்' மதிப்பை உயர்த்தும் வகையில், மேற்குறிப்பிட்ட விவாதத்தினை பெருமாள் முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும், தமிழின் மீது உண்மையான அக்கறையுள்ள தமிழ் அமைப்புகளும் முன்னெடுத்தால், அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.


குறிப்பு:

வெளிப்படைத்தன்மையும் (Transparency) பொறுப்பேற்பும் (Accountability) இன்றி தமிழ் இருக்கைகள் தொடங்கப்படுவதானது, தமிழ்நாடு ஏமாளியாக இருக்கும் வரையில் தான் நீடிக்கும்.

No comments:

Post a Comment